ஒரு இலக்கிய விமர்சகர்

இன்று தமிழின் பிரபல இலக்கிய விமர்சகராக அறியப்படும் ரகு ஒருகாலத்தில் ரஹோத்தமன் என்ற பெயரில் புனைவுகள் எழுதினார் என்பது இன்றைய இணைய சமூகத்தில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் எழுதிய மூன்று புனைவுகளிலும் புனைவுத் தன்மை துளிக் கூட இல்லை என்று அப்போதைய பிரபல டெல்லி விமர்சகர் குற்றம் சாட்ட, “அது பின்நவீனத்துவ புனைவு உனக்கெல்லாம் புரியாது” என்று ரஹோத்தமன் மூன்று சந்தாதாரர்கள் கொண்ட இரும்பு யானை (தனி சுற்றிற்கு மட்டும்) இலக்கிய இதழில் காட்டமாக ஒரு எதிர்ப்பு கட்டுரை எழுதியும் டெல்லிக்காரர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

“பின்நவீனத்துவம் என்றாலே வெட்டி ஓட்டுவது போல் இருக்க வேண்டிய அவசியமில்லை ரஹோத்தமா” என்று டெல்லிக்காரர் பதிலுக்கு சொன்னது இன்றுவரை ரகுவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

Oru ilakiya vimarsagar.jpg

Pic courtesy: Anouar olh

புனைவு எழுதுவது தனக்கு வராது என்று புரிந்துகொண்ட ரஹோத்தமன், விமர்சனம் எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் தஸ்தாவ்ஸ்கி, பாப்லோ நெருதா, இத்தாலோ கால்வினோ, தரிசனம், நிகழ மறுத்த அற்புதம், மகா உன்னதம், அடுக்குகள், உள் மடிப்பு, ஆழ்ந்த ரசனை போன்ற டெம்ப்ளேட் வார்த்தைகளை போட்டு (கறார்) விமர்சனம் எழுதி விமர்சனத் துறையில் அவருக்கு முன்னரே சிலர் கோலோச்சி விட்டிருந்தபடியால் அதே பாணியில் ரஹோத்தமன் எழுதிய விமர்சனத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. வாழ்க்கை வெறுத்து, ஒரு பவுர்ணமி நாளில், மெரீனா கடலில் குதித்துவிடலாம் என்று அவர் போன போது தான் அந்த தடி புத்தகம் கரை ஒதுங்கியது.

STRAIGHT FROM THE HEART, SHORT STORIES BY COLONEL ABU

புத்தகத்தை எடுத்துப் புரட்டினார் ரஹோத்தமன். பல பக்கங்கள் நீரில் மூழ்கி நைந்து போயிருந்தது. தெளிவாக இருந்த சில பக்கங்களைப் படித்தார். புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ரஹோத்தமனுக்கு ஆங்கில அறிவு போதவில்லை என்று எண்ண வேண்டாம்.  அந்த புத்தகத்தை எழுதிய  அபுவிற்கு ஆங்கிலப் புரிதல் சரியாக இல்லாததால் புத்தகம் அப்படி சிக்கலான மொழியில் உருவாகி இருந்தது.

கொலம்பியன் எழுத்தாளரான அபு ஸ்பானிய மொழியில் ஏராளமான சிறுகதைகளை எழுதிக் குவித்திருந்தும் அந்த நாட்டு விமர்சகர்கள் அவரை தொடர்ந்து நிரகாரித்து வந்திருந்தனர். ஹருக்கி முரக்காமியின் மீதும் அகிரா குரோசாவா மீதும் வைக்கப் பட்ட அதே குற்றசாட்டு அபு மீதும் வைக்கப்பட்டது. அதாவது முரக்காமி, குரோசாவாவின் படைப்புகளை போல் அபுவினுடைய படைப்புகளும் மேலை நாட்டு மக்களை திருப்தி படுத்ததுவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றன, அவரது படைப்புகளில் பிராந்திய தன்மை (குறிப்பாக கரிசல் தன்மை) கொஞ்சம் கூட இல்லை என்று கூறி விமர்சகர்கள் ஒரு சேர கொடி பிடித்தனர். அப்போதுதான் அபுவிற்கு தன் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஐடியா பிறந்தது. எப்படியாவது இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்த அபு மொழிப்பெயர்ப்பாளர்களை தேடத் தொடங்கினார்.

இப்போது போலவே அப்போதும் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் கிடைப்பது குதிரைக் கொம்பாக தான் இருந்தது. இறுதியாக ரபாஸா என்ற அமெரிக்க பேராசிரியரை தொடர்பு கொண்டார் அபு. அது ஈமெயில் அறிமுகமாகி இருக்காத காலம் என்பதால் புத்தகத்தை தபாலில் தான் அனுப்ப வேண்டும் என்கிற சூழல்.

அவ்வளவு செலவு செய்ய வேண்டாம், நான் கொலம்பியா வரும் போது நேரிலேயே புத்தகத்தைப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் ரபாஸா. சில ஆண்டுகள் கழித்து, சாண்ட்டா மார்த்தா நகரத்திற்கு வந்திறங்கிய ரபாஸா புத்தகத்தோடு தன்னை சந்திக்க வரும்படி அபுவுக்கு கடிதம் எழுதினார். அபு வசித்த அரக்காடாக்கா கிராமத்திற்கும் சாண்ட்டா மார்த்தாவிற்கும் இடையே வெறும் என்பது கிலோமீட்டர் தூரம் தான். ஆனால் அபுவின் மனதிலிருந்த ஈகோ அவரை வெகு தூரம் தள்ளி வைத்திருந்தது. ஒரு எழுத்தாளன் எப்படி மொழிபெயர்ப்பாளனை போய் சந்திப்பது என்று கர்வம் கொண்டிருந்த அபு, ஒரு மாதக் காலம் ரபாஸாவை சந்திக்காமல் இழுத்தடித்தார்.   அப்படியாவது ரபாஸா தன்னை தேடி வருகிறாரா என்று பார்த்தார். ரபாஸா வரவில்லை. இறுதியாக, “காரியம் பெருசா வீரியம் பெருசானா காரியம் தான் பெருசு அபு” என்று அபுவின் மாமா செங்குண்டோ மரணப்படுக்கையில் சொல்லிவிட்டு சாக, அபு தன்னுடைய தொண்ணூற்றி ஆறு சிறுகதைகளையும் எடுத்துக் கொண்டு ரபாஸாவை சந்திக்கச் சென்றார்.

“மன்னிக்கவும் அபு, வேறொரு எழுத்தாளரும் என்னை அணுகினார். அவரின் நாவல் அருமையாக இருந்தது. நீங்கள் வரவில்லை என்பதால் நான் அவரின் நாவலை மொழிபெயர்ப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன்” என்றார் ரபாஸா

“யார் அவன்?” என்று கோபமாக கேட்டார் அபு.

“கேப்ரியல். உங்க ஊர்காரர்தான்”

“அந்தப் பத்திரிகைக்காரனா?

“ஆமா…”

“அவன் என்ன பெருசா எழுதிடுவான்! நேத்து வந்தவன்லாம் எனக்கு போட்டியா?” என்று அபு கோபமாக கத்த, ரபாஸா புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார்.

“அவன் எழுதுறதுலாம் வெறும் குப்பை. நான் வேறொரு நல்ல மொழிபெயர்ப்பாளர பார்த்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினார் அபு. ஆனால் அபுவிற்கு வேறு மொழிப்பெயர்ப்பாளர் கிடைக்கவே இல்லை. சில வருடங்களில், காப்ரியலின் நாவல் ரபாஸாவின் மொழிபெயர்ப்பில் ‘One hundred years of solitude’ என்ற தலைப்பில் வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

அபு சுவற்றில் முட்டிக் கொண்டார். அவருடைய ஆக்ரோசம் தணியவில்லை. நாளுக்கு நாள் அவருடைய வயதோடு சேர்ந்து, பொறாமையும் ஈகோவும் அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில், “நீங்கள் என்ன பெயர்ப்பது மொழி, நானே பெயர்கிறேன்டா மொழி” என்று கோபமாக தன் கதைகளை தானே மொழிபெயர்க்க முடிவு செய்தார்.

