Everything Everywhere All at Once- கொஞ்சம் திரைக்கதை  

எவிலின் வாங் ஒரு சீன பெண்மணி. அவளும் அவர்  கணவன் வேமாண்டும்  தங்கள் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அமெரிக்காவில் ஒரு லாண்ட்ரி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததற்கு பிறகு திருமண வாழ்க்கை கசக்கத் தொடங்குகிறது. வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வருகிறது. தகுந்த ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சூழல். மறுபுறம் பல ஆண்டுகள் கழித்து  எவிலின் வாங்கின் தந்தை அவளை பார்க்க வருவதாக சொல்கிறார். தந்தைக்கு பயந்த குழந்தையாக வளர்ந்த எவிலின் வாங் தந்தையின் வரவை பயபக்தியுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் தான் வாங்கின் மகள் தன்னுடைய தோழியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அவளை வீட்டிற்கு அழைத்து வருகிறாள். கசக்கும் குடும்ப வாழ்க்கை, நெருக்கும் வருமான வரித்துறை அதிகாரி, பழைய சிந்தனை கொண்ட தந்தை, நவீன சிந்தனையில் வளர்ந்த ஓர்பால் ஈர்ப்பு கொண்ட மகள் என இவை அனைத்தையும் எவிலின் வாங் எப்படி சமாளிக்கப்போகிறாள் என்பதே கதைச் சுருக்கம். 

மத்தியதர அமெரிக்க வாழ்க்கை, இருத்தலியல் போராட்டம், உறவு சிக்கல் இதெல்லாம் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகளை நினைவுப்படுத்தலாம். இது போன்ற கதை கருவை நல்லதொரு பேமிலி டிராமாவாக உருவாக்கிடவே எவரும் விரும்புவார்கள். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதையாசிரியர்கள் மற்றும் இயக்குனர்களான ‘டானியல்ஸ்’ (Daniel Kwan and Daniel Scheinert), இத்தகைய எளிமையான குடும்பக்கதையை மையாமாகக் கொண்டு சுவாரஸ்யமானதொரு  சயின்ஸ் பிக்சன்-மல்டிவேர்ஸ் (multiverse) படத்தை உருவாக்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள். 

ஏனெனில் மல்டிவெர்ஸ் என்றாலே பெரும்பாலும் ஆக்சன் க்ரைம் போன்ற கதைகளை தான் எளிதில் யோசிக்க முடியும். ஒரு யூனிவெர்சில் நடக்கும் சிக்கலுக்கான (குற்றம்)  தீர்வு வேறொரு யூனிவெர்சில் இருப்பதாக நாம் நிறைய கதைகளை பார்த்திருப்போம்.  ஆனால் ஒரு குடும்ப கதையை மல்டிவெர்ஸ் கதையாக சொல்லியிருப்பது தான் இந்த படத்தின் தனித்துவம். 

அது என்ன மல்டிவெர்ஸ்?

வாழ்வில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும்  ஏராளாமான சாத்தியக்கூறுகள் உண்டு. ஒவ்வொரு சாத்தியக்கூறுகளும் ஒவ்வொரு உலகத்தை உருவாக்கிடும் எங்கிற அனுமானமே ‘மல்டிவெர்ஸ்’ எனப்படுகிறது. அதாவது ஒருவன் ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டால் , அவன் ஒரு உலகத்தை, வாழ்வை  சாத்தியப்படுத்துகிறான்.  திருமணம் செய்யாவிட்டால் வேறொரு வாழ்க்கை அதாவது வேறொரு உலகம் உருவாகும். இப்படி ஒவ்வொரு முடிவும் ஒரு வாழ்வை உலகை உருவாக்கும் போதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஏராளமான மாற்று (alternate) வாழ்க்கை சாத்தியமாகிறது. அதாவது நாம் நம்  வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், மாற்று உலகில் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு உலகில் முற்றிலும் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம். வெறும் இரண்டு உலகமாக இருக்கும் போது அது parallel universe எனப்படுகிறது. ஏராளமான உலகங்கள் இருக்கும் போது அது multiple universe அல்லது multiverse எனப்படுகிறது. (ப்ளேக் கோர்ச்சின் ‘டார்க் மேட்டர்’ நாவல் ஒரு விறுவிறுப்பான parallel universe கதை. ஒரு உலகத்தில் இருக்கும் விஞ்ஞானி தன்னுடைய மாற்று உலகத்தில் சிக்கிக்கொண்டால் என்னாகும் என்பதே அந்த நாவல்).

மல்டிவெர்ஸ் என்றதும் நிறைய லேயரில் கதைகள் சொல்ல வேண்டி இருக்கும். அப்போது திரைக்கதை சிக்கலானதாக உருவாக வாய்ப்பிருக்கிறது. அதையெல்லாம் மீறி எப்படி கதையை தெளிவாக சொல்லப்போகிறொம் என்பதிலேயே திரைக்கதையாசிரியாரின் திறமை இருக்கிறது. மேலும் ஒரு திரைக்கதை எத்தகைய சிக்கலானதாக இருந்தாலும், அதன் ஆதாரக் கதை என்பது மிக எளிமையானதாக இருந்தால் தான் அது நம் மனதிற்கு நெருங்கி வரும்.இந்த படத்தில் இதெல்லாம் சாத்தியமாகி இருப்பதை கவனிக்க முடியும்.   

எவிலின் வாங் கதாப்பாத்திரம் நமக்கு அறிமுகம் ஆகும் போதே அவள் பரபரப்பாகவும் பதட்டமாகவும் இருக்கிறாள். அவளுடைய கணவன் சொல்ல வருவதை அவள் கவனிப்பதாக இல்லை. இதிலிருந்தே அவர்களுக்குள் சரியான உறவில்லை என்பது தெரிகிறது. தன் தந்தை வரப்போகிறார், அவருடைய அங்கீகாரத்தை எப்படி பெற போகிறோம் என்று அவள் குழம்பி இருக்கும்போது  அவளுடைய மகள் தன் காதலியுடன் வந்து வீட்டுக் கதவை தட்டுகிறாள். இது எவிலின் வாங்கை பெரிதும் கோபப்படுத்துகிறது. தன் காதலையே ஏற்றுக்கொள்ளாத தந்தையிடம் தன் மகள் ஓர்பால் ஈர்ப்பு கொண்டவள் என்று சொல்ல அவள் தயாராக இல்லை.  மகளை  திரும்பி போய்விடும்படி சொல்கிறாள். இங்கே தாய் மகள் பிரச்சனை, மற்றும் கணவன் மனைவி பிரச்சனை ஆகியவை எமோஷனல் கான்ப்ளிக்ட்டாக இருக்கிறது. அடுத்து வருவாய் துறை அதிகாரியிடமிருந்து தப்பிக்க வேண்டும். இது external  கான்ப்ளிக்ட். இப்படி படத்தில் கான்ப்ளிக்ட் அதாவது முரண் தெளிவாக அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது. கதாப்பாத்திரத்தின் உலகம் அதிலுள்ள பிரச்சனையை நம்மால் எளிதில் உள்வாங்கி கொள்ள முடிவதனால் நாமும் கதைக்குள் எளிதாக நுழைந்துவிடுகிறோம். 

படத்தின் எழுத்தாளர்கள், ஆரம்பத்திலேயே இது ஒரு சைன்ஸ் பிக்சன் படம், மல்டிவெர்ஸ் படம் என்பதாக காட்சிகளை அமைத்து நம்மை திசைத் திருப்ப விரும்பவில்லை. இது ஒரு பேமிலி டிராமா என்ற அளவிலேயே நம்மை தயார் செய்கிறார்கள். பின் வாங்கின் கணவன் வேமாண்ட் வழக்கத்திலிருந்து மாறுப்பட்டிருக்கிறான் என்று கொஞ்சம் கொஞ்சமாக  அறிமுகம் செய்கிறார்கள். அதாவது வேறொரு  (ஆல்பா) உலகத்திலிருந்து வரும் வேமாண்ட்  சாதாரண உலகத்தின் வேமாண்ட்டை ஆட்கொள்கிறான் என்று காண்பிக்கிறார்கள். ஆல்பா உலகத்தை அழிவிலிருந்து காக்க வேண்டுமெனில், சாதாரண உலகத்தின் (அதாவது நாம் வாழும் உலகம்) எவிலின் வாங்கின் உதவி வேண்டும், அதனால் தான் அவளை தேடி வந்திருப்பதாக ‘ஆல்பா’ வேமாண்ட் சொல்கிறான். 

இப்போது தீய சக்தியை அழித்து  ஆல்பா உலகை காப்பாற்றும் பொறுப்பு வாங்கிடம் வருகிறது. அவளுக்கொரு நோக்கம் (Goal) கிடைக்கிறது.  அதுவரை சிறியதாக இருந்த முரண் இப்போது பெரிய முரணாக மாறுகிறது. 

