The Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

The Innocent- ஹார்லான் கொபன் எழுதிய ஆங்கில நாவல். ஒரியோல் பாவ்லோ இயக்கத்தில் ஸ்பானிஷ் தொடராக வெளியாகி உள்ளது. நாவல் என்ற அளவிலேயே இது மிகவும் சுவாரஸ்யமான கதை. கதையின் நாயகன், மேட் ஹண்ட்டர் கல்லூரி நாட்களில் ஒரு பார்ட்டிக்கு செல்கிறான். அங்கே நிகழும் ஒரு கைகலப்பில், எதிர்பாரதவிதமாக மேட் ஹண்ட்டர் தாக்கி ஒருவன் இறந்து போய் விடுகிறான். மேட் ஹண்டர் சிறைக்கு செல்கிறான். சில ஆண்டுகள் கழித்து, அவன் விடுலையாகி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதே வேளையில் தேவாலய பள்ளியில் பணிபுரியும் கன்னியாஸ்திரி ஆசிரியர் ஒருவர் தன் படுக்கையில் மூச்சு பேச்சற்று கிடக்கிறாள். அவளுக்கு  CPR செய்யும் போது அந்த கன்னியாஸ்திரி செயற்கை மார்பகம் பொருத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் தலைமை கன்னியாஸ்திரி. அவர் இதைப் பற்றி அந்த பள்ளியின் முன்னாள் மாணவியும், கொலைக்குற்ற விசாரணை அதிகாரியுமான லாரன் ம்யூசிடம் சொல்கிறார். இந்த இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே நாவல். 

ஆங்கில நாவல், ஸ்பானிஷ் இணையத்தொடராக மாறும் போது கதாபாத்திரங்களின் பெயர்களும் அந்த மொழிக்கேற்ப மாறுகிறது.  மாட் ஹண்ட்டர் என்ற பெயர் மேத்தியோ விதல் என்றாகிறது. லாரன் ம்யூஸ், லோரேனா ஒர்டிஸ் என்றாகிறது. நாவலாகவே விறுவிறுப்பான திரைக்கதையாக இருக்கும் இந்த கதையை, கதாப்பாத்திரங்களின் பெயரை மட்டும் மாற்றி ஸ்பானிஷ் தொடராக எடுத்துவிட்டிருந்தால் கூட சுவாரஸ்யமாக தான் இருந்திருக்கும். ஆனால் மூன்று திரைக்கதையாசிரியர்கள் இணைந்து ஒரு நல்ல நாவலை மிகமிக நல்ல திரைக்கதையாக மாற்றுகிறார்கள். எந்தெந்த மாற்றங்கள் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது?

எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணைய தொடரின் முதல் அத்தியாயம் முழுவதும் நாயகன் மேத்தியோ விதாலைப் பற்றியது.  மேத்தியோ விதாலின் கதை நேர்கோட்டில் நகர்கிறது. அவன் அண்ணனோடு ஒரு பார்ட்டிக்கு செல்கிறான். அங்கே அவன் தாக்கி ஒருவன் இறந்து போக அவன் ஜெயிலுக்கு போக வேண்டியதாகிறது. பின் ஜெயில் வாழ்க்கை காட்டப்படுகிறது. இந்த ஜெயில் சம்பவங்கள் நாவலில் இல்லை. அவன் விடுதலை ஆகி வந்து ஒலிவியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்கிறான். ஒரு நாள் ஒலிவியாவின் மூலம் அவனுக்கு மீண்டும் பிரச்சனை வருகிறது. அலுவலக வேலையாக வெளியூர் செல்வதாக சொல்லிச் செல்லும் ஒலிவியா பொய் சொல்லியிருப்பது நாயகனுக்கு தெரிகிறது. அவள் ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று குழம்பும் அவன், தனியார் துப்பறியம் நிபுணியான ஜோயியை அணுகுகிறான். அவளுக்கு ஹாக்கிங்கும் தெரிந்திருக்கிறது. அவள் மூலம் தான் தன் மனைவி மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கியிருப்பது அவனுக்கு தெரிகிறது. அவனையும் சிலர் பின்தொடர்கிறார்கள். மிகவும் விறுவிறுப்பான ஒரு புள்ளியில் இந்த எபிசோட் முடிகிறது.     

ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது தேவையில்லாத பாத்திரங்களை நீக்கிவிட வேண்டும் என்பதை முந்தைய கட்டுரைகளில் பேசி இருக்கிறோம். நாவலில் நாயகன் தன் நண்பனுடன் பார்ட்டிக்கு போகிறான் என்று கதை தொடங்குகிறது. பின்பு அவன் ஜெயிலுக்கு போய் திரும்பி வந்ததும் அவனுடைய அண்ணன் உதவுகிறான் என்பதும், அவனுக்கு சகோதரிகளும் இருக்கிறார்கள் என்பதும் செய்திகளாக சொல்லப்படுகிறதே ஒழிய காட்சிகளாக அல்ல. பின் ஒரு நாள் அண்ணன் இறந்து போகிறான் என்பது செய்தியாக மட்டுமே சொல்லப்படுகிறது.  ஆனால் திரைக்கதையில் அண்ணனோடு தான் நாயகன் பார்ட்டிக்கு செல்கிறான் என ஆரம்பத்திலியே அண்ணன் பாத்திரத்தை அறிமுகம் செய்கிறார்கள். மேலும் அவன் தன் தம்பியை பாதுகாக்கும் அண்ணனாக இருக்கிறான் என காண்பித்து அவனை கவனிக்கத் தகுந்த கதாபாத்திரமாக மாற்றி இருக்கிறார்கள். இப்படி தேவையில்லாத பாத்திரங்களை நீக்குவதும், நாவலில் வரும் வெவ்வேறு கதாப்பாத்திரங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட முக்கியத்த்துவதை படத்தில் ஒரே பாத்திரத்திற்கு கொடுத்துவிடுவதும் சிறப்பான உத்தி.

அடுத்து ஒரு கதாப்பாத்திரத்தின் செய்கைகளுக்கு நியாயமான காரணங்கள் இருத்தல் வேண்டும். அதை வசனத்தின் மூலம் கூட நம்மால் சொல்லிவிட முடியும். உதாரணமாக, ஜோயி பாத்திரம், நாவலில் ஹீரோவிற்கு உதவுவதற்கு பெரிய காரணங்கள் இல்லை. ஒரு துப்பறியும் பெண்மணியாக, சன்மானத்திற்கு வேலை செய்கிறாள். ஆனால் அவனுக்காக எவ்வளவு பெரிய அபாயத்தையும்  சந்திக்க தயாராக இருக்கிறாள். நாவலை வாசிக்கும் போது இது நெருடலாக கூட இருக்கலாம். அவள் ஏன் அவ்வளவு உதவிகளை அவனுக்கு செய்ய வேண்டும்! ஆனால் திரைக்கதையில் அதற்கான காரணத்தை அடிக்கோடிட்டு காண்பிக்கிறார்கள். ‘I owe your brother’ என்கிறாள். ஹீரோவின் அண்ணன் அவளுக்கு செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக தான் அவள் ஹீரோவிற்கு பக்கபலமாக இருக்கிறாள் எனும் போது கதாப்பாத்திரத்தின் செய்கையின் மீது நம்பகத்தன்மை கூடுகிறது. இங்கே இது ஒரே ஒரு வசனத்தின் மூலம் சாத்தியமாகி இருக்கிறது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். 

இரண்டாவது எபிசோட் முழுக்க லோரேனா ஒர்டிஸ் பற்றியது. ஒரு கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொள்கிறாள். அந்த வழக்கு லோரேனாவிடம் வருகிறது. உடற்கூராய்வில் அந்த கன்னியாஸ்திரி செயற்கை மார்பகம் பொருத்தி இருப்பது தெரிகிறது. மேலும் அவள் இறப்பதற்கு முன்பு உடலுறவு கொண்டிருக்கிறாள் என்றும் தெரிகிறது. விசாரணையில் அந்த கன்னியாஸ்திரி இறந்த இரவில் அவள் அறைக்குள் யாரோ ஒரு பெண்மணி சென்றதை கவனித்ததாக அந்தப் பள்ளி விடுதியின் மாணவி ஒருத்தி சொல்கிறாள். இதெல்லாம் லோரேனாவிற்கு கன்னியாஸ்த்திரியின் மீதும் அவளது மரணத்தின் மீது வலுவான சந்தேகம் வருவதற்கு  காரணமாக அமைகிறது. அதனாலேயே அவள் வழக்கில் இன்னும் ஆர்வமாக இறங்குகிறாள். ஆனால் இந்த அழுத்தமான காரணங்கள் நாவலில் இல்லை. மேலும் திரைக்கதையில் அவளே இறங்கி எல்லாவற்றையும் துப்பறிகிறாள். நாவலில் சில விஷயங்கள் அவளுக்கு செய்தியாக சொல்லப்படுகிறது. உதாரணமாக, நாவலில், செயற்கை மார்பகத்தில் இருந்த சீரியல் நம்பரை கொண்டு அது எந்த நிறுவனத்துடையது என்பதை விசாரித்துவிட்டதாக லோரேனாவின் சக அதிகாரி சொல்கிறான். அந்த நிறுவனத்திடம் பேசிவிட்டதாகவும் சொல்கிறான். பின்பு அவள் அந்த நிறுவனத்தை தேடிச் செல்கிறாள். திரைக்கதையில் இப்படி கதையை சுற்றி வளைப்பது சிறப்பான உத்தி அல்ல. நேரடியாக நம்முடைய பிரதான கதாப்பாத்திரமே முக்கியமான வேலைகளை செய்ய வேண்டும். அதுவே நல்ல உத்தி (The silence of the white city கட்டுரையில் இதைப் பற்றி விவாதித்து இருக்கிறோம்)

நாவலில் மாட் ஹண்ட்டரின் அண்ணி வீட்டருகே அவனுடைய பள்ளிக்கால நண்பன் ஹுகோ வசிக்கிறான். அவன் ஒரு போலீஸ் அதிகாரி. அவன் மாட்டை காணும் போதெல்லாம், ‘முன்னாள் குற்றவாளி’ என்று சொல்லி சொல்லி வம்பிழுக்கிறான். மேட்டை பற்றி லாரனிடம் (லோரேனா) தவறாக சொல்பவனாகவும் இருக்கிறான். ஆனால் அவன் அப்படி நடந்து கொள்வதற்கு நியாயமான காரணங்கள் இல்லை. தன் சமூகத்தை காக்க நினைக்கும் சாமானியன் அவன், அதனால் தான் அவன் முன்னாள் குற்றவாளியான மாட் மீது சந்தேகப் படுகிறான் என்று நாவலாசிரியர் வர்ணிக்கிறார். ஆனால் இந்த பாத்திரத்தை திரைக்கதையில் வேறு மாதிரி வடிவமைத்து இருக்கிறார்கள். தொடக்கத்தில் பார்ட்டியில் மாட் மற்றும் அவன் அண்ணனை முதலில் சண்டைக்கு இழுக்கும் பாத்திரம் ஹுகோ தான். அவனால் தான் மாட் ஜெயிலுக்கு போகிறான். இதன் மூலம் இளம் வயதிலிருந்தே அவனுக்கு மாட்  மீது வன்மம் இருக்கிறது என்பதை உணர்த்தி விடுகிறார்கள். இப்போது மாட் மீண்டும் அந்த ஏரியாவிற்கு வரும் போது, அவன் மாட்டை சிக்க வைக்க எல்லா வேலைகளையும் செய்கிறான். இதை மாட்டால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அவனைப் போட்டு அடிக்கிறான். இதனால் கோபமடையும் ஹுகோ லோரேனாவிடம்  மேட் தான் குற்றவாளியாக இருக்கக் கூடும் என்று சொல்கிறான். இப்போது ஹுகோவின் செயலுக்கு நியாயமான காரணம் கிடைத்துவிட்டது அல்லவா! 

