ஒரு இலக்கிய விமர்சகர்

இன்று தமிழின் பிரபல இலக்கிய விமர்சகராக அறியப்படும் ரகு ஒருகாலத்தில் ரஹோத்தமன் என்ற பெயரில் புனைவுகள் எழுதினார் என்பது இன்றைய இணைய சமூகத்தில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் எழுதிய மூன்று புனைவுகளிலும் புனைவுத் தன்மை துளிக் கூட இல்லை என்று அப்போதைய பிரபல டெல்லி விமர்சகர் குற்றம் சாட்ட, “அது பின்நவீனத்துவ புனைவு உனக்கெல்லாம் புரியாது” என்று ரஹோத்தமன் மூன்று சந்தாதாரர்கள் கொண்ட இரும்பு யானை (தனி சுற்றிற்கு மட்டும்) இலக்கிய இதழில் காட்டமாக ஒரு எதிர்ப்பு கட்டுரை எழுதியும் டெல்லிக்காரர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

“பின்நவீனத்துவம் என்றாலே வெட்டி ஓட்டுவது போல் இருக்க வேண்டிய அவசியமில்லை ரஹோத்தமா” என்று டெல்லிக்காரர் பதிலுக்கு சொன்னது இன்றுவரை ரகுவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

Oru ilakiya vimarsagar.jpg

Pic courtesy: Anouar olh

புனைவு எழுதுவது தனக்கு வராது என்று புரிந்துகொண்ட ரஹோத்தமன், விமர்சனம் எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் தஸ்தாவ்ஸ்கி, பாப்லோ நெருதா, இத்தாலோ கால்வினோ, தரிசனம், நிகழ மறுத்த அற்புதம், மகா உன்னதம், அடுக்குகள், உள் மடிப்பு, ஆழ்ந்த ரசனை போன்ற டெம்ப்ளேட் வார்த்தைகளை போட்டு (கறார்) விமர்சனம் எழுதி விமர்சனத் துறையில் அவருக்கு முன்னரே சிலர் கோலோச்சி விட்டிருந்தபடியால் அதே பாணியில் ரஹோத்தமன் எழுதிய விமர்சனத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. வாழ்க்கை வெறுத்து, ஒரு பவுர்ணமி நாளில், மெரீனா கடலில் குதித்துவிடலாம் என்று அவர் போன போது தான் அந்த தடி புத்தகம் கரை ஒதுங்கியது.

STRAIGHT FROM THE HEART, SHORT STORIES BY COLONEL ABU

புத்தகத்தை எடுத்துப் புரட்டினார் ரஹோத்தமன். பல பக்கங்கள் நீரில் மூழ்கி நைந்து போயிருந்தது. தெளிவாக இருந்த சில பக்கங்களைப் படித்தார். புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ரஹோத்தமனுக்கு ஆங்கில அறிவு போதவில்லை என்று எண்ண வேண்டாம்.  அந்த புத்தகத்தை எழுதிய  அபுவிற்கு ஆங்கிலப் புரிதல் சரியாக இல்லாததால் புத்தகம் அப்படி சிக்கலான மொழியில் உருவாகி இருந்தது.

கொலம்பியன் எழுத்தாளரான அபு ஸ்பானிய மொழியில் ஏராளமான சிறுகதைகளை எழுதிக் குவித்திருந்தும் அந்த நாட்டு விமர்சகர்கள் அவரை தொடர்ந்து நிரகாரித்து வந்திருந்தனர். ஹருக்கி முரக்காமியின் மீதும் அகிரா குரோசாவா மீதும் வைக்கப் பட்ட அதே குற்றசாட்டு அபு மீதும் வைக்கப்பட்டது. அதாவது முரக்காமி, குரோசாவாவின் படைப்புகளை போல் அபுவினுடைய படைப்புகளும் மேலை நாட்டு மக்களை திருப்தி படுத்ததுவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றன, அவரது படைப்புகளில் பிராந்திய தன்மை (குறிப்பாக கரிசல் தன்மை) கொஞ்சம் கூட இல்லை என்று கூறி விமர்சகர்கள் ஒரு சேர கொடி பிடித்தனர். அப்போதுதான் அபுவிற்கு தன் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஐடியா பிறந்தது. எப்படியாவது இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்த அபு மொழிப்பெயர்ப்பாளர்களை தேடத் தொடங்கினார்.

இப்போது போலவே அப்போதும் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் கிடைப்பது குதிரைக் கொம்பாக தான் இருந்தது. இறுதியாக ரபாஸா என்ற அமெரிக்க பேராசிரியரை தொடர்பு கொண்டார் அபு. அது ஈமெயில் அறிமுகமாகி இருக்காத காலம் என்பதால் புத்தகத்தை தபாலில் தான் அனுப்ப வேண்டும் என்கிற சூழல்.

அவ்வளவு செலவு செய்ய வேண்டாம், நான் கொலம்பியா வரும் போது நேரிலேயே புத்தகத்தைப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் ரபாஸா. சில ஆண்டுகள் கழித்து, சாண்ட்டா மார்த்தா நகரத்திற்கு வந்திறங்கிய ரபாஸா புத்தகத்தோடு தன்னை சந்திக்க வரும்படி அபுவுக்கு கடிதம் எழுதினார். அபு வசித்த அரக்காடாக்கா கிராமத்திற்கும் சாண்ட்டா மார்த்தாவிற்கும் இடையே வெறும் என்பது கிலோமீட்டர் தூரம் தான். ஆனால் அபுவின் மனதிலிருந்த ஈகோ அவரை வெகு தூரம் தள்ளி வைத்திருந்தது. ஒரு எழுத்தாளன் எப்படி மொழிபெயர்ப்பாளனை போய் சந்திப்பது என்று கர்வம் கொண்டிருந்த அபு, ஒரு மாதக் காலம் ரபாஸாவை சந்திக்காமல் இழுத்தடித்தார்.   அப்படியாவது ரபாஸா தன்னை தேடி வருகிறாரா என்று பார்த்தார். ரபாஸா வரவில்லை. இறுதியாக, “காரியம் பெருசா வீரியம் பெருசானா காரியம் தான் பெருசு அபு” என்று அபுவின் மாமா செங்குண்டோ மரணப்படுக்கையில் சொல்லிவிட்டு சாக, அபு தன்னுடைய தொண்ணூற்றி ஆறு சிறுகதைகளையும் எடுத்துக் கொண்டு ரபாஸாவை சந்திக்கச் சென்றார்.

“மன்னிக்கவும் அபு, வேறொரு எழுத்தாளரும் என்னை அணுகினார். அவரின் நாவல் அருமையாக இருந்தது. நீங்கள் வரவில்லை என்பதால் நான் அவரின் நாவலை மொழிபெயர்ப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன்” என்றார் ரபாஸா

“யார் அவன்?” என்று கோபமாக கேட்டார் அபு.

“கேப்ரியல். உங்க ஊர்காரர்தான்”

“அந்தப் பத்திரிகைக்காரனா?

“ஆமா…”

“அவன் என்ன பெருசா எழுதிடுவான்! நேத்து வந்தவன்லாம் எனக்கு போட்டியா?” என்று அபு கோபமாக கத்த, ரபாஸா புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார்.

