சென்னை புத்தகத் திருவிழா

அந்தாதி வெளியீடாக வந்துள்ள என்னுடைய தட்பம் தவிர், ஊச்சு, கொஞ்சம் திரைக்கதை மற்றும் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி ஆகிய புத்தகங்கள் சென்னை புத்தகத் திருவிழாவில் பனுவல் அரங்கில் கிடைக்கும்.
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்.

Book fair promo.jpg

ஸ்பார்ட்டகஸ் சொல்லித்தரும் திரைக்கதை

ஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். Continue reading

சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல்

பரத்வாஜ் ரங்கன் கமலுடன் மேற்கொண்ட உரையாடல்களின் தமிழாக்கம் இது. தி ஹிந்துவில் வெளியான இந்த கட்டுரைகள் தற்போது கிழக்கு வெளியீடாக தமிழில் வந்துள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்…

சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல் -பரத்வாஜ் ரங்கன்
தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்
கிழக்கு பதிப்பகம்
விலை: Rs 60

Kamal_Aravindh_Sachidanandam

 

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யவும் 

தட்பம் தவிர்- free e-book

தட்பம் தவிர் க்ரைம் நாவலை இலவச ஈ-புத்தகமாக இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். இந்த நாவல் முதன்முதலில் ஆன்லைனில் Self Publish செய்யப்பட்டபோது அதை வாங்கிய அனைவருக்கும் நன்றி…

கதைச் சுருக்கம்:

சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீதியான சித்ரவதைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார்? தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா? மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா?


To download in Google Play Store  click here

To buy PDF Click here

நாவலை பற்றிய கருத்துக்களை இங்கே படிக்கலாம்

பிச்சாவரம் சதுப்பு நில காடு

பிச்சாவரம் சதுப்பு நில காடு

ஒளிப்பதிவு: பிரேம்குமார் சச்சிதானந்தம்
படத்தொகுப்பு: அரவிந்த் சச்சிதானந்தம்

நன்றிகள் பல…

aravindhskumar anniversary collage

2011-யில்  தொடங்கப்பட்ட இந்த வலைத்தளத்திற்கு இன்று மூன்றாவது பிறந்த நாள் என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றிகள், கடந்த இரண்டு வருடங்களாக முழு நேரம் எழுதி வரும் எனக்கு ஊக்கம் அளித்துவரும் அனைவருக்கும்…

மனமார்ந்த நன்றிகள், வாசகர்களுக்கு, நண்பர்களாய் இருக்கும் குடும்பத்தாருக்கு, குடும்பமாய் இருக்கும் நண்பர்களுக்கு…

அன்புடன்

அரவிந்த் சச்சிதானந்தம்

 

கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்

மு.கு: இது கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2014-யில் பிரசுரத்திற்கு தேர்வான கதை.  நன்றி கல்கி.

***

வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஜேஜே என மக்கள் இங்கும்அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அதை காண்பவர்களுக்கு ஆடி மாத திருவிழாவோ என ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்த சேரியை பொறுத்த வரையில் தினமும் காலையில் அரங்கேறும் சாதாரண காட்சியே அது.

அங்கு அதிகம் வசிப்பது தினக் கூலிகள். அருகில் அமைந்திருந்த பஞ்சு தொழிற்சாலையில் பெரும்பாலானோர் வேலை செய்துக்கொண்டிருந்தனர். சிலர் உணவு பண்டங்களை விற்றும், சிலர் குறைந்த விலையில் உடையையும் உடலையும் விற்றும் வயிற்றை கழுவிக் கொண்டிருந்தனர்.

மேம்பாலத்துக்குக் கீழ் அமைந்திருந்ததால் அந்த சேரியில் எப்போதும் வாகன இரைச்சலுக்கு பஞ்சமில்லை. கூடவே வேலைக்கு செல்லும் மனிதர்களின் காலடி சப்தம், பஞ்சு தொழிற்சாலையில் இயங்கும் பழைய எந்திரங்களிலிருந்து வரும் பேரொலி, நடு வீதியில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் எழுப்பும் ஒலி, சேரியில் சுற்றி திரியம் நாய்களின் ஊளை, பன்றிகள் நரவையை நக்கி தின்னும் சப்தம் என அனைத்தையும் ஜன்னலுக்கு பின்னின்று அவன் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தான். வேறு வழியின்றி வெகு நாட்கள் அங்கே வசிப்பதனால் முதலில் நாராசமாய் காதில் விழுந்த ஒலிகள் இப்போது அவனுக்கு பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை.

தினமும் காலையில் போருக்கு செல்வது போல் செல்லும் கூட்டம் வரிசையாக வடக்கு மூலையில் நிற்கும். இந்தியாவில் எங்குதான் வரிசை இல்லை!
சற்று உள்ளே சென்று பார்போமேயானால் பெரிய கல்வெட்டு ஒன்றை காணலாம். அதில் பின்வரும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

“சுகாதார கழிப்பிடம்.
திறப்பு: 09 .09 .1999 ,
கோடை வள்ளல் திரு. கோதண்டன் அவர்கள்”

கொடை என்பது கோடை என பொறிக்கப்பட்டதனாலோ என்னவோ கோடைக்கு ஒருமுறை அந்த கல்வெட்டை மட்டும் சில ஜாலரா கூட்டம் வந்து சுத்தம் செய்து விட்டு போகும். கழிவறை சுத்தத்தைப் பற்றியோ சுகாதாரத்தைப் பற்றியோ யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. சுகாதாரம் கழிக்கப்பட்டதாலோ என்னவோ அது சுகாதார கழிப்பிடம்.

இவை அனைத்தும் அவனுக்கு பழகிப்போன காட்சிகள். அவன் வாழ்வில் ஏமாற்றம் மட்டுமே மாறி மாறி வந்ததேயொழிய மாற்றம் வரவில்லை.

அவன் நிரஞ்சன். விளரிய முகம். மெலிந்த தோற்றம்  5 அடி 8 அங்குலம். 74 கிலோ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை. தற்போது 5 அடி 9 அங்குலம். 60 கிலோ.

ஒருகாலத்தில் ஐந்து வேலை உணவு உண்டு  சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அவன், தற்போது கிட்டியபோது மட்டும் உணவு உண்டு தன்னை கொல்ல முயற்சிக்கும் தனிமையை தான் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தான்

உயர் நடுத்தர வர்க்கத்தை சார்தவன் அவன். பிறந்ததிலிருந்து பசி அறிந்ததில்லை, இப்போது பசியை தவிர வேறு ஏதும் அறிவதில்லை.
அண்ணனாக தன் இரு தங்கைகளுக்கும் அவன் எதையும் செய்துவிடவில்லை. தனியார் பணியில் இருக்கும் அவன் தந்தைக்கு அவனை அரசு பணியில் அமர்த்திவிட வேண்டும் என்று ஆசை. லட்சங்களை இறைத்து அவனை பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார். ஆனால் அவன் பொறியாளன் ஆவதை தவிர்த்து கலை கூத்தாடி ஆகி போனான். கல்லூரி செல்வதே மேடை நாடகம் போட, நண்பர்களிடம் கதை சொல்ல என்றாகிப்போனது.