ஒரு வகையில் மாட் மற்றும் லோரேனாவின் கதை ஹீரோ ஆண்டி ஹீரோ கதை போல தான். ஒரு விசாரணை அதிகாரியாக, லோரேனாவை பொருத்தவரை, மாட் சந்தேகத்துக்குறியவன். ஒரு அப்பாவியாக, மாட்டை பொறுத்தவரை லோரேனா அவனை அடக்க நினைக்கும் அதிகாரம். இதுபோன்ற கதைகளில், எதிரெதிர் பாத்திரங்கள் குறைந்தது இரண்டு மூன்று முறையாவது சந்தித்துக் கொள்ள வேண்டும், அப்படி சந்திக்கும் இடம் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும் என்று ஆக்சன் திரைக்கதைகளைப் பற்றி பேசும் போது திரைக்கதையாசிரியர் வில்லியம் மார்ட்டல் சொல்கிறார். இங்கே இரண்டாவது எபிசோடில் முடிவில் தான் முதன்முதலில்  மாட் லோரேனாவை எதிர்கொள்கிறான். இந்த confrontation மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் கன்னியாஸ்திரியின் மரணத்தை விசாரிக்கும் லோரேனாவுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. அது அவளை மாட்டின் அண்ணி வீட்டிற்கு இட்டுச்  செல்கிறது. அவள் மாட்டின் அண்ணியிடம் விசாரிக்கிறாள். ஆனால் பெரிதாக எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. அவள் வீட்டை விட்டு வெளியே வரும் போது, அவளை எதிர்கொள்ளும் ஹுகோ, இவளுடைய கொழுந்தன் தான் மாட் எனும் முன்னாள் குற்றவாளி என்றெல்லாம் சொல்கிறான். நாவலாக மட்டுமே இத்தகைய உத்திகள் எடுபடும். 

திரைக்கதையில் லோரேனா மாட்டின் அண்ணி வீட்டிற்கு வரும் போது  மாட் அங்கு தான் இருக்கிறான். லோரேனா அவனையே நேரடியாக விசாரிக்கிறான். கதையின் ஓட்டத்தில், மாட் உண்மையை மறைத்திருக்கிறான் என்பதை  கண்டு கொள்ளும் போது அவளுக்கு அவன் மீது சந்தேகம் வலுக்கிறது. அவனை எப்படியாவது குற்றவாளி என்று நிரூபித்துவிட வேண்டும் என்று அவள் முயல்கிறாள். ஆனால் அவன் சிக்காமல் தப்பித்துக் கொள்கிறான். அல்லது அவனை சிக்க வைக்கும் அளவிற்கு அவளுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் போகிறது. இதெல்லாம் திரைக்கதைக்கு சுவாரஸ்யமான cat and mouse கோணத்தை கொடுக்கிறது. 

நாவலில் ஒரு கட்டத்தில் FBI அதிகாரி ஆதாம் யேட்ஸ் அறிமுகமாகிறார். (நாவல் அமெரிக்காவில் நிகழ்வதால் அவர் FBI அதிகாரி. இணையத் தொடர் ஸ்பெயினில் நிகழ்வதால் அவர் Special Crime Unit-ஐ சேர்ந்த அதிகாரியாக வருகிறார்). அவர் அறிமுகம் ஆகும் போதே, அவருடைய எண்ண ஓட்டங்களில் இருக்கும் சலனம் வெளிப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்த பெயர், புகழ், குடும்பம் எல்லாம் சிதைந்து போய் விடுமோ என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றுகிறது. இங்கிருந்தே அந்த கதாப்பாத்திரத்தின் மீது சந்தேகம் வர தொடங்குகிறது. இப்படி உன்மையை முன்கூட்டியே போட்டு உடைப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது? அப்படி முன் கூட்டியே ஒருவன் பசும்தோள் போற்றிய புலி என்று காண்பிக்கிறோம் என்றால், அவனால் மற்றவர்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்துவிடுமா என்ற கேள்வி எழும்படி கதையை நகர்த்த வேண்டும். நாவல் அப்படி அமைந்திருக்கவில்லை.  

ஆனால் திரைக்கதையில் ஒரு புத்திசாலித்தனமான மாற்றத்தை செய்திருக்கிறார்கள். ஆரமப்த்திலிருந்தே ஆதாம் யேட்ஸ் பாத்திரத்தை (திரைக்கதையில் அவர் பெயர் தியோ) நியூட்ரலான பாத்திரமாக காண்பிக்கிறார்கள். அவருடைய உண்மை முகத்தை எதிர்பாராத நேரத்தில் ஒலிவியா கதாப்பாத்திரத்தின் மூலம் தெரியப்படுத்தி இருப்பார்கள். அது வெளிப்படும் இடமும் அருமையான ‘ட்விஸ்ட்’-ஆக அமைந்திருக்கும். இதெல்லாம் தான் திரைக்கதையாசிரியர்களின் மெனக்கெடல்.

மேலும் நாவலில் ஆதாம் கதாப்பாத்திரம் வந்ததுமே, லாரன் (லோரேனா) அவரோடு இணைந்து கொள்கிறாள். அவரோடு  சேர்ந்து துப்பறிகிறாள். ஒரு கட்டத்தில் அவர் அவளை வெளியேற்றப்  பார்க்கிறார். அந்த  வழக்கில் பணியாற்றினால் போதும் என்பதால் அவரது நிபந்தனைக்கு  கட்டுப்பட்டு தன் பணியை தொடர்கிறாள். நாவலில் அவள் கதாப்பாத்திரம் submissive-ஆக வெளிப்படுகிறது. ஆனால் இணையத்தொடரில் அப்படி இல்லை. கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்று கண்டுகொண்டதும், அவள் அந்த வழக்கிற்காகவே தன்னை அற்பணிக்கிறாள். அந்த வழக்கு Special Crime Unit-யிடம் சென்றாலும் அவள் விட்டுக் கொடுப்பதாக இல்லை. தன் மேலதிகாரியை எதிர்த்துக் கொண்டு தன்னிச்சையாக வழக்கை துப்பறிக்கிறாள். இங்கே ஆதாம் பாத்திரம் லொரெனாவுக்கு ஒரு external conflict-ஆக விளங்குகிறது. அவரை ஜெயிப்பது அவளுடைய நோக்கமாகிறது. மேலும் கதையில் அவளுக்கு  internal conflict-டும் இருக்கிறது. அவளுடைய சிறுவயதிலேயே அவள் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். இந்த பாதிப்பு அவளை உருத்திக் கொண்டே இருக்கிறது. (ஆனால் திரைக்கதையை விட நாவலில் இந்த அகப்போராட்டம் நிறைவையான புள்ளியை எட்டுகிறது). இது போல நம் பிரதான பாத்திரத்திற்கு அகப் போராட்டமும், புறப் பிரச்சனையும் இருக்கும் போது திரைக்கதை மேலும் சுவாரஸ்யமாகிறது. 

திரைக்கதையில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டியது அவசியம். நாம் முந்தைய கட்டுரைகளில் பேசியது போல, கதை சொல்லலில் நாவலுக்கென்று ஒரு சுதந்திரம் இருக்கிறது. நாம் எவ்வளவு பாத்திரங்களையும் நாவலில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் திரைக்கதையில் பாத்திரங்களின் இருப்பை, அவர்கள் கதைக்கு என்ன பங்களிப்பு செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி தான் முடிவு செய்ய போகிறது. நாவலில், சோனியா என்றொரு முக்கிய பாத்திரம்  உண்டு. நாயகனால் கொல்லப்படும் இளைஞனின் அம்மா அவள். அவளுக்கும் நாயகனுக்கும் ஒரு எமோஷனல் உறவு உருவாகிறது. ஆனால் அந்த கதை நாவலின் மூலக்கதையிலிருந்து விலகி நிற்கிறது. திரைக்கதையில் அவள் ஒரு வங்கி அதிகாரியாக வருகிறாள். தன் மனைவி எங்கிருக்கிறான் என்பதை கண்டுகொள்ள, நாயகன் அவளுடைய க்ரெடிட் கார்டை டிராக் செய்யும் படி சோனியாவிடம் கூறுகிறான். இப்படி  திரைக்கதையில் ஒரு சிறு மாற்றத்தை செய்து அவளையும் ஹீரோவிற்கு உதவும் பாதத்திரமாக மாற்றி இருக்கிறார்கள். ஹீரோ ஒரு அப்பாவி என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவளாக அவள் இருக்கிறாள். நாவலை விட, திரைக்கதையில் நாயகனுக்கும் அவனுக்குமான உறவில் முழுமையை காண முடிகிறது. 

திரைக்கதையில் இன்னும் பல குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் உண்டு. நாவலில், கண்ணியாஸ்த்திரியின் மரணத்தை விசாரிக்கும் FBI அதிகாரிகளின் கவனம் ஒரு கட்டத்தில் மாட்டின் பக்கம் திரும்புகிறது. அதற்கு பெரிய காரணங்கள் இல்லை. ஆனால் திரைக்கதையில், மாட் இருந்த ஜெயிலில் தான் ஸ்பெசல் க்ரைம் யூனிட் தேடிக்கொண்டிருக்கும் அனிபால் இருந்தான், எனவே இருவருக்கும் ஏதோ தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கதையை அமைத்து இரண்டு கதைகளையும் நம்பும்படி இணைத்திருக்கிறார்கள். 

மேலும் திரைக்கதையில் மாட்டை ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்திற்கு இடமானவனாகவே சித்தரித்த்து இருக்கிறார்கள். அவன் ஏதோ ஒரு உண்மையை மறைத்து கொண்டே இருக்கிறான். இந்த சித்தரிப்பிற்கு உதவும் வகையில் அவனுடைய சிறை வாழ்க்கையை காண்பித்து, அவன் சிறையில் ஒருவனை கொன்றிருக்கிறான் என்ற கிளைக்கதையை வைத்து, ஒருவேளை இவன் தான் எல்லாவற்றையும் செய்கிறானோ என்ற கேள்வியை உருவாக்குகிறார்கள். நாவல் அப்படி எழுதப்பட்டிருக்கவில்லை. த்ரில்லர் கதைகளில், யார் குற்றவாளியாக இருக்கக்கூடும் அல்லது எதனால் குற்றம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பன போன்ற தொடர் கேள்விகள் பார்வையாளர் மனதில் எழும் வகையில் திரைக்கதை அமைக்க வேண்டும். பார்வையாளர்களை தொடர்ந்து யூகிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே சிறப்பான உத்தி. அந்த உத்தி இந்த இணைத் தொடரில் சிறப்பாக கைகூடி இருக்கிறது.   

The Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1

The Invisible Guardian- நாவல் திரையாக்கம் கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1

Baztan Triology:  இது ஸ்பானிய எழுத்தாளர் டொலாரஸ் ருடாண்டோ (Dolores Redondo)  மூன்று பகுதிகளாக எழுதிய (அமானுஷ்ய) க்ரைம் நாவல் (ஆங்கில மொழிபெயர்ப்பு: Isabelle Kaufeler). The Invisible Guardian, The Legacy of the bones மற்றும் Offering of the storm  ஆகிய நாவல்களை அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். 

The Invisible Guardian நாவலின் கதை சுருக்கம் இது தான். அமையா சலாசார், அமெரிக்காவின் FBI-யிடம் பயிற்சி பெற்ற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். குழந்தை இல்லை என்பதே அவளுடைய பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அந்த நேரத்தில் ஊரில் இளம் பெண்கள் கொலை செய்யப்பட்டு காடு, நதி என பல இடங்களில் பிணமாக கிடைக்கிறார்கள். இந்த ஒற்றைவரி, வழக்கமான ஒரு க்ரைம் கதையாக தெரிந்தாலும், நாவலின் வர்ணனை அதை சுவாரஸ்யமான கதையாக மாற்றி இருக்கிறது. ஸ்பெயினின் பகுதிகளை அதன் இயற்கை வளங்களை விவரிக்கும் வகையில் இதன் வர்ணனை அமைந்திருக்கிறது. இந்த வர்ணனைகளே நாவலுக்கு ஒரு தனித்துவமான பிராந்திய தன்மையை கொடுக்கிறது. நாவல் சுமார் ஐநூறு பக்கங்களில் நிதானமாக நகர்கிறது. இந்த நிதானம் தான் நாவலின் பலமாகவும்  இருக்கிறது. 

ஆனால் சினிமாவில் நாவலில் இருக்கும் நிதானம் சாத்தியமில்லை. இரண்டு மணி நேரத்தில் கதையை சொல்ல வேண்டும். அதே நேரத்தில் திரைக்கதையை  தேவை இல்லாமல் துரிதப்படுத்தவும் கூடாது. ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது, தேவைக்கு அதிகமான வேகத்தை திரைக்கதையில் கொடுத்துவிடக் கூடாது என்பதை தான் நாம் கவனிக்க வேண்டும். திரைக்கதை வேகமாக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் சொல்லிட வேண்டும் என்று அடுத்தடுத்து காட்சிகளை அடிக்கிக் கொண்டு போனால், பார்வையாளர்களுக்கு திருப்தி ஏற்படாது. ஆனால், Baztan Triology-யின் திரை வடிவத்தின் முதல் பகுதியில் (The Invisible Guardian) இந்த பிரச்சனை இருக்கிறது. நிறைய விஷயங்கள் துரித கதியில் நகர்கின்றன.  நாவலின் பல கிளைக்கதைகளை திரைக்கதையில் கொண்டு வர முயற்சித்ததே அதற்கு காரணம். 

எந்தவகையான துப்பறியும் கதையாக இருந்தாலும், நாயகன் ஏதோ ஒரு உண்மையை தான் தேடிக் கொண்டு இருக்கிறான். கொலை செய்தது யார், காணாமல் போனது யார் என அந்த உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாயகன் அந்த உண்மையை கண்டடையும் பாதை எவ்வளவு சுவராஸ்யமானதாக இருக்கிறதோ அவ்வளவு சுவராஸ்யமாக (கதை) திரைக்கதை இருக்கும்.  இந்த படத்தில், அந்த பாதை பல இடங்களில் மிக பரிச்சியமான ஒன்றாக இருப்பதால் சுவராஸ்யம் குறைகிறது. அதே சமயத்தில் திரைக்கதைக்கான புத்திசாலித்தனமான மாற்றங்கள் இந்த கதையில் உண்டு.  நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் வருகிறார்கள். சில நேரங்களில் அவர்களை பற்றிய பகுதிகள் எதுவுமே நாவலை முன்னோக்கி நகர்த்துவதாக இல்லை. இதுபோன்ற ஒரு கதையை திரைக்கதையாக மாற்றும் போது முக்கியமற்ற பாத்திரங்களை நீக்கிவிட வேண்டும்.  நாவலில் நிறைய கதாப்பாத்திரங்களை சுற்றி கதை நடந்தாலும், இயன்றவரை (சினிமாவிற்கான) திரைக்கதையில் முக்கிய பாத்திரங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம். அதிகம் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட முக்கியமான தருணம் ஏதாவது நாவலில் இருந்தால் அதை திரைக்கதையில் வேறு கதாபாத்திரங்களுக்கு பொருத்த முடியுமா என்று யோசிக்கலாம். 

உதாரணமாக ஒரு காட்சி. ஆனி என்ற பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடைக்கிறாள்.  நாயகி அந்த வழக்கை விசாரிக்கிறாள். இறந்து போன ஆனியின் அரூப உருவம் நாயகியின் இரண்டாவது அக்காவின் முன்பு தோன்றி அவளை பயமுறுத்துகிறது. அதெல்லாம் கற்பனை என்று நாயகி தன் அக்காவிற்கு தைரியம் சொல்கிறாள். இது நாவல். 

படத்தில், இதை வேறுமாதிரி மாற்றி இருக்கிறார்கள். நாயகி வழக்கை விசாரித்து விட்டு வீட்டுக்கு வருகிறாள். அந்த வழக்கு அவளுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கும் அந்த இரவில், அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள். ஜன்னல் வெளியே எதர்ச்சையாக பார்க்கும் போது ஆனியின் அரூப உருவம் நாயகியை பார்த்துக் கொண்டே இருக்கிறது. நாயகி பதறியடித்துக் கொண்டு அவளை நோக்கி ஓடுகிறாள். 

அதாவது நாவலில் அக்காவிற்கு நிகழ்ந்த ஒரு முக்கிய சம்பவம் படத்தில் நாயகிக்கு நிகழ்கிறது. நம்முடைய பிரதான கதாபாத்திரத்திற்கு ஒரு பிரச்சனை வரும் போது அது பார்வையாளர்களை அதிகம் பாதிக்கிறது. படத்தில் நாயகி இரண்டாவது அக்காவிற்கு அதிக முக்கியத்துவம் இல்லை. முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு திரைக்கதையில் அவகாசமும் இல்லை. எனவே தான் இது போன்ற மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். 

நாவலிலேயே கதை சொல்லலில் குறிபிட்டு சொல்லும்படி ஒரு பிரச்சனை இருக்கிறது. கதையின் முதல் காட்சியில் ஒரு தடயம் கிடைக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் ஒரு பிஸ்கட் கிடைக்கிறது. இதற்கான விடையை நாவல் முடியும் தருவாயில் தான் நாயகி தேடுகிறாள். நாவலாகவே இருந்தாலும், க்ரைம் கதையில் இது  வாசகர்களுக்கு திருப்தி அளிக்காத ஒரு வடிவம் தான். ஒரு தடயம் கிடைக்கும் போது, அதை வைத்து தான் கதை அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். அல்லது அந்த தடயத்தை மறக்கடிக்கச் செய்யும் அளவிற்கு வேறொரு நிகழ்வு ஏதாவது நிகழ வேண்டும். நாவலாசிரியர் மிக வசதியாக அந்த தடயத்தை மறைத்துவிட்டு வேறொரு திசையில் கதையை நகர்த்துகிறார். சினிமாவில், நாவலில் இருந்த பிரச்சனை இல்லை. அந்த பிஸ்கட் கிடைத்ததுமே அதை வைத்து நாயகி என்ன செய்கிறாள் என்று நேர்கோட்டில் கதையை நகர்த்தி இருக்கிறார்கள். 

நாவலில், நாயகி ஒரு வழக்கை விசாரிக்கிறாள். பின் யாரோ ஒருவர் வேறொரு வழக்கை பற்றி சொல்கிறார். அங்கிருந்து கதை முன்னோக்கி நகர்கிறது. திரைக்கதையில் இந்த உத்தி சுவாரஸ்யத்தை தராது.  இதற்கு முன்னரே சாக்ரட் கேம்ஸ் பற்றிய கட்டுரையில் இதை விவாதித்திருக்கிறோம். ஒரு க்ரைம் திரைக்கதையில் போலீஸ் நாயகனுக்கு ஒரு வழக்கு தான் பிரதானமாக இருக்க முடியும்.  வேறு வழக்கு வந்தாலும், அது மூல வழக்கிற்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டிருப்பதாக இருக்க வேண்டும். 

ஒரு பெரிய க்ரைம் நாவல் எழுதும் போது, ஒரு கொலை வழக்கை ஹீரோ துப்பறிகிறார், வேறொரு ஊரில் வேறொரு கொலை நடக்க, அதை மற்றொரு இன்ஸ்பெக்டர் துப்பறிகிறார் என்று வைக்கலாம். இரண்டு வழக்குகளும் ஒரு கட்டத்தில் இணைகின்றன என்று நாவல் எழுதலாம். ஆனால் அதையே நாம் படமாக எழுதும் போது, படம் ஒரே ஒரு ஹீரோவைப் பற்றியது எனும் போது,  அந்த மற்றொரு வழக்கை துப்பு துலக்குவதிலும் ஹீரோவின் பங்கு அதிகம் இருப்பதாக திரைக்கதை அமைத்தல் வேண்டும். அப்போது தான் பார்வையாளர்களால் கதையை பின் தொடர முடியும். ஆனால்  ஹீரோவிற்கு முக்கியத்துவம் தருவது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு அந்த முக்கியத்துவத்தில் நம்பத்தன்மை இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது.  

நாவலில், வெவ்வேறு முக்கிய கட்டங்களில், நாயகிக்கு சில நிகழ்வுகளைப் பற்றிய செய்தி மட்டும் போனில் வருகிறது. உடனே நாயகி புறப்பட்டு செல்கிறாள். ஆனால் சினிமாவில் எல்லாவற்றையும் நாயகனே (அல்லது நாயகியே) செய்ய வேண்டி இருக்கிறது. அதன்படி இந்த படத்தில் நாயகியே நேரடியாக எல்லோரையும் விசாரிக்கிறாள். ஆனால் அவளை மட்டுமே முன்னிறுத்தும் கட்டாயத்தில் சில லாஜிக் மீறல்களை செய்திருக்கிறார்கள். 

நாவலில், ஒருவன் தற்கொலைக்கு முயல்கிறான் என்று செய்தி நாயகிக்கு வருகிறது. அவனை மருத்துவமனையில் சென்று சந்திக்கிறாள். ஆனால் படத்தில், அந்த செய்தி வந்ததுமே அவளே போய் அவனை காப்பாற்றுகிறாள். 

இங்கே நம்பகத்தன்மை இல்லாமல் போகிறதல்லவா! இது போன்ற விஷயங்களை திரைக்கதையில் தவிர்த்தல் நலம். சில இடங்களில் நம் நாயகன் பின்தங்கி இருப்பது தவறில்லை. 

பல நேரங்களில் நாம் வாசிக்கும் நாவல்கள் நமக்கு முழுவதுமாக நினைவு இருப்பதை விட, நாவல்களில் இருக்கும் சிறப்பான தருணங்களே அதிகம் நினைவில் இருக்கும். நல்ல தருணங்களின் தொகுப்பே நாவல் எனலாம். இந்த நாவலில் சில நல்ல தருணங்கள் உண்டு.

உதாரணமாக ஒரு தருணம். நாயகி க்ரைம் சீனில் பிணமாக கிடக்கும் பெண்ணை பார்க்கிறாள். அப்போது அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 

உயிரற்ற உடல் என்றாலும் அதற்கும் ஒரு ‘privacy’ இருக்கிறது. இவ்வளவு போலிஸ்காரர்களும்  பாரன்சிக் ஆட்களும் சுற்றி நின்று கொள்வது இறந்தவர்களுக்கு செய்யும் அவ மரியாதை என்று எண்ணுகிறாள். அவள் ஒரு கேதலிக் என்பதால் அப்படி நினைக்கிறாள் என்று நாவலாசிரியை குறிப்பிடுகிறாள். நாயகியின் நம்பிக்கையை, அவளின் அக உலகை வெளிப்படுத்தும்  இடம் இது. ஆனால் இந்த தருணம் படத்தில் இல்லை. இது போன்று நம் கதை மாந்தர்களின் அக உணர்வுகளை சொல்ல நாம் வசனங்களை பயன்படுத்தலாம். (True Detective போன்ற சீரிஸின் வெற்றி அதன் வசனங்கள் தான் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். ஒரு துப்பறியும் கதையாக அது மிக எளிமையான கதை தான். ஆனால் அதன் நாயகன் Rust Cohle பாத்திரத்தின் அக உணர்வும், தத்துவங்களும் வசனங்களாக வெளிப்பட்டு தான் அதை ஒரு சிறப்பான தொடராக மாற்றி இருக்கும்) 

நாவலில் ஆலோசியஸ் என்றொரு FBI அதிகாரி பாத்திரம் வருகிறது. கதை இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்போது நாயகி மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பி நிற்கும் போது, தன்னுடைய முன்னாள் அதிகாரியான ஆலோசியஸை போனில் தொடர்பு கொள்கிறாள். அவர் அவளுக்கு சில அறிவுரைகளை சொல்லி, வழக்கை வேறொரு கோணத்தில் இருந்து விசாரிக்க சொல்கிறார். (இந்த கட்டத்தை தான் The Writers Journey புத்தகத்தில் Christopher Vogler ‘Meeting the Mentor’ என்று குறிப்பிடுகிறார்)

ஆனால் இப்படி திடீரென்று திரைக்கதையின் இறுதியில் ஒரு பாத்திரத்தை அறிமுகப் படுத்தக் கூடாது. அது பார்வையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்தும்.  இந்த படத்தில், ஆலோசியஸ் ஆரம்பத்திலிருந்தே வருகிறார். நாயகி அவருடன் அவ்வப்போது போனில் பேசுவதாக திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. திரைக்கதையின் இன்னொரு சிறப்பான மாற்றம், காட்சிகளை தொகுத்த விதம்.  நாவலில் இருக்கும் ஏராளமான சீக்வன்ஸை தவிர்த்துவிட்டு திரைக்கதையை நேர்கோட்டில் அமைத்திருக்கிறார்கள். மேலும், நாவலின் இறுதியில் குற்றவாளியை வேறு ஒரு கதாப்பத்திரம் கண்டுபிடிக்கிறது. அதுவும் திடீரென்று அதுவரை மூடி இருந்த மர்மத்திரை விலகுகிறது. படத்தில் அந்த சிக்கல் இல்லை. அதில் கொஞ்சம் கொஞ்சமாக நாயகியே குற்றவாளியை நெருங்குகிறாள். இதுவே திரைக்கதைக்கான உத்தி. ஆதவாது கதை அடுத்த கட்டத்திற்கு செல்வது என்பது யதேச்சையாக நிகழ்ந்ததாக இல்லாமல் ஹீரோவின் முயற்சியில் நிகழ்வதாக திரைக்கதை அமைத்தாலே நலம். 

ஒரு காட்சியில், கொலை நடந்த இடத்தை சுற்றி விலங்கின் முடிகள் கிடைக்கிறது. அது கரடியின் முடி போல் இருப்பதை கண்டுகொள்ளும் போலீசார், கரடிகள் வசிக்காத அந்த காட்டினுள் எப்படி கரடியின் முடி வந்தது என்று யோசிக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு கிட்டும் விடை ‘பாசகாவுன்’ (Basajuan).  பாசகாவுன் என்பது ஸ்பானிய காடுகளை காக்கும் கடவுள். பார்ப்பதற்கு பிரமாண்டமான தோற்றத்தோடு வலம் வரும் ஒரு நல்ல சக்தி. 

நாவல் முழுக்க இந்த பாசகாவுன் பற்றிய நம்பிக்கை வருகிறது. பலரும் அதை பற்றி பல கதைகள் சொல்கிறார்கள். பாசகாவுன் என்று ஒரு சக்தி இல்லை அது கரடி தான் என்று  நாயகி நம்புகிறாள். ஆனால் பாசகாவுன் அவ்வளவு எளிதாக யாருக்கும் காட்சி கொடுக்காது, அது நாயகிக்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை கொடுக்கவே காட்சி அளித்திருப்பதாக மற்றவர்கள் நம்புகிறார்கள். இறுதியில் இந்த நம்பிக்கை மிக அழகான ஆர்க்காக நாவலில் முடிகிறது. 

ஆனால் படத்தில்  பாசகாவுன்  பற்றிய குறிப்பு ஒரே ஒரு வசனமாக வந்துவிட்டு போகிறது. இந்த பாசகாவுனை பற்றிய குறிப்பை நீக்கி இருந்தாலும் படத்தில் எந்த இழப்பும் இருந்திருக்காது. நாம் முன் சொன்னது போல், நாவலில் இருக்கும் எல்லா முக்கிய கதைகளை படத்தில் வைத்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இதை வைத்திருப்பதாக தோன்றுகிறது. The Invisble Guardian- ஒரு சீரியல் கில்லர் நாவலாக இருந்தாலும், இதன் கதை ஒருவகையில் நாயகியின் குடும்பத்தையே சுற்றியே நடக்கிறது என்பதே இந்த நாவலின் சிறப்பம்சம். நாவலை வாசிக்கும் போது, அதன் திரைப்பட வடிவம் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது. 

இதன் அடுத்தடுத்த பகுதிகளைப் பற்றி வரும் பகுதிகளில் பேசுவோம். 

தொடரும்…  

தொடர்புடைய கட்டுரைகள்

The Writer’s Journey- Christopher Vogler – சினிமா புத்தகங்கள்

சாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்

இது என்னுடைய மூன்று திரில்லர் கதைகளின் தொகுப்பு.

கிண்டிலில் வெளியாகி இருக்கிறது.

Aniruthan Seitha Moonru Kolaigal.jpg

புத்தகத்தை வாங்க: இங்கே சொடுக்கவும் 

நன்றி

அரவிந்த் சச்சிதானந்தம்

இலவச கிண்டில் புத்தகங்கள்

என்னுடைய எட்டு நூல்களை இன்று  (14.11.2019) மற்றும் நாளை (15.11.2019) கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Collage of Aravindh Boojks

சிறுகதைத் தொகுப்பு:
நகுலனின் நாய், நகைச்சுவைக் கதைகள்

நாவல்:
தட்பம் தவிர், ஊச்சு

குறுநாவல்:
பிறழ்ந்த இரவுகள்

திரைக்கதை கட்டுரைகள்:
கொஞ்சம் திரைக்கதை, ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி.

சிறார் நாவல்:
சித்திரமலை ரகசியம்

Have a good & versatile read

நன்றி

Click here to download

 

ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை

“As soon as you’re born they make you feel small
By giving you no time instead of it all”- John Lennon

தான் மூன்றுபேரை கொடூரமாக கொன்றுவிட்டதாக, இருபத்தி எட்டு வயது, அநிருத்தன் அண்ணா நகர் மேற்கு V5 காவல் நிலையத்தில் சரணடைந்த போது மணி இரவு 9.10. ஹெட் கான்ஸ்டபிள் கன்னியப்பன் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.  திருமங்கலம் சிக்னலில் நடந்த திடீர் மாணவப் போராட்டத்தை கலைத்து கட்டுப்படுத்த போனதால், தன்னால் வழக்கம் போல்  எட்டு மணிக்கு வீட்டுக்குக் கிளம்ப முடியவில்லை என்ற கடுப்பில், எப்படியாவது இந்தவருடம் இந்த வேலையை விட்டுப் போய் விட வேண்டும் என்ற சிந்தனையில் தன் போலிஸ் உடையை கலட்டி வைத்துவிட்டு காலையில் போட்டுவந்த மடிப்பு கலையாத சிகப்பு சட்டை நீல நிற பேண்ட்டை போட்டுக் கொண்டு அவர் ஓய்வறையில் இருந்து வெளியே வந்த போது அநிருத்தன் தலையை தொங்கப் போட்ட வாக்கில் போலிஸ் நிலையத்தின் நடு அறையில் நின்றுக் கொண்டிருந்தான்.

“யார் சார் நீங்க?” அவனுடைய நாகரிகமான உடை கன்னியப்பனின் தொனியை நிர்ணயித்தது.

பதில் சொல்லாமல் நின்றுக்கொண்டிருந்த அநிருத்தனிடம் அவர் மீண்டும் சப்தமாக கேட்டார்.

“ஏய் தம்பி! யார் நீ?”

“Till the pain is so big you feel nothing at all” அவன் பாடினான். அவருக்கு புரியவில்லை.

அவன் தன் இடது கையை உயர்த்தி மூன்று என்று காண்பித்தவாறே, தன் வலது பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மேஜை மீது வைக்கும் போதுதான் அவருக்குப் புரிந்தது. வேகமாக உள்ளே ஓடினார்.

***

ஆய்வாளர் அந்தோணிக்கு, அந்த இருபதுக்கு இருபது அறையில், மின்விசிறி வேகமாக சுற்றியும்  வியர்த்து கொண்டே இருந்தது. வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவதே உத்தமம் என்று நினைக்கும் அவருக்கு இரவு ஒரு கொலைக்காரனை விசாரிப்பதெல்லாம் கனவில் கூட நடந்து விடக்கூடாத செயல்.

“அறிவுடையான். என் யூனியன் லீடர். ரொம்ப நாளா என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருந்தான். சுட்டுட்டேன். சவுக்கார்பேட்டை போய் வாங்கி வந்த துப்பாக்கில சுட்டேன். செத்துட்டான்” அநிருத்தன் சிரித்தான்.

“அப்பறம், அந்த மேனஜர் பாவேஷ் மிஸ்ராவ கொன்னேன். அப்பறம் அந்த எச்ச ஆடிட்டர்…. மூணு பேரும் மர்கயா….” அவன் மீண்டும் சிரித்தான்.

அவன் எதுவும் விபரீதமாக செய்துவிடக் கூடாது என்பதற்காக கன்னியப்பனும், உதவி ஆய்வாளர் சதீஷ் குமாரும் அவனை கண்காணித்தவாறே அவனுக்கு பின்னே நின்றுக் கொண்டிருந்தனர்.

“கவரைபேட்டைல இருக்கு சார் என் வீடு. அங்க இருந்து அண்ணா நகர் வர எவ்ளோ நேரம் ஆகும் தெரியுமா சார்! காலைல 8.45 க்கு ப்ரான்ச்ல இருக்கணும்.  எவ்ளோ வேலை செய்றேன்.. பாராட்டக் கூட வேணாம். எப்ப பாத்தாலும் மட்டம் தட்டிக்கிட்டே…”

“போயும் போயும் வேலைல பிரச்சனைனா கொலை பண்ணுணீங்க?”

“போயும் போயும் வேலையா!  இங்க வேலை தான் சார் எல்லாருக்கும் வாழ்க்கையே. வீட்ல என் அம்மா அப்பா கூட இருக்குற நேரத்த விட ஆபிஸ்ல இருக்குற நேரம் தான் சார் அதிகம். எவ்ளோ வேலை செஞ்சாலும், இவனுங்க தலைக்கு மேல உக்காந்துகிட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருக்காங்க சார்”

கன்னியப்பன் அவனை ஆமோதிக்கும் வகையில் தலை அசைத்தவாறே அந்தோணியைப் பார்த்தார். அந்தப் பார்வை அந்தோணியையும் யாரவது சுட்டுவிட்டால் நன்றாக தான் இருக்கும் என்பது போல் இருந்தது. அந்தோணி அதை கவனிக்கவில்லை.

“ஒரு வேலையும் செய்ய மாட்டான் சார் என் மேனஜர். எங்கேயோ டெல்லில இருந்து வந்து இங்க சுரண்டி திங்குகுறான். சுரண்டி. அதுக்கு இந்த அறிவுடையான் சப்போர்ட். திருட்டு பசங்க சார் எல்லாரும். அதான் ஒண்ணா சேந்துட்டானுங்க. வேலை கொடுத்துகிட்டே இருப்பானுங்க. பண்ணாத தப்புக்கு திட்டுவாங்க. வேலையயும் செஞ்சுட்டு பேச்சும் வாங்கனும். உடம்புலாம் கூசும் சார்…

“ஒரு நாள் ஒரு RTGS  தப்பா போட்டுட்டேன் சார். காசு வேறொருத்தனுக்கு தப்பா போயிருச்சு. அத நாங்க கண்டுபுடிக்கிறதுக்குள்ள அவன் அந்த காச எடுத்துட்டான்.  இவ்ளோ வேலை கொடுத்தா ஒருத்தன் சறுக்க தான் செய்வான்,  It’s a human error. அதுக்கு நானும் பொறுப்பு தான். ஆனா நான் மட்டும் பொறுப்புங்கற மாதிரி என்ன அசிங்கப்படுத்தி, என் சம்பளத்துல இருந்து அந்த காச ரெகவர் பண்ணுவேன்னு மிரட்டி எனக்கு மெமோலாம் கொடுத்தாங்க.

நான் யார் அக்கௌண்டுக்கு காசு போச்சோ அந்த ஆள தேடிப் புடிச்சு ரெண்டு மாசம் அவன் பின்னாடி அலைஞ்சி பாதி காச வாங்கினேன். அவன் மீதி காச ரெண்டு மாசம் கழிச்சு தான் தருவேன்னு சொல்லிட்டான். அதனால் என் கையில இருந்த காச போட்டேன். ஆனா அந்த பிரச்சனைய நான் சால்வ் பண்ணியும் அத வச்சே என்ன கேவலப் படுத்திக்கிட்டு இருக்காங்க.

“நேத்து அந்த ஆடிட்டர் முன்னாடி  இத சொல்லியே என்ன அசிங்க படுத்திட்டாங்க சார். அதான் இன்னைக்கு துப்பாக்கியோட வந்தேன். என்ன அசிங்க படுத்துன அறிவுடையான், அந்த பாவேஷ் அத வேடிக்கை பாத்த ஆடிட்டர் மூணு பேரயும்…”

அவன் கையை சுடுவது போல் வைத்துக் காட்டினான்.

அந்தோணி கன்னியப்பனைப் பார்த்தார். கன்னியப்பனுக்கும் வியர்க்க தொடங்கியது.

“அந்த ஆடிட்டர் என் லிஸ்ட்லயே இல்ல…  என்ன பத்தி பேசி ஏதோ சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க, டக்குனு எந்திருச்சு அந்த ஆடிட்டர சுட்டேன். அறிவுடையான் அப்படியே உறைஞ்சி போய் நின்னுட்டான். அந்த பாவேஷ் அலறிகிட்டே ஸ்டோர் ரூம்குள்ள ஓடுனான்…. அறிவுடையான் முகத்த பார்க்கணுமே… !” அநிருத்தன் கண்கள் ஒளிர சிரித்தான்.

“அறிவுடையான் சார். ஜிந்தாபாத்… யூனியன் ஜிந்தாபாத்” அநிருத்தன் துப்பாக்கியை அறிவுடையான் நோக்கி நீட்டிய போது மேலாளர் இருக்கைக்கு பின் மாட்டப் பட்டிருந்த சுவர் கடிகாரம் எட்டு முறை அடித்தது.

“வேணாம் அநிருத். உனக்கு என்ன வேணுமோ செய்றேன். யூனியன்ல ட்ரசரர் ஆக்குறேன். இன்னும் ரெண்டு வருசத்துல நான் ரிட்டையர் ஆகிடுவேன் அநிருத். அப்பறம் யூனியன்ல எல்லாம் நீ தான்”

அநிருத்தன்  சப்தமாக சிரித்தான்.

“அப்படியே சுட்டா கிக்கு இல்ல சார். அதான் பாட்டு போட்டேன்…” அநிருத்தன் தன் தலையை திருப்பி கன்னியப்பனை பார்த்து சொல்லிவிட்டு, தன் மொபைலில் ப்ளே ம்யுசிக்கை இயக்கினான்.

கித்தார் இசையோடு சேர்ந்து ஜான் லெனனின் குரல் மேலெழும்பி அந்த போலிஸ் ஸ்டேஷனை நிறைத்தது.

“அது என்னமோ தெரில சார், இந்த பாட்ட கேட்டாலே கொலை பண்ணனும்னு தோணுது சார்”

“எதுக்கு தம்பி அந்த பாட்ட கேட்டுக்கிட்டு, கேட்காதீங்க….” கன்னியப்பன் அப்பாவியாக சொன்னார்.

“மூளைக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு சார்… “ அவன் சொல்லிவிட்டு பாடத் தொடங்கினான். கன்னியப்பனும் அந்தோனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“They hate you if you’re clever and they despise a fool” பாடியவாறே அவன் அந்தோணியைப் பார்த்தான். அவர் கன்னியப்பனை நோக்கியதை கவனித்தான்.

“புரிலையா சார். பாரதியார் சொன்னாரே. நல்ல கித்தார் செஞ்சு சேத்துல தூக்கி போட்டியே… சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகு அறிவுடன் படைச்சுட்டியேனு… அந்த மாதிரி தான் இதுவும் ”

கன்னியப்பன் சற்றே சகஜமாகி அநிருத்தன் முன்னே வந்து நின்றார். அவருக்கு ஏனோ அநிருத்தன் மீது கோபம் வரவில்லை. இரக்கம் தான் வந்தது.

“இவ்ளோ அறிவா பேசுறீங்களே தம்பி. அப்பறம் ஏன் கொலை அது இதுன்னு…” அவர் பேசி முடிப்பதற்குள் அவன் சப்தமாக சிரித்தான்.

அநிருத்தனின் சிரிப்பொலி அந்த வங்கி அறையெங்கும் எதிரொலித்தது. கூடவே கித்தார் இசையும்.

“அறிவுடையான் சார். அறிவுடையான் சார். உங்க கிட்ட ஒன்னு சொல்றேன் சார். எனக்கு கித்தார் வாசிக்கனும்னு ரொம்ப ஆசை சார், ஆனா எங்க வீட்ல சேத்துவிடல. படிப்பு படிப்பு படிப்பு. படிச்சா மேல வந்திருலாம்னு எங்க அப்பாவும் அம்மாவும் நம்புனாங்க சார். அப்பாவி சார் அவங்க. என்ன படிச்சாலும் உன்ன மாதிரி சுரண்டல் நாய் கீழ, சாரி அறிவுடையான் சார், உங்கள மாதிரி நாய் கீழ தான்  வேல செய்யனும், கடைசி வரைக்கும் நீங்கலாம் எங்கள கால்ல போட்டு மிதிப்பீங்கனு அவங்களுக்கு தெரில…”

‘When they’ve tortured and scared you for twenty-odd years
Then they expect you to pick a career
When you can’t really function you’re so full of fear’

ஜான் லெனன் பாடிக் கொண்டே இருந்தார்.

“வேணாம் அநிருத். ப்ளீஸ். ப்ளீஸ் என்ன விட்டிரு…”

தாமதிக்காமல் அநிருத்தன் அவருடைய இடது கையில் சுட்டான். குண்டு விரலை கிழித்து ரத்தம் பீய்ச்சிக் கொண்டு வர, அறிவுடையான் அலறினார். அநிருத்தன் வாசலுக்கு ஓடினான். வங்கியின் ஷட்டர் வெளியே மூடப் பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டான். வங்கி ஊழியர்கள்  மட்டும் வந்து போக, பக்கத்தில் அமைந்திருந்த சிறிய வழியின் கதவை உள்ளிருந்து சாத்திவிட்டு, மீண்டும் மேலாளர் இருக்கைக்கு வந்தான்.

அறிவுடையான், கையைப் பிடித்தவாறே தரையில் அமர்ந்து வலியில் முனகிக் கொண்டிருந்தார். .

“ப்ளீஸ் என்ன விட்டிரு”

“ப்ளீஸ் என்ன சுட்டுருனு சுட்டுருனு கேட்குது சார்” அநிருத்தன் சொல்ல அறிவுடையான் வாயை மூடிக் கொண்டார்.

“நாட்ல பாதி பேருக்கு வேலை இல்லை. நீங்கலாம் இந்த மாதிரி சேப்ட்டியான வேலைல உக்காந்துகிட்டு, யூனியன் பேர சொல்லி வேல செய்யாம வெட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்கீங்க… அது சரி சார், யூனியன் தலைவர்னா பாரபட்சம் பாக்காம இருக்கணும். நீங்க ஏன் சார் அந்த டெல்லிகாரனுக்கு மட்டும் சப்போர்ட் பண்றீங்க!”

“நாமதான்…..” அவர் சொன்னது அவனுக்கு புரியவில்லை

“ஹான்…” என்றவாறே துப்பாக்கியை அவரை நோக்கி நீட்டினான்.

அவர் தெம்பை வரவழைத்து கொண்டு பேசினார்.

“நாமதான பாத்துக்கணும், வெளில இருந்து வரவங்கள…” அறிவுடையான் பேச முடியாமல் பேசி முடிப்பதற்குள் அவரது வலது கையில் சுட்டான் அநிருத்தன்.

அவர் அலறினார். அநிருத்தன் லெனானின் பாட்டிற்கு காற்றில் கித்தார் வாசித்தவாறே அவர் அருகில் வந்தான்.  அவர் தொடர்ந்து அலற, அவன் அவரை நெருங்கி, குனிந்து அவர் கண்களைப் பார்த்து பேசினான்.

“நல்லா பொய் பேசுறீங்க சார். அதான் சுட்டேன்”

“அநிருத். அந்த RTGS ட்ரான்ஸாக்சன் விசயத்த மனசுல வச்சுதான் இதெல்லாம் பண்றியா! அந்த காச நான் கொடுத்துறேன். ப்ளீஸ்…”

அநிருத்தன் சிரித்தான்.

“என் பிரச்சனைக்கு மட்டும் உங்கள சுடல சார். என்ன அப்டி சுயநலவாதினு நினச்சுடாதீங்க. அன்னைக்கு நான் என்ட்ரி மட்டும்தானே போட்டேன்! வெரிபை பண்ணினது உன் மேனஜர் தான! அப்ப அவனும்தான சார் பொறுப்பு. அவன ஏன் ஒன்னும் பண்ணல! இந்த பாரபட்சம் தான் எனக்கு உறுத்துது. இந்த ஊர்ல எங்க போனாலும் இதே பாரபட்சம். தப்பு பண்றது ஒருத்தன் தண்டனை அனுபவிக்கிறது இன்னொருத்தன்.

“சொல்லுங்க சார், ஏன் அவன காப்பத்திவிட்டீங்க, அவன் உங்க ஜாதி இல்லல…!”

அறிவுடையான் இல்லை என்று தலை அசைத்தார்.

“நீங்க புரட்சி பேசுற ஜாதி, அவன் புரட்சிய ஒடுக்குற ஜாதி. நீங்க ரெண்டு பேரும் எப்படி ஒன்னு சேந்தீங்க…! உங்க ரெண்டு பேரையும் எது ஒரு புள்ளில இனைக்குது?”

அறிவுடையான் அமைதியாக இருந்தார்.

அநிருத்தன் துப்பாக்கியை அறிவுடையான் நெத்தியில் வைத்தான்.

“கேள்விக்கு பதில் சொல். இல்லையேல் மாண்டு போ. அம்புட்டுதேன். ஜிந்தாபாத்”

“அவன் யூனியனுக்கு contribution கொடுக்குறான்…”

“உண்மைய சொல்லுங்க சார். யூனியனுக்கா இல்ல உங்களுக்கா…!” அநிருத்தன் சிரித்தான்.

“என்ன மன்னிச்சிடு…” அறிவுடையான் கெஞ்சினார்.

அநிருத்தன் மீண்டும்  சிரித்தான்.

“so, பணம் தான் ஜாதி மதம் இனம் மொழி கடந்து உங்க எல்லாரையும் நேர் கோட்டுல இனைக்குது. உங்க ஜாதிகாரனப் பாத்தா, நாமலாம் ஒரே ஜாதி. வேற ஜாதியா இருந்தா நாமெல்லாம் ஒரே ஊரு. இல்ல வேற ஊரா இருந்தா நாமெல்லாம் ஒரே யூனியன், ஒரே நாடு இப்டி எதையாவது சொல்லி ஏமாத்திகிட்டே இருக்குறது. ஆனா பின்னாடி காசு காசுனு காச மட்டுமே குறிக்கோளா வச்சு நீங்க, உங்க புள்ளக்குட்டிங்க மட்டும் நல்லா இருக்க வேண்டியது.

“உண்மைலேயே இங்க ரெண்டே ஜாதி தான் சார் இருக்கு. ஒன்னு காசு இருக்க ஜாதி, இன்னொன்னு காசு இல்லாத ஜாதி. வாய்ப்பு இருக்க ஜாதி, வாய்ப்பு இல்லாத ஜாதி. வாய்ப்பு இருக்கவன் இல்லாதவன ஏச்சி பொழைக்குறான். நீங்கலாம் என்ன ஏச்சிங்களே அது மாதிரி….”

“தப்பு தான். நான் பண்ண எல்லாமே தப்பு தான்.  என்ன விட்டுரு ப்ளீஸ்…” அவருக்கு மூச்சு இறைத்தது.

“விட்டுர்றேன். நீங்க தப்ப ஒத்துகிட்ட மாதிரி அந்த மேனஜர் பயலையும் ஒத்துக்க வைங்க. மன்னிச்சு விட்டுர்றேன்”

அறிவுடையான் கண் கலங்க அவனையேப் பார்த்தார்.

“அப்பறம் யோசிச்சேன், எதுக்கு மன்னிச்சிகிட்டு! இவங்களலாம் திருத்தவே முடியாதுன்னு. அதான் அறிவுடையான நெத்தில சுட்டேன். அந்த மேனஜர வாய்லயே சுட்டேன்.

அந்த பயந்தாங்கோலிய பாக்கணுமே. உள்ள, அந்த யூஸ் பண்ணாத பழைய லேடிஸ் டாய்லெட்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தான். ஜுராசிக் பார்க் படத்துல  டைனாசருக்கு பயந்து ஒருத்தன் பாத்ரூம்ல உக்காந்துப்பானே அவன மாதிரி. துப்பாக்கிய பாத்ததும் பண்ணுன  தப்பு, பண்ணாத தப்பு எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான்…”

“மாப் கர்தீஜியே அநிருத்ஜி. மாப் கர்தீஜியே” பாவேஷ் மிஸ்ரா இரு கைகைளைக் கூப்பி கும்பிட்டான்.

“அறிவுடையான் சார். என்ன சார் இவரு. இப்டி கெஞ்சிறாரு! பாக்கவே பாவமா இருக்கு சார்”

சொன்னவாறே அநிருத்தன் அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்தான்.

“ஆனா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர தான் உயிரோட விடப் போறேன். அபி ஹம் க்யா கரூன்…! போலோ சாப் “

“மாப் கர்தீஜியே அநிருத்ஜி. மாப் கர்தீஜியே. நான் பண்ணதுலாம் தப்புனு ஒத்துக்குறேன்”

“ரொம்ப லேட் மேனஜர் சாப்”

அறிவுடையானுக்கு பயம் வந்தது. அநிருத்தன் அந்த மேலாளரை மன்னித்து விட்டால் என்னாவது!

“அவன சுட்டுடு அநிருத். நான் உனக்கு செய்யவேண்டியத செய்வேன்” அறிவுடையான் பதட்டப்பட்டார்.

அநிருத்தன் ஒரு நொடி கண்களை மூடி யோசித்தான். அவன் மனதில் மீண்டும் கித்தார் இசை.

‘There’s room at the top they’re telling you still
But first, you must learn how to smile as you kill
If you want to be like the folks on the hill’

கண் விழித்தான்.

“சரி சார். இந்த மேனஜர் நமக்கு வேணாம்.  நீங்களாவது இவன்ட்ட வாங்குற காசுக்கு நியாயமா வேல பாக்குறீங்க. யாருகிட்டலாம் காசு வாங்குறீங்களோ அவங்களுக்குலாம் சொம்பு தூக்குறீங்க. ஆனா இந்த பாவேஷ் பய, பேங்க்ல சம்பளம் வாங்கிட்டு வேலையே செய்ய மாட்றான்…” என்று துப்பாக்கியை பாவேஷ் மிஸ்ரா முன்பு நீட்டினான்.

“அநிருத்ஜி ப்ளீஸ்.”

“அறிவுடையான் சார் நேத்து ஒரு இங்கிலீஷ் படம் பாத்தேன்… எப்டி சுடுறதுன்னு ப்ராக்டிஸ் பண்றதுக்கு நிறைய படம் பாத்தேன்ல, அப்ப அந்த சீன் வந்துது. அதுல ஒருத்தன் கொலை பண்றதுக்கு முன்னாடி என்ன சொல்வான் தெரியுமா…?

அறிவுடையான் இல்லை என்பது போல் சம்ப்ரதாயமாக தலை ஆட்டினார்.

“உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லவா?

“அந்த கேடுகெட்ட மனிதர்களை உக்கிரமான தண்டனைகளினால் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களைப் பழிவாங்கும்போது நானே கடவுள் என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிதாசுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்”

சொன்ன நொடியில் அவனுடைய துப்பாக்கி குண்டு மிஸ்ராவின் வாய்க்குள் சீற, அவன் அப்படியே பின்னே சாய்ந்த வாக்கில் சரிந்தான்.

அநிருத்தன் அறிவுடையானைப் பார்த்தான்

“உங்கள மன்னிச்சு விட்டுறால்ம்னு தான் சார் பாத்தேன். இங்க நீங்கலாம் பண்ணுன தப்புக்குதான்  நான் தண்டனை கொடுக்குறேன். ஆனா உங்கள வெளில விட்டா என்னைய மாட்டி விட்டிருவீங்க. சட்டம் என்ன தண்டிக்க முடியாது. தண்டிக்க விட மாட்டேன்…” அநிருத்தன் மீண்டும் சிரித்தான்.

***

அந்தோணிக்கு சில நிமிட மாறுதல் தேவைப்பட்டது. எழுந்து பின்னே சென்று சிகரெட்டை பற்ற வைத்தார். கன்னியப்பன் வாசலில் நின்ற சென்ட்ரியை உள்ளே வர சொல்லிவிட்டு, அவரும் பின்புறம் சென்றார்.

“என்னய்யா  கோக்கு மாக்கா இருக்கான்!” அந்தோணி ஒரு சிகரட்டை கன்னியப்பனிடம் நீட்டியவாறே பேசினார். .

“இவன ரிமாண்ட்ல வச்சுட்டு வீட்டுக்கு போனா கூட தூக்கம் வராதே. எங்க இருந்து தான் வரானுங்களோ. அப்படியே தலைமறைவாயிருக்கலாம்ல! ஏதாவது ஸ்பெஷல் ஸ்க்வாட் தலைல கேச கட்டிட்டு நாமா ஒதுங்கி இருக்கலாம். நேரா நம்ம ஸ்டேசனுக்கு வந்து நம்ம கழுத்த அறுக்குறான்”

“ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பான் போல சார். நம்மள கூட வெயில பந்தோபஸ்து இது அதுனு நிக்க வச்சா கோபம் வருமே. சுட்டுரலாம்னு கூட நானே நினைச்சிருக்கேன். இவன் பண்ணிட்டான்…” கண்ணியப்பன் புகையை கக்கும் சாக்கில் மனதிலிருப்பதையும்   வெளியே கக்கினார்.

அந்தோணி கன்னியப்பனை ஏற இறங்கப் பார்த்தார்.

“அந்த எஸ்.ஐ பயல கூட்டிட்டு க்ரைம் சீன் போங்க…” கன்னியப்பன் எதிர்ப்பார்த்ததை போல் அந்தோணி சொன்னார்.

“சீட்ட விட்டு நகரவே மாட்டேங்குறான் நாய். அந்த பையன் செஞ்சது தான் சரி. இவனையும் அதே மாதிரி…”

“என்ன கன்னியப்பன். யோசிச்சுகிட்டே நிக்குறீங்க?” அந்தோணி சிடுசிடுத்தார். கன்னியப்பன் சிகரட்டை தரையில் போட்டு மிதித்தார்.

***

கன்னியப்பன் உதவி ஆய்வாளர் சதீஷின் இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்தார். வண்டி அண்ணா நகர் பள்ளி சாலையில்  திரும்பியது.

“அந்த பையன நினச்சா பாவமா இருக்கு தம்பி…”

சதீஷ் எந்த பதிலும் சொல்லாமல் சாலையில் மட்டும் கவனம் செலுத்தி வண்டியை ஓட்டினார்.

“கோவத்துல அடிச்சிருந்தா கூட கேஸ் கம்மி, இவன் ப்ளான் பண்ணி துப்பாக்கிலாம் வாங்கிட்டு வந்திருக்கான். அவன் வாழ்க்கையே போச்சு…“ கன்னியப்பன் சதீஷின் பதிலை எதிர்ப்பாரதவராய் தனக்குத் தானே பேசிக் கொண்டே வந்தார்.

“இவனலாம் வெளிய விடறது ரிஸ்க் தான் சார். அவனுக்குள்ள எவ்ளோ வெறி இருக்கு பாருங்க….” சதீஷ் தன் பங்கிற்கு தன் கருத்தைப் பதிவு செய்தார்.

“அவனுக்குள்ள அவ்ளோ வெறிய வர வச்சது யாரு! வெறும் போலீசா மட்டும் எல்லாத்தையும் பாக்கக் கூடாது தம்பி. அவங்க அப்பா அம்மாக்கு தெரிஞ்சா எப்டி பதறுவாங்க….”

“நம்ம என்ன சார் பண்ண முடியும். நம்ம ட்யூட்டிய தான் பாக்க முடியும்!”

கன்னியப்பன் பதில் எதுவும் பேசவில்லை. ஆனால் அவர் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ‘ஆமா பெரிய  ட்யூடி. டைரக்டா எஸ்.ஐ எக்ஸாம் எழுதி வரவனுங்களுக்கு சொந்தமா யோசிக்கக் கூட தெரியாது. இன்ஸ்பெக்டர் சொல்றது தான் வேத வாக்கு.  ட்யூடி பத்தி பேசுறான்”

அவர் சிந்தனையை கலைக்கும் விதத்தில் வண்டி திடிரென்று நின்றது. சுதாரித்தார். அந்த வங்கியின் டிஜிட்டல் பலகை அவர்களை வரவேற்றது. தன் மொபைலை பார்த்தார். மணி 10.35. மொபைல் பேட்டரியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்ததை கவனித்தார்.

“லோனவா கூனாவானு ஒரு மொபைல் என் பையன் வாங்கிக் கொடுத்தான். பேட்டரியே நிக்க மாட்டேங்குது…” சொல்லியவாறே வண்டியிலிருந்து இறங்கினார்.

வங்கியின் வளாகத்திற்குள் நுழைந்ததும் ATM வரவேற்றது. பக்கத்தில், அநிருத்தன் விவரித்ததுபோல் பெரிய ஷட்டரால் வாசல் மூடப் பட்டிருந்தது. பக்கத்தில் சிறிய வழி மட்டும் திறந்து இருந்தது. உள்ளே வெளிச்சம் தெரிந்தது. கன்னியப்பன் வாசலிலேயே நின்றார்.

“உள்ள போங்க சார். நான் வண்டிய நிறுத்திட்டு வரேன்” உதவி ஆய்வாளர் சொன்னார்.

“க்ரைம் சீன்னாலே இப்பலாம் அலர்ஜி. வயசாகுதுல்ல…” என்றவாறே வங்கியின் உள்ளே காலடி எடுத்து வைத்தார்.

மூன்று பிணங்களை எதிர்ப்பார்த்து உள்ளே  சென்றவரை அசையாமல் நிற்கவைத்தது உள்ளே அவர் கண்ட காட்சி.

மூன்று பேர் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்தார்.

“கியா பாத் ஹே சார்” என்றவாறே வாசலை பார்த்து அமர்ந்திருந்த பாவேஷ் மிஸ்ரா கன்னியப்பனை கவனித்தார். அவரின் முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த இருவரும், பாவேஷ் வாசலை பார்ப்பதைக் கண்டு திரும்பி பார்த்தனர்.

“என்ன சார்!” குள்ளமாக கட்டை மீசை வைத்த அந்த ஆசாமி கன்னியப்பனை பார்த்து வினவினார்.

“நான் V5 ஸ்டேசன் ஹெட் கான்ஸ்டபிள்” பாவேஷின் மேஜையில் இருந்த ஏரளாமான காகிதங்களை கவனித்தவாறே கன்னியப்பன் சொன்னார். அந்த ஆசாமி இருக்கையில் இருந்து எழுந்து கன்னியப்பனை நோக்கி வந்தார்.

“வாங்க சார். ATM ரவுண்ட்ஸ் என்ட்ரி போட வந்தீங்களா? ஆடிட்டிங்னு லேட்டா வர்க் பண்றோம்…” அவராகவே படபடவென பேசிக் கொண்டே போனார்.

“இல்ல சார். இங்க அறிவுடையான்….?”

“நான் தான் சார். உக்காருங்க சார்! என்ன விஷயம்?”

கன்னியப்பன் சில நொடிகள் பேசாமல் நின்றார்.

***

கள நிலவரம் அந்தோணிக்கு வந்து சேர்ந்ததும் அவர் சகஜமாகி விட்டிருந்தார். தன் அறையில் தன் மேஜை மீது அமர்ந்தவாறே அநிருத்தன் கொண்டு வந்த துப்பாக்கியை முன்னும் பின்னுமாக திருப்பிப் பார்த்தார்.

“ஒரிஜினல் மாதிரியே இருக்கு பாருயா. நானே ஏமாந்துட்டேன்….” அந்தோணி சொல்ல, சென்ட்ரி துப்பாக்கியை கையில் எடுத்து பார்த்தார்.

“வெயிட்டு கூட ஒரிஜினல் அளவுக்கு இருக்கு பாருங்க….” என்றார்.

அந்தோணி தன் துப்பாக்கியை மேஜை டிராயரிலிருந்து எடுத்து அநிருத்தன் கொண்டு வந்த துப்பாக்கியோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.

“அப்படியே தத்ரூபமா செஞ்சு விக்குறானுங்க….

மாடல் கன்-னாம். ஆன்லைன்ல வாங்கிருக்கான். இல்லன இந்த பச்சாக்குலாம் துப்பாக்கி வாங்கத் தெரியுமா!” அந்தோணி சிரித்தார். சென்ட்ரியும் பதிலுக்கு சிரித்தார்.

“ஹ்ம்ம். அவன் எதாவது சாப்புட்றானா கேட்டியா?”

“வேணாம்னு சொல்லிட்டான் சார்”

“கொஞ்ச நேரத்துல ஆட்டி படச்சுட்டான்யா. கண்ட படங்கள பாக்க வேண்டியது… இப்டி எதாவது பண்ண வேண்டியது. படிச்சவன்தான்யா இப்பலாம் இப்டி ஆகிடுறானுங்க என்னையா ஸ்ட்ரெஸ் நம்ம வேலைல இல்லாத ஸ்ட்ரெஸ்ஸா!”

“இந்த காலத்து புள்ளைங்களால எதையும் ஹாண்டில் பண்ண முடில சார்…”

அந்தோனி அறையை நோட்டம் விட்டவாறே,  “என்னையா பண்றான் அவன் இவ்ளோநேரம்!” என்றார்.

சென்ட்ரி அறையின் மூலையிலிருந்த பாத்ரூம் கதவை தட்டினார். உள்ளே தண்ணீர் வழியும் சப்தம் கேட்டது. அறையின் வெளியே சதீஷை கண்டதும் அந்தோணி வெளியே போனார்.

சென்ட்ரி, “ஹேய் தம்பி சீக்கிரம் வா…” என்று சொல்லியவாறே கதவை மீண்டும் தட்ட எத்தனிக்க, அநிருத்தன் கதவைத் திறந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன

“வா. உன் பேங்க்ல இருந்து வந்துட்டாங்க….” என்றவாறே சென்ட்ரி வெளியே சென்றார்.