உடனே ஒரு ஆக்ஸ்போர்ட் அகராதியை வாங்கி இரவுப் பகலாக போராடி தன்னுடைய கதைகளை மொழிப் பெயர்த்து முடித்தார். ஆனால் அவருக்கு போதிய ஆங்கில அறிவு இல்லாததால், கதைகளில் ஏகப்பட்ட இலக்கணப் பிழை இருந்தது. வாக்கியங்கள் கோர்வையற்று காட்சி தந்தன. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், பிரிண்ட் ஆண் டிமாண்டில் அந்த புத்தகத்தை ஐம்பத்தி இரண்டு பிரதிகள் பிரசுரித்து ஐம்பத்தி இரண்டு நாடுகளுக்கு கப்பலில் அனுப்பி வைத்தார். இந்தியா வந்த கப்பல் நடுகடலில் கவிழ்ந்துவிட, அந்த புத்தகம் ஐநூற்றி சொச்சம் நாட்டிகல் மைலை சில ஆண்டுகளில் கடந்து ரஹோத்தமனின் கையில் கிடைத்த அந்த நன்னாளில்,

வானில்
மட்டும்
முழுநிலா
தோன்றி யிருக்கவில்லை,
ரஹோத் தமனின்
வாழ்விலும்
தான்…

அந்த புத்தகம் ரஹோத்தமனுக்கு நம்பிக்கையை தந்தது. அபுவின் எழுத்தில் இருக்கும் கோர்வையற்ற தன்மையே (Grammar Mistake) அபுவின் தனித்துவம் என்று மறு நாளே ஒரு பத்திரிகையில் எழுதினர் ரஹோத்தமன். ‘துரை யார்யாரையோ படிக்குது’ என்ற அளவில் அவருக்கு நிறைய வாசகர்கள் உருவானார்கள்.

ரஹோத்தமன் ரகுவானார். அபுவின் எழுத்துக்களோடு ஒப்பிட்டு அவர் எழுதும் விமர்சனத்தை ரசிக்கவே ஒரு பெரும் கூட்டம் உருவானது. ரகுவும் தனக்கென்று ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கிக் கொண்டார்.

எந்த விமர்சனமும் நாலு பக்கம் இருக்கும் படி பார்த்துக் கொள்வார். முதல் பக்கத்தில் தன்னைப் பற்றி தானே பெருமையாக எழுதுவார். இரண்டாவது பக்கத்தில் அபுவைப் பற்றி எழுதுவார். மூன்றாவது பக்கத்தில் அபுவின் கதைகளைப் பற்றி சிலாகிப்பார். நான்காவது பக்கத்தில் விமர்சனத்திற்காக எடுத்துக் கொண்ட கதையை அபுவின் கதையோடு ஒப்பிட்டு எழுதுவார்.

கதை பிடிக்காவிட்டால், “அபுவோட ஒப்பிடும் போது இந்த கதை குப்பை என்பேன்…” என்று எழுதுவார்.

பிடித்துவிட்டால், “தமிழுக்கு கிடைத்த அபு..” என்பார்.

வெறும் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே அவருக்காக பக்கங்கள் ஒதுக்கிய பத்திரிக்கைகள், தினமும் அவருக்காக பல பக்கங்களை ஒதுக்கத் தொடங்கின.

ரகு வளர்ந்தார். ஆர்குட்டில் வாசகர் வட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ரகு நினைத்தால் எதுவும் சாத்தியம் என்று நிலை வந்தது. பேஸ்புக்கும் வந்தது. அவர் வாசகர் வட்டத்திலிருந்து பிரிந்து வந்த பலரும் தன்னிச்சையாக விமர்சனம் எழுத ஆரம்பித்தனர். ஆனால் யாராலும் ரகுவை நெருங்க முடியவில்லை. எதிரிகள் அதிகமாக அதிகமாக ரகுவின் ஆளுமையும் வளர்ந்தது. அவர் நினைத்தால் கட்டுரைகளை கூட, சிறுகதைகள் என்று நம்ப வைப்பார். நல்ல சிறுகதைகளை உதவாத கதைகள் என்றும் நம்ப வைப்பார். ஐந்து சிறுகதைகளை சேர்த்து இது ஒரு நாவல் என்று நம்பவைப்பர். சுமாரான கதையை தமிழின் ஆகச் சிறந்த கதை என்று நம்ப வைப்பார்.

அவரின் கைகளில் கொட்டுவாங்கவே பல எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளோடு அவர் வீட்டு வாசலில் நிற்கத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் தமிழில் நவீன படைப்புகள் தீர்ந்துவிட, சங்க இலக்கியங்கள் பக்கம் தன் பார்வையை திருப்பினார் ரகு.

தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டு, “யாருடா அவன் தொல்காப்பியன், குப்பையா எழுதிருக்கான், எங்க அபு போல வருமா…” என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. புதுக்கவிஞர்கள் கம்மென்று இருக்க, மூன்று மரபுக் கவிஞர்கள் ரகுவை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். ரகு எதற்கும் அசரவில்லை.

“சும்மா போறீங்களா! இல்ல உங்க கவிதைகள விமர்சிச்சு புக்கு எழுதவா?” என்று கேட்க மிரண்டு போன மரபுக் கவிஞர்கள் பின்வாங்கினார்.

அதன்பின் விமர்சகர் ரகுவை விமர்சிக்க யாரும் பிறக்கவில்லை.

இன்று ரகு, தமிழின் ஆகச் சிறந்த இலக்கிய விமர்சகர். தவிர்க்க முடியாத ஆளுமை. அவரது விமர்சனங்கள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவுஸ்தெர்லியாவை சேர்ந்த முனைவர் தியான் க்ரே ஜாயரோடு இணைந்து ரகு எழுதிய ‘உலக இலக்கிய விமர்சன கோட்பாடு’ என்ற புத்தகம் இதுவரை பத்து மில்லியன் பிரதிகள் விற்று இருக்கின்றன.

ஏரளமான விருதுகள் அவரை தேடி வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் தங்கள் நாட்டில் நடக்கும் இலக்கிய விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அவரை அழைத்தது.  ஸ்பான்சர்ஷிப்பில் சென்று நாட்டை நன்றாக சுற்றிப் பார்த்தார்.

மாலையில் விடுதியில் ஒயின் அருந்திக் கொண்டிருந்த போது, தொண்ணூற்றி ஒன்பது வயதான கிழவர் ஒருவர் தன் கொள்ளுப் பேரன்களின் தோள் பற்றிக்கொண்டு தள்ளாடி தள்ளாடி ரகுவை நோக்கி நடந்துவந்தார்.

“வணக்கம் señor, நான், எழுத்தாளர் அவுரிலியானோ புந்தியா. உங்க விமர்சனம்லாம் படிச்சிருக்கேன். நான் உங்களுடைய பெரிய ரசிகன்” என்று கைக்கூப்பினார் கிழவர்.

அந்த நேரத்தில் அவரை அங்கே விரும்பாத ரகு, என்ன வேண்டும் என்பது போல் பார்த்தார்.

கிழவர் தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு சிறு புத்தகத்தை எடுத்து நீட்டினார்.

“Aureliano’s Memoirs” என்று அத்த புத்தகத்தில் கொட்டையாக எழுதியிருந்தது.

“இது என்னுடைய லேட்டஸ்ட் புக். அனேகமா இதுதான் என்னுடைய கடைசி புக்கா இருக்கும்.. சின்ன புக்குதான் நீங்க ஒரு நைட்ல படிச்சிடுவீங்க. நீங்க இதப் படிச்சிட்டு நாளைக்கு நடக்கப் போற இலக்கிய விழால நாலு வார்த்த பேசனும். போற உசுரு நிம்மதியா போகும்…”

அந்த புத்தகத்தை கையில் வாங்கிக் கொண்ட ரகு, “இந்த வயசுல உனக்கு என்ன கிழவா புக்கு…” என்று தோரணையில் கிழவரைப் பார்த்தார்.

“நாளைக்கு பாப்போம் señor” கிழவர் நகர்ந்தார்.

மறு நாள் ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோரும் ரகுவிற்காக காத்திருந்தனர். அவர் வரவில்லை. முந்தையநாள் இரவில் கே டிவியில் பாட்ஷா படத்தை பார்த்து விட்டு தாமதமாக தூங்கியதன் விளைவு. ஒருங்கிணைப்பாளர் ரகுவை அழைத்து வர இரண்டு பேரை அனுப்பினார்.

அவர் வரும் வரை மக்களை சமாளிப்பதற்காக, அவுரிலியானோ புந்தியாவை பேச வைக்கலாம் என்று முடிவு செய்தார்.

“தொண்ணூற்றி ஒன்பது வயதிலும் அயராது இலக்கியம் வளர்க்கும் எழுத்தாளர் அவுரிலியானோ புந்தியாவை பேச அழைக்கிறேன்…”

நிதானமாக மேடை ஏறினார் அவுரிலியானோ புந்தியா. இவர் என்ன பேசப் போகிறார் என்று எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர். ஓரிருவர் வேண்டா வெறுப்பாக கைத் தட்டினர்.

“Bonjour. நூறு வயசு ஆகப் போகுது. இப்ப திரும்பி பாத்தா நான் என் வாழ்க்கைய இன்னும் சிறப்பா வாழ்ந்திருக்கலாமோனு தோணுது.  எழுத்து எழுத்துன்னு ஓடினேன். நூறு பேரு என்ன வாசிச்ச போது ஆயிரம் பேர் படிக்கணும்னு பாராட்டணும்னு ஆசை. ஆயிரம் பேர் படிச்ச போது லட்சம் பேரு பாராட்டணும்னு ஆசை. ஒரு கட்டத்துல அந்த பாராட்டு தான் எனக்கு பெருசா தெரிஞ்சுச்சு. திமிரும் கர்வமும் ரொம்ப அதிகமாச்சு. பாராட்டுக்காக எழுதினேனே ஒழிய திருப்திக்காக எழுதலா. ரொம்ப லேட்டா தான் புரிஞ்சிச்சு. எழுத்தாளனும் சாதாரண மனுஷன் தான், இந்த புகழ் அங்கீகாரம் எல்லாம் வெறும் மாயைனு. எழுத்தாளர விடுங்க. மத்த மனிஷங்க எப்படி இருக்கீங்க! எப்ப பார்த்தாலும் எதை நோக்கியோ ஓடிகிட்டே இருக்கோம். அங்கீகாரம், பாராட்டு, புகழ், பணம் எதுவுமே பத்தல பத்தலனு நம்மள நாமே ஏமாத்திகிட்டு இருக்கோம்.

“நம்மளோட போலி முகத்த காமிச்சு காமிச்சு நம்ம நிஜ முகமே மறந்து போயிடுது. நான் அதிக நேரம் எடுத்துகுல. உங்க எல்லாருக்கும் ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

“வாழ்க்கைல பொறாமை வேணாம், கர்வம் வேணாம், அன்பா இருங்க. அன்பா இருக்க முடிலனாலும் யாரையும் வெறுக்காம அமைதியா இருங்க. யாரோடும் ஒப்பிட்டு மனச குழப்பிக்காதீங்க. உங்க வேலைய நீங்க செய்ங்க. உங்களுக்கு வர வேண்டிய அங்கீகாரம் தேடி வரும். வரலானும் பரவால. மன திருப்திக்கு இணையான அங்கீகாரம் எதுவுமே இல்ல.

ஆசைப்பட்டது நடந்தா சந்தோசப் படுங்க. நடக்கலானா நல்ல அனுபவம் கிடச்சிதுன்னு இன்னும் அதிகமா சந்தோசப் படுங்க. நம்ம சுற்றமும் நட்பும் நமக்கு எப்பவும் முக்கியம். அவங்களுக்காக விட்டுக் கொடுத்து வாழுங்க. அன்பு நேசத்த விட எதுவும் பெருசு இல்ல. அதை என்னைக்குமே உதாசீனப் படுத்தாதீங்க. Live and let live”

அவுரிலியானோ புந்தியா கையெடுத்து கும்பிட, அனைவரும் பலத்த கர ஒலி எழுப்பினர். அவர் அமைதியாக தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

தன்னை வரவேற்கத் தான் எல்லோரும் கைத்தட்டுகிறார்கள் என்ற பெருமிதத்தோடு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தார் ரகு.

“இப்போது The great critic ரகு அவுரிலியானோ புந்தியாவின் புத்தகம் பற்றி பேசுவார்”

“பீசு பீசா கிழிக்கும் போது இயேசு போல பொறுமை பாரு…”

பாட்ஷா படம் தான் அவர் மனதில் ஓடியது. புத்தகத்தை படிக்கவில்லை என்று சொல்ல முடியாது. திரும்பி போக ஸ்பான்சர் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டால் பிரச்சனை.

சரி சமாளிப்போம் என்று மேடை ஏறினார் ரகு.

தன்னுடைய வழக்கமான நான்கு பக்க டெம்ப்ளேட்டை கையில் எடுத்தார்.

முதலில் தன்னைப் பற்றி பேசினார். அரங்கம் முழுக்க அமைதியாக கேட்டது.

அடுத்து அபுவைப் பற்றி அபுவை சந்தித்ததைப் பற்றி அவரோடு சேர்ந்து உடும்பு கறி உண்டதைப் பற்றி சொன்னார். எல்லோரும் அமைதியாக கேட்டனர். அடுத்து அபுவின் சிறுகதை ஒன்றை ஆராய்ந்து பேசிவிட்டு, இறுதியாக அவுரிலியானோ புந்தியாவின் memoir ஏன் மிகச் சுமாரான புத்தகம் என்று அபுவின் எழுத்தோடு ஒப்பிட்டு பேசினார். கண்ணீல் நீர் வழிய அவுரிலியானோ புந்தியா கேட்டுக் கொண்டிருந்தார். அதை கவனித்த ரகு, அவுரிலியானோ புந்தியா தன்னை அங்கீகரிக்கிறார் என்று முடிவு செய்து தொடர்ந்து பேசினார்.

“அவுரிலியானோ புந்தியாவின் எழுத்தில் செழுமை இல்லை. அதுதான் மிகப் பெரிய சிக்கல். வெறும் செய்தியாக அவருடைய memoir நின்றுவிடுகிறதே ஒழிய உணர்வு ரீதியாக எந்த அதிர்வையும் அது ஏற்படுத்தவில்லை. அவர் இன்னும் நிறைய எழுதி பழக வேண்டும். குறிப்பாக அவர் கொலம்பிய எழுத்தாளர் அபுவை வாசிக்க வேண்டும்…”

அரங்கம் நிசப்தமானது. ஒவ்வொருவரும் அருகில் இருந்தவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர்.

அங்கே நிலவிய அமைதியை கலைக்கும் விதத்தில் ஒரு சிரிப்பு சப்தம் கேட்டது. அதிர்ந்து போய் பார்த்தார் ரகு. முன்வரிசையில் அமர்ந்திருந்த அவுரிலியானோ புந்தியா தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

ரகு  முறைத்தார்.  அபு சிரிப்பை நிறுத்துவதாக இல்லை.

“ஏன் சிரிக்குறீங்க…” ரகு கோபமாக கேட்டார்.

எழுந்து நின்ற அவுரிலியானோ புந்தியா, “உங்க பேர் என்ன?”

கிழவனுக்கு பைத்தியம் என்று எண்ணிய ரகு அமைதியாக இருந்தார்.

“சொல்லுங்க…”

“ரகு..”

“முழு பெயர்?”

“ரஹோத்தமன்…”

புன்னகை செய்த அவுரிலியானோ புந்தியா சொன்னார்,

“படிச்சசேன், விக்கி பீடியால படிச்சேன். ரகுவோட முழு பெயர் ரஹோத்தமன். அதே மாதிரி தான் உங்களுக்கு புடிச்ச அபுவோட முழு பெயர் அவுரிலியானோ புந்தியா”

மீண்டும் வெடித்து சிரித்தார் அபு (எ) அவுரிலியானோ புந்தியா. மொத்த அரங்கமும் கைகொட்டி சிரித்தது. சிலர் எழுந்து நின்று விழுந்து புரண்டு சிரித்தனர்.

அவமானம் தாங்காமல் அங்கிருந்து கிளம்பினார் ரகு. சென்னை வந்ததுமே அவர் தன் தளத்தில் எழுதினர்,

“பிரெஞ்சு அரங்கில், அறிஞர்கள் என் பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டினர்”

ஒரு ஆங்கில நாளிதழ், “Standing Ovation for Indian Literary Critic” என்று ரகுவின் படம் போட்டு கட்டுரை வெளியிட்டது.

***

ரகு போலி தான். அவரைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள  தேவையில்லை. உண்மையில் வாழ்க்கையில் நாம் நிறைய போலிகளை கடந்து வருகிறோம். அவர்கள் யாரைப் பற்றியும் நாம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. அபு அரங்கில் பேசியதை மட்டும் கருத்தில் கொள்வோம். அது தான் நமக்கான புத்தாண்டு செய்தியும் கூட.