அவன் சொல்லும் கதைகளை கேட்டு கைத்தட்டுவதற்காகவே ஒர் வேலையற்ற நண்பர் கூட்டமிருந்தது. அதனாலோ என்னவோ அவன் சினிமா பித்து தலைக்கேறி, உலக சினிமாவில் பின்நவீனத்துவம் பேசிடவே தான் பிறந்துள்ளதாக எண்ணிக்கொண்டான்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே  பல இயக்குனர்களின் சென்று உதவி இயக்குனர் வாய்ப்பு  கேட்கத் தொடங்கினான். அவர்களும் சொல்லிவைத்தார்போல் “படிச்சு முடிச்சதும் வா !” என்ற ஒரே பதிலையே சொல்லி அவனை திருப்பி அனுப்பினர். அவன் சோர்ந்து போகாது மீண்டும் மீண்டும்  வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தான்.

கல்லூரியில் எந்த பரிச்சையிலும் தேறவில்லை. தேர்வுகளைப்பற்றி அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளாவிடினும் வாங்கிய காசிற்காக கல்லூரி நிர்வாகம் அலட்டிக்கொண்டது.

“உங்க பையன்கூட சேர்ந்துதான்  மத்த நல்ல பசங்களும் கெட்டு போறாங்க. எந்நேரமும் கதை அடிக்கிறது, கேங் பார்ம் பண்ணிக்கிட்டு பிரச்சனை பண்ணுறது, அவனுக்கு மனசுல ஹீரோனு நினைப்பு. இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்க படிகிறதா இருந்தா படிக்கட்டும். இல்லைனா அவன் கல்லூரியவிட்டு நீக்க வேண்டியதிருக்கும்” பொறிந்து தள்ளினார் கல்லூரி முதல்வர்.

“உங்கள நம்பிதான படிக்க அனுப்புறோம், காச வாங்கிகிட்டு நீங்களே இப்படி பேசுனா எப்படி மேடம் “

“படிக்க அனுப்பினேன்னு நீங்க சொல்றீங்க. அவன் படிக்க முயற்சிகூட பன்னலயே. படிக்க வேண்டிய வயசுல என்ன சார் ஆட்டம். எதோ கல்சுரல்ஸ் பண்ணுறனு கிளாசுக்கே வரமாட்டேன்கிறான். கேட்டா நம்ம கல்லூரிக்காகதான் செய்றேன்னு என்னையே எதிர்த்து பேசுறான். இவன் போகும்போது கூடவே பத்துபேர கூட்டிட்டு போயிடுறான். கண்டிச்சு வைங்க..இவனால எங்க கல்லூரி பேர் கெட்டுட கூடாது”

“இப்ப கூட உங்க பேர் கெட்டுட கூடாதுனுதான் பார்க்குறீங்களேயொழிய என் பையனோட எதிர்காலத்தை பத்தி பேச மாட்றீங்களே…கடன் வாங்கி அவன இங்க படிக்கவச்சேன் “

“இது ரொம்ப பிரபலமான கல்லூரி, இங்க படிச்சா உடனே வேலை கிடைக்கும், அதனாலதானே கடன்பட்டாலும் பரவாயில்லைன்னு  உங்க பையன சேர்த்திருக்கீங்க. இதுவே இது ஒரு அநாகரிமான கல்லூரி, இங்க எந்த மாணவனும் ஒழுங்க படிக்க மாட்டான், ஆட்டம் போடுறத தவிர அவனுக்கு வேற வேலையில்லை, அப்படினா உங்க புள்ளைய சேர்ப்பீங்களா !”

முதல்வரின் பேச்சில் நியாயம் இருப்பதாக தோன்றியதால்  என்னவோ நிரஞ்சனின் தந்தை எதையும் மேற்கொண்டு பேச முயற்சிக்கவில்லை.

முதல்வர் தொடர்ந்து பேசினார், “இங்க பாருங்க சார். உங்க பையனோட எதிர்காலத்தில எங்களுக்கும் அக்கறை இருக்கு. அவன கொஞ்சம் கண்டிச்சு வைங்க. பிளேஸ்மென்ட் நெருங்கிடுச்சு. அவன் படிக்க ஆர்வம் காட்டினா போதும், நிச்சயம் அவன மேல கொண்டு வந்திடுறோம்”

“அவங்க சொல்றதெல்லாம் என்னால கேக்க முடியாதுபா. எனக்கு படம் எடுக்கிறதுலதான் ஆர்வம் அதிகம். அவங்க உங்களுக்கு கால் பண்ணினதும் நீங்க ஏன் தனிய போய் பார்த்தீங்க. என்னையும் கூட்டிட்டு போயிருக்கனும். ரொம்ப நல்லவ மாதிரி பேசுறாளோ..வருஷம் வருஷம் ஏதோ ஒரு சிம்போஷியம் நடத்தி காசடிக்கிறா.  கல்சுரல்ஸ்  எங்க கட்டுப்பாட்டுல இருக்கிறதுனால காசடிக்க முடியல . அதனால் என் மேல வெறுப்பு “

பளார்….

கன்னத்தை தடவியவாறே நிரஞ்சன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தது. சிறு வயதுமுதல் அவனை அதிகம் கண்டித்தது அவன் தாய் மட்டுமே. அதிகம் செல்லம் கொடுத்த தந்தை முதன் முதலில் கை நீட்டியது, அதுவும் தங்கைகளின் முன் தான் அடி வாங்கியது அவனுக்கு பெருத்த அவமானமாயிருந்தது.

“அம்மா ! உன் புள்ள செத்துட்டானு நினைச்சிக்கோ “

வீட்டைவிட்டு வெளியேறியவனை யாரும் தடுக்க முற்படவில்லை. அவன் தாய் மட்டுமே கதறிக்கொண்டிருந்தாள்.

சென்னை வந்த பின் பல இயக்குனர்களை சந்தித்தான். ஒவ்வொருவரும் பல காரணங்களை சொல்லி அவனை தவிர்த்தனர், சில நேரங்களில் காவலாளிகள் தடுத்தனர்.

“புயலிலே ஓர் தோணி படிச்சிருக்கியா ?” ஒரு பிரபல இயக்குனர் வினவினார்..

“இல்ல சார்”

“இலக்கியத்துல எவ்வளவு ஆர்வமுண்டு ?”

“தெரியல சார்”

“பிடித்த எழுத்தாளர் ?”

“அபப்டியெல்லாம்   இல்ல சார்..குமுதம் ஆனந்த விகடன் படிப்பேன்..நல்ல கதை சொல்லுவேன் “

“இங்க பாரு தம்பி. சினிமா என்பது  ஒரு புரிதல். அதுக்கு நீ இன்னும் பக்குவ படல…நிறைய படி..அப்பறம் ஒருநாள் வா..பாக்கலாம் “

நிச்சயம் வீட்டுக்கு திரும்பி போகிற எண்ணம் அவனுக்கில்லை. தன்மானம் என்று தனக்கு தானே கற்பித்துக் கொண்ட எதோவொன்று அவனை தடுத்தது.

பல இயக்குனர்களின் வீட்டுப் படி ஏறிஇறங்கி, பல இடங்களில் பட்ட அவமானங்களை துடைத்துக் கொண்டு, கையில் இருந்த சில ஆயிரங்களை செலவு செய்து , கழுத்தில் இருந்த அந்த தங்க சங்கிலி அடகு கடைக்கு சென்றபின் உதவி இயக்குனர் வாய்ப்பு கிட்டியது. குறைந்த வாடகையில் அந்த சேரி வீடும் கிட்டியது..

சினிமா அவனுக்கு நிறைய கற்று தந்தது. கனவு தொழிற்சாலை தான் கனவு கண்டதை போல் இல்லை என்பதை  முதல் நாளே உணர தொடங்கினான்.  படப்பிடிப்பு  குழுவே ஹீரோவுக்காக காத்திருந்த நேரத்தில் வந்து சேர்ந்தது ஓர் செய்தி.

‘தயாரிப்பாளர் மாரடைப்பால் காலமானார்’…

‘ஷூட்டிங் பேக்கப்’ என்று குரல் ஒலித்தது. கலைந்த கனவுகளுடன் கூட்டம் கலைந்தது.

“என்ன தம்பி புதுசா ! ” வினவினார் ஓர் அசோசியேட்.

“ஆமா சார், இன்னைக்குதான் சேர்ந்தேன் “

“இஞ்சினியராமே !..இப்பெல்லாம் நல்லா படிச்சா பசங்கதான் சினிமா பக்கம் வரீங்க.. நமக்கு படிப்பெல்லாம் கிடையாது.. எல்லாம் அனுபவம்..இருபது வருடம்..எப்படியும் அடுத்த வருடம் படம் பண்ணிருவேன். அப்படியே என் கூட வந்து சேர்ந்துக்கோ…”

தன் நிலையை நினைத்து சிரிப்பதா அழுவதா என தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தவன்,எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்தான். அந்த அசோசியேட் இயக்குனர் அங்கிருந்து நகர்ந்து சென்று இன்னொருவனிடம் பேசிக்கொண்டிருந்தார்,

“… எப்படியும் அடுத்த வருடம் படம் பண்ணிருவேன். அப்படியே என் கூட வந்து ……”

” என்னையா ! காலையிலே பலத்த யோசனை…”அருகில் நின்றுகொண்டிருந்தார் அந்த வீட்டு ஓனர் மாடசாமி ..பல ஒன்டிக்குடுத்தனங்கள்  இருக்கும் அந்த ‘திருமகள் நிலையத்தின்’ சொந்தக்காரர். கடுமையான முகம், ஆனால் குழந்தை மனசு. அதனால்தான் என்னவோ அங்கு பலர் வாடகை கொடுக்காவிடினும்  அவர்களை விரட்டியடிக்கவில்லை.

வீதியை பார்த்தவாறே பழைய ஞாபங்களில் லயித்திருந்த நிரஞ்சன், மாடசாமியின் குரல் கேட்டு திரும்பினான்…

“என்னையா! ஷூட்டிங் இல்லையா !”

“ஸ்ட்ரைக்கு..”

“திரும்பவுமா.. போனமாசம்தானே பண்ணுனிங்க…”

“அது காவேரி பிரச்சனைக்கு …இது ஈழப் பிரச்சனை..”

“சினிமாகாரன நினைச்சா சிரிப்புதான்யா வருது..கண்டகருமாந்தரத்த சினிமால காட்டுறான்..ஒரு படம் ஓடிட்ட ஈழப் போராளி ஆயிடறான்…என்ன எழவோ..நமக்கு சினிமானாலே ஆகாது..உன்ன ஏதும் சொல்லல..நீ கோவிச்சிக்காத..”

“அதெல்லாம் ஒன்னும் இல்லங்க..மனசுல இருக்குறத சொல்லுறீங்க..நான் மத்தவங்க மாதிரி இருக்கமாட்டேன்..நிச்சயம் நல்ல படம் பண்ணுவேன்..”

இரண்டு வருடத்தில் அவன் நிறைய பக்குவப் பட்டிருந்தான். சினிமா அவமானங்களுடன் சேர்த்து நிறைய பாடங்களையும் கற்று தந்தது. ஆனால் படம்தான் இரண்டு வருடங்களாக இழுத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் அவன் உதவி இயக்குனர்தான்..இன்னும் நிறையப்படிகளை கடக்கவேண்டும், நிறைய அவமானங்களை தாங்கவேண்டும் என்பது அவனுக்கு தெரியும். நம்பிக்கை ஒன்றைமட்டுமே மூலதனமாக கொண்டு பயனித்துக்கொண்டிருந்தான்  .

அவன் முதல்தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டதாக கேள்விப்பட்டான். இவனுக்கு யாரும் சொல்லி அனுப்பவில்லை.அழையா  விருந்தாளியாக வீட்டுக்கு செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. உலக ஆசைகளை துறந்து, குடும்பத்திலிருந்து விடுபட்டு ஓர் சித்தனாகவே மாறிப்போனான்.

“என் பொண்டாட்டி உடம்பு முடியலனு படுத்துட்டா..எனக்கும் சுதார்ப்பா ரோட்ல நடக்க முடியல..அதன் இந்த முனைக்கடை வரைக்கும் போய் மூணு  இட்லி வாங்கிட்டுவாயேன்..நான் டீய குடிச்சு பொழுத கழிச்சுருவேன்..அது பசி தாங்காது..” என்று மஞ்சள் பையையும் காசையும் நீட்டினார் மாடசாமி..
அவனுக்கு இது பழகிப் போயிருந்தது. சிறு சிறு வேலைகளை செய்து, வாடைக தர முடியாத தன் இயலாமையை சரிசெய்ய முயர்ச்சிதுக்கொண்டிருந்தான் .

பையை எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கும்போது, மாடசாமியின் குரல் ஒலித்தது, “அப்படியே மிச்சம் காசுல  நீ ஒரு டீ குடிச்சிட்டு வந்திடு ..”

வீதியில் சிறுவர்கள் சாக்கடையில் விழுந்த பந்தை எடுத்து, அருகிலிருந்த வேறோரு சாக்கடை தண்ணீரில் கழுவிக்கொண்டிருந்தனர்.
இவனைக் கண்டதும், “ஐயா! டைரக்டர் மாமா..” என அனைவரும் கத்தினார். வாழ்கையில் அவனுக்கிருந்த சிறு சந்தோசங்களில் அதுவுமொன்று.

அந்த சிறுவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லுவான். நீட்ச்சே, ஹெகெல் என இவன் சொல்லும் தத்துவார்த்த விடயங்கள் புரியாவிடினும் அவர்களும் புரிந்ததுபோல்  தலையாட்டுவார். இவனும் அந்த சிறுவர்கள்முன் தத்துவம் பேசுவதை பெருமையாக கருதினான். தன்னை சிறந்த மேதைகளாக காட்டிக்கொள்ள பாமரர்கள்முன் நவீனத்துவம் பேசும் அறைவேக்கடுகளின் பட்டியலில் இவனும் சேர்ந்துகொண்டது ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஏனெனில் வீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டு, வாழ்வில் பல அவமானங்களை சந்திக்கும் அவனுக்கு தன் ஆண்மையை நிலைநிறுத்திக்கொள்ள தத்துவார்த்த பேச்சுக்கள் தேவைப்பட்டது. சொல்வதற்கெல்லாம் தலையாட்ட அந்த சிறுவர்களும் தேவைப்பட்டார்கள்..

இட்லியை வாங்கிகொண்டு, மீதமிருந்த காசில் டீ குடிக்க நினைக்கையில் தன் பிய்ந்த செருப்பைபற்றிய எண்ணம் தோன்றியது. டீ குடிப்பதைவிட அந்த காசில் செருப்பை தைத்துவிடலாமென எண்ணி செருப்புதைக்கும் கடையோரம் நடந்தான். ஒரு சிறிய ஓலை குடிசையின் வாசலில் சில சாமான்களுடனும் கையில் கோணி ஊசியுடனும் ஒருவன் அமர்ந்திருதான். குடிசையின் உள்ளே சில சமையல் பாத்திரங்கள் அடுக்கிவைக்கபட்டிருந்தது.

“வா தம்பி ” என நிரஞ்சனை வரவேற்றான் அவன். தடித்த மீசை. அவன் கருத்த உடலில் மீசை மட்டுமே வெளுத்திருந்தது. தலையில் ஒரு மயிர் கூட இல்லை. வயது அறுபதிற்க்கு மேல் இருக்கும்.

“இந்த செருப்ப கொஞ்சம் தெச்சிகொடுங்களேன்”

“பத்து ரூபா ஆகும்..”

“என் கிட்ட ஏழு தான் இருக்கு… ” இருவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர்.

சரி கொடு. தெச்சிகொடுக்கிறேன்.இதுக்காக உன்ன வெறும் காலோடையா அனுப்பமுடியும்..வெயில் வேற கொளுத்துது..”

“ரொம்ப நன்றி”

“இருக்கட்டும் இருக்கட்டும்…தம்பி என்ன பண்றீங்க ?”

“சினிமாவுல இருக்கேன்..அசிஸ்ஸ்டன்ட் டைரக்டர்..”

அந்த செருப்பு தைப்பவனின் முகத்தில் வேகமாக ஓர் புன்முறுவல் தோன்றி மறைந்தது. அதனுள் எத்தனையோ அர்த்தங்கள் பொதிந்து கிடந்தன.
அதன்பின் அவர்கள் இருவரும் ஏனோ பேசிக்கொள்ளவில்லை. அந்த நிசப்தத்தை திடிரெனவந்த ஓர் குரல் கலைத்தது,

“தலைவரே,, இங்க வீ.கே நகர் மூணாவது தெரு..எங்க இருக்கு” மடிப்புக்கலையா சட்டைக்குள் ஒளிந்துக்கொண்டிருந்தான் அந்த குரலுக்கு சொந்தக்காரன்..

“இங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க..”  என்றார் அந்த கடைக்காரர். அங்கிருந்து நகர முற்பட்ட அந்த புதியவன் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டிருந்த நிரஞ்சனை பார்த்ததும் நின்றான்.

“டேய் நீ நிரஞ்சன் தானே !”அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாதென்றே ஒதுங்கி நின்ற நிரஞ்சனை அவன் அடையாளம் கண்டுகொண்டான்.

“என்ன தெரியலையா.. கதிர்டா…கம்ப்யூட்டர்சயின்ஸ் டிபார்ட்மன்ட்..ஞாபகமில்ல !”

நிரஞ்சன் எதுவும் பேச வில்லை. மிகவும் கடினப்பட்டு ஓர் புன்னகை புரிந்தான். அங்கு நின்றுகொண்டிருந்த காரிலிருந்து ஒரு பெண்குரல் ஒலித்தது.

“கதிர்..சீக்கிரம் வா “

“யா டியர் !” தொடர்ந்து அந்த புதியவன் பேச தொடங்கினான்,,

“என்னடா ஏதோ படம் எடுக்கிறேன்னு சுத்திக்கிட்டு இருந்த..இப்ப ஆளு இவ்வளவு பரிதாபமா  மாறிட்ட..ஏதும் படம் எடுத்த மாதிரி தெரியலே…”

“சீக்கிரம் எடுத்திடுவேன்” அவமானங்கள் நிரஞ்சனுக்கு புதிதல்ல..

“எங்க ! அவன்அவன் நெட்லயே படம் ரிலீஸ் பண்ணுறான்..நீ என்னடானா ஆளே மாறிபோய் இப்படி சுத்திக்கிட்டிருக்க..நல்ல இருக்கேன்னு பொய் சொல்லாத..பாத்தாலே தெரியுது..எப்படி இருக்கணு..அப்பவே தெரியும் எனக்கு..
கதை யாரு வேணும்னாலும் சொல்லலாம்…படம் எடுக்கிறதெல்லாம்…..ம்ஹூம்..
ஒழுங்கா படிசிருந்தினா ஈசியா ஐ.டி வேலையாவது கிடைச்சிருக்கும்..என்ன பார்த்தியா…”

காரின் ஹாரன் மீண்டும் ஒலித்ததும் பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு அந்த புதியவன் காரை நோக்கி ஓடினான்.