***

“ஆடிட் ரிப்போர்ட் சைன் பண்ணிக்கிட்டு இருந்தோம். லாஸ்ட் நாள் ஆடிட் எப்பவும் லேட் ஆகும் சார். சாப்புட போறேனு கிளம்பி வந்தாரு சார்” அறிவுடையான் அலட்டிக் கொள்ளாமல் பேசினார். அந்தோணி அநிருத்தனை கூர்ந்து கவனித்தார். அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

“நல்ல பையன் தான் சார். எதாவது ஸ்ட்ரெஸ்ல பேசிருப்பாரு. நாங்க பாத்துக்குறோம்”

“கவுன்சிலிங் கொடுங்க… கூட்டிட்டு போங்க….” அந்தோணி சொல்லிவிட்டு பிரச்சனை தன்னை விட்டு போனால் போதும் என்று உள்ளுக்குள் ஆசுவாசப் பட்டுக்கொண்டார். அறிவுடையான் வாசல் நோக்கி நடந்தார். அநிருத்தனும் தலை குனிந்தவாறே வெளியேறினான்.

“சார்” என்றவாறே கன்னியப்பன் அந்தோணி அருகே வந்தார்

அந்தோணி என்ன என்பது போல் பார்த்தார்.

“போற வழி தான, நானே விட்டுட்டு வீட்டுக்கு போய்டுறேனே! பாவம் சார் அந்த பையன், இவரு கூட அனுப்ப வேணாம். நான் நல்ல வார்த்தை சொல்லி விட்டுட்டு போலாம்னு பாக்குறேன்”

“ஏன் அப்டியே வீட்லயே விட்டுடுங்களேன்!”

கன்னியப்பன் அமைதியாக நின்றார்.

“சரி கூட்டிட்டுப் போங்க…”

கன்னியப்பன் நகர்ந்தார்.

“லூசு பையன். எதுக்கு  போலிஸ் ஸ்டேசன் வந்தான்!” அந்தோணி சதீஷிடம் சொல்லிக்கொண்டிருந்தது கண்ணியப்பனுக்கு என்னமோ போல் இருந்தது.

***

கன்னியப்பன் மெதுவாகதான் வண்டியை ஓட்டினார். அவருக்கு அநிருத்தனுடன் பேச வேண்டும் என்பது போல் இருந்தது.

“தம்பி மனச போட்டு குழப்பிக்காத, வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ. யாருக்கு தான் பிரச்சனை இல்ல. வேலைனா முன்ன பின்ன தான் இருக்கும்…”

அநிருத்தன் பதில் பேசாமல் வந்தான்.

“நல்ல கவுரவமான வேலைல இருக்க, இதுக்கு மேல லைப்ல என்ன வேணும். என் பையன் மாதிரியா. பத்தாங்க்ளாஸ் தாண்டல, கார் ஒட்டுது. நீயும் என் புள்ள மாதிரி தான். என்ஜாய் பண்ண வேண்டிய வயசுல இப்டிலாமா இருக்குறது! ஜாலியா இரு.

“பேங்க் வேலையே புடிக்கலனா, போலிஸ் காரன் எங்க நிலைமைய நினச்சுப் பாரு. எங்கேயோ ஹெலிகாப்டர்ல பிரதமர் பறக்குறாருனு எங்கள வெட்ட வெயில்ல நிக்க வைப்பான். உங்கள மாதிரி டைமிங்லாம் கிடையாது. பொட்டல சாப்பாடு தான். அதுவும் சரியா பத்தாது. அப்டியே ஒட்டிட்டேன். எனக்கும் தான் வேலை புடிக்கல, விட்டுறலாம்னு தோணும். எனக்கு பசிக்கலனாலும் என் பொண்டாட்டி புள்ளைக்கு பசிக்குமே. இதோ இன்னும் ரெண்டு வருசத்துல ரிட்டயர்மெண்ட்.

வண்டி பள்ளி சாலையில் திரும்பியது.

“சாபட்டியா. சாப்ட்டு போலாமா…!”

அநிருத்தன் தன் மௌன விரதத்தைக் கலைத்தான்.

“வேணாம் சார்.

“சாப்பாடு வாங்க ஆள் இல்ல, நீ போய் வாங்கிட்டுவானு சொன்னங்க சார். அதான் ஒரு மாதிரி இருந்துச்சு. பேங்க்ல ஒரு ஆபிசரா இருந்தா,  க்ளெர்க் வேலை செஞ்சு, ஆபிசர் வேலை செஞ்சு, சப்-ஸ்டாப் வேலை செஞ்சு, அபப்றம் எடுபுடி வேலையும் செய்யனும். வெளில இருந்து பாக்குறவங்களுக்கு தான் சார் பெரிய பேங்க் வேலை. உள்ள அப்படி இல்ல. நரகம். ரொம்ப கன்னிங்கா இருக்கவங்க எல்லா இடத்துலையும் தப்பிச்சிடுறாங்க. என்ன மாதிரி ஆள்லாம் சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம் சார்…”

“உனக்கு என்ன தம்பி குறை. என் புள்ளையா நினச்சு சொல்றேன், நீ நல்லா இருப்ப….”

வண்டி வங்கியை நெருங்கியதும் கன்னியப்பன் சொன்னார்,

“அவங்க கிட்ட தேவை இல்லாத பேச்சு வச்சுக்காத. வீட்டுக்கு போய் நல்லா தூங்கு. எல்லாம் சரியாகிடும்….”

வண்டி வங்கியின் முன்பு நின்றது. அநிருத்தனை உள்ளே விட்டுவிட்டு, கன்னியப்பன் வாசலில் வந்து நின்றார். தெருவே அமைதியாக இருந்தது. பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் தெரு. வீடுகள் உறக்க நிலையில் இருந்தன. ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை.  ஒதுக்கு புறமாக நின்றுக்கொண்டு, சிகரட்டை எடுத்து பற்ற வைத்தார்.

“மனுஷனுக்கு வேலை இருந்தாலும் பிரச்சனை, வேலை இல்லனாலும் பிரச்சனை. ச்சி… என்ன வாழ்க்கையோ” தனக்கு தானே சொல்லிக் கொண்டே புகையை இழுத்தார்.

கீச் என்ற சப்தத்துடன் வண்டி நின்றது. திரும்பிப் பார்த்தார். சதீஷ்  வண்டியின் பின்னிருந்து அந்தோணி பதட்டமாக  இறங்கினார்.

“யோவ் உன் போன் என்னையா ஆச்சு…!” என்று கன்னியப்பனை நோக்கி வர, சதீஷும் வண்டியை நிறுத்தி விட்டு பின்னே ஓடி வந்தார்.

அவர்களின் பதட்டம் கன்னியப்பனிடமும் தொற்றிக் கொண்டது.  மொபைலை எடுத்து பார்த்தார்.

“Switch off ஆகிருச்சு சார்….”

அந்தோணி காதில் வாங்காமல் வங்கியின் வாசல் நோக்கி நடந்தார்.

சதீஷ் கன்னியப்பன் அருகே வந்து, “சாரோட கன்ன காணோம் சார்…”

என்று சொல்ல கன்னியப்பனின் முகமெல்லாம் அதிர்ச்சி ரேகை பரவியது. வங்கியைப் பார்த்தார். அந்தோணி அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள், உள்ளே இருந்து வரிசையாக குண்டுகள் வெடிக்கும் சப்தம்  கேட்டது.

மூவரும் ஒரு கணம் அதிர்ந்து நின்றனர். அந்தோணி அப்படியே தலையை பிடித்துக் கொண்டே ATM- வாசலில் அமர்ந்தார்.

சில நொடிகள் மௌனம். அடுத்த குண்டும் வெடித்தது.

ஆடிட்டர் வேகமாக வெளியே ஓடிவந்தார். வாசலில் நிற்கும் மூவரை கண்டு கொள்ளாது பயத்தில், “கொன்னுட்டான். கொன்னுட்டான்…” என்று புலம்பியவாறே அவர் வெகு தூரம் ஓடினார்.

சதீஷ் தன் ஹோல்ஸ்டரில் கை வைத்தார். துப்பாக்கியின் துணையோடு அவர் அடி எடுத்து வைக்க, கன்னியப்பன் ஒரு முறை அந்தோணியைப் பாவமாக பார்த்துவிட்டு சதீஷுடன் இணைந்துக் கொண்டார்.

வங்கியின் உள்ளே மின் விளக்கு அணைந்து அணைந்து எரிந்துக் கொண்டிருந்தது.

“ஹே தம்பி, எதுவும் முட்டாள் தனமா பன்னாதா…” கன்னியப்பன் கத்தினார்.

இருவரும் வாசலில் நின்றவாறே வங்கியை ஆராய்ந்தனர். ஒருவரும் தென்படவில்லை. தயங்கி தயங்கி உள்ளே அடி எடுத்து வைத்தனர்.

மேனஜர், தன் இருக்கை அருகிலேயே சரிந்துக் கிடந்தார். அவர் வாயில் குண்டு பாய்ந்திருந்தது.  அவர் அருகிலேயே அறிவுடையான் வாய் பிளந்துக் கிடந்தார். நெத்தியில் குண்டால் பொட்டு வைக்கப் பட்டிருந்தது.

உள்ளே ஸ்டோர் ரூம் கதவு ஆடிக் கொண்டே இருந்தது.

இருட்டு. உள்ளிருந்து ஜான் லெனனின் மெல்லிய குரல் காற்றில் மிதந்து வந்தது.

நிதானமாக அதனுள் இருவரும் நுழைந்தனர்.

சதீஷ் தன் மொபைல் டார்ச்சை ஆன் செய்து கன்னியப்பன் கையில் கொடுத்தார். அவர் ஒளியை அறையில் பாய்ச்சினார். இடது மூலையில் தரையில் அநிருத்தனின் மொபைல் கிடந்தது.

அருகில் அநிருத்தன் சுவற்றில் சாய்ந்தவாக்கில் தரையில் அமர்ந்திருந்தான். அவன் வலது கையில் அந்தோணியின் துப்பாக்கி இருந்ததை கன்னியப்பன் கவனித்தார்.

‘சட்டம் என்ன தண்டிக்க முடியாது. தண்டிக்க விட மாட்டேன்…’ அநிருத்தனின் குரல் கன்னியப்பனின் மனதில் ஒலித்தது.  “உனக்கு என்ன தம்பி குறை. என் புள்ளையா நினச்சு சொல்றேன், நீ நல்லா இருப்ப….” அவருடைய வாழ்த்தும் காதுகளில் கேட்டது.

நிமிர்ந்துப் பார்த்தார், அவன் தலை இடது புறம் தூணில் சாய்ந்திருந்தது. தலையின் பக்கவாட்டிலிருந்து ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.

கன்னியப்பன் தன் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்துக் கொண்டார். அங்கே யாரும் பேசிக் கொள்ளவில்லை.

அநிருத்தனின் மொபைலுக்குள்ளிருந்து ஜான் லெனன் மட்டும் பாடிக் கொண்டே இருந்தார்.

A working class hero is something to be
A working class hero is something to be
If you want to be a hero well just follow me
If you want to be a hero well just follow me’

****

ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்

என்னுடைய இரண்டாவது நாவல் ‘ஊச்சு (The Fear)’  அமேசான் தளத்தில்  ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

கதைச் சுருக்கம்

ஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். மறுபுறம், மேல்பாறை போலீசாரோ ஒத்துழைக்க மறுக்கிறார்கள். எல்லா தடைகளையும் மீறி அர்ஜுன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார். ஆனால் வழக்கு மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது. மேல்பாறையின் மர்மங்களை தேடிச் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்பதை அறிந்தும் அர்ஜுன் தொடர்ந்து துப்பறிகிறார். அறிவியலுக்கும் அமானுஸ்யத்திற்கும் இடையே நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தில் சிக்கிக்கொண்ட அர்ஜுன் பிழைப்பாரா? நண்பர்கள் உயிருடன் திரும்புவார்களா? மேல்பாறையின் மர்மத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமா?

Ooochu cover image

ஊச்சு – நாவல்
அரவிந்த் சச்சிதானந்தம்
அந்தாதி பதிப்பகம்
அமேசானில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Synopsis:
A gang of friends on a weekend trip, due to unforeseen events are forced to spend a night in an eerie palace in a dense jungle. Though they refuse to accept the bare truth on grounds of logic and reality, they very soon realize that the place is haunted. But, they are late. They start losing their friends one by one. They are never to be seen outside the jungle again. Soon, cops start investigating about the lost friends but in vain. Arjun, a young smart cop take up the responsibility and enter the jungle to probe. Not only do he uncover the gore realities of the jungle one after the other, he find himself trapped in the maze. But, the unrelenting cop solve the case finally, only to find that there are lot more to reveal.

