பிறழ்ந்த இரவுகள்- நெடுங்கதை

கடந்த ஆறு மாதங்களாக இங்கே வந்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி தான் என்னை முதன்முதலில் இங்கே அழைத்து வந்தாள். நான் செய்த பாவம் என் மனைவிக்கு தெரியும். அவள் என்னை மன்னித்துவிட்டதாக சொன்னாள். உண்மையில், இந்த விஷயத்தில் மன்னிக்கும் உரிமை அவளிடம் இல்லை. ஒருவேளை என்னை தண்டிப்பதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அவள் அப்படி சொல்லியிருக்கலாம்.

“நீங்க இதை மறந்துதான் ஆகனும்” டாக்டர் என்னிடம் சொன்னார். என்னால் மறக்கமுடியாது என்பது அவருக்குத் தெரியும். நான் எதுவும் பேசாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். தோட்டத்தில், மரத்தடியில் அமர்ந்திருந்த ஒருவர் தன் கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தார். ஒரு லத்தின் அமெரிக்க சிறுகதை தொகுப்பு அது. அவரை நான் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் திடிரென்று அந்த புத்தகத்தை தன் முழு பலத்தை திரட்டி கிழித்து தன் தலையை சுற்றித் தூக்கி எறிந்தார்.  பின்பு “குப்பை, எல்லாம் குப்பை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடினார்.

நானும் என்னை மறந்து “குப்பை” என்றேன். டாக்டரின் குரல் என்னை மீண்டும் அறையினுள் அழைத்து வந்தது.

“சட்டத்துக்கு தான் குற்றவாளி நிரபராதி எல்லாம். எங்களுக்கு நீங்க ஒரு பேசன்ட்”

பேசன்ட். நோயாளி. என்னை மனநோயாளி என்கிறார் டாக்டர். ஆம். அப்படிதான். வாழ்க்கை சரியான பாதையில் தான் நகர்ந்துக் கொண்டிருந்தது, மூன்று வருடங்களுக்கு முன்பு வரை.

“தூ நைட் ஷிப்ட் மே ஆஜா” திடீரென்று ஒருநாள் என் மேலதிகாரி சொன்னார். பொதுவாக ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டார்கள். எல்லாம் திருமணம் ஆனவர்கள். இத்தனைக்கும் என்னைவிட வயதில் சிறியவர்கள்.

அங்கெல்லாம் அப்படித்தான். மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துக் கொள்வார்கள். ராத்திரியில் மட்டும்தான் பெண்டாளா வேண்டுமென்று யாரோ சொல்லி வைத்துவிட்டு சென்ற எழுதப்படாத அந்தக் கவைக்குதவாத சட்டத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றுகிற நாட்டில் அவர்கள் ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனென்று சொன்னது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை.

எனக்கு எந்த ஷிப்டாக இருந்தாலும் பிரச்சனையில்லை. இரவில் எந்த வேலையும் இருக்காது. கடமைக்கென்று ஒரு பொறியாளர் இருக்க வேண்டும். எங்காவது ஒன்றிரண்டு எந்திரங்கள் ஓடும். அதில் ஏதாவது பழுதுவந்தால் அதை பார்ப்பதற்கு ஒரு பொறியாளர் வேண்டும். அதாவது வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு பொறியாளர் வேண்டும்.

எனக்குப் பழுதெல்லாம் பார்க்கத் தெரியாது. ஆனால் இருபத்தினாலு மணி நேரமும் யாரோ ஒரு பலிகடா தொழிற்சாலையில் இருக்கவேண்டும். நான் ராத்திரி நேரத்து பலிகடா. “ராத் கா பலிபக்ரா”

கம்ப்ரசர் அறையிலிருந்து வழக்கம்போல நாராசமான  அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது. காது ஜவ்வில் குண்டூசி குத்துகிற மாதிரி இருக்கும் அந்த கம்ப்ரசர் ஓடுகிற சப்தம். வரிசையாக நிறைய கம்ப்ரசர் ஓடிக்கொண்டே இருக்கும். வளிமண்டலக் காற்றை உறிஞ்சி அழுத்தத்தை அதிகப்படுத்தி ஒட்டு மொத்த தொழிற்சாலைக்கும் அழுத்தம் நிறைந்த காற்று வினியோகிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

அந்தக் கம்ப்ரசர் அறையின் மூலையில் இருக்கும் ஒரு சிறு கண்ணாடி அறையில் தான் என் வேலை நேரம் முழுக்கக் கரையும். அங்கு கணினி இல்லை. கணினி உபயோகப் படுத்த வேண்டுமென்றால் அங்கிருந்து நடந்து அலுவலக அறைக்கு வர வேண்டும். பெரும்பாலும் நான்  அலுவலக அறையில் இருக்கமாட்டேன்.

தொடக்கத்தில் காலை நேர வேலை செய்யும் போது அலுவலகத்தில் நிறைய பேர் இருப்பார்கள். சந்தைக் கடை மாதிரி எந்நேரமும் சப்தம் வந்துக் கொண்டே இருக்கும். அதுவும் அவர்களின் மூன்றாம் தர ஆங்கிலத்தைக் காதுகொடுத்துக் கேட்க இயலாது. தேவையில்லாமல் என்னை ‘மதராசி’ என்று சொல்லிச் சொல்லி ஏளனம் செய்வார்கள். எனக்கு ஒரே ஒரு பிரச்சனை. எனக்குக் கோபம் வந்தால் நான் சரமாரியாக ஆங்கிலம் பேசுவேன். எல்லாமே அதிகம் உபயோகிக்கப்படாத ஆங்கில வார்த்தைகள். சிறுவயதில்  பொழுதைக் கழிப்பதற்கு நான் அதிகம் படித்த ‘ஆக்ஸ்பார்ட்’ அகராதியிலிருந்து கற்றுக்கொண்ட வார்த்தைகள். ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் தங்கள் ஜகாவை தென்னகத்தில் வைத்திருந்ததால் தென்னாட்டுக்காரர்களுக்கு ஆங்கிலம் நன்றாக வரும், பிற மாநிலத்தாரைக் காட்டிலும். ஆனால் குஜராத்திகளுக்கு ஆங்கிலம் குதிரைக்கொம்பு. அதனால், படித்தவர்களுக்கே அதிகம் புரியாத என் ஆங்கில அறிவை குறுகிய புத்தி கொண்டவர்களிடம் வெளிக்காட்ட  முடியாது. இப்பிரச்சனைகளைத் தவிர்க்கவே நான் அலுவலக அறையில் இருப்பதை விட சைட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பேன்.

அதுமட்டுமின்றி எனக்கு எப்போதும் கூட்டம் பிடிக்காது. முக்தி அடைவதற்கு ஒரே வழி தனிமையென்று நம்புகிறவன் நான். தாயுமானவர் சொல்லிய மாதிரி ‘சும்மா’ இருக்கவும் ஒரு மனிதன் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறவன் நான். இக்காரணங்களாலே நான் கம்ப்ரசர் அறையே கதியென்றிருக்கத் தொடங்கினேன் .

அன்று கண்ணாடி அறையினுள் நுழைந்ததும் ‘நமஸ்தே சாஹிப்’, வணக்கம் வைத்தவாறே ஆபரேட்டர் அங்கிருந்து நகர்ந்தான். நான் எப்போது உள்ளே நுழைந்தாலும் அவர் அங்கிருந்து நகர்ந்து விடுவார். அது ஒரு விசித்திரமான மரியாதை. அந்த அளவுக்கு நான் என் மரியாதையைக் காப்பாற்றி வைத்திருந்தேன்..

“சாஹிப். லடிகி நம்பர் சாயியே கியா?” ஒரு நாள் சிரித்துக் கொண்டே வினவினான்.

“ஐசா மத் பூச்சோ! நீ எப்ப ஆபரேட்டர் வேலைய விட்டுட்டு, பொம்பள சப்ளை  பண்ண ஆரமிச்ச!” கோபத்தோடு கத்துகிற மாதிரி நடித்தேன் என் ‘கெத்த’ காப்பற்றிக் கொள்வதற்காக.

அன்றிலிருந்தே அவர் எனக்கு மரியாதை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.  எந்நேரமும் காலாட்டிக் கொண்டு அந்த அறையிலேயே அமர்ந்து மொபைலில்  வீடியோ பார்ப்பதுதான் அவர் வேலை. நான் வந்துவிட்டால் மரியாதையாக அங்கிருந்து எழுந்து வெளியே போய்விடுவார். விசித்திரமான மரியாதை.

“நமஸ்தே நமஸ்தே” என்றவாறே கண்ணாடி அறையில் அமர்ந்தேன். டிராயரைத் திறந்து உள்ளே இருந்த அந்த தடி புத்தகத்தை எடுத்தேன். என் வாழ்க்கையில் நான் பெரும்பாலான நேரம் படிப்பதற்காகதான் செலவளிக்கிறேன், சில நேரங்களில் புத்தகங்களை, சில நேரங்களில் மனிதர்களை. புத்தகத்தின் அட்டையில் சிரித்துக் கொண்டிருந்தார், மாபசான். டெல்லி சென்றிருந்தபோது வாங்கிய புத்தகம் அது.

“A complete Collection of Guy De Maupassant Short Stories” முதல் இரண்டு பக்கங்களைத் திருப்பி அட்டவணைக்கு சென்றேன். ‘இம்பொலைட் செக்ஸ்’-772 ஆம் பக்கம். ஏனோ தெரியவில்லை, மனம் எதையோ நினைத்துக்கொண்டு அந்தக் கதையை நோக்கிச்சென்றது. என் மனம் எதிர்பார்த்ததைப் போல் அந்தக் கதை இல்லை. படிக்கப் பிடிக்கவில்லை.  எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்குமென்பது உண்மை தான் போல!  புத்தகத்தை அது இருக்க வேண்டிய இடத்திலேயே வைத்துவிட்டு, வேறு ஏதாவது புத்தகம் கிடைக்குமாவென்று என் பையைத் தேடினேன். ஒரு சிட்னி செல்டன் புத்தகம் கிட்டியது. எப்போதோ என் நண்பன் எனக்குக் கொடுத்த பழைய புத்தகம் அது.

நான் பொதுவாக மேற்கத்திய எழுத்தாளர்களை அதிகம் படிப்பதில்லை. விசித்திரமாக இருப்பதில் ஒரு ‘கெத்’ இருக்கு என்றே நினைக்கிறேன். குப்பை மாதிரி எழுதிக்குவிக்கும் ஆங்கில எழுத்தாளர்கள் மீதெனக்கு ஆர்வம் குறைவு. ஆனாலும் ஒருநாள் சிட்னிசெல்டன் படித்தால்  ஒன்றும் குடி மூழ்கிடாது. கிழிந்த அந்தப் பழைய புத்தகத்தில், மூன்றாவது பக்கத்திலேயே நாயகியின் ஆடை களையப்பட்டது. எனக்கு என்னென்னமோ எண்ணங்கள் தோன்றின. உடம்பெல்லாம் ஏதோ செய்தது. எனக்கு கவர்ச்சி பிடிக்கும், விரசம்பிடிக்காது.

மேலாடை  இல்லாமல் உக்ரைனில் போராட்டம் நடத்திய பெண்ணியவாதி ஒருத்தியைக்கண்டு இந்திய அரசு துடிக்கிறது. அவள் கூறும் காரணங்களைக் காதுகொடுத்துக் கேளாமல் அவளைக்கைது செய்ய எத்தனிக்கிறது. ஆனால் முகத்தைச் சுழிக்கவைக்குற அளவிற்குத் தன் செழிப்புகளைக் காட்டுகிற ஒரு நடிகைக்கு தேசியவிருது கொடுக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் கைதட்டுகிறது. பாவம் இந்தியர்களுக்கு கவர்ச்சிக்கும் விரசத்திற்கும் வித்தியாசம் தெரியாது. அந்தப் புத்தகத்திலிருந்தது விரசம். அது எனக்குப் பிடிக்க வில்லை. அந்தப் புத்தகத்தை அங்கேயே போட்டுவிட்டு வெளியேவந்தேன்.

வெளியில் அமர்ந்து ஆபரேட்டர் மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகபாவனைகள் பார்க்கச் சகிக்கவில்லை. அப்படியே காறி உமிழலாமென்று இருந்தது. அந்த ஆளுக்கு ஐம்பது வயதிருக்கும். கல்யாணமாகி 30 வருடங்களுக்கு மேலாகிறது. ஒன்பது வயதில் ஒரு பேத்தி வேறு உண்டு. ஆனால் இன்னும் மொபைலில் ‘போர்னோ’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

‘போர்னோ’ படம் பார்ப்பதைப் பற்றி நான் குறை சொல்லவில்லை. ஆனால் வாழ்க்கைக்கு வடிகாலாக இருக்க வேண்டிய விடயங்கள் வாழ்க்கையாகிப் போவதைத்தான் நான் எதிர்க்கிறேன், நிஜ வாழ்க்கையை நிழல் உருவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்குவதை ஆதரிப்பதைதான் நான் வெறுக்கிறேன். மனிதனுடைய தேவைகளும் ஆசைகளும் இச்சைகளும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அதைக் கட்டுப்படுத்த மறந்துவிட்டு நிழல் உருவங்களுக்கு அடிமையாகிப் போவது மடத்தனம்.

என்னை நிமிர்ந்து பார்த்து, “சாஹிப், ஆப்கே பாஸ் குச் வீடியோ ஹே” என்று வினவினான், நிழல் உருவங்களால் ஆக்கிரமிக்கப் பட்ட அவன்.

கிழவன் பார்த்த வரை பத்தாதென்று என்னிடம் வேறு வீடியோ கேட்கிறான்.

“கியா சாஹிப்?”

“குச் நஹி, மே ஜாரா ஹூன்”

திரும்பிப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். பொதுவாக பொழுது போகாத பல சமயங்களில் நான் தொழிற்சாலைக்குள்ளேயேதான் சுற்றித் திரிவேன். அன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கம். என் உடம்போ மனசோ, என் கட்டுப்பாட்டில் இல்லை.

அன்று ஹோலி பண்டிகை என்பதால் யாருமே தொழிற் சாலையில் இல்லை. ரெண்டு சொறி நாய்கள் புணர்ந்துகொண்டிருந்தன. அதை ரெண்டு செக்யூரிட்டி கார்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதன்மேலும் பற்றின்றி வீதியில் இறங்கி நடந்தேன்.

மணி ஒன்றரை இருக்கும். நிசப்தம் வழிந்தோடிய தெருக்கள். தவளை கத்துகிற சப்தம் மட்டும் கேட்டது. சாலையின் இரு புறமும் வெறும் மரங்கள். நான் வேலை செய்யும் தொழிற்சாலையில் இருந்து வலது புறம் போனால் ‘சுவாளி’ என்று ஒரு பீச் இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். அது வரைக்கும் பார்த்ததில்லை. ரொம்ப தூரம் போக வேண்டுமென்று தெரியும். எனக்கு ஒரு வேலையுமில்லை. காலையில் ஏழு மணிக்கு அவுட் பன்ச் அடிக்க வேண்டும். அதற்கு முன்பாக கிளம்பினால் லாஸ் ஆப் பே. எவ்வளவு நேரம் அதிகமாக வேலை செய்தாலும் நிர்வாகம் கண்டுக் கொள்ளாது. ஆனால் ஒரு நிமிடம் சீக்கிரம் கிளம்பினாலும் ஒரு நாள் சம்பளம் போய்விடும், இந்தியாவிலேயே பெரிய நிர்வாகம். கேட்க நாதியில்லை. ஏழு மணி வரை நேரத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக நான் சுவாளி நோக்கி நடந்தேன்.

அப்போது தவளை சப்தத்தோடு சேர்ந்து வேறொரு சப்தமும் கேட்டது, நான் தொடர்ந்து நடக்க, சப்தம் அதிகமாகக் கேட்டது. அங்கு நிரம்பியிருந்த நிசப்ததைக் கலைத்தது அருகிலிருந்த புதரினுள்ளிலிருந்து வந்த அந்தப் பெண்ணின் பயங்கரமான அலறல். ஒரு நிமிடம் திகைத்து நின்று, அந்த அலறலை ரசித்தேன். அதில் ஏதோ ஒரு சுகம், சொர்க்கம் பொதிந்திருந்தது. பின் சுதாரித்துக் கொண்டு, புதரை நோக்கி ஓடினேன். முன்னே நின்றவன்  இரண்டு கைகளையும் விரித்து என்னை அப்படியே தடுக்க வந்தான். எனக்கு சண்டை போடத் தெரியாது, இருந்தாலும் தில்லாகக் கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடினேன். உடம்பில் அடிப்பதைவிட ஒருவன்  மனதில் அடிக்க வேண்டும். நான் போட்ட சத்தத்திலேயே அவன் பயந்துவிட்டான். அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது.

அதைப் பார்த்ததும் நான் இன்னும் அதிகமாக கத்தினேன்.

