ஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். Continue reading
Tag Archives: aravindhkumar sachidanandam
சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல்
பரத்வாஜ் ரங்கன் கமலுடன் மேற்கொண்ட உரையாடல்களின் தமிழாக்கம் இது. தி ஹிந்துவில் வெளியான இந்த கட்டுரைகள் தற்போது கிழக்கு வெளியீடாக தமிழில் வந்துள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்…
சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல் -பரத்வாஜ் ரங்கன்
தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்
கிழக்கு பதிப்பகம்
விலை: Rs 60
ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
பிச்சாவரம் சதுப்பு நில காடு
பிச்சாவரம் சதுப்பு நில காடு
ஒளிப்பதிவு: பிரேம்குமார் சச்சிதானந்தம்
படத்தொகுப்பு: அரவிந்த் சச்சிதானந்தம்
கண்-சிறுகதை
கண்களில் எரிச்சல் உண்டாக ஆரம்பித்தது. பதினைந்து நிமிடங்களுக்குக் கண்களைத் திறக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு தான் அந்த நர்ஸ் கண்களில் மருந்தை ஊற்றினாள். நான்கு மணி நேரத்திற்குப் பார்வை மங்கலாக இருக்கும் என்றாள். ஆனால் கண் எரியும் என்று அவள் சொல்லவில்லை. இன்னும் பதினான்கு நிமிடங்கள் நான் கண்களை மூடியே வைத்திருக்க வேண்டும்.
கண்களைத் திறந்துவிடலாமா என்று எண்ணினேன். ஆனால் கண்களைத் திறந்து, வெளிச்சம் கண்ணில் பட்டுப் பார்வை போய் விட்டால்? நினைக்கும் போதே கிலி ஏற்படுகிறது பார்வை எப்படிப் போகும். போக வாய்ப்பிருக்கிறது. உள்ளே நுழையும் போதே ஏதேதோ டாக்குமென்ட்களில் கையெழுத்து வாங்கினார்கள். அதில் என்ன எழுதியிருந்தது என்று படிக்கவில்லை. ஃபார்மாலிட்டீஸ் என்றார்கள். நானும் கேள்வி கேட்கவில்லை. ஆர்வக்கோளாறில் கண்ணைத் திறந்தீர்கள் எனில் கண் பார்வை போய்விடும் என்று எழுதி இருக்கலாம். அப்படி கண் போய்விட்டால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பல்ல என்று கூட எழுதியிருக்கக்கூடும். கண்ணைத் திறக்காமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்தபின், கைக்குட்டையை எடுத்து கண்களில் இருந்து வழியும் மருந்தை துடைத்துக் கொண்டேன்.
“அம்மா உச்சா.. “ அந்தக் குரலுக்குச் சொந்தக்கார சிறுவனுக்கு பத்து வயது இருக்கலாம்.
“டாய்லெட்னு சொல்லு” என்று அவன் தாய் அவன் காதில் கிசுகிசுப்பது கேட்கிறது.
“கூட்டிட்டு போய்ட்டு வந்துருங்க” நர்ஸ் சொல்கிறாள்.
“ஆண்ட்டி நான் மூஞ்ச கழுவிட்டு வந்துறேன். கண் எரியுது” சிறுவன் கெஞ்சினான்.
“அதெல்லாம் செய்யக்கூடாது… கண்ண நாங்க சொல்றப்ப தான் திறக்கணும்” என்றவாறே நர்ஸ் என்னைக் கடந்து சென்றாள். அவள் மீது மல்லிப் பூ வாசம் அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் நான் பார்த்தபோது அவள் தலையில் மல்லிப்பூ இல்லை.
“அம்மா கண்ணத் தொறந்தா என்ன ஆகும்”
“ஹான் சாமி கண்ண குத்திடும்” என்றவாறே அந்தத் தாய் அவனை அழைத்துச் செல்கிறாள். இப்போது மீண்டும் நர்சின் குரல் கேட்டது. “லக்ஷ்மி ரெட்டி” என்று உரக்கக் கத்தினாள். யாரும் வந்ததைப் போல் தெரியவில்லை.
“லக்ஷ்மி ரெட்டி” “லக்ஷ்மி ரெட்டி” மீண்டும் கத்தினாள். “போன் மேல போன் போட்டு அப்பாய்ண்ட்மென்ட் வாங்குறது. கரெக்ட் டைம்க்கு வரதுல்ல..”. அவள் முணுமுணுத்தாள்.
லக்ஷ்மி ரெட்டி ஏன் வரவில்லை? முக்கியமான வேலை ஏதாவது வந்திருக்கும். கல்லூரியில் திடீரென்று செய்முறைத் தேர்வு வைத்திருப்பார்கள். இல்லை. லக்ஷ்மி பொய் சொல்லிவிட்டாள். மருத்துவமனைக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு தன் ஆண் நண்பருடன் எங்கேயோ சென்றுவிட்டாள்.
ஒருவேளை அவள் திருமணம் ஆனவளாக இருந்தால்? அவள் மாமியார் ஊரிலிருந்து திடீரென்று வந்திருக்கக் கூடும். “நான் வந்துட்டேனே..அதான் சமச்சு போட பயந்துக்கூட்டு கண் ஹாஸ்பத்திரி போறேன் பல் ஹாஸ்பத்திரி போறேன் புளுவுரா.. இவ வடிச்சுகொட்டி தான் நான் உடம்ப வளக்கணுமா !” என்று அவளது மாமியார் லக்ஷ்மியின் காது படவே சொல்லியிருக்கக் கூடும். (இதை அவள் தெலுங்கில் தான் சொல்லியிருப்பாள். எனக்கு தெலுங்கு தெரியாது) இதைக் கேட்டதும் அவள் என்ன செய்திருப்பாள்? பாவம் அழுது கொண்டே உள்ளே சென்றிருப்பாள். இல்லை. அவளின் குழந்தைக்குக் காய்ச்சல் வந்திருக்கக் கூடும். அவளது கணவனுக்கு வேலை போயிருக்க கூடும். துக்கத்தில் அழுது கொண்டிருக்கும் அவனுக்கு லக்ஷ்மி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறாள் போல. ஆம். அப்படிதான் நடந்திருக்கும். இல்லை, அவள் வீட்டு நாய்க்குட்டி இறந்திருக்ககூடும். இல்லையேல் அவளது புருஷன் வெளியூர் சென்றுவிட்டதால், அவள்…
“எவ்ளோ நேரம் சார் வைட் பண்றது.. டாக்டர் உங்களக் கேட்டுகிட்டே இருக்கார்…”, நர்சின் குரல் என்னை மீண்டும் ஹாஸ்பிடல் அறைக்குள் இட்டு வந்தது.
“சாரி மேடம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு… “ கரகரப்பான குரலில் பதில் வந்தது.
“நெக்ஸ்ட் டைம் உங்க கம்பெனில இருந்து யாரு வந்தாலும் அப்பாய்ன்ட்மெண்ட் கொடுக்கக் கூடாதுணுட்டார்.. போங்க நீங்களே போய் பேசுங்க…
“பேஷண்ட் இருக்கும் போதே எல்லாரும் பேக தூக்கிட்டு வந்தா எப்படி.. நாங்களும் வீட்டுக்குப் போக வேணாம்” முனவிக் கொண்டே நர்ஸ் நகர்ந்தாள்.
லக்ஷ்மி ரெட்டி ஒரு ஆண். சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ். எனக்கு முழியைப் பிடிங்கிக் கொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது. ஆண்களுக்கு ஏன் லக்ஷ்மி என்று பெயர் சூட்டுகிறார்கள்?
“ரீ செக்கப்பா?” நர்சின் குரல் மீண்டும் கேட்டது.
“யா…” இனிமையானதொரு பெண் குரல்.
“சரி அந்த சேல்ஸ் ரெப் வந்ததும் நீங்க போங்க..” மீண்டும் நர்சின் குரல்.
“சரி மேடம்” இன்னொரு பெண்ணின் குரல் கேட்டது. இது மிகமிக இனிமையாக இருந்தது. அவர்கள் முன் வரிசையில் இடது மூலையில் அமர்கிறார்கள். என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சிறிது நேர மௌனம். டாக்டரின் அறைக் கதவு திறந்து மூடப்படுகிறது.
“இப்ப நீங்க போலாம்” நர்சின் குரல் எனக்குப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்..நான் அந்த மிகமிக இனிமையான குரலுக்கு அடிமையாகி விட்டேன்.
“சரி மேடம்” மீண்டும். மிகமிக இனிமையான குரல்.
சிறிது நேரத்திற்குப் பின் அவர்கள் வெளியே வருகிறார்கள்.
“டாக்டர் பவர் டீடெயில்ஸ் கொடுப்பாரு..டூ மினிட்ஸ்” மீண்டும் நர்சின் குரல்.
“இட்ஸ் ஒகே” அந்த இனிமையான குரல் எனக்கு மிகவும் அருகில் கேட்கிறது. இதோ, அந்தப் பெண்கள் என் அருகாமையில், என் பின் வரிசையில் வந்து அமர்கிறார்கள். மௌனம் இப்போது, ஏதோ பேசத் தொடங்கினார்கள். ஆங்கிலத்தில் பேசினார்கள். நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். ஹிந்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஐயோ! அவர்கள் என்னைப் பற்றி தான் பேசுகிறார்கள். ஆம் என்னைப் பற்றிதான். கிண்டல் செய்கிறார்கள். எனக்கு ஹிந்தி பாஷை புரியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. போலும். அறிந்திருந்தால் இப்படிப் பேசமாட்டார்கள். என்னை வர்ணிக்கிறார்கள். என் ஆடையைப் பற்றி, என் கண்ணாடியைப் பற்றி, ஏதேதோ பேசுகிறார்கள்.
“உனக்கு புடிச்சிருந்தா பேசு..தப்பில்ல” இனிமையான குரல் கொண்டவள், மிகவும் இனிமையான குரல் கொண்டவளிடம் சொல்லுகிறாள்.
“வேண்டாம்..விடு”
“சும்மா பேசு…இல்லனா ஹாஸ்பிட்டல் வெளிய வெயிட் பண்ணுவோம். அவன் வந்தோனோ பேசுவோம்..“ மீண்டும் இனிமையான குரல் கொண்டவள்.
“நஹி… எப்டியும் வாப்பா லவ் மேரேஜுக்கு ஒத்துக்க மாட்டாரு..அமைதியா இரு”
நான் பறந்து கொண்டிருக்கேன். அந்த மிகமிக இனிமையான குரல் கொண்டவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும். ஆசையாக இருந்தது. திடீரென்று என் அருகில் யாரோ வந்து நிற்பது போல் இருந்தது.
“சார். எவ்ளோ நேரம் ஆச்சு ட்ராப்ஸ் போட்டு”. ஒரு ஆண் குரல். என்னைத் தான் கேட்கிறான்.
“பத்து நிமிஷம் இருக்கும்”
“ஒகே. இன்னும் கொஞ்ச டைலூட் பண்ணியிறலாம். கண்ண திறங்க” எனக்கு சந்தோஷம். அந்தப் பெண்களைப் பார்க்கலாம். கண்ணைத் திறந்தேன். பார்வை மங்கலாக இருந்தது. தலையைத் திருப்ப எத்தனித்தேன். கையில் ட்ராப்சுடன் நின்று கொண்டிருந்த மேல் நர்ஸ் “சார் என்றான்”. நான் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் பார்த்தேன்.
“ரெண்டாவது முறை ட்ராப்ஸ் போடணும்” என்றவாறே கண்களில் மீண்டும் மருந்தை ஊற்றிவிட்டான். அந்தப் பெண்கள் எழுந்து சென்று நர்சிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். “அஞ்சு நிமிஷம் கண்ணத் திறக்காதீங்க..” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான். கண்ணைத் திறக்க முடிவு செய்தேன். பார்வை போனாலும் பரவாயில்லை. பார்வையெல்லாம் போகாது. எப்படிப் போகும்?
கண்களைத் திறந்தேன். பார்வை மிகமிக மங்கலாக இருந்தது.
“கண்ணத் திறக்காதீங்க சார்“ நர்ஸ் கத்தினாள். அந்தப் பெண்கள் அங்கு இல்லை. கண்ணிலிருந்து மருந்து வடிந்து கொண்டிருந்தது. “அங்கிள் கண்ணத் திறக்காதீங்க.. சாமி கண்ணக் குத்திரும்” முன் வரிசையில் அம்ரந்திருந்த சிறுவன் என்னைப் பார்த்துச் சொன்னான். “ஹேய் சும்மா இரு” என்று அவனை அவன் அம்மா அதட்டினாள், நான் மருந்தைத் துடைத்துக் கொண்டே, சுற்றும் முற்றும் பார்த்தேன். மின் விளக்குகளின் ஒளி கண்களைக் கூசிற்று. தூரத்தில் லிப்ட்டுக்குள் அந்த இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். லிப்ட்டின் கதவு கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டிருந்தது. அதில் ஒருத்தி என்னைப் பார்த்து புன்னகை செய்தாள். லிப்ட் மூடிக்கொண்டது.
தொடரும் சினிமா (free e-book)
கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின் தொகுப்பு இது.
தொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம்
Cover Photography© Premkumar Sachidanandam
கூகிள் ப்ளே ஸ்டோரில் free download செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும்
‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) சொல்லித்தரும் திரைக்கதை
“I am an extremely overqualified high school chemistry teacher. I have watched all of my colleagues and friends surpass me in every way imaginable. My wife is seven months pregnant with a baby we didn’t intend. My fifteen-year old son has cerebral palsy. And within eighteen months, I will be dead…”
பிரேக்கிங் பேட்டில் வரும் இந்த வசனம் தான் அந்த சீரியலின் சாராம்சம். வால்டர் ஒயிட் ஒரு வேதியியல் ஆசிரியர். காலையில் பள்ளியில் வேலை, மாலையில் ஒரு கார் வாஷ் கம்பெனியில் வேலை என அவர் வாழ்க்கை கழிகிறது. திடீரென்று ஒருநாள் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. சில மாதங்களில் இறந்துவிடுவாய் என்று டாக்டர் சொல்ல, இறப்பதற்க்கு முன் குடும்பத்திற்க்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். தன் முன்னாள் மாணவன் ஜெஸ்சி பிங்க்மென் போதை பொருள் வியாபாரத்தில் நிறைய பணம் ஈட்டுவதை கண்டுகொள்கிறார். அவனுடன் இணைந்து, தன் வேதியியல் அறிவை பயன்படுத்தி மிகத் தூய்மையான ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதை பொருளை உருவாக்குகிறார். மார்க்கெட்டில் மவுசு கூடுகிறது. ஆனால் யாருக்குமே அதை யார் உருவாக்குகிறார்கள் என்று தெரியாது. அதனால் அவர்களாகவே வால்டருக்கு ‘ஐசென்பெர்க்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். அவன் ஆபத்தானவன், பயங்கரமானவன் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் ஒயிட் தனக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் பகலில் பள்ளியில் பாடம் நடத்துகிறார். விடுமுறை நாட்களில் யாருக்கும் தெரியாமல் ஐசென்பெர்க் அவதாரம் எடுக்கிறார்.
ஒருபுறம் மற்ற போதை மருந்து வியாபாரிகள் ஐசென்பெர்க்கை கொலை செய்ய தேடுகிறார்கள். இன்னொரு புறம் யார் இந்த புதியவன் என்று போலீஸ் தேடுகிறது. போலீஸ் குழுவின் தலைவனான ஹாங் ஒயிட்டின் மைத்துனன். ஆனால் யாருக்குமே வால்டர் ஒயிட் என்ற சாதாரண ஆசிரியர் மீது சந்தேகம் வரவில்லை. இந்த ஈகோ ஒயிட்டை மேலும் மேலும் தப்பு செய்ய வைக்கிறது. எல்லோரும் தன்னை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்று கருதும் ஒயிட், தன் கர்வத்தை நிலைநாட்ட மென்மேலும் தவறு செய்கிறார். ஏராளமான பணம், ஏராளமான எதிரிகள் என அவர் வாழ்க்கையே மாறுகிறது.
அறிவாளியான நல்லவானொருவன் காலத்தின் கட்டாயத்தால் தீய பாதையை தேர்ந்தெடுப்பதுதான் கதையின் ஒன்லைன். மிக ஸ்வாரஸ்யமான கமர்ஷியல் ஒன்லைன் இது. மிக ஆபத்தான ஒன்லைனும் கூட. ஏனெனில், ஒரு ஆசிரியர் போதை மருந்து தயார் செய்கிறார், கொலை செய்கிறார் என்று காண்பிப்பது நியாயமா என்ற கேள்வி எழலாம். ஆனால் கதாநாயகனின் அகப்போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கேள்வியை உடைத்து கதையை நகர்த்தி செல்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள். முதலில், தனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் கதாநாயகன் தவறு செய்கிறான். போதிய அளவு பணம் சம்பாத்தித்துவிட்டு போதைப் பொருள் தொழிலிலிருந்து ஒதுங்கிவிட வேண்டுமென்று முடிவு செய்கிறான். நிழல் உலகில் அவனுக்கு வரவேற்பு கிடைக்காததால் அவன் ஈகோ அதிகமாகிறது. அதனால் ஆக்ரோஷமாக தொழில் செய்கிறான். பின் தன்னை உதாசீன படுத்தும் சமூகத்திடம், தன்னாலும் நிறைய சம்பாத்திக்க முடியும் என்று நிரூபிக்க மென்மேலும் தவறு செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் ஈகோ அவன் அறிவை ஆக்கிரமித்துக்கொள்கிறது. புலி வால் பிடித்த கதையாக நிழல் உலகில் வெகு தூரம் பயணிக்கிறான். எதிரிகள் அதிகமாகிவிடுகிறார்கள். தொடர்ந்து மெத்தம்பெட்டமைன்’ காய்ச்சினால்தால் உயிர்வாழ முடியும் என்ற நிலை உருவாகிறது. அதனால் ஒயிட் கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் தான் ஏற்ப்படுகிறதே ஒழிய, அவன் செய்வது சரியா தவறா என்ற கேள்வி எழவில்லை.
மொத்தம் ஐந்து சீஸன் 62 எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில் பல இயக்குனர்கள் பல திரைக்கதை ஆசிரியர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ப்ரிசன் பிரேக் கட்டுரையில் குறிப்பிட்டது போல், ஆங்கில தொலைக்காட்சி தொடர்கள் திரைக்கதை எழுதும் கலையை புரிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. இது பெரும்பாலும் character driven ஸ்டோரி. கதை முழுக்க வால்டர் ஒயிட் மற்றும் அவரது கூட்டாளி ஜெஸ்ஸி ஆகியோரின் பார்வையிலேயே நகரும். அவர்களுக்குள் நிகழும் அகப்போராட்டத்தை மையப் படுத்தி, அவர்களை சுற்றி உள்ள உலகம் எப்படி மாறிக் கொண்டே வருகிறது என்று கதையை நகர்த்தியிருப்பார்கள். (புளிய மரத்தின் கதையில் ஒரு புளிய மரத்தை வைத்துகிக்கொண்டு அந்த காலகட்டத்தின் மாற்றங்களை சொல்லியிருப்பதைப் போல). அந்த பார்வை எங்கேயும் உடைபடாது. மேலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும், தேவையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனினும் கதை வால்ட்டர் ஒயிட்டை பற்றியதுதான். ஜெஸ்சியின் வாழ்க்கையில் அவர் நுழைந்ததும் அவரது வாழ்க்கையும் ஜெஸ்ஸியின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே திரைக்கதை. இங்கே இந்த பார்வை (Point of view) தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சில இரண்டு நண்பர்களை பற்றிய தமிழ் படங்களில், கதை யாரை பற்றியது என்ற தெளிவு இல்லாமல் படம் நகர்வதை கண்டிருப்போம். ஏனெனில் இரண்டு வெவ்வேறு நபர்களின் உலகங்களையும் காட்சிகளில் திணித்திருப்பார்கள். அப்படி செய்யும் போது Point of view அடிபட்டு போய்விடும். ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் பதியாமல் போய்விடும். அதை எப்படி சரியாக சொல்வது என்பதை இக்கதையில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
Fly என்ற ஒரு எபிசோடை, ஒரு லேபிற்க்குள் வெறும் இரண்டு நபர்கள், ஒரு பறக்கும் பூச்சியை மட்டும் வைத்தே நகர்த்தியிருப்பார்கள்., பட்ஜெட் அதிகாமாகிவிட்டதால், பட்ஜட்டை குறைக்க ஒரு லேப்பிற்குள்ளேயே முழு எபிசொடையும் உருவாக்கினார்களாம். எப்படி ஸ்வாரஸ்யமாக, மூலக் கதையிலிருந்து பிறழாமல் சிங்கிள் செட்டிங் சப்ஜெக்ட் எழுதுவது என்பதற்கு இந்த எபிசோட் ஒரு சிறந்த உதாரணம்.
ஒயிட்டின் அகப்போராட்டம் ஒருபுறம் இருக்க, புற உலகிலும் அவர் போராட வேண்டி இருக்கிறது. ஐசென்பெர்க் காய்ச்சும் மெத்தம்பெட்டமைன் மார்க்கெட்டில் அதிகம் விற்ப்பதால், மற்ற போதை பொருள் வியாபாரிகள் அவரை கொல்ல துரத்துகிறார்கள். இங்கே கதை plot driven-ஆக மாறுகிறது. மாஃபியாகளிடமிருந்து தானும் தப்பிக்க வேண்டும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இங்கேயும் அவர் அறிவுதான் அவருக்கு கைகொடுக்கிறது. இது போன்ற external conflicts திரைக்கதையின் வேகத்தை கூட்ட உதவும்.
பிரேக்கிங் பேட்டில் கவனிக்கப் படவேண்டிய இன்னொரு விஷயம் Character Transformation. ஆரம்பத்தில் தன் மனைவியிடம், சூழ்நிலை காரணமாக தவறான பாதையில் பயணித்துவிட்டதாக சொல்லும் கதாநாயகன், இறுதியில் தான் விரும்பியே அந்த பாதையை தேர்ந்தெடுத்ததாக கர்வத்தோடு சொல்கிறான். ஒரு கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்யாமல் தவிர்க்கிறதென்றால், அதற்கான காரணம் என்ன என்று சொல்ல வேண்டும். ஒரு செயலை செய்கிறதென்றால் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். முன் செய்ய மறுத்த விஷயத்தை இப்போது செய்கிறது என்றால் அதையும் விளக்க வேண்டும். இங்கே ஒயிட் கதாபாத்திரத்தின் மாற்றத்திற்க்கான காரணத்தை விளக்கி இருப்பதுதான் திரைக்கதையின் பலம்.
