The Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை


The Innocent- ஹார்லான் கொபன் எழுதிய ஆங்கில நாவல். ஒரியோல் பாவ்லோ இயக்கத்தில் ஸ்பானிஷ் தொடராக வெளியாகி உள்ளது. நாவல் என்ற அளவிலேயே இது மிகவும் சுவாரஸ்யமான கதை. கதையின் நாயகன், மேட் ஹண்ட்டர் கல்லூரி நாட்களில் ஒரு பார்ட்டிக்கு செல்கிறான். அங்கே நிகழும் ஒரு கைகலப்பில், எதிர்பாரதவிதமாக மேட் ஹண்ட்டர் தாக்கி ஒருவன் இறந்து போய் விடுகிறான். மேட் ஹண்டர் சிறைக்கு செல்கிறான். சில ஆண்டுகள் கழித்து, அவன் விடுலையாகி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதே வேளையில் தேவாலய பள்ளியில் பணிபுரியும் கன்னியாஸ்திரி ஆசிரியர் ஒருவர் தன் படுக்கையில் மூச்சு பேச்சற்று கிடக்கிறாள். அவளுக்கு  CPR செய்யும் போது அந்த கன்னியாஸ்திரி செயற்கை மார்பகம் பொருத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் தலைமை கன்னியாஸ்திரி. அவர் இதைப் பற்றி அந்த பள்ளியின் முன்னாள் மாணவியும், கொலைக்குற்ற விசாரணை அதிகாரியுமான லாரன் ம்யூசிடம் சொல்கிறார். இந்த இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே நாவல். 

ஆங்கில நாவல், ஸ்பானிஷ் இணையத்தொடராக மாறும் போது கதாபாத்திரங்களின் பெயர்களும் அந்த மொழிக்கேற்ப மாறுகிறது.  மாட் ஹண்ட்டர் என்ற பெயர் மேத்தியோ விதல் என்றாகிறது. லாரன் ம்யூஸ், லோரேனா ஒர்டிஸ் என்றாகிறது. நாவலாகவே விறுவிறுப்பான திரைக்கதையாக இருக்கும் இந்த கதையை, கதாப்பாத்திரங்களின் பெயரை மட்டும் மாற்றி ஸ்பானிஷ் தொடராக எடுத்துவிட்டிருந்தால் கூட சுவாரஸ்யமாக தான் இருந்திருக்கும். ஆனால் மூன்று திரைக்கதையாசிரியர்கள் இணைந்து ஒரு நல்ல நாவலை மிகமிக நல்ல திரைக்கதையாக மாற்றுகிறார்கள். எந்தெந்த மாற்றங்கள் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது?

எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணைய தொடரின் முதல் அத்தியாயம் முழுவதும் நாயகன் மேத்தியோ விதாலைப் பற்றியது.  மேத்தியோ விதாலின் கதை நேர்கோட்டில் நகர்கிறது. அவன் அண்ணனோடு ஒரு பார்ட்டிக்கு செல்கிறான். அங்கே அவன் தாக்கி ஒருவன் இறந்து போக அவன் ஜெயிலுக்கு போக வேண்டியதாகிறது. பின் ஜெயில் வாழ்க்கை காட்டப்படுகிறது. இந்த ஜெயில் சம்பவங்கள் நாவலில் இல்லை. அவன் விடுதலை ஆகி வந்து ஒலிவியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்கிறான். ஒரு நாள் ஒலிவியாவின் மூலம் அவனுக்கு மீண்டும் பிரச்சனை வருகிறது. அலுவலக வேலையாக வெளியூர் செல்வதாக சொல்லிச் செல்லும் ஒலிவியா பொய் சொல்லியிருப்பது நாயகனுக்கு தெரிகிறது. அவள் ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று குழம்பும் அவன், தனியார் துப்பறியம் நிபுணியான ஜோயியை அணுகுகிறான். அவளுக்கு ஹாக்கிங்கும் தெரிந்திருக்கிறது. அவள் மூலம் தான் தன் மனைவி மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கியிருப்பது அவனுக்கு தெரிகிறது. அவனையும் சிலர் பின்தொடர்கிறார்கள். மிகவும் விறுவிறுப்பான ஒரு புள்ளியில் இந்த எபிசோட் முடிகிறது.     

ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது தேவையில்லாத பாத்திரங்களை நீக்கிவிட வேண்டும் என்பதை முந்தைய கட்டுரைகளில் பேசி இருக்கிறோம். நாவலில் நாயகன் தன் நண்பனுடன் பார்ட்டிக்கு போகிறான் என்று கதை தொடங்குகிறது. பின்பு அவன் ஜெயிலுக்கு போய் திரும்பி வந்ததும் அவனுடைய அண்ணன் உதவுகிறான் என்பதும், அவனுக்கு சகோதரிகளும் இருக்கிறார்கள் என்பதும் செய்திகளாக சொல்லப்படுகிறதே ஒழிய காட்சிகளாக அல்ல. பின் ஒரு நாள் அண்ணன் இறந்து போகிறான் என்பது செய்தியாக மட்டுமே சொல்லப்படுகிறது.  ஆனால் திரைக்கதையில் அண்ணனோடு தான் நாயகன் பார்ட்டிக்கு செல்கிறான் என ஆரம்பத்திலியே அண்ணன் பாத்திரத்தை அறிமுகம் செய்கிறார்கள். மேலும் அவன் தன் தம்பியை பாதுகாக்கும் அண்ணனாக இருக்கிறான் என காண்பித்து அவனை கவனிக்கத் தகுந்த கதாபாத்திரமாக மாற்றி இருக்கிறார்கள். இப்படி தேவையில்லாத பாத்திரங்களை நீக்குவதும், நாவலில் வரும் வெவ்வேறு கதாப்பாத்திரங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட முக்கியத்த்துவதை படத்தில் ஒரே பாத்திரத்திற்கு கொடுத்துவிடுவதும் சிறப்பான உத்தி.

அடுத்து ஒரு கதாப்பாத்திரத்தின் செய்கைகளுக்கு நியாயமான காரணங்கள் இருத்தல் வேண்டும். அதை வசனத்தின் மூலம் கூட நம்மால் சொல்லிவிட முடியும். உதாரணமாக, ஜோயி பாத்திரம், நாவலில் ஹீரோவிற்கு உதவுவதற்கு பெரிய காரணங்கள் இல்லை. ஒரு துப்பறியும் பெண்மணியாக, சன்மானத்திற்கு வேலை செய்கிறாள். ஆனால் அவனுக்காக எவ்வளவு பெரிய அபாயத்தையும்  சந்திக்க தயாராக இருக்கிறாள். நாவலை வாசிக்கும் போது இது நெருடலாக கூட இருக்கலாம். அவள் ஏன் அவ்வளவு உதவிகளை அவனுக்கு செய்ய வேண்டும்! ஆனால் திரைக்கதையில் அதற்கான காரணத்தை அடிக்கோடிட்டு காண்பிக்கிறார்கள். ‘I owe your brother’ என்கிறாள். ஹீரோவின் அண்ணன் அவளுக்கு செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக தான் அவள் ஹீரோவிற்கு பக்கபலமாக இருக்கிறாள் எனும் போது கதாப்பாத்திரத்தின் செய்கையின் மீது நம்பகத்தன்மை கூடுகிறது. இங்கே இது ஒரே ஒரு வசனத்தின் மூலம் சாத்தியமாகி இருக்கிறது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். 

இரண்டாவது எபிசோட் முழுக்க லோரேனா ஒர்டிஸ் பற்றியது. ஒரு கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொள்கிறாள். அந்த வழக்கு லோரேனாவிடம் வருகிறது. உடற்கூராய்வில் அந்த கன்னியாஸ்திரி செயற்கை மார்பகம் பொருத்தி இருப்பது தெரிகிறது. மேலும் அவள் இறப்பதற்கு முன்பு உடலுறவு கொண்டிருக்கிறாள் என்றும் தெரிகிறது. விசாரணையில் அந்த கன்னியாஸ்திரி இறந்த இரவில் அவள் அறைக்குள் யாரோ ஒரு பெண்மணி சென்றதை கவனித்ததாக அந்தப் பள்ளி விடுதியின் மாணவி ஒருத்தி சொல்கிறாள். இதெல்லாம் லோரேனாவிற்கு கன்னியாஸ்த்திரியின் மீதும் அவளது மரணத்தின் மீது வலுவான சந்தேகம் வருவதற்கு  காரணமாக அமைகிறது. அதனாலேயே அவள் வழக்கில் இன்னும் ஆர்வமாக இறங்குகிறாள். ஆனால் இந்த அழுத்தமான காரணங்கள் நாவலில் இல்லை. மேலும் திரைக்கதையில் அவளே இறங்கி எல்லாவற்றையும் துப்பறிகிறாள். நாவலில் சில விஷயங்கள் அவளுக்கு செய்தியாக சொல்லப்படுகிறது. உதாரணமாக, நாவலில், செயற்கை மார்பகத்தில் இருந்த சீரியல் நம்பரை கொண்டு அது எந்த நிறுவனத்துடையது என்பதை விசாரித்துவிட்டதாக லோரேனாவின் சக அதிகாரி சொல்கிறான். அந்த நிறுவனத்திடம் பேசிவிட்டதாகவும் சொல்கிறான். பின்பு அவள் அந்த நிறுவனத்தை தேடிச் செல்கிறாள். திரைக்கதையில் இப்படி கதையை சுற்றி வளைப்பது சிறப்பான உத்தி அல்ல. நேரடியாக நம்முடைய பிரதான கதாப்பாத்திரமே முக்கியமான வேலைகளை செய்ய வேண்டும். அதுவே நல்ல உத்தி (The silence of the white city கட்டுரையில் இதைப் பற்றி விவாதித்து இருக்கிறோம்)