“பஹேன் சோத்”

“க்யா கர்ரஹா ஹே து… கோனே அந்தர்… லXX” கெட்டவார்த்தைகள் சரமாரியாக என் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன. பொதுவாக நான், மூன்று மொழிகளில் பாரபட்சமின்றி கெட்ட வார்த்தை பேசுவேன். எல்லா மொழிகளிலும் வகை வகையான கெட்ட வார்த்தைகள் உண்டு. ஆனால் உடம்பின் உறுப்புகளைக் குறிக்கும் வார்த்தைகள் எப்படி கெட்ட வார்த்தையானதென்று  இன்னும் புரியவில்லை. பல நாட்கள் தூங்காமல் கெட்ட வார்த்தைகள் ஆராய்ச்சி செய்திருக்கிறேன்.  இந்திய மொழிகளில் பெரும்பாலான கெட்டவார்த்தைகள் உடல் சம்பந்தப் பட்டது. பெரும்பாலும் எல்லாக் கெட்டவார்த்தைகளும் அப்படிதான்…

தொடர்ந்து என் வார்த்தைகள் உச்ச மண்டிலத்தை அடைய அவன் அங்கிருந்து ஓடி விட்டான். புதரின் உள்ளிருந்து இருவர் வேகமாக என்னை நோக்கி ஓடி வரவும், நான் பாய்ந்து அருகில் இருந்த கூரியக் கல்லை எடுக்கவும் சரியாக இருந்தது. கல், மனிதனின் முதல் ஆயுதம். உலகிலேயே மிகக் கொடூரமான ஆயுதமும் கூட. கல்லை இறுக்கமாகப் பிடித்திருந்த என் கையைப் பார்த்ததும் இருவரும் ஓடத் தொடங்கினார்.

நான் அவர்களைத் துரத்திக் கொண்டே ஓடினேன். அதில் ஒருவன் கால் தடுக்கி கீழே விழுந்து, முட்டி சிராய்ந்து, மீண்டும் எழுந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஓடினான். ஒரு விடயம் தெளிவாகப் புரிந்தது. அவர்கள் அதற்கு முன் எந்தத் தவறும் செய்யாத விடலைகள். அவர்களுக்கு இருபது வயதுக்குள் தான் இருக்கும். எங்கேயோ திருட்டு சாராயம் வாங்கிக் குடித்து விட்டு, சூட்டைத் தணிக்க முடியாமல் தனியாகப் போனவளைச் சீண்டியிருக்கிறார்கள்.

நான் துரத்துவதை நிறுத்தி விட்டு, சிறிது நேரம் ஒரே இடத்தில் நின்று கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தேன். இடையிடையே சில ஆங்கில கெட்ட வார்த்தைகளையும் உதிர்த்தேன். அவர்களுக்குப் புரிந்ததா என்பதைப் பற்றிய கவலை எனக்கில்லை. கெட்ட வார்த்தை பேசுவதிலும் ஒரு சுகம் இருக்கதான் செய்கிறது….

சொல்ல முடியாத அந்தச் சுகத்தில் லயித்திருந்த என்னை அந்தப் பெண்ணின் அழுகுரல் தான் மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்தது. புதர் நோக்கி ஓடிய போது, புல்லிலிருந்த அந்தப் பை காலில் சிக்கியது. பை முழுதும் பெண்ணின் துணிகள். ஒருவாறு நிலைமையை யூகித்துக் கொண்டு பையைக் கையில் எடுத்துக் கொண்டு அந்தப் புதர்வரை சென்றேன். வெளியில் புதர் போன்று காட்சியளித்த அந்த இடத்தின் உட் புறத்தில் புல்தரை பரந்து விரிந்திருந்தது.

அந்தப் பெண் அழுது முடிக்கும் வரை அங்கேயே அமைதியாக நின்றிருந்தேன், கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள். பின் பொறுமையாகப் பேசத் தொடங்கினேன்.

“கோனே து? கஹான் சே ஆயா?”

“சொல்லுடி. யாருடி நீ…” தொடர்ந்து பல முறை வினவியதும் அவள் சற்றே தடுமாறி பதிலளித்தாள். அவள் பேச்சில் பெரும்பாலும் மராத்தி வார்த்தைகள் கலந்திருந்தன. ஹிந்தி பேசத் திணறும்போதே, ஏதோ கிராமத்திலிருந்து வருகிறாள் எனக் கண்டுகொண்டேன்.

“இதற் க்யு ஆயா?”

அவள் அழுதுகொண்டே சொன்னது, “அம்மா செத்துட்டா… வேலை தேடி இங்க வந்தேன்… அவங்க வேலை வாங்கித் தரேன்னு சூரத்துல இருந்து இங்க கூட்டி வந்தாங்க”

அப்போது மீண்டும் உரைத்தது. அந்த இளைஞர்கள் திட்டம் போட்டு தூக்கி வந்திருக்கிறார்கள். பாவம் எத்தனை நாள் காத்திருந்தார்களோ!

“ராத்திரி நேரத்துல எவன் வேலை கொடுப்பான். உனக்கெங்க அறிவு போச்சு…”

“தங்க இடம் தரேன்னு சொன்னான். தங்கச்சி தங்கச்சின்னு சொன்னான். ஊர் பாச பேசுனான்”

தங்கச்சியாவது, அக்காவாவது… எனக்குள்ளே முனகிக் கொண்டேன்.

“உன்ன யாரும் தேடமாட்டாங்களா?”

மீண்டும் கொஞ்ச நேரம் அழுகை. “எனக்குன்னு யாரும் இல்ல. ஊர்லதான் தப்பா நடந்துக்குறாங்கனு இங்க வந்தேன். இவங்களும்… ரொம்ப நன்றி சார். என்னக் கொன்னிருந்தாக் கூட கேட்க ஆளில்லை…”

நன்றாகவே உரைத்தது, ‘கொன்னிருந்தாக் கூட கேட்க ஆளில்லை’. அந்தப் பொண்ணுடைய கதறலை நான் பொருட்படுத்தவேயில்லை. அவள் வாயை இறுக்க மூடினேன். சிறிது நேரத்தில் அவளின் கதறல் காற்றில் கரைந்தது. வாய்ப்புகள் கிடைக்காத வரைக்கும் அனைவரும் நல்லவர்கள்தான். நானும் நல்லவன்தான், சில நிமிடங்களுக்கு முன்பு வரை…

அந்தப் பெண் அழுதுக்கொண்டே இருந்தாள். நான் திரும்பிப் பார்க்காமல் மீண்டும் தொழிற்சாலைக்கே வந்துவிட்டேன். அந்தப் பெண்ணுக்கு இருபது வயது இருக்கும். களையான முகம். நீல நிற சல்வாரில் ரொம்ப லட்சணமாகவே இருந்தாள். ஆனால் இதெல்லாம் அவள் ஆடையைக் கிழிக்கும் போது எனக்குத் தோன்றவில்லை.

என்னால் கம்ப்ரசர் அறையில் இருக்க முடியவில்லை. மாபசான் என்னைப் பார்த்து சிரிப்பது போல்  இருந்தது . ’ஏன்டா மெத்தப் படிச்ச மேதாவியே! கடைசியில் நீயும் ஒரு…’

அவர் என்னைப் பார்த்து கேட்பது மாதிரி இருந்தது. என் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது.

“சாஹிப் கியா ஹுவா?” ஆபரேட்டர், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தான். நான் எதுவும் பேசாமல் அலுவலகத்திற்கு வந்து அமர்ந்தேன். ஏ.சி அறையிலும் வேர்த்துக் கொண்டே இருந்தது,

‘நல்லா நினைவிருக்கு. அந்தப் பொண்ணு என்னத் தடுக்கல. நாலு பேரு தூக்கிப் போய் ஒரு பொண்ண பலாத்காரம் பண்ணலாமேயொழிய, ஒருத்தனால ஒரு பெண்ணோட உரிமையில்லாம கற்பெல்லாம் அழிக்க முடியாது’ இப்படி  நான் படித்த  மனோதத்துவத்தையெல்லாம் சொல்லி என் மனதை தேற்றிக் கொள்ள முயன்றேன். அனால் மனக் குரங்கு சாந்தி அடையவில்லை. முந்தைய நாள் வரை பெண்ணியவாதியென்று பெருமையாக சொல்லிக்கொண்ட என்னால் இனிமே பெருமைப்பட முடியாது என்று எண்ணினேன். ஒரு பெண்ணுடைய உரிமை இல்லாமல் அவளைத் தொடுவது மட்டும் தப்பில்லை. அவள் உரிமை இல்லாமல் அவள் உணர்ச்சியைத் தூண்டி விடுவதும் தப்புதான்.

நான் செய்தது மிகப் பெரிய தப்பு. துரோகம். அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதாய்ச்  சொல்லிச் சீரழித்துவிட்டேன். நான் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணிற்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்திருக்கலாம். அவள் முன்னே மரியாதைக்குரிய ஒரு மனிதனாய் நிமிர்ந்து நின்றிருக்கலாம். ஆனால், நான் என் இச்சைக்கு அடிமை ஆகிவிட்டேன். இப்போது நினைத்தாலும் என் முகத்தில் நானே காறி உமிழ வேண்டும் என்று தோன்றுகிறது.

எல்லோருள்ளும் ஒரு ஆதிக்கவாதி முதலாளித்துவவாதி ஒளிந்திருக்கிறான். அவளால் என்னை என்ன செய்ய முடியுமென்ற எண்ணம். நான் அறியாமையில் தப்பு செய்யவில்லை. மேதாவித் தனத்தில் தப்பு செய்துவிட்டேன். அதுதான் என்னை அதிகம் உறுத்துகிறது. நான் படித்த படிப்பெல்லாம் பொய். கீதாசாரம் பொய். தில்லைப்பதிகம் பொய். நான் படித்த எல்லாம் வீண்..

வாழ்க்கை அழகு நிறைந்த பூந்தோட்டம் கிடையாது. அது ஒரு குப்பை. மனித மனம் ஒரு சாக்கடை. அங்கு வெறும் இச்சைகளும் கீழ்த்தரமான எண்ணங்களும்தான் புதைந்து கிடக்கிறது. கடைசியில் பிராய்ட் தான் ஜெயிக்கிறான். எல்லாமே வெறும் ஹார்மோன்ஸ்தான். நாமெல்லாம் ஹார்மோன்ஸின் அடிமைகள். அதைக் கட்டுப் படுத்த யாரும் சொல்லித்தரவில்லை. யாராலும் கட்டுப் படுத்தவும் முடியாது. நன்னெறி பேசுகிற உன்னத இலக்கியங்களெல்லாம் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவே சொல்லித் தருகின்றன. சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள யாரும் சொல்லித்தருவதில்லை.

நிர்வாணமாய் ஒரு பெண் உன் முன் வந்தால் கண்ணை மூடிக் கொண்டு சாமியாராகப் போ, என்று சொல்லிதரும் இலக்கியம் எதுவும் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு கட்டுபாடோடு இரு என்று சொன்னதில்லை. யாராலும் சொல்லவும் முடியாது.

அப்புறம் என்ன உன்னத இலக்கியம்! உலக இலக்கியம்.

எல்லாம் பொய். நன்னெறிகள் பொய். எல்லாம் செப்படி வித்தை. கீழ்த்தரமான மனித வாழ்க்கையில் எதுவும் உண்மையில்லை…

இல்லாத கடவுளை இருப்பதாக நினைத்து நானும் வேண்டியிருக்கிறேன், பாரதி போல

“சிந்தை தெளிவாக்கு அல்லாளிதை செத்த உடலாக்கு”

ஆனால் எதுவுமே எனக்குப் பயன்படவில்லை. சிந்தித்துப் பார்த்தால் நானும் ஓர் கபட வேசதாரியோவென்று தோன்றுகிறது. என்னைக்காட்டிலும் மொபைலில் ‘போர்னோ’ படம் பார்க்கும் அந்தக் கிழவன் எவ்வளவோ மேல்…

என் குற்ற உணர்ச்சி என்னை அணு அணுவாச் சிதைக்கத் தொடங்கியது.

‘அவ நிச்சயம் நல்ல பொண்ணா இருக்கமாட்டா. இந்த நேரத்துல தனியா வெளிய வரவ நல்லவளா இருக்க முடியாது’ நான் ஏதேதோ சொல்லி என் குற்ற உணர்ச்சியைக் குறைக்கப் பார்த்தேன். என் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது…

மணி 4. காரை எடுத்துக்கொண்டு அந்தப் புதரை நோக்கிப் போனேன். அவள் அங்கு இல்லை. அந்தப் பையும் இல்லை. அந்த இடத்தில் அவளோட கிழிஞ்ச சல்வார் மட்டும் இருந்தது. அதெல்லாம் ரத்தம். அதைப் பார்த்ததும் விளங்கிற்று. நான் நினைத்த மாதிரி இல்லை. அவள் உண்மையாவே ஒரு அப்பாவி பெண். என் மனதை சாந்தப் படுத்த முடியவில்லை, கத்தினேன்.

சாடிஸ்ட்… சாடிஸ்ட். என்னை நானே திட்டிக் கொண்டேன். வேகமாக என் காரை எட்டி எட்டி உதைத்தேன், கால் வலி எடுக்கிற வரைக்கும். ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழித்த அந்தக் குற்ற உணர்ச்சியை தாங்கிக் கொள்ள இயலாமல், கொஞ்ச நேரம் அங்கேயே உக்கார்ந்து அழுதேன்.

விடியத் தொடங்கிற்று. சாலையில் தொழிற்சாலை பர்ஸ்ட் ஷிப்ட் வேலைக்காக பலரும் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் என்னை ஒருமாதிரி ஒரேமாதிரி பார்க்கத் தொடங்கியதும், நான் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சூரத் நோக்கிச் சென்றேன். மிக மோசமாகவே காரை ஓட்டிச் சென்றேன் என்று நினைக்கிறேன். சிக்னலில் நிற்கவில்லை. நான் எப்போதும் அப்படி ஒட்டியதில்லை. ஆனால் சூரத்தில் எல்லோருமே மோசமாகவே கார் ஓட்டுவார்கள் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மஜுரா கேட் திருப்பத்தில் ஒரு ஆடி கார் மீது என் கார் உரசிவிட்டது. அவ்வளவு தான். பலரும் என்னை சூழ்ந்துக் கொண்டார்கள். குஜராத்தியில் வசை பாட தொடங்கிவிட்டனர்.  அதற்குள் ஒரு நல்ல போலீஸ்காரர் அங்கு வந்துவிட்டார். என்னை அந்தக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்து சென்றார். அருகாமையிலேயே ஒரு போலிஸ் பூத் இருந்தது. அங்கு சென்றதும்,

“மே கல்தி கியா பையா” என்றேன்.

நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருப்பேன் என்று எண்ணினாரோ என்னவோ, மேற்கொண்டு எதுவும் பேசாதே என்று செய்கை செய்தார். பின் நான் குடித்திருக்கவில்லை என்பதை கண்டுக்கொண்டதும்,

“நான் கேஸ் பைல் பண்றேன். இன்சுரன்ஸ் போட்டு அவன் காச க்ளைம் பண்ணிப்பான்” என்றார். நான் விடவில்லை. மீண்டும் சொன்னேன், “சார். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்”

அவர் என்ன என்பது போல் பார்த்தார். முன்னிரவு நடந்தததை சொன்னேன். அவர் முகத்தில் ஒரு கணம் அதிர்ச்சி தோன்றி மறைந்ததை கவனித்தேன். என்னை மேலும் கீழும் பார்த்தவர், அருகே இருந்த இன்னொரு போலிஸ்காரரை அழைத்து அவரிடம் ரகசியமாக ஏதோ சொன்னார். அவர் தன் பங்குக்கு என்னிடம் வந்து என்னைப் பற்றி முழுமையாக விசாரித்தார். நான் எல்லாவற்றையும் சொல்லிமுடித்ததும், சிறிது நேரம் விழுந்து விழுந்து சிரித்தார்.

“உன் ஸ்டீல் ப்ளான்ட் இருக்குற இடம் ஒருகாலத்துல சுடுகாடா இருந்துச்சு. அதான் நீ எதையோ பாத்து பயந்திருக்க” என்றார். அதற்கு மேல் அவர் அங்கு நிற்கவில்லை. சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டார். அவர்கள் ஏன் என்னை சந்தேகப் படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நான் பார்ப்பதற்கு மிகவும் நாகரிகமாக இருந்ததால், நான் மிகவும் நல்லவன் என்று முத்திரை குத்தி விட்டார்கள் போலும். இதுவே நான் ஒரு கூலி தொழிலாளி போல் இருந்திருந்தால் அவர்கள் அவ்வளவு நேரம் என்னிடம் பேசி இருக்க கூட மாட்டார்கள். மேலும் நான் செய்யாத குற்றத்தையெல்லாம் கூட என் மீது சுமத்தியிருக்கக் கூடும். ஆனால் நான் செய்த குற்றத்தை நானே ஒப்புக் கொண்டாலும் நம்ப மறுக்கிறார்கள்.