ஆல்பா உலகின் தீய சக்தியை வெல்ல நினைக்கும், சாதாரண உலகின் எவிலின் வாங் தன்னுடைய பல உலகங்களின் (சாத்தியங்களின்), எவிலின் வாங்குடன் தொடர்பு கொண்டு சக்தியை திரட்டுகிறாள். இங்கே தான் கதை அழகான அறிவியல் புனைவாக மாறுகிறது.  இந்த கதை சொல்லலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, படத்தின் தொடக்கத்திலேயே நம்முடைய திரைக்கதையை விறுவிறுப்பாக்க வேண்டிய அவசியமில்லை. நிதானமாக பார்வையாளர்களை நம் உலகிற்குள் கூட்டிவந்து அந்த உலகோடு 

அவர்களுக்கு பந்தத்தை ஏற்படுத்தினாலே போதும். பின் அவர்களேயே கதையோடு பயணிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதே. 

இந்த திரைக்கதையில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் ‘கேரக்டர் ஆர்க்’. ஒவ்வொரு பாத்திரத்தின் கேரக்டர் ஆர்க்கும் தெளிவாக கையாளப்பட்டிருக்கும். வாங்க் ஆரம்பத்தில் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநலவாதியாக இருக்கிறாள். பின்னர் தன் மகளை காக்கும் பொருட்டு அவள் சுயநல குணம் மாறுகிறது. பின்னர் எதை பற்றியும் அலட்டிக் கொள்ளாத சித்த நிலைக்கு தள்ளப்படுகிறான். இறுதியாக தன் தவறை உணர்ந்து முழு மனுஷி ஆகிறாள். இப்படி அவளுடைய கேரக்டர் ஆர்க்கிலுள்ள முழுமையை போலவே அவளுடைய கணவன், மகள் மற்றும் தந்தையின் பாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கும். வருவாய் துறை அதிகாரியாக வரும் துணை கதாப்பாத்திரத்திடம் கூட இத்தகைய முழுமையை கவனிக்க முடியும்.  இத்தகைய ஆழமான பாத்திர படைப்பே இந்த படத்தின் பெரிய பலம். 

பல விருதுகளை  வென்ற, திரைக்கதையில் அடுக்குகளை கொண்ட இந்த படம் நமக்கு சொல்லும் செய்தி ஒன்று தான். 

‘சக மனிதனிடம் அன்பு செய்வோம்’

திரைக்கதை எனும் நெடும்பயணம் – 1 

1

கதை

“We are, as a species, addicted to story. Even when the body goes to sleep, the mind stays up all night, telling itself stories.” Jonathan Gottschall

‘கதை’ என்ற சொல் சிறுவயதிலிருந்தே நமக்கு மிகமிக பரிட்சயமானதாக இருக்கிறது. கதை என்றால் என்ன என்கிற தத்துவங்கள் எல்லாம் புத்திக்கு எட்டுவதற்கு முன்பே, கதை கேட்பது நம் மனதிற்கு பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம், ஒரு பாட்டி வடை சுட்டாங்களாம் என்றெல்லாம் குழந்தைகளாக கதை கேட்டிருப்போம். வளர்ந்ததும் குழந்தைகளுக்கு கதை சொல்லியிருப்போம். புராணமாக, காவியமாக, வாய்மொழியாக, இலக்கியமாக, சினிமாவாக ஏதோ ஒரு வகையில் கதைகள் நம்மை துரத்திக் கொண்டே இருக்கின்றன. நம்மோடு உறவாடுகின்றன. ஆனால் கதை என்றால் என்ன என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்?

உண்மையில் அப்படி ஒரு கேள்வியை நாம் யாருமே கேட்டிருக்க  மாட்டோம். கேட்கத் தோணியிருக்காது. எனக்கு முதல் கதையை சொன்னது என்  அப்பாயீ. சிறுவயதில் கருடபுராணம் உட்பட ஏராளமான  கதைகளை அவர் எனக்கு  சொல்லியிருக்கிறார். இன்று என் மகளுக்கு நான் கதைகள் சொல்கிறேன். நான் எப்படி என் பாட்டியிடம் கதை என்றால் என்ன என்று கேட்டதில்லையோ அதுபோல் என் மகளும் அதை என்னிடம் கேட்டதில்லை. ஆனாலும் அவளுக்கு கதை சொல்ல  வேண்டும். ஏனெனில் இங்கே கதை  என்பது நாம் ஆழ்மனதோடு தொடர்பாடும் விஷயமாக  இருக்கிறது.

‘கதை’ என்றதுமே ஒரு கற்பனை நம்  மனதில்  விரியத்  தொடங்கிவிடுகிறது. ஒரு ஊரில் ஒரு அரண்மனை என்றால் ஊரும் அரண்மனையும் நம் கண்முன்னே தோன்றுகிறது. நமக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு கதையை காட்சியாக நாம் உருவகப்படுத்திக் கொள்கிறோம். ஒரு ஐந்து வயது குழந்தைக்கு அரண்மனை என்பது என்னவென்று புரிந்தால் அதன் மனதில் ஒரு தோற்றம் எழலாம். அதுவே ராஜஸ்தானின் அரண்மனைகளை பார்த்த ஒருவருக்கு அரண்மனை என்றதும் மனதில் வேறொரு  தோற்றம் வரும். நம்முடைய புறத்தில், நாம் அனைவருக்கும் சொல்லப்படும் கதை ஒன்றாக இருந்தாலும் நம் அகத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒருவிதமான கதையை நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம். கதை கேட்கும் ஒவ்வொருவரும் கதை சொல்லிகளாகவும் இருக்கிறோம். எனவே தான் கதையின் மீது நமக்கு இவ்வளவு காதல். ஆனால் கதை என்றால் புனைவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. 

காலையில் அலுவலகத்தில் என்ன நடந்தது என்று கோர்வையாக மாலை வேளைகளில் நாம் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்வோம் அல்லவா? வேண்டுமெனில் அதை நாம் உண்மைக் கதை என்று சொல்லிக்கொள்ளலாம். ஏதோ ஒரு சம்பவத்தை கோர்வையாக சொல்லும் போது அது கதை ஆகிறது.  அதாவது கதை என்பது சம்பவங்களின் தொகுப்பு. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில் கதை என்பது நிகழ்வு. ஏதோ ஒன்று நிகழும் போது தான் அதை கதையாக்க முடியும். எதுவுமே நிகழாத போது அங்கே கதை சாத்தியமில்லை. 

ஒரு கல்லூரியில் நடக்கும்  தொடர் கொலைகள் தான் கதை என்று ஒற்றை வரி சொல்கிறோம். இங்கே கொலைகள் என்பது நிகழ்வு. எனவே அங்கே கதை பிறக்கிறது. ஒரு நிகழ்வை சுற்றி நடக்கும் பல நிகழ்வுகள் என்று கதை வளர்கிறது. இத்தகைய நிகழ்வுகள் ஒரு ஜடப்பொருளை சுற்றி நிகழ்ந்தாலும் அங்கே கதை பிறக்கும்.ஒரு வைரம் இருக்கிறது. மிக ராசியான வைரம். இது வெறும் செய்தி. அதை ஒருவன் கொள்ளையடிக்க முயல்கிறான் எனில் இங்கே கதை பிறக்கிறது. அவன் எப்படி கொள்ளை அடிக்கிறான் என்று யோசிக்கும் போது கதை வளர்கிறது. அந்த வைரத்தை இன்னும் சிலரும் கொள்ளை அடிக்க முயற்சிக்கிறார்கள் எனும் போது கதை இன்னும் சுவாரஸ்யமாக வளர்கிறது.  இப்படி கதையை எதிலிருந்து உருவாக்கிட முடியும். அங்கே என்ன நிகழ்கிறது என்று முடிவு செய்வது தான் கதாசிரியரின் வேலை. 

‘கதை’ என்பது பொதுவான சொல். அது ஒரு அடிப்படை. சிறுகதை, நாவல் மற்றும் திரைக்கதை என்பதெல்லாம் அதன் பல்வேறு வடிவங்கள். ஒவ்வொரு வடிவங்களுக்கும் ஏற்ப கதை சொல்லல் முறையும், சம்பவங்களின் தேர்வும்  தொகுப்பும் மாறுபடும் என்பதை நாம் அறிவோம். (இதை பின்வரும் அத்தியாயங்களில் விலாவாரியாக பார்ப்போம்). ஒவ்வொரு வடிவத்திற்கும் ஏற்ப நாம் சம்பவங்களை நீட்டியோ சுருக்கியோ சொல்வோம். ஆனால் ஆதார கதை மாறப்போவதில்லை. அந்த ஆதார கதை, ஆதார சம்பவம் என்பது எப்போதும் சொல்வதற்கு எளிமையானதாகவே இருக்கப் போகிறது. 

