ஓடிப்போனக் கடவுள்

நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை.இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம் ஏதோ ஒரு மிகப்பெரிய அரசனால் கட்டப்பட்ட கோவிலென்பது திண்ணம். சிற்றரசர்கள் பெரியக் கோவில்களை உருவாக்கியதில்லை.பிரகாரம் முழுக்க ஏதேதோ குட்டிக் கடவுள்களின் சிதிலமடைந்த சிலைகள். அனைத்தையும் கடந்து நான் மூல ஸ்தானத்தை நோக்கி சென்றேன்.

மூலமே என் நோக்கு
வெருச்சோடிக் கிடந்த கோவில்
காணவில்லை கடவுள்;

இது என்ன கோவில் என்பது விளங்கவில்லை. கற்பக்ரஹத்தில் மூலவர் சிலையை காணவில்லை. நிலையில் கடவுளின் பெயர் எழுதி இருக்கிறதா என்பதை உற்று நோக்கினேன். கும் இருட்டு. சட்டைப் பையில் இருந்த லைட்டரை எடுத்து பற்ற வைத்தேன். உள்ளே கடவுள் இல்லை என்பது உறுதியானதும் அப்படியே சிகரட்டையும் பற்ற வைத்தேன்.

சுருள் சுருளாய்
பறந்தன
புகைகள்.

 நிலை வாசற்ப்படியில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது

“பன்னாரி அம்மன் துணை “

ஏதோ சிந்தனையோடு திரும்பினேன். சிகரெட் வெளிச்சத்தில் தெரிந்தார் நந்தி பகவான்.

‘நிச்சயம் இது அம்மன் கோவிலன்று. அம்மன் கோவிலில் எப்படி வரும் நந்தி’ மீண்டும் நிலைக் கதவை நோக்கினேன்.

“பன்னாரி அம்மன் துணை
சென்னை “

 இது நிச்சயம் சென்னை இல்லை. நேற்று இரவு நான் திருச்சியில் உறங்கியது வரை ஞாபகம் இருக்கிறது. விழித்துப் பார்த்தல் இங்கு நின்றுக் கொண்டிருக்கிறேன். குழப்பத்துடன் அரை நொடி மீண்டும் அந்த நிலையை நோக்க, விளங்கியது அனைத்தும் தெளிவாக.

 “பன்னாரி அம்மன் துணை
உபயம்:
சாந்தா பச்கியசாமி- சென்னை “

 வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள இயலவில்லை. அடக்கவும் நான் முயற்சிக்கவில்லை. இவ்வளவு பெரிய கோவிலை கட்டிய மன்னனே ஒரு சிறு கல்வெட்டில்தான் தன் பெயரை செதுக்கிக் கொள்கிறான். ஆனால்  ஒரு சிறு நிலைக் கதவைக் செய்துக் கொடுத்துவிட்டு தன் பெயர், தான் வணங்கும் கடவுளின் பெயர், தன் ஊரின் பெயர் என செதுக்கிக் கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 இதை பார்க்க மனம் தாளாமல்தான் கடவுள் மறைந்துவிட்டரோ என்றென்னும்போது வந்து சேர்ந்தார் கோவிலின் குருக்கள். அவர் முகத்தில் நிலவிய தேஜஸ் என்னை அறியாமலேயே என் சிகரட்டை தரையில் போட்டு மிதிக்க வைத்தது.

 குருக்கள், “வாடா அம்பி. உனக்காகத்தான் காத்திண்டிருந்தேன் ” என்னை நன்கறிந்தவர் போல் அவர் பேசத் தொடங்கினார்.

 “நீ வருவ, இந்த கோவிலை உன் பொறுப்பில் விட்டுட்டு போய்விடலாமென்றுதான் இத்தனைநாள் காத்திண்டிருந்தேன்” எனக்கு ஒன்னும் விளங்கவில்லையெனினும் அவரை மறுத்துப் பேச நா எழவில்லை.

 “சாமி…மூலவர் எங்க !” பதற்றத்தோடு வினவினேன் நான்.

“நோக்கு தெரியாதா…! தமிழ்ல மந்திரம் ஓதுரேனு நாலு சிவனடியார்கள் வந்தா…சுவாமி ஓஓஓஓஓடிட்டார் !” என்றார் ஒரு நமட்டு சிரிப்பை வெளிப் படுத்தியவாறே.