அந்த நல்ல போலிஸ்காரரிடம் மீண்டும் சென்று என்னை கைது செய்யும் படி சொன்னேன். அதுவரை சகஜமாக இருந்த அவரது முகம் அப்போது கடுமையாக மாறியதை கவனித்தேன்.

“அரே, ஜாதா மத் போல். எங்களுக்கு நிறைய வேல இருக்கு. நீ சொல்றது உண்மையாவே இருந்தாலும் அந்த பொண்ணு வந்து கம்ப்ளைன்ட் குடுத்தாதான் உன் மேல கேஸ் போட முடியும். இதேமாதிரி எங்கயும் போய் பேசிகிட்டு இருக்காதா…”

ஆடி கார்காரன் இன்சுரன்ஸ் க்ளைம் செய்வதற்காக என் வண்டி நம்பரை மட்டும் குறித்துக் கொண்டு சென்றுவிட்டான். போலிஸ் காரர்களும் அவர்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டனர். நான் மட்டும் அங்கேயே சிறிது நேரம் நின்றுக் கொண்டிருந்தேன். யாரும் என்னை சட்டை செய்யவில்லை என்று தெரிந்ததும், சூரத் ரயில் நிலையம் சென்று அந்த பெண்ணைத் தேடினேன். ஒரு ப்ரோயஜனமும் இல்லை. ஒருவாரம் கம்பெனிக்கு செல்லவில்லை. உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டேன். எங்கெங்கோ சென்று அவளைத் தேடினேன். சத்தியமாக அவளைக் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும்  என்ற எண்ணத்தோடு தான் தேடினேன். கடைசிவரை அவள் கிடைக்கவே இல்லை.

ஒருவாரம் கழித்து கம்பெனியிலிருந்து போன் வந்தது. ஸ்டீல் உற்பத்தி செய்ய வேண்டி இருந்ததால், என்னை பகல் நேர ஷிப்ட்டில் வர சொன்னார்கள். கம்பெனியில் யாருடனும் என்னால் சகஜமாக பழக முடியவில்லை. மீண்டும் கம்ப்ரசர் அரை. மிகவும் நாராசமான சப்தம். அது போதாதென்று வாக்கி டாக்கி வேறு அலறிக் கொண்டே இருந்தது. அலைப்பேசியில் சிக்னல் பிரச்சனை இருக்கும் என்பதால் ஸ்டீல் உற்பத்தி நடக்கும் நாட்களில் மட்டும் எல்லோர் கையிலும் வாக்கி டாக்கி கொடுத்துவிடுவார்கள். ஸ்டீல் உற்பத்திக்கு தேவையான காற்று, நீர், வாயு அனைத்தும் சரியான நிலையில் சரியான அளவில் செல்கிறதா என்பதை மேற்ப்பார்வை இட அந்தந்த இடத்தில் ஒரு பொறியாளர் இருப்பார். ஒவ்வொருவரும் சம்மந்தம் இல்லாமல் பதட்டமாக வாக்கி டாக்கியில் பேசிக் கொள்வார்கள். நிதானமாக செய்தாலே எல்லா வேலையும் சரியாக முடிந்துவிடும் என்று சொன்னால் கேட்கமாட்டார்கள். நான் என் வேலையை சரியாக செய்யக் கூடியவன் என்பதால் வாக்கிடாக்கி சம்பாசனையில் ஈடு படமாட்டேன். அதன் சப்தத்தை குறைத்து வைத்துவிட்டு என் வேலையை பார்ப்பேன். அன்று அதையும் செய்யவில்லை. வாக்கி டாக்கி அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது.

கம்ப்ரசரிலிருந்து வெளி வரும் காற்றில் இருக்கும் ஈரப் பதத்தை நீக்குவதற்காக அங்கே ஆறு ட்ரையர்கள் இருந்தன. காற்றில் ஈரப் பதம் இருந்தால் உற்பத்தி தடைப்பட்டுவிடும். அதனால் ஒரே நேரத்தில் மூன்று ட்ரையர்கள் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். திடிரென்று ஏதாவது ட்ரையர் பழுது பட்டு விட்டால், அதை நிறுத்தி விட்டு, வேறொரு ட்ரையரை  ஆன் செய்ய வேண்டும். அன்று ட்ரையர் பழுதானதை நான் கவனிக்க வில்லை. காற்றில் ஈரப்பதம் இருப்பதாக பலரும் வாக்கி டாக்கியில் கத்திக் கொண்டிருந்ததும் என் காதில் விழவில்லை. அந்த பெண்ணின் அழுகுரல் மட்டும் காதில் ஒலித்தது. என் உடம்பு நடுங்குவது போல் உணர்ந்தேன். நிமிர்ந்து பார்த்தால் ஒரு சர்தார்ஜி என் தோளைப் பிடித்துக் குழுக்கிக் கொண்டிருந்தார்.

சுதாரித்துக் கொண்டேன். அவர் என்னுடைய பெரிய பாஸ். என் டிபார்ட்மென்டின் தலைவர். பொதுவாக அவர் சைட்டுக்கு வர மாட்டார். அவரே வந்திருக்கிறார் என்றால் பிரச்சனை பெரியது தான்.

“க்யா ஹுவா தும்கோ ஆஜ்கல்?” அவர் என்னை திட்டவில்லை. அன்பாகதான் கேட்டார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதற்குள் மற்ற பொறியாளர்கள் ஏர் ட்ரையர் கனெக்ஷனை மாற்றத் தொடங்கியிருந்தனர். எப்படியோ அன்று உற்பத்தி தடைப்படவில்லை. பெரிய பாஸ் என் மீது அதிக அன்பு வைத்திருந்ததால். இரண்டு மாதம் மெடிகல் லீவ் எடுத்துக் கொண்டு செல்லும் படி அறிவுரை சொன்னார். பல நாட்கள் நைட் ஷிப்டில் வேலை செய்ததால் நான் சோர்வுற்றுவிட்டதாக அவர்கள் கருதினர். சென்னை வந்தும் என்னால் நான் செய்த தவறை மறக்க முடியவில்லை. யாருடனும் அதிகம் பேசாமல் அறையினுள்ளேயே கிடப்பேன். திரும்பி குஜராத் செல்வதில் உடன்பாடில்லை. வேலையை ராஜினாமா செய்துவிடலாம் என்று முடிவு செய்து வீட்டிலிருந்தே ராஜினாமா கடிதம் அனுபினேன்.

ஆனால் நான் நான்கரை வருடங்கள் கம்பெனியை விட்டு விலக முடியாது என்றும், விலக வேண்டுமெனில் பல லட்சங்கள் கம்பெனிக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென்றும் மனித வள மேலாளரிடமிருந்து மெயில் வந்தது. அப்போது தான் நினைவுக்கு வந்தது. நான் ஒரு முறை கம்பெனி செலவில் ரொமானியா சென்று வந்தேன். அங்கிருந்து இறக்குமதி ஆகவிருந்த ஒரு எந்திரத்தின் தரத்தை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றிருந்தேன். இரண்டு நாள் வேலை தான். ஆனால் கம்பெனியில் என்னை இரண்டு வாரம் அங்கேயே தங்க சொன்னார்கள். பொறுமையாக ஊர் சுற்றி பார்த்துவிட்டு வர சொன்னார்கள். நானும் வந்தவரை லாபம் என்று சுற்றிவிட்டு வந்தேன். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் கம்பெனி செலவில் வெளிநாட்டில் தங்கினால் குறைந்தது ஐந்து வருடம் கம்பெனியில் வேலை செய்தே ஆக வேண்டும் என்பது கம்பெனி பாலிசி என்று சொல்லி நான் ஊரிலிருந்து வந்ததும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். நானும், எனக்கு வேறு எங்கு வேலைக் கிடைக்க போகிறது என்று எண்ணி கையெழுத்து போட்டு விட்டேன். அந்த பத்திரத்தை வைத்து என்னைக் கட்டிப்போட்டு விட்டனர். அவர்கள் கேட்டத் தொகை என்னிடம் இல்லை. வேறு வழியில்லாமல் சர்தார்ஜி காலில் போய் விழுந்தேன். அவர் முயன்று எனக்கு சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தார்.

சென்னையில் காஞ்சிபுரத்தில் கப்பல் டிசைன் செய்யும் வேலை. நான் வேலை செய்யும் நிறுவனம் ப்யூஸ் கேரியர்  முதல் கப்பல் வரை எல்லா தொழிலிலும் கொடி கட்டிப் பறக்கிறது. உண்மையில் கப்பலின் டிசைன் எல்லாம் ஜப்பானில் இருந்து வரும். அதை இறுதி செய்வது மட்டுமே என் வேலை. பகல் ஷிப்ட் மட்டும் தான். வேலை பளு குறைவு. நான் என் வேலையை மட்டும் செய்து விட்டு வந்துவிடுவேன். யாருடனும் தேவையில்லா நட்புமில்லை பகையுமில்லை.  முன்பைப்போல் புத்தகங்கள் படிப்பதில்லை. நான் நானே இல்லை என்பதை உணர்ந்தேன். இரவுகளில் தூக்கம் வரவில்லை. அப்படி முயன்று கண் அசந்தாலும், யாரோ ஒரு பெண் அலறுவது போல் சப்தம் கேட்கும். விழித்துக் கொள்வேன். தூக்கம் வரவில்லை என்று மருத்துவரிடம் சென்றேன்.  அவர் இன்சோம்னியா என்று மருந்து கொடுத்தார். ஒரு ப்ரோயஜனமும் இல்லை. இப்படியே இரண்டு வருடம் கழிந்ததும் என் வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தனர். அதற்கு முன் பல தருணங்களில் நான் திருமணத்தை தவிர்த்து வந்தேன். ஆனால் இந்த முறை முடியவில்லை. என் பெற்றோர்கள் ஒரேடியாக குதித்தனர். நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லையெனில், அவர்கள் சோகத்திலேயே மடிந்து விடுவார்கள் என்று கூறினர்.

அது போன்ற ஆக்ரோஷமான வசனங்களை நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். உண்மையில் நான் வேலையை எங்கே விட்டுவிடுவேனோ என்று என் பெற்றோர் பயந்தனர். திருமணம் செய்துவைத்து என் பொறுப்புக்களை அதிகப் படுத்திவிட்டால் என்னால் வேலையை விட முடியாது என்று அவர்கள் கருதினர். எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை தான். ஆனால் என் பெற்றோர்களோ வயதானவர்கள். என்னால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அந்த குற்ற உணர்ச்சி என்னை ஒரேடியாக கொன்றுவிடும் என்று நான் பயந்ததால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன்.

மிக எளிமையாக ஒரு முருகர் கோவிலில் திருமணம் நடந்தது. மனைவி மனோதத்துவம் படித்தவள். அதனால் என்னிடம் பிரச்சனை இருப்பதை கண்டுகொள்ள அவளுக்கு அதிக நாட்கள் ஆகவில்லை. ஒரு நாள் என் மனைவியிடம் எல்லா உண்மையையும் கொட்டிவிட்டேன். அவள் தன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டவில்லை. நான் என் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டேன். நான் ஏன் அப்படி செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. யாரோ ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டு நான் எப்படி சம்மந்தமே இல்லாத இன்னொரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க முடியும்? ஆனால் நான் கேட்டேன். என் மனைவியும் அவள் என்னை மன்னித்துவிட்டதாக சொன்னாள். உண்மையில் மன்னிக்கும் உரிமை அவளிடம் இல்லை. நான் இன்னொரு பெண்ணிற்கு செய்த துரோகத்திற்கு என் மனைவி எப்படி என்னை மன்னிக்க முடியும்? ஒருவேளை என்னை தண்டிப்பதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அவள் அப்படி சொல்லியிருக்கலாம். அவள் அதோடு நிற்கவில்லை. தனக்கு தெரிந்த ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து சென்றாள். கிட்டதட்ட ஆறு மாதங்களாக நாங்கள் இருவரும் அந்த மருத்துவரை சந்திக்க சென்றுக் கொண்டிருக்கிறோம். அவர் ஒவ்வொரு முறையும் நான் செய்த பாவத்தை என் வாயாலேயே முதலிலிருந்து சொல்லச் சொல்வார். அப்படி சொல்வதன் மூலம் என் குற்ற உணர்ச்சி குறையுமாம். அப்படிதான் என்னிடம் சொன்னார்.  உண்மையில் என் குற்ற உணர்ச்சி குறைந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஆத்திச்சூடி சொல்லும் குழந்தை போல் ஒவ்வொரு முறையும் அவரிடம் நான் செய்த செயலை ஒப்புவித்து வருகிறேன். இன்றும் அப்படி ஒப்புவிக்கும் போதுதான் ‘எல்லாம் குப்பை’ என்ற பெரியதொரு தத்துவத்தை அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு சென்ற அந்த மனிதரை கண்டேன். சிறிது நேரம் வெளியே உலாவிவிட்டு வருவதாக என் மனைவியிடமும் மருத்துவரிடமும் சொல்லிவிட்டு அந்த தத்துவ மனிதரை தேடி வார்ட்டுக்கு சென்றேன். ஆனால் அவரை அறையில் வைத்து பூட்டி விட்டதாகவும் என்னை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் அங்கே இருந்த ஊழியர் ஒருவர் சொன்னார். திரும்பி வரும் போது என் மனைவியும் மருத்துவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். ஒட்டுக் கேட்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் பேசுவதை கேட்டேன். அதிர்ச்சியாகவே இருந்தது. முதலில் என் மனைவி என்னை மன்னித்து எனக்கு உதவி செய்கிறாள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் என் மனைவி என்னை ஒரு மன நோயாளி என்று கருதுகிறாள். அந்த டாக்டரும் அதை ஆமோதிக்கிறார். அவர்கள் நான் மனநிலை பிறழ்வால் உளறுகிறேன் என்றே நினைக்கிறார்கள். குஜராத்தில் அந்த போலிஸ்காரர் நான் ஆவியை கண்டு பயந்து விட்டதாக சொன்னார். இவர்கள். நான் மனநலம் பாதிக்கப்பட்டு ஒரு கற்பனைக் கதையை சொல்வதாக எண்ணுகிறார்கள். அப்படி ஒரு பெண் இருக்க வாய்ப்பில்லை என்றும், அவள் நான் உருவாக்கிக் கொண்ட பிம்பம் என்றும், உலக இலக்கியத்தை தீவிரமாக வாசித்து எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட ஒரு ஐடியல் கற்பனை உலகம் நிஜ வாழ்வோடு ஒத்துப்போகததால் என்னை நானே தண்டித்துக் கொள்ள முயல்வதாக அவர்கள் பேசிக் கொண்டார்கள். கார்ல் ஜங் என்றார்கள், அன்கான்சியஸ் மைன்ட் என்றார்கள். நடந்த ஒரு செயலை அவர்கள் என்னுடைய கற்பனை என்கிறார்கள். என்னுடைய மிருகத்தனத்தால் நான் செய்த தவறை அவர்கள் மனநோய் என்கிறார்கள். எனக்கு கோபமாக வந்தது. ஆனாலும் அமைதியாக இருந்தேன். ஏனெனில் என் மனைவி மிகவும் நல்லவள். வேறோருத்தியாக இருந்திருந்தால் இந்நேரம் என்னை விட்டு சென்றிருப்பாள். என்னை சபையில் வைத்து அசிங்கப்படுத்தி இருக்கவும் கூடும். ஆனால் என் மனைவி என்னைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லாமல் காப்பாற்றி வருகிறாள். நான் எதுவும் பேசாமல் காரில் வந்து அமர்ந்தேன். ஆனாலும் இனிமேல் டாக்டர் தரும் மருந்துகளை உண்ணக் கூடாது என்று முடிவெடுத்தேன். ஏனெனில் அவர்கள் சொல்வது போல் எனக்கு மனப்பிறழ்வு இல்லை.

அன்று வீட்டிற்கு வர இரவாகிவிட்டது. வீட்டில் அம்மாவும் அப்பாவும் ஏதோ ஒரு ஆங்கில தொலைக்காட்சி சேனலில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஒரு பலாத்கார வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப் பட்டுவிட்டதாக செய்தியில் சொன்னார்கள்.

“இவனுங்களலாம் தூக்குல போடணும்”

அம்மா கோபமாக சொன்னாள். ஒருவேளை என்னையும் தூக்கில் போட்டிருக்க வேண்டும். ஒருவேளை நானே என்னைப் போட்டுக் கொள்ள வேண்டுமா! நானும் இந்தக் குற்றத்தை செய்தவன் என்று தெரிந்தால் அம்மா என்னையும் தூக்கில் போட சொல்வாளா? நான் ஸ்தம்பித்து நின்றதை என் மனைவி கவனித்துவிட்டாள் போல. என் கையை பிடித்து அறைக்குள் அழைத்து சென்றாள். மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்டால் எல்லா மனக் கவலையும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிவிடும் என்றாள். என் கையில் சில மாத்திரைகளை திணித்துவிட்டு அவள் குளிக்கச் சென்றாள். நான் மாத்திரைகளை ஜன்னல் வழியாக தெருவில் தூக்கி ஏறிந்துவிட்டு வந்து படுத்துக் கொண்டேன். உறக்கம் வரவில்லை.