“அவன் எழுதுறதுலாம் வெறும் குப்பை. நான் வேறொரு நல்ல மொழிபெயர்ப்பாளர பார்த்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினார் அபு. ஆனால் அபுவிற்கு வேறு மொழிப்பெயர்ப்பாளர் கிடைக்கவே இல்லை. சில வருடங்களில், காப்ரியலின் நாவல் ரபாஸாவின் மொழிபெயர்ப்பில் ‘One hundred years of solitude’ என்ற தலைப்பில் வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

அபு சுவற்றில் முட்டிக் கொண்டார். அவருடைய ஆக்ரோசம் தணியவில்லை. நாளுக்கு நாள் அவருடைய வயதோடு சேர்ந்து, பொறாமையும் ஈகோவும் அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில், “நீங்கள் என்ன பெயர்ப்பது மொழி, நானே பெயர்கிறேன்டா மொழி” என்று கோபமாக தன் கதைகளை தானே மொழிபெயர்க்க முடிவு செய்தார்.

உடனே ஒரு ஆக்ஸ்போர்ட் அகராதியை வாங்கி இரவுப் பகலாக போராடி தன்னுடைய கதைகளை மொழிப் பெயர்த்து முடித்தார். ஆனால் அவருக்கு போதிய ஆங்கில அறிவு இல்லாததால், கதைகளில் ஏகப்பட்ட இலக்கணப் பிழை இருந்தது. வாக்கியங்கள் கோர்வையற்று காட்சி தந்தன. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், பிரிண்ட் ஆண் டிமாண்டில் அந்த புத்தகத்தை ஐம்பத்தி இரண்டு பிரதிகள் பிரசுரித்து ஐம்பத்தி இரண்டு நாடுகளுக்கு கப்பலில் அனுப்பி வைத்தார். இந்தியா வந்த கப்பல் நடுகடலில் கவிழ்ந்துவிட, அந்த புத்தகம் ஐநூற்றி சொச்சம் நாட்டிகல் மைலை சில ஆண்டுகளில் கடந்து ரஹோத்தமனின் கையில் கிடைத்த அந்த நன்னாளில்,

வானில்
மட்டும்
முழுநிலா
தோன்றி யிருக்கவில்லை,
ரஹோத் தமனின்
வாழ்விலும்
தான்…

அந்த புத்தகம் ரஹோத்தமனுக்கு நம்பிக்கையை தந்தது. அபுவின் எழுத்தில் இருக்கும் கோர்வையற்ற தன்மையே (Grammar Mistake) அபுவின் தனித்துவம் என்று மறு நாளே ஒரு பத்திரிகையில் எழுதினர் ரஹோத்தமன். ‘துரை யார்யாரையோ படிக்குது’ என்ற அளவில் அவருக்கு நிறைய வாசகர்கள் உருவானார்கள்.

ரஹோத்தமன் ரகுவானார். அபுவின் எழுத்துக்களோடு ஒப்பிட்டு அவர் எழுதும் விமர்சனத்தை ரசிக்கவே ஒரு பெரும் கூட்டம் உருவானது. ரகுவும் தனக்கென்று ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கிக் கொண்டார்.

எந்த விமர்சனமும் நாலு பக்கம் இருக்கும் படி பார்த்துக் கொள்வார். முதல் பக்கத்தில் தன்னைப் பற்றி தானே பெருமையாக எழுதுவார். இரண்டாவது பக்கத்தில் அபுவைப் பற்றி எழுதுவார். மூன்றாவது பக்கத்தில் அபுவின் கதைகளைப் பற்றி சிலாகிப்பார். நான்காவது பக்கத்தில் விமர்சனத்திற்காக எடுத்துக் கொண்ட கதையை அபுவின் கதையோடு ஒப்பிட்டு எழுதுவார்.

கதை பிடிக்காவிட்டால், “அபுவோட ஒப்பிடும் போது இந்த கதை குப்பை என்பேன்…” என்று எழுதுவார்.

பிடித்துவிட்டால், “தமிழுக்கு கிடைத்த அபு..” என்பார்.

வெறும் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே அவருக்காக பக்கங்கள் ஒதுக்கிய பத்திரிக்கைகள், தினமும் அவருக்காக பல பக்கங்களை ஒதுக்கத் தொடங்கின.

ரகு வளர்ந்தார். ஆர்குட்டில் வாசகர் வட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ரகு நினைத்தால் எதுவும் சாத்தியம் என்று நிலை வந்தது. பேஸ்புக்கும் வந்தது. அவர் வாசகர் வட்டத்திலிருந்து பிரிந்து வந்த பலரும் தன்னிச்சையாக விமர்சனம் எழுத ஆரம்பித்தனர். ஆனால் யாராலும் ரகுவை நெருங்க முடியவில்லை. எதிரிகள் அதிகமாக அதிகமாக ரகுவின் ஆளுமையும் வளர்ந்தது. அவர் நினைத்தால் கட்டுரைகளை கூட, சிறுகதைகள் என்று நம்ப வைப்பார். நல்ல சிறுகதைகளை உதவாத கதைகள் என்றும் நம்ப வைப்பார். ஐந்து சிறுகதைகளை சேர்த்து இது ஒரு நாவல் என்று நம்பவைப்பர். சுமாரான கதையை தமிழின் ஆகச் சிறந்த கதை என்று நம்ப வைப்பார்.

அவரின் கைகளில் கொட்டுவாங்கவே பல எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளோடு அவர் வீட்டு வாசலில் நிற்கத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் தமிழில் நவீன படைப்புகள் தீர்ந்துவிட, சங்க இலக்கியங்கள் பக்கம் தன் பார்வையை திருப்பினார் ரகு.

தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டு, “யாருடா அவன் தொல்காப்பியன், குப்பையா எழுதிருக்கான், எங்க அபு போல வருமா…” என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. புதுக்கவிஞர்கள் கம்மென்று இருக்க, மூன்று மரபுக் கவிஞர்கள் ரகுவை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். ரகு எதற்கும் அசரவில்லை.

“சும்மா போறீங்களா! இல்ல உங்க கவிதைகள விமர்சிச்சு புக்கு எழுதவா?” என்று கேட்க மிரண்டு போன மரபுக் கவிஞர்கள் பின்வாங்கினார்.

அதன்பின் விமர்சகர் ரகுவை விமர்சிக்க யாரும் பிறக்கவில்லை.

இன்று ரகு, தமிழின் ஆகச் சிறந்த இலக்கிய விமர்சகர். தவிர்க்க முடியாத ஆளுமை. அவரது விமர்சனங்கள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவுஸ்தெர்லியாவை சேர்ந்த முனைவர் தியான் க்ரே ஜாயரோடு இணைந்து ரகு எழுதிய ‘உலக இலக்கிய விமர்சன கோட்பாடு’ என்ற புத்தகம் இதுவரை பத்து மில்லியன் பிரதிகள் விற்று இருக்கின்றன.

ஏரளமான விருதுகள் அவரை தேடி வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் தங்கள் நாட்டில் நடக்கும் இலக்கிய விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அவரை அழைத்தது.  ஸ்பான்சர்ஷிப்பில் சென்று நாட்டை நன்றாக சுற்றிப் பார்த்தார்.

மாலையில் விடுதியில் ஒயின் அருந்திக் கொண்டிருந்த போது, தொண்ணூற்றி ஒன்பது வயதான கிழவர் ஒருவர் தன் கொள்ளுப் பேரன்களின் தோள் பற்றிக்கொண்டு தள்ளாடி தள்ளாடி ரகுவை நோக்கி நடந்துவந்தார்.

“வணக்கம் señor, நான், எழுத்தாளர் அவுரிலியானோ புந்தியா. உங்க விமர்சனம்லாம் படிச்சிருக்கேன். நான் உங்களுடைய பெரிய ரசிகன்” என்று கைக்கூப்பினார் கிழவர்.

அந்த நேரத்தில் அவரை அங்கே விரும்பாத ரகு, என்ன வேண்டும் என்பது போல் பார்த்தார்.

கிழவர் தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு சிறு புத்தகத்தை எடுத்து நீட்டினார்.

“Aureliano’s Memoirs” என்று அத்த புத்தகத்தில் கொட்டையாக எழுதியிருந்தது.

“இது என்னுடைய லேட்டஸ்ட் புக். அனேகமா இதுதான் என்னுடைய கடைசி புக்கா இருக்கும்.. சின்ன புக்குதான் நீங்க ஒரு நைட்ல படிச்சிடுவீங்க. நீங்க இதப் படிச்சிட்டு நாளைக்கு நடக்கப் போற இலக்கிய விழால நாலு வார்த்த பேசனும். போற உசுரு நிம்மதியா போகும்…”

அந்த புத்தகத்தை கையில் வாங்கிக் கொண்ட ரகு, “இந்த வயசுல உனக்கு என்ன கிழவா புக்கு…” என்று தோரணையில் கிழவரைப் பார்த்தார்.

“நாளைக்கு பாப்போம் señor” கிழவர் நகர்ந்தார்.

மறு நாள் ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோரும் ரகுவிற்காக காத்திருந்தனர். அவர் வரவில்லை. முந்தையநாள் இரவில் கே டிவியில் பாட்ஷா படத்தை பார்த்து விட்டு தாமதமாக தூங்கியதன் விளைவு. ஒருங்கிணைப்பாளர் ரகுவை அழைத்து வர இரண்டு பேரை அனுப்பினார்.

அவர் வரும் வரை மக்களை சமாளிப்பதற்காக, அவுரிலியானோ புந்தியாவை பேச வைக்கலாம் என்று முடிவு செய்தார்.

“தொண்ணூற்றி ஒன்பது வயதிலும் அயராது இலக்கியம் வளர்க்கும் எழுத்தாளர் அவுரிலியானோ புந்தியாவை பேச அழைக்கிறேன்…”

நிதானமாக மேடை ஏறினார் அவுரிலியானோ புந்தியா. இவர் என்ன பேசப் போகிறார் என்று எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர். ஓரிருவர் வேண்டா வெறுப்பாக கைத் தட்டினர்.

“Bonjour. நூறு வயசு ஆகப் போகுது. இப்ப திரும்பி பாத்தா நான் என் வாழ்க்கைய இன்னும் சிறப்பா வாழ்ந்திருக்கலாமோனு தோணுது.  எழுத்து எழுத்துன்னு ஓடினேன். நூறு பேரு என்ன வாசிச்ச போது ஆயிரம் பேர் படிக்கணும்னு பாராட்டணும்னு ஆசை. ஆயிரம் பேர் படிச்ச போது லட்சம் பேரு பாராட்டணும்னு ஆசை. ஒரு கட்டத்துல அந்த பாராட்டு தான் எனக்கு பெருசா தெரிஞ்சுச்சு. திமிரும் கர்வமும் ரொம்ப அதிகமாச்சு. பாராட்டுக்காக எழுதினேனே ஒழிய திருப்திக்காக எழுதலா. ரொம்ப லேட்டா தான் புரிஞ்சிச்சு. எழுத்தாளனும் சாதாரண மனுஷன் தான், இந்த புகழ் அங்கீகாரம் எல்லாம் வெறும் மாயைனு. எழுத்தாளர விடுங்க. மத்த மனிஷங்க எப்படி இருக்கீங்க! எப்ப பார்த்தாலும் எதை நோக்கியோ ஓடிகிட்டே இருக்கோம். அங்கீகாரம், பாராட்டு, புகழ், பணம் எதுவுமே பத்தல பத்தலனு நம்மள நாமே ஏமாத்திகிட்டு இருக்கோம்.

“நம்மளோட போலி முகத்த காமிச்சு காமிச்சு நம்ம நிஜ முகமே மறந்து போயிடுது. நான் அதிக நேரம் எடுத்துகுல. உங்க எல்லாருக்கும் ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

“வாழ்க்கைல பொறாமை வேணாம், கர்வம் வேணாம், அன்பா இருங்க. அன்பா இருக்க முடிலனாலும் யாரையும் வெறுக்காம அமைதியா இருங்க. யாரோடும் ஒப்பிட்டு மனச குழப்பிக்காதீங்க. உங்க வேலைய நீங்க செய்ங்க. உங்களுக்கு வர வேண்டிய அங்கீகாரம் தேடி வரும். வரலானும் பரவால. மன திருப்திக்கு இணையான அங்கீகாரம் எதுவுமே இல்ல.

ஆசைப்பட்டது நடந்தா சந்தோசப் படுங்க. நடக்கலானா நல்ல அனுபவம் கிடச்சிதுன்னு இன்னும் அதிகமா சந்தோசப் படுங்க. நம்ம சுற்றமும் நட்பும் நமக்கு எப்பவும் முக்கியம். அவங்களுக்காக விட்டுக் கொடுத்து வாழுங்க. அன்பு நேசத்த விட எதுவும் பெருசு இல்ல. அதை என்னைக்குமே உதாசீனப் படுத்தாதீங்க. Live and let live”

அவுரிலியானோ புந்தியா கையெடுத்து கும்பிட, அனைவரும் பலத்த கர ஒலி எழுப்பினர். அவர் அமைதியாக தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

தன்னை வரவேற்கத் தான் எல்லோரும் கைத்தட்டுகிறார்கள் என்ற பெருமிதத்தோடு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தார் ரகு.

“இப்போது The great critic ரகு அவுரிலியானோ புந்தியாவின் புத்தகம் பற்றி பேசுவார்”

“பீசு பீசா கிழிக்கும் போது இயேசு போல பொறுமை பாரு…”

பாட்ஷா படம் தான் அவர் மனதில் ஓடியது. புத்தகத்தை படிக்கவில்லை என்று சொல்ல முடியாது. திரும்பி போக ஸ்பான்சர் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டால் பிரச்சனை.

சரி சமாளிப்போம் என்று மேடை ஏறினார் ரகு.

தன்னுடைய வழக்கமான நான்கு பக்க டெம்ப்ளேட்டை கையில் எடுத்தார்.

முதலில் தன்னைப் பற்றி பேசினார். அரங்கம் முழுக்க அமைதியாக கேட்டது.

அடுத்து அபுவைப் பற்றி அபுவை சந்தித்ததைப் பற்றி அவரோடு சேர்ந்து உடும்பு கறி உண்டதைப் பற்றி சொன்னார். எல்லோரும் அமைதியாக கேட்டனர். அடுத்து அபுவின் சிறுகதை ஒன்றை ஆராய்ந்து பேசிவிட்டு, இறுதியாக அவுரிலியானோ புந்தியாவின் memoir ஏன் மிகச் சுமாரான புத்தகம் என்று அபுவின் எழுத்தோடு ஒப்பிட்டு பேசினார். கண்ணீல் நீர் வழிய அவுரிலியானோ புந்தியா கேட்டுக் கொண்டிருந்தார். அதை கவனித்த ரகு, அவுரிலியானோ புந்தியா தன்னை அங்கீகரிக்கிறார் என்று முடிவு செய்து தொடர்ந்து பேசினார்.

“அவுரிலியானோ புந்தியாவின் எழுத்தில் செழுமை இல்லை. அதுதான் மிகப் பெரிய சிக்கல். வெறும் செய்தியாக அவருடைய memoir நின்றுவிடுகிறதே ஒழிய உணர்வு ரீதியாக எந்த அதிர்வையும் அது ஏற்படுத்தவில்லை. அவர் இன்னும் நிறைய எழுதி பழக வேண்டும். குறிப்பாக அவர் கொலம்பிய எழுத்தாளர் அபுவை வாசிக்க வேண்டும்…”

அரங்கம் நிசப்தமானது. ஒவ்வொருவரும் அருகில் இருந்தவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர்.

அங்கே நிலவிய அமைதியை கலைக்கும் விதத்தில் ஒரு சிரிப்பு சப்தம் கேட்டது. அதிர்ந்து போய் பார்த்தார் ரகு. முன்வரிசையில் அமர்ந்திருந்த அவுரிலியானோ புந்தியா தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

ரகு  முறைத்தார்.  அபு சிரிப்பை நிறுத்துவதாக இல்லை.

“ஏன் சிரிக்குறீங்க…” ரகு கோபமாக கேட்டார்.

எழுந்து நின்ற அவுரிலியானோ புந்தியா, “உங்க பேர் என்ன?”

கிழவனுக்கு பைத்தியம் என்று எண்ணிய ரகு அமைதியாக இருந்தார்.

“சொல்லுங்க…”

“ரகு..”

“முழு பெயர்?”

“ரஹோத்தமன்…”

புன்னகை செய்த அவுரிலியானோ புந்தியா சொன்னார்,

“படிச்சசேன், விக்கி பீடியால படிச்சேன். ரகுவோட முழு பெயர் ரஹோத்தமன். அதே மாதிரி தான் உங்களுக்கு புடிச்ச அபுவோட முழு பெயர் அவுரிலியானோ புந்தியா”

மீண்டும் வெடித்து சிரித்தார் அபு (எ) அவுரிலியானோ புந்தியா. மொத்த அரங்கமும் கைகொட்டி சிரித்தது. சிலர் எழுந்து நின்று விழுந்து புரண்டு சிரித்தனர்.

அவமானம் தாங்காமல் அங்கிருந்து கிளம்பினார் ரகு. சென்னை வந்ததுமே அவர் தன் தளத்தில் எழுதினர்,

“பிரெஞ்சு அரங்கில், அறிஞர்கள் என் பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டினர்”

ஒரு ஆங்கில நாளிதழ், “Standing Ovation for Indian Literary Critic” என்று ரகுவின் படம் போட்டு கட்டுரை வெளியிட்டது.

***

ரகு போலி தான். அவரைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள  தேவையில்லை. உண்மையில் வாழ்க்கையில் நாம் நிறைய போலிகளை கடந்து வருகிறோம். அவர்கள் யாரைப் பற்றியும் நாம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. அபு அரங்கில் பேசியதை மட்டும் கருத்தில் கொள்வோம். அது தான் நமக்கான புத்தாண்டு செய்தியும் கூட.

“வாழ்க்கைல பொறாமை வேணாம், கர்வம் வேணாம், அன்பா இருங்க. அன்பா இருக்க முடிலனாலும் யாரையும் வெறுக்காம அமைதியா இருங்க. யாரோடும் ஒப்பிட்டு மனச குழப்பிக்காதீங்க. உங்க வேலைய நீங்க செய்ங்க. உங்களுக்கு வர வேண்டிய அங்கீகாரம் தேடி வரும். வரலானும் பரவால. மன திருப்திக்கு இணையான அங்கீகாரம் எதுவுமே இல்ல. ஆசைப்பட்டது நடந்தா சந்தோசப் படுங்க. நடக்கலானா நல்ல அனுபவம் கிடச்சிதுன்னு இன்னும் அதிகமா சந்தோசப் படுங்க. நம்ம சுற்றமும் நட்பும் நமக்கு எப்பவும் முக்கியம். அவங்களுக்காக விட்டுக் கொடுத்து வாழுங்க. அன்பு நேசத்த விட எதுவும் பெருசு இல்ல. அதை என்னைக்குமே உதாசீனப் படுத்தாதீங்க. Live and let live”

Happy New Year Folks.

With love

Aravindh Sachidanandam

கும்பிடுசாமி- நகைச்சுவைக் கதை

‘கும்பிடுசாமி’ என்றதும் ஏதோ ஊர் பக்கம் இருக்கும் காவல் தெய்வம் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர். கும்பிடுசாமி என்பவர் என்னுடைய சித்தப்பா. அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது யாருக்கும் நினைவிலில்லை. எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து அவரை ‘கும்பிடுசாமி’ என்றே அனைவரும் அழைக்கின்றனர். அதற்கு முன்பிருந்தே அவர் கும்பிடுசாமிதானாம்.  நாங்களும் அப்படிதான் அழைப்போம்.

அவரை யாரும் உறவுமுறை சொல்லி, அப்பா என்றோ, மாமா என்றோ, சித்தப்பா என்றோ அழைக்கமாட்டார்கள். அவருடைய மகனே அவரை ‘கும்பிடுசாமி’ என்று தான் அழைப்பான். அவர் எப்போதும் கும்பிட்டுக்கொண்டே இருப்பது தான் அதற்கு காரணம்.

அவர் கை குழந்தையாக இருந்த போதே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடுவாராம். எல்லோரும் அவர் பக்திமான் என்று சிலாகித்து போயிருக்கிறார்கள். அவரை பள்ளியில் சேர்த்த போதுதான் அவர் பக்திமானும்  இல்லை சக்திமானும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. முதலில் வகுப்பறையில் அவர் அவ்வப்போது கும்பிடுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இரண்டாம் வகுப்பு பள்ளித் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர், திடிரென்று பென்சிலை கீழே போட்டுவிட்டு கும்பிடத் தொடங்கி இருக்கிறார். வகுப்பாசிரியர், கூட்டல் கணக்கிற்கு பதில் தெரியாமல் கடவுளை வேண்டுகிறார் என்று அமைதியாக இருந்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கும்பிடுவதைப் பார்த்து அவருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இப்படி கும்பிட்டால் கடவுள் பத்தாம் வகுப்பு கேள்விக்கே பதில் சொல்லியிருப்பாரே, இவன் ஏன் இன்னும் கும்பிடுகிறான் என்று யோசித்தவர் இவரை கும்பிடுவதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.  இவர் கேட்காததால், இரண்டு கைகளையும் விலக்கி விட்டிருக்கிறார். மீண்டும் இவர் கும்பிட்டிருக்கிறார். எத்தனை முறை விலக்கினாலும் இவர் மீண்டும் மீண்டும் கும்பிட்டிருக்கிறார். செய்ததை செய்யும் குரங்குப் பிள்ளை. அவ்வளவுதான் தாத்தாவிற்கு செய்தி  அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.  அதன்பின் தாத்தா அவரை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை.

வீட்டில் வசதி இருந்ததால் அவர் கும்பிட்டு கும்பிட்டு தூங்கி இருக்கிறார்.  கும்பிடுசாமியாகவே இருந்தாலும் திருமணம் செய்துவைக்க வேண்டுமே, திருமணம் என்றால் வேலைக்கு போகவேண்டுமே என்று யோசித்த தாத்தா அவருக்கு ஏற்றார் போல் ஒரு வேலையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.  அது ஒரு துணிக்கடையில் வருபவர்களை வாசலில் நின்று வரவேற்க்கும் வேலை.

நாள் முழுக்க கும்பிட்டுக் கொண்டே இருந்தால் போதும். ஆனால் சில மாதங்கள் மட்டுமே அவரால் அந்த வேலையில் நீடிக்க முடிந்தது. அந்த கடை முதலாளியின் மகன் வெளிநாட்டிலிருந்து கும்பிடும் பொம்மைகளை  இறக்குமதி செய்து கடையின் முன் நிற்க வைத்துவிட்டான். அந்த பொம்மைகள் கும்பிட்டுக் கொண்டே தலையையும் ஆட்டி இருக்கின்றன. கும்பிடுசாமியால் கும்பிட மட்டுமே முடியும். வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று தாத்தா எண்ணியிருக்கிறார்.

கும்பிட்டுக் கொண்டே இருக்கும் அடுத்த வேலை எது? தாத்தா  யோசித்தக் கொண்டிருந்த நேரத்தில் அந்த ஊர் சட்டமன்ற உறுப்பினர் தலையில் தேங்காய் விழுந்து இறந்து போக, ஊருக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. தாத்தாவிற்கு யோசனை பிறந்தது.

“வாக்காள பெருமக்களே…” அந்த சுயேட்ச்சை  வேட்பாளர் பேசிக்கொண்டே போகும் போது, அருகில் கும்பிடுசாமி கும்பிட்டுக் கொண்டே வருவாராம்.  ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் கும்பிடுகிறாரோ அதற்கு ஏற்றார்போல் தினப்படியும் உண்டாம். ஆனால் இவர் கும்பிடுவதை கவனித்த மக்கள் அனைவரும் இவரையே சுற்றி வரத் தொடங்கியிருக்கின்றனர். வேட்பாளருக்கு, எங்கே இவர் அரசியலில் குதித்துவிடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது. கும்பிடுக்கு அந்த வேலையும் போயிற்று.

தாத்தா மருத்துவரிடம் போயிருக்கிறார். ஏதேதோ புரியாத நோய் பெயர் சொல்லி மருத்துவர் நிறைய காசை பிடிங்கிக் கொண்டிருக்கிறார். கும்பிடு சாமியிடம் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை இதெல்லாம் காத்துகருப்பின் வேலையாக இருக்குமோ என்று பயந்த அப்பாயி மாசி பெரிய கருப்புசாமியிடம் போய் முறையிட்டிருக்கிறார். தன் மகனை அண்டிய காத்து ஓட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கிடா வெட்டியிருக்கிறார். ஊரில் ஆடுகளுக்கு  பற்றாக்குறை வந்ததுதான் மிச்சம்.

கல்யாணம் பண்ணிவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சேலத்தில் ஒரு ஜோசியர் சொல்ல, உத்தியோகம் இல்லாமலிருப்பதும் புருஷலட்சணம்தான் என்று அப்பாயி முடிவெடுத்திருக்கிறார்.

ஊரில் யாரும் கும்பிடுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. மேலும் அவரை பலரும் கேலி பேசியிருக்கிறார்கள். அதனால் தாத்தா, குடும்பத்தோடு மெட்ராசிற்கு குடி புகுந்திருக்கிறார். தாம்பரம் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்த போது, கும்பிடு சாமி கும்பிட்டுக் கொண்டே இருப்பது மரியாதைக்காக என்று தவறாக புரிந்துகொண்ட அந்த ஊர் பஞ்சயாத்து தலைவர், இவ்வளவு மரியாதையான மனிதனை தவறவிடக் கூடாது என்று முடிவுசெய்து  தன் கடைசி மகளை கும்பிடு சாமிக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். தாத்தாவிற்கு உள்ளுக்குள் சந்தோசம் என்றாலும், எப்படி மகன் தாலிக் கட்டுவான், அவன் கும்பிட்டுக் கொண்டே இருப்பானே என்று பயந்திருக்கிறார். தன் பையனிடம் இருக்கும் பிரச்சனையை தன் (சம்மந்தி) சமப்பந்தியாகப் போறவரிடம் சொல்லிவிடலாம் என்று யோசித்திருக்கிறார். அப்போது தான் தெரிந்திருக்கிறது, பஞ்சாயத்து தலைவர் பகுத்தறிவு கட்சியை சேர்ந்தவர் என்பது. தாத்தாவிற்கு பெரும் மகிழ்ச்சி. தாலி கட்டவேண்டிய பிரச்சனை இல்லாமல் பகுத்தறிவு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

பஞ்சயாத்து தலைவரின் குடும்பம் மிகப் பெரியது. வசதி படைத்தது. திருமணத்திற்கு பின்பு கும்பிடுசாமி தன் மனைவியை கும்பிட்டுக் கொண்டே இருந்ததைப் பார்த்து அவர்கள் அலமந்து போயிருக்கிறார்கள்.  தாங்கள் அனைவரும் செல்லமாக வளர்த்த பெண்னை வழிப்படும் ஆண்மகன் கிடைத்துவிட்டதாக எண்ணிய பெண்ணின் சகோதரர்கள் தங்களின் பெயரிலிருந்த ஒரு பெரிய துணிக் கடையை கும்பிடு சாமியின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

“இது என்னையா பேரு. கும்பிடுசாமி. இந்த பேருக்கு எப்படி ரிஜிஸ்தர் பண்றது?” சொத்தை பதிவு சைய்யும் போது பதிவாளர் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான் கும்பிடுசாமியின் மச்சான்கள் அனைவரும் அந்த அரசு அதிகாரியை அடிக்கப் போயிருக்கிறார்கள். பயந்த அதிகாரி, கும்பிடுசாமி என்று பெயரிலேயே சொத்தை பதிவு செய்ய அது அன்று முதல் அவரின் சட்டப்பூர்வமான பெயர் ஆனது. மேலும் கும்பிடுசாமிக்கு ஒன்றென்றால் அவருடைய ஐந்து மச்சான்களும் வருவார்கள் என்ற செய்தி ஊரில் வேகமாக பரவியிருக்கிறது. எல்லோரும் கும்பிடுசாமியை ஒரு குட்டி டான் போல பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

“கோன் ஹே ஒ. எனக்கே பாக்கனும்போல இருக்கே…” என்று பம்பாயில் சோட்டாராஜன் சொல்லும் அளவிற்கு கும்பிடு அண்ட் கோ-வின் செல்வாக்கு பரவியிருக்கிறது.

அந்த அதிகாரத்தோடு அவர் வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த வியாபாரமும் செய்யத் தெரியாது என்ற உண்மை தாத்தாவிற்கும் அப்பாயிக்கும் மட்டுமே தெரியும். அதனால் தாத்தா புத்திசாலித்தனமாக கும்பிடுசாமியை கல்லாவிற்கு அருகில் அமரவைத்துவிட்டு, கல்லாவில் கும்பிடுசாமியின் மச்சான் ஒருவரை அமர வைத்துவிட்டார். கும்பிடு சாமி கும்பிடுவதை பார்ப்பதற்காக நிறைய ஜனங்கள் அங்கே வரத் தொடங்க, அவருடைய ஸ்தாபனம் விறுவிறுவென வளர்ந்திருக்கிறது. கும்பிடுசாமி அந்த இடத்தில் அமர்வதுதான் ராசி என்று தாத்தா எல்லோரையும் நம்பவைத்துவிட்டார். பஞ்சாயத்து தலைவர்தான் பகுத்தறிவுவாதி. அவருடைய மகன்கள் எல்லாம் ராசிபலன்(வியா)வாதிகள். டிவியில் ராசிபலன்  பார்த்துவிட்டு குரு இன்று எந்தக் கட்டத்தைப் பார்க்கிறார் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து  வியாபார முதலீடுகள் செய்யக்கூடிய அளவிற்கு ஜோஷிய ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் அவர்களும் கும்பிடுசாமி அங்கே அமர்வதால் தான் வியாபாரம் நடக்கிறது என்று நம்பி அவரை அங்கேயே விட்டுவிட்டனர். கல்லாவிற்கு பக்கத்திலிருக்கும் இருக்கை கும்பிடுசாமியின் நிரந்தர இருக்கையாகிப் போனது இப்படிதான்.