எனக்கு நறுக்கென்றிருந்தது.

 “ஐயரே! சொல்றேன்னு கோபப் படாதீங்க. நான் பெரியார்வாதி தான். ஆனால் பிராமணர்கள எதிர்ப்பவன் கிடையாது.இருந்தாலும் நீங்கள் பேசுறது கொஞ்சம் திமிராதான் இருக்கு”

 மீண்டும் வெளிப் பட்டது நமட்டு சிரிப்பு.

 சற்று ஆக்ரோசமாகவே கத்தினேன்.” என்ன…ஐயரே! என்ன திமிர் உனக்கு. இது தமிழ்நாடு, தமிழர் பூமி. இங்கு தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது தானே நியாயம்.கடவுள் இருக்காரோ இல்லையோ. ஆனால் மக்களுக்கு புரியாத மொழியில் எதுக்கு அர்ச்சனை !”

 இப்போது கம்பீரமாக பேசினார் குருக்கள், “அடே அம்பி! நான் எங்கடா சொன்னேன் தமிழ்ல அர்ச்சனை வேண்டாம்னுட்டு ? எங்கவாளே பல பேர் அர்த்தம் தெரியாமதான் மந்திரம் ஓதுறா…தமிழ்ல தான் ஒதனும்னா அர்த்தம் புரிஞ்சு  தமிழ்லயே ஓதிட்டுபோறோம்..அதை விடுத்து எங்களை விரோதி மாதிரி நடத்தினா…. ?”

 அவர் பேச்சில் நியாயம் இருப்பதாக நான் உணர்ந்ததை  அவர் அறிந்துக் கொண்டார் போலும். “இதோ இப்ப நான் பாடுறேன் கேளு “

 “கருநட்ட கண்டனை அண்ட…” உருக உருக பாடினார் தேவாரத்தை…நானும் அதில் மயங்கி நின்றேன் சில மணி நேரங்கள்.

கடவுள் இருக்கார் இல்லார் என்பது பல நேரங்களில் தேவையற்ற விவாதம். அவர் இருக்காரோ இல்லையோ, ஆனால் அவர் மீது பாடல்கள் பாடிய பலரும் வெறும் கடவுள் தொண்டர்களன்று. அவர்கள் தமிழ் தொண்டர்கள். எத்தனை ஆயிரம் அருமையான தமிழ் பாடல்களை பாடியுள்ளனர். நாத்திகம் பேசுபவர் கடவுளை வெறுத்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழ் மொழியை வெறுப்பது தமிழ் இலக்கியத்தை அழிக்க முயற்சிப்பது மடத்தனம்.

இன்னும் எத்தனை அருமையான சமணப் பாடல்கள் தமிழிலுண்டு.சைவ சமையம் தழுவிய பலரும் எத்தனை அருமையான சமணத் தமிழ் பாடல்களை அழித்து விட்டனர்..!

இன்னும் இன்று நாத்திகம் பேசும் மாமனிதர்கள் பலர் எத்துனை அருமையான தமிழ் பக்தி இலக்கியங்களை அழிக்கவும் ஒழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர்.

நக சுத்திக்கு பயந்து
கையையே வெட்டிக் கொள்கிறது
ஒரு கூட்டம்…

 அவர் பாடிய பன்னிரு திருமுறைகளை கேட்க கேட்க உருகியது என் மனம். பெருங்கியது கண்ணீர்.

எம்மொழியாம் செம்மொழி தமிழ்மொழி,
பாரில் அதற்க்கு நிகர் வேறெந்த மொழி !

கண்ணீரை துடைத்தவாறே வினவினேன்,”மூலவர், ஓடிடார்னு சொன்னீங்களே! கேலியோ !”

” இல்லடா..நிஜமாதான் …

சிவாச்சாரியார்கள் நான்கு பேர் கை கோர்த்து வந்தார்கள். ஒருத்தர் சொன்னார் ‘இறைவா..திருசிற்றம்பழம்…’

எல்லாருக்கும் ‘ழ’ தான் தடுமாறும். இவருக்கு ‘ல’ வே தடுமாறுது. எனக்கு அதை பார்த்ததும் சிரிப்ப அடக்க முடியலை. நானும் உங்க கூட சேர்ந்த பாடட்டுமானு கேட்டேன்.