குளித்துவிட்டு வந்த என் மனைவியிடம் “அந்த பொண்ண கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணனும்” என்றேன். எதையோ சொல்ல வந்த என் மனைவி நிறுத்திக் கொண்டாள். பின் நிதானமாக, “சரி. அப்படி நடந்தா நானே ஒதுங்கிக்கிறேன். இப்ப தூங்குங்க” என்றாள். சிறிது நேரத்தில் அவள் உறங்கிப் போனாள். ஆனால் என்னால் உறங்க முடியவில்லை.

அந்த அப்பாவி மராத்திப் பெண் உயிரோடு இருக்கிறாளா என்று தெரியவில்லை. உயிரோடிருந்தால் நிச்சயம் அந்த வலியோடுதான் வாழ்ந்துக்கொண்டு இருப்பாள், நான் என் குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருப்பதைபோல என்று நினைத்தேன். லேப்டாப்பை ஆன் செய்தேன். அந்த தொலைகாட்சி சேனலின் இணையதளத்திற்கு சென்றேன். அன்று பலாத்கார வழக்கில் கைது செய்யப் பட்ட ஐவரைப் பற்றிய செய்தியை படித்தேன். பின்னூட்டத்தில், அவர்களை பலரும் மோசமாக திட்டி வைத்திருந்தனர். குறிப்பாக அந்த வசைகளை மட்டும் படித்தேன். அதெல்லாம் எனக்கு வர வேண்டிய வசைகளாகவே கருதினேன். ஒவ்வொரு வசையை படிக்கும் போதும் எனக்கு நானே சாட்டை அடிக் கொடுத்துக் கொள்வது போல் இருந்தது. அதில் ஒரு ஆறுதல் கிடைத்தது. அந்த தளத்தில் இருந்த ஒரு காணொளியை பார்த்தேன். அன்று சாயங்காலம் ஒளிபரப்பான விவாத மேடை நிகழ்ச்சி அது. அதில் பலரும் அந்த குற்றவாளிகளை தூக்கில் இட வேண்டும் என்று பேசினர். ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றிய என்னையும் தூக்கில் தான் போடவேண்டும். அப்படி நினைக்கும் போதுதான் நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற அந்த பெண்ணை பார்த்தேன். அழகாக இருந்தாள். சுத்தமான ஹிந்தியில் பேசினாள். அவள் மும்பையை சேர்ந்த ஒரு சமுக ஆர்வலர் என்று போட்டிருந்தது. நிதானமாக பேசினாள். அவளை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. சில வருடங்களுக்கு முன் தன்னை ஒருவன் பலாத்காரம் செய்துவிட்டதாக சொன்னாள். இப்போது பெண் நலத்திற்காக போராடி வருவதாக சொன்னாள். என் உடல் வேர்த்தது. அவள் தான் அவளே தான். நடந்ததை தான் மறந்துவிட்டதாகவும், தனக்கு நடந்தது ஒரு விபத்து என்றும், அதை எண்ணி தான் முடங்கி விடவில்லை என்றும் குறிப்பிட்டாள். எனக்கு மூச்சு அடைத்தது.

நீல நிற சல்வார், க்யா கர்ரஹா ஹே து, கோனே அந்தர், சாயிப் லடிக்கி நம்பர் சாயியே க்யா, ஏண்டா மெத்தப் படிச்ச மேதாவி, கார்ல் ஜங்க், எல்லாம் குப்பை, கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணனும், தூக்குல போடணும், மனப்பிறழ்வு, உண்மை, மனநோய், அப்பாவி பெண். ஏதேதோ என் நினைவிற்கு வந்தன. மயக்கம் வருவது போல் இருந்தது. திரும்பி பார்த்தேன். என் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். வேகமாக  லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, டாக்டர் மனநோய்க்காக கொடுத்த மாத்திரைகளை விழுங்கினேன்.

 “…மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்

பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே…. “

நண்பனின் கடிதங்கள்- நெடுங்கதை

    அதே தாம்பரம் பீச் ரயில், கேண்டீன் அருகே வந்து நிற்கும் அதே பெட்டி, தம்பி அக்காக்கு காசு கொடு என்று கேட்கும் அதே திருநங்கைகள். ‘பாஸ் கொஞ்சம் நகுந்து உட்காருங்களேன்’. ‘இறங்கி ஏறு. இறங்கி ஏறுங்கப்பா’ ‘சார் மேஜிக் புக் சார் மேஜிக் புக். இருபது ரூவாய் தான்’ ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்’ ‘தயவு செய்து பயணிகள் வண்டி நடை மேடையில் நின்ற பின்பு இறங்கவும்’ வழக்கமான இத்தியாதிகளுக்கு மத்தியில் அந்த நாளும் மற்ற நாட்களைப் போல் ஒரு சாதாரண நாளாக தான் கழியும் என்று எண்ணிக் கொண்டு வங்கியை அடைந்தேன்.

வாசலில் காத்திருந்த நேபாளிகள் வணக்கம் வைத்தார்கள். மாதம் பத்து தேதி முதல் இருபது தேதி வரை நேபாளிகளின் கூட்டம்தான் வங்கியில். இங்கே சம்பாதித்த பணத்தை தங்கள் ஊரில் உள்ள குடும்பத்திற்கு அனுப்புவதற்காக வங்கி திறப்பதற்கு முன்பே வந்து வரிசையில் நின்றுக் கொள்வார்கள். முதல் ஆளாக பணம் அனுப்பினாலும், கடைசி ஆளாக அனுப்பினாலும் அந்த நாளின் இறுதியில் தான் பணம் நேபாலை சென்றடையும் என்று சொன்னால் கேட்கமாட்டார்கள். விடிவதற்குமுன்பே வந்து வரிசையில் நின்றுவிடுவார்கள். பணம் அனுப்பி இரண்டு மணி நேரத்தில் வந்து “சாப் கல்தி ஹோகயா” என்று பதறுவார்கள். நான் பதட்டமில்லாமல் என்ன என்று கேட்பேன்.

“காசு இன்னும் போய் சேரல பாய்” இதே காரணத்தை சொல்லிக் கொண்டு புதிதாக ஒரு வரிசையில் கூட்டம் நிற்கும். ஒவ்வொரு முறையும் அவர்கள் எல்லோருக்கும் வங்கி எப்படி இயங்குகிறது, ஏன் அவர்கள் பணம் சென்றடைய தாமதம் ஆகிறது என்று வகுப்பெடுக்க வேண்டியிருக்கும். மீண்டும் அடுத்தமுறை அதே காரணத்தை சொல்லிக் கொண்டு வந்து நிற்பார்கள். சீனியர் கிளார்க் கோபாலகிருஷ்ணன் அவர்களை கவனித்துக் கொள்வார். எனக்கு எல்லாவற்றையும் மேற்பார்வையிடுவதை தவிற பெரிய வேலை எதுவும் இல்லை.

மும்முரமாக வேலை செய்வது போல பாவனை செய்துக் கொண்டிருந்த இரண்டு அதிகாரிகளை கடந்து  நான் என் கேபினுக்குள் நுழைந்தேன். என் மேஜை மீதிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டுக் கொண்டிருந்த கோபால கிருஷ்ணன் என்னைப் பார்த்து புன்னகை செய்தார். நான் சம்ப்ரதாயமாக சிரித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

மேஜை மீது முந்தைய நாள் வந்த ஏராளமான கடிதங்கள் கிடந்தன. நான் முந்தைய நாள் ‘வேலை நிறுத்தம்’ காரணமாக வேலைக்கு வரவில்லை. எதற்காக வேலை நிறுத்தம் என்றெல்லாம் தெரியாது. நான் இருக்கும் யூனியன் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தகவல் அனுப்பி இருந்தது. அப்படி தகவல் வரும் போதெல்லாம் வங்கிக்கு வராமல் வீட்டிலேயே இருந்து விட வேண்டும். எதிர் யூனியனை சேர்ந்தவர்கள் வேலை செய்வார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நாங்கள் கலந்துக் கொள்ளாமல் வேலை செய்வோம். இந்த சங்கங்களை எல்லாம் கலைக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தால் அதை செய்துவிடுவேன். நாட்டில் வேலை இல்லாமல் பலர் இருக்க அரசாங்க வேலையில் அமர்ந்துக் கொண்டு சங்கம் கச்சேரி என்று காலம் கழிப்பவர்களை கண்டால் கோபம் வருகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்பது எனக்கு நன்றாக தெரிந்ததால், சங்கத்தை எதிர்த்துக் கொடி பிடிக்கும் எண்ணங்களை மூளையின் மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு, கடிதங்களை படிக்கத் தொடங்கினேன். பல சம்ப்ரதாயமான கடிதங்களுக்கு மத்தியில், புழல் சிறையிலிருந்து வந்திருந்த ஒரே ஒரு கடிதம் மட்டும் கவனத்தை ஈர்த்தது. பிரித்து படித்தால், குமாரனந்தம் எனக்கு நன்றி சொல்லியிருந்தார்.

குமாரனந்தம் ஒரு ஆயுள் தண்டனைக் கைதி. கடந்த வாரம் எங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி இருந்தார். கைதிகள் சிறையில் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்காக, அவர்களுக்கென்றே பிரத்தியேகமாக சேமிப்பு திட்டம் ஒன்று வங்கியில் உள்ளது. அவர்கள் சேமிப்பு கணக்கு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சிறை கண்காணிப்பாளரின் பரிந்துரைக் கடிதத்தை இணைத்து அனுப்ப வேண்டும். இதை யார் செய்தாலும் அவர்களின் கணக்கைத் தொடங்க வேண்டியது எங்கள் கடமை. என் வேலையை நான் செய்ததற்கு அவர் ஏன் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்!

யார் கணக்கு தொடங்கினாலும் அவர்கள் விலாசத்திற்கு. ‘வங்கி கணக்கு தொடங்கியமைக்கு நன்றி’ என்று குறிப்பிட்டு நாங்கள்தான் நன்றிக் கடிதம் அனுப்புவோம். உண்மையில் நன்றி சொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. வாடிக்கையாளரின் விலாசம் சரியானதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே பதிவு தபாலில் கடிதம் அனுப்புவோம். கடிதம் திரும்பி வந்துவிட்டால், மீண்டும் இன்னொரு கடிதம் அனுப்புவோம். அதுவும் திரும்பி வந்தால் கணக்கை மூடி விடுவோம். குமாரனந்தம் சிறையில் இருப்பதாலும். சிறை கண்காணிப்பாளர் சிபாரிசு கடிதம் தந்ததாலும் இங்கே விலாசம் சரிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதனால் நாங்கள் அவருக்கு நன்றிக் கடிதம் அனுப்பவில்லை.

ஆனால் குமாரனந்தம் எங்களுக்கு நன்றிக் கடிதம் அனுப்பியது, அதுவும் என்னை நண்பனாக பாவித்து கடிதம் அனுப்பியிருந்ததுஎனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் வங்கிக்கு வரும் கடிதத்தில் ‘மேலாளருக்கு’ என்றே விளிக்கப் பட்டிருக்கும். இவர் நண்பர் என்று விளித்திருந்தார். முத்துமுத்தான கையெழுத்தில் அந்தக் கடிதம் இருந்தது.

“அன்புள்ள நண்பரே,

வணக்கம். நலமா. இரண்டு வங்கிகள்ல கணக்கு தொடங்க முயற்சி பண்ணினேன். அவங்க அனுமதி தரல. நீங்க கணக்குத் தொடங்கியதற்கு நன்றி.
அன்புடன்
குமாரனந்தம்.”

யார் இவர். எதற்காக எனக்கு நன்றி சொல்கிறார். என்னைவிட வயதில் சுமார் இரண்டு மடங்கு மூத்த மனிதர் என்னை நண்பர் என்று அழைக்கும் போது பல வருடம் பழகிய ஒரு உணர்வு ஏன் ஏற்படுகிறது? இந்த வயதில் அவருக்கு சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? இந்த மனிதன் என்ன செய்துவிட்டு ஆயுள் தண்டனைக் கைதி ஆகி இருப்பார்? கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்று சொல்வார்களே, அது உண்மையோ?

நான் என் உதவியாளரை அழைத்து, குமாரனந்தத்தின் விண்ணப்பப் படிவத்தை எடுத்து வரச் சொன்னேன். படிவத்தில் இருந்த புகைப்படத்தில் சாந்தமாக தோன்றினார் குமாரனந்தம். ஆயுள் தண்டனைப் பெறும் அளவிற்கு இவர் என்ன குற்றம் செய்திருக்க முடியும்! ஒருவேளை கொலை ஏதும் செய்திருப்பாரோ? இருக்காது. இவ்வளவு சாந்தமான மனிதர் எப்படி கொலை செய்திருக்க முடியும்? படிவத்தை புரட்டினேன்.

முன்பு நான் எதையும் விலாவாரியாக கவனிக்கவில்லை. எந்த படிவமானாலும் இரண்டு அதிகாரிகளின் கையெழுத்து வேண்டும். அவ்வளவுதான். அதனால் என்னிடம் வேலை செய்யும் அதிகாரிகளே படிவத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வேலையை பார்த்துக் கொள்வார்கள். கடன் கொடுக்கும் துறையிலேயே நான் அதிக கவனம் செலுத்தி வந்தேன்.

குமாரனந்தத்தின் வீட்டு முகவரியை பார்த்தேன். ஒனம்பாக்கம் என்ற கிராமம். படித்திருக்கிறார். இளங்கலை கணிதம். அடுத்த பக்கத்தை திருப்பும்முன், ‘சார்’ என்றொரு குரல். காவி உடையில் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். ஆட்டோ ஓட்டுனர். கடனை திருப்பிக் கொடுக்காத ஆட்டோ ஓட்டுனராகதான் இருக்க முடியும். ஏனெனில் பெரும்பாலானவர்கள் கடனை அடைப்பதில்லை. நாங்களாக போன் செய்து கெஞ்ச வேண்டும். அவர்களே தேடி வந்தால் ஏதாவது காரணமாகதான் இருக்கும்.

“சொல்லுங்க….”

“சார், சீனிவாசன், ஆட்டோ லோன் வாங்கிருந்தேன்”

“உக்காருங்க….”

“சார் இல்லையா?”

“நான் தான் இப்ப சார். சொல்லுங்க.” எனக்கு அவரிடம் பேச வேண்டும் என்பதை விட, குமாரனந்தத்திற்கு பதில் கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

“சார், ஆட்டோ சின்ன ஆக்ஸிடெண்ட். அண்ணாநகர் ஸ்டேஷன்ல புடிச்சி வச்சுக்கிட்டாங்க. ஒரிஜினல் ஆர்‌.சி புக் கொடுத்தாதான் ரிலீஸ் பண்ணுவேனு சொல்றார் எஸ்‌.ஐ”

நான் அவர் பெயரை கம்ப்யூட்டரில் தட்டினேன். Non Performing Assets என்று வந்தது. வாராக்கடன். அவர் ஒருவருடத்திற்கு மேல் வட்டிக் கட்டவில்லை. அவர் தொடர்ந்து வட்டிக் கட்டியிருந்தால் ஏதாவது உதவி செய்திருக்க முடியும்.

“நீங்க ரொம்ப நாளா வட்டியே கட்டலயே. ஒரிஜினல்லாம் தர முடியாது, வேணும்னா ஓரிஜனல் எங்ககிட்ட தான் இருக்குனு லெட்டர் எழுதி தரேன்”

“சார். ஒரிஜினல் தான் சார் வேணும். நீங்க வேணா எஸ்ஐ கிட்ட பேசுங்களேன்”

“அதெல்லாம் முடியாதுங்க. ஜெராக்ஸ் வேனா தர சொல்றேன். வேணாம்னா  கிளம்புங்க” சொல்லிவிட்டு நான் குமாரனந்தத்தின் விண்ணப்ப படிவத்தை பார்த்தேன். நாமினேஷனில் மாலினி என்று எழுதியிருந்தார். மாலினி,  அவரின் மகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எதையோ யோசித்தவாறே நிமிர்ந்தால், ஆட்டோ ஓட்டுனர் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தார்.