‘என் கிட்ட ஒரு கதை இருக்கு?’ என்று நாம் நம் நண்பர்களிடம் சொல்லியிருப்போம். என்ன கதை என்று கேட்டால் 

நாம் பல பக்கங்களையா உடனே சொல்வோம்! இல்லையே! சில வரிகளில் எளிமையாக  தானே முதலில் சொல்வோம். 

“ஒருவன் நாட்டுப்புற  பாடல்களை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு கிராமத்திற்கு வருகிறான். வந்தவன் ஒரு பழைய ஜமீன் அரண்மனையில் தங்குகிறான். அங்கே நிகழும் அமானுஷ்யம் தான் கதை” இதை நாம் சிறுகதையாக, குறுநாவலாக, நாவலாக அல்லது திரைக்கதையாக எழுதலாம். ஆனால் கதை என்றதும் நாம் இந்த இரண்டு வரிகளை தான் சொல்கிறோம். இதையே நாம் ‘ஐடியா ‘ என்கிறோம். ‘கான்செப்ட்’ என்கிறோம். ‘கதைக்கரு’ என்கிறோம்.  சில நேரங்களில் ‘பிளாட்’ (Plot) என்கிறோம். (பிளாட் என்பதற்கு இன்னும் ஆழமான அர்த்தங்கள் உண்டு. அவற்றை பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம். ஆனால் பிளாட் என்றால் (திரைக்)கதையின் சாராம்சம் என்பது பொதுவான புரிதல் என்பதால் நாம் கதைக்கருவை பிளாட் எனலாம்)

நாவல் எனும் போது நாம் மேல் சொன்ன இரண்டு வரி ஐடியாவை கதைச் சுருக்கம் என்கிறோம். திரைக்கதை எனும் போது அதை logline என்கிறோம். எவ்வளவு சிக்கலான கதையாக திரைக்கதையாக இருந்தாலும் அதை மூன்று வரிகளில் எளிமையாக சொல்ல முடியுமானால் அது நல்ல கதை என்பது திரைக்கதையாசிரியர்களின் கூற்று. 

கதை என்பது நிகழ்வுகளின் தொகுப்பு என்று அறிகிறோம். அந்த நிகழ்வு உண்மை சம்பவத்தை அடிப்படையாக   கொண்டதாக இருக்கலாம். கற்பனையாக இருக்கலாம். உண்மையும் கற்பனையும் கலந்ததாக இருக்கலாம். 

கட்சிதமாக நமக்கான நிகழ்வுகளை தேர்வு செய்யும் போது திரைக்கதையில் சுவாரஸ்யம் கூடுகிறது.உதாரணமாக ஒரு கதையை பார்ப்போம். கடந்தகாலத்தில் பலம்கொண்டவனாக வலம் வருகிறான் நாயகன். தனக்கு நெருக்கமானவர்களின் நலனிற்காக பழைய வாழ்க்கையை துறந்து அடங்கி வாழ்கிறான். ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தை காக்க அவன் மீண்டும் கடந்த கால வாழ்க்கைக்குள் நுழைய வேண்டி இருக்கிறது. 

இங்கே பலம் என்பது உடல் பலமாகவும் இருக்கலாம், அறிவு பலமாகவும் இருக்கலாம். நெருக்கமானவர்கள் எனில் காதலியாக இருக்கலாம், மனைவியாக, குடும்பமாக அல்லது நண்பர்களாக இருக்கலாம். அல்லது தேசமாக இருக்கலாம்.

மேற்சொன்ன அவுட்லைனை நாம் எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். கடந்த காலத்தில் டானாக இருந்த ஹீரோ இப்போது சாதாரண ஆட்டோ டிரைவராக இருக்கிறான் எனலாம். கடந்த காலத்தில் ராணுவ வீரனாக, போலீசாக இருந்த ஹீரோ இப்போது சாதாரண குடும்பஸ்த்தனாக இருக்கிறான் எனலாம். கடந்த காலத்தில் அடியாளாக, ரவுடியாக இருந்தான் எனலாம். விஞ்ஞானியாக ஹாக்கராக இருந்தான் எனலாம். போர்வீரனாக, சாமுராயாக, விளையாட்டு வீரனாக அல்லது வேட்டைக்காரனாக இருந்தான் எனலாம். 

ஒரு புத்திசாலித்தனமான போலீஸ் நாயகன் தன் மனைவியின் இழப்பால் குடிகாரனாக மாறிவிடுகிறான். வாழ்வில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கும் அவன், தன் மகளை காப்பாற்ற தன் பழைய புத்திசாலித்தனத்துடன் ஒரு கொலை வழக்கை துப்பறிகிறான். விளையாட்டை விட்டு ஒதுங்கி இருக்கும் ஒரு குத்துச்சண்டை வீரன் தன்னை நாடி வந்த பெண்ணிற்காக பயிற்சியாளனாக மாறுகிறான். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  

கழுகு பார்வையில் பார்க்கும் போது மேற்சொன்ன எல்லாமே ஒரு கதை போல தோன்றலாம். அதாவது இது எல்லாமே ஒரே கான்சபட் தான்.  ஆனால் ஏதொன்று ஒவ்வொன்றையும் தனித்துவமாக மாற்றுகிறது.அந்த ‘ஏதோவொன்றை’ நிகழ்த்திக் காட்டுவது தான் ஒரு திரைக்கதையாசிரியனின் பணி. 

நிகழ்வு என்பது எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் ஒவ்வொரு கதை சொல்லியும் அந்த நிகழ்வை அணுகும் விதத்திலிருந்தே தனித்துவமான கதைகள், திரைக்கதைகள் பிறக்கின்றன. இதை சாத்தியப்படுத்துவதற்கான எளிய வழிமுறை ஒன்று தான். நாம் கையிலெடுக்கும் சம்பவத்தை பல்வேறு கோணத்தில் எழுதி பார்க்கும் போது சரியான பாதையை நாம் கண்டுகொள்வோம். 

ஆனால் ஒரு திரைக்கதை கதையிலிருந்து மட்டுமே பிறக்க வேண்டுமா என்றால் இல்லை. கதாப்பாத்திரத்தில் இருந்தும் பிறக்கலாம். 

பயணம்  தொடரும்… 

சாமுராயின் வாள்- சிறுகதை

தலை குனிந்து நடந்தாலும் கண் கூசச் செய்யும் வெயில். தெருவில் யாருமில்லை. ஞாயிறு மதியம் என்பதால் வீட்டிற்குள் முடங்கிய உலகம். எங்கிருந்தோ ஆங்கில இசைப் பாடல் காதில் கேட்கிறது. 

Into this house, we’re born
Into this world, we’re thrown

வியர்வை வழிகிறது. வெயில் சோர்வை தருவதால் அடுத்த அடி எடுத்து வைக்க கடினமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரத்தில் என் வீடு. நடக்கிறேன்.

தொலைவில் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கின்றன. நிமிர்ந்து பார்க்கிறேன். டிரான்ஸபார்மர் தெரிகிறது. அங்கே நிறைய நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. நெருங்கி வரும்போதே கவனிக்கிறேன். நாய்களுக்குள் சண்டையில்லை. அவை பயத்தில் யாரையோ பார்த்து குரைக்கின்றன. நானும் பார்க்கிறேன். டிரான்ஸபர்மர் கீழே யாரோ சம்மனமிட்டு அமர்ந்திருக்கிறார்கள். நாய்கள் என்னை நிமிர்ந்து பார்க்கின்றன. என்னை நோக்கி ஓடி வருகின்றன. எனக்கு ஒரு நொடி பயம். அத்தனை நாய்கள் கடித்தால் நான் பிழைக்க மாட்டேன். நான் கற்களை பார்வையால் தேடுகிறேன். தெரு துடைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது. 

மீண்டும் நாயைப் பார்க்கிறேன். முன்னே வந்த அந்த கருப்பு நாயின் கண்களில் கோபமில்லை. அது என்னை பாசமாக பார்க்கிறது. நாய்களுக்கு என் உருவம் பரிச்சயமானதாக இருக்கிறது. ஏழெட்டு நாய்கள். அவைகளுக்கு அங்கே நான் தேவைப்படுகிறேன். என் அருகே வந்து என்னை சுற்றி நின்றுக் கொள்கின்றன. 

கருப்பு நாய் என்னைப் பார்க்கிறது. மீண்டும் திரும்பி அவனைப் பார்க்கிறது. நானும் அவனைப் பார்க்கிறேன். பெரிய உருவம். உடலெல்லாம் இரும்பு கவசம். தலையிலும் கவசம். கையில் பெரிய வாள். தரையில் அந்த வாளை குத்தி குத்தி எடுக்கிறான். வாளின் கூர்மை தார் சாலைக்கு பொட்டு வைக்கிறது. அவன் முகத்தைப் பார்க்கிறேன். ஏராளமான தழும்புகள். பெரிய மீசை. 

There’s a killer on the road
His brain is squirmin’ like a toad

சன்னமாக பாடல் இன்னுமே கேட்கிறது. அவன் தலை திருப்பி என்னைப்பார்க்கிறான். அவனுக்கு  ஒரே ஒரு கண் மட்டும் இருக்கிறது. எனக்கு உடல் நடுங்குகிறது.  

நான் அவனை எப்படி கடந்து போகப்போகிறேன்!

(Pic Courtesy: Peakpx)

எனக்கு நடுக்கம் அதிகமாகிறது. அதை கண்டு கொண்ட அவன் என்னை பார்த்து புன்னகை செய்கிறான். 

அவன் புன்னகை நாய்களுக்கு தைரியத்தை தந்திருக்க வேண்டும். அவை குரைப்பதை நிறுத்திவிடுகின்றன. எனக்கும் தைரியம் வர நான் நடக்கத் தொடங்குகிறேன். 

என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். நானும் பார்க்கிறேன். அவன் இந்த ஊர் ஆள் இல்லை. இவ்வளவு வெயிலில் ஒரு போர் வீரன் போல் கவசம் அணிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன! யார் இவன். 

எனக்கு பயத்தைவிட  ஆர்வம் அதிகமாகிறது, 

அவன் அருகே சென்று “யார் நீ!” என்கிறேன்.

“சாமுராய்” என்கிறான். 

“எங்கிருந்து வருகிறாய்”

“வெகு தொலைவிலிருந்து?”

“உனக்கு எப்படி தமிழ் தெரியும்?”

“தமிழா! என்ன அது” என்று கேட்கிறான்.

“நீ பேசுகிறாயே! I mean the language!”

“I Don’t know” என்கிறான்.

“ஓ! இங்கிலிஷும் தெரியுமா?” என்கிறேன்.

“இங்கிலீஷா! அப்படி என்றால்?” என்கிறான். 

நான் மேற்கொண்டு என்ன பேசுவது என்று மனதில் யோசிக்கிறேன். 

“என்ன வேண்டுமென்றாலும் பேசு!” என்கிறான். 

‘ஐயோ இவனுக்கு மனதை படிக்கவும் தெரிகிறது’ நான் நினைத்துக் கொள்கிறேன். 

“காலங்களை கடந்து வந்தவனுக்கு எல்லாமும் தெரியும்” என்கிறான்

“எதற்கு இங்கு வந்திருக்கிறாய்?” நான் கேட்கிறேன். 

“வரம் தர!”

“யாருக்கு!”

“யார் என்னை முதலில் கண்டுகொள்கிறார்களோ! அவர்களுக்கு!” என்றவாறே என்னைப் பார்த்து புன்னகை செய்கிறான்.

“எனக்கு நிறைய பணம் வேண்டும்!” என்கிறேன்.  அவனை சோதித்துப் பார்க்கவே வரம் கேட்கிறேன். 

“எவ்வளவு பணம்!”

“என் வீடு முழுக்க”

அவன் சிரிக்கிறான். என் அலைப்பேசி ஒலிக்கிறது. என் மனைவியின் அழைப்பு.

எப்பொழுதும் போல அவள் ‘எங்க இருக்க…’ என்று கேட்கப்போகிறாள் என்று எண்ணியவாறே போனை காதில் வைக்கிறேன். 

“இங்க…” அவள் குரலில் பதட்டம் இருக்கிறது.

“இங்க திடீர்னு வீடு முழுக்க பணமா இருக்குடா. சீலிங்ல இருந்து கொட்டிக்கிட்டே இருக்கு…” என்கிறாள். 

நான் அவனை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.. அவன் மீண்டும் புன்னகை செய்கிறான். 

நான் என் மனைவியின் அழைப்பை துண்டிக்கிறேன். 

“இப்போது நம்புகிறாயா!” என்கிறான். நான் எதுவும் பேசாமல் அவன் அருகே செல்கிறேன். தன் பக்கத்தில் அமரும்படி செய்கை செய்கிறான். நான் அமர்கிறேன். அந்த நாய்கள் எங்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. 

“வீடு முழுக்க பணம் போதுமா! இல்லை, இந்த வீதி முழுக்க வேண்டுமா!”

நான் அமைதியாகப் பார்க்கிறேன். 

“எனக்கு மன நிம்மதி வேண்டும்!” என்கிறேன் 

“ஏன் நீ நிம்மதியாக இல்லையா?” 

“தெரியவில்லை. எல்லாமும் இருக்கிறது. ஆனால் ஏதோ ஒன்று இல்லை” என்கிறேன்.

“என்ன இல்லை?”

“சொல்லத் தெரியவில்லை!”

அவன் அமைதியாக இருக்கிறான். 

“நீ எப்படி இங்கு வந்தாய்!” வினவுகிறேன். 

“மெய்ஜி படையிடம் தோற்றோம். தப்பித்தோம். அன்றிலிருந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன்” என்கிறான். எனக்கு அவன் சொல்வது புரியவில்லை.  புரிந்து கொள்ள முயன்று தோற்கிறேன்.

அதை உணர்ந்தவனாய், “ஏன் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள, எல்லாவற்றிற்கும் அர்த்தம் கற்பிக்க முயல்கிறாய்! அவசியமில்லை. அப்படியே விட்டுவிடு. எல்லாம் அதன் போக்கில் போகட்டும்” என்கிறான். 

இப்போது ஏதோ புரியத் தொடங்குகிறது. 

“அந்த கிழவன் செத்துக் கொண்டிருந்தான். மெய்ஜி தளபதியிடம் சண்டையிட்டு கிழவனைக் காப்பாற்றினேன். கிழவன் என்னை பார்த்து கைக்கூப்பினான். நான் தளபதியை துரத்திக் கொண்டு போனேன். அவனை கொன்றேன். அவன் மனைவிகளை கொன்றேன். குழந்தைகளை கொன்றேன். திரும்பி வரும் போது ‘என்னை காப்பாற்றியதற்கு நன்றி’ என்றான் கிழவன்”

இப்போது அவன்  சொல்வது  முழுவதுமாக  புரிகிறது. மனம் லேசாகி வருவதை உனர்கிறேன்.  

“வரம் தருவதாக சொன்னாயே!”  நானே கேட்கிறேன். 

“கேள்”

“உன் வாளைக் கொடு! உன்  நினைவாக வைத்துக் கொள்கிறேன்” 

கொடுக்கிறான். அதை தூக்க முடியவில்லை. அவ்வளவு கனம். கீழே போட்டுவிடுகிறேன். சப்தமாக சிரிக்கிறான். திடிரென்று வானம் இருட்டத் தொடங்குகிறது. நாய்கள் வானத்தை பார்த்து ஊளையிடுகின்றன.

“கணம் என்பது மனம் சார்ந்தது. ம்ம்.. வாளை எடு” என்கிறான். 

வாளை எடுக்கிறேன். லகுவாக கைக்கு வருகிறது. எழுந்து  நின்று வாளை தலைக்கு மேல் சுழற்றுகிறேன்.

“நான் சொன்னது சரிதானே!” என்கிறான்.  

அதை ஆமோதிக்கும் வகையில் சிரிக்கிறேன். அவனும் என்னோடு சேர்ந்து சிரிக்கிறான். இருவரின் சிரிப்பொலி நாய்களின் சப்தத்தை மிஞ்சுகிறது. 

Riders on the storm
Riders on the storm
Into this house, we’re born
Into this world, we’re thrown

“ஹ்ம்ம். ஆகட்டும்” என்கிறான். 

நான் ஒரு கனம்  தயங்குகிறேன்.  

“கிழவனை காப்பாற்றினேன். குழந்தையை கொன்றேன். எனக்கு இடப்பட்ட வேலையை  நான் சரியாக செய்தேன். அவனவன் வேலையை அவன் தானே செய்யவேண்டும்!” 

நான் “ஆம்” என்றவாறே வாளை சுழற்றுகிறேன். அவன் இரு கைகளையும் கூப்பி  ‘அரிகாட்டோ’ என்கிறான்.  

அவனுடைய பெரிய உடல் சரிகிறது. அவன் தலை கருப்பு நாயின் கால் அருகே சென்று விழுகிறது.

அந்த நாயின் கண்களில் இப்போது  பாசம் இல்லை. 

“யார் நீ?” என்கிறது நாய்.  

“சாமுராய்” என்கிறேன் நான். 

எட்டு நாய்களும் ஒரே நேரத்தில் என் மீது பாய்கின்றன. 

