ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2

The Writer must believe in what he writes - Robert Mckee

***

பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting‘. அந்த புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்று விவாதிப்போம்.

முந்தைய பகுதிகள்:

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1

***

Onion plotting  பற்றி அறிந்தோம். அடுத்து மார்ட்டல் சொல்வது Tennis Plotting என்றொரு உத்தி. டென்னிஸ் விளையாட்டு போல் தான் ஒரு கதையின் நிகழ்வுகளும் என்கிறார் மார்ட்டல்.

ஒரு டென்னிஸ் விளையாட்டில், முதலில் ஒரு வீரர் பந்தை அடித்தால் தான் அது எதிரில் இருக்கும் வீரரை சென்று அடைகிறது. பின் அந்த இரண்டாம் வீரர், பந்தை மீண்டும் முதலாம் வீரரை நோக்கி திருப்பி அடிக்கிறார். இது போல், கதையின் நிகழ்வுகளும் மாறிமாறி நாயகன் வில்லன் ஆகியோரால் நகர்த்தப்பட வேண்டும் என்பதே இந்த உத்தி.

அதாவது முதலில் வில்லன் செய்யும் செயல் ஹீரோவை பாதிக்கிறது. ஹீரோ ஒரு போலிஸ் அதிகாரி. வில்லன் சமூக விரோத செயல்களை செய்கிறான். அதனால் இருவரும் முட்டிக்கொள்கிறார்கள். ஹீரோ, வில்லனுக்கு நெருக்கமான ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்கிறான். அல்லது என்கவுண்டர் செய்துவிடுகிறான். இதனால் கோபப்படும் வில்லன் ஹீரோவின் மனைவியை கொன்றுவிடுகிறான். ஹீரோ, வில்லனை  சட்டத்தின் பிடியில் ஒப்படைத்துவிட்டு போலிஸ் வேலையே வேண்டாமென்று போய் விடுகிறான்.

சிலவருடங்கள் கழித்து வில்லன் வெளியே வருகிறான். அடுத்து என்ன? உடனே நாயகன் கோபம் கொண்டு வில்லனை அழிக்க சென்றுவிடுவானா? அதை அவன் முன்பே  செய்திருக்க வேண்டுமே?  இங்கு தான் டென்னிஸ் பிளாட்டிங் உத்தி பயன்படுகிறது.  வில்லன் நாயகனை தூண்டிவிட வேண்டும்.

அவன் மீண்டும் ஹீரோவின் வழியில் குறுக்கிடுகிறான். அவன் நாயகனின் பிள்ளைகளுக்கு ஆபத்து விளைவிக்கிறான். நாயகனால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அவன் வில்லனை மீண்டும் எதிர்க்கிறான்.

இங்கே எந்த நிகழுவும் அதுவாக நடந்துவிடவில்லை. யாரோ ஒருவர் மற்றவனை நேரடியாகவோ மறைமுகமாவோ தூண்டிவிடுகிறார்கள். ஆக்சன் கதைகளில், நிகழ்வுகள் அதுவாக நடப்பதாக கதை அமைக்க கூடாது என்கிறார் மார்ட்டல். எல்லா நிகழ்வுகளுக்கும் பின்பு இருக்கும் காரணத்தை சொல்லியே ஆக வேண்டும் என்றும் சொல்கிறார்.

Action Screenplay

மேல் சொன்ன உதாரணம் பரிச்சயமான ஒன்றாக தோன்றலாம். அதை விலாவரியாக எழுதியதற்கு காரணம் இருக்கிறது. பரிச்சயமான  கதை ஓட்டத்தை புதியதாக எப்படி மாற்றுவது என்று சொல்ல விரும்பினேன். அதாவது, ஒரு கதையில் சிறு மாற்றங்களை செய்தால் வேறொரு கதை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வில்லன் ஜெயிலை விட்டு வந்து பெரிய அரசியல்வாதியாகிவிட்டான். அல்லது அவன் சாமான்யர்களால் நெருங்க முடியாத இடத்தை அடைந்துவிட்டான். அவனை அழிப்பது எளிதல்ல. இது தெரிந்தும் ஹீரோ போலீசில் மீண்டும் சேர்ந்து போராடி அவனை அழிக்கிறான். இது ஒரு கதை.