“இங்க இருக்குறது டைம் வேஸ்ட் சார். நீங்க ஒழுங்கா கடன கட்டியிருந்தா ஒரிஜினல் புக்க மீட்டுட்டே போயிருக்கலாம்”

“வச்சுக்கிட்டா சார் ஏமாத்துறோம். வர வருமானம் குடும்பத்துக்கே பத்தல சார்”

அவர் சொல்வது நியாயம் தான். வங்கியிடம் பல நூறு கோடி கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவிடும் பெரும் முதலாளிகளை வங்கி நிர்வாகத்தாலோ அரசாங்கத்தாலோ ஒன்றும் செய்ய முடிவதில்லை. வாழ்வாதாரத்திற்காக கடன் வாங்கியவர்களைதான் வங்கி நிர்வாகம் துரத்தி அடிக்கும். ஆனால் நான் கேள்வி கேட்பதால் என்ன மாறிவிட போகிறது? ஆயிரமோ இரண்டாயிரோமோ அந்த ஓட்டுனருக்காக என்னால் கொடுத்து உதவ முடியுமே ஒழிய அவர் கேட்கும் அசல் புத்தகத்தை கொடுக்க முடியாது. அப்படியே உணர்ச்சி வசப்பட்டு கொடுத்தாலும் அவர் திருப்பி தருவார் என்று உத்தரவாதம் இல்லை. என் வேலைக்கு ஆபத்து வந்துவிடும். அவர் நல்லவராக புத்தகத்தை திருப்பி கொடுத்தாலும். ஒருவருக்கு உதவுகிறோம் என்று தெரிந்தால், கடன் வாங்கிய பலரும் ஏதாவது காரணத்தை சொல்லிக் கொண்டு தங்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று வரிசையில் நிற்பார்கள்.

அதனால் முகத்தை கோபமாக மாற்றிக் கொண்டு,

“கிளம்ப சொன்னா கிளம்புங்க சார். வேலை இருக்கு. உங்களுக்கு ஹெல்ப் பன்றது மட்டும்தான் வேலையா?”

என்று சொல்லிவிட்டு நான் அவரை நிமிர்ந்து பார்க்காமல், என் இருக்கைக்கு பின்னிருந்த பிரிண்டிங் இயந்திரத்தினுள்ளிருந்து ஒரு வெள்ளைத் தாளை எடுத்தேன். அந்த ஓட்டுனர் “சார் சார்” என்று விளித்ததை நான் சட்டை செய்யவில்லை. விருட்டென்று வெளியே சென்ற அவர், வெகு நேரம் வாசலில் நின்று சப்தம் போட்டார். “பேங்க் நடத்துறாங்க பேங்க்” இன்னும் ஏதேதோ சொன்னார். இதெல்லாம் பழகி விட்டது என்பதால் நான் கண்டுகொள்ளாது கடிதம் எழுதத் தொடங்கினேன்.

“அன்புள்ள குமாரனந்தம்

நான் நலம். நீங்கள் நலமா?

என் வேலையை மட்டுமே நான் செய்தேன். இதற்காக நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள்?” என்று கடிதத்தில் எழுதினேன். பின்பு அந்தக் கேள்வி மரியாதையாக இருக்காது என்று அந்தக் கடிதத்தை கசக்கி எறிந்து விட்டேன். அந்த கேள்வியை மட்டும் தவிர்த்து மீண்டும் அதே கடிதத்தை புதிதாக எழுதி கவரில் வைத்து ஒட்டி சிறை விலாசத்தை எழுதினேன். மேஜையில் இருந்த பெல்லை அடித்ததும் உதவியாளர் ஓடி வந்தார்.

“ஃப்ரம் சீல் போட்டு அனுப்பிடுங்க”

அவர் கடிதத்தை வாங்கிக் கொண்டு வெளியே சென்றார். வாசலை எட்டிப் பார்த்தேன். அந்த ஆட்டோ ஓட்டுனர் அங்கே இல்லை.

***

குமாரனந்தத்திடமிருந்து இரண்டாவது கடிதம் வர நான்கு நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் அனுப்பும் கடிதங்கள் கொரியரில் செல்வதால் மறுநாளே சென்றுவிடும். ஆனால் அவருடைய கடிதங்கள் தபாலில் வருவதால் தாமதமாகவே வந்தன. மேலும் சிறையிலிருந்து வாரம் இருமுறை தான் கடிதங்களை அனுப்ப முடியும். இதை குமாரனந்தம் தான் ஒருமுறை என்னிடம் சொன்னார். சில நேரங்களில் வாரம் ஒரு முறை மட்டுமே கடிதம் அனுப்ப அனுமதி தருவார்களாம். அதனால், கடிதம் வர ஒருவாரத்திற்கு மேல் கூட ஆனதுண்டு.

நான் அவருக்கு முதல் கடிதத்தை அனுப்பும் போது நானும் அவரும் இவ்வளவு நெருங்கிய நண்பர்களாக ஆகிடுவோம் என்று நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. நான் அவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதை போல் அவரும் என்னைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். அதனால் தான் இரண்டாவது கடிதத்தில், என்னைப் பற்றிய விவரங்களை நேரடியாயாகவே கேட்டிருந்தார்.

“அன்புள்ள நண்பா.

நானும் நலம். உங்க பேர் என்னனு சொல்லலையே? உங்கள் கையப்பத்திலிருந்து பெயரை கண்டுபுடிக்க முடியலயே!”

அதுவரை என் பெயரை நான் குறிப்பிட்டிருக்கவில்லை என்று அப்போதுதான் விளங்கியது. மேலும் என் வயதென்ன என்றும். என் குடுப்பத்தைப் பற்றியும் கேட்டிருந்தார். முதல் கடிதத்தை விட இந்த கடிதத்தில் வார்த்தைகள் அதிகமாக இருந்தது. உண்மையில் எங்களின் நட்பு வலுக்க வலுக்க கடிதத்தின் நீளமும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. பத்து பதினைந்து பக்கங்கள் கூட கடிதம் நீண்டிருக்கிறது.

ஆனால் இரண்டாவது கடிதத்திற்கு, “நான் முப்பத்தியிரண்டு வயது லோனர். தனிமை விரும்பி” என்று சுருக்கமாகவே பதில் அனுப்பினேன். இதை தவிர என்னைப் பற்றி சொல்வதற்கு உண்மையிலேயே ஒன்றும் இல்லை. அதற்கு, “Loneliness is godliness” என்று தலைப்பிட்டு குமாரனந்தம் பதில் அனுப்பி இருந்தார்.

“அன்பு நண்பா

நானும் உன்னைப் போலதான். நான் வேலையில்லாமல் சுத்தியிருக்கேன். எங்கெங்கோ பயனம் பண்ணியிருக்கேன்.  என் வாழ்க்கையில யார்யாரோ கடந்து போயிருக்காங்க. எல்லா நேரத்துலயும் என்கூட இருந்தது என் தனிமைதான்..”

அதுதான் அவர் என்னை முதல் முதலில் ஒருமையில் விளித்தது. அதை படிக்கும் போது, பதில் எழுதும் போது அவரை ‘அண்ணா’ என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் கடிதத்தை படிக்க யத்தனித்த போது அதிகாரி ஒருவர “சார்” என்றார். அது ஏன் குமாரனந்தத்தின் கடிதத்தை படிக்கும்போது மட்டும் எல்லோரும் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்!

அப்போதுதான் மணி ஆறு ஆனதை கவனித்தேன். ஐந்து மணியோடு வங்கியின் பணிநேரம் முடிகிறது. எல்லா கணக்கையும் சரிப்பார்த்துவிட்டு கிளம்ப மணி ஆறாகிவிடும். ஐந்து மணிக்கே கிளார்க்குகள் சென்று விடுவார்கள். அதிகாரிகள் வங்கியை பூட்டும் வரை இருக்க வேண்டும். ஏன் என்றெல்லாம் கேட்க கூடாது. வங்கியை பொறுத்த வரை இதுபோன்று ஏராளமான விதிமுறைகள் உள்ளன.

நான் உதவி மேலாளராக இருந்த காலத்தில் என்னுடைய மேலாளர் ஏழரை வரை வங்கியிலேயே கிடப்பார். வங்கியில் வேலையே இல்லையென்றாலும் அவர் ஏழரை வரை இருக்கையிலிருந்து எழ மாட்டார். வங்கியின் தொலைபேசியில் சொந்த கதை பேசிக் கொண்டிருப்பார். எனக்கு வீட்டில் ஒருவேலையும் இல்லை என்பதால் நான் வங்கியிலேயே அமர்ந்து ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். ஆனால் நான் மேலாளர் ஆன பின்பு அப்படி யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஆறுமணிக்கெல்லாம் கிளம்பிவிடுவேன். அப்படியே நான் தாமதமாக கிளம்ப நேரிட்டாலும், வங்கியைப் பூட்ட ஒரு உதவியாளரை மட்டும் வைத்துக் கொண்டு என் அதிகாரிகளை அனுப்பிவிடுவேன். ஆனால் கடிதத்தில் மூழ்கி இருந்ததால் நேரம் ஆனதை கவனிக்கவில்லை. கடிதம் என்னவோ மதியமே வந்துவிட்டது. அன்று வேலை நிறைய இருந்ததால் தாமதமாகதான் கடிதத்தை படிக்கத் தொடங்கினேன்.

“சார், காம் ஹே குச்?” என்று அந்த அதிகாரி வினவினான்.

“இல்ல. பூட்டிடலாம்” என்று சொல்லிவிட்டு கடிதத்தை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டேன்.

டிரைனில் மின்விளக்கு அணைந்து அணைந்து எரிந்ததால் கடிதத்தை உடனே படிக்க முடியவில்லை. எக்மோர் ஸ்டேஷன் வந்ததும்தான் விளக்கு சரியாயிற்று. நான் முதல் பெட்டியில் கடைசி இருக்கையில் ஜன்னலை ஒட்டி அமர்ந்திருந்தேன். எப்போதும் அந்த இடம் தான். கடிதத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன்.

“நாம எல்லாருமே உள்ளுக்க்குள்ள தனிமை விரும்பிங்கதான்….”

என் அருகில் அமர்ந்திருந்த வயதான மனிதர் ஒருவர் கடிதத்தை எட்டிப் பார்த்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அவரை நிமிந்து பார்த்தேன். அவர் எதுவும் தெரியாதது போல் தலையை திருப்பிக் கொண்டார். நான் கடிதத்தை வீட்டில் படித்துக் கொள்ளலாம் என்று பைக்குள் வைத்தேன். அவர் தன் வலபுரத்தில் அமர்ந்திருந்த இளைஞனின் மொபைலை பார்க்கத் தொடங்கினார். அந்த இளைஞன் வயதானவரை சட்டை செய்யாமல் யாருக்கோ தீவிரமாக காதல் ஸ்மைலிகள் போட்டு செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான். நான் ஜன்னலில் சாய்ந்து உறங்கிப் போனேன்.

மணி ஏழரை. வீட்டின் அருகே இருந்த அண்ணாச்சி மெஸ்ஸில் தோசை வாங்கச் சென்றேன். எப்போதும் அந்த நேரத்தில் எனக்காக தோசை பொட்டணம் காத்திருக்கும். ஆனால் அன்று அண்ணாச்சியின் மனைவி மிகவும் பிரயத்தனப்பட்டு அப்போதுதான் தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“மாஸ்டர் திடீர்னு வேலைய விட்டுட்டு போய்ட்டான் தம்பி… அதான் இன்னைக்கு லேட். கோச்சுக்காதீங்க” என்றார் அண்ணாச்சி.

அண்ணாச்சிக்கு அறுபது வயது இருக்கும். உழைப்பை கண்டு அஞ்சாத உடம்பு. குமாரனந்தத்திற்கும் அந்த வயதுதானே! அப்படி எண்ணும்போதுதான் உரைத்தது. நான் இதுவரை அண்ணாச்சியின் பெயரைக் கேட்டதே இல்லை. உண்மையில் வங்கியில் என்னைப் பார்த்து புன்னகை செய்யும் வாடிக்கையாளர்கள் பலரின் பெயரும் எனக்குத் தெரியாது. பெயரில் என்ன இருக்கிறது என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் அவர்களின் பெயரை தெரிந்து வைத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் பெயர் சொல்லி உரையாடினால் அவர்கள் எவ்வளவு நெருக்கமாக உணர்வார்கள்! இவ்வளவு நாள் தோன்றாத இந்த எண்ணங்கள் இப்போது மட்டும் ஏன் தோன்றுகின்றன?

“தம்பி. தோசை ரெடி”

தோசை பொட்டணத்தை வாங்கிக் கொண்டு ஒரு அடி நகர்ந்த நான், நின்று மீண்டும் கடையை நோக்கி திரும்பினேன்.

“என்ன தம்பி?”

“உங்க பேர கேக்கவே இல்லயே அண்ணாச்சி இவ்ளோ நாளா. உங்க பேரு?”

முகத்தில் ஆச்சர்யத்தை வெளிப்படுத்திய அவர், “அண்ணா…” என்று சொல்ல வந்து நிறுத்திக் கொண்டார். “முருகேசன்” என்று சொல்லிவிட்டு புன்னகை புரிந்தார். திடீரென்று அவர் முகம் பிரகாசமாக மாறியது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது.

வீட்டில் டி‌வி மீது தோசை பொட்டணத்தை வைத்துவிட்டு, வேர்வை அடங்குவதற்காக நாற்காலியில் அமர்ந்தேன். அந்த டி‌வி வெகுநாட்களாக ஓடுவதில்லை. அந்த பெட்டி இயங்கிக் கொண்டிருந்தபோது நான் வனவிலங்குகளை பற்றிய நிகழ்ச்சிகளை மட்டும் சிறிது நேரம் பார்ப்பேன். செயற்க்கையான ஒரு வாழ்க்கை முறையின் மீது மோகத்தை ஏற்படுத்தி நம்மை ஏங்க வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை. ஒருகட்டத்தில், மனிதர்களையே புரிந்துக் கொள்ள முடியவில்லை வனவிலங்குகளை புரிந்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று தோன்றியதால், நான் டி‌வி பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். அதனால் அந்த பெட்டியை சரி செய்ய முயற்சிக்கவில்லை. உடையை மாற்றிவிட்டு, அந்த தோசையை வேகவேகமாக விழுங்கிவிட்டு, குமாரனந்தத்தின் கடிதத்தை தொடர்ந்தேன்.

“நாம எல்லாருமே உள்ளுக்க்குள்ள தனிமை விரும்பிங்கதான். கூட்டமாக இருக்கும்போதும் ஒவ்வொருவரும் உள்ளுக்குள்ள அவங்கவங்க உலகத்தில பயணம் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். Collective loneliness-னு சொல்லுவாங்களே! அதனால தனிமை விரும்பியா இருக்கிறது தவறில்லை. ஆனால் தனித்துவிடப் பட்டவனாக ஆகிடக் கூடாது. நானும் தனிமை விரும்பிதான். அது நானா தேர்ந்தெடுத்துக்கிட்ட தனிமை. இங்க சிறைல யாருகிட்டயும் அதிகம் உரையாடுறதுயில்லை. பெரும்பாலும் புத்தகங்களோடுதான் வாழ்க்கை எனக்கு…”

அந்தக் கடிதம் முழுக்க தனிமையைப் பற்றிதான். அவர் நிறைய வாசிக்க கூடியவர் என்று அந்த கடிதம் உணர்த்தியது. அவரின் எழுத்து மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தாலும் அவர் பயன்படுத்தியிருந்த சில வார்த்தைகளின் அர்த்தத்தை தேர்ந்து கொள்ள அகராதியை எடுத்து பார்க்க வேண்டியிருந்தது. இறுதியாக, உன் வேலையெல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்றுக் கேட்டிருந்தார்.

நான் அதுபோன்ற ஒரு கேள்வியைதான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன் போல. பத்தி பத்தியாக பதில் எழுதினேன். பல நேரங்களில் மனதிற்கு பிடிக்காத வேலையைதான் செய்ய வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டேன். ஆட்டோ சீனிவாசனைப் பற்றி சொன்னேன். ஒரு மனிதனாக அவருக்கு உதவ வேண்டும் என்று ஆசை இருந்தாலும், ஒரு வங்கி அதிகாரியாக அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு நான் எந்த உதவியும் செய்யக் கூடாது.  முழுவதுமாக என்ன எழுதினேன் என்று மறந்துவிட்டது. இறுதியாக, “அடிமையாகி விட்டதை போல் உணர்கிறேன். எந்திரம் போல் காலை முதல் மாலை வரை எந்த லட்சியமும் இன்றி வாழ்க்கையை கழிக்கிறேன். எதற்காக ஓடுகிறோம் என்று தெரியவில்லை” என்று எழுதி கடிதத்தை முடித்தேன். பின் அந்தக் கடிதத்தை இரண்டு மூன்று முறை படித்தேன். எப்போது உறங்கிப் போனேன் என்று தெரியவில்லை.

வழக்கம் போல் ஏழு மணிக்கு அலாரம் அலற, நானும் வழக்கம் போல் அதை அனைத்துவிட்டு உறங்கினேன். அருகிலிருந்த கங்கை அம்மன் கோவிலில் சப்தமாக ஒலித்த பாடல் என் தூக்கத்தை கலைக்க கண்விழித்தேன். மணி ஏழரை. எட்டரை மணி ரயிலை பிடிக்க வேண்டும்.