நாவலில் மாட் ஹண்ட்டரின் அண்ணி வீட்டருகே அவனுடைய பள்ளிக்கால நண்பன் ஹுகோ வசிக்கிறான். அவன் ஒரு போலீஸ் அதிகாரி. அவன் மாட்டை காணும் போதெல்லாம், ‘முன்னாள் குற்றவாளி’ என்று சொல்லி சொல்லி வம்பிழுக்கிறான். மேட்டை பற்றி லாரனிடம் (லோரேனா) தவறாக சொல்பவனாகவும் இருக்கிறான். ஆனால் அவன் அப்படி நடந்து கொள்வதற்கு நியாயமான காரணங்கள் இல்லை. தன் சமூகத்தை காக்க நினைக்கும் சாமானியன் அவன், அதனால் தான் அவன் முன்னாள் குற்றவாளியான மாட் மீது சந்தேகப் படுகிறான் என்று நாவலாசிரியர் வர்ணிக்கிறார். ஆனால் இந்த பாத்திரத்தை திரைக்கதையில் வேறு மாதிரி வடிவமைத்து இருக்கிறார்கள். தொடக்கத்தில் பார்ட்டியில் மாட் மற்றும் அவன் அண்ணனை முதலில் சண்டைக்கு இழுக்கும் பாத்திரம் ஹுகோ தான். அவனால் தான் மாட் ஜெயிலுக்கு போகிறான். இதன் மூலம் இளம் வயதிலிருந்தே அவனுக்கு மாட்  மீது வன்மம் இருக்கிறது என்பதை உணர்த்தி விடுகிறார்கள். இப்போது மாட் மீண்டும் அந்த ஏரியாவிற்கு வரும் போது, அவன் மாட்டை சிக்க வைக்க எல்லா வேலைகளையும் செய்கிறான். இதை மாட்டால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அவனைப் போட்டு அடிக்கிறான். இதனால் கோபமடையும் ஹுகோ லோரேனாவிடம்  மேட் தான் குற்றவாளியாக இருக்கக் கூடும் என்று சொல்கிறான். இப்போது ஹுகோவின் செயலுக்கு நியாயமான காரணம் கிடைத்துவிட்டது அல்லவா! 

ஒரு வகையில் மாட் மற்றும் லோரேனாவின் கதை ஹீரோ ஆண்டி ஹீரோ கதை போல தான். ஒரு விசாரணை அதிகாரியாக, லோரேனாவை பொருத்தவரை, மாட் சந்தேகத்துக்குறியவன். ஒரு அப்பாவியாக, மாட்டை பொறுத்தவரை லோரேனா அவனை அடக்க நினைக்கும் அதிகாரம். இதுபோன்ற கதைகளில், எதிரெதிர் பாத்திரங்கள் குறைந்தது இரண்டு மூன்று முறையாவது சந்தித்துக் கொள்ள வேண்டும், அப்படி சந்திக்கும் இடம் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும் என்று ஆக்சன் திரைக்கதைகளைப் பற்றி பேசும் போது திரைக்கதையாசிரியர் வில்லியம் மார்ட்டல் சொல்கிறார். இங்கே இரண்டாவது எபிசோடில் முடிவில் தான் முதன்முதலில்  மாட் லோரேனாவை எதிர்கொள்கிறான். இந்த confrontation மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் கன்னியாஸ்திரியின் மரணத்தை விசாரிக்கும் லோரேனாவுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. அது அவளை மாட்டின் அண்ணி வீட்டிற்கு இட்டுச்  செல்கிறது. அவள் மாட்டின் அண்ணியிடம் விசாரிக்கிறாள். ஆனால் பெரிதாக எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. அவள் வீட்டை விட்டு வெளியே வரும் போது, அவளை எதிர்கொள்ளும் ஹுகோ, இவளுடைய கொழுந்தன் தான் மாட் எனும் முன்னாள் குற்றவாளி என்றெல்லாம் சொல்கிறான். நாவலாக மட்டுமே இத்தகைய உத்திகள் எடுபடும். 