“வாழ்க்கைல பொறாமை வேணாம், கர்வம் வேணாம், அன்பா இருங்க. அன்பா இருக்க முடிலனாலும் யாரையும் வெறுக்காம அமைதியா இருங்க. யாரோடும் ஒப்பிட்டு மனச குழப்பிக்காதீங்க. உங்க வேலைய நீங்க செய்ங்க. உங்களுக்கு வர வேண்டிய அங்கீகாரம் தேடி வரும். வரலானும் பரவால. மன திருப்திக்கு இணையான அங்கீகாரம் எதுவுமே இல்ல. ஆசைப்பட்டது நடந்தா சந்தோசப் படுங்க. நடக்கலானா நல்ல அனுபவம் கிடச்சிதுன்னு இன்னும் அதிகமா சந்தோசப் படுங்க. நம்ம சுற்றமும் நட்பும் நமக்கு எப்பவும் முக்கியம். அவங்களுக்காக விட்டுக் கொடுத்து வாழுங்க. அன்பு நேசத்த விட எதுவும் பெருசு இல்ல. அதை என்னைக்குமே உதாசீனப் படுத்தாதீங்க. Live and let live”

Happy New Year Folks.

With love

Aravindh Sachidanandam

ஸ்கூல் சீசன்- சிறுகதை

எனக்கு முடியை வித்தியாசமாக, ஸ்டைலாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் ஆசை இல்லை. ஆனால்  இந்த முறை எப்பவும் போல், பள்ளி பிள்ளைப்போல் முடிவெட்டிக்கொள்ளக் கூடாது என்று அக்கா சொன்னாள்.

“எலி கரண்டுன மாதிரி கரண்டிட்டு வந்தா வீட்டுக்குள்ள விடமாட்டேன்” வாசலைவிட்டு  இறங்கும்போது அக்கா மீண்டும் சொன்னாள்.

சிறுவயதில் அம்மா வேறுமாதிரி சொல்வாள், “முன்னாடி முடியவிட்டுட்டு வராத. ஒட்ட வெட்டிட்டு வா”

நானும் தோரயமாக அம்மாவிற்குப் பிடித்த மாதிரியும், எனக்குப் பிடித்த மாதிரியும் வெட்டிக் கொண்டு வந்து நிற்பேன். கொல்லைப்பக்கம் வா என்பாள். பின் என் அருகில் வந்து முன் முடியை பிடித்து பார்த்துவிட்டு, “முன்னாடி முடி அப்படியே இருக்கு”  என்று கடிந்துகொண்டு, என்னை மீண்டும் கடைக்கு அழைத்துச் செல்வாள். கடைக்காரன் நான் திரும்பி வருவேன் என்பதை முன்கூட்டியே அறிந்தவனைப் போல் என்னைப் பார்த்து ஏளனமாக சிரிப்பான்.

மறுநாள் பள்ளியில் எல்லோரும், “என்னடா எலி கரண்டிருச்சா?” என்று கேலி செய்வார்கள். பதினோராம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை கடைக்காரனே கேட்டான். “தம்பி நீ எத்தனாவது படிக்குற? பொம்பளை புள்ளைங்கலாம் கேலி பண்ணாத இப்டி வெட்டுனா?”

வளர வளர அம்மா மீது கோபமெல்லாம் குறைந்து விட்டது. கல்லூரி சேர்ந்த பின் அம்மா எப்படி முடிவெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் சொன்னதில்லை. ஆனாலும் எனக்கு ஸ்டைலாக வெட்டிக்கொள்வதில் ஆர்வம் வரவில்லை.

கடைக்குள் சென்று அமர்ந்ததுமே, கடைக்காரர் கேட்பார். “ஷார்ட்டா?” நான் தலை அசைப்பேன். அவ்வளவுதான். சில நேரங்களில் மெசினைப் போட்டு ஆர்மிகாரன் தலை போல் ஆக்கிவிடுவார். வேலைக்கு சேர்ந்த பின்பும் அப்படி வெட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.

“ஏண்டா ஸ்கூல் புள்ள மாதிரி வெட்டிருக்க?”

அக்காதான் மெனக்கெட்டு கோபித்து கொள்வாள். இப்பொது அக்காதான் அம்மாவாக இருக்கிறாள். அக்கா ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராக இருக்கிறாள்.

“என் ஆபிஸ்ல உன் வயசு பசங்கலாம் எப்டி ஸ்டைலா வராங்க தெரியுமா? அதுவும் இப்ப புதுசா சேர்ற பசங்கலாம் சோ கான்சியஸ் அபௌட் தேர் அப்பியரன்ஸ். நீ ஏன்டா இப்டி இருக்க?” என்பாள். நான் சிரித்துவிட்டு அமைதியாக நகர்ந்துவிடுவேன். மாமாவும் அக்காவைப் போல் அதே துறையில் இருந்தார்.

“ஏண்டா உன் ஆபிஸ்ல யாரும் கலாய்க்க மாட்டங்களா?” மாமா கூட ஒரு முறைக் கேட்டுவிட்டார். நான் மந்தைவெளியில் ஒரு வங்கியில் வேலை செய்தேன். என்னுடன் வேலை செய்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ‘எக்ஸ்பைரி’ தேதியை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ள போவதில்லை. கண்டுகொண்டாலும் எனக்கு இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ள தோணுவதில்லை.

நான் குஜராத்தில் வசித்த போது ஒரு பஞ்சாபி பெண்ணை ஒரு தலையாக காதலித்தேன். நான் வெகுதூரம் அவளை விட்டு கடந்து வந்த பின்தான் தெரிந்தது அவளும் என்னை ஒருதலையாக காதலித்திருக்கிறாள் என்று. இரண்டு, ஒரு தலை காதலர்கள்.  மீண்டும் குஜாராத் செல்லலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால் அதற்குள் அவளும் வெகு தொலைவு சென்றுவிட்டிருந்தாள். வாழ்க்கையிலும் தூரத்திலும். இப்போது காஷ்மீரில் இருக்கிறாளாம். ஒரே பிரசவத்தில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டிருந்தது. பேஸ்புக் சொன்னது. அந்த குழந்தைகளின் போட்டோவிற்கு ஏராளமான லைக் வந்திருந்தது. நானும் ஒரு லைக் போட்டேன். மறுநாள் என்னை ப்ளாக் செய்திருந்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு யார் மீதும் பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது. இப்படியே வாழ்க்கையை ஓட்டிவிடுவது உத்தமம் என்றே தோன்றுகிறது. ஆனாலும் அக்கா விட்டபாடில்லை.

“பொண்ணு பெங்கலூர்லயே வளர்ந்தவ. என் கொலீக்கோட ரிலேட்டிவ். நல்ல பாமிலி. எனக்கு ஓகே. நீ அவள எதாவது ரெஸ்டாரன்ட், காபி ஷாப்ல மீட் பண்ணி பேசு…

“நல்ல வரன். present yourself good!…”

அக்கா ஒரு பெரிய லெக்ட்சர் கொடுத்தாள். க்ரைஸ்ட் கிங் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த அக்கா இவ்வளவு நவநாகரிகமாக மாறிவிட்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இதைப்பற்றி அக்காவிடம் கேட்கத் தோன்றும். ஆனாலும் அவள் மனம் வருந்தக் கூடும் என்பதால் அமைதியாக இருந்துவிடுவேன். வாழ்க்கை மாறும்போது நாமும் மாறிக் கொள்ள வேண்டும் போல! எனக்குதான் இதெல்லாம் பிடிப்பட மறுக்கிறது.

“நல்லா முடி வெட்டிக்கோ. fruit facial பண்ணிக்கோ. அவர கூட்டிட்டு  போ சொல்றேன்”

அக்கா ஏதோ பெரிய கடைப் பெயரை சொல்லி போகச் சொன்னாள். மாமா எப்போதும் அங்கு தான் முடி வெட்டிக் கொள்வார். முடிவெட்டிக் கொள்ள முன்னூறு ரூபாய் என்றார்கள்.

நான் அந்த காசில் முடிவெட்டி, சவரம் செய்து கொண்டு, வரதராஜா திரையரங்கில் ஒரு படம் பார்த்துவிடுவேன். இப்போது சினிமாக்காரர்கள் ஸ்ட்ரைக் செய்கிறார்கள். ஒரு படமும் ஓடவில்லை. அதனால் நான் நூற்றி இருபது ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு, வழக்கமாக செல்லும் கடைக்கே செல்வதாக அக்காவிடம் சொன்னேன்.