**

கடைசி நாள்- குறுநாவல்- கிண்டில் பதிப்பு

உலக புத்தக தினமான இன்று (23. 04.2023), கணையாழி-முனைவர் செண்பகம் ராமசுவாமி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற, என்னுடைய ‘கடைசி நாள்’ என்கிற கதையின் கிண்டில் பதிப்பை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

நன்றி

அரவிந்த் சச்சிதானந்தம்

Click to buy

திரைக்கதை எனும் நெடும்பயணம் – புதியதொடர் 

FADE IN: 

நாம் ஒரு படம் பார்க்கிறோம். முதல் பகுதி சரியாக இல்லை, இரண்டாவது பகுதி சுவாரஸ்யமாக இருந்தது என்கிறோம். இந்த காட்சி தேவை இல்லாத ஒன்று என்கிறோம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை என்கிறோம். அந்த கதாபாத்திரம் செய்யும் சாகசம் நம்பும் படியாக இல்லை என்கிறோம். இன்னொரு கதாப்பாத்திரம் ஆயுதம் தாங்கிய நூறு பேரை ஒற்றை ஆளாக எதிர்த்து அடித்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். இவன் தான் கொலைகாரன் நான் முன்னரே யூகித்தேன் என்று சொல்கிறோம். இதென்ன க்ளீச்சேவான காட்சி என்று குறைபட்டுக் கொள்கிறோம். அட, என்னமாதிரான காட்சி என்று சிலாகிக்கிறோம்… 

இதெல்லாம்  ஏன் நிகழ்கிறது? 

ஒரு கதாப்பாத்திரத்தின் (நாயகனின்) சாத்தியங்கள் என்ன என்பதை நாம் சினிமா பார்க்க தொடங்கிய காலகட்டத்திலிருந்தே அல்லது கதை கேட்க தொடங்கிய சிறு வயதிலிருந்தே அறிந்திருக்கிறோம். நாயகன் ஜெயிப்பான். அல்லது விதிவிலக்காக தோற்பான். அவன் கிராமத்திலிருந்து கிளம்பி வந்து பட்டினத்தின் பெரிய அரசியல்வாதியை எதிர்க்கும்  நாயகனாக இருக்கலாம், வெளிநாட்டிலேயே வசதியாக வளர்ந்து ஒரு கிராமத்து விவசாயியின் தங்கையை காதலிக்கும் இளைஞனாக இருக்கலாம், குடும்பத்திற்காக தன் கனவுகளை தியாகம் செய்யும் சாமானியனாக இருக்கலாம், அவன் முடிவு என்ன என்பதை நம்முடைய ஆழ்மனம் கண்டுகொண்டுவிட்ட பின்பும், கண்கொட்டாமல் அந்த படத்தை பார்க்கிறோம். 

இது எப்படி சாத்தியமாகிறது?

இது போல கேட்டுக் கொண்டே போகலாம்.  ‘திரைக்கதை’ என்பதே இந்த எல்லா கேள்விகளுக்குமான எளிய பதிலாக இருக்க முடியும். ஆனால் திரைக்கதை எழுதும் கலை அவ்வளவு எளிதானது அல்ல. அதே சமயத்தில் அது அவ்வளவு கடினமானதும் அல்ல. தொடர்ந்து  முயன்றால் கைக்கூடிவிடக் கலை தான் அது. ஆனால் அதன் எல்லை என்பது பரந்து விரிந்தது. எண்ணற்ற சாத்தியங்களை கொண்டது. அந்த சாத்தியங்களை கண்டுகொள்பவன் நல்ல திரைக்கதையாசிரியன் ஆகிறான்.  திரையில் நாம் காண்பதையும் கேட்பதையும் எழுதுவதே ‘திரைக்கதை’ என்கிறது அகராதி. ஆனால் எதையெல்லாம் காணப்போகிறோம், கேட்கப்போகிறோம் என்று ஒரு திரைக்கதையாசிரியன் எடுக்கும் முடிவு தான் சராசரியான காட்சியை சுவாரஸ்யமான காட்சியாக மாற்றப்போகிறது.

ஒரு எளிய கதையை பார்போற்றும் படமாக மாற்றுவது என்பது ‘திரைக்கதை’  தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்று யோசிப்பதும், அதற்காக புனைவின் எல்லா திசைகளிலும் பயணிப்பதும் தான் ஒரு திரைக்கதை ஆசிரியனின் வேலை.

இந்த பயணத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும்? எப்படி தொடர வேண்டும்? 

Let the Journey Begin…

Image Courtesy: Canva

திரைக்கதை கலையை பற்றி எளிய மொழியில் இனி வரும் வாரங்களில் தொடர்ந்து உரையாடுவோம். இணைந்திருங்கள்… 

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நன்றி

அரவிந்த் சச்சிதானந்தம் 

aravindhskumar@gmail.com

குறுநாவலுக்காக ஓர் பரிசு- புகைப்படங்கள்

கடந்த வாரம் (14.03.2023) மதுரையில் நடந்த திருமதி. செண்பகம் ராமசுவாமி அவர்களது இருபத்தைந்தாவது ஆண்டு நினைவு நாளில், கணையாழி குறுநாவல் போட்டியில் – மூன்றாம் பரிசு பெற்ற “கடைசி நாள்’ என்கிற குறுநாவலுக்காக எனக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

நன்றி மு.ராமசுவாமி மற்றும் கணையாழி

அவள்- சிறுகதை

Happy Women’s day…

Aravindh Sachidanandam

அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன் வேலைக்கு வரும் காக்கையன் வராமல் போனாலும், கோவிந்தசாமி வந்துவிடுவார். காலை நான் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது “அம்மா குப்பை” என்று ஒரு குரல் கேட்கும்போதே சொல்லிவிடலாம் மணி சரியாக ஏழு என்று.

சிலநாட்கள் நான் வாசலில் இல்லாமல் உள்ளே வேலையாக இருந்தால், “சார்” என்று சன்னமாக ஒரே ஒரு குரல் மட்டும் வரும். நான் வாசலை விட்டு வெளியே வருவதற்கு முன்பே குப்பையை என் கையிலிருந்து, “குடு சார்” என்று பிடிங்கிக் கொண்டு தன் வண்டியில் கொட்டிக்கொள்வார்.

எல்லோர் வீட்டின்முன்னின்றும் சப்தமாக ‘குப்பை’ என்று கத்தும் கோவிந்தசாமி, என் வீட்டின் முன் மட்டும் சன்னமான குரலில் பேசுவதற்கு காரணம் தெரியவில்லை. ஒருவருடத்திற்கு முன்பு அவரை முதன் முதலில் சந்தித்ததிலிருந்து அப்படிதான் பேசுகிறார். அன்று, தாத்தாவின் பழைய பெட் ஒன்றை எடுத்துச் செல்வதற்காக காக்கையனை வரச் சொல்லியிருந்தேன். தாத்தா இறந்ததிலிருந்து அதை தூக்கி கொல்லையில் போட்டு வைத்திருந்தோம். அன்றுதான் காக்கையனுடன் முதன்முதலில் வேலைக்கு வந்திருந்தார் கோவிந்தசாமி.

காக்கையன் கொல்லையில் நின்றுகொண்டு தள்ளாடியபடியே “அம்பதுரூபா கொடுங்க வாத்தியார் சார்” என்றான்.

“குடுக்காமா எங்க போறாங்க? கணக்கு பாக்குற வீடா இது?”அம்மா அடுப்படி உள்ளே இருந்து சிடுசிடுத்தாள். காக்கையனால் அந்த பெட்டை மடித்து தூக்க முடியவில்லை.

“அன்னையா” என்று கத்தினான். வாசலில்…

View original post 959 more words

மார்ட்டின் ஸ்கோர்செஸி ஓர் உரையாடல்

மார்ட்டின் ஸ்கோர்செஸி ஓர் உரையாடல்-ரிச்சர்ட் சிக்கேல்

ரிச்சர்ட் சிக்கேல் மார்ட்டின் ஸ்கோர்செஸியுடன் உரையாடி எழுதிய புத்தகத்தின் ஒரு சிறு பகுதி. 

தமிழாக்கம்: அரவிந்த் சச்சிதானந்தம் 

***

படத்தொகுப்பு

ரிச்சர்ட் சிக்கேல்: உங்களின் ஆரம்பகாலங்களில்  படத்தொகுப்பிலும்  உங்களுடைய பங்களிப்பு இருந்தது என்று அறிவேன். ஆனால்  உங்களுடைய பல  படங்களுக்கு நீங்களே  படத்தொகுப்பு செய்திருக்கிறீர்கள் என்பது. நாம் பேசத் தொடங்கும் வரை எனக்கு தெரியாது.  எப்படி படத்தொகுப்பை கற்றுக் கொண்டீர்கள்? படத்தொகுப்பு செய்து அதை பழகிக் கொண்டீர்களா? 

மார்ட்டின் ஸ்கோர்செஸி: இல்லை. நான் படங்களை பார்த்து கற்றுக் கொண்டேன். குறிப்பாக இயக்குனரும் படத்தொகுப்பாளருமான ஐசென்ஸ்டீன் அவர்களின் படங்களிலிருந்து.. 

ரிச்சர்ட் சிக்கேல்: இல்லை இல்லை. நான் கேட்டது எப்படி உத்தியை கற்றீர்கள் என்று. அந்த காலத்தில் மூவியாலாவில் தானே படத்தொகுப்பு செய்வார்கள்? நீங்கள் அதை எப்படி பயின்றீர்கள்?