திரைக்கதையில் லோரேனா மாட்டின் அண்ணி வீட்டிற்கு வரும் போது  மாட் அங்கு தான் இருக்கிறான். லோரேனா அவனையே நேரடியாக விசாரிக்கிறான். கதையின் ஓட்டத்தில், மாட் உண்மையை மறைத்திருக்கிறான் என்பதை  கண்டு கொள்ளும் போது அவளுக்கு அவன் மீது சந்தேகம் வலுக்கிறது. அவனை எப்படியாவது குற்றவாளி என்று நிரூபித்துவிட வேண்டும் என்று அவள் முயல்கிறாள். ஆனால் அவன் சிக்காமல் தப்பித்துக் கொள்கிறான். அல்லது அவனை சிக்க வைக்கும் அளவிற்கு அவளுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் போகிறது. இதெல்லாம் திரைக்கதைக்கு சுவாரஸ்யமான cat and mouse கோணத்தை கொடுக்கிறது. 

நாவலில் ஒரு கட்டத்தில் FBI அதிகாரி ஆதாம் யேட்ஸ் அறிமுகமாகிறார். (நாவல் அமெரிக்காவில் நிகழ்வதால் அவர் FBI அதிகாரி. இணையத் தொடர் ஸ்பெயினில் நிகழ்வதால் அவர் Special Crime Unit-ஐ சேர்ந்த அதிகாரியாக வருகிறார்). அவர் அறிமுகம் ஆகும் போதே, அவருடைய எண்ண ஓட்டங்களில் இருக்கும் சலனம் வெளிப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்த பெயர், புகழ், குடும்பம் எல்லாம் சிதைந்து போய் விடுமோ என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றுகிறது. இங்கிருந்தே அந்த கதாப்பாத்திரத்தின் மீது சந்தேகம் வர தொடங்குகிறது. இப்படி உன்மையை முன்கூட்டியே போட்டு உடைப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது? அப்படி முன் கூட்டியே ஒருவன் பசும்தோள் போற்றிய புலி என்று காண்பிக்கிறோம் என்றால், அவனால் மற்றவர்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்துவிடுமா என்ற கேள்வி எழும்படி கதையை நகர்த்த வேண்டும். நாவல் அப்படி அமைந்திருக்கவில்லை.  

ஆனால் திரைக்கதையில் ஒரு புத்திசாலித்தனமான மாற்றத்தை செய்திருக்கிறார்கள். ஆரமப்த்திலிருந்தே ஆதாம் யேட்ஸ் பாத்திரத்தை (திரைக்கதையில் அவர் பெயர் தியோ) நியூட்ரலான பாத்திரமாக காண்பிக்கிறார்கள். அவருடைய உண்மை முகத்தை எதிர்பாராத நேரத்தில் ஒலிவியா கதாப்பாத்திரத்தின் மூலம் தெரியப்படுத்தி இருப்பார்கள். அது வெளிப்படும் இடமும் அருமையான ‘ட்விஸ்ட்’-ஆக அமைந்திருக்கும். இதெல்லாம் தான் திரைக்கதையாசிரியர்களின் மெனக்கெடல்.

மேலும் நாவலில் ஆதாம் கதாப்பாத்திரம் வந்ததுமே, லாரன் (லோரேனா) அவரோடு இணைந்து கொள்கிறாள். அவரோடு  சேர்ந்து துப்பறிகிறாள். ஒரு கட்டத்தில் அவர் அவளை வெளியேற்றப்  பார்க்கிறார். அந்த  வழக்கில் பணியாற்றினால் போதும் என்பதால் அவரது நிபந்தனைக்கு  கட்டுப்பட்டு தன் பணியை தொடர்கிறாள். நாவலில் அவள் கதாப்பாத்திரம் submissive-ஆக வெளிப்படுகிறது. ஆனால் இணையத்தொடரில் அப்படி இல்லை. கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்று கண்டுகொண்டதும், அவள் அந்த வழக்கிற்காகவே தன்னை அற்பணிக்கிறாள். அந்த வழக்கு Special Crime Unit-யிடம் சென்றாலும் அவள் விட்டுக் கொடுப்பதாக இல்லை. தன் மேலதிகாரியை எதிர்த்துக் கொண்டு தன்னிச்சையாக வழக்கை துப்பறிக்கிறாள். இங்கே ஆதாம் பாத்திரம் லொரெனாவுக்கு ஒரு external conflict-ஆக விளங்குகிறது. அவரை ஜெயிப்பது அவளுடைய நோக்கமாகிறது. மேலும் கதையில் அவளுக்கு  internal conflict-டும் இருக்கிறது. அவளுடைய சிறுவயதிலேயே அவள் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். இந்த பாதிப்பு அவளை உருத்திக் கொண்டே இருக்கிறது. (ஆனால் திரைக்கதையை விட நாவலில் இந்த அகப்போராட்டம் நிறைவையான புள்ளியை எட்டுகிறது). இது போல நம் பிரதான பாத்திரத்திற்கு அகப் போராட்டமும், புறப் பிரச்சனையும் இருக்கும் போது திரைக்கதை மேலும் சுவாரஸ்யமாகிறது. 