அதுவே காலத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட, பக்குவப்பட்ட நாயகன் சட்டத்தை விட தர்மமே பெரிது என்று முடிவெடுத்து, போலீசில் சேராமல், அதே சமயத்தில் தன் முன்னால் போலிஸ் மூளையை கொண்டு வில்லனை எதிர்க்கிறான் என்றால் இது ஒரு கதை. இங்கே நாம் செய்யும் சிறு மாற்றம் முற்றிலும் மாறுபட்ட இரண்டாம் பகுதியை படத்திற்கு கொடுத்துவிடும்.

இங்கே கூடுதலாக இன்னுமொரு மாற்றம் செய்வோம். வில்லன், அரசியல்வாதி இல்லை. நான்கு பணக்கார இளைஞர்கள். அவர்கள் பணத்திமிரில் செய்யும் காரியம் ஹீரோவை பாதிக்கிறது. போலிஸ் நாயகன் தட்டிக் கேட்க, அவன் குடும்பமே அழிகிறது. ஆனால் போலிஸ் நிர்வாகமும் வில்லன்கள் பக்கமே நிற்கிறது.  நாயகன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வில்லன்களை வேட்டை ஆடுகிறான். இப்படி, வில்லன்களை மாற்ற போக நம் கதையே வேறொரு கதையாக மாறிவிடுகிறது. நமக்கு முற்றிலும் மாறுபட்ட Vigilante Action (பழிவாங்கும் ஆக்சன்) படம் கிடைத்துவிடுகிறது.

போன அத்தியாயத்தில் சொன்னது போல் ஹீரோ யாராகவும் இருக்கலாம். ஹீரோ போலிஸ் இல்லை. அவன் ஒரு கல்லூரி பேராசிரியர் (நான் சிகப்பு மனிதன் (1985)) அல்லது அவன் ஒரு architect. (குரோதம்).  இப்போது நமக்கு வேறொரு திரைக்கதை கிடைக்கிறது. நாம் எந்தக் கதை எழுதினாலும், முதலில் நாம் உருவக்கும் ஒன் லைனில் இப்படி ஏதாவது மாற்றம் செய்தால் அது முற்றிலும் புதிய சுவாரஸ்யமான கதையை தந்திடுமா என்று யோசிக்கவேண்டும். அது திரைக்கதைக்கு நிச்சயம் பலம் சேர்க்கும்.

மார்ட்டல் இந்த புத்தகத்தில், ஆக்சன் கதைகள் “Onion Plotting’ அல்லது ‘Tennis Plotting’ ஆகிய  இரண்டு உத்திகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்கிறார். ஆனால் நாம் இப்படி பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன். ஒரு படத்தில் இந்த இரண்டு உத்திகளும் இருப்பது போல் நம்மால் கதை எழுத முடிந்தால் அந்த கதை நிச்சயம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.

உத்தி 1: கதையில் மையத்தை தெரிந்து கொண்டு 
அதைச்சுற்றி நிகழ்வுகளை பின்னுவது. 

உத்தி 2:  ஹீரோவை வில்லன் தூண்டிவிடுவது. 
வில்லனை ஹீரோ தூண்டிவிடுவது. 

நம் ஹீரோவை கண்டுகொண்டோம். வில்லனையும் கண்டுகொண்டோம். விறுவிறுப்பாக இருவரையும் மோத விட முடியும் என்று நம்புகிறோம். ஆனால் இதை எப்படி சாத்தியப் படுத்தப் போகிறோம்?

அதாவது  கேங்க்ஸ்டர் ஹீரோவும், அரசியல்வாதி வில்லனும் மோதப்போகிறார்கள். என்ன நிகழ்வுகள் அவர்களுக்குள் நடக்கப் போகிறது என்பதை தோராயமாக யோசித்துவிட்டோம். அரசியல்வாதியின் ஆளை ஹீரோ கொன்றுவிடுகிறான் அல்லது ஹீரோ தேர்தலில் நிற்க சீட் கேட்கிறான். வில்லன் கொடுக்கமுடியாது என்கிறான். இது போன்ற நிகழ்வுகளை யோசித்து நாம் ஒன்லைனில் குறித்துவைத்துக் கொள்கிறோம்.

இப்போது, இவை அனைத்தும் ஒரு வலுவான கட்டமைப்புக்குள் வந்து அமர வேண்டுமே! ஹீரோவிற்க்கும் வில்லனுக்குமான பிரச்சனை இரண்டாம் பாதியின் பெரும்பகுதி முடிந்த பின்தான் வலு பெறுகிறது என்று வைக்க முடியாது அல்லவா? அதற்கு தான் ‘Structure’ மிக முக்கியமாகிறது. திரைக்கதையில், மிக சரளமாக, பயன்படுத்தப்படும் வார்த்தையும் இதுதான். பலரும் குழப்பிக்கொள்ளும் வார்த்தையும் இதுதான். ஏனென்றால் திரைக்கதை பற்றி பேசினாலே ‘Three act Structure’ என்ற கோட்பாடே முன்னே வந்து நிற்கிறது.

பெரும்பாலும் ‘த்ரீ ஆக்ட் கோட்பாட்டை போதிக்கும் ஹாலிவுட் புத்தகங்கள் எல்லாம் முதல் ஆக்ட் இத்தனைப் பக்கங்கள் வர வேண்டும், இரண்டாம் ஆக்ட் இப்படி இருக்க வேண்டும், அதில் இதெல்லாம் நடக்கவேண்டும் என்று கையில் கோல் வைத்துக்கொண்டு கணக்கு சொல்லித்தரும் வாத்தியாரைப் போல் கடுமையாக நடந்துகொள்கின்றனவோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் மார்ட்டல் அப்படி எதுவும் செய்யவில்லை. அவர் த்ரீ ஆக்ட் என்பது வெறும் கருவியே, அதற்கு அளவிற்கு அதிகமான முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை, அதை அடிப்படையாக மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு எழுத்தாளர் தன் போக்கில் கதையை உருவாக்க வேண்டும் என்கிறார். நாமும் அவரோடு உடன் பட வேண்டிய இடம் இது.

ஹாலிவுட்டை விட்டுவிடுவோம். நம்மூரில் உண்மையிலேயே இந்த Three act கட்டமைப்பில் தான் கதைகள் எழுதப்படுகின்றனவா? இதற்கு ‘ஆம்’,  ‘இல்லை’ என்று இரண்டு பதில்களையும் சொல்லலாம். இங்கே Three act structure உள்ளுணர்வின் அடிப்படையில் மட்டுமே பின்பற்றப்படுகிறது, ஆனால் ஹாலிவுட் போதிக்கும் முறையில் அல்ல. த்ரீ ஆக்ட்டை பிரபலப் படுத்திய சிட் பீல்ட் எல்லாம் நமக்கு அறிமுகம் ஆகும் முன்பே இங்கே நல்லப் படங்கள் வந்திருக்கிறது என்பதே நினைவில் கொண்டோமேயானால் இதை புரிந்து கொள்வதில் நமக்கு எந்த குழப்பமும் இருக்காது.

Three act Structure, என்பது மொத்த திரைக்கதையையும் First act, Second act மற்றும் Third act என மூன்று அங்கங்களாக பிரித்து கட்டமைக்கும் முறை. .இதற்கு மிக எளிமையான விளக்கத்தை மார்ட்டல் தருகிறார்.

Act 1:Introduces the conflict.
Act 2: Is the conflict & escalation of the conflict.
Act 3: Resolves the conflict.

அதாவது முதல் ஆக்ட்டில், ஹீரோவிற்கு பிரச்சனை வருகிறது. இரண்டாவது ஆக்ட்டில் அது வலுபெறுகிறது. மூன்றாவது ஆக்ட்டில் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது. நம் படங்கள் உட்பட, எல்லாப் படங்களிலும் இந்த கட்டமைப்பை கவனிக்கலாம். இதில் எந்த ஆக்ட் எத்தனை பக்கம் வரப்போகிறது என்பதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். முன்பு சொன்னது போல், நம்மூரில் பெரும்பாலும் திரைக்கதைகள் உள்ளுணர்விலேயே எழுதப்படுகின்றன. அப்போது மேலே குறிப்பிட்ட  மூன்று விஷயங்களும் திரைக்கதையில் தானாகவே தங்கள் இடத்தை பிடித்துக்கொள்கின்றன. அது சரியாக, சுவாரஸ்யமாக வந்திருக்கிறதா என்று சரிபார்ப்பதே நம் வேலையாகிறது.

முதல் ஆக்ட்டில், நம் நாயகன் யார், அவன் நோக்கம் என்ன, அவன் சுற்றத்தார் யார் என்பதை நாம் அறிமுகம் செய்கிறோம். அப்படியே வில்லன் யார் என்பதையும் சொல்லிவிடுகிறோம். பின் ஹீரோவும் வில்லனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மோதிக்கொள்ளும் இடத்தில் இரண்டாம் ஆக்ட் பிறக்கிறது.
(ஹீரோவும் வில்லனும் எடுத்த எடுப்பில் நேரடியாக மோதிக்கொள்ளாமல், ஹீரோவிற்கும் வில்லனின் விசுவாசி ஒருவனுக்கும் முதலில் பிரச்சனை வருகிறது என்பது போலும் கதையை அமைக்கலாம்). இறுதியாக பிரச்சனைக்கான தீர்வுக்குள் கதை நுழையும் இடமே மூன்றாம் ஆக்ட்.

முதல்வன் படத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் நாயகன் அறிமுகமாகிறான். அவன் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கு ‘டிவி ரிபோர்ட்டர்’. அம்மா மடியில் தூக்கம், ஞாயிற்று கிழமையானால் புதினா சட்னி, அப்பாவோடு அளவளாவல்- இவ்வளவே அவன் வாழ்க்கை. திடிரென்று ஒரு கலவரத்தை படம் பிடிக்கும் சூழல் உருவாகுகிறது (Inciting Incident). அப்படியே முதலமைச்சரை பேட்டி எடுக்கும் வாய்ப்பு வருகிறது. அங்கு முதலமைச்சரோடு முரண் ஏற்படுகிறது.(Conflict). கதை வளர, முரண் வலுப்பெறுகிறது. இறுதியில் அவன் வில்லனைக் கொல்வதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறான். (Resolution). இந்த அளவில் ‘த்ரீ ஆக்ட்’ பற்றி புரிந்து கொண்டாலே போதும் என்று நினைக்கிறேன். பத்தாவது பக்கத்தில் ஹீரோவிற்கு பிரச்சனை வர வேண்டும், முப்பதாவது பக்கத்தில் first act முடிய வேண்டும் என்றெல்லாம் சொல்லும் ஹாலிவுட் முறைமைகளை பின்பற்றி குழம்ப வேண்டாம்.

ஏனெனில், நாயகனின் அறிமுகம், அவனுடைய வாழ்க்கைப் பற்றிய காட்சிகள் என்று நாம் அமைக்கும் போதே கதையின் முதல் இருபது நிமிடங்கள் தானாகவே கடந்துவிடும். அதனால் எங்கேயும் ‘டைமிங்’ பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம். முழு திரைக்கதையையும் அதன் போக்கில் எழுதிவிட்டு பின்பு அதன் டைமிங் பற்றி சிந்திக்கலாம். சில படங்களில் முதல் பாதியிலேயே,  வில்லன் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுவான். பாண்டியநாடு போன்ற படத்தில் இடைவேளையின் போது தான் வில்லனுக்கும் நாயகனுக்கும் நேரடி பிரச்சனை வரும்.

இரண்டாம் ஆக்ட்டில் பிரச்சனை வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்கிறார் மார்ட்டல். வில்லனுக்கு, நாயகன் யானை காதில் புகுந்த எறும்பு போல் குடைச்சல் கொடுக்கிறான்.  நாயகனை அழித்தே தீர வேண்டும் என்ற நிலை அவனுக்கு உருவாக வேண்டும். நாயகனுக்கும், வில்லனை அழித்தால் தான் அவனும் அவனைச் சார்ந்தோரும் நிம்மதியாக இருக்க முடியும் என்ற நிலை வர வேண்டும். இப்படி அமைத்தால் சிறந்த ஆக்சன் கதையாக நம் கதை உருவெடுக்கும் என்கிறார் மார்ட்டல். இங்கே ஹீரோவும் வில்லனும் மாறிமாறி சீண்டிக்கொள்கிறார்கள் (Tennis Plotting) எனும் போது படத்தின் வேகம் நிச்சயம் கூடும். (உதாரணம். தனி ஒருவன், இரும்புத்திரை)

எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வை நோக்கி கதையை நகர்த்துவதே மூன்றாவது ஆக்ட். இங்கே முடிந்தவரை கதையில் புதிய ‘Sub-plot’ எதையும் புகுத்தாமல் கதையை க்ளைமாக்ஸ் நோக்கி நகர்த்திட வேண்டும் என்று சொல்லும் மார்ட்டல்,  ‘முதல் ஆக்ட்’ பற்றி பேசும் போது, முதல் காட்சி பார்வையாளர்களை கட்டிப்போடும் வகையில் இருக்க வேண்டும் என்கிறார். ஒரு பிரம்மிப்பான தருணத்திலிருந்து கதையை தொடங்க வேண்டும் என்கிறார். ஆனால் எப்போதும் அப்படி இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே! நாம் இங்கே அவரோடு நிச்சயம் முரண்பட்டே ஆக வேண்டும்.

தொடரும்…

The Writer’s Journey- Christopher Vogler – சினிமா புத்தகங்கள்- 4

உலகம் முழுக்க தொன்று தொட்டு சொல்லப்பட்டுவரும் தொன்மங்கள், புராணங்கள், பழங்கதைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றைத் தன்மை இருப்பதாக சொல்கிறார் அறிஞர் ஜோசப் கேம்பல். இதை அவர்  ‘Monomyth’ என்கிறார். எல்லாக் கதைகளும் அடிப்படையில் ஒரு ஹீரோவின் பயணமாக இருப்பதால் தான் அந்த ஒற்றைத் தன்மை வெளிப்படுகிறது என்பது அவரது கூற்று.

‘Hero with thousand faces’ என்ற புத்தகத்தில் அவர் விவரித்திருக்கும் இந்த கூற்று ஒரு முக்கியமான திரைக்கதை உத்தி என்று சொல்கிறார் திரைக்கதையாசிரியர் கிறிஸ்டோபர் வாக்லர். அந்த உத்தியைக் கொண்டு எப்படி கதைகளையும், திரைக்கதைகளையும் கட்டமைத்திட முடியும் என்று அவர் விலாவரியாக விவரிக்கும் புத்தகமே ‘எழுத்தாளர்களின் பயணம்’ (The Writer’s Journey).

கேம்பல் தொன்மங்கள் அனைத்தும் ஹீரோவின் பயணம்தான் என்று சொன்னது போல, வாக்லர் திரைக்கதைகளை ‘ஹீரோவின் பயணமாக’ அணுகுகிறார். அந்த பயணத்தை அவர் வெவ்வேறு கட்டங்களாக வடிவமைக்கிறார். ஒரு ஹீரோ தன்னுடைய பயனத்தில் வெவ்வேறு கட்டங்களை கடக்க வேண்டியிருக்கும். எத்தகைய கதையாக இருந்தாலும், எந்த பயணமாக இருந்தாலும், அதில் பன்னிரண்டு முக்கிய கூறுகள் அல்லது கட்டங்கள் இருப்பதாக வாக்லர் சொல்கிறார்.

மேலும் ஹீரோ தன்னுடைய பயணத்தில் வெவ்வேறு முகமூடிகளை அணிய வேண்டியிருக்கும், அல்லது வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட மனிதர்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த முகமூடிகளையும், குணாதிசியங்களையும் அவர் ‘Archetypes என்கிறார்.

இந்த கட்டங்களையும், குணாதிசியங்களையும் அப்படியே பின்பற்றாமல், ஒரு திரைக்கதையாசிரியர் தன் ஊருக்கேற்ற வகையில் மாறுதல்களை செய்யும் போது நிச்சயம் நல்லத் திரைக்கதைகளை உருவாக்கிட முடியும் என்ற முன்னுரையோடு இந்த புத்தகத்தை தொடங்குகிறார் வாக்லர்.

அவர் சொல்லும் ஹீரோவின் பயணத்தின் முதல் கட்டம் ‘Ordinary world’. சாதாரணமான சலனமற்ற உலகம். படத்தின் Theme-ஐ அடிக்கோடிட்டு காட்டவும், ஹீரோவின் குணநலன்களை சொல்லிடவும் இந்த முதல் கட்டம் பயன்படுகிறது

முதலில் ஹீரோவின் உலகம் எந்த பிரச்சனைகளுமற்ற உலகமாக இருக்கும். புற உலகில் பிரச்சனைகள் நிகழலாம். ஆனால் அது ஹீரோவை பாதித்திருக்காத கட்டம் இது. பின் அவனுக்கு பிரச்சனை வரும்போது, ஹீரோ சாதாரண உலகிலிருந்து அசாதாரணமான, தனக்கு பரிச்சயமில்லாத ஓர் உலகினுள் பயணிக்கத் தொடங்குகிறான். (பெரும்பாலான திரைக்கதை புத்தகங்கள், ஹீரோவிற்கு நேரடியாக பிரச்சனை, First act-யிலேயே வந்துவிடவேண்டும் என்று பேசுகின்றன. இது ஒருவகையான ஹாலிவுட் கட்டமைப்பு. ஆனால் எப்போதும் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. சில படங்களில் ஹீரோவிற்கு பிரச்சனைகள் தொடக்கத்திலேயே வந்துவிடலாம். பாண்டியநாடு போன்ற  படங்களில் படத்தின் ‘Mid Point’-யில் தான் ஹீரோவிற்கு நேரடியாக பிரச்சனை வரும். இவற்றை தீர்மானிக்கும் பொறுப்பை கதையிடம் விட்டுவிட வேண்டும்)

hj-diagram2

  Stages of Journey

திரைக்கதை பயணத்தில் ஹீரோ தான் முன்பு கண்டிராத பிரச்சனைகளை சந்திக்கிறான். ஹீரோவின் ‘அசாதாரண உலகத்திலிருந்து அவனுடைய சாதாரண உலகம் மிகவும் வித்தியாசப்பட்டு இருக்க வேண்டும், இரண்டு உலகங்களுக்கும் ஒரு ‘கான்ட்ரஸ்ட்’ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் வாக்லர்.

இது ஒரு வகையில் ‘கேரக்டர் ஆர்க்’ சார்ந்த விஷயம் எனலாம்.  தொடக்கத்தில் அவனிடம் இருக்கும் குணாதிசியங்கள், அவன் படத்தின் பிற்பகுதியில் ஏற்கப் போகும் குணாதிசியங்களுக்கு நேரெதிராக இருப்பதாக கதையை அமைத்தால், கதையில் ஒரு நல்ல ‘Character transformation’ கிடைக்கும். (அஞ்சாதே படத்தில் இரண்டு நண்பர்களிடமும் தெளிவான transformation-ஐ பார்க்கலாம்)

படத்தின் தொடக்கத்தில் ஹீரோ மிக கோழை ஆக இருக்கிறான் என்றால் அவனுக்கு வரும் பிரச்சனைகள் அவனை வீரனாக மாற்றலாம். அல்லது மிக சுயநலமாக இருப்பவன் இறுதியில் பிறருக்கு உதவி செய்பவனாக மாறலாம். இதை ‘பாசிடிவ் ஆர்க்’ என்கிறார்கள். (இன்னும் பல கேரக்டர் ஆர்குகள் பற்றி பின் விரிவாக பார்க்கலாம்)

மேலும், ஒரு திரைக்கதையில் ஹீரோவிற்கு அகம் சார்ந்த பிரச்சனைகளும், போராட்டங்களும் இருக்க வேண்டும். தன்னுடைய பயணத்தில் அவன் எப்படி அவற்றிலிருந்து மீண்டு புது மனிதனாக உருவாகிறான், படிப்பினை பெறுகிறான் என்பதும் முக்கியம் என்கிறார் வாக்லர். Silence of the lambs படத்தில் நாயகி ஒரு போலிஸ் அதிகாரி. தொடர் கொலைகள் நடக்க, ஒரு போலிசாக அவள் கொலைகாரனைப் பிடிக்க வேண்டும். அதே நேரத்தில் சிறுவயதில் இருந்து அவளை துரத்தும் கசப்பான நினைவுகளிலிருந்து மீண்டு வர வேண்டும்.  படத்தின் இறுதியில் இரண்டுமே சாத்தியமாகிறது.

பொதுவாக திரைக்கதையில், முதலில் ஹீரோவின் சாதாரண உலகம், அவனுடைய குடும்பம், நண்பர்கள் எல்லாம் அறிமுகமான பின் ஹீரோவிற்கு ஏதோ பிரச்சனை வருவதைப் பார்க்கிறோம். அல்லது ஏதோ ஒரு வாய்ப்பு அவனைத் தேடி வருகிறது. உதாரணமாக, டிடெக்ட்டிவ் கதைகளில் துப்பறியும் நிபுணரிடம் வழக்கு வருவது, சாகசக் கதைகளில் புதையலை தேடி போவது, ஹீரோ காதல் உலகில் நுழைவது, ஸ்போர்ட்ஸ் படங்களில் புதிய போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாவது… இது ‘கால் பார் அட்வென்ட்சர்’ (சாகசத்திற்கான அழைப்பு) கட்டம்.

இப்படி ஹீரோ, ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து வெற்றியோடு அல்லது படிப்பினையோடு மீண்டும் தன் உலகிற்கு திரும்புவதே வாக்லர் சொல்லும் பயணக் கோட்பாடு.

இந்த பயணத்தில் நாயகன் பலரை சந்திக்கிறான். சிலர் நண்பர்களாகின்றனர். சிலர் எதிரியாகின்றனர். சிலர் ஹீரோவை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர். அல்லது ஹீரோவே வேறு சிலரைப் போல் மாற வேண்டியிருக்கிறது. இந்த ‘சிலர்’ தான் வாக்லர் சொல்லும் ‘Archetypes’.

archetypes

Archetypes

ஹீரோ தன் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். இங்கே அவனுடைய பயணத்திற்கான உந்துதலை தரும்  பாத்திரத்தை வாக்லர் ”மென்டார் (Mentor)’ என்கிறார். ஹீரோ அந்த கதாப்பத்திரத்தை சந்திக்கும் கட்டம் தான் ‘Meeeting with Mentor’

ஸ்போர்ட்ஸ் படங்கள் என்றால் பயிற்சியாளர் பாத்திரமாக வருபவர் தான் ‘மென்டார்’ . அவர் ஹீரோ பாத்திரத்திற்கு பெரிய உந்து சக்தியாக இருப்பார். பொதுவாக இந்த மென்டார் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இங்கே மென்டார் என்பது ஒரு குணாதிசியம் மட்டும் தான். அது பிரத்யேக பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

வாக்லர், ஒவ்வொரு ‘Archetype’-உம் தனித்தன்மையான குணங்கள் கொண்டிருந்தாலும், கதைக்கேற்ப எந்த பாத்திரமும் எந்த  ‘Archetype’-ஆகவும் மாறலாம் என்கிறார். செல்வராகவன் படங்களில் பெரும்பாலும் காதலி அல்லது தோழி பாத்திரமே ஹீரோவின் மென்டாராகவும் இருக்கும். ஆடுகளம் போன்ற படங்களில் முதலில் ஆசானாக இருக்கும் பாத்திரமே பின் வில்லனாக மாறுகிறது. இங்கே இரண்டு குணாதிசியங்களை ஒரு பாத்திரம் வெளிப்படுத்துகிறது.

மென்டார் ஹீரோவை விட திறைமையாக இருந்து ஹீரோவிற்கு தன் திறமைகளை கற்று தருபவராக இருக்கலாம். அல்லது தான் தோற்று தன் வாழ்கையின் மூலம் ஹீரோவிற்கு ஒரு பாடம் கற்பிப்பவராக இருக்கலாம். உதாரணமாக, மெட்ராஸ் படத்தில், முதலில் அரசியலில் ஈடுபாடு உள்ள நண்பன் பாத்திரம் வருகிறது. ஆனால் நாயகனுக்கு அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை. அரசியல் பிரச்சனைகளில் நண்பன் மாண்டு போக, அவனுடைய பாதை இங்கே நாயகனுக்கு படிப்பினையாக மாறுகிறது. இதை தான் ‘Fallen Mentor’ என்கிறார் வாக்லர்

ஆனால் எல்லா நேரங்களிலும் இந்த ஆசான் பாத்திரம் புறத்தில் தோன்றும் பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் அந்த ஆசான் ஹீரோவின் மன்சாட்சியாகவோ அல்லது அவனின் கடந்த கால அனுபவமாகவோ இருக்கலாம். இது Inner mentor வகையை சேர்ந்தது. Sergio leone-யின் ‘Man with no name’ இந்த வகையைச் சார்ந்ததுதான்.

இந்த கோட்பாடுகளை ஒவ்வொரு படைப்பாளியும் தனக்காக பிரத்யேக பார்வை கொண்டு மாற்றி அமைத்து நல்ல கதைகளை எழுதிட முடியும் என்று சொல்லும் வாக்லர், ஒரு வகையில் இந்த ஹீரோவின் பயணம்  நம்முடைய வாழ்க்கைப் பயணமும் கூட என்கிறார்.

ஒரு ஹீரோ தன் பயணத்தில் கடக்கும் பல கட்டங்களைப் போல், நாமும் வாழ்க்கையில் வெவ்வேறு கட்டங்களை கடக்க வேண்டியிருப்பதால், ஒவ்வொருவரின் பயணமும் ‘Hero’s Journey’ தான்.

உங்களின் பயணத்தை நீங்கள் விரும்பி தொடங்கியிருக்கலாம். அல்லது அந்த பயணம் உங்களை பயணியாக தேர்ந்தெடுத்திருக்கலாம். நீங்கள் பாதையில் தொலைந்து போனதாக உணரும் போது, அடுத்த அடியைப் பற்றிய குழப்பத்தில் இருக்கும் போது, உங்களின் பாதையை நம்புங்கள். பயணத்தை நம்புங்கள். கதையை நம்புங்கள். அந்த கதை உங்களை அதன் பாதையில் இட்டுச் செல்லும்.  பயணம் தன் பாதையை அறியும்.

 Trust the path, Trust the Journey, Trust the Story…’ Christopher Vogler.

Save the Cat- Blake Snyder- சினிமா புத்தகங்கள் 3

திரைக்கதை என்பது ஒழுங்கான ஒரு களம், ஒழுங்கற்று பின் மீண்டும் அந்த ஒழுங்கு நிலைக்கு திரும்புவது எனலாம். இதை தான் Beginning, Middle, end  என்ற மூன்று நிலை கட்டமைப்பின் மூலம் சொல்கிறோம். ஆரம்பம், பின் கதையில் நிகழும் ஒரு திருப்பம் (கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் திருப்பம்). அதனால் நிகழும் போராட்டம். பின் அதற்கானதொரு தீர்வு. இதை பற்றியெல்லாம் பேசும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. நல்ல திரைக்கதை புத்தகங்களை பின்பற்றினால் நல்ல திரைக்கதைகளை உருவாக்கிவிட முடியும் என்று சொல்வதைவிட நல்ல திரைக்கதையை உருவாக்க இதுபோன்ற புத்தகங்கள் வழிகாட்டலாம், வழிகாட்டும்  என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் திரைக்கதை முழுக்க முழுக்க உள்ளுணர்வின் மூலமாக எழுதப் படும் ஒன்று. அந்த பயணத்தில் துணை செய்யும் கருவிகள் தான் இத்தகைய புத்தகங்கள். அந்த வகையில் ப்ளேக் ஸ்னைடரின் ‘Save the Cat’ மிக எளிமையானதொரு புத்தகம்.

உலகில் வெறும் ஏழிலிருந்து பன்னிரண்டு வகையான பிளாட்ஸ் (plot) மட்டுமே இருப்பதாக ஒரு கோட்பாடு உண்டு. அவற்றை வைத்து தான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகையான கதைகளை புனைந்து கொண்டு இருக்கிறோமாம். அதை போல் ப்ளேக் ஸ்னைடர் எல்லாப் படங்களையும் பத்து வகைகளாக பிரிக்கிறார்.

உலகில் எடுக்கப்படும் எல்லாப் படங்களும் பெரும்பாலும் இந்த வகைக்குள் தான் வரும் என்கிறார். இந்த புத்தகத்தில் அவர் முதலில் விளக்குவது அந்த வகைகளைப் பற்றிதான்.

சுருக்காமாக, அவர் சொல்லும் பத்துவகைகள் இவைதான்.

Monster in. the House — வீட்டுக்குள் புகுந்த பூதம். இதை பின்வருமாறு சொல்லலாம். சீராக சென்றுகொண்டிருக்கும் பாத்திரங்களின் வாழ்வில் ஒரு வில்ல சக்தி புகுந்து விடுகிறது. நான்கு பேர் ஒரு இடத்தில் வந்து தங்குகிறார்கள். அங்கே பேய் இருக்கிறது அல்லது மிருகம் இருக்கிறது, என்று சொல்வதும் அமைதியாக சென்று கொண்டிருக்கும் கதாபாத்திரத்தின் வீட்டிற்குள் பேயோ, வில்லனோ, வேற்று கிரக வாசியோ வந்தால் அந்த பாத்திரத்தின் வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதை சொல்லும் வகை இது.

இது போல் அவர் Golden Fleece , Out of the Bottle , Dude with a Problem, Rites Of Passage , Buddy Love ,Whydunit, The Fool Triumphant, institutionalized, superhero என்று மொத்தம் பத்து வகையான திரைக்கதைகளைப் பற்றி சொல்லி, ஒவ்வொன்றிற்கும் ஒரு எடுத்துக்காட்டை சொல்லி விளக்குகிறார். (இதற்காக save the cat goes to movies என்ற தனி புத்தகத்தை எழுதி இருக்கிறார்).

நாம் தமிழில் பார்க்கