திருடன் போலிஸ்-ஒரு நிமிடக் கதை

“அவன போடணும்டா. இனி அவன உயிரோட விட்டு வைக்க கூடாது”என்றான் அண்ணன் தன் தம்பியிடம்.

“ஆமா, அண்ணே! போன முறை திருடும்போதே நம்மல புடிச்சுருப்பான்.அவன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள உசுரே போயிருச்சு”இது தம்பி.

அண்ணனுக்கு வயது பன்னிரண்டு . தம்பிக்கு வயது பத்து. ஆனால் இந்த சிறு வயதிலும் அவர்களுக்கு அந்த போலிஸ்காரன் மீது வன்மம் அதிகமாயிருந்தது. அவன் வருகைக்காக சுவர் மறைவில் காத்திருந்து அவன் அருகில் வந்ததும் இருவரும் அந்த சிறு துப்பாக்கியால் சுட்டனர்.அவன் சுருண்டு விழுந்ததும் இருவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர்.

உள்ளிருந்து அவர்களின் தாயின் குரல் கேட்டது,”வீடியோ கேம் விளையாண்டது போதும். போய் படுங்கடா…”:

அட்டு பீசு-ஒரு நிமிடக் கதை

பேருந்திற்காக அந்த நான்கு பெண்களும் காத்துக்கொண்டிருந்த வேலையில் அங்கே வந்து சேர்ந்தான் அந்தக் குறுந்தாடிக்காரன்.

 “கடவுளே! என்ன ஏன் இந்த மாதிரி அட்டு பீசுங்கள பார்க்க வைக்கிற!” என்று அவர்களை கேலி செய்ய தொடங்கினான்.சகித்துக்கொண்டிருப்பதை தவிர அந்த பெண்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.அந்த நேரம் பார்த்து அவர்களை  காப்பாற்றுவதற்க்காகவே  ஆபத்பாண்டவன்போல் அங்கு வந்து சேர்ந்தான் இன்னொருவன்.

 “என்னமா! கலாய்க்கிறானா? டேய்! இதுவே உன் கூடப் பிறந்தவங்களா இருந்தா இப்படி கிண்டல் பண்ணுவியா? “

 “அதான் கூடப் பொறக்கலையே”

 “என்னடா தெனாவட்டா பேசுற……”

 “இன்னும் கேவலமா பேசுவேன். என்னடா பண்ணுவ”என்றபடி கெட்ட வார்த்தையில் திட்ட தொடங்கினான் அந்தக் குறுந்தாடிக்காரன்.

 மிகக் கேவலமான வார்த்தைகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.காது கொடுத்து கேள இயலா வார்த்தைகள்.

“இவன யாரு மத்துசத்துக்கு கூப்பிட்டா?” என்று எண்ணிய அந்தப் பெண்கள், புதியவனை நோக்கி “சார், வேணாம். விட்டுடுங்க” என்றனர்.

 திடீரென ஆபத்பாண்டவனை கீழே தள்ளிவிட்டு ஓடினான் குறுந்தாடிக்காரன்.அவனை துரத்திக் கொண்டே இந்த புதியவனும் ஓடினான். வெகுதூரம் ஓடிக் கலைத்தப்பின் தெருமுனையில் இருவரும் மூச்சிரைக்க நின்றனர்.

 ” டேய் உண்மையாவே அடிக்க வர?” என்றான் குறுந்தாடி.

 “நீ மட்டும் கீழ தள்ளிவிட்டு ஓடல?”

 “ஹீரோ ரோல்னா அப்படிதான். அனுபவி…. சரி சரி. அங்க கூட்டமா சில பொண்ணுங்க நிக்கிறாங்க பாரு. இப்ப நீ வில்லன். போய் கிண்டல் பண்ணு. நான்  பின்னாடியே ஹீரோ  மாதிரி வந்து காப்பாத்துறேன்….”