‘ஏய்! பிராமணா வெளிய போடா’னு நாலு பேரும் எண்ணத் துரத்திட்டா. நானும் வெளிய நின்று வேடிக்கைப் பார்த்தேன்.

 இரண்டாம் சிவாச்சாரியார் சிவனை நோக்கி பாடினார் “பாழ் அபிசேகம் செய்யவா ! என் மன்னா “

 ‘என்னது பாழ் அபிசேகமா ! அடியாரே அது பால் அபிசேகம்’னு நான் சொன்னேன். அவர் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ‘பாழ்’ என்றார். சிவனே என்று கிடந்த சிவன் கண்ணில் தாரை தாரையா கண்ணீர் வர ஆரமிச்சிடுத்து. இருக்காதா பின்ன !

தமிழை கொலை செய்தால் பொறுத்துக் கொள்வானோ வெள்ளையங்கிரி நாதன்.

ஆனால் அதை பார்த்த அந்த மூன்றாவது சிவாச்சாரியார் சொன்னார் ‘ஐயகோ ! இறைவன் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் ‘ அதைக் கேட்டதும் மூலவர் சிலையிலிருந்து இன்னும் அதிகமாக வழிந்தது, கண்ணீர். இன்னும் கொஞ்சம் போயிருந்தா ஆண்டவன் ரத்தக் கண்ணீரே வடித்திருப்பார்.அந்த நேரம் பார்த்து அந்த நாலாவது சிவாச்சாரியார் சொன்னார் …..”

பேச்சை நிறுத்திவிட்டு சிரித்தார் குருக்கள். கபடமற்ற சிரிப்பு. அவர் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தேன் நான். சிரித்துவிட்டு, மீண்டும் பேச்சை தொடர்ந்தார்…

“அந்த நாலாவது மனிதர் பாவம். இறைவன் மீது  பாசம் ரொம்ப அதிகம் வச்சுட்டார். தன்னை தானே திருநாவுகரசரென்று நினைத்துக் கொண்டு இறைவனை ஆட்கொண்டருள வேண்டினார்…ஆனால்…(மீண்டும் சிரித்தார் குருக்கள்)…ஆனால் அவர் வேண்டியது வேறு…’இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’ தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பாடிக் கொண்டே இருந்தார். நானும் வெளியே இருந்து, ‘அது ‘ள்’ அடியாரே ‘ல்’ அன்று’னு சொல்லிக்கொண்டே இருந்தேன். அவர் என் பக்கம் செவி சாய்க்காமல் தொடர்ந்து ஆனந்தக் கூத்தாடினார்.’இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’

 திடிர்னு இடி இடிக்கிற மாதிரி சத்தம். இந்த கோவிலே ஆட்டம் கண்டுடுத்து. நான் தடுக்கி கீழ விழுந்து மயங்கிட்டேன்.எனக்கு என்ன நடந்தது என்றே புரியல. சில நிமிடம் கழித்து நினைவு வந்தது. நான் வேகமா கற்ப கிரகம் நோக்கி ஓடினேன். அங்க கடவுள் இல்லை.

ஆனால் நான்கு சிவனடியார்களும் கண்ணைத் திறக்காமலேயே கண்ணீர் வழிய பாடிக்கொண்டிருந்தர்கள். ‘இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’

 வெகு தொலைவில் கடவுள் ஓடிக் கொண்டிருந்தார்,கதறியவாறே,.’அய்யோ.. என்னை  கொலை பண்ணுறாங்க..அய்யோ என்னை கொலை பண்ணுறாங்க’….”

கடவுளும் ப்ளாக் டிக்கெட்டும்

கி.பி. 2220 வெள்ளிக்கிழமை. மார்கழி மாதம் .காலை7.30 .

பூலோகத்தில் ஆண்டவருக்கு பால் அபிஷேகம்  அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது.

‘ஆண்டவா ஆண்டவா’ என்று எழும்பிய பேரொலி, காற்றைக் கிழித்துக் கொண்டு பயணித்து வைகுண்டத்தில் உறங்கி கொண்டிருந்த ஆண்டவரின் காதில் விழ, திடுக்கிட்டு கண்விழித்தார் ஆண்டவர். அருகில் அவரது துணைவியார் சாந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார். இரா முழுதும் வேலை செய்து களைத்திருந்த ஆண்டவர் சோம்பல் முறித்தவாரே ஒலி வரும் திசையை நோக்கினார். ஒலி உலகின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய துணைக் கண்டத்தின் தென் மூலையில் உயிருக்கு ஊசல் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருந்த தமிழகத்திலிருந்து வருவதையறிந்து அவர் முகம் கோனிற்று.

“இன்னுமா இந்த உலகம் நம்பள நம்பிக்கிட்டு இருக்கு ” என்றவாரே தன் மடிக்கணினியை திறந்து ஜி.பி.எஸ் மோடை கிளிக் செய்து தமிழகம் செல்லும் வழியை தேடினார். அவர் தமிழகம் வந்து பல நூறு வருடம் ஆனதால் வழி மறந்திருக்கும். அதற்காக அவரை மன்னித்து விடலாம்.

ஒருவாறு பாதையை கண்டுணர்ந்து  தமிழகம் நோக்கி குதித்தார். ‘ஆண்டவா ஆண்டவா’ என்ற பேரொலிக்கு மத்தியில் வந்து குதித்தவரை யாரும் சட்டை செய்யவில்லை. அங்கு பெரிய வரவேற்ப்பை எதிர்பார்த்த ஆண்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் ‘ஆண்டவா’ என்ற பேரொலி மட்டும் குறையாதது கடவுளை குழப்பத்தில் ஆழ்த்தியது.

“மானிட பதர்களே! இன்னும் எதை தேடுகிறீர் ? எதையாவாது ஒன்றை தேடுவதே உங்கள் பிழைப்பா ? நான் தான் வந்துவிட்டேனே !” என்று உரக்க கத்தினார் கடவுள் . ஆனால் அவரின் குரல் அவர் காதுகளிலயே விழாத அளவுக்கு அங்கு ‘ஆண்டவா’ என்ற ஒற்றை சொல், அலை அலையாக மூலை முடுக்குகளை நிரப்பிக்கொண்டிருந்தது. திடிரென பால் அபிஷேகம் நடக்கும் இடம் நோக்கி ஓடிய கூட்டத்தோடு ஆண்டவரும் சேர்ந்துக் கொண்டார். உண்மையை சொல்ல வேண்டுமெனில், மெய் மறந்து நின்ற ஆண்டவர் கூட்டத்தோடு  அடித்து செல்லப்பட்டார்.

அங்கே ஆண்டவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.தன்னுடைய முப்பத்திரண்டடி சிலையை எதிர்ப்பார்த்து சென்ற இடத்தில்,வேறொரு ஜாம்பவானின் உருவம் வரையப்பெற்ற  முப்பத்திரண்டடி  கட்டவுட்  இருந்ததால் ஆண்டவர் திடிக்கிற்று நின்றார். அதில் எழுதி இருந்த வாசகங்கள் அவரை இன்னும் கிலி அடைய செய்தது.

‘ஆண்டவர்’ அருமை ராசன் பதினைந்து அவதாரங்களில்  நடிக்கும், ‘அண்டமாமுனி’.

“ஐயகோ! என்ன இது. ஒன்பது ஆவதாரம் எடுப்பதற்கே எனக்கு பல யுகமாயிற்றே! பத்தாம் அவதாரத்திற்கு கொஞ்சம் இடைவெளி விட்டது தவறோ! யார் இந்த அருமைராசன்? என்னை மிஞ்சிவிட்டானே! ” ஆண்டவனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.பின்னிருந்து ஒரு குரல் கேட்டு திரும்பினார்.

“என்ன தலைவா, அழுவுற ?”, கேட்டவாரே அங்கே நின்றுகொண்டிருந்தான் ஆண்டவரின் தீவிர பக்தனொருவன். ஆண்டவனெனில் அது அருமைராசன். இது பூலோகம்.

“சொல்லு தலைவா. ஏன் அழுவுற ? டிக்கெட் கிடைக்கிலையா ! உன்ன யாரு முத காட்சிக்கு வர சொன்ன ? ஆண்டவர் படம்னா ஒரு வாரம் ஹவுஸ்புள்னு  தெரியாதா ! கிளம்பு அடுத்த வாரம் வா”

” பூலோகத்தில் யாரைக் கேட்டாலும்  ஆண்டவன் என்கிறார்களே. யாரப்பா அந்த ஆண்டவன் ?”

“ஓய் என்னா ! ஆண்டவர தெரியாதா ? எந்த ஊர் நீ. எங்க தலைவர் சவுத் ஆப்பிரிக்கா வரைக்கும் பேமஸ் ஆச்சே !”

“அவரை தெரிந்துக் கொள்ளும் அவசியம் ஏற்படவில்லையப்பா.
இதுநாள் வரை நான் மட்டும்தான் ஆண்டவன் என நினைத்திருந்தேன். ஒருவன் போட்டியாக வருவான் என நான் கனவிலும் எண்ணியதில்லை”

“என்னது, எங்க ஆண்டவர் உனக்கு போட்டியா ? ஒன் சன். ஒன் மூன். ஒன் ஆண்டவர். அதான் எங்க அருமைராசன்”

“நான் நினைத்தால் ஆயிரம் சூரியன் படைத்திடுவேன். உன் தலைவன் போல் ஓராயிரம் தலைவர்கள் செய்திடுவேன். நான் தானடா உண்மையான கடவுள்.”

“என்ன தலைவா உளர்ற? காலையிலே மப்பா? “

“மப்பா? இல்லையப்பா. உண்மையாகவே நான் தான் அண்டங்களை அடக்கி ஆளும் ஆண்டவன்.வைகுண்டத்திலிருந்து வந்துள்ளேன்”

“உன் கெட்டப்ப பார்த்த அப்படி தெரியலயே. தாடி, மீசை ஜடாமுடிலாம் வச்சிருக்க ! நான் தான் சவரம் பண்ண வக்கத்துப்போய் உக்காந்திருக்கேன். உனக்கின்னா ?”

“இது தானப்பா  என் உண்மையான உருவம். இதிலென்ன உனக்கு சந்தேகம்?”

“பொதுவா கடவுள்ன வழிச்சு சவரம் பண்ணி மூஞ்சிலாம் டால் அடிக்கிற மாதிரி இருப்பாங்களே. கிருஷ்ணரு,ராமரு,முருகருனு எல்லாரும் அப்படித்தான இருக்குறாங்க. ஏதோ கருப்பு, சுடலை மாதிரி சாமிலாந்தான் மீசையோட இருக்காங்க,என்ன மாதிரி. நீ வைகுண்ட கோஸ்டினா மீச இருக்க கூடாதே !”

“வெறும் மீசைதானே.அதிலென்ன உனக்கு பிரச்சனை !”

“என்ன சார் அப்படி மீசைய சாதரணமா நினைச்சுபுட்ட . நம்ம ஆண்டவர் ஒரு படத்துல டபுள் அக்டிங் கொடுத்திருப்பாரு பாரு. மீசை வச்சு ஒரு வேசம். மீசை இல்லாம ஒரு வேசம். படம் 175 நாள். அந்த படத்துல  மீசைதான முக்கியமான கேரக்டரு”

“யாது சொல்கிறாய் மகனே! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே “

“செம்மொழி மானாட்டில பேசுறமாதிரியே பேசிக்கிட்டு இருக்க . நீ கடவுள்னு நான் எப்படி நம்புறது ?”

“நீ என்ன வேண்டுமென்றாலும் கேள் .தருகிறேன் “

“நீயெல்லாம்  ஒன்னும் தர வேணாம். இப்பலாம் அரசாங்கமே ஓசிலயே எல்லாத்தையும் கொடுக்குது. அரிசியில இருந்து லேப்டாப் வரைக்கும்.நீ என்னத்த கொடுத்துற போற பெருசா ?”

“உன்னை பார்த்தால் சாப்பிட்டு  பலநாள் இருக்கும் போல் தோன்றுகிறது . என்ன சாப்பிடுகிறாய்  கேள் “

“தோடா. என்ன நக்கலா . உன்ன போட்டுதள்ளிட்டு உள்ள போன, ஜெயில்லயே சிக்கன் போடுவாங்க. என்ன சொல்ற.,உன்ன போட்டுடவா  ?”