“நல்லா ஸ்டைலா வெட்டச் சொல்லு. பின்னாடி கத்தி போட வேணாம்னு சொல்லு. அப்பத்தான் லுக்கா இருக்கும்” அக்கா சொன்னாள்.  அக்காவிற்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது என்று புரியவில்லை.  நான் தலை ஆட்டிவிட்டு கடை நோக்கி சைக்கிளை மிதித்தேன். முடி வெட்டிக்கொண்டு படம் பார்க்கும் திட்டமிருந்தால் நடந்து தான் போவேன். இல்லையேல் சைக்கில் நிறுத்த திரையரங்குகாரனுக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த காசில் ஒரு மசாலா பால் குடிக்கலாம்.

வழி எங்கிலும் முந்நூறு ருபாய் சிந்தனைதான். இருந்தாலும், முடிவெட்டிக் கொள்ள முன்னூறு ருபாய் அதிகம் தான். குஜராத்தில் பதினைத்து ரூபாய் இருந்தால் போதும். முடிவெட்டி தலைக்கு மசாஜ் செய்து விட்டு அனுப்பிவிடுவான் அந்த கடைக்காரன். அந்த கடை ஒரு மரத்தடியில் அமைத்திருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம் மற்றபடி அதே ப்ளேட் தான். அதே கண்ணடித்தான். ஆனால் ஏசிக் கடையில் விலை அதிகமாம். முடி வெட்டிக் கொள்வதற்கு எதற்கு ஏசி?  இங்கே எல்லாவற்றிலும் ஏசியை பொருத்தி விடுகிறார்கள். ஏசி சவப்பெட்டி வந்தால் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை. ஏதேதோ தேவையில்லாத ஆடம்பரங்களை பழக்கி கொண்டு, அவற்றை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டத்தில் மன அமைதியை கெடுத்துக் கொள்கிறோம்.

நான் கடைக்குள் நுழைந்த போது, கடைக்காரனும் ஒரு வாலிபனும் தீவிரமாக அந்த வாலிபனின் கையிலிருந்த போனை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கடைக்காரனுக்கும் என் வயசு தான் இருக்கும்.

அமர்ந்ததுமே கேட்டான்.

“ஷார்ட்டா வெட்டிடலாமா ஜி?”

“மீடியமா” என்றேன். அவன் ஆச்சர்யமாக பார்த்தான். எப்போதும் மெசின் கட் என்று சொல்லும் ஆள் நான்.

அவனிடம் உண்மையை சொல்லலாமா என்று பார்த்தேன். ஏனெனில் என் பின்மண்டையில் விழத் தொடங்கிய வழுக்கையை பார்த்து அவன்தான் பெரிதும் வருத்தப் பட்டான்.

“ஜி சீக்கிரம் கல்யாணம் பண்ணிகோங்க ஜி” என்பான்.

“வீட்ல பங்க்ஷன். மீடியமா வெட்டுங்க” என்றேன். நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வாலிபனையே பார்த்தான். வாலிபன் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வாலிபன் நிமிர்ந்து, “ஜி. நீங்க இந்த ஏரியா தானே?” என்றான். நான் ஆம் என்று தலையசைத்தேன்.

“A R N ஸ்கூல் CBSE -யா மெட்ரிக்கா?” அந்த வாலிபன் என்னிடம் வினவினான்.

நான் மெட்ரிக் என்றேன்.

“சொன்னேன்ல” என்று கடைகாரானைப் பார்த்தான்

“இல்ல ஜி. இப்ப CBSE-யும் ஆரமிச்சிட்டாங்க. போன் பண்ணி விசாரிச்சுட்டேன்” என்றான் இவன்.

“ஒ! எனக்கு தெரியாது” என்றேன்

“அப்பா பீஸ் நிறைய இருக்கும்” அந்த வாலிபன் சொன்னான்.

“பரவால. நீ பாரு” என்றவாறே என் தலையில் தண்ணீரை அடித்தான். மெசினை எடுக்கப் போனவன், ஒரு கணம் சுதாரித்துவிட்டு  கத்திரிக்கோலையும் சீப்பையும் எடுத்தான்.

“அண்ணே லோட் ஆகிடுச்சு” அந்த வாலிபன் கத்தினான். இவன் வேகமாக அவனை நோக்கி ஓடினான்.

“சீக்கிரம் குட்டி. போய்ட போது” இவன் பதறினான்.

“பாப்பா பேரு சொல்லுனே”

“மோனிஷ்கா” என்றவாறே என் தலையை படிய வாரினான்.

பின் என்னிடம் , “பாப்பாவுக்கு ஸ்கூல் அட்மிஸன்ஜி, இப்ப எல்லாம் நெட் ஆக்கிடாங்க ஜி. ஸ்கூல்ல லைன்ல நிக்க சொல்லிருந்தா இந்நேரம் என் வைப்ப நிக்க சொல்லிருப்பேன்”

நான் புன்னகை செய்தேன்.

“வயசுனே?” அவன் ஒவ்வொரு விவரமாக கேட்டான். இவன் சொல்லிக்கொண்டே முடியை வெட்டத் தொடங்கினான்.

“உன் மாச வருமானம்”

இவன் யோசித்தான். “நாப்பதாயிரம் போட்டுக்குறேன்”

“டேய் அவ்ளோலாம் இல்ல”

“அண்ணே கம்மியா போட்டா சீட் தரமாட்டாங்க. அவ்ளோ பீஸ் நீ கட்டுவியான்னு யோசிப்பாங்க”

இவன் தலையசைத்தான்.

“என்ன படிச்சிருக்க…”

“SSLC” என்றவாறே என் முன் முடியை சீப்பால் வாரிப் பிடித்து வெட்டினான்.

“B.A- னு போடறேன் “

“டேய் வேணாம்டா. பர்ஸ்ட் டைம் ஸ்கூல் சேக்குறேன். பொய் சொல்ல வேணாம்”

“உண்மைய சொன்னாலாம் வேலைக்காகது. நீ என்ன டாக்டர்னா சொல்லப்போற?  ஏதோ டிகிரி தான!”

“கண்டுபுடிச்சா பிரச்சனை ஆகிடும் குட்டி. “

“அதெல்லாம் கண்டுபுடிக்க முடியாது. செர்டிபிகேட் ரெடி பண்ணிடலாம்”

“அதுக்கு வேற செலவு பண்ணனுமா” இவன் அலுத்துக் கொண்டான். நான் அவர்கள் பேசுவதையே ஆர்வமாக பார்த்தேன்.  அவன் இப்போது பின் முடியை வெட்டி விட்டு, கையில் கத்தியை எடுத்தான்.

“ஜி பின்னாடி கத்தி போட வேணாம்” என்றேன். அவனுடைய கவனம் மொபைலின் மீது இருந்தது. கிருதாவை மட்டும் சரிசெய்துவிட்டு மீண்டும் கத்திரிகோலை எடுத்து,

“ஜி இந்த சைட் சரியா வெட்ல” என்று இடது புறம் முடியை சரி செய்தான்.

அதற்குள் அந்த வாலிபன் இவனைப் பார்த்து, “கம்… ஹ்ம். கம்யுனிட்டி” என்றான்

இவன் என்னைப் பார்த்தான்

“BC, OBC, அந்த மாதிரி”

பின் அவன் ஜாதியைக் கேட்டான். இவன் சொல்ல, அவன் ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் கேட்டான். இவன் மீண்டும் என்னைப் பார்த்தான். மாறிமாறி கேள்விகள். பதில்கள். மீண்டும் வலது புறம் முடியை கத்தரித்தான்.

அந்த வாலிபன், “ஒரு நிமிஷம் இரு வரேன்” என்று வெளியே நகர எத்தனித்தான்.

“பாதியில விட்டு எங்கடா போற ?”

அவன் சுண்டு விரலை உயர்த்திக் காண்பித்தான்.

“டேய் முடிச்சு குடுத்துர்றா?”

“வந்துட்டேனே” அவன் கிளம்பினான்.

நான் மொபைலை வாங்கினேன். இன்னும் இரண்டு பக்கங்கள் கேள்விகள் மிச்சமிருந்தன. வேலைக்கான விண்ணப்ப படிவத்தில் கூட இவ்வளவு கேள்விகள் இருந்ததில்லை. நான் நான்கு கேள்விகள் பூர்த்தி செய்திருப்பேன். திரும்பி வந்த அந்த வாலிபன் மொபைலை வாங்கிக்கொண்டான்.