வாசலுக்கு சென்று கோவில் வாசலில் நின்றுக் கொண்டிருந்த குருக்களுக்கு வணக்கம் வைத்தேன். அவர் என்னைப் பார்த்து புன்னகை புரிந்து விட்டு, கோவிலுக்குள் சென்றார்.

கோவிலில் ஒலிக்கும் பாடல்தான் உண்மையில் எனக்கான அலாரம். ஒருமுறை  கோவிலில் ஸ்பீக்கர் பழுதடைந்து போனதால், பாடல் போடவில்லை. விழித்துப்பார்த்தால் மணி பத்தானது, மொபைலை சைலன்டில் போட்டுவிட்டு உறங்கியதால், வங்கியிலிருந்து வந்த ஏராளமான அழைப்புகளை கவனிக்கவில்லை.

நான் போனால் தான் கல்லாவை திறக்க முடியும். கல்லாவிற்கு இரண்டு சாவிகள். ஒரு சாவி ஹெட் காஷியரிடம் இருக்கும். இன்னொரு சாவி என்னிடம் இருந்தது. எப்படியோ காஷியர் வரவுகளை வைத்து சமாளித்துவிட்டார். நானும் அவசர அவசரமாக வங்கிக்குள் ஓடி எதுவும் நடக்காதது போல் என் அறையினுள் அமர்ந்துக் கொண்டேன். இதை யதார்த்தமாக அந்த குருக்களிடம் சொன்னேன். அன்றிலிருந்து அவர் ஏழரை மணிக்கு நான் எழுந்துவிடுகிறேனா என்று பார்ப்பார். நான் ஏழரை மணிக்கு வெளியே வரவில்லையெனில் என் வீட்டுக் கதவை இரண்டு முறை தட்டிவிட்டுச் செல்வார்.

குமாரனந்தத்திற்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டேன். நடக்கும் வேகத்தில் வாசலில் நின்றே அம்மனை கும்பிட்டுவிட்டு  கோவிலை கடந்து சென்றேன். ரயில் நிலையத்தில் ஒரு வயதான பிச்சைக்காரர், “அண்ணே பசிக்குது. ஏதாவது கொடு” என்று சொன்னார்.  இவர்களுக்கு வேறு வேலையில்லை என்று எண்ணிய நான் அவர் சொல்லியதை  காதில் வாங்கிக்கொள்ளாமல் கேண்டீன் அருகே வந்து நின்றேன். அங்கே வந்த ஒருவர், கேண்டீனில் ஐந்து பொட்டலம் இட்லிகள் வாங்கிவிட்டு, சாம்பார் பொட்டலங்கள் போதாது என்று சண்டைப் போட்டார்.

கேண்டீனில்வேலை செய்யும் பையன், “அவ்ளோ தான் சார் தரமுடியும், அதிகமா கொடுத்த ஒனர் திட்டுவார்” என்றான்.

“இந்த சாம்பார் எப்படி பத்தும்!” என்று அவர் மீண்டும் கத்தினார். அந்த பையன் எந்த பதிலும் சொல்லவில்லை. அவர் ஏன் இப்டி அல்ப்பத்தனமாக  நடந்துக் கொள்கிறார் என்று எண்ணினேன். நான் அவரை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ரயில் வந்தது. ஜன்னல் சீட்டில் அமர்ந்து வெளியே அந்த மனிதரை பார்த்தேன். ரயில் கிளம்பத் தொடங்கியது.

“என்னமோ போப்பா எல்லாம் வியாபாரம் ஆகிடுச்சு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்த அந்த அல்ப மனிதர், ரயில் நிலையத்தில் இருந்த ஐந்து பிச்சைக்காரர்களுக்கும் ஆளுக்கொரு இட்லி பொட்டலத்தை கொடுத்துவிட்டு, மூச்சிறைக்க ஓடிவந்து டிரைனில் ஏறினார். நான் முகத்தை திருப்பிக் கொண்டேன்.

***

“நண்பா.
Survival of fittest – டார்வினின் கோட்பாட்ட எல்லாரும் தவறா புரிஞ்சு வச்சிருக்காங்க. டார்வினோட கோட்பாடின்படி நாம எல்லாரும் ‘பிட்டஸ்ட்’ தான். இல்லையா? ஆனால் நாமதான் அடுத்தவன் கால இடறிவிட்டு ஓடப் பார்க்கிறோம். ஒருவகையில நாம் பரிணாம வளர்ச்சியின் தோல்வி. ‘வேலை’ வாழ்கையில ஒரு அங்கமே ஒழிய அதுவே வாழ்க்கை இல்லை. ஆனால் நாம பிறந்ததே வேலைக்கு போகுரதுக்கதான்னு நம்மள நம்ப வச்சுட்டாங்க. நீ உன் வங்கி வேலையை விட்டுட்டா, உன் வங்கி நிர்வாகம் உன்ன கண்டுக்க போறதில்லை.  உனக்கும் உன்நிர்வாகத்திற்குமான உறவு நீ வேலையில் இருக்குற வரைக்கும்தான். அப்படினா  ஒருவன்  வேலைக்காக ஏன் வாழ்க்கையை தொலைக்கனும்? வாழ்க்கையே கொண்டடுவதற்குதான். அதை மறந்திட்டு,  ஒவ்வொரு நொடியையும் காசுக்காக விற்றுவிடும்போது நாம் அடிமையாகிடுறோம். அதற்காக வேலையை விட்டுவிட்டு சந்நியாசம் போக சொல்லல.  வேலை மட்டுமே வாழ்க்கை இல்லங்கறத உணர்ந்தாலே போதும்…

“நாம எல்லோரையும் பார்வையிலேயே எடை போடுறோம். எல்லோரைப் பற்றியும் நம்மகிட்ட ஒரு முன்முடிவு இருக்கு. பெரியோரை வியத்தல், சிரியோரை இகழ்த்தல் இலம்னுபடிக்குறதோட சரி..  அடுத்தவன் வாழ்க்கையை வாழ்ந்துப் பார்க்காமல் அவனை எடை போடுவது தவறு. நாம சக மனுஷனுக்கு துன்பம் தரமா வாழ்ந்துட்டு போய்டணும். அதான் உத்தமம்.

கடந்த ஆறுமாதங்களில் குமாரனந்தம் எனக்கு எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றையும் புரட்டி, கண்ணில் பட்ட பத்திகளை மட்டும் படித்துக் கொண்டிருந்தேன். இத்தனை வருடம் சிறைச்சாலைக்குள்ளே கழிக்கும் ஒரு மனிதனால் எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக எப்படி பேசமுடிகிறது? சிறையிலே ஒரு போதிசத்துவர்! குமாரனந்தத்தின் பார்வையில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இந்த ஆறு மாத நட்பில் அவருக்கு எதிராக நான் எதையும் சொல்லிடவில்லை.

அன்றாடம் என் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைத் தவிர என்னிடம் சொல்வதற்கு எதுவும் இருந்ததில்லை. நான் ரயிலில் சந்திக்கும் மனிதர்கள் தொடங்கி வங்கியில் சந்திக்கும் மனிதர்கள் வரை எல்லோரைப் பற்றியும் குமாரனந்தத்திற்கு எழுதி அனுப்புவேன். அவர் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும், சூழ்நிலைகளைப் பற்றியும் தன்னுடைய தெளிவான பார்வையை கடிதமாக அனுப்புவார். மீண்டும் யார் இவர் என்ற கேள்வியே என்னுள் மேலோங்கி நிற்க்கும்.

ஒருமுறை அவர் குடும்பத்தைப் பற்றி அவர் மகள் மாலினியைப் பற்றி விசாரித்து எழுதி இருந்தேன். அவரிடம் இருந்து தாமதமாகவே பதில் வந்தது. கோபித்துக் கொண்டாரோ என்று எண்ணினேன். சிறைச்சாலையில் ஏதோ போராட்டம் நடந்ததால் கடிதங்கள் வெளியே செல்லவில்லை என்றார். இப்போதைக்கு நண்பனாகிய நான் மட்டுமே அவருடைய குடும்பம் என்றும் தயவு செய்து வேறெதுவும் கேட்க வேண்டாம் என்றும் எழுதி இருந்தார். அதன்பின் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் எதுவும் கேட்கவில்லை.

எங்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது. மற்றபடி குமாரனந்தத்திடம் தொலைபேசியில்கூட உரையாடியதில்லை. இதைக் கூட அவரிடம் ஒருமுறை சொன்னேன், செல் போன் காலத்தில் பழைய காலத்து மனிதர்கள் போல் கடிதத்தில் உரையாடிக் கொண்டிருகிக்கிறோமே என்று, தான் செல்போன் உபயோகப்படுத்தியதில்லை என்று சொன்னார். பல வருடங்களுக்கு முன் தன் சிறை அதிகாரி கையில் பெரிதாக ஒரு கருவியை பார்த்ததாகவும். முதலில் அதை வாக்கிடாக்கி என்று எண்ணியதாகவும், பின்புதான் அது செல் போன் என்று தெரிந்ததாகவும் சொன்னார். ஆனால் செல்போன் பல வடிவம் பெற்று இன்று டச் போன் புழக்கத்தில் இருப்பதுவரை எல்லாவற்றையும் கவனித்து வருவதாக சொன்னார். முதன்முதலில் செல்போனை பார்க்கும் போது இருந்த வியப்பு இப்போது இல்லை என்றும் சொன்னார்.

அவர் சொல்வது சரிதான். நான் கல்லூரி படிப்பை முடித்து ஒரு சிறு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பின்புதான் முதல் செல்போன் கிடைத்தது. அதுவும் அந்த கம்பெனி நிர்வாகம் கொடுத்த ஒரு பழைய ஃபோன். ஆனால் அந்த பழைய போன் எனக்கு கொடுத்த பிரம்மிப்பை இப்போது நான் பயன்படுத்தும் விலை உயர்ந்த போன் கொடுப்பதில்லை. இதற்கும் குமாரனந்தம் மிக அழகாக பதில் எழுதி இருந்தார்.

“இந்தத் தலைமுறைக்கு எல்லாமே சீக்கிரமாகவும் எளிதாகவும் கிடைச்சிடுது நண்பா. வளர்ந்த பருவத்தில் கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் இளம் பருவத்திலேயே கிடச்சிறதுனாலஅவங்ககிட்ட இயல்பா இருக்கவேண்டிய ‘க்யூரியாசிட்டி’ இல்லாமல் போய்டுது. அங்க இயல்பில்லாத, வயசுக்கு மீறின ஆர்வம் வந்திடுது, அதனால தான் எளிதா தவறான பாதையில போயிடுறாங்க”

மேற்கொண்டு அந்த கடிதத்தைப் படிக்கவிடாமல் கன்டக்டரின் குரல் என்னை தடுத்தது.

“தம்பி இதான் ஸ்டாபிங்க்”

குமாரனந்தம் எனக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் பைக்குள் வைத்தேன். பஸ் நின்றது. குமாரனந்தத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனதின் மூலையில் இருந்தது உண்மைதான். அதற்காக மட்டும் அந்த ஊருக்கு செல்லவில்லை. இவ்வளவு ஞானம் பெற்ற ஒரு மனிதன் சிறைச்சாலையில் தனிமையில் வாடிக்கொண்டிருக்கிறார், அவருக்கோ அவரை சார்ந்தவருக்கோ என்னால் ஏதாவது உதவ முடியுமா என்று தெரிந்துக் கொள்வதற்காகதான் ஒனம்பாக்கத்திற்குச் சென்றேன். குமாரனந்தம் இதற்கு அனுமதி தரமாட்டார் என்றுத் தெரியும். அதனால்தான் அவரிடம் சொல்லவில்லை.

மதுராந்தகத்திலிருந்து வெறும் இரண்டு மணி நேர பயண தூரத்தில்  அமைந்திருந்த அந்த ஒனம்பாக்கம் கிராமம் வெளி உலக தொடர்பற்று அமைந்திருந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. தார் ரோட்டின் இருபுறமும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகள். பெரும்பாலும் கரும்புத்தோட்டமே கண்ணுக்கெட்டிய தூரம் வரைத் தெரிந்தது. அந்த ஊரின் பேர் எழுதப்பட்டிருந்த பலகை ஒரு ஆழமரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது. உச்சி வெயில் தலையை சுட்டதால், குளிர்ச்சியாக ஏதாவது குடிக்க வேண்டும் என்றுத் தோன்றியது. எதிரே இருந்த கடையில் ஒரு பன்னீர் சோடா வாங்கினேன். அந்த கடையில் பத்துவயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்து  வியாபாரம் செய்துக் கொண்டிருந்தான். கடைக்கு பின்னே அவன் வீடு இருந்தது. பன்னீர் சோடா குடித்து பலவருடம் ஆகிவிட்டிருந்தபடியால் அதை நான் சற்றுக் கூடுதலாகவே ரசித்துக் குடித்தேன். நான் யார் என்று விசாரிக்க உள்ளேயிருந்து வந்த கடைக்கார அக்கா, நான் பன்னீர் சோடா குடித்த லட்சணத்தைப் பார்த்து நான் சோடா குடிக்கத்தான் அந்தஊருக்கு வந்திருக்கிறேன் என்று முடிவு செய்துவிட்டார் போல. ஏனெனில் அவர் என்னை எதுவும் கேட்கவில்லை. சோடா பாட்டிலை வைத்துவிட்டு,

“அக்கா, இங்க 17 ஆம் நம்பர் வீடு எங்க?” என்றுக் கேட்டேன்.

அவர் பத்து, பதினொன்று என்று தனக்குள் முணுமுணுத்தவாறே அந்த ஊரை தன் கண்முன் நிறுத்தி பார்த்துவிட்டு,

“அங்க யாரும் இல்லயேபா. அது நான் இங்க வாக்கப்பட்டு வறதுக்கு முன்னாடி இருந்தே பூட்டி கிடக்கே”

அவருக்கு குமாரனந்தத்தைப்பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று புரிந்தது. அதனால் அவரை பற்றி எதுவும் கேட்காமல், அந்த இடத்தை மட்டும் தெரிந்துக்கொண்டு குமாரனந்தம் வீட்டை அடைந்தேன். சிறிய வீடு. கதவு பாதி உடைந்த நிலையில் இருந்தது. உள்ளே இருக்கும் இரண்டு அறைகளை வெளியே இருந்தே அந்த உடைந்தக் கதவின் வழியே பார்க்க முடிந்தது. இரண்டு திண்ணைகள் முழுக்க ஆடுகள் கட்டப் பட்டிருந்தன. அதில் ஒரு சிறிய ஆட்டிற்கு புல் ஊட்டிக் கொண்டிருந்தார் ஒரு வயோதிகர். அவருக்கு கிட்டத்தட்ட என்பது வயது இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம். அவர் அருகில் சென்றதும் அவர் என்ன என்பது போல் பார்த்தார். நானே பேச்சைத் தொடங்கினேன்.

“இது குமாரனந்தம் வீடு தான?”

அவருக்கு முதலில் நான் யாரைக் கேட்கிறேன் என்று புரியவில்லை. பின்பு சுதாரித்துக் கொண்டவராய், “இவ்ளோ வருஷம் கழிச்சு அவன தேடிக்கிட்டு யாரு?”

வீட்டின் உள்ளே இருந்து ஒரு நாய் வெளியே வந்தது. கிழவர் தன் தோளில் இருந்த துண்டை எடுத்து நாயின் மேல் ஓங்கி அடித்தார். நாய் குறைத்துக் கொண்டே ஓடியது. அந்த நாயின் சப்தம் கேட்டு வீட்டினுள்ளிருந்து இன்னும் இரண்டு நாய்கள் ஓடி வந்தன.

“எந்த நாயாவது வந்து சீட்டாடும், இல்ல இந்த நாய்ங்க வந்து குடும்பம் நடத்தும்” கிழவர் தனக்குத்தானே புலம்பினார். பின்பு என்னைப் பார்த்து,

“நீங்க யாருனு சொல்லலயே?” என்றார்.

என்னை அறிமுகம் செய்து கொண்டேன். குமாரனந்தம் எங்கள் வங்கியில் ஒரு கணக்குத் தொடங்கி இருப்பதால், முகவரியை சரிபார்க்க நான் வந்திருப்பதாக சொன்னேன். அவர் அதை எந்த அளவிற்கு நம்பினார் என்றுத் தெரியவில்லை. நான் அவரைப் பற்றி கேட்டேன்.

“நான் இங்கதான் பக்கத்துல இருக்கேன். திண்ணை சும்மா கடக்கேனு ஆடு கட்டி வச்சுக்கிட்டேன்” சொல்லிவிட்டு அவர் என்னை சட்டை செய்யாமல் தன் வேலையைத் தொடர்ந்தார். நான் மீண்டும் குமாரனந்தத்தைப் பற்றி கேட்டேன்.

“அவன் ஊறவிட்டு போய் முப்பது வருசத்துக்கு மேல ஆகுது. அவன் என் பையன்லாம் கூட்டாளி. அவன பெத்தவங்க போனதும் இங்க கொஞ்சநாள் தான் இருந்தான். அப்பறம் ஏதோ வெளியூர் போறதா போனான். திரும்பி வரவே இல்ல.”

கிழவரின் நிலையை என்னால் யூகிக்க முடிந்ததால் “உங்க பையன்?” என்று தயங்கித்தயங்கி கேட்டேன். கிழவர் துண்டால் தன் முகத்தை மூடிக் கொண்டு அழுதார். அதற்கு மேல் நான் அங்கு நிற்கவில்லை. இன்னும் சிலரிடம் விசாரித்தேன். பலருக்கும் குமாரனந்தத்தைப் பற்றி தெரியவில்லை. இளம் வயதில் வேலை நிமித்தமாக குமாரனந்தம் பூனாவிற்கு சென்றவரை அவர்களில் ஓரிருவருக்கு தெரிந்திருக்கிறது. யாருக்கும் அந்த ஊரைச் சேர்ந்த குமாரனந்தம் சிறைச்சாலையில் இருப்பது தெரியவில்லை. சூனியம் வைத்துவிட்டதால் அந்த குடும்பமே அழிந்து விட்டதாக ஒரு பெண்மணி சொன்னார். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

‘விண்ணப்ப படிவத்தின்படி அவருக்கு மாலினி என்று ஒரு மகள் இருக்கிறாள். அப்படியெனில் குமாரனந்தத்திற்கு பூனாவில் திருமணம் ஆகி இருக்கவேண்டும். அவர் பூனாவிற்குதான் சென்றார் என்பதில் என்ன நிச்சயம்? நாமினேஷனில் அவர் தன் மனைவிப் பெயரை குறிப்பிடவில்லை. ஒருவேளை அவரின் மனைவி இறந்திருக்ககூடுமோ? அவர் ஏன் சிறைக்கு சென்றார்?’

நான் யோசித்துக்கொண்டே நிற்கையில், ‘மதுராந்தகம்’ என்று பலகை போட்டு ஒரு பேருந்து வந்தது. ஏறினேன். ‘பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க’ பேருந்தில் இளையராஜா பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அந்த பெட்டிக் கடையில் இருந்த சிறுவன் எனக்கு டாட்டா காட்டினான். நான் அவனைப் பார்த்து சிரித்தேன். பேருந்துநகர்ந்தது.

***

இரண்டு வாரங்களாக குமாரனந்தத்திடமிருந்து கடிதம் வரவில்லை. நான் ஆடிட்டிங் வேலையாக கொல்கத்தா சென்றுவிட்டேன். தினமும் என் உதவியாளருக்கு போன் செய்து குமாரனந்தத்திடமிருந்து ஏதாவது கடிதம் வந்தததா என்று கேட்பேன். இல்லை என்பதே பதிலாக வரும். எனக்கு எதுவும் சரியாக படவில்லை. ஒருவேளை நான் ஓனம்பாக்கம் சென்று விசாரித்தது அவருக்கு தெரிந்துவிட்டதோ? அவரிடம் சொல்லாமல் அவரை பற்றி விசாரிப்பது நட்புக்கு நான் செய்த துரோகம் என்று அவர் கருதிவிட்டாரோ? வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. சென்னை வந்ததும் பணியில் சேராமல் நேராக புழல் சிறைக்கு சென்றேன்.

“அவர் போய் ரெண்டு வாரமாச்சே சார்” சொல்லிவிட்டு அந்தப் போலிஸ் கான்ஸ்டபிள் தொடர்ந்து லெட்ஜரில் எழுதிக் கொண்டிருந்தார்.

“எங்கப் போனாரு?” நான் கேட்க, அந்த போலீஸ்காரர் என்னை ஆச்சர்யமாக நிமிர்ந்துப் பார்த்தார்.

“லைஃப் கன்விக்ட் குமாரனந்தத்த தான சார் கேட்குறீங்க?”

நான் ஆம் என்று தலை அசைத்தேன்.

“அவர் இறந்துட்டாரே சார். ரெண்டு வாரம் ஆச்சு”

எனக்கு தலை சுற்றியது. எங்களின் நட்பு இப்படியா முடியவேண்டும்? அவரிடம் என்ன ஆனது என்று கேட்டேன்.

“அவரு ஹார்ட் பேசன்ட் சார்… நீங்க யாரு” என்றார். என்னால் பதில் பேச முடியவில்லை. அருகே இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது சிறையினுள் இருக்கும் கைதிகளை பார்க்க மனு கொடுக்கும் அலுவலகம்.

“சார் நீங்க பேங்க் மேனஜரா?

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். அங்கே நின்றவர் தன்னை சிறைக் கண்காணிப்பாளர் என்று அறிமுகம் செய்துக் கொண்டார். நான் ‘ஆம்’ என்றேன். இவர்களுக்கு எப்படி என்னைப் பற்றி தெரியும், குமாரனந்தம் சொல்லி இருப்பாரா என்று யோசிக்கும் போதே அந்த கண்காணிப்பாளரே தொடர்ந்தார்.

“லைஃப் கன்விக்ட்ட  ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை தான் பாக்க முடியும். அதுவும் வியாழக் கிழமை மட்டும் தான். குமாரனந்தம், லாஸ்ட் ரெண்டு வியாழக் கிழமை கேட்டாரு. என்ன பாக்க யாராவது மனு போட்டிருக்காங்களானு. இத்தன வருஷம் இல்லாம யாரு வருவானு கேட்டேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தர், பேங்க் மேனஜர்னு சொன்னாரு”

கான்ஸ்டபிள் அவர் அருகில் வந்து, “குமாரானந்தம் நிறைய லெட்டர் அனுப்புவாரே. அது இவருக்குதான் போல” என்றார்.

“ஓ!” என்றவாறே என்னை நோக்கிய கண்காணிப்பாளர், “கைதிங்க அனுப்புற லெட்டெர்ஸ்லாம் படிச்சிட்டுதான் அனுப்புவோம். அவரு நன்நடத்தைக் கைதிங்கிறதுனால படிக்காமயே போஸ்ட் பண்ணிட்டோம். ரொம்ப நல்ல மனுஷன்…”

அவர் பேசிய எதுவும் மேற்கொண்டு என் மனதில் பதியவில்லை. குமாரனந்தம் என்னைப் பார்க்க ஆசைப் பட்டிருக்கிறார். நான் அவரை வந்து பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்டிருக்கிறார். எனக்கேன் இது புரியாமல் போனது? முதல் கடிதத்திலேயே அவரை நண்பராய் உணர்ந்த என்னால் அவர் மனதில் இருந்ததை ஏன் உணரமுடியவில்லை? அவருடன் தொலைபேசியில் உரையாட வேண்டும் என்றுக் கூட எனக்கு ஏன் தோன்றவில்லை? அவர் குரலைக் கூட கேட்கவில்லையே! தான் ஒரு ஹார்ட் பேசன்ட் என்று அவர் ஏன் சொல்லவில்லை?

விடுமுறை நாட்களில் நான் எப்படி நேரத்தை கழிப்பேன், வார நாட்களில் விடுப்பு எடுக்க முடியுமா? என்று குமாரனந்தம் என்னிடம் ஒருமுறை கேட்டது நினைவிருக்கிறது. அந்த கேள்வியின் உள்ளர்த்தத்தை என்னால் ஏன் புரிந்துக் கொள்ள முடியவில்லை? சிறைக்கு வந்து என்னைப் பார் என்று சொன்னால் நான் கோபித்துக் கொள்வேன் என்று எண்ணினாரோ என்னவோ, என்னைப் பார்க்க விரும்புவதை அப்படி சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

எனக்கு அழுகை வந்தது. ஆனால் அங்கே அழ முடியாது.

“அவர் பொண்ணுக்கு இன்பார்ம் பண்ணீட்டீங்களா?” தளுதளுத்த குரலில் கேட்டேன்.

“இன்பார்ம் பண்றதா? அவரு ஏர்வாடா ஜெயில்ல இருந்தவரு சார். தான் ஒரு இதய நோயாளி, தமிழ்நாட்லதான் தன் உயிர் பிரியணும்னு மனு போட்டு ட்ரான்ஸ்பர் ஆகி வந்தவரு. பழைய ரெகார்ட்ஸ்ல இருக்குற அவரு புனே அட்ரஸ காண்டக்ட் பண்ணுனோம். அங்க அவரு பொண்ணு இல்ல. அதான் நாங்களே அடக்கம் பண்ணிட்டோம். அவரு இங்க வந்து அஞ்சு வருஷம் ஆச்சு. இதுவரை யாருமே வந்து பாத்ததில்லை. புனே ஜெயில்லயும் அவர யாரும் பாத்ததுக்கு ரெகார்ட்ஸ் இல்ல…”

அதன் பின் அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. வீட்டிற்கு சென்று அழ வேண்டும். நான் அவர்களிடம் விடைப்பெற்றுக் கொள்ள யத்தனித்தேன்.  அந்தக் கண்காணிப்பாளர் பேசினார்.

“இங்க ப்ராபர்டி அக்கௌன்ட்ல தான் கைதிங்க சம்பாதிக்கிற காச சேத்து வைப்போம். அவர் பேங்க்ல சேக்கணும்னு ஆசைப்பட்டாரு, அவர் அக்கவுண்ட்ல இருக்குற அமௌன்ட்ட நாமினிக்கு கொடுத்துடுவீங்க இல்ல?”

நாமினி தேடி வந்தால் தான் அவருக்கு சேரவேண்டிய பணத்தை தருவோமே ஒழிய நாங்களாக தேடி சென்று பணத்தை தருவது வழக்கமில்லை. யாரும் தேடிவரவில்லையெனில் அந்த காசு வங்கியின் சஸ்பன்ஸ் கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது அந்த காசு யாருக்கும் இல்லை என்று அர்த்தம். குமாரனந்தம் கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் சேமித்திருந்தார். அது மாலினிக்கு போய் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். சிறையிலேயே சேமித்தால் அது சாத்தியமில்லை என்று அவர் கருதி இருக்கலாம். தாம்வெகுநாட்கள் இவ்வுலகில்  இருக்கமாட்டோம் என்றும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் வங்கியில் கணக்கைத் தொடங்கி நாமினேஷனில் மாலினியை சேர்த்திருக்கிறார். அவர் புத்திசாலிதான்.

சிறை அதிகாரியிடம் என்ன சொல்வது? “சரி சார்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அதற்குள் ‘கொஞ்சம் இருங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவர், கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தார். அதை என்னிடம் கொடுத்த அவர்,

“ஆக்ச்சுவலி இத எங்க கஸ்டடில தான் வச்சுக்கணும். பட் நீங்க அவர் டாட்டருக்கு  அமௌன்ட் செட்டில் பண்ணும்போது இதையும் குடுத்துருங்க. இதான் அவரோட மிச்ச சொத்து”

சொல்லிவிட்டு, இதற்கு மேல் எங்களுக்கும் குமாரனந்தத்திற்கும் சம்மந்தமில்லை என்பது போல அந்த அதிகாரி உள்ளே போய் விட்டார். எல்லோரும் அவரவர் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டனர். அந்த கவரை பிரித்தேன். அதனுள் நான் எழுதிய கடிதங்கள் இருந்தன. திரும்பி என்னிடமே வந்துவிட்டதே என்று எண்ணும் போதுதான் இன்னும் பல கடிதங்கள் அதில் இருப்பதை கண்டேன். எல்லாம் குமாரனந்தம் தன் மகளுக்கு எழுதியது.

“மாலுமா

உனக்கு என் மேல் கோபம் இருக்கும்னு எனக்குத் தெரியும். அது குறையணும்னு நான் எதிர்ப்பார்க்கல. உன்னை தொந்தரவு செய்யவும் நான் விரும்பல. ஆனா…”

நிறைய கடிதங்கள் எழுதி இருந்தார். தேதிவாரியாக எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கடைசியாக இருந்த கடிதத்தை பார்த்தேன்.

“மாலுமா, எனக்கு புதுசா ஒரு நண்பர் கிடைச்சிருக்கார். வங்கி மேலாளர். அவரை நான் பார்த்ததேயில்லை.  ஆனால் அவர் மீது ஒரு மரியாதை கலந்த பாசம் உருவாகி போச்சு. உன் அண்ணன் இருந்திருந்தால் அவர் வயசு தான் இருக்கும். உனக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கனும்னு  ஆசையா இருக்கிறது…”

எல்லாக் கடிதங்களும் மாலுமா என்றுத் தொடங்கி, ‘அன்புடன் அப்பா’ என்று முடிந்தது. போஸ்ட் செய்யப்படாத அந்த கடிதங்கள் எதிலும் முகவரி இல்லை. எனக்கு எழுதிய கடிதத்திலும் அவர் அன்புடன் அப்பா என்றே எழுதி இருக்கலாம். எனக்கு மட்டும் யார் இருக்கிறார்கள்? அதுவரை அவர் என்ன குற்றம் செய்திருப்பார் என்று நான் எண்ணியது உண்மைதான். ஆனால் அவருடைய கடந்த காலத்தை தெரிந்துக் கொள்ள கூடாது என்று முடிவு செய்தேன். அதை தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவர் நிகழ்காலத்தில் எனக்கொரு நல்ல நண்பராய் இருந்திருக்கிறார். வாழ்க்கையை புதிதாக பார்க்க கற்று தந்திருக்கிறார். அதுவே போதும்.

ஆட்டோ பிடித்து வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தேன். ரயில் தொலைவில் வந்துக் கொண்டிருந்தது.

‘ரயில் உலகில் பயணிப்பதற்காக மட்டுமன்று. உலகை விட்டுப் பயணிப்பதற்காகவும்’

ஒரு பிரபலமடையாத கவிதை புத்தகத்தில் படித்த இந்த இரண்டு வரிகளும் காரணமின்றி நினைவுக்கு வந்தன. என்னை அறியாமல் பிளாட்பாரக் கோட்டினைத் தாண்டி தண்டவாளம் அருகே சென்றேன். ரயில் மிக அருகில் வந்துவிட்டது. குமாரனந்தத்தை சொர்க்கத்தில் சென்று பார்க்கலாம் என்று எண்ணிய அந்த தருணம் ஒரு கை என்னைப் பிடித்து பின்னே இழுத்தது.

“லூசாயா நீ. ட்ரைன் வரது தெர்ல” என்று கத்திவிட்டு அந்த மனிதர் வேகமாக நகர்ந்தார். அப்போதுதான் உரைத்தது. நான் போய்விட்டால், குமாரனந்தம் மாலினிக்காக சேர்த்து வைத்த பணத்தையும், அவளுக்காக எழுதிய கடிதங்களையும் அவளிடம் யார் கொடுப்பார்கள்? வேலையில் இருந்தால் மாலினியை தேடமுடியாது.வேலை இனி முக்கியமில்லை. என் நண்பனின் மகளை தேடவேண்டும்.

 

நண்பர்களற்றவனின் கதை- சிறுகதை

எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது என்று எண்ணலாம். உண்மையில், உலக வாழ்கையே சுவரஸ்யமற்றது தான். சுவரஸ்யமென்பது வாழ்கையினுள் நாம் வழிய திணித்துக் கொள்ளும் பொய். அதனால் என் வாழ்க்கை சுவாரஸ்யமற்று போனதைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் சிலபல நண்பர்களோடு திரிந்த நான் இப்படி நண்பர்களற்றுப் போனதை எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு முன்பு, பிப்ரவரி மாதத்தில், அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி ஓடாமல் போன அந்த திரைப்படத்தின் முதல்நாள்- முதல்காட்சி- முதல்டிக்கெட்டை குரோம்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் நான் வாங்கிய போது என் பின்னே வரிசையில் நின்றுகொண்டிருந்த எழுபது பேரும் என் நண்பர்கள்தான். அன்று திரையரங்கில் முழுக்கமுழுக்க எங்களுடைய கல்லூரி மாணவர்களே இருந்தனர். அதில் பெரும்பாலானோர் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள். மிகவும் நெருங்கிய நண்பர்களென்று என்னுடன் எப்போதும் வலம் வந்த ஐந்தாறு பேரும் இப்போது இல்லை. இன்று யாருமற்ற ஒருவனாய் இங்கே இரண்டு குதிரைகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கிறேன். பார்க் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததுமே சுவற்றை ஓட்டியிருந்த கம்பத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு குதிரைகளும் என்னை பாந்துவமாக பார்ப்பது போல் இருந்ததால் அதன் நடுவே போய் அமர்ந்துகொண்டேன். அந்த குதிரைகள் ஒன்றை ஒன்று சட்டை செய்யாமல் நின்றுக் கொண்டிருந்தன. நண்பர்களற்ற குதிரைகள்..

எவ்வளவு நேரம் ஓடியது என்று தெரியவில்லை. “ஆம்பள குதிரைய பாக்க வருவானுங்க” அங்கே இருந்த குண்டு பெண்மணி சொன்னாள். எனக்கு அவமானமாக இருந்தது. எழுந்து நடந்தேன்.