கலங்கிய கண்களுடன் நின்றுக் கொண்டிருந்த நிரஞ்சனை ஆசுவாச படுத்த முயற்சித்தார் அந்தகடைக்காரர்

“நீ ஏன் தம்பி கலங்குற..நிச்சயம் நீ படம் பன்னிருவ. நீ யாரையும் ஏமாத்துல..சொந்த திறமைய வச்சு முன்னுக்கு வர நினைக்குற..கொஞ்ச நாள் கஷ்டப்பட்டு உழைச்சா எல்லாம் சரியாகிடும் “

தான் பொய் சொல்கிறோம் என்பது அவருக்கு தெரியும். அங்கு நடந்த சம்பாஷனைகளைக் கொண்டு நிரஞ்சனின் நிலையை ஒருவாறு யூகித்துக்கொண்ட அவர் அவனை சமாதானம் செய்வதற்காகவே அவ்வாறு கூறினார். அவரும் பல வருடமாக யாரையும் ஏமாற்றாமல் தான் உழைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஏனோ முன்னேற முடியவில்லை..
“என் கிட்ட நல்ல நல்ல திரைக்கதைகளெல்லாம் இருக்கு..நிச்சயம் படம் பண்ணிருவேன்” என்றவாறே தைத்த செருப்பை வாங்கிகொண்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

நிரஞ்சன் தொலைவில் ஒரு புள்ளியாக மறையும்வரை அவனை பார்த்துக்கொண்டிருந்தார். அவரை அறியாமலேயே அவர் கண்களில் நீர் பெருகியது.
வேகமாக அந்த ஓலை குடிசையினுள்  ஓடிய அவர் அங்கிருந்த அந்த பழைய பெட்டியை திறந்தார்.   அதில் கட்டு கட்டாக காகிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் சில செருப்பு தைக்கும் ஊசிகளும், சில கிழிந்த துணிகளும்  கிடந்தன. அந்த காகிதங்களை கையில் ஏந்தி, தன் கண்ணீர் துளிகள் காகிதத்தை நனைக்க, படிக்க தொடங்கினார். இதுவரை பல முறை படித்திருப்பார். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மனதில் ஏதோ ஓர் பாரம் அவரை அழுத்திடும். பல வருடத்திற்குமுன் அவர் எழுதிய திரைக்கதைகள்தான் அவை….

அவர் கண்களில் கண்ணீர் வடிந்துக்கொண்டிருந்தது. நிரஞ்சனின் வார்த்தைகள் காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது…

“என் கிட்ட நல்ல நல்ல திரைக்கதைகளெல்லாம் இருக்கு..நிச்சயம் படம் பண்ணிருவேன்”

தமிழில் ஆன்லைன் செல்ஃப்-பப்ளிஷிங் ஏன் அவசியம்?

‘செல்ஃப்-பப்ளிஷிங்’ (Self-Publishing) என்ற வார்த்தை அண்மை காலத்தில் பிரபலமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் தமிழில் ஏதோ ஒரு வகையில் செல்ஃப்-பப்ளிஷிங் கான்செப்ட் வெகு காலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் எழுத்தாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் தங்களுடைய படைப்புகளை தாங்களே பிரசுரித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனாலும் செல்ஃப்-பப்ளிஷிங் என்று அவர்கள் அதை அழைக்க வில்லை.  ஒரு எழுத்தாளன்  தன் படைப்புகளை தானே பிரசுரித்துக்கொள்ளும் முறை தான் செல்ஃப்-பப்ளிஷிங் எனப்படுகிறது. இப்போது உலகளவில்  செல்ஃப் பப்ளிஷிங்கிற்கு  ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஈ-புத்தகம், பிரிண்ட் புத்தகம் என அனைத்தும் சாத்தியம். பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்ற முறையில் பைசா செலவளிக்காமல் ஒரு புத்தகத்தை பிரிண்ட் செய்ய முடியும். இந்த முறை வளரும் எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். வெளிநாடுகளில் பல வளர்ந்த எழுத்தாளர்களும் இந்த முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர்.

இந்தியாவிலும் இந்த முறை வேகமாக வளர்ந்து வருகிறது. செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனங்கள் நிறைய உருவாகி வருகின்றன. பல ஆன்லைன் ரீடைல் நிறுவனங்களும் செல்ஃப் பப்ளிஷிங்கில் இறங்கியிருக்கின்றன. இங்கே நிறுவனங்கள் இடைத்தரகர்கள் போலவே செயல்படுவார்கள். ஒரு புத்தகத்தின் முழு உரிமை எழுத்தாளரிடமே இருக்கும். எழுத்தாளாரே பதிப்பாளர். புத்தகத்தை விநியோகம் செய்வதே இந்த நிறுவனங்களின் வேலை. அதற்கு அவர்கள் கமிஷன் மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள். ஈ-புத்தகமெனில், பெரும்பாலும் 70-30 முறை பின்பற்ற படுகிறது. ஒரு புத்தகத்தின் விலையில் 30% செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனத்திற்கு சென்றுவிடும். மீதம் 70% எழுத்தாளருக்கு. பிரிண்ட் புத்தகமெனில் 50% வரை எழுத்தாளருக்கு கிட்டும். எழுத்தாளரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பனமாக வாங்கிக்கொண்டு புத்தகத்தை பிரசுரிக்கும் செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனங்களும் இருக்கின்றன. வரும் லாபத்தை இறுதியில் பிரித்துக்கொள்வார்கள். இந்தியாவில் ஆங்கில நூல்களுக்கு மார்க்கெட் நிறைய இருப்பதால் காசு செலவில்லாமல் செல்ஃப் பப்ளிஷ் செய்திட முடியும். பிராந்திய மொழி நூல்களுக்கு? அண்மையில் என்னுடைய ‘தட்பம் தவிர்’ நாவலை ஆன்லைனில் செல்ஃப் பப்ளிஷிங் செய்த போது தமிழ் செல்ஃப் பப்ளிஷிங்கில் இருக்கும் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவில், ஆங்கிலத்தோடு ஒப்பிடுகையில் பிராந்திய மொழி புத்தகங்கள் மிகவும் குறைவாகவே செல்ஃப் பப்ளிஷ் செய்யப்படுகின்றன. எனினும் ஹிந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் நிறைய நிறுவனங்கள் புத்தகங்களை செல்ஃப் பப்ளிஷ் செய்கின்றன. தமிழில் அதற்கான வாய்ப்புகள் ஆரம்பநிலையிலேயே இருக்கின்றன. கடந்த நான்கு வருடங்களாக பல பிரபல ஆன்லைன் ரீடைல் நிறுவனங்கள் தமிழ் உட்பட பல பிராந்திய மொழி நூல்களை ஆன்லைனில் பிரசுரிக்கப்போவதாக சொல்லிவருகின்றன. ஆனால் உண்மையில், இவர்கள் யாரும் தமிழில் செல்ஃப் பப்ளிஷிங் செய்வதில்லை. என்ன பிரச்சனை?