“உங்களுக்கு லேட் ஆகப் போது ஜி, அவன் பில் பண்ணுவான்” கடைக்காரன் சொன்னான். அந்த வாலிபன் தன் வேலையைத் தொடர்ந்தான். இவன் என் தலையில் கை வைத்தான்.

“Application submitted successfully.  your reference no is…” அந்த பையன் படித்தான்.

நான் கண்ணாடியில் தலையை பார்த்தேன். ஒரு பக்கம் மட்டும் முடி நிறைய வெட்டப்பட்டிருந்தது. தலை முக்கோண வடிவில் தெரிந்தது. நான் கடைக்காரனைப் பார்த்தேன். மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் முகத்தில் எதையோ சாதித்த பரவசம் வெளிப்பட்டது. பின் அவன் என்னை பார்க்க, நான் என் தலையை சுட்டிக் காண்பித்தேன்.  அந்த பரவசம் மறைந்தது.

“ஜி சாரி ஜி. இந்த டென்ஷன்ல இருந்துட்டேன்…”

“பரவால, என்ன பண்றது”

“மறுபடி கத்திரி போட்டா திட்டுத்திட்டா தெரியும். மெசின் போட்டாதான் ஈவன் ஆகும் ஜி” அவன் தயங்கி தயங்கி சொன்னான்.

நான் தலை அசைத்தேன். இரண்டு நிமிடத்தில் என் தலை ஆர்மிக்காரன் தலை ஆனது. அக்கா பாஷையில் சொன்னால், ஸ்கூல் பையன் கட்டிங். நான் மீண்டும் கண்ணாடியை பார்த்த போது, கண்ணாடியினுள் அக்கா நின்றுகொண்டு தலையில் அடித்துக் கொள்வது போல் இருந்தது. வீட்டுக்கு போனால் அக்கா சாமியாடக் கூடும். பரவாயில்லை, ஒரு பிள்ளையின் படிப்பை விட, பெண் பார்க்கும் படலம் அவ்வளவு முக்கியமில்லை.

லேடி போலீஸ்- நகைச்சுவைக் கதை

அந்த புத்தகத்தை  வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத அந்த புத்தகம் கண்ணிமேரா நூலகத்தில கிடைக்கும் என்கிற நம்பிக்கையில டிரைன் ஏறினேன். நானும் இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். பம்பாய் ரயிலில் எல்லாம் முட்டி மோதி ஏறியிருக்கேன். ஆனால் அங்கெல்லாம் டிரைன் கூட்டமா இருந்தாதான் தொங்கிக்கிட்டு போவாங்க. சென்னையில மட்டும்தான், எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாக்குறேன், ஒரு நாலு பேரு தொங்கிக்கிட்டே பயணம் செய்வானுங்க. உள்ள எவ்வளவு இடம் இருந்தாலும் ஏறமாட்டனுங்க…

இவனுங்கெல்லாம் சமுதாயத்திற்கு ஏதோ சொல்ல வராணுங்க. ஆனால் என்ன சொல்லவராங்க என்பதுதான் என் குறுகிய அறிவுக்கு எட்டமாட்டேங்கிது..

சென்னையில எந்த மேஜர் ஸ்டேஷன்ல எறங்குனாலும், ஆட்டோ டிரைவர்ஸ் சூழ்ந்துபாங்க.

‘அண்ணே ஆட்டோ, சார் ஆட்டோ..’

இந்தியாவிலேயே சவாரி தலையில் மிளகாய் அரைக்கிற ஆட்டோ டிரைவர்ஸ் சென்னையிலதான் இருக்காங்க. அவங்க சவாரி புடிக்க சில ‘psycological methods’ வச்சிருக்காங்க. ஆட்டோ வேணாம்னு சொன்னா,  ‘எனக்கு தெரியும். நீங்கலாம் ஆட்டோல போமாட்டீங்க’னு சொல்லி நக்கலா சிரிப்பாங்க. அப்படியாவது ரோஷம் வந்து ஆட்டோவுல ஏறுறாங்களானு பாப்பாங்க. ஆனா நான் அதுக்கெல்லாம் அலட்டிக் கொல்(ள்)வதில்லை. அதுவும் ஹிந்தியில ‘ஆட்டோ வேணாம்’னு சொன்னீங்கனா ஹிந்திக்காரன்னு நினைச்சிக்கிட்டு மரியாதையா ஒதுங்கிருவாங்க. மீசை தாடியெல்லாம் ஷேவ்பண்ணிட்டு அடிக்கிற கலர்ல டைட்டா டிரஸ் போட்டா இவங்களே இந்திக்காரன்னு முடிவு செஞ்சுபாங்க. மரியாதையும் தர ஆரமிச்சிடுவாங்க.

தமிழ்நாட்டுக்கு வெளிய தமிழனுக்கு மரியாதை தர மாட்டாங்க. ‘மதராசி’னு ஓட்டுவாங்க. குஜராத்ல ஒருத்தன் கிட்ட சும்மா சொன்னேன் ‘நான் மதராசி இல்ல. சௌத் ஆப்ரிக்கன்’ உடனே அவன் மன்னிப்பு கேட்டான். இந்தியாவில அப்படிதான். இந்தியர்கள discriminate பண்ணுவாங்க. ஆனா வெளி நாட்டுக்காரனுங்கள மதிப்பாங்க. அதே மாதிரிதான் தமிழ்நாட்டுலயும். தமிழன மதிக்க மாட்டாங்க. மத்த ஊர் ஆளா இருந்தா ராஜா மரியாதை…

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’

‘Destination’ இல்லாம சுத்துறது எனக்கு ரொம்ப புடிக்கும். நான் ஒரு ‘Bohemian’. ஆனா எங்காவது ஒரு இடத்துக்கு போகணும்னா செம கடுப்பு. அதுவும் எப்படி  போகணும்னு தெரியாம, போய் ஆகவேண்டும் என்கிற கட்டாயதுல போறது பெரிய கடுப்பு.

பீக் ஹவர்ல அட்ரஸ் கேட்டா யாரும் சொல்லமாட்டாங்க. ஒரு டீ கடையில போய் டீ குடிக்கிற சாக்குல அட்ரஸ் கேட்டேன். அவரும் கஷ்டமராச்சேனு, ‘அந்த சிக்னல்ல போய் கேளுங்க’ என்றார்.

நானும் அந்த சிக்னல் வரைக்கும் போனேன். லெப்ட்ல திரும்புறதா ரைட்ல திரும்புறதானு சந்தேகம். சிக்னல்ல ஒரு லேடி போலீஸ் நின்னுக்கிட்டு இருந்தாங்க…

பொதுவா நான்தான் பொண்ணுங்களா உத்து உத்து பார்ப்பேன், பெமினிச ஆராய்ச்சி. ஆனா அந்த லேடி கான்ஸ்டபிள் என்ன உத்து உத்து பார்க்கும் போதே நான் உஷார் ஆயிருக்கணும். அதையும் மீறி நான் அவங்ககிட்ட போய் கேட்டேன், “ம்யூசியம் எப்படி போறது?” (ம்யூசியமும், நூலகமும் ஒரே  இடத்துலதான் இருக்கு. நூலகம்னு கேட்டா பாதி பேரு தெறித்து ஓடுறாங்க)

அவங்க என்னை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னாங்க, ‘இப்டியே நேரா போங்க’

நானும் அந்த பெண்மணி பொய் சொல்லியிருக்க மாட்டாங்க என்கிற நம்பிக்கையில அவங்க சொன்ன வலது புறம் போனேன். அங்க வெறும் மேம்பாலம்தான் இருந்துச்சு. தப்பான வழியோ என்று எனக்கும் ஒரு உள்ளுணர்வு. ‘Raghavan instinct’ மாதிரி.

ரோட்ல போய்ட்டிருந்த ஒரு அண்ணங்கிட்ட வழி கேட்டேன். சென்னையில எல்லாம் அண்ணனுங்கதான். சென்னைக்குனு ஒரு ‘slang’ உண்டு. சின்ன வயசுல பொட்டிக்கடையில போய் ‘டூ ருபீஸ் சேஞ்ச் இருக்கானு’ கேட்டு நான் பல்பு வாங்கியிருக்கேன். அப்பறம் தான் தெரிஞ்சுது, அவங்க கிட்ட லோக்கலா பேசணும்னு..

லோக்கலா கேட்டேன், ‘அண்ணே ம்யூசியம் எங்கிட்டு போறது’

‘என்னப்பா… இங்க வந்துட்ட… அப்டியே சிக்னல்ல இருந்து லெப்ட்ல போயிருக்கலாம்ல…  வந்த வழியே போ’

அப்பதான் புரிஞ்சிது. சாச்சுபுட்டா  பொம்பள போலீஸ். எனக்கு புரியல. அவங்க ஏன் தப்பா வழி சொன்னாங்கனு. ஒரு வேலை நான் அவங்களை கேலி பண்றதா அவங்க நினைச்சிருக்கலாம்… (இல்ல அவங்க வலதுசாரியோ என்னமோ!)

அப்படியே வந்த வழியே போனேன். அங்க ஒரு பிச்சைக்காரர் போயிட்டு இருந்தார். அவர் தாடி, அலங்கோலமான ஆடை செய்கையெல்லாம் பார்த்தா மன நிலை பாதிக்கப் பட்டவர் மாதிரி இருந்தார். காசியா இருந்தா அகோரினு சொல்லலாம். இங்க பைத்தியக்காரர்னுதான் சொல்லணும். அவர் பின்னாடி நான் போகலா. ஆனா என் முன்னாடி அவர் போய்ட்டிருந்தார். அப்டியே அவர தாண்டி போனேன்.

பெமினிஸ்ட்டா இருக்குறதுல ஒரு பிரச்சனை. ஒரு பொண்ணு பொய் சொல்லிருப்பா, தப்பு பண்ணியிருப்பானு மனசு உடனே ஏத்துக்காது. அதனால தான் அந்த லேடி போலீஸ் பொய் சொல்லியிருப்பாங்கணு நம்ப முடியல. அப்படியே திரும்பி இன்னொரு கடையில போய் விசாரிச்சேன், “பெரியவரே.. இந்த ம்யூசியம்…”

இப்ப முடிவாயிடுச்சு. லேடி போலீஸ் பிளான் பண்ணி சாச்சிருக்கா. அதுல என்ன அவங்களுக்கு ஒரு சந்தோசம்னு தெரியல. ‘சாடிஸ்ட்…

அங்க இருந்து நகரும் போது தான் பார்த்தேன். அந்த பிச்சக்காரரும் என் அருகில் நின்றுக் கொண்டிருந்தார். என்ன பார்த்ததும் ரொம்ப கோபமா கத்துனார், “போடா… என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டே வர !”

என்னால சிரிப்ப அடக்க முடியல. உள்ளுக்ககுள்ளேயே  சிரிச்சிக்கிட்டு வேகமா ரோட் க்ராஸ் பண்ணினேன். அந்த பிச்சக்காரர சுத்தி ஒரு கூட்டம் கூடிடுச்சு. அவரோட குரல் சத்தமா என் காதுல விழுந்தது. “அந்த சிவப்பு T-Shirt என்ன ரொம்ப நேரமா ஃபாலோ பண்றான் சார்,” அவர் எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

அதை கேட்டு சிரிச்சிக்கிட்டே நான் சிக்னல கடந்தேன். சிக்னல்ல நின்றுகொண்டிருந்த அந்த லேடி போலீஸ் என்ன பார்த்து சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க….

ஓடிப்போனக் கடவுள்

நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை.இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம் ஏதோ ஒரு மிகப்பெரிய அரசனால் கட்டப்பட்ட கோவிலென்பது திண்ணம். சிற்றரசர்கள் பெரியக் கோவில்களை உருவாக்கியதில்லை.பிரகாரம் முழுக்க ஏதேதோ குட்டிக் கடவுள்களின் சிதிலமடைந்த சிலைகள். அனைத்தையும் கடந்து நான் மூல ஸ்தானத்தை நோக்கி சென்றேன்.

மூலமே என் நோக்கு
வெருச்சோடிக் கிடந்த கோவில்
காணவில்லை கடவுள்;

இது என்ன கோவில் என்பது விளங்கவில்லை. கற்பக்ரஹத்தில் மூலவர் சிலையை காணவில்லை. நிலையில் கடவுளின் பெயர் எழுதி இருக்கிறதா என்பதை உற்று நோக்கினேன். கும் இருட்டு. சட்டைப் பையில் இருந்த லைட்டரை எடுத்து பற்ற வைத்தேன். உள்ளே கடவுள் இல்லை என்பது உறுதியானதும் அப்படியே சிகரட்டையும் பற்ற வைத்தேன்.

சுருள் சுருளாய்
பறந்தன
புகைகள்.

 நிலை வாசற்ப்படியில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது

“பன்னாரி அம்மன் துணை “

ஏதோ சிந்தனையோடு திரும்பினேன். சிகரெட் வெளிச்சத்தில் தெரிந்தார் நந்தி பகவான்.

‘நிச்சயம் இது அம்மன் கோவிலன்று. அம்மன் கோவிலில் எப்படி வரும் நந்தி’ மீண்டும் நிலைக் கதவை நோக்கினேன்.

“பன்னாரி அம்மன் துணை
சென்னை “

 இது நிச்சயம் சென்னை இல்லை. நேற்று இரவு நான் திருச்சியில் உறங்கியது வரை ஞாபகம் இருக்கிறது. விழித்துப் பார்த்தல் இங்கு நின்றுக் கொண்டிருக்கிறேன். குழப்பத்துடன் அரை நொடி மீண்டும் அந்த நிலையை நோக்க, விளங்கியது அனைத்தும் தெளிவாக.

 “பன்னாரி அம்மன் துணை
உபயம்:
சாந்தா பச்கியசாமி- சென்னை “

 வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள இயலவில்லை. அடக்கவும் நான் முயற்சிக்கவில்லை. இவ்வளவு பெரிய கோவிலை கட்டிய மன்னனே ஒரு சிறு கல்வெட்டில்தான் தன் பெயரை செதுக்கிக் கொள்கிறான். ஆனால்  ஒரு சிறு நிலைக் கதவைக் செய்துக் கொடுத்துவிட்டு தன் பெயர், தான் வணங்கும் கடவுளின் பெயர், தன் ஊரின் பெயர் என செதுக்கிக் கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 இதை பார்க்க மனம் தாளாமல்தான் கடவுள் மறைந்துவிட்டரோ என்றென்னும்போது வந்து சேர்ந்தார் கோவிலின் குருக்கள். அவர் முகத்தில் நிலவிய தேஜஸ் என்னை அறியாமலேயே என் சிகரட்டை தரையில் போட்டு மிதிக்க வைத்தது.

 குருக்கள், “வாடா அம்பி. உனக்காகத்தான் காத்திண்டிருந்தேன் ” என்னை நன்கறிந்தவர் போல் அவர் பேசத் தொடங்கினார்.

 “நீ வருவ, இந்த கோவிலை உன் பொறுப்பில் விட்டுட்டு போய்விடலாமென்றுதான் இத்தனைநாள் காத்திண்டிருந்தேன்” எனக்கு ஒன்னும் விளங்கவில்லையெனினும் அவரை மறுத்துப் பேச நா எழவில்லை.

 “சாமி…மூலவர் எங்க !” பதற்றத்தோடு வினவினேன் நான்.

“நோக்கு தெரியாதா…! தமிழ்ல மந்திரம் ஓதுரேனு நாலு சிவனடியார்கள் வந்தா…சுவாமி ஓஓஓஓஓடிட்டார் !” என்றார் ஒரு நமட்டு சிரிப்பை வெளிப் படுத்தியவாறே.

எனக்கு நறுக்கென்றிருந்தது.

 “ஐயரே! சொல்றேன்னு கோபப் படாதீங்க. நான் பெரியார்வாதி தான். ஆனால் பிராமணர்கள எதிர்ப்பவன் கிடையாது.இருந்தாலும் நீங்கள் பேசுறது கொஞ்சம் திமிராதான் இருக்கு”

 மீண்டும் வெளிப் பட்டது நமட்டு சிரிப்பு.

 சற்று ஆக்ரோசமாகவே கத்தினேன்.” என்ன…ஐயரே! என்ன திமிர் உனக்கு. இது தமிழ்நாடு, தமிழர் பூமி. இங்கு தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது தானே நியாயம்.கடவுள் இருக்காரோ இல்லையோ. ஆனால் மக்களுக்கு புரியாத மொழியில் எதுக்கு அர்ச்சனை !”

 இப்போது கம்பீரமாக பேசினார் குருக்கள், “அடே அம்பி! நான் எங்கடா சொன்னேன் தமிழ்ல அர்ச்சனை வேண்டாம்னுட்டு ? எங்கவாளே பல பேர் அர்த்தம் தெரியாமதான் மந்திரம் ஓதுறா…தமிழ்ல தான் ஒதனும்னா அர்த்தம் புரிஞ்சு  தமிழ்லயே ஓதிட்டுபோறோம்..அதை விடுத்து எங்களை விரோதி மாதிரி நடத்தினா…. ?”

 அவர் பேச்சில் நியாயம் இருப்பதாக நான் உணர்ந்ததை  அவர் அறிந்துக் கொண்டார் போலும். “இதோ இப்ப நான் பாடுறேன் கேளு “

 “கருநட்ட கண்டனை அண்ட…” உருக உருக பாடினார் தேவாரத்தை…நானும் அதில் மயங்கி நின்றேன் சில மணி நேரங்கள்.

கடவுள் இருக்கார் இல்லார் என்பது பல நேரங்களில் தேவையற்ற விவாதம். அவர் இருக்காரோ இல்லையோ, ஆனால் அவர் மீது பாடல்கள் பாடிய பலரும் வெறும் கடவுள் தொண்டர்களன்று. அவர்கள் தமிழ் தொண்டர்கள். எத்தனை ஆயிரம் அருமையான தமிழ் பாடல்களை பாடியுள்ளனர். நாத்திகம் பேசுபவர் கடவுளை வெறுத்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழ் மொழியை வெறுப்பது தமிழ் இலக்கியத்தை அழிக்க முயற்சிப்பது மடத்தனம்.

இன்னும் எத்தனை அருமையான சமணப் பாடல்கள் தமிழிலுண்டு.சைவ சமையம் தழுவிய பலரும் எத்தனை அருமையான சமணத் தமிழ் பாடல்களை அழித்து விட்டனர்..!

இன்னும் இன்று நாத்திகம் பேசும் மாமனிதர்கள் பலர் எத்துனை அருமையான தமிழ் பக்தி இலக்கியங்களை அழிக்கவும் ஒழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர்.

நக சுத்திக்கு பயந்து
கையையே வெட்டிக் கொள்கிறது
ஒரு கூட்டம்…

 அவர் பாடிய பன்னிரு திருமுறைகளை கேட்க கேட்க உருகியது என் மனம். பெருங்கியது கண்ணீர்.

எம்மொழியாம் செம்மொழி தமிழ்மொழி,
பாரில் அதற்க்கு நிகர் வேறெந்த மொழி !

கண்ணீரை துடைத்தவாறே வினவினேன்,”மூலவர், ஓடிடார்னு சொன்னீங்களே! கேலியோ !”

” இல்லடா..நிஜமாதான் …

சிவாச்சாரியார்கள் நான்கு பேர் கை கோர்த்து வந்தார்கள். ஒருத்தர் சொன்னார் ‘இறைவா..திருசிற்றம்பழம்…’

எல்லாருக்கும் ‘ழ’ தான் தடுமாறும். இவருக்கு ‘ல’ வே தடுமாறுது. எனக்கு அதை பார்த்ததும் சிரிப்ப அடக்க முடியலை. நானும் உங்க கூட சேர்ந்த பாடட்டுமானு கேட்டேன்.

‘ஏய்! பிராமணா வெளிய போடா’னு நாலு பேரும் எண்ணத் துரத்திட்டா. நானும் வெளிய நின்று வேடிக்கைப் பார்த்தேன்.

 இரண்டாம் சிவாச்சாரியார் சிவனை நோக்கி பாடினார் “பாழ் அபிசேகம் செய்யவா ! என் மன்னா “

 ‘என்னது பாழ் அபிசேகமா ! அடியாரே அது பால் அபிசேகம்’னு நான் சொன்னேன். அவர் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ‘பாழ்’ என்றார். சிவனே என்று கிடந்த சிவன் கண்ணில் தாரை தாரையா கண்ணீர் வர ஆரமிச்சிடுத்து. இருக்காதா பின்ன !

தமிழை கொலை செய்தால் பொறுத்துக் கொள்வானோ வெள்ளையங்கிரி நாதன்.

ஆனால் அதை பார்த்த அந்த மூன்றாவது சிவாச்சாரியார் சொன்னார் ‘ஐயகோ ! இறைவன் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் ‘ அதைக் கேட்டதும் மூலவர் சிலையிலிருந்து இன்னும் அதிகமாக வழிந்தது, கண்ணீர். இன்னும் கொஞ்சம் போயிருந்தா ஆண்டவன் ரத்தக் கண்ணீரே வடித்திருப்பார்.அந்த நேரம் பார்த்து அந்த நாலாவது சிவாச்சாரியார் சொன்னார் …..”

பேச்சை நிறுத்திவிட்டு சிரித்தார் குருக்கள். கபடமற்ற சிரிப்பு. அவர் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தேன் நான். சிரித்துவிட்டு, மீண்டும் பேச்சை தொடர்ந்தார்…

“அந்த நாலாவது மனிதர் பாவம். இறைவன் மீது  பாசம் ரொம்ப அதிகம் வச்சுட்டார். தன்னை தானே திருநாவுகரசரென்று நினைத்துக் கொண்டு இறைவனை ஆட்கொண்டருள வேண்டினார்…ஆனால்…(மீண்டும் சிரித்தார் குருக்கள்)…ஆனால் அவர் வேண்டியது வேறு…’இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’ தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பாடிக் கொண்டே இருந்தார். நானும் வெளியே இருந்து, ‘அது ‘ள்’ அடியாரே ‘ல்’ அன்று’னு சொல்லிக்கொண்டே இருந்தேன். அவர் என் பக்கம் செவி சாய்க்காமல் தொடர்ந்து ஆனந்தக் கூத்தாடினார்.’இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’

 திடிர்னு இடி இடிக்கிற மாதிரி சத்தம். இந்த கோவிலே ஆட்டம் கண்டுடுத்து. நான் தடுக்கி கீழ விழுந்து மயங்கிட்டேன்.எனக்கு என்ன நடந்தது என்றே புரியல. சில நிமிடம் கழித்து நினைவு வந்தது. நான் வேகமா கற்ப கிரகம் நோக்கி ஓடினேன். அங்க கடவுள் இல்லை.

ஆனால் நான்கு சிவனடியார்களும் கண்ணைத் திறக்காமலேயே கண்ணீர் வழிய பாடிக்கொண்டிருந்தர்கள். ‘இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’

 வெகு தொலைவில் கடவுள் ஓடிக் கொண்டிருந்தார்,கதறியவாறே,.’அய்யோ.. என்னை  கொலை பண்ணுறாங்க..அய்யோ என்னை கொலை பண்ணுறாங்க’….”

தமிழ் எழுத்தாளனின் மரணம்

அந்த தமிழ் எழுத்தாளன்
மாண்டுவிட்டான்
அழுவதற்கு யாருமில்லை

சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை
சில நூறுப் பேர்களுக்காக  மட்டும்
எழுதியவன் மாண்டுவிட்டான்

தமிழ்நாட்டில் தமிழில் எழுதும்
கீழ்த்தரமான செயலை இறுதிவரை
செய்தவன் மாண்டுவிட்டான்

நீசன் எனக்கூறி பலர்
அவனை
ஒதுக்கிவிட்டனர்

சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி
அறிவிலிகள் பலர்
ஒதுங்கிநின்றனர்

ஒதுக்கியவர்களாலோ
ஒதுங்கியவர்களாலோ
ஒடுக்கமுடியவில்லை அவனை

இறுதிவரை வளையா
முதுகெலும்புடன்
எழுதியவன் மாண்டுவிட்டான்

பக்கத்துக்கு பக்கம்
சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக
அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை

அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ
தெரியவில்லை அழுகிறார்கள்
வாயினை மூடிக் கொண்டு

உண்மையை
உண்மையாய் எழுதியதை
தலைக்கணமென் றனர்சிலர்

அஞ்சுகின்றனர் இன்னும் சிலர்
அவனை பிடிக்கும் என சொல்வதற்கே -ஏனெனில்
அவன் ஓர் உன்னத தமிழ் எழுத்தாளன்

அந்த தமிழ் எழுத்தாளன்
மாண்டுவிட்டான்
அழுவதற்கு யாருமில்லை

ஆனால் அவன் அறையில்
இன்றும் அழுகுரல்
ஓயாது ஒலிக்கிறது

அவனுக்காக
அழுகின்றன- அவன் இயற்றிய
கதாபாத்திரங்கள்…