கல்லூரியில் என்னுடைய கேங் பெரியது. எப்போதும் பதினைந்து இருபது பேர்களாக சேர்ந்து கல்லூரி ஹாங்கரில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். என்ன பேசினோம் என்று நினைவில்லை. ஆனால் இப்போது அப்படி பேசியதை எண்ணும் போது தொலைந்து போன மகிழ்ச்சி ஒரு நிமிடம் மீண்டும் மனதை தொட்டுவிட்டு போகிறது.  மூன்று வருடங்கள் நண்பர்கள் புடை சூழ வாழ்க்கை நகர்ந்தது. இறுதி ஆண்டில், சேர்மேன் தேர்தலின்போது நடந்த பிரச்சனையில் நிறைய பேர் பிரிந்து சென்றுவிட்டனர். இரண்டு மூன்று நண்பர்கள் மட்டுமே மிஞ்சினர்.

பின் திரைகடல் ஓடி திரவியம் தேடும் முயற்சியில் ஈடுபட்டதால் அந்த நண்பர்களும் தொடர்பற்று போனார்கள். தன்னுடைய ஒரு தலைக்காதல் கதைகளை பற்றி இரவு பன்னிரண்டு  மணிக்கு போன் செய்து கிட்டதட்ட ஆறுவருடங்களுக்கு மேல் புலம்பிக் கொண்டிருந்த ஒரே ஒரு நண்பனும், தான் காதலித்த பெண்ணையே இறுதியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு கை பிடித்துவிட்டதால், என் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

எல்லா நண்பர்களும் கடைசி வரை உடன் வர மாட்டார்கள் என்று என் பழைய நண்பன் பாபா அடிக்கடி சொல்வான். ஆனால் உன்னுடனே உனக்காகவே சாவேன் என்றெல்லாம் பேசியவர்களும் பிரிந்து சென்றுவிட்டார்கள் என்பதைதான் ஜீரணிக்க முடியவில்லை. வாழ்க்கை இரக்கமற்றது. அது நம்மை பயன்படுத்திக் கொண்டு, மாங்கொட்டை போல் சப்பி போட்டுவிடுகிறது. அல்லது நாம் மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டு விலகி வந்து விடுகிறோம்.

சிறிது தூரம் நடந்ததும் அந்த ஹோட்டல் போர்டு பெரிதாக இருந்தது. அதை பார்த்ததும் தான் அங்கே நான் ஏன் வந்தேன் என்று உரைத்தது. வங்கியில் ஒரு ட்ரைனிங்கிற்காக அனுப்பி இருந்தார்கள். ஒருவாரம் அமரவைத்தது credit monitoring, credit appraisal, NPA management என்று ஏதேதோ பேசுவார்கள். எல்லாம் ஆட்டிற்கு மாலை போடும் கதை தான்.

வங்கியிலும் எனக்கு பெரிதாக நண்பர்கள் என்று யாருமில்லை. பெரும்பாலும் என்னுடன் வேலை செய்பவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள். மேலும் ஏதோ அடிமை போல் அவர்கள் வேலை செய்வது எனக்கு எரிச்சலை தரும். கொஞ்சம் உரையாடினால் என்னையும் அடிமையாக மாற்றிவிட முயற்சி செய்வார்கள் அதனால் அவர்களிடமிருந்து விலகியே இருந்தேன். எப்போதும் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன்.

வங்கி ஐந்து மணிக்கு முடியும். ஏழு மணி வரை சும்மா உக்காந்திருக்க வேண்டும். “ஆபிசர் 24 மணி நேரமும் வேலை செய்யனும்” என்று வங்கி மகான்களும் மாக்கன்களும் சொல்வார்கள்.  எனக்கு கடுப்பாக தான் இருக்கும். வேறு வழியின்றி அமைதியாக அமர்ந்திருப்பேன். பைத்தியம் பிடிப்பது போல் இருந்தாலும் நான் என்னெதிரே இருக்கும் கணினியின் திரையை பார்த்தவாறே மனதில் சூரத்தின் சுத்தமான அழகான சாலையில் விளக்கொளி நிறைந்த மாலை வேலையில் அந்த பஞ்சாபி தோழியின் கை கோர்த்து நடந்து செல்வேனே தவிர பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் சக ஊழியருடன் தப்பித்தவறி கூட உரையாடிவிட மாட்டேன்.

நான் எங்கெங்கோ வேலை பார்த்திருக்கிறேன். பொதுவாக எல்லா அலுவலகங்களிலிலும் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். முதலாம் வகையினர், தங்கள் வேலையை நேர்மையாக  செய்பவர்கள். அவர்கள், மற்றவர்களோ நிர்வாகமோ தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அலட்டிக் கொள்ளமாட்டார்கள். இன்னொரு வகையினர் உண்டு. அவர்களின் முதல் குறிக்கோள் நிர்வாகத்திடம், நிர்வாகத்தின் பிரதிநிதிகளிடம் நல்ல பேர் வாங்குவது.  வேலை செய்வதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். நான் முதல் ராகம். அதனாலேயே எனக்கு நிறைய பிரச்சனைகள் வந்தது. நல்ல பெயர் வாங்குவதை பற்றி அலட்டிக் கொள்ளாததால் கெட்டப் பெயர் தேடி வந்தது.  நல்ல பேர் வாங்குபவர்களை மட்டும்தான் ட்ரைனிங் வொர்க்ஷாப் எல்லாம் அனுப்புவார்கள். இந்த முறை, அரங்கில் இரண்டு இருக்கைகள் காலியாக இருந்ததால் என்னையும் அனுப்பினார்கள்.

நான் அமைதியாக கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அறையில் நிறைய பேர் இருந்தும் நான் தனித்துவிடபட்டவனாகவே இருந்தேன். எனக்கு வொர்க்ஷாப்பில் ஆர்வம் வரவில்லை. ரகசியமாக என்னுடைய கிண்டிலில் தஸ்தயெவ்ஸ்கி படிக்கத் தொடங்கினேன்.  .

‘இறுதியாக அவன் அவள் அருகே சென்றான். அவனுடைய கண்கள் மின்னின. அவன் தன் இரண்டு கைகளையும் அவள் தோல் மேல் வைத்து, அவளுடைய கலங்கிய கண்களை பார்த்தான். காய்ச்சலால் சோர்வுற்றிருந்த அவனது கண்கள் அவளை ஊடுருவியது. அவன் உதடுகள் துடித்தன. திடிரென்று அவன் சாஸ்டாங்கமாக தரையில் விழுந்து, அவள் கால்களை முத்தமிட்டான். ஒரு பைத்தியக்காரனிடமிருந்து விலகிச் செல்பவளை போல அவள் விலகினாள். ஆம், அவன் பார்ப்பதற்கு பைத்தியக்காரன் போலவே தோன்றினான்’

“அவ்ளோ பிசியா?” குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

“ப்ரேக்ல கூட அவ்ளோ இன்ட்ரஸ்ட்டா சார் என்ன படிக்குறீங்க?” அவள் ஆங்கிலத்தில் கேட்டாள். நான் அவளை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் என்னோடு சேர்ந்து இந்தியா முழுவதும் சுற்ற வேண்டும் என்று கொல்கத்தாவில் வைத்து சொன்ன கன்னடப் பெண்.  எனக்கு திருமணம் என்று தெரிந்ததும் என்னை வாட்ஸாப்பில் ப்ளாக் செய்துவிட்டு காணாமல் போய் விட்டாள். அவள் ட்ரைனிங்கிற்காக ஹுப்ளியிலிருந்து வந்திருந்தாள்.

“ஹுக்கா பார் கூட்டிட்டு போறியா?” என்று  இரண்டு வருடங்களுக்கு முன்பு  அலிபூரில் தங்கியிருந்த போது கேட்டவள் அவள்தான்.

நான் புன்னகை செய்தேன். எனக்கு ஆசையிருந்தாலும் பெரிதாக ஆர்வம் இல்லை. “நான்….” என்று இழுத்தேன்.

“நீ ரொம்ப நல்லவன். உன்னை நம்பி எங்கேயும் வரலாம்” என்றாள்.

அஞ்சுனா கடற்கரையில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை பார்ப்பதை போல் இருந்தது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாகிப் போனோம்.

நான் கொல்கத்தாவில் ஒரு பெரிய முகலாய ரெஸ்டாரண்டில் மேஜை புக் செய்து வைத்துவிட்டு அவளை அழைத்த போது,

“எல்லாம் தப்பா பேசுவாங்கடா. சாரிடா… திஸ் பீபில் ஆர் சோ சிக்” என்றாள்

நான் சரி என்று சொல்லிவிட்டு போனை துண்டிக்கலாம் என்று நினைத்த போது,

“உன் கூட சேர்ந்து ஒரு நாள் புல்லா சுத்தணும்” என்றாள். அன்றே முடிவு செய்துவிட்டேன், அவளை புரிந்துகொள்ள முயற்சி செய்யக் கூடாதென்று.

“பேசுறதே இல்ல. வாட்ஸாப்ல ஒரு ஹாய் கூட அனுப்பல… ஆல்மோஸ்ட் ஒன் இயர் ஹோகயானா!” கண் சிமிட்டி  வினவினாள்.

“I couldn’t ping you. some problem in your whatsapp…” என்று சொன்னேன். வேகமாக தன் மொபைலை எடுத்து வாட்ஸாப்பை பார்த்தாள். எதுவும் சொல்லவில்லை. ட்ரைனிங் ஒரு வாரம் நடந்தது. என்னை unblock செய்வாள் என்று எதிர்பார்த்தேன். செய்யவில்லை. கடைசி நாளன்று, “உன் வைப்ப இன்ட்ரோ பண்ணவே இல்ல….” என்று கேட்டாள். நான் புன்னகை செய்தேன்.

“வாழ்க்கையில் ஒரு முடிவை எதற்காக எடுக்கிறோமென்று தெரியவில்லை. ஒன்றிலிருந்து ஓடி தப்பித்து கொள்வதாக நினைத்து இன்னொன்றில் சிக்கிக் கொள்கிறோம்” என்று அவளிடம் சொன்னேன். அந்த சந்தர்ப்பத்தில் அத்தகைய வசனம் தேவை இல்லைதான்.

“நீ இஞ்சினியரிங் விட்டு வந்திருக்க கூடாது….” என்றாள். பின் ஏதேதோ பேசினாள். பேசிகொண்டிருக்கும்போதே bye என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவது அவளது வழக்கம். அன்றும் அதை செய்தாள். அவளை புரிந்துகொள்ள முயற்சிப்பதோ நிரந்தரமான தோழி என்று நினைப்பதோ மனப்பிறழ்வில் கொண்டு விட்டுவிடும்.

கடைசியாக அறையைவிட்டு வெளியே வரும்போது “எங்க ஊருக்கு வா. சுத்திக் காட்டுறேன். உன்னமாதிரி இப்டி கண்டுக்காம ஓடிட மாட்டேன்” என்றாள். நான் திரும்பி பார்க்காமல் வெளியே வந்தேன்.

மீண்டும் அதே வழி. அங்கே அந்த குதிரைகள் இல்லை. ஒருவேளை குதிரைகளுக்கு நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள் போலும்!

ட்ரெயினில் எதையோ நினைத்துக் கொண்டே வந்தேன். அது செங்கல்பட்டு ட்ரைன் என்பதால் முதல் வகுப்பிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. நான் கதவருகே நின்றவாறே சாய்ந்துகொண்டு, சிறுகதை படித்துக் கொண்டு வந்தேன். யதார்த்திலிருந்து தப்பித்து செல்ல புனைவுகள் தேவைப்படுகின்றன. தினமும் காலையும் மாலையும் பயணம் சிறுகதைகளுடன் தான் கழிகிறது. மனதிற்கு பிடித்தவர்களின் மடியில் முகம் புதைத்துக்கொண்டு அழும் நிறைவை நல்ல சிறுகதை தந்துவிடும்.

ட்ரைன் நின்றது. பலர் இறங்கினர். எந்த நிலையம் என்று பார்க்க தலையை தூக்கிய போது, எதிரே நின்றவரை கவனித்தேன். அவர் பேண்ட்டில் ஜிப் போட மறந்திருந்தார். அதை அவரிடம் சொன்னால் என்னை தவறாக நினைத்துவிடுவாரோ என்று தோன்றியது.

சுற்றிமுற்றும் பார்த்தேன். எல்லோரும் அவர்கள் வேலை பார்த்தார்கள். என்ன நினைத்தாலும் பாராவயில்லை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து, ‘சார் ஜிப்’ என்று சன்னமான குரலில் சொன்னேன். அவர் ‘oops’ என்றவாறே ஜிப்பை போட்டுக்கொண்டு என்னை பார்த்து நன்றியுணர்வோடு புன்னகைத்தார். நான் தலையை திருப்பிக்கொண்டேன். அவர் என்னிடம் உரையாட முயற்சி செய்பவரை போல் என்னை பார்த்து கொண்டு வந்ததை என்னால் உணர முடிந்தது. நான் அவரை நிமிர்ந்து பார்க்க கூச்சப் பட்டு புத்தகத்தை கவனித்தேன்.

‘அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி வெளிப்பட்டாள் மரி’

ட்ரைன் பல்லாவரத்தில் நின்றது. இறங்கிய அவர் என்னை திரும்பி பார்த்து,

“தம்பி இத சொல்ல ஏன் கூச்ச படுற. என் பையன் வயசுதான் இருக்கும் உனக்கும்…”

நான் சங்கடமாக புன்னகைக்க, அவர்,

“ஹாப்பி பிரெண்ட்ஷிப் டே” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பிரெண்ட்ஷிப் டே என்று அவர் சொன்னதும் உரைத்தது, எதற்காக நண்பனை வெளியே தேடிக் கொண்டிருக்கிறேன்? வீட்டிற்கு போக வேண்டும். ஒருவேளை என் மனைவி எனக்கொரு நல்ல தோழியாக இருக்க கூடும்.

 

நான் ஒரு ஜடம்

என் தனிமை என்னை கொன்று விட பார்க்கிறது
நான் என் தனிமையை கொன்று விட பார்க்கிறேன்

ஆதி அந்தமற்ற ஒருவனாய்
நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்

சுட்டெரிக்கும் வெயில்
குளிரடிக்கும் காற்று
முத்துகளாய் பொழியும் மேகம்-எதுவும்
என்னை கவர்ந்துவிடவுமில்லை

பறந்து விரிந்த இந்த வானம்
காற்றயைபோல் பயணிக்கும் வாகனங்கள் என எதுவும்
என்னை அசைத்துவிடவில்லை

ஆம் நான் ஒரு ஜடம்
உலகம் என்னை அப்படி தான் அழைக்கும்

என் கண்முன்னே எது நிகழ்ந்தாலும்
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்
பார்த்துகொண்டு மட்டும்தான் இருப்பேன்-ஏனெனில்
நான் ஜடம்
அவர்கள் காதல் கவிதை பாடிய போது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
அவள் கற்பிழந்து கதறிய பொது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
பின் அந்த ஆலமரத்தில் பிணமாய் தொங்கியபோது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
அதோ அவன் இப்போது வேறோருத்தியிடம் கவி பாடுகிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்னுள் எந்த சலனமும் ஏற்பட்டது இல்லை
ஏற்பட போவதும் இல்லை-ஏனெனில்
நான் ஜடம்

பல கோர மரணகளை கண்டிருக்கிறேன்
மழலை மொழியை கேட்டிருக்கிறேன்
பலமுறை நான் சிதைக்க பட்டிருக்கிறேன்
சிலமுறை செப்பனிட பட்டிருக்கிறேன்
இருந்தும் நான் ஆரவாரமற்றே  இருக்கிறேன்.

பிச்சைகாரர்கள், சன்யாசிகள், விபச்சாரிகள், பத்தினிகள்
அரசியல்வாதிகள், அறிவிலிகள், அறிவுஜீவிகள் என
பலர் என்னை கடந்து சென்று விட்டனர்
அவர்களை பொறுத்த வரையில் நான் ஜடம்
எப்போதும் மாறாமல் இருப்பதனால்…
என்னை பொறுத்த வரை அவர்கள் தான் ஜடம்.
நாகரிகம் வளர்ச்சி அடைந்தும் அவர்களின் மிருக மனம் மட்டும்
மாறாமல் இருப்பதால்..

அவர்களிடம் இதை சொல்லிட, நானும் வெகு நாட்களாக
காத்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் ஏனோ தெரியவில்லை..
இப்போது யாரும் என் வழி வருவதில்லை.

என்னை வெறும் ஜடாக எண்ணி கடந்து சென்ற அவர்கள்
திரும்பி வருவார்களா !
எனக்கு தெரியாது

அனால் நான் மட்டும் காத்திருக்கிறேன்
அவர்களின் நினைவுகளை சுமந்துகொண்டு .

-மூடப்பட்ட  தேசிய  நெடுஞ்சாலை ….