Amazon kindle direct publishing

அனைத்து இந்திய மொழி புத்தகங்களையும் வரவேற்பதாக amazon சொல்கிறது. அதன் பப்ளிஷிங் தளத்தில் தமிழ் புத்தகங்களை பப்ளிஷ் செய்யும் ஆப்சனும் இருக்கிறது. ஆனால் ஈ-புத்தகத்தை பப்ளிஷ் செய்து பார்த்தால் தமிழ் ஃபாண்ட்கள் எடுப்பதில்லை. வெறும் பொட்டிகள் தான் மிஞ்சுகிறது. Amazon-ஐ தொடர்பு கொண்டால், அவர்கள் தமிழ் புத்தகங்களை  பப்ளிஷ் செய்வதில்லை அவர்கள் தளம் தமிழ் ஃபாண்ட்களை சப்போர்ட் செய்வதில்லை என்பதே பதிலாக வந்தது. உண்மையில் தமிழ் font தான் பிரச்சனையா? எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒரு e-book format-ஐ வைத்திருக்கிறது. ஆனால் அவை அவர்களாக உருவாக்கிக்கொண்ட ஃபார்மட்கள் அன்று. உலகின் பிரபலமான ஈ-புக் பார்மட்களை tweak செய்து அவர்களுக்கான ஃபார்மாட்டாக மாற்றிக்கொள்கிறார்கள். ஒரு word doc ஃபைலை amazon  ஃபார்மாட்டில் மாற்றுவது அவ்வளவு கடினமான விசயமல்ல. அந்த வேலையை செய்ய நிறைய சாஃப்ட்வேர் இருக்கின்றன. அப்படி கன்வெர்ட் செய்யபட்ட ஃபைல்களை kindle சாதனங்கள் அனைத்திலும் டெஸ்ட் செய்து பார்த்ததில், ஃபாண்ட்கள் எந்த பிரச்சனையுமின்றி மேப் ஆகி இருந்தன. ஆனால் Amazon அதனுடைய converter-ஐ பயன்படுத்தி கன்வெர்ட் செய்யப்பட்ட ஃபைல்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். ஆனால் kindle converter-ஆல் தமிழ் ஃபாண்ட்கள் சரியாக உருவாக்க முடிவதில்லை.  தற்போதைய சூழலில் எந்த ஃபார்மட்டிலும் ஒரு தமிழ் ஈ-புத்தகத்தை சிறப்பாக உருவாக்கிட முடியும். பிரச்சனை ஃபாண்ட்டிலோ பார்மட்டிலோ இல்லை. பெரிய வெளிநாட்டு செல்ஃப் பப்ளிஷ் நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பத்தில்லை என்பதே உண்மை. அதற்கான மார்க்கெட் இங்கே இல்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

Flipkart Online Self publishing

Flipkart-டும் தாங்கள் செல்ஃப் பப்ளிஷிங்கில் கோலோச்சப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் flipkart-இல் நேரடியாக புத்தகத்தை ஒரு எழுத்தாளரால் பிரசுரிக்க முடியாது. வினியோகஸ்தர்கள் மூலமாகதான்  flipkart-டிற்கு ஈ-புத்தககங்களை விநியோகம் செய்ய முடியும். அது போன்ற ஒரு விநியோக தளம் தான் Smashwords. இதுவும் வெளிநாட்டு தளம் என்பதால், தமிழுக்கான முக்கியத்துவம் குறைகிறது. smashwords 70-30% என்ற முறையில் இயங்கினாலும், அது ஒரு அமெரிக்க தளம் என்பதால் அமெரிக்காவிற்குவேறு தனியாக  வரி செலுத்த வேண்டும் (அமேஜானிலும் இந்த பிரச்சனை இருக்கிறது). இறுதியில் 10-20% தான் எழுத்தாளருக்கு கிட்டும். எனினும் இந்ததளத்தில் ஃபாண்ட் பிரச்சனை இல்லை. வெறும் வோர்ட் ஃபைலை பதிவேற்றம் செய்துவிட்டால் போதும். conversion வேலைகளை smashwords தளம் பார்த்துக்கொள்ளும். இத்தளத்தில் பெரும்பாலான புத்தகங்கள் e-pub ஃபார்மட்டில் விற்க்கப்படுகின்றன. தமிழ் e-pub புத்தகங்களில் ஃபாண்ட் பிரச்சனை இருப்பதில்லை. இதில் பிரசுரித்திடலாம் என்று முடிவு செய்து போதிதர்மர் முதல் ஜேம்ஸ்பாண்ட் வரை என்ற இலவச ஈ-புத்தகத்தை சோதனை முயற்சியாக இங்கே பிரசுரித்துப்பார்த்தேன். smashword தளத்தில் பிரசுரிக்கப்படும் எல்லா புத்தகங்களுமே Flipkart-டிற்கு விநியோகமாகாது. Smashwords premium catalogue-யில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை மட்டுமே smashwords Flipkart-டிற்கு விநியோகம் செய்யும். ஒரு புத்தகம் Smashwords premium catalogue-யில் இடம்பெற வேண்டுமெனில், அந்த புத்தகம் சில ஃபார்மட்டிங் டெஸ்ட்களை பாஸ் செய்ய வேண்டும். இங்கேதான்  layout பிரச்சனை வருகிறது.  என்னதான் smashwords-யின் விதிமுறைகளை பின்பற்றி வோர்ட் டாக்குமென்டை  ஃபார்மட் செய்தாலும்,  ஒரு தமிழ் டாக்குமென்ட்டின் layout ஆங்கில புத்தகத்திலிருந்து மாறுபட்டுதான் இருக்கும். smashwords-யின் Autovetter சாஃப்ட்வேரால் தமிழ் டாக்குமென்ட்களை சரியாக செக் செய்ய முடிவதில்லை. இங்கும் தமிழ் பப்ளிஷிங் சாத்தியப்படவில்லை.

Google Play Self Publishing.

பப்ளிஷிங் என்று வருகையில் கூகிள் Author friendly கிடையாது. கூகிள் ப்ளே ஸ்டோரில்  ஒரு புத்தகத்தை பப்ளிஷ் செய்தால் அது பிராசஸ் ஆக கிட்டதட்ட ஒரு மாதம் ஆகிறது.  இதிலும் என் புத்தகத்தை பிரசுரித்து பார்த்தேன். பப்ளிஷ் ஆக 20 நாட்கள் ஆனது. அதன் பப்ளிஷிங் போர்டல் வெளிப்படையாக இருக்கவில்லை. மேலும் அவர்கள் தங்கள் போக்கில் புத்தகத்தின் விலையை மாற்றுவார்கள் என்பது கூடுதல் தகவல். ஆனால் கூகிளில் ஃபாண்ட், ஃபார்மட், லேஅவுட் பிரச்சனைகள் கிடையாது. ஒரு வேலை வருங்காலத்தில் அவர்கள் பப்ளிஷிங்கில் அதிக கவனம் செலுத்த கூடும்.

ஒரு புத்தகத்தை ஒரு பொருளாக ஒரு e-commerce தளத்தில் விற்பதற்கும், செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனங்கள் மூலம் விற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. செல்ஃப்-பப்ளிஷிங் என்று வரும்போது அந்த நிறுவனங்களே புத்தகத்தை ப்ரோமோட் செய்யும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து மார்க்கெட் செய்யும்.  வெறும் ஆன்லைன் வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தும் தளங்கள் புத்தகத்தில் தனி கவனம் செலுத்துவதில்லை. எனினும் ஆன்லைன் வர்த்தக தளங்களில் புத்தகத்தை நேரடியாக விற்றிடலாம் என்று அவர்களை தொடர்பு கொண்டதில், ஒரு எழுத்தாளர் நேரடியாக அந்த  தளங்களில் ஈ-புத்தகங்களை விற்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தது. டிஜிட்டல் கூட்ஸ் செல்லிங்க் என்று வரும் போது பலரும் indepenedent e-book வியாபாரத்தில் இறங்க விரும்பவில்லை.