Oochchu (The Fear)- Horror Investigation novel
Aravindh Sachidanandam
Andhadhi Pathippagam
Click to buy 

அடாஜன் சாலை- த்ரில்லர் கதை

மழை. அடை மழை. ஹசிரா சாலை வழக்கம் போல் ஆள் அரவமற்று கிடந்தது. அங்கிருந்து சூரத் செல்லவேண்டுமெனில் அடாஜன் சாலை வழியாகவோ அல்லது டுமாஸ் சாலை வழியாகவோ செல்ல வேண்டும். டுமாஸ் வழியாக செல்வது கால விரையம் தான். ஆனாலும் பாதுகாப்பான சாலை அது.

அடாஜன் பாதுகாப்பற்ற சாலையா என்று உறுதியாக தெரியாது. ஆனால் அந்த சாலையை பற்றி நான் கேள்விப்பட்ட கதைகள் ஏராளம் என்பதால் அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்து வந்தேன். அதற்கு என் நண்பர் சுனில் படேலும் ஒரு காரணம். அவர் ஹஜிரா டுமாஸ் சாலை சந்திப்பில் அமைந்திருந்த மக்தல்லா குடியிருப்பில் வசித்து வந்தார். அது என் கம்பெனியின் குடியிருப்பு. திருமணமானவர்களுக்கு மட்டும். அதனால் நான் சூரத்திலிருந்த பேச்சுலர் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன்.

எங்களுக்கு இரண்டாவது ஷிப்ட். நான் தினமும் ஷிப்ட் ரிபோர்டை எழுதிவிட்டு கிளம்ப பன்னிரண்டு மணியாகிவிடும். கம்பெனி பஸ் இரவு பதினொன்னே முக்கால் மணிக்கெலாம் கிளம்பிவிடும். சுனில் அதில்தான் போய் கொண்டிருந்தார்.

நான் கம்ப்ரசர் சிஸ்டம் இன்சார்ஜாக இருந்தேன். சுனில் பாய்லர் இன்சார்ஜாக இருந்தார். இரவு ஏழுமணிக்கு பின்பு இரண்டு பேருக்குமே வேலை இருக்காது. ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வெறும் ரீடிங்க்ஸ் எடுப்பது மட்டுமே வேலை. பாய்லர் அறையும் கம்ப்ரசர் அறையும்  அருகருகே இருந்ததால் நான் அவர் அறைக்கு சென்று அமர்ந்து கொள்வேன். இருவரும் ஏதாவது கதைப் பேசிக்கொண்டிருப்போம். அப்படியே நாங்கள் நண்பர்களாகிப் போனதால், சுனில் என்னுடன் என்னுடைய காரில் வரத் தொடங்கினார். அலுவலகம் வரும் போது மதியம் ஒன்றரை மணிக்கு அவரை பிக் செய்து கொள்வேன். இரவு, அவரை அவர் குடியிருப்பில் இறக்கிவிட்டுவிட்டு நான் சூரத் வந்தடைய மணி ஒன்றாகிவிடும்.

முதன் முதலில் நாங்கள் சேர்ந்து பயணிக்கும் போது, ஹசிரா அடாஜன் டுமாஸ் மூன்று சாலைகளும் சந்திக்கும் இடத்தை அடைந்த போது, அடாஜன் சாலையை சுட்டிக் காண்பித்து, “ராத் மே உஸ் தரப் மத் ஜாவ்” என்றார். நான் “ஏன் அங்க ஏதும் வழிப்பறி நடக்குமா?” என்று அப்பாவியாக கேட்டேன். சப்தமாக சிரித்த அவர், “பேய் இருக்கு” என்றார். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதனால் அவர் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பலரும் இரவு நேரங்களில் அந்த சாலையை தவிர்க்கும் படி அறிவுரை கூறினர். ஒரு முறை மதிய வேலையில் நான் அந்த சாலை வழியாக வந்தேன். அன்று சுனில் விடுப்பில் இருந்தார்.

அடாஜன் சாலையில் பால் பாட்டியா அருகே வந்ததும், கார் பஞ்சர் ஆகிவிட்டது. காரை ஓரம் கட்டிவிட்டு ஸ்டெப்னியை எடுத்து மாட்டினேன். யாரோ காரின் முன்கதவை திறந்துகொண்டு உள்ளே ஏறியது போல் இருந்தது. வேகமாக முன் சென்று பார்த்தேன். யாருமில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. மீண்டும் பின்னாடி வந்து ஸ்டெப்னியை டைட் செய்ய முற்பட்ட போது தான், ஸ்டெப்னியும் பஞ்சர் ஆகியிருந்ததை கவனித்தேன். நான் வெளியே எடுக்கும் போது ஸ்டெப்னி நன்றாகதான் இருந்தது. அருகே எதாவது பஞ்சர் கடை இருக்கிறதா என்று தேடிக் கொண்டு சென்றேன்.

அங்கே இருந்த சந்தோசி மாத கோவில் வாசலில் அமர்ந்திருந்த பூசாரி, “என்ன வேணும்?” என்றார். நடந்ததை சொன்னேன்.

“சந்தோசி மாதா உன் கூட இருக்கா. அதான். இனிமே இந்த பக்கம் வராத” என்றார். கோவிலில் இருந்த பையனிடம் சொல்லி அனுப்பினார். அவன் ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்தான்.

மெக்கானிக்கிடம், “இவங்க சொல்ற மாதிரி எதாவது பேய் ஆவிலாம் உண்டா?” என்றேன்.

“அதெல்லாம் தெரியாது பாய். இங்க நிறைய ஆக்சிடென்ட் நடக்கும். அதுக்கு ஆளாளுக்கு ஏதேதோ காரணம் சொல்றாங்க” என்று சொன்னான். அவன் என்னிடம் பேச விரும்பாதவன் போல் இருந்ததால், நான் மேற்கொண்டு அவனை எதுவும் கேட்கவில்லை.

இதை என் அம்மாவிடம் யதார்த்தமாக பகிர்ந்து  கொண்டேன். இரண்டு நாட்களில் பார்சலில் மாசிபெரியண்ண சாமியின் விபூதியும், கருப்பு கயிறும் வந்தது. நான் எதற்கு தேவையில்லாத மனக்குழப்பமென்று அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்து வந்தேன்.

அன்றும் சுனில் வரவில்லை. நான் ஒரு ட்ரைனிங் விஷயமாக மும்பை செல்ல வேண்டும். இரவு பன்னிரன்டரை மணிக்கு பஸ். அலுவலகத்திலிருந்து பத்து மணிக்கெல்லாம் கிளம்பிவிட வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் அன்று air-dryer பழுதடைந்து விட்டதால், வேலை அதிகமாகிவிட்டது.. நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது மணி 11.30 ஆகிவிட்டிருந்தது. தூரலாக இருந்த மழை நான் ஹசிரா சந்திப்பை அடைந்த போது அடை மழையாக மாறியிருந்தது. ஹசிரா அடாஜன் டுமாஸ் சந்திப்பில் வழக்கம் போல் வலது புறம் திரும்பாமல், நேராக அடாஜன் சாலையை நோக்கி பயணித்தேன். டுமாஸ் சாலையில் சென்றால் நேரத்திற்கு சூரத்தை அடைய முடியாது. 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் ஸ்பீடோமீட்டர் ’60’-ஐ தொட்டிருந்தது. சாலையில் விளக்குகள் இல்லை. என் முன்னோ பின்னோ எந்த வாகனமும் வரவில்லை. மணி இரவு பன்னிரண்டு இருக்கும். என்னுடைய கார் விளக்குகள் தந்த வெளிச்சத்தில் நான் வேகமாக சென்று கொண்டிருந்தேன். இடை இடையே என்னை அறியாமலேயே ஹாரன் அடித்தேன்.

திடிரென்று ஒரு பெண் சாலையின் குறுக்கே தோன்றினாள். என்னால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘டங்’

அந்த பெண்ணின் மீது கார் வேகமாக ஏறியது.

‘கடக் கடக்’ என்றொரு சப்தம். நான் காரை ஸ்லோ செய்தவாறே கார் ரியர்வ்யூ கண்ணாடியில் பார்த்தேன் அந்த பெண்ணின் உடல் சாலையில் கிடந்தது. இளம்பெண் போல் தோன்றினாள். எனக்கு காரை நிறுத்த பயமாக இருந்தது. என் கால் கட்டைவிரல் ஆக்சிலரேட்டர் மீது வேகமாக பதிந்தது.

மழை நின்றிருந்தது. மனம் உறுத்தலாகவே இருந்தது. சிறிது தூரத்தில் சந்தோசி மாதா கோவில் வந்தது. காரை நிறுத்தி உள்ளே ஓடினேன். உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பூசாரி, என்னை ஆச்சர்யமாக பார்த்தார். எல்லாவற்றையும் வேகமாக விவரித்தேன். அவர் கோவில் சிறுவன் மூலம் ஊர் பெரியவருக்கு செய்தி அனுப்பினார். ஊரிலிருந்து சிலர் திரண்டு வந்தனர். அதற்குள் அங்கே ஒரு பேட்ரோல் வண்டியும் வந்திருந்தது. நான் காரை கோவிலிலேயே விட்டுவிட்டு போலிஸ் வண்டியில் ஏறி பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டேன். ஊர் பெரியவரும் இன்னொருவரும் என்னுடன் எறிக்கொண்டனர். முன்னிருக்கையில் ஒரு போலிஸ் அதிகாரி அமர்ந்திருந்தார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து நான் சொன்ன இடத்திற்கு சென்றோம்

“எந்த இடம்?” போலிஸ் ஓட்டுனர் வினவினார்

“புல்கா விஹார் ஸ்கூல் கிட்ட…” நான் சொன்னேன்.

“இங்க ரெண்டு பெரிய மரம் இருக்கும்…” நான் சொல்லிகொண்டிருக்கும் போதே வண்டி அந்த மரங்களின் முன்பு நின்றது. .நான் அந்த மரத்தாருகே சென்றேன். சாலை காலியாக இருந்தது. இன்னும் சில ஊர் காரர்கள் அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினர். இரு புறமும் எல்லோரும் தேடினோம். அங்கே ஒரு விபத்து நடந்ததற்கான அறிகுறி எதுவுமில்லை. எல்லோரும் தங்களுக்குள் குஜராத்தியில் பேசிக் கொண்டனர் “லுக்ட் லைக் ஆன் யங் கேர்ள்….” நான் ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்து அந்த போலிஸ் அதிகாரியிடம் பேசினேன். அவளை அந்த சாலையில்  பார்த்தேன் என்று உறுதியாக சொன்னேன். அவர் நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல்,  “கல்யாணம் ஆச்சா?” என்று வினவினார்.

நான் இல்லை என்று தலை அசைத்தேன். “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” என்று சப்தமாக சொன்னார். எல்லோரும் சிரித்தனர். நான் எதுவும் பேசாமல் போலிஸ் வண்டியில் ஏறிக்கொண்டேன். வரும் வழியில் யாரும் எதுவும் பேசவில்லை. எங்களை கோவிலில் இறக்கிவிட்டுவிட்டு போலிஸ் அதிகாரி நகர்ந்தார். பூசாரி என்னை உற்று பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்.

அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். நான் மும்பை செல்லும் மன நிலையில் இல்லை. எனக்கு ஒரே குழப்பாக இருந்தது. ‘டங்’. ‘கடக் கடக்’ ‘சந்தோசி மாதா உன் கூட இருக்கா.’ ‘இங்க நிறைய ஆக்சிடென்ட் நடக்கும்’ ”ராத் மே உஸ் தரப் மத் ஜாவ்’

விடுதிக்குச் சென்று உறங்கிவிடுவது நல்லது எனப் பட்டது. என் விடுதியின் பார்க்கிங்கில் காரை நிறுத்தினேன். லிப்ட்டில் ஏறச் செல்லும் போது எதர்ச்சையாக காரை நோக்கினேன். காரின் முன்புறம் கிரிலில் ஏதோ தொங்கிக்கொண்டிருந்ததை கவனித்தேன். அருகே சென்றுப பார்த்தேன்.  காரில் கொத்தாக தலைமுடி சிக்குண்டிருந்தது.  நீளமான அந்த முடியிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த மழைத்துளி, சிகப்பாக இருந்தது.