மேக்கிங்கிலும் தனித்துவமான சீரியல் இது. காட்சிகள் முழுக்க ஏராளமான குறியீடுகள் உண்டு. கதாபாத்திரங்களின் குணங்களையும் transformation-ஐயும் குறிக்கும் வகையில் வண்ணங்களை பயன்படுத்தி இருப்பார்கள். தஸ்தாவெஸ்கி, காஃப்கா என பலரின் தத்துவங்களை தொட்டுவிட்டு வரும் இந்த சீரியல், தூக்கத்தைப் பிடிங்கிக்கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆங்கில சீரியல்களில் மிகவும் முக்கியமானது.
கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்
மு.கு: இது கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2014-யில் பிரசுரத்திற்கு தேர்வான கதை. நன்றி கல்கி.
***
வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஜேஜே என மக்கள் இங்கும்அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அதை காண்பவர்களுக்கு ஆடி மாத திருவிழாவோ என ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்த சேரியை பொறுத்த வரையில் தினமும் காலையில் அரங்கேறும் சாதாரண காட்சியே அது.
அங்கு அதிகம் வசிப்பது தினக் கூலிகள். அருகில் அமைந்திருந்த பஞ்சு தொழிற்சாலையில் பெரும்பாலானோர் வேலை செய்துக்கொண்டிருந்தனர். சிலர் உணவு பண்டங்களை விற்றும், சிலர் குறைந்த விலையில் உடையையும் உடலையும் விற்றும் வயிற்றை கழுவிக் கொண்டிருந்தனர்.
மேம்பாலத்துக்குக் கீழ் அமைந்திருந்ததால் அந்த சேரியில் எப்போதும் வாகன இரைச்சலுக்கு பஞ்சமில்லை. கூடவே வேலைக்கு செல்லும் மனிதர்களின் காலடி சப்தம், பஞ்சு தொழிற்சாலையில் இயங்கும் பழைய எந்திரங்களிலிருந்து வரும் பேரொலி, நடு வீதியில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் எழுப்பும் ஒலி, சேரியில் சுற்றி திரியம் நாய்களின் ஊளை, பன்றிகள் நரவையை நக்கி தின்னும் சப்தம் என அனைத்தையும் ஜன்னலுக்கு பின்னின்று அவன் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தான். வேறு வழியின்றி வெகு நாட்கள் அங்கே வசிப்பதனால் முதலில் நாராசமாய் காதில் விழுந்த ஒலிகள் இப்போது அவனுக்கு பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை.
தினமும் காலையில் போருக்கு செல்வது போல் செல்லும் கூட்டம் வரிசையாக வடக்கு மூலையில் நிற்கும். இந்தியாவில் எங்குதான் வரிசை இல்லை!
சற்று உள்ளே சென்று பார்போமேயானால் பெரிய கல்வெட்டு ஒன்றை காணலாம். அதில் பின்வரும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
“சுகாதார கழிப்பிடம்.
திறப்பு: 09 .09 .1999 ,
கோடை வள்ளல் திரு. கோதண்டன் அவர்கள்”
கொடை என்பது கோடை என பொறிக்கப்பட்டதனாலோ என்னவோ கோடைக்கு ஒருமுறை அந்த கல்வெட்டை மட்டும் சில ஜாலரா கூட்டம் வந்து சுத்தம் செய்து விட்டு போகும். கழிவறை சுத்தத்தைப் பற்றியோ சுகாதாரத்தைப் பற்றியோ யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. சுகாதாரம் கழிக்கப்பட்டதாலோ என்னவோ அது சுகாதார கழிப்பிடம்.
இவை அனைத்தும் அவனுக்கு பழகிப்போன காட்சிகள். அவன் வாழ்வில் ஏமாற்றம் மட்டுமே மாறி மாறி வந்ததேயொழிய மாற்றம் வரவில்லை.
அவன் நிரஞ்சன். விளரிய முகம். மெலிந்த தோற்றம் 5 அடி 8 அங்குலம். 74 கிலோ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை. தற்போது 5 அடி 9 அங்குலம். 60 கிலோ.
ஒருகாலத்தில் ஐந்து வேலை உணவு உண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அவன், தற்போது கிட்டியபோது மட்டும் உணவு உண்டு தன்னை கொல்ல முயற்சிக்கும் தனிமையை தான் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தான்
உயர் நடுத்தர வர்க்கத்தை சார்தவன் அவன். பிறந்ததிலிருந்து பசி அறிந்ததில்லை, இப்போது பசியை தவிர வேறு ஏதும் அறிவதில்லை.
அண்ணனாக தன் இரு தங்கைகளுக்கும் அவன் எதையும் செய்துவிடவில்லை. தனியார் பணியில் இருக்கும் அவன் தந்தைக்கு அவனை அரசு பணியில் அமர்த்திவிட வேண்டும் என்று ஆசை. லட்சங்களை இறைத்து அவனை பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார். ஆனால் அவன் பொறியாளன் ஆவதை தவிர்த்து கலை கூத்தாடி ஆகி போனான். கல்லூரி செல்வதே மேடை நாடகம் போட, நண்பர்களிடம் கதை சொல்ல என்றாகிப்போனது.
அவன் சொல்லும் கதைகளை கேட்டு கைத்தட்டுவதற்காகவே ஒர் வேலையற்ற நண்பர் கூட்டமிருந்தது. அதனாலோ என்னவோ அவன் சினிமா பித்து தலைக்கேறி, உலக சினிமாவில் பின்நவீனத்துவம் பேசிடவே தான் பிறந்துள்ளதாக எண்ணிக்கொண்டான்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பல இயக்குனர்களின் சென்று உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்கத் தொடங்கினான். அவர்களும் சொல்லிவைத்தார்போல் “படிச்சு முடிச்சதும் வா !” என்ற ஒரே பதிலையே சொல்லி அவனை திருப்பி அனுப்பினர். அவன் சோர்ந்து போகாது மீண்டும் மீண்டும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தான்.
கல்லூரியில் எந்த பரிச்சையிலும் தேறவில்லை. தேர்வுகளைப்பற்றி அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளாவிடினும் வாங்கிய காசிற்காக கல்லூரி நிர்வாகம் அலட்டிக்கொண்டது.
“உங்க பையன்கூட சேர்ந்துதான் மத்த நல்ல பசங்களும் கெட்டு போறாங்க. எந்நேரமும் கதை அடிக்கிறது, கேங் பார்ம் பண்ணிக்கிட்டு பிரச்சனை பண்ணுறது, அவனுக்கு மனசுல ஹீரோனு நினைப்பு. இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்க படிகிறதா இருந்தா படிக்கட்டும். இல்லைனா அவன் கல்லூரியவிட்டு நீக்க வேண்டியதிருக்கும்” பொறிந்து தள்ளினார் கல்லூரி முதல்வர்.
“உங்கள நம்பிதான படிக்க அனுப்புறோம், காச வாங்கிகிட்டு நீங்களே இப்படி பேசுனா எப்படி மேடம் “
“படிக்க அனுப்பினேன்னு நீங்க சொல்றீங்க. அவன் படிக்க முயற்சிகூட பன்னலயே. படிக்க வேண்டிய வயசுல என்ன சார் ஆட்டம். எதோ கல்சுரல்ஸ் பண்ணுறனு கிளாசுக்கே வரமாட்டேன்கிறான். கேட்டா நம்ம கல்லூரிக்காகதான் செய்றேன்னு என்னையே எதிர்த்து பேசுறான். இவன் போகும்போது கூடவே பத்துபேர கூட்டிட்டு போயிடுறான். கண்டிச்சு வைங்க..இவனால எங்க கல்லூரி பேர் கெட்டுட கூடாது”
“இப்ப கூட உங்க பேர் கெட்டுட கூடாதுனுதான் பார்க்குறீங்களேயொழிய என் பையனோட எதிர்காலத்தை பத்தி பேச மாட்றீங்களே…கடன் வாங்கி அவன இங்க படிக்கவச்சேன் “
“இது ரொம்ப பிரபலமான கல்லூரி, இங்க படிச்சா உடனே வேலை கிடைக்கும், அதனாலதானே கடன்பட்டாலும் பரவாயில்லைன்னு உங்க பையன சேர்த்திருக்கீங்க. இதுவே இது ஒரு அநாகரிமான கல்லூரி, இங்க எந்த மாணவனும் ஒழுங்க படிக்க மாட்டான், ஆட்டம் போடுறத தவிர அவனுக்கு வேற வேலையில்லை, அப்படினா உங்க புள்ளைய சேர்ப்பீங்களா !”