மார்ட்டின் ஸ்கோர்செஸி: ஆம்! மூவியாலாவில் தான் பயின்றேன். படைச்சுருளில்  பிரேமை பார்க்கும் போதே நான் காதல் வயப்பட்டுவிடுவேன். படச்சுருள், அதில் இருக்கும் துளைகள், சுருளில் ஆங்காகே தெரியும் பட்டொளி (மினுமினுப்பு), இதை எல்லாம் பார்க்கும் போது காதல் வயப்படாமல் எப்படி இருக்க முடியும்!

ரிச்சர்ட் சிக்கேல்: காதல் வயப்படுவீர்களா! என்ன சொல்கிறீர்கள்!

மார்ட்டின் ஸ்கோர்செஸி: நிஜம்தான். இன்றளவும் படச்சுருள்க்களை பார்க்கும் போது காதல் வருகிறது. தெல்மா படத்தொகுப்பு செய்யும் போது நான் கவனிப்பேன். சில பிரீஸ் பிரேம்கள்  (Freeze Frame) பிடித்துப் போகும். சிலநேரங்களில் கேமரா நின்ற பின்பு ஒரு ஷாட்டின் பாதி இமேஜ் மட்டும் பதிவாகி இருக்கும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை என ஏதோ ஒரு வண்ணம் மட்டும் தெரியும். அல்லது கதாப்பாத்திரத்தின் கண் மட்டும் பதிவாகி இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது நான் தெல்மாவிடம் சொல்வேன், “இதல்லவா அழகான பிரேம்! (Frame)” 

தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் க்ரைஸ்ட் படத்தின்  இறுதி காட்சியில் நான் இதுபோன்றதொரு ஷாட்டை பயன்படுத்தி இருப்பேன். செல்லுலாய்டில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் ஆகும். படச்சுருளின் மீது ஒளி சங்கமிக்கும் போது நிகழும் அற்புத்திற்கு எதுவுமே ஈடில்லை.  அதனால் தான் நான் காதல் வயப்படுகிறேன். 

ரிச்சர்ட் சிக்கேல்:  தெல்மா உங்களோடு பலப்பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றிவருகிறார். அவர் உங்களின் ஆஸ்தான படத்தொகுப்பாளராக இருப்பதற்கு காரணம் என்ன? அப்படி என்ன சிறப்பு தகுதிகள் அவரிடம் இருக்கிறது?

மார்ட்டின் ஸ்கோர்செஸி: அவர் அறுபதுகளின் இறுதியில் இருந்தே என்னோடு பயணிக்கிறார். அவர் முறையாக சினிமா படிப்பு படித்தவர் அல்ல. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஆறு வார சான்றிதழ் படிப்பு படித்திருக்கிறார். பின்னர் கொலம்பியாவிற்கு திரும்பிச்சென்று பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தார் என்று நினைக்கிறன். நாங்கள் எல்லாம் இணைந்து வூட்ஸ்டாக் என்ற ஆவணப் படத்தில் தான் முதன்முதலில் படத்தொகுப்பாளர்களாக பணியாற்றினோம். அறுபதுகளில் வளர்ந்தவர்களுக்கே இருக்கும் திறந்த மனது தெல்மாவிடம் இருக்கிறது.  இன்றளவும் அவர் அப்படிதான் இருக்கிறார். நான் கூட அப்படி இருக்கவில்லை.  கலை, அது நல்லதோ, கெட்டதோ, மோசமானதோ அதை போற்றி பாதுகாப்பது முக்கியம் என்பதே தெல்மாவின் கூற்று. 

நாங்கள் உருவாக்கியது நல்ல படங்களாக இருக்கலாம், மோசமான படங்களாக இருக்கலாம். அவை கால ஓட்டத்தில் காணாமலாகலாம். அல்லது நூறுவருடம் கழித்தும் யாரோ ஒருவர் எங்கள் படங்களை பார்க்கலாம். ஆனால் எங்களுடையது எத்தகைய படங்களாக இருந்தாலும், தெல்மா அவற்றை விட்டுக்கொடுக்க மாட்டார். அவர் ஒரு நல்ல கூட்டாளி.  

நான் கூட சில நேரங்களில் சோர்வடைந்து விடுவேன். ஒரு படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கும் போது பல திசைகளில் இருந்தும் அழுத்தங்களும் கருத்துக்களும் வரும். ஆனால் தெல்மா தடுமாறாமல் சீராக பயணிப்பார்.  மனம் தளராமல் இரு, இதுவும் கடந்து போகும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு படத்தின் தூய்மையை மதித்து அது கெடாமல் பார்த்துக்கொள்ளும் மாபெரும் பணியை அவர் செய்துவந்தார். 

நான் ரஷஸ் (Rushes) பார்க்கும் போதுஎப்படி டேக்குகளை (Takes) தேர்ந்தெடுப்பேன் என்பதை தெல்மா நன்றாக அறிந்திருந்தார். உண்மையிலேயே சரியான டேக்கை தேர்ந்தெடுப்பதுதான் மிகவும் கடினமான வேலை. நான் அதை செய்யும் போது தெல்மாவை தவிர வேறு யாரும் உடனிருப்பதை விரும்பமாட்டேன். 

ஆனால் எழுபதுகளில் நியூயார்க் நியூயார்க், ரேஜிங் புல் போன்ற படங்களை உருவாக்கிய போது ராபர்ட் டி நிரோவும் என்னோடு இணைந்து ரஷஸ் பார்ப்பார். எப்போதும் படத்தொகுப்பு அறையில் அவரும் என்னோடு இருப்பார். “இது நல்ல டேக்” என்பார். அவர் அதுபோல சொல்வது என்னை தொந்தரவு செய்யாது. ஏனெனில் எங்களுக்குள் ஆழமான நட்பு இருந்தது. பல நேரங்களில் நானும் பாபும் (ராபர்ட் டி நிரோ)  ஒரே டேக்கை தான் தேர்ந்தெடுப்போம். நாங்கள் அதை வெளிப்படையாக காண்பித்துக் கொள்ள மாட்டோம். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கை கொண்டிருந்தோம். 

ரிச்சர்ட் சிக்கேல்:  ஆம் நான் அதை அறிவேன். 

மார்ட்டின் ஸ்கோர்செஸி:  எனக்கென்று ஒரு ப்ராசஸ் இருக்கிறது, நான் பல முயற்சிகளுக்கு பிறகே ஒரு காட்சியை இறுதி செய்கிறேன் என்று அவர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் படத்தொகுப்பில் பங்கேற்பதை நான் ஏற்றேன். மற்றபடி, ‘இந்த காட்சியை நீக்கு!’ ‘இதை மாற்றி எடு’ என்றெல்லாம் அவர் சொல்லியிருந்தால் என்னால் பாபோடு இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என்னால் அப்படியெல்லாம் யாருடைய தலையீட்டையும் ஏற்க முடியாது, தெல்மாவின் கருத்துக்களை தவிர. 

தெல்மா படப்பிடிப்பு தளத்திற்கு வரமாட்டார். திரைக்கதையை கூட ஒரே ஒரு முறை தான் படிப்பார். பூட்டேஜ்களை (footage) மட்டும் தான் தினமும் பார்ப்பார். படத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற ரகசியத்தை முதலில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு மட்டும் தான் இருந்தது. 

ரிச்சர்ட் சிக்கேல்:  கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது. 

மார்ட்டின் ஸ்கோர்செஸி:  ஆம். படப்பிடிப்பு தளத்தில் நிகழும் அரசியல்களில் அவர் ஈடுப்பட மாட்டார். ஒரு காட்சியை எடுக்கும் போது யார் எப்படி நடந்து கொண்டார்கள், யார் கோபமாக இருந்தார்கள், யாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதை பற்றியெல்லாம் அவர் தெரிந்து கொள்ள விரும்பமாட்டார். அவரை பொறுத்த வரை காட்சிகள் மட்டும் தான் முக்கியம். நான் கொடுக்கும் அத்தனை டேக்குகளையும் நிதானமாக பார்தது குறிப்புகளை எழுதி தன் கணினியில் ஏற்றிக் கொள்வார். இது மிக நீண்ட ப்ராசஸாக இருக்கும். ஆனாலும் நான் நிதானமாக  காத்திருப்பேன்.எனக்கு முதலில் பிடித்த டேக் எது, அடுத்து பிடித்த டேக் எது என்றெல்லாம் அவர் சரியாக நியாபகம் வைத்திருப்பார். எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பொருத்தி பார்த்து இறுதியானதை தேர்வு செய்வோம். எந்த டேக் வேண்டும் என்று நான் யோசிக்கும் போது, சரியாக நான் விரும்பிய டேக்கை தேர்ந்தெடுத்து காண்பிப்பார். ஒவ்வொரு டேக் பற்றியும் அவர் சொல்லும் கருத்துக்கள் எனக்கு டேக்கை இறுதி செய்ய பேருதவியாக இருக்கும். 

இந்த டேக்கில் அவர் கண்களை பாருங்கள், அதில் எமோஷன் குறைவாக இருக்கிறது. வேறொரு டேக்கில் இன்னும் சிறப்பான எமோஷன் இருந்ததை நான் கவனித்தேன் என்றெல்லாம் சொல்வார். அவர் சொல்லும் டேக்கை நான் பார்ப்பேன். அதில் பெரிய மாற்றம் இருப்பதாக என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனாலும் அவருடைய தேர்வில் எனக்கு நம்பிக்கை உண்டு. “நீ சொல்லும் டேக்கையை வைத்துக்  கொள்வோம்” என்பேன். எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொண்டே வருவார். 

“நான் காட்சி நாற்பத்தி இரண்டு, மூன்றாவது ஷாட்!” என்று சொன்னால், “இதோ இதில் உங்களுக்கு பிடித்தது பதினோராவது டேக், இதற்கு அடுத்ததாக நீங்கள் விரும்பியது எட்டாவது டேக்” என்று சரியாக அவற்றை எடுத்துக் காண்பிப்பார். 

ரிச்சர்ட் சிக்கேல்:  நீங்கள் சொல்வதை கேட்கும் போது எனக்கு நீங்கள் இயக்கிய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் விளம்பர படம் நினைவிற்கு வருகிறது. அதில் நீங்கள் கையில் போட்டோக்களை வைத்துக் கொண்டு, “இது சரியில்லை, இது இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்” என்றெல்லாம் சொல்வீர்கள். 

மார்ட்டின் ஸ்கோர்செஸி: அது விளம்பரத்திற்காக மிகைப்படுத்தபட்ட காட்சி. நான் அவ்வளவு கடினமாக உண்மையில் நடந்துகொள்ள மாட்டேன். 

ரிச்சர்ட் சிக்கேல்: நான் அதைத்தான் வெளிப்படையாக கேட்கலாம் என்று நினைத்தேன்.

மார்ட்டின் ஸ்கோர்செஸி: படத்தொகுப்பின் போது சிலநேரங்களில் நானும் தெல்மாவும் சந்தோசமாக சிரிப்போம். சில நேரங்களில் பெரும் உளச்சோர்வு வந்துவிடும். “இதோ இந்த காட்சித் தொகுப்பில் கோர்வையே இல்லை. இதை இயக்கிய இயக்குனரை  சுட்டுத் தள்ள வேண்டும்” என்றெல்லாம் கூட என்னைப்பற்றி நானே சொல்லி இருக்கிறேன். அதனால்தான் படத்தொகுப்பு அறைக்குள் நான் யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கே நான் நானாக இருக்க விரும்புகிறேன். நடிகர்களை பற்றி, அவர்கள் பிரேமில் எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றி நான் வெளிப்படையாக எந்த தயக்கமுமின்றி பேசக் கூடியவன். தெல்மா நான் பெரிதும் நம்பும் ஒரு பெண்மணி என்பதால் அவர்முன் பேச எனக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை. 

ரிச்சர்ட் சிக்கேல்: அப்படியெனில் தெல்மாவிற்கு எல்லா ரகசியங்களும் தெரியுமா?

மார்ட்டின் ஸ்கோர்செஸி: நிச்சயமாக. அவருக்கு நிறையவே தெரியும். எது எப்படியோ, எவ்வளவு குழப்பங்கள் வந்தாலும் நாங்கள் தேர்ந்தெடுத்த டேக்குகளில் எந்த மாற்றமும் இருக்காது. டேக்குகளை முதலில் தேர்ந்தேடுத்தது  இரண்டாவதாக தேர்ந்தெடுத்தது, மூன்றாவதாக தேர்தெடுத்தது என்று வரிசை படுத்தி வைத்திருப்போம். பெரும்பாலும் இந்த மூன்று தேர்வுகளுக்குள்ளேயே எங்களின் இறுதி முடிவு இருக்கும். 

 ரிச்சர்ட் சிக்கேல்: அதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் உண்டா? 

மார்ட்டின் ஸ்கோர்செஸி: அப்படியில்லை. படத்தொகுப்பில் படத்தின் டோன் (tone) மாறிக் கொண்டே வரும். நடிகரின் முக பாவத்தில் ஒரு டேக்கில் சந்தோசம் வெளிப்படும், அதே ஷாட்டின் வேறொரு டேக்கில் சோகம் வெளிப்படும். எனக்கு முன்பு பிடிக்காமல் போன டேக், காட்சிகளை தொகுக்கும் போது அர்த்தமுள்ளதாக தோன்றும். இதையெல்லாம் படத்தொகுப்பின் போதே கண்டுகொள்ள முடியும். தெல்மா எல்லா டேக்குகளையும் நினைவில் வைத்திருப்பார். அவரோடு சேர்ந்து நானும் நினைவில் வைத்துக் கொள்ள பழகிக்கொண்டேன். 

ரிச்சர்ட் சிக்கேல்: உங்களின் ஆரம்பநாட்களில் நீங்களே உங்களின் படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றதைப் பற்றி பேசினோம்.  எந்தெந்த படங்கள்? 

மார்ட்டின் ஸ்கோர்செஸி: மீன் ஸ்ட்ரீட்ஸ் படத்தை நானே தான் படத்தொகுப்பு செய்தேன். ஆனால் படத்தில் பெயர் வராது. ஏனெனில் நான் அப்போது சங்கத்தில் உறுப்பினராகவில்லை. மார்டி ரிட் படங்களின் படத்தொகுப்பாளரான சித் லெவின் அவர் பெயரை படத்தொகுப்பாளராக போட்டுக்கொள்ள அனுமதி தந்தார். 

நான் பின்னர் ஜார்ஜ் லூகாஸின் மனைவியான மாசியா லுகாஸோடு பணியாற்றினேன். Alice Doesn’t Live Here Anymore, Taxi Driver மற்றும் Newyork Newyork போன்ற படங்களை படத்தொகுப்பு செய்தது மாசியா லுகாஸ் தான். டாக்சி ட்ரைவர் படத்தின் சில காட்சிகளை டாம் ரோல்ப்பும் படத்தொகுப்பு செய்து கொடுத்தார். “Are you talking to me?”  என்கிற மிகப் பிரபலமான அந்த காட்சியை படத்தொகுப்பு செய்தது அவர்தான். அவர் ஒரு மாஸ்டர். அவர் தொகுத்த காட்சிகளில் எனக்கு எந்த மாற்றத்தையும் சொல்ல தோன்றவில்லை.

வூட்ஸ்டாக்கில் என்னோடு பணியாற்றிய யு-புன் யீ தான், ஜான் ராப்லியுடன் இணைந்தது ‘The Last Waltz’ படத்தை படத்தொகுப்பு செய்து கொடுத்தார். கிட்டத்தட்ட இரண்டுவருடங்கள் படத்தொகுப்பு நடந்தது. அதன் பின் ரேஜிங் புல் படத்திற்காக நான் தெல்மாவை அணுகினேன். ஏனெனில் அப்போது மார்சியா லூகாஸ் படத்தொகுப்பு செய்வதை நிறுத்திக் கொண்டிருந்தார். தெல்மாவோடு எனக்கு பெரிய நட்பு அப்போது இருந்திருக்கவில்லை. நாங்கள் சந்தித்தே பத்து ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தது. அவர் பிட்ஸ்பேர்க்கில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  ‘The Last Waltz’ படத்தின் படத்தொகுப்பு வேலைகள் நடந்துக் கொண்டிருந்த போது, அவர் ஓரிரு முறை வந்து தன் கருத்துக்களை சொன்னார் என்று நினைக்கிறேன். அப்போது தான் அவரிடம் ‘Raging Bull’ படத்தைப் பற்றி சொன்னேன். அதை படத்தொகுப்பு செய்துத்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நான் தயாரிப்பாளர் இர்வின் விங்க்லரிடமும் தெல்மா பற்றி சொன்னேன். அப்போது தெல்மா சங்கத்தில் உறுப்பினராகி இருக்கவில்லை. படம் கிட்டத்தட்ட இறுதி வடிவத்தை எட்டிய போது தான் தெல்மா சங்கத்தில் உறுப்பினரானார். அதன் பின் என்னிடமிருந்து பிரிக்கமுடியாத  நிறந்தர கூட்டாளி ஆகிவிட்டார். 

அப்போது இயங்கிய படத்தொகுப்பாளர் எவரும் நான் படத்தொகுப்பு அறைக்குள் நுழைவதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய முறையை நான் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அதனாலேயே  நான் எனக்கான படத்தொகுப்பாளரை தேர்ந்தெடுத்தேன். தெல்மா என்னை பற்றி முழுவதுமாக அறிந்திருந்தார். நாங்கள் உருவாக்கிய படங்களின் மீது அவர் கொண்டிருந்த விஸ்வாசம் தான் எங்களை தொடர்ந்து பயணிக்க வைத்தது. 

ரிச்சர்ட் சிக்கேல்: நீங்க விஸ்வாசம் என்று குறிப்பிடுவது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. 

மார்ட்டின் ஸ்கோர்செஸி: நிஜம் தான். ஒரு படைப்பின் மீது நாம் கொண்டிருக்கும் விஸ்வாசம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. சிலர் இதை ஐடியா என்பார்கள். சிலர் இதை விஷன் (vision) என்பார்கள்.ஒரு படத்தை உருவாக்குவது மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் சமாளிப்பதற்குள் நாம் பொறுமை இழந்து விடுகிறோம். ஆனால் தெல்மா என் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டார். யார் எத்தகைய மாற்றங்களை சொன்னாலும், இறுதி வடிவம் நான் விரும்புவது போல் தான் இருக்கும். சில படத்தொகுப்பாளர் எனக்கு தெரியாமலேயே சிறுசிறு மாற்றங்களை செய்துவிடுவார்கள். “இல்லை, இது நான் இறுதி செய்தது  இல்லை” என்று நான் சொல்வேன். “நீங்கள் இதை கண்டுபிடிக்க மாடீர்கள் என்று நினைத்தேன்” என்று அசடு வழிவார்கள். இதையெல்லாம் தவிர்க்கவே நான் நம்பிக்கைக்குரிய ஒரு படத்தொகுப்பாளரோடு பணியாற்ற விரும்பினேன். தெல்மா தான் அது. தெல்மாவும் நானும் படத்தொகுப்பு அறையில் பணியாற்றும் நேரம் தான் என் சினிமா வாழ்வின் தலைசிறந்த அதே சமயத்தில் கடினமான நேரம் என்பேன். 

ரிச்சர்ட் சிக்கேல்: தெல்மா இந்த புத்தக பணியை பற்றி அறிந்து என்னிடம் கேட்டார். “நீங்களும் மார்ட்டியும் எப்படி உரையாடுகிறீர்கள்” என்று. நான் சொன்னேன், “நாங்கள் நேரம் போறதே தெரியாமல் நள்ளிரவு வரை கூட உரையாடிக் கொண்டே இருப்போம்” என்று. “நாங்களும் அப்படித்தான் நேரம் போறதே தெரியாமல்  விடியவிடிய படத்தொகுப்பு செய்து கொண்டு இருப்போம்” என்றார் அவர்.

மார்ட்டின் ஸ்கோர்செஸி: உண்மைதான். நாங்கள் எங்கள் வேலையை பெரிதும் நேசித்தோம். பெரும்பாலும் இரவில் படத்தொகுப்பு செய்வதையே நாங்கள் விரும்பினோம். ரேஜிங் புல் திரைப்படம் முழுக்க முழுக்க இரவிலேயே படத்தொகுப்பு செய்யப்பட்டது. ஏனெனில் அப்போது தான் எங்களுக்கு எந்த தொலைபேசி அழைப்புகளும் வராது. வேறு யாரும் எங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதன் பின் உருவாக்கிய கிங் ஆப் காமெடியும் அப்படிதான். அந்தகாலகத்ததில் தான் எனக்கும் தெல்மாவிற்குமிடையே படத்தொகுப்பில் ஒத்திசைவு பிறந்தது. சினிமா உருவாக்கத்தில் இன்றளவும், எனக்கு அதிக நிறைவுதரக் கூடிய விஷயம் படத்தொகுப்பாவே இருக்கிறது. 

*** 

Excerpts from Conversations with Scorsese by Richard Schickel

லவ் @ 30- சிறுகதை

Aravindh Sachidanandam

21G-யில் ஏறுவது என்பது இப்போதெல்லாம் பெரும் போராட்டமாக ஆகிவருகிறது. யார்யாரோ எங்கிருந்தோ வந்து இந்த நகரத்தில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நகரம் அத்தனைப் பேரையும் முகம் சுழிக்காமல் தாங்கிக்கொள்கிறது. அவ்வளவு பேருக்கும் இங்கு இடமிருக்கிறது என்பது ஆச்சர்யம் தான். ஆனால் பேருந்தில்தான் இடமிருப்பதில்லை. அதுவும் 21G-யில் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்க இடம் கிடைத்தாலே போதும். ஆனந்தம் தான். அமர இடம் கிடைத்தால் பேரானந்தம். ஆனால் ஆனந்தம் போதும். இந்த நகரத்தின் பேருந்துகள் ஆசையை அடக்கக் கற்றுத்தரும் போதிசத்த்துவர்கள்.

பேருந்து கிண்டி எஸ்டேட் ஸ்டாப்பில் நிற்பதற்கு முன்பே ஏறிவிட வேண்டும். கிண்டி எஸ்டேட் வளைவினுள் நுழையும் போது ஏதாவது ஷேர் ஆட்டோ பேருந்தின் முன் வந்து நின்று ஆள் ஏற்றும்.

“யோவ். TN 22 1587 ஆட்டோவ எடுயா…” நேரக்காப்பாளர் கத்துவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.

அந்த ஒருநிமிடத்தில், ஆட்டோவை கடந்து சென்று பேருந்தில் ஏறிக்கொள்ள வேண்டும். பேருந்து ஸ்டாப்பில் நிற்கட்டும், ஏறிக்கொள்ளலாம் என்ற நினைப்பெல்லாம் நின்றுகொண்டே காணும் பகல் கனவு. நிறுத்தத்தில் ஒரு பெரும் கூட்டம் அடித்துப்பிடித்து ஏறுகிறது. சித்தாள் வேலைக்குச் செல்லும் பெண்கள், மேஸ்திரிகள், ஒல்லியான ஆசாமிகள், பள்ளிக்கூடப் பிள்ளைகள், இயர்போன் மைக்கை உதட்டில் கடித்து ரகசியம் பேசும் இளம்பெண்கள், கழுத்தில் தங்கச் சரடு இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்துக் கொள்ளும் நடுத்தர வயது பெண்கள், போனை சப்தமாக பேசிவரும் வயதானவர்கள், கையில் பைல் வைத்திருக்கும் வேலைத்தேடுபவர்கள், நிறம் வெளுத்துப்போன மஞ்சள்…

View original post 1,899 more words

தைப்பூசம்- சிறுகதை

Aravindh Sachidanandam

ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்தே வாகன நெரிசல் ஆரம்பமாகிவிட்டது. கோவில் அமைந்திருந்த தெருவுக்குள் காரை திருப்புவது என்பது தேவையில்லாத ஜம்பம். காரை ரிவர்ஸ் எடுத்து அகநானூறு தெருவில், இங்கே வாகனங்கள் நிறுத்தாதீர் என்ற பலகை மாட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பு காரை நிறுத்தினேன்.

“கொஞ்ச தூரம் நடக்கணும்…” என்றேன் தேப்தூத் ரேவிடம்.

“திக் ஆச்சே.. திக் ஆச்சே…” என்றவாறே உடன் நடந்தான். அவனுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு தான் விமானம். கொல்கத்தாவிலிருந்து அலுவல் நிமித்தமாக வந்திருந்தான். எங்களின் அலுவலக அந்தஸ்துபடி விமானத்தில் பயணிக்க எங்களுக்கு எலிஜிபிலிட்டி போதாது. ஆனாலும் நாங்கள் விமானத்தில் சென்று வேலையை துரிதமாக முடித்து திரும்ப வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கும். இதெல்லாம் வெளிப்படையாக சொல்லாமல் நிகழ்த்தப்படும் அநீதிகள். வேலை முக்கியம் என்பதால் வாயை மூடிக்கொள்வோம். பயணத்திற்கு இரண்டாம் வகுப்பு ஏ.சி ரயிலுக்கு ஆகும் செலவை தான் திருப்பி தருவார்கள். மீதம் உள்ள தொகையை சம்பளத்திலிருந்து தான் போட வேண்டும். நள்ளிரவு விமானங்களின் டிக்கெட் விலை குறைவாக இருப்பதால், அலுவல் நிமித்தமாக எங்கு பயணிக்க நேர்ந்தாலும் நாங்கள் அதையே தேர்ந்தெடுப்போம்.

பத்தரை மணிக்கு விமான நிலையத்தை அடைந்தால் போதும். அதுவரை என் வீட்டிலேயே ஓய்வெடுப்பது தான் முதலில் போட்ட திட்டம். மதியத்திலிருந்தே நெட்ப்ளிக்ஸ்சில் சாக்ரெட் கேம்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. இடையிடையே ரே, கணேஷ் கைத்தொண்டே போல் பேசிக் காண்பித்தான். அம்மா அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பது போல் பார்த்தாள். அவள் கையிலிருந்த காபியை…

View original post 1,894 more words