இது ஒரு புறமிருக்க, செல்ஃப் பப்ளிஷிங் பாரம்பரிய பப்ளிஷிங் முறைகளை உடைத்துவிடும் என்று வெளிநாடுகளில் ஆருடம் சொல்கிறார்கள். மேலும் ஈ-புத்தக்ங்கள் பிரிண்ட் புத்தகங்களை டாமினேட் செய்ய தொடங்கிவிடும் என்றும் சொல்கிறார்கள். தமிழுக்கு அந்த நிலை வராது. இங்கே பிரிண்ட் புத்தகங்ளுக்கு இருக்கும் மார்க்கெட் இருந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் இங்கே புத்தகங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனை ஆகின்றன. அதே சமயத்தில் செல்ஃப் பப்ளிஷிங் ஈ-புத்தங்களுக்கான புதிய மார்க்கெட்டை உருவாக்கும். அப்போது பெரிய பதிப்பகங்களே ஆன்லைன் செல்ஃப் பப்ளிஷிங்கில் இறங்கலாம். ஈ-புத்தகத்திற்கு தனி முதலீடு என்று எதுவும் தேவையில்லை. அதனால் எழுத்தாளர், பதிப்பாளர் இருவருமே பயனடைந்திட முடியும்.

இங்கே தமிழ் ஆன்லைன் பப்ளிஷிங் பற்றி மட்டுமே பேசுவதற்கு காரணம் இருக்கிறது. செல்ஃப் பப்ளிஷிங்கில் புத்தகத்தை பிரிண்ட் ஆன் டிமாண்ட் முறையில் பிரிண்ட் செய்யலாம், அல்லது பேட்ச் ப்ரொடக்ஷன் மூலம் பிரிண்ட் செய்யலாம். பிரிண்ட் ஆன் டிமாண்ட்டில் ஒரே ஒரு புத்தகத்தை கூட பிரிண்ட் செய்ய முடியும். பேட்ச் ப்ரொடக்ஷனில் குறைந்த அளவிலான புத்தகங்களை பிரிண்ட் செய்ய முடியும். (ஆனால் சம்ப்ரதாயமான ஆப்செட் பிரிண்டிங்கில் குறைந்த பட்சம் ஆயிரம் புத்தகங்களை பிரிண்ட் செய்தால்தான் லாபம்).  இந்தியாவில்  புத்தகங்களை பிரிண்ட் செய்து விற்கும் செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் இது சாத்தியமில்லை. Print on demand- மூலம் 150 பக்கங்கள் உள்ள ஒரு தமிழ் புத்தகத்தை பிரிண்ட் செய்வதற்கு குறைந்தது 200 ரூபாய் ஆகிறது. அத்தகைய புத்தகங்களை ஆன்லைனில் விற்க்க வேண்டுமெனில் குறைந்தது 250 ரூபையாவது சார்ஜ் செய்ய வேண்டும். (ஒரு வளரும் எழுத்தாளரின் புத்தகத்தை) அவ்வளவு காசு கொடுத்து யாரும் வாங்க மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, அப்படி அந்த புத்தகத்தை விற்றாலும் எழுத்தாருக்கு ஐந்து ரூபாய் தான் கிடைக்கும். இங்கே செல்ஃப் பப்ளிஷிங்கின் அடிப்படை அம்சமே அடிபட்டு போகிறது. எழுத்தாளர், விற்பனையாளர் இருவருமே பயனடைய வேண்டும் என்பதே செல்ஃப் பப்ளிஷிங்கின் நோக்கம். ஓரிரு செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனங்கள் தமிழ் புத்தகங்களை பேட்ச் ப்ரொடக்ஷன் செய்கின்றன. ஆனால் அவர்கள் அனைவரும் Paid Publishing முறையை பின்பற்றுகிறார்கள். எழுத்தாளர் சராசரியாக ஒரு புத்தகத்திற்கு 30000 ரூபாய் வரை அந்த நிறுவனங்களுக்கு முன்பணமாக செலுத்த வேண்டும்.  அவர்கள் அதை வைத்து புத்தகத்தை பிரசுரிப்பார்கள். முப்பதாயிறம் ரூபாய்க்கு மேல் புத்தகம் விற்றால் தான் எழுத்தாளர் சம்பாதிக்க முடியும். ஆங்கில புத்தகமெனில் எளிதில் சம்பாதித்துவிடலாம். தமிழில் அசாத்தியம். ஆனால் ஈ-பப்ளிஷிங்கில் இந்த பிரச்சனை இல்லை. அதற்கு எழுத்தாளர் எந்த முன்பணமும் செலுத்த வேண்டியது இல்லை.

அப்படிதான், ஒருவழியாக, Pothi தளத்தில் தட்பம் தவிர் நாவலை பிரசுரம் செய்தேன். Pothi ஒரு பெங்களூர் நிறுவனம். இந்தியாவில் உள்ள செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனங்கள் அனைத்தும் ஆங்கிலத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆங்கில புத்தகங்கள் நிறைய விற்பதே அதற்கு காரணம். தமிழுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஒரு தமிழ் செல்ஃப்-பப்ளிஷிங் நிறுவனம் உருவாக வேண்டும். அப்படி உருவானால் பல வளரும் எழுத்தாளர்கள் பலன் அடைவார்கள். பிரபல எழுத்தாளர்களும் இந்த முறையை பின்பற்ற தொடங்கினால், ஆன்லைனில் பிளாக் வாசகர்களிடம் அவர்களின் புத்தகம் அதிக எண்ணிக்கையில் போய் சேரும். அடுத்த தலைமுறையை android சாதனங்களும், ரீடர்களும் ஆட்கொண்டுவிட்டன. சிறு சிறு ஈ-புத்தகங்களை குறைந்த விலையில் வெளியீடுவதன் மூலம் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கையையும் அதிக படுத்திவிட முடியும். என்னை போல் முழு நேரம் எழுதுபவர்கள் பொருளாதார ரீதியாகவும் லாபம் அடைந்திட முடியும். இதை ஒரே நாளில் சாத்தியப்படுத்திவிட முடியாது. ஆனாலும் காலப்போக்கில் இதை செய்து முடிக்க முடியும். ஆன்லைன் செல்ஃப் பப்ளிஷிங் என்பது தொழிநுட்பத்தின் வளர்ச்சியே. பிரபல எழுத்தாளர்கள் இந்தமுறையை ஆதரித்தால், அது பல புது கதவுகளை திறந்து வைக்கும்.