முதல்வரின் பேச்சில் நியாயம் இருப்பதாக தோன்றியதால் என்னவோ நிரஞ்சனின் தந்தை எதையும் மேற்கொண்டு பேச முயற்சிக்கவில்லை.
முதல்வர் தொடர்ந்து பேசினார், “இங்க பாருங்க சார். உங்க பையனோட எதிர்காலத்தில எங்களுக்கும் அக்கறை இருக்கு. அவன கொஞ்சம் கண்டிச்சு வைங்க. பிளேஸ்மென்ட் நெருங்கிடுச்சு. அவன் படிக்க ஆர்வம் காட்டினா போதும், நிச்சயம் அவன மேல கொண்டு வந்திடுறோம்”
“அவங்க சொல்றதெல்லாம் என்னால கேக்க முடியாதுபா. எனக்கு படம் எடுக்கிறதுலதான் ஆர்வம் அதிகம். அவங்க உங்களுக்கு கால் பண்ணினதும் நீங்க ஏன் தனிய போய் பார்த்தீங்க. என்னையும் கூட்டிட்டு போயிருக்கனும். ரொம்ப நல்லவ மாதிரி பேசுறாளோ..வருஷம் வருஷம் ஏதோ ஒரு சிம்போஷியம் நடத்தி காசடிக்கிறா. கல்சுரல்ஸ் எங்க கட்டுப்பாட்டுல இருக்கிறதுனால காசடிக்க முடியல . அதனால் என் மேல வெறுப்பு “
பளார்….
கன்னத்தை தடவியவாறே நிரஞ்சன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தது. சிறு வயதுமுதல் அவனை அதிகம் கண்டித்தது அவன் தாய் மட்டுமே. அதிகம் செல்லம் கொடுத்த தந்தை முதன் முதலில் கை நீட்டியது, அதுவும் தங்கைகளின் முன் தான் அடி வாங்கியது அவனுக்கு பெருத்த அவமானமாயிருந்தது.
“அம்மா ! உன் புள்ள செத்துட்டானு நினைச்சிக்கோ “
வீட்டைவிட்டு வெளியேறியவனை யாரும் தடுக்க முற்படவில்லை. அவன் தாய் மட்டுமே கதறிக்கொண்டிருந்தாள்.
சென்னை வந்த பின் பல இயக்குனர்களை சந்தித்தான். ஒவ்வொருவரும் பல காரணங்களை சொல்லி அவனை தவிர்த்தனர், சில நேரங்களில் காவலாளிகள் தடுத்தனர்.
“புயலிலே ஓர் தோணி படிச்சிருக்கியா ?” ஒரு பிரபல இயக்குனர் வினவினார்..
“இல்ல சார்”
“இலக்கியத்துல எவ்வளவு ஆர்வமுண்டு ?”
“தெரியல சார்”
“பிடித்த எழுத்தாளர் ?”
“அபப்டியெல்லாம் இல்ல சார்..குமுதம் ஆனந்த விகடன் படிப்பேன்..நல்ல கதை சொல்லுவேன் “
“இங்க பாரு தம்பி. சினிமா என்பது ஒரு புரிதல். அதுக்கு நீ இன்னும் பக்குவ படல…நிறைய படி..அப்பறம் ஒருநாள் வா..பாக்கலாம் “
நிச்சயம் வீட்டுக்கு திரும்பி போகிற எண்ணம் அவனுக்கில்லை. தன்மானம் என்று தனக்கு தானே கற்பித்துக் கொண்ட எதோவொன்று அவனை தடுத்தது.
பல இயக்குனர்களின் வீட்டுப் படி ஏறிஇறங்கி, பல இடங்களில் பட்ட அவமானங்களை துடைத்துக் கொண்டு, கையில் இருந்த சில ஆயிரங்களை செலவு செய்து , கழுத்தில் இருந்த அந்த தங்க சங்கிலி அடகு கடைக்கு சென்றபின் உதவி இயக்குனர் வாய்ப்பு கிட்டியது. குறைந்த வாடகையில் அந்த சேரி வீடும் கிட்டியது..
சினிமா அவனுக்கு நிறைய கற்று தந்தது. கனவு தொழிற்சாலை தான் கனவு கண்டதை போல் இல்லை என்பதை முதல் நாளே உணர தொடங்கினான். படப்பிடிப்பு குழுவே ஹீரோவுக்காக காத்திருந்த நேரத்தில் வந்து சேர்ந்தது ஓர் செய்தி.
‘தயாரிப்பாளர் மாரடைப்பால் காலமானார்’…
‘ஷூட்டிங் பேக்கப்’ என்று குரல் ஒலித்தது. கலைந்த கனவுகளுடன் கூட்டம் கலைந்தது.
“என்ன தம்பி புதுசா ! ” வினவினார் ஓர் அசோசியேட்.
“ஆமா சார், இன்னைக்குதான் சேர்ந்தேன் “
“இஞ்சினியராமே !..இப்பெல்லாம் நல்லா படிச்சா பசங்கதான் சினிமா பக்கம் வரீங்க.. நமக்கு படிப்பெல்லாம் கிடையாது.. எல்லாம் அனுபவம்..இருபது வருடம்..எப்படியும் அடுத்த வருடம் படம் பண்ணிருவேன். அப்படியே என் கூட வந்து சேர்ந்துக்கோ…”
தன் நிலையை நினைத்து சிரிப்பதா அழுவதா என தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தவன்,எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்தான். அந்த அசோசியேட் இயக்குனர் அங்கிருந்து நகர்ந்து சென்று இன்னொருவனிடம் பேசிக்கொண்டிருந்தார்,
“… எப்படியும் அடுத்த வருடம் படம் பண்ணிருவேன். அப்படியே என் கூட வந்து ……”
” என்னையா ! காலையிலே பலத்த யோசனை…”அருகில் நின்றுகொண்டிருந்தார் அந்த வீட்டு ஓனர் மாடசாமி ..பல ஒன்டிக்குடுத்தனங்கள் இருக்கும் அந்த ‘திருமகள் நிலையத்தின்’ சொந்தக்காரர். கடுமையான முகம், ஆனால் குழந்தை மனசு. அதனால்தான் என்னவோ அங்கு பலர் வாடகை கொடுக்காவிடினும் அவர்களை விரட்டியடிக்கவில்லை.
வீதியை பார்த்தவாறே பழைய ஞாபங்களில் லயித்திருந்த நிரஞ்சன், மாடசாமியின் குரல் கேட்டு திரும்பினான்…
“என்னையா! ஷூட்டிங் இல்லையா !”
“ஸ்ட்ரைக்கு..”
“திரும்பவுமா.. போனமாசம்தானே பண்ணுனிங்க…”
“அது காவேரி பிரச்சனைக்கு …இது ஈழப் பிரச்சனை..”
