நான் ஒரு ஜடம்

என் தனிமை என்னை கொன்று விட பார்க்கிறது
நான் என் தனிமையை கொன்று விட பார்க்கிறேன்

ஆதி அந்தமற்ற ஒருவனாய்
நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்

சுட்டெரிக்கும் வெயில்
குளிரடிக்கும் காற்று
முத்துகளாய் பொழியும் மேகம்-எதுவும்
என்னை கவர்ந்துவிடவுமில்லை

பறந்து விரிந்த இந்த வானம்
காற்றயைபோல் பயணிக்கும் வாகனங்கள் என எதுவும்
என்னை அசைத்துவிடவில்லை

ஆம் நான் ஒரு ஜடம்
உலகம் என்னை அப்படி தான் அழைக்கும்

என் கண்முன்னே எது நிகழ்ந்தாலும்
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்
பார்த்துகொண்டு மட்டும்தான் இருப்பேன்-ஏனெனில்
நான் ஜடம்
அவர்கள் காதல் கவிதை பாடிய போது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
அவள் கற்பிழந்து கதறிய பொது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
பின் அந்த ஆலமரத்தில் பிணமாய் தொங்கியபோது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
அதோ அவன் இப்போது வேறோருத்தியிடம் கவி பாடுகிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்னுள் எந்த சலனமும் ஏற்பட்டது இல்லை
ஏற்பட போவதும் இல்லை-ஏனெனில்
நான் ஜடம்

பல கோர மரணகளை கண்டிருக்கிறேன்
மழலை மொழியை கேட்டிருக்கிறேன்
பலமுறை நான் சிதைக்க பட்டிருக்கிறேன்
சிலமுறை செப்பனிட பட்டிருக்கிறேன்
இருந்தும் நான் ஆரவாரமற்றே  இருக்கிறேன்.

பிச்சைகாரர்கள், சன்யாசிகள், விபச்சாரிகள், பத்தினிகள்
அரசியல்வாதிகள், அறிவிலிகள், அறிவுஜீவிகள் என
பலர் என்னை கடந்து சென்று விட்டனர்
அவர்களை பொறுத்த வரையில் நான் ஜடம்
எப்போதும் மாறாமல் இருப்பதனால்…
என்னை பொறுத்த வரை அவர்கள் தான் ஜடம்.
நாகரிகம் வளர்ச்சி அடைந்தும் அவர்களின் மிருக மனம் மட்டும்
மாறாமல் இருப்பதால்..

அவர்களிடம் இதை சொல்லிட, நானும் வெகு நாட்களாக
காத்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் ஏனோ தெரியவில்லை..
இப்போது யாரும் என் வழி வருவதில்லை.

என்னை வெறும் ஜடாக எண்ணி கடந்து சென்ற அவர்கள்
திரும்பி வருவார்களா !
எனக்கு தெரியாது

அனால் நான் மட்டும் காத்திருக்கிறேன்
அவர்களின் நினைவுகளை சுமந்துகொண்டு .

-மூடப்பட்ட  தேசிய  நெடுஞ்சாலை ….

உதிக்க மறுத்திடுமோ சூரியன்!

அதிகாலை பொழுது
கிழக்கில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை
என் வாழ்விலோ இதுவரை உதித்ததில்லை…

நான் மட்டும் தனியாக சாலையில்
எங்கோ பயணித்துக்கொண்டிருந்தேன்-இல்லை
சாலை எங்கேயோ பயணித்துக்கொண்டிருந்தது
தனிமைப்பட்ட என்னுடன்…

நான் பார்த்த காட்சிகள்-பார்த்திராத கோணத்தில்
பார்க்க மறுத்தக் காட்சிகள் பார்க்க வேண்டிய தருணத்தில்
அன்று கண்டேன்,
இயற்கையின் சரீரத்தையும்
சமுகத்தின் குரூரத்தையும்…

சாலையின் வலப்புறம்
புதருக்கடியில்…
புலன்களை அடகுவைத்த பெண்ணொருத்தி
புலன்களை அடக்கிவைத்த சாமியாருடன்…

சாலையின் இடப்புறம்
இரண்டு நாய்கள்

இருபுறங்களிலும் பெரிய வித்தியாசங்களை
காணவில்லை நான்

இளமையில் வறுமை
அதனால் தனிமை
வாழ்க்கையில் எதனையோ தேடிக்கொண்டு
எதனுள்ளோ வாழ்க்கையை தேடிக்கொண்டு
தூரத்தில் தெரிந்த ஒளியை நோக்கி
ஒளி காட்டிய வழியில் நகர்ந்தேன்

ஒளி சென்ற இடமோ சுடுகாடு
ஆடிக்களைத்தவர்களையும் க(லி)ழித்தவர்களையும் சுடும்காடு.
அங்கு பிணங்களுக்கு மத்தியில்-உயிருள்ள பிணமாய்
உணர்வற்ற வெட்டியான் ஒருவன்
உடல்களை எரித்துக்கொண்டிருந்தான்.
ஐயகோ! நரகல் பணி
வேறென்ன சொல்ல ?

நான் படித்ததோ பொறியியல்
அதனால் தான் என்னவோ வேலை கிட்டவில்லை
வேலையற்றவன் என்றது நாகரிகம்
வேலைக்கு தகுதியற்றவன் என்றது யதார்த்தம் !