தட்பம் தவிர் அத்தியாயம் 8 பகுதி 2

***

சானடோரியம் ப்ரிட்ஜை ஒட்டி அமைந்திருந்த தனியார் வங்கி ஏடிஎம்-யில் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார் ரங்கதுரை. வெளியே அரைப்போதையில் அமர்ந்திருந்த ஏடிஎம் காவலாளி காக்கையன் ரங்கதுரையைப் பார்த்து வணக்கம் வைத்தான். ரங்கதுரை சிறு புன்னகை புரிந்து விட்டு நகர, அவன், “சார்” என்றான்.

துரை அவனிடம் ஒரு பத்துரூபாயை நீட்ட அவன் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு, “சாரு மனைவி மக்களோட ரொம்ப நாள் வாழணும்” என்று வாழ்த்தினான்.

“என் பொண்டாட்டி செத்து பலவருஷம் ஆகுதுயா” என்று சொல்லி விட்டு செர்விஸ் ரோடில் இறங்கி நடந்தார் துரை. வேகமாக வந்த போலீஸ் பேட்ரோல் கார் ஒன்று அவரை உரசிக் கொண்டு போக, அவர் ஸ்தம்பித்து நின்றார்.

“எப்டி போறானுங்க… எதிர்த்துக் கேட்டா உள்ள வச்சு குத்துவானுங்க…” என்று அரைப்போதையில் தன் கருத்தைப் பதிவு செய்துவிட்டு, தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தான் காக்கையன். அடுத்த ரவுண்டிற்கு தயாராகிக் கொண்டிருந்தான் அவன்.

திடீரென்று அங்கே ஒரு மாருதி ஸ்விஃப்ட் வந்து நின்றது. ஜன்னல் கண்ணாடி இறங்கியது.

“ஹலோ சார்” காரினுள்ளிருந்து கேட்டது ஒரு ஆண் குரல்.

சிறிது நேரம் உற்று நோக்கிய ரங்கதுரை, “என்ன… ஆளே மாறிட்ட…?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார்.

“உள்ள ஏறுங்க சார்… பேசிக்கிட்டே போவோம்”

கார் பச்சைமலை அடிவாரத்தில் வந்து நின்றது. மணி காலை 11.30.

“நந்தன பார்த்து எவ்ளோ நாளாச்சு! ஆஸ்ட்ரேலியால இருந்து எப்ப வந்தான்…?” ரங்கதுரை ஆர்வமாக வினவினார்.

“லாஸ்ட் வீக்” அவன் அதிகம் பேச விரும்பாதவன். எனினும் இவருக்குப் பதிலளித்தாக வேண்டுமே என்பதற்காகவே பேசினான்.

“இங்க என்ன பண்றான்…?”

“அமைதியான இடமாச்சே! ரிலாக்சா பேசலாம்னு வரச் சொன்னார். வழியில அன்எக்ஸ்பெக்டடா உங்களப் பாத்தேன். உங்களப் பாத்தா சந்தோஷப்படுவார்” என்று சொல்லிவிட்டு தன் செல்ஃபோனை எடுத்து யாருக்கோ கால் செய்வது போல் பாசாங்கு செய்தான். பின்,

“நீங்க இங்கயே இருங்க… அவர் மொபைல் நாட் ரீச்சபிள்னு வருது. நான் போய் அவரக் கூட்டிட்டு வந்துறேன்…”

“ஏன் நான் மலை மேல வரக்கூடாதா?“

“சார் முன்னூறு படிக்கு மேல் ஏறணும்… வயசாயிருச்சு இல்ல…”

ரங்கதுரைக்குக் கோபம் வந்தது. “ஓய். எனக்கு என்ன அப்டி வயசாயிருச்சு… அவனவன் இந்த வயசுல கல்யாணமே பண்ணிக்கிறான்…”

இருவரும் மலையின் உச்சியை அடைந்தனர். மணி பன்னிரண்டு. அங்கே ஒரு மகாயுகக்காளி கோவில் இருந்தது. காளி உக்கிரமாகக் காட்சி அளித்தாள். இடம் வெறிச்சோடி இருந்தது.

“நந்தன் எங்க?”

“இங்கதான் சார் எங்கயாவது ஒதுங்கியிருப்பாரு… கொஞ்சம் இருங்க…” அவன் மேல் இன்னும் துரைக்கு சந்தேகம் வரவில்லை.

“சார்.. பிரகாஷ் சாரப் பத்தி கேள்விப்பட்டதும் ரொம்ப கஷ்டமாக ஆகிருச்சு…” அவன் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு இதைச் சொன்னான்.

“ஆமா ஆமா… முன்னாடிநாள் தான்யா அவரப் பார்த்தேன். ரொம்ப நல்ல மனுஷன்”

“யாரு கொன்னுருப்பா…?”

துரை தெரியாது என்பது போல் தலையசைத்தார்.

“கணேஷும் செத்துட்டாராம்.. கொன்னுட்டாங்க…”

துரை யார் கணேஷ் என்பது போல் ஆச்சர்யமாகப் பார்த்தார்.

“அதான் சார்… மெட்டல் ஃபார்மிங்க் எக்ஸ்பெர்ட் கணேஷ். கோயம்புத்தூர்காரு. யாரோ அநியாயமா கொன்னுட்டாங்க”

துரைக்கு உண்மை புலப்பட ஆரம்பித்தது. உடல் வேர்த்தது.

“நந்தன் எங்க…?” அவனிடமிருந்து பதில் வரவில்லை.

“நந்தன் எங்கடா…?” மீண்டும் கத்தினார்.

“செஞ்ச தப்புக்கு யாரா இருந்தாலும் தண்டனை அனுபவிக்கணும் சார்…“ என்றவாறே அவன் சட்டைப்பைக்குள் இருந்து கூர்மையான கத்தியை எடுத்தான். ரங்கதுரைக்கு வயதாகி இருந்தாலும், உடம்பில் பலம் இருந்தது. அவனிடம் முடிந்தவரை போராடினார். அவன் முடியை பிடித்து இழுத்தார். அவனைப் பிடித்துத் தள்ள முயன்றார். இறுதியில் அவன் தான் வெற்றிபெற்றான். அவன், அவரது நெஞ்சில் மூன்று என்று எழுதிவிட்டு நகர்ந்தான். அவர் உடம்பில் இன்னும் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தது.

“பேதை பெண்ணை வடிவுகண்டு காமுகனவன் நத்தினால்

விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே…”

அவர் முன் நின்று அவன் உரக்கப் பாடினான். அவர் தரையில் துடித்துக் கொண்டிருந்தார். அவர் கையில் கொத்தாக முடி சிக்கியிருந்தது. அவன் மீண்டும் மீண்டும் அதே வரிகளைப் பாடிக் கொண்டே அங்கிருந்து கீழே இறங்கினான். இப்போது காளியின் முகத்தில் அமைதி படர்ந்திருந்தது.

***

நாவலை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

தட்பம் தவிர் டீசர்

இது தட்பம் தவிர், க்ரைம் நாவலின் முதல் டீசர். தமிழ் எழுத்துலகில் இது ஒரு புது முயற்சி.

நாவலை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.