“சினிமாகாரன நினைச்சா சிரிப்புதான்யா வருது..கண்டகருமாந்தரத்த சினிமால காட்டுறான்..ஒரு படம் ஓடிட்ட ஈழப் போராளி ஆயிடறான்…என்ன எழவோ..நமக்கு சினிமானாலே ஆகாது..உன்ன ஏதும் சொல்லல..நீ கோவிச்சிக்காத..”
“அதெல்லாம் ஒன்னும் இல்லங்க..மனசுல இருக்குறத சொல்லுறீங்க..நான் மத்தவங்க மாதிரி இருக்கமாட்டேன்..நிச்சயம் நல்ல படம் பண்ணுவேன்..”
இரண்டு வருடத்தில் அவன் நிறைய பக்குவப் பட்டிருந்தான். சினிமா அவமானங்களுடன் சேர்த்து நிறைய பாடங்களையும் கற்று தந்தது. ஆனால் படம்தான் இரண்டு வருடங்களாக இழுத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் அவன் உதவி இயக்குனர்தான்..இன்னும் நிறையப்படிகளை கடக்கவேண்டும், நிறைய அவமானங்களை தாங்கவேண்டும் என்பது அவனுக்கு தெரியும். நம்பிக்கை ஒன்றைமட்டுமே மூலதனமாக கொண்டு பயனித்துக்கொண்டிருந்தான் .
அவன் முதல்தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டதாக கேள்விப்பட்டான். இவனுக்கு யாரும் சொல்லி அனுப்பவில்லை.அழையா விருந்தாளியாக வீட்டுக்கு செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. உலக ஆசைகளை துறந்து, குடும்பத்திலிருந்து விடுபட்டு ஓர் சித்தனாகவே மாறிப்போனான்.
“என் பொண்டாட்டி உடம்பு முடியலனு படுத்துட்டா..எனக்கும் சுதார்ப்பா ரோட்ல நடக்க முடியல..அதன் இந்த முனைக்கடை வரைக்கும் போய் மூணு இட்லி வாங்கிட்டுவாயேன்..நான் டீய குடிச்சு பொழுத கழிச்சுருவேன்..அது பசி தாங்காது..” என்று மஞ்சள் பையையும் காசையும் நீட்டினார் மாடசாமி..
அவனுக்கு இது பழகிப் போயிருந்தது. சிறு சிறு வேலைகளை செய்து, வாடைக தர முடியாத தன் இயலாமையை சரிசெய்ய முயர்ச்சிதுக்கொண்டிருந்தான் .
பையை எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கும்போது, மாடசாமியின் குரல் ஒலித்தது, “அப்படியே மிச்சம் காசுல நீ ஒரு டீ குடிச்சிட்டு வந்திடு ..”
வீதியில் சிறுவர்கள் சாக்கடையில் விழுந்த பந்தை எடுத்து, அருகிலிருந்த வேறோரு சாக்கடை தண்ணீரில் கழுவிக்கொண்டிருந்தனர்.
இவனைக் கண்டதும், “ஐயா! டைரக்டர் மாமா..” என அனைவரும் கத்தினார். வாழ்கையில் அவனுக்கிருந்த சிறு சந்தோசங்களில் அதுவுமொன்று.
அந்த சிறுவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லுவான். நீட்ச்சே, ஹெகெல் என இவன் சொல்லும் தத்துவார்த்த விடயங்கள் புரியாவிடினும் அவர்களும் புரிந்ததுபோல் தலையாட்டுவார். இவனும் அந்த சிறுவர்கள்முன் தத்துவம் பேசுவதை பெருமையாக கருதினான். தன்னை சிறந்த மேதைகளாக காட்டிக்கொள்ள பாமரர்கள்முன் நவீனத்துவம் பேசும் அறைவேக்கடுகளின் பட்டியலில் இவனும் சேர்ந்துகொண்டது ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஏனெனில் வீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டு, வாழ்வில் பல அவமானங்களை சந்திக்கும் அவனுக்கு தன் ஆண்மையை நிலைநிறுத்திக்கொள்ள தத்துவார்த்த பேச்சுக்கள் தேவைப்பட்டது. சொல்வதற்கெல்லாம் தலையாட்ட அந்த சிறுவர்களும் தேவைப்பட்டார்கள்..
இட்லியை வாங்கிகொண்டு, மீதமிருந்த காசில் டீ குடிக்க நினைக்கையில் தன் பிய்ந்த செருப்பைபற்றிய எண்ணம் தோன்றியது. டீ குடிப்பதைவிட அந்த காசில் செருப்பை தைத்துவிடலாமென எண்ணி செருப்புதைக்கும் கடையோரம் நடந்தான். ஒரு சிறிய ஓலை குடிசையின் வாசலில் சில சாமான்களுடனும் கையில் கோணி ஊசியுடனும் ஒருவன் அமர்ந்திருதான். குடிசையின் உள்ளே சில சமையல் பாத்திரங்கள் அடுக்கிவைக்கபட்டிருந்தது.
“வா தம்பி ” என நிரஞ்சனை வரவேற்றான் அவன். தடித்த மீசை. அவன் கருத்த உடலில் மீசை மட்டுமே வெளுத்திருந்தது. தலையில் ஒரு மயிர் கூட இல்லை. வயது அறுபதிற்க்கு மேல் இருக்கும்.
“இந்த செருப்ப கொஞ்சம் தெச்சிகொடுங்களேன்”
“பத்து ரூபா ஆகும்..”
“என் கிட்ட ஏழு தான் இருக்கு… ” இருவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர்.
சரி கொடு. தெச்சிகொடுக்கிறேன்.இதுக்காக உன்ன வெறும் காலோடையா அனுப்பமுடியும்..வெயில் வேற கொளுத்துது..”
“ரொம்ப நன்றி”
“இருக்கட்டும் இருக்கட்டும்…தம்பி என்ன பண்றீங்க ?”
“சினிமாவுல இருக்கேன்..அசிஸ்ஸ்டன்ட் டைரக்டர்..”
அந்த செருப்பு தைப்பவனின் முகத்தில் வேகமாக ஓர் புன்முறுவல் தோன்றி மறைந்தது. அதனுள் எத்தனையோ அர்த்தங்கள் பொதிந்து கிடந்தன.
அதன்பின் அவர்கள் இருவரும் ஏனோ பேசிக்கொள்ளவில்லை. அந்த நிசப்தத்தை திடிரெனவந்த ஓர் குரல் கலைத்தது,
“தலைவரே,, இங்க வீ.கே நகர் மூணாவது தெரு..எங்க இருக்கு” மடிப்புக்கலையா சட்டைக்குள் ஒளிந்துக்கொண்டிருந்தான் அந்த குரலுக்கு சொந்தக்காரன்..
“இங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க..” என்றார் அந்த கடைக்காரர். அங்கிருந்து நகர முற்பட்ட அந்த புதியவன் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டிருந்த நிரஞ்சனை பார்த்ததும் நின்றான்.
“டேய் நீ நிரஞ்சன் தானே !”அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாதென்றே ஒதுங்கி நின்ற நிரஞ்சனை அவன் அடையாளம் கண்டுகொண்டான்.
“என்ன தெரியலையா.. கதிர்டா…கம்ப்யூட்டர்சயின்ஸ் டிபார்ட்மன்ட்..ஞாபகமில்ல !”
நிரஞ்சன் எதுவும் பேச வில்லை. மிகவும் கடினப்பட்டு ஓர் புன்னகை புரிந்தான். அங்கு நின்றுகொண்டிருந்த காரிலிருந்து ஒரு பெண்குரல் ஒலித்தது.
“கதிர்..சீக்கிரம் வா “
“யா டியர் !” தொடர்ந்து அந்த புதியவன் பேச தொடங்கினான்,,
“என்னடா ஏதோ படம் எடுக்கிறேன்னு சுத்திக்கிட்டு இருந்த..இப்ப ஆளு இவ்வளவு பரிதாபமா மாறிட்ட..ஏதும் படம் எடுத்த மாதிரி தெரியலே…”
“சீக்கிரம் எடுத்திடுவேன்” அவமானங்கள் நிரஞ்சனுக்கு புதிதல்ல..
“எங்க ! அவன்அவன் நெட்லயே படம் ரிலீஸ் பண்ணுறான்..நீ என்னடானா ஆளே மாறிபோய் இப்படி சுத்திக்கிட்டிருக்க..நல்ல இருக்கேன்னு பொய் சொல்லாத..பாத்தாலே தெரியுது..எப்படி இருக்கணு..அப்பவே தெரியும் எனக்கு..
கதை யாரு வேணும்னாலும் சொல்லலாம்…படம் எடுக்கிறதெல்லாம்…..ம்ஹூம்..
ஒழுங்கா படிசிருந்தினா ஈசியா ஐ.டி வேலையாவது கிடைச்சிருக்கும்..என்ன பார்த்தியா…”
காரின் ஹாரன் மீண்டும் ஒலித்ததும் பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு அந்த புதியவன் காரை நோக்கி ஓடினான்.
கலங்கிய கண்களுடன் நின்றுக் கொண்டிருந்த நிரஞ்சனை ஆசுவாச படுத்த முயற்சித்தார் அந்தகடைக்காரர்
“நீ ஏன் தம்பி கலங்குற..நிச்சயம் நீ படம் பன்னிருவ. நீ யாரையும் ஏமாத்துல..சொந்த திறமைய வச்சு முன்னுக்கு வர நினைக்குற..கொஞ்ச நாள் கஷ்டப்பட்டு உழைச்சா எல்லாம் சரியாகிடும் “
தான் பொய் சொல்கிறோம் என்பது அவருக்கு தெரியும். அங்கு நடந்த சம்பாஷனைகளைக் கொண்டு நிரஞ்சனின் நிலையை ஒருவாறு யூகித்துக்கொண்ட அவர் அவனை சமாதானம் செய்வதற்காகவே அவ்வாறு கூறினார். அவரும் பல வருடமாக யாரையும் ஏமாற்றாமல் தான் உழைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஏனோ முன்னேற முடியவில்லை..
“என் கிட்ட நல்ல நல்ல திரைக்கதைகளெல்லாம் இருக்கு..நிச்சயம் படம் பண்ணிருவேன்” என்றவாறே தைத்த செருப்பை வாங்கிகொண்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்.
நிரஞ்சன் தொலைவில் ஒரு புள்ளியாக மறையும்வரை அவனை பார்த்துக்கொண்டிருந்தார். அவரை அறியாமலேயே அவர் கண்களில் நீர் பெருகியது.
வேகமாக அந்த ஓலை குடிசையினுள் ஓடிய அவர் அங்கிருந்த அந்த பழைய பெட்டியை திறந்தார். அதில் கட்டு கட்டாக காகிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் சில செருப்பு தைக்கும் ஊசிகளும், சில கிழிந்த துணிகளும் கிடந்தன. அந்த காகிதங்களை கையில் ஏந்தி, தன் கண்ணீர் துளிகள் காகிதத்தை நனைக்க, படிக்க தொடங்கினார். இதுவரை பல முறை படித்திருப்பார். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மனதில் ஏதோ ஓர் பாரம் அவரை அழுத்திடும். பல வருடத்திற்குமுன் அவர் எழுதிய திரைக்கதைகள்தான் அவை….
அவர் கண்களில் கண்ணீர் வடிந்துக்கொண்டிருந்தது. நிரஞ்சனின் வார்த்தைகள் காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது…
“என் கிட்ட நல்ல நல்ல திரைக்கதைகளெல்லாம் இருக்கு..நிச்சயம் படம் பண்ணிருவேன்”
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2
முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1
சிறையிலிருந்து தப்பிக்கும் ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ-வை FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன் துரத்துகிறார். அவர் கம்பெனியின் ஆள். ஸ்கோஃபீல்டையும், லிங்கனையும், மற்ற ஆறு பேரையும் கொல்வதே அவரது நோக்கம். இன்னொரு புறம் சிறை அதிகாரி பிராட் பெல்லிக் துரத்துகிறார். ஒவ்வொருவரும் தத்தம் போக்கில் பயணிக்கின்றனர். அவர்களை பிடிக்க முடியாததால் பிராட் பெல்லிக்கிற்கு வேலை போகிறது. ஸ்கோஃபீல்டையும் அவன் அண்ணனையும் பிடித்துக்கொடுத்தால், பல கோடி பரிசுதொகை கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவிக்கிறது. அந்த பரிசு தொகைக்காக பெல்லிக் தன்னிச்சையாக களத்தில் இறங்குகிறார். ஸ்கோஃபீல்ட் பனாமாவிற்கு தப்பித்து செல்கிறான். அங்கே ஒரு கொலை வழக்கில், அவனை பனாமா அரசு கைது செய்கிறது. ‘சோனா’ எனும் மிக ஆபத்தான பனாமா சிறையில் அவன் அடைக்கப்படுகிறான். . அதே சிறையில், வெவ்வேறு காரணங்களுக்காக பெல்லிக்கும், டி-பேகும், அலெக்சான்டர் மஹோனும் அடைக்கப்படுகிறார்கள். இத்துடன் இரண்டாவது சீசன் முடிகிறது.
ஸ்கோஃபீல்டின் காதலியையும், அவன் அண்ணன் மகனையும் கம்பெனி ஆட்கள் கடத்தி விடுகிறார்கள். சோனா சிறையில் இருக்கும் ஜேம்ஸ் என்பவனை தன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி ஸ்கோஃபீல்ட் தப்பிக்க வைக்க வேண்டும், இல்லையேல் அவன் காதலியும் அவன் அண்ணன் மகனும் கொல்லப்படுவார்கள் என்று கம்பெனி ஆட்கள் மிரட்டுகிறார்கள். யாராலும் தப்பிக்க முடியாத பனாமா சிறையில் இருந்து ஜேம்ஸூடன் தப்பிக்க மைக்கேல் ஸ்கோஃபீல்ட் முடிவு செய்கிறான்.. அலெக்சான்டர் மஹோனும் உடன் இணைந்துகொள்கிறார். ஆனால் அது ஃபாக்ஸ் ரிவர் போல நாகரிகமான சிறை அன்று. சோனாவில் தினமும் யாராவது இரண்டு கைதிகளுக்கிடையே மல்யுத்த சண்டை நடக்கும். அதில் ஒருவர்தான் உயிரோடு தப்பிக்க முடியும். அத்தகைய சண்டைகளில் ஸ்கோஃபீல்டையும் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஒருவழியாக ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ வெற்றிபெறுகிறது.
ஆனால் கதை முடியவில்லை. நான்காவது சீசனில் புதிய கதை ஒன்று ஆரம்பிக்கிறது. கம்பெனியின் ரகசியங்கள் அடங்கிய ‘ஸ்கைலா’ எனப்படும் ஒரு ஹார்ட்டிஸ்கை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஸ்கோஃபீல்டிடம் வருகிறது. மகோன், பெல்லிக் எல்லாம் மனம்திருந்தி ஸ்கோஃபீல்டுடன் இணைந்துகொள்கிறார்கள். ஆனால் அந்த ஹார்ட் டிஸ்க்கில் கம்பெனியின் ரகசியங்கள் இல்லை, வேறு சில முக்கிய தகவல்கள் இருக்கின்றன என்ற உண்மை பின்தான் தெரிகிறது. கெட்டவர்கள் நல்லவர்களாக மாறுகிறார்கள், சில நல்லவர்கள் கெட்டவர்களாகிறார்கள். ஏராளமான திருப்புமுனைகளை கொண்ட இந்த சீஸனில் கடைசியில் யார் யாரை வெற்றிக்கொள்கிறார்கள் என்பதே கதை.