கடவுளின் கண்கள் சிவந்தன. தான் கடவுள் என்பதை நிலை நிறுத்த ஏதாவது செய்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். வெகுண்டு எழுந்த அவர், “அர்ப்பப் பதரே! மூவடியில் உலகை அளந்த என்னையா நீ அவமதிக்கிறாய்? இப்போதே நரசிம்ம அவதாரமெடுத்து இவ்வுலகை அழித்துக் காட்டவா ?” என சூளுரைத்தார்.

“என்ன தலைவா டபாய்க்கிற,நீனவாது நரசிம்ம அவதாரம் எடுக்கனும். எங்க ஆண்டவர் எதுமே இல்லாம ஓரு ரெட் சிப் வச்சே உலகத்த அழிச்சிருவார். போன படத்துல ஒரு ரோபோ செஞ்சு, அதுக்கு ரெட் சிப்ப பொருத்துவார். அந்த ரோபா உலகையே அழிக்க புறப்படும். பின்னாடியே போய் ரெட்சிப்ப அழிச்சு உலகத்த  காப்பாத்துவார். படைத்தல் , காத்தல், அழித்தல்-எல்லாமே எங்க அருமைராசன்தான். அதுனாலதான் அவரு ஆண்டவரு…நீ …………..?”

கடவுள் கதி கலங்கிப்போனார். அருமைராசனை   எண்ணும் போது அவர் உடல் சிலிர்த்தது .அருமைராசன் நூறு அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றுமில்லையென எண்ணிக் கொண்டார்.

“மகனே! நிச்சயம் உன் அருமை ராசன் மகான்தான் .ஆனால் நான்தான் உண்மையான சிருஷ்டிகர்த்தா. அதை நீ நம்பியே ஆகவேண்டும் .நிச்சயம் உனக்கு ஏதாவது வரம் அளிக்கிறேன். யாது வேண்டும் கேள் “

“என்னப்பா உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு. சரி விடு. நம்ம அஞ்சலா இல்ல. அதான் பா .என் செட்டப்பு. அவளுக்கும் ஆண்டவர் படம்னா   உசுரு . இந்தப் படத்த இன்னைக்கே பாக்கனுமா… ஆனா பாரேன்!  டிக்கெட் கிடைக்கில.ஹவுஸ்புல் . நீ ஒரு ரெண்டு டிக்கெட்டு,ப்ளாக்ல,இன்னக்கு ராத்திரி ஆட்டதுக்கு வாங்கிக் கொடு. அப்புறம் நீ கடவுள்னு ஒத்துக்கிறது என்ன, ஊட்டுக்கு இட்டுப் போய் நல்ல கோழி அடிச்சு சோறு போடுறேன். நீ கவுச்ச சாப்பிடுவயில்ல ?”

கடவுளால் ஒன்றும் பேச இயலவில்லை. கடந்த காலம் அவர் கண் முன் ஓட தொடங்கிற்று. எத்தனை அரக்கர்களை கொன்று குவித்துள்ளார், எத்தனை சத்ரிய இரத்தங்களில் புனித நீராடியுள்ளார். ஆனால் இன்று தன்னால் ஒரு ப்ளாக் டிக்கெட் வாங்க இயலவில்லை என்பதை எண்ணி வெட்கி தலை குனித்து நின்றார். ஒருபுறம்  சராசரி மனிதனின் ஏளனச் சொற்கள் அவரை முள்ளாய் குத்திற்று. இன்னொருபுறம்
அருமைராசனின்பிரமாண்ட கட் அவுட் உருவம் அவரை மிரட்டிற்று.
தன்னிலை மறந்து கடவுள்
புலம்பத் தொடங்கினார்,”நான்தான் கடவுள்.
நான் தான் உண்மையான ஆண்டவன் “.

“இது வேலைக்கு ஆகாது “என்றபடி தீவிர பக்தன் அந்த இடத்தை விட்டு நழுவினான் .

தனக்கு தானே கடவுள் புலம்பிக்கொண்டிருந்தார்.

ஆனால் அவரின் குரல் அவர் காதுகளிலயே விழாத அளவுக்கு அங்கு ‘ஆண்டவா’ என்ற ஒற்றை சொல், அலை அலையாக மூலை முடுக்குகளை நிரப்பிக்கொண்டிருந்தது.