சூரியன் உதித்து மறைய, கும்பிடுசாமிக்குப் பிள்ளைகள் பிறக்க,  மெட்ராஸ் சென்னையாக, தாம்பரத்தை சுற்றியிருந்த கிராமங்கள் அபார்ட்மென்ட்களாக மாறிப்போக, அவரின் வியாபாரமும் பெருக கும்பிடுசாமி (மிகப்)பெரிய மனிதராக உருவெடுக்கத் தொடங்கியிருக்கிறார். கும்பிடுசாமியின் பிள்ளைகள் வளர்ந்து அமெரிக்காவில் வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட கடையில் கும்பிடுசாமி கும்பிடுவதை படமாக்கி சுவற்றில்  மாட்டிவிட்டான் அவருடைய மகன். அந்த படத்தைப் பார்க்கவே பல அமெரிக்கர்கள் வருகிறார்களாம்.

இன்று கும்பிடுசாமிக்கு நிறைய வயசாகிவிட்டது. ‘கும்பிடுசாமி டெக்ஸ்டைல்ஸ்’ உலகம் முழுக்க பரவிவிட்டது. இன்னும் அவர் கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவர் மனைவி இன்று வரை தன் கணவன் தன்னை வழிபடுவதாக நினைத்து வருகிறார். அவர் குடும்பத்தார் அவர் கும்பிடுவதுதான் ராசி என்று நம்பி வருகின்றனர். மக்கள் அவரை தேடி வந்து பார்க்கின்றனர்.  அவரிடம் நிறைய பணம் சேர்ந்துவிட்டது. அவருக்கு திநகரில் பெரிய பங்களா இருக்கிறது. வீட்டில் பல வெளிநாட்டு கார்கள் நிற்கின்றன. எந்த கட்சி அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்வதே அவர்தான் என்று பேசிக் கொள்கிறார்கள். தமிழக அரசியலில் அவருக்கு தெரியாத ரகசியம் எதுவுமில்லை என்பது கூடுதல் தகவல்.

மேலும், கும்பிடுசாமி என்ற பெயரில் ஆதார் அட்டை வைத்திருக்கிறார். அதை தன் மொபைல் நம்பரோடும் வங்கிக் கணக்கோடும் இணைத்துவிட்டார் (அதனால் அவர் சேவைத் துண்டிக்கப் படவில்லை).  அவர் இப்போது வெறும் கும்பிடுசாமி இல்லை. ‘கும்பிடுசாமி அண்ணாச்சி’. ஆனால் அவருடைய உண்மையான பெயர் என்ன என்பதுதான் யாருக்கும் நினைவிலில்லை.

ப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை

ராமசாமிக்கு கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. யாராவது அவர்முன் தற்போது போய் நின்றால் அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. ஒருவேளை கடித்துக்கூட வைத்துவிடலாம். அப்படி என்ன பிரச்சனை!

புதிதாக வீட்டிற்குள் நுழைந்திருக்கும் சுமி தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ராமசாமிதான் அந்த வீட்டில் சீனியர். ராமசாமிக்கு ஒரு மனைவி சித்ரா. சித்ராவுக்கு தெரியாமல் அவர் பல பேருடன் கும்மியடிப்பது வழக்கம். அவர்களுடைய ஒரே மகன் ரெங்கா. இப்போது பெங்களூரில் இருக்கிறான்.

அமெரிக்காவிலிருந்து வந்த சுமி தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துகிறாளோ என்ற எண்ணம் ராமசாமியை வாட்டி வதைக்கத் தொடங்கியது. வீட்டின் கடைக்குட்டி வர்ஷினி தான் சுமிக்கு இடம் கொடுத்து வைத்திருக்கிறாள்.

இந்த வீட்டிற்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத ‘சுமி’ திடிரென்று உள்ளே நுழைந்து (வர்ஷினியை கையில் போட்டுக்கொண்டு) அந்த வீட்டின் முக்கிய கர்த்தாவாக விளங்கிய தன்னுடன் மல்லுக்கட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை.

அவருக்கு பதினொரு வயது இருக்கும்போது ஆறாம் வகுப்பு படித்த லட்சுமணனை கையில் கடித்து வைத்ததைப்போல் இப்போது சுமியை கடித்துவிடலமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார் ராமசாமி.

ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் என்றால் உயிர். அதை எந்த கூச்சமுமின்றி நக்கி நக்கித் தின்பார். கடந்த சில வருடங்களாக தான் கேக் எல்லாம். வர்ஷினி முதன்முதலில் கல்லூரி கல்சுரல்ஸில் முதல் பரிசு வாங்கியதை கொண்டாடும் விதமாக ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் வாங்கி கொடுத்தாள்.  அப்போதுதான் அவர் அதை முதன்முதலில் சுவைத்தார். (அவருக்கு சுமி வயது இருக்கும்போது அவர் சாப்பிட்ட ஒரே இனிப்பு வகை மைசூர்பாக்கு மட்டுமே.) இப்போது அந்த வர்ஷினியே தனக்கு வைட் பாரஸ்ட் கேக் தராமல் போவாள் என்று ராமசாமி எதிர்ப்பர்த்திருக்கவில்லை.

வர்ஷினி தன் குழந்தை சாரலின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகதான்  அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். வரும்போது சுமியையும் அழைத்து வந்து விட்டாள். சாரலின் பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்படும் வரை, வைட் பாரஸ்ட் கேக் வெட்டுவார்கள் என்றே ராமசாமி நினைத்திருந்தார்.  ஆனால் அவர்கள் ப்ளாக் பாரஸ்ட் வாங்கி வந்துவிட்டார்கள்.

“சுமிக்கு ப்ளாக் பாரஸ்ட் தான் புடிக்கும்” வர்ஷினி சப்தமாக யாரிடமோ சொன்னது ராமசாமியின்  காதில் தீயாய் விழுந்தது.

‘சுமி சுமி சுமி. இந்த வர்ஷினிகூட இப்படி மாறிட்டாளே! ஆறாவது படிக்கும் போது டியூஷன் முடிச்சு வீட்டுக்கு தனியா வர பயப்படுவான்னு அரை கிலோமீட்டர் நடந்தே போய் கூட்டிட்டு வருவேனே. எல்லாத்தையும் மறந்துட்டாளே!’ ராமாசாமி நொந்துக் கொண்டார். ஆனால் இப்படி சுணங்கி நிற்பதை விட ஏதாவது செய்து சுமியை இந்த வீட்டிலிருந்து அனுப்பிவிட்டால் மீண்டும் தான் இழந்த பழைய அங்கிகாரத்தை பெற்றுவிடலாம் என்று நினைத்தார். தன் எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். பார்ட்டி அரங்கிலிருந்து கோபமாக வெளியேறினார். ஆனால் அவரை யாரும் சட்டை செய்யவில்லை. இரண்டு நாட்கள் தன் அறையிலேயே காலம் கழித்தார். வேலைக்காரி வந்து உணவை வைத்துவிட்டு சென்றாள். வேறுயாரும் அவரை காண வரவில்லை. ஏன், அவர் மனைவி சித்ராகூட சுமியை ஏற்றுக்கொண்டுவிட்டாள்.