முதல் இரண்டு சீசன்களில் இருந்து சுவாரஸ்யம் அடுத்த இரண்டு சீசன்களில் கொஞ்சம் குறைந்திருக்கும். ஒரு புத்திசாலியான கதாநாயகனுக்கு தொடர்ந்து பிரச்சனை வந்துக் கொண்டே இருக்கிறது, அவன் அவற்றை எப்படி வெற்றி கொள்கிறான் என்ற ஒன்லைனை கொண்டே நான்கு சீஸன்களும் டெவலப் செய்யப்பட்டிருக்கும். இந்த குறிப்பிட்ட ஒன்லைனை வைத்துக்கொண்டே திரைக்கதை ஆசிரியர்கள் கதையை வளர்ப்பதால் கதையில் தளர்வு ஏற்படுகிறது.
ஹீரோ எப்படி சிறையிலிருந்து தப்பிக்கப்போகிறான் என்ற கேள்வியே முதல் சீஸனில் சுவாரஸ்யத்தை கூட்டியது. ஆனால் மூணாவது சீஸனில் அந்த கேள்வி எடுப்படவில்லை. ஏனெனில், ஹீரோவின் புத்திசாலித்தனத்திற்கு மூன்றாவது சீஸனில் வேலையில்லாமல் போவதால், சுவாரஸ்யமும் குறைகிறது. மேலும், கதையின் சுவாரஸ்யத்தை கூட்ட ஏராளமான கிளைக்கதைகளையும், ட்விஸ்ட்களையும் வைத்திருப்பார்கள். ஆனால் சில இடங்களில் வேண்டுமென்றே திணிக்கபட்ட டிவிஸ்ட்கள் நம்மை முகம் சுழிக்க வைக்கின்றன.
முந்தைய கட்டுரையில் குறிப்பட்டது போல, ப்ரிசன் ப்ரேக்கில் தேவையில்லாத கதாபாத்திரங்கள் என்று எதுவும் வராது. அது கதையின் பலம். முதல் சீஸனில், மைக்கேல் சிறையில் இருக்கும் போது ஒரு சைக்கோ அறிமுகமாவான். அவன் மைக்கலின் உடம்பில் இருக்கும் டாட்டூக்களில் ஏதோ ரகசியம் ஒளிந்திருப்பதை கண்டுகொள்வான். அந்த டாட்டூக்ளை மனதில் பதியவைத்துக் கொள்வான். பின் சில பிரச்சனைகளால் அவனை மீண்டும் சைக்கோ வார்டிற்கே அனுப்பிவிடுவார்கள். ஒருகட்டத்தில், மைக்கிலின் உடம்பிலிருந்த டாட்டூவின் ஒரு பகுதி அழிந்துவிடும். இப்போது மைக்கலுக்கு உதவ மீண்டும் அந்த சைக்கோ பாத்திரம் அறிமுகமாகும். ஒரு கதாபாத்திரத்தை ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிட்டு, பின் நமக்கு தேவையான இடங்களில் அந்த பாத்திரத்தை பயன்ப்படுத்திக்கொள்வது ஒரு சிறப்பான உத்தி.
ப்ரிசன் ப்ரேக்கில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விஷயம் கதாபாத்திரங்களின் transformation. பிராட் பெல்லிக் என்ற சிறை காவலர் இருக்கிறார்.
முதல் சீஸனில் மிக கொடுமைக்கார சிறை காவலராக வலம் வருகிறார். ஊழல் செய்கிறார். எல்லோரிடமும் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்கிறார். பனாமா ஜெயிலில் அவரை கொடுமைப்படுத்துகிறார்கள். அவரால் யாரையும் எதிர்த்து போராட முடியவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக அவரிடம் மனமாற்றம் நிகழ்கிறது. நான்காவது சீஸனில் நல்லவராகிறார். இதுபோல், ஒரு கதாபாத்திரத்திடம் மனமாற்றம் நிகழ்வதற்க்கு வழுவான காரணத்தை காண்பிக்கவேண்டியது அவசியம்.
அடுத்த முக்கிய கதாபாத்த்திரம் FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன்.
அடிப்படையில் இவர் நல்லவர். மிகவும் புத்திசாலி. ஆனால் கம்பெனிக்காக வேலை செய்யவில்லையெனில் தன் குடும்பத்திற்கு ஆபத்தென்பதால் கம்பெனியுடன் கைகோற்க்கிறார். ஸ்கோஃபீல்ட்டும் தன்னைபோல் புத்திசாலியாக இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே அவனை வெறுக்கிறார். ஒருகட்டத்தில், தான் விசுவாசமாக இருந்த கம்பெனி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்பதை கண்டுகொண்டபின் அவர் ஈகோ மடிகிறது. ஸ்கோஃபீல்ட்டுடன் இணைகிறார். (அண்மையில் வெளியான ட்ரூ டிடெக்டிவ் சீரியலின் கதாநாயகன் ரஸ்ட் கோல் கதாபாத்திரத்திடம் மஹோனின் தாக்கம் நிறைய இருப்பதை பார்க்கலாம். இருவரும் தங்களுக்குள் ஒரு தனி உலகை உருவாக்கிக்கொண்டு வாழ்பவர்கள். இந்த இரு தொடர்களையும் பார்ப்பதன் மூலம், ஒரு கதாபாத்திரத்தை தழுவி எப்படி இன்னொரு கதாபாத்திரத்தை உருவாக்குவது என்பதை புரிந்து கொள்ள முடியும். ட்ரூ டிடெக்டிவ், இன்னும் இரண்டு மூன்று சீஸன்கள் பாக்கி இருப்பதாக கேள்வி. அவை வெளியான பின் ட்ரூ டிடெக்டிவ் பற்றி பேசலாம்)
மிகமிக சுவாரஸ்யமான கதாபாத்திரம் டி-பேக் (எ) தியோடர் பேக்வெல் கதாபாத்திரம். கடைசி வரை கெட்டவனாகவே இருக்கும் ஒரு கதாபாத்திரம். கொலைகாரன், காமுகன், துரோகி, பச்சோந்தி என பல முகங்கள் கொண்ட பாத்திரம்தான் டி-பேக். ஆனால் இந்த கதாபாத்திரம் மீது இறக்கம் வருமே ஒழிய, கோபம் வராது. அந்த வகையிலேயே அதை உருவாக்கியிருப்பார்கள். தன்னுடைய கெட்ட முகத்தை தொலைத்துவிட்டு, நல்ல முகத்தை மாட்டிக்கொள்ள வேண்டும் என முயன்று முயன்று தோற்று, இறுதியில் கெட்டவனாகவே இருந்துவிடும் கதாபாத்திரம் இது.
ப்ரிசன் ப்ரேக்கின் மிகபெரிய பலம் அதன் பின்னணி இசை. கதையில் சஸ்பென்ஸை சஸ்டைன் செய்வதில் மியூசிக் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஜானர் இசைகள் மாறிக்கொண்டே இருப்பது கூடுதல் சிறப்பு.
ரொமான்ஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், டிராமா, சென்டிமெண்ட் ஆகியவற்றின் கலவையே ப்ரிசன் ப்ரேக். அதன் மேக்கிங்கும் குறைகளுக்கிடமின்றியே அமைந்திருக்கும். படங்களை பார்த்து ஃபிலிம்மேக்கிங்கை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ப்ரிசன் ப்ரேக், ஏராளமான விஷயங்களை கற்றுத்தரும்.