திரைக்கதையில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டியது அவசியம். நாம் முந்தைய கட்டுரைகளில் பேசியது போல, கதை சொல்லலில் நாவலுக்கென்று ஒரு சுதந்திரம் இருக்கிறது. நாம் எவ்வளவு பாத்திரங்களையும் நாவலில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் திரைக்கதையில் பாத்திரங்களின் இருப்பை, அவர்கள் கதைக்கு என்ன பங்களிப்பு செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி தான் முடிவு செய்ய போகிறது. நாவலில், சோனியா என்றொரு முக்கிய பாத்திரம்  உண்டு. நாயகனால் கொல்லப்படும் இளைஞனின் அம்மா அவள். அவளுக்கும் நாயகனுக்கும் ஒரு எமோஷனல் உறவு உருவாகிறது. ஆனால் அந்த கதை நாவலின் மூலக்கதையிலிருந்து விலகி நிற்கிறது. திரைக்கதையில் அவள் ஒரு வங்கி அதிகாரியாக வருகிறாள். தன் மனைவி எங்கிருக்கிறான் என்பதை கண்டுகொள்ள, நாயகன் அவளுடைய க்ரெடிட் கார்டை டிராக் செய்யும் படி சோனியாவிடம் கூறுகிறான். இப்படி  திரைக்கதையில் ஒரு சிறு மாற்றத்தை செய்து அவளையும் ஹீரோவிற்கு உதவும் பாதத்திரமாக மாற்றி இருக்கிறார்கள். ஹீரோ ஒரு அப்பாவி என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவளாக அவள் இருக்கிறாள். நாவலை விட, திரைக்கதையில் நாயகனுக்கும் அவனுக்குமான உறவில் முழுமையை காண முடிகிறது. 

திரைக்கதையில் இன்னும் பல குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் உண்டு. நாவலில், கண்ணியாஸ்த்திரியின் மரணத்தை விசாரிக்கும் FBI அதிகாரிகளின் கவனம் ஒரு கட்டத்தில் மாட்டின் பக்கம் திரும்புகிறது. அதற்கு பெரிய காரணங்கள் இல்லை. ஆனால் திரைக்கதையில், மாட் இருந்த ஜெயிலில் தான் ஸ்பெசல் க்ரைம் யூனிட் தேடிக்கொண்டிருக்கும் அனிபால் இருந்தான், எனவே இருவருக்கும் ஏதோ தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கதையை அமைத்து இரண்டு கதைகளையும் நம்பும்படி இணைத்திருக்கிறார்கள். 

மேலும் திரைக்கதையில் மாட்டை ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்திற்கு இடமானவனாகவே சித்தரித்த்து இருக்கிறார்கள். அவன் ஏதோ ஒரு உண்மையை மறைத்து கொண்டே இருக்கிறான். இந்த சித்தரிப்பிற்கு உதவும் வகையில் அவனுடைய சிறை வாழ்க்கையை காண்பித்து, அவன் சிறையில் ஒருவனை கொன்றிருக்கிறான் என்ற கிளைக்கதையை வைத்து, ஒருவேளை இவன் தான் எல்லாவற்றையும் செய்கிறானோ என்ற கேள்வியை உருவாக்குகிறார்கள். நாவல் அப்படி எழுதப்பட்டிருக்கவில்லை. த்ரில்லர் கதைகளில், யார் குற்றவாளியாக இருக்கக்கூடும் அல்லது எதனால் குற்றம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பன போன்ற தொடர் கேள்விகள் பார்வையாளர் மனதில் எழும் வகையில் திரைக்கதை அமைக்க வேண்டும். பார்வையாளர்களை தொடர்ந்து யூகிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே சிறப்பான உத்தி. அந்த உத்தி இந்த இணைத் தொடரில் சிறப்பாக கைகூடி இருக்கிறது.   

2 thoughts on “The Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.