சற்று தொலைவில் அந்த ரயில் நிலையம்
ரயில் எங்கிருந்தோ வேகமாக வந்துக்கொண்டிருந்தது
எனக்குள் ஏதோ ஓர் உந்துதல்
நான் வாழ்ந்து எதையும் சாதித்துவிடபோவதில்லை
இத்துனை நாட்கள் வாழ்ந்ததே சாதனைதான்.
ரயில் உலகில் பயணிப்பதற்காக மட்டுமன்று
உலகை விட்டு பயனிப்பதற்க்காகவும் தான்…

அருகில் படிக்காத பாமரனொருவன் மூட்டை சுமந்துக்கொண்டிருந்தான்
படிக்க வழியில்லாத சிறுவனொருவன் நாளிதல் விற்றுக்கொண்டிருந்தான்
நான் என்னை மறந்து அவர்களை நோக்கினேன்
படித்தவனுக்கோ வேலையில்லை
பாமரனுக்கோ படிப்பேயில்லை
அறிவிலிகள் பாமரர்களன்று
இயலாமைக்கும் இயங்காதமைக்கும் “வேலையில்லா திண்டாட்டம்” என
புனைபெயர் சூட்டிய நாம்…

படித்த அனைவரும் கல்வி போதிக்க துவங்கியிருந்தால்
ஒளிந்திருக்கும் அறியாமை ஒழிந்திருக்கும்.
உண்மை உரைக்க தொடங்கிய போது-ரயில் மோதியது
உயிர் பிரிந்தது…

என் உயிரல்ல
நான் கொண்ட அவ நம்பிக்கையின் உயிர்
வந்த வழி திரும்பினேன்.
சுடுகாட்டில் அவ நம்பிக்கையையும் அறியாமையும் புதைத்துவிட்டு
சந்தோசமாக வீடு நோக்கி நடந்தேன் தனிமையோடு.
இல்லை இல்லை, தன்னம்பிக்கையின் துணையோடு
இப்போது சூரியனும் உதித்துவிட்டது
கிழக்கில் மட்டுமல்ல
என் வாழ்விலும் தான்…

திருடன் போலிஸ்-ஒரு நிமிடக் கதை

“அவன போடணும்டா. இனி அவன உயிரோட விட்டு வைக்க கூடாது”என்றான் அண்ணன் தன் தம்பியிடம்.

“ஆமா, அண்ணே! போன முறை திருடும்போதே நம்மல புடிச்சுருப்பான்.அவன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள உசுரே போயிருச்சு”இது தம்பி.

அண்ணனுக்கு வயது பன்னிரண்டு . தம்பிக்கு வயது பத்து. ஆனால் இந்த சிறு வயதிலும் அவர்களுக்கு அந்த போலிஸ்காரன் மீது வன்மம் அதிகமாயிருந்தது. அவன் வருகைக்காக சுவர் மறைவில் காத்திருந்து அவன் அருகில் வந்ததும் இருவரும் அந்த சிறு துப்பாக்கியால் சுட்டனர்.அவன் சுருண்டு விழுந்ததும் இருவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர்.

உள்ளிருந்து அவர்களின் தாயின் குரல் கேட்டது,”வீடியோ கேம் விளையாண்டது போதும். போய் படுங்கடா…”:

தமிழ் எழுத்தாளனின் மரணம்

அந்த தமிழ் எழுத்தாளன்
மாண்டுவிட்டான்
அழுவதற்கு யாருமில்லை

சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை
சில நூறுப் பேர்களுக்காக  மட்டும்
எழுதியவன் மாண்டுவிட்டான்

தமிழ்நாட்டில் தமிழில் எழுதும்
கீழ்த்தரமான செயலை இறுதிவரை
செய்தவன் மாண்டுவிட்டான்

நீசன் எனக்கூறி பலர்
அவனை
ஒதுக்கிவிட்டனர்

சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி
அறிவிலிகள் பலர்
ஒதுங்கிநின்றனர்

ஒதுக்கியவர்களாலோ
ஒதுங்கியவர்களாலோ
ஒடுக்கமுடியவில்லை அவனை

இறுதிவரை வளையா
முதுகெலும்புடன்
எழுதியவன் மாண்டுவிட்டான்

பக்கத்துக்கு பக்கம்
சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக
அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை

அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ
தெரியவில்லை அழுகிறார்கள்
வாயினை மூடிக் கொண்டு

உண்மையை
உண்மையாய் எழுதியதை
தலைக்கணமென் றனர்சிலர்

அஞ்சுகின்றனர் இன்னும் சிலர்
அவனை பிடிக்கும் என சொல்வதற்கே -ஏனெனில்
அவன் ஓர் உன்னத தமிழ் எழுத்தாளன்

அந்த தமிழ் எழுத்தாளன்
மாண்டுவிட்டான்
அழுவதற்கு யாருமில்லை

ஆனால் அவன் அறையில்
இன்றும் அழுகுரல்
ஓயாது ஒலிக்கிறது

அவனுக்காக
அழுகின்றன- அவன் இயற்றிய
கதாபாத்திரங்கள்…