அன்று அவர்கள் அனைவரும் சேர்ந்து தீம் பார்க் சென்றபோது சுமி ஓடிச்சென்று காரின் முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டது ராமசாமிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அன்றிரவு சுமிக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.

இரவு தீம் பார்க்கிலிருந்து தாமதமாக வந்த அனைவரும் களைப்பில் உறங்கிப்போயினர். சுமி ஹாலிலேயே சோபாவில் படுத்துக்கொண்டாள்.

மணி இரவு பன்னிரெண்டு. தூக்கமில்லாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்த ராமசாமி ஹாலிற்கு வந்தார். சுமி அருகே வந்தவர், ஓங்கி சுமியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்துவிட்டு விறுட்டென்று சோபாவின் பக்கவாட்டில் மறைந்துக்கொண்டார்.

பதறியடித்து விழித்த சுமி பயத்துடன் அக்கம்பக்கம் பார்த்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. கன்னத்தை தடவிக்கொண்டே மீண்டும் உறங்கிப்போனாள்.

ராமசாமிக்கு பெருமிதமாக இருந்தது. மறுநாளும் அதே நேரத்தில் அதேபோல் சுமியின் கன்னத்தில் அறைந்தார். பதறிய சுமி எழுந்து வர்ஷினியின் அறைநோக்கி ஓடினாள். அவள் அறை தாளிடப்பட்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.

அவளுக்கு அங்கே தனியாக இருக்க பயமாக இருந்தது. வெளியே வராந்தாவிற்கு வந்தாள். இருட்டாக இருந்தது. கதவருகே ஒளிந்துகொண்டிருந்த ராமசாமி ‘உர்’ ‘உர்’ என்று உறுமினார். அந்த சப்தம் சுமியை மேலும் பயமுறுத்தியது. இரவெல்லாம் தூங்காமல் அறையில் உலாத்தினாள். ராமசாமி நிம்மதியாக படுத்துறங்கினார். மறுநாள் காலையில் ராமசாமி நடு அறைக்கு வந்தபோது அனைவரும் பரபரப்பாக இருப்பதைக் கண்டார்.

சுமிக்கு ஜூரம். அவள் சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அழுதுக் கொண்டிருந்தாள். “அதெல்லாம் சரியாகிடும்” வர்ஷினியின் தந்தை அவளை தேற்றினார். ராமசாமிக்கு எதையோ சாதித்துவிட்ட சந்தோசம், வெளியே ஓடி வந்து ஆனந்தக் கூத்தாடினார்.

சுமிக்கு ஜூரம் அதிகமாகிக் கொண்டே போனது. டாக்டர் வந்து ஊசி போட்டு மருந்து கொடுத்துவிட்டு போனார். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிடித்ததை வாங்கி தந்தால் உடல் நிலை தேறும் என்று யாரோ சொல்ல, சுமிக்கு பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக் வாங்கி வந்து அவள் முன்பு வைத்தார்கள். ஆனால் அவள் கண்களை திறக்கவில்லை. வர்ஷினி சுமி அருகேயே படுத்துக் கொண்டாள். ராமசாமி தன் அறையில் உறங்கிப் போனார்.

திடிரென்று வர்ஷினியின் அழுகுரல் கேட்டது. ராமசாமி வந்து பார்த்தபோது சுமி இறந்திருந்தாள். சில நாள் சோகமாக இருந்த வர்ஷினி திரும்பி ஊருக்கு சென்றுவிட்டாள். அன்றிரவு, இரவில் ராமசாமி தனியாக உறங்கிக் கொண்டிருக்க சுமியின் ஆவி வந்து அவர் கன்னத்தில் ஓங்கி அடித்தது. ராமசாமி திடுக்கிட்டு விழித்தார். வெளியே எட்டிப் பார்த்தார். சுமி சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அவள் அருகே அமர்ந்திருந்தாள்.

ராமசாமி வர்ஷினி அருகே செல்ல, அவள் ராமசாமியை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதாள். ராமசாமிக்கும் கண்கள் கலங்கின. தன் எண்ணம் இவ்வளவு மோசமாக போய்விட்டதை எண்ணி வருந்தினார். சுமியை பார்த்தார். அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகே சென்று, முன்பு தான் அறைந்த அவளின் கன்னத்தை தடவினார். காலையிலிருந்து கண்களை திறக்காமல் இருந்த சுமி, நிதானமாக தன் கண்களை திறந்தாள். ராமசாமி அவளை பாசமாக பார்த்தாள். வர்ஷினிக்கு சந்தோசம். “அப்பா சுமி முழிச்சிட்டா” என்று கத்தினாள். ராமசாமி சுமியின் கன்னத்தை மீண்டும் தடவ, அவள் ராமசாமியை பார்த்து ‘மியாவ்’ என்று பாசமாக கத்தினாள். ராமாசாமியும் தன் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘லொள்’ ‘லொள்’ என்று இரண்டு முறை குறைத்தார்.

லேடி போலீஸ்- நகைச்சுவைக் கதை

அந்த புத்தகத்தை  வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத அந்த புத்தகம் கண்ணிமேரா நூலகத்தில கிடைக்கும் என்கிற நம்பிக்கையில டிரைன் ஏறினேன். நானும் இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். பம்பாய் ரயிலில் எல்லாம் முட்டி மோதி ஏறியிருக்கேன். ஆனால் அங்கெல்லாம் டிரைன் கூட்டமா இருந்தாதான் தொங்கிக்கிட்டு போவாங்க. சென்னையில மட்டும்தான், எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாக்குறேன், ஒரு நாலு பேரு தொங்கிக்கிட்டே பயணம் செய்வானுங்க. உள்ள எவ்வளவு இடம் இருந்தாலும் ஏறமாட்டனுங்க…

இவனுங்கெல்லாம் சமுதாயத்திற்கு ஏதோ சொல்ல வராணுங்க. ஆனால் என்ன சொல்லவராங்க என்பதுதான் என் குறுகிய அறிவுக்கு எட்டமாட்டேங்கிது..

சென்னையில எந்த மேஜர் ஸ்டேஷன்ல எறங்குனாலும், ஆட்டோ டிரைவர்ஸ் சூழ்ந்துபாங்க.

‘அண்ணே ஆட்டோ, சார் ஆட்டோ..’

இந்தியாவிலேயே சவாரி தலையில் மிளகாய் அரைக்கிற ஆட்டோ டிரைவர்ஸ் சென்னையிலதான் இருக்காங்க. அவங்க சவாரி புடிக்க சில ‘psycological methods’ வச்சிருக்காங்க. ஆட்டோ வேணாம்னு சொன்னா,  ‘எனக்கு தெரியும். நீங்கலாம் ஆட்டோல போமாட்டீங்க’னு சொல்லி நக்கலா சிரிப்பாங்க. அப்படியாவது ரோஷம் வந்து ஆட்டோவுல ஏறுறாங்களானு பாப்பாங்க. ஆனா நான் அதுக்கெல்லாம் அலட்டிக் கொல்(ள்)வதில்லை. அதுவும் ஹிந்தியில ‘ஆட்டோ வேணாம்’னு சொன்னீங்கனா ஹிந்திக்காரன்னு நினைச்சிக்கிட்டு மரியாதையா ஒதுங்கிருவாங்க. மீசை தாடியெல்லாம் ஷேவ்பண்ணிட்டு அடிக்கிற கலர்ல டைட்டா டிரஸ் போட்டா இவங்களே இந்திக்காரன்னு முடிவு செஞ்சுபாங்க. மரியாதையும் தர ஆரமிச்சிடுவாங்க.

தமிழ்நாட்டுக்கு வெளிய தமிழனுக்கு மரியாதை தர மாட்டாங்க. ‘மதராசி’னு ஓட்டுவாங்க. குஜராத்ல ஒருத்தன் கிட்ட சும்மா சொன்னேன் ‘நான் மதராசி இல்ல. சௌத் ஆப்ரிக்கன்’ உடனே அவன் மன்னிப்பு கேட்டான். இந்தியாவில அப்படிதான். இந்தியர்கள discriminate பண்ணுவாங்க. ஆனா வெளி நாட்டுக்காரனுங்கள மதிப்பாங்க. அதே மாதிரிதான் தமிழ்நாட்டுலயும். தமிழன மதிக்க மாட்டாங்க. மத்த ஊர் ஆளா இருந்தா ராஜா மரியாதை…

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’

‘Destination’ இல்லாம சுத்துறது எனக்கு ரொம்ப புடிக்கும். நான் ஒரு ‘Bohemian’. ஆனா எங்காவது ஒரு இடத்துக்கு போகணும்னா செம கடுப்பு. அதுவும் எப்படி  போகணும்னு தெரியாம, போய் ஆகவேண்டும் என்கிற கட்டாயதுல போறது பெரிய கடுப்பு.

பீக் ஹவர்ல அட்ரஸ் கேட்டா யாரும் சொல்லமாட்டாங்க. ஒரு டீ கடையில போய் டீ குடிக்கிற சாக்குல அட்ரஸ் கேட்டேன். அவரும் கஷ்டமராச்சேனு, ‘அந்த சிக்னல்ல போய் கேளுங்க’ என்றார்.

நானும் அந்த சிக்னல் வரைக்கும் போனேன். லெப்ட்ல திரும்புறதா ரைட்ல திரும்புறதானு சந்தேகம். சிக்னல்ல ஒரு லேடி போலீஸ் நின்னுக்கிட்டு இருந்தாங்க…

பொதுவா நான்தான் பொண்ணுங்களா உத்து உத்து பார்ப்பேன், பெமினிச ஆராய்ச்சி. ஆனா அந்த லேடி கான்ஸ்டபிள் என்ன உத்து உத்து பார்க்கும் போதே நான் உஷார் ஆயிருக்கணும். அதையும் மீறி நான் அவங்ககிட்ட போய் கேட்டேன், “ம்யூசியம் எப்படி போறது?” (ம்யூசியமும், நூலகமும் ஒரே  இடத்துலதான் இருக்கு. நூலகம்னு கேட்டா பாதி பேரு தெறித்து ஓடுறாங்க)

அவங்க என்னை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னாங்க, ‘இப்டியே நேரா போங்க’

நானும் அந்த பெண்மணி பொய் சொல்லியிருக்க மாட்டாங்க என்கிற நம்பிக்கையில அவங்க சொன்ன வலது புறம் போனேன். அங்க வெறும் மேம்பாலம்தான் இருந்துச்சு. தப்பான வழியோ என்று எனக்கும் ஒரு உள்ளுணர்வு. ‘Raghavan instinct’ மாதிரி.

ரோட்ல போய்ட்டிருந்த ஒரு அண்ணங்கிட்ட வழி கேட்டேன். சென்னையில எல்லாம் அண்ணனுங்கதான். சென்னைக்குனு ஒரு ‘slang’ உண்டு. சின்ன வயசுல பொட்டிக்கடையில போய் ‘டூ ருபீஸ் சேஞ்ச் இருக்கானு’ கேட்டு நான் பல்பு வாங்கியிருக்கேன். அப்பறம் தான் தெரிஞ்சுது, அவங்க கிட்ட லோக்கலா பேசணும்னு..

லோக்கலா கேட்டேன், ‘அண்ணே ம்யூசியம் எங்கிட்டு போறது’

‘என்னப்பா… இங்க வந்துட்ட… அப்டியே சிக்னல்ல இருந்து லெப்ட்ல போயிருக்கலாம்ல…  வந்த வழியே போ’

அப்பதான் புரிஞ்சிது. சாச்சுபுட்டா  பொம்பள போலீஸ். எனக்கு புரியல. அவங்க ஏன் தப்பா வழி சொன்னாங்கனு. ஒரு வேலை நான் அவங்களை கேலி பண்றதா அவங்க நினைச்சிருக்கலாம்… (இல்ல அவங்க வலதுசாரியோ என்னமோ!)

அப்படியே வந்த வழியே போனேன். அங்க ஒரு பிச்சைக்காரர் போயிட்டு இருந்தார். அவர் தாடி, அலங்கோலமான ஆடை செய்கையெல்லாம் பார்த்தா மன நிலை பாதிக்கப் பட்டவர் மாதிரி இருந்தார். காசியா இருந்தா அகோரினு சொல்லலாம். இங்க பைத்தியக்காரர்னுதான் சொல்லணும். அவர் பின்னாடி நான் போகலா. ஆனா என் முன்னாடி அவர் போய்ட்டிருந்தார். அப்டியே அவர தாண்டி போனேன்.

பெமினிஸ்ட்டா இருக்குறதுல ஒரு பிரச்சனை. ஒரு பொண்ணு பொய் சொல்லிருப்பா, தப்பு பண்ணியிருப்பானு மனசு உடனே ஏத்துக்காது. அதனால தான் அந்த லேடி போலீஸ் பொய் சொல்லியிருப்பாங்கணு நம்ப முடியல. அப்படியே திரும்பி இன்னொரு கடையில போய் விசாரிச்சேன், “பெரியவரே.. இந்த ம்யூசியம்…”

இப்ப முடிவாயிடுச்சு. லேடி போலீஸ் பிளான் பண்ணி சாச்சிருக்கா. அதுல என்ன அவங்களுக்கு ஒரு சந்தோசம்னு தெரியல. ‘சாடிஸ்ட்…

அங்க இருந்து நகரும் போது தான் பார்த்தேன். அந்த பிச்சக்காரரும் என் அருகில் நின்றுக் கொண்டிருந்தார். என்ன பார்த்ததும் ரொம்ப கோபமா கத்துனார், “போடா… என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டே வர !”

என்னால சிரிப்ப அடக்க முடியல. உள்ளுக்ககுள்ளேயே  சிரிச்சிக்கிட்டு வேகமா ரோட் க்ராஸ் பண்ணினேன். அந்த பிச்சக்காரர சுத்தி ஒரு கூட்டம் கூடிடுச்சு. அவரோட குரல் சத்தமா என் காதுல விழுந்தது. “அந்த சிவப்பு T-Shirt என்ன ரொம்ப நேரமா ஃபாலோ பண்றான் சார்,” அவர் எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

அதை கேட்டு சிரிச்சிக்கிட்டே நான் சிக்னல கடந்தேன். சிக்னல்ல நின்றுகொண்டிருந்த அந்த லேடி போலீஸ் என்ன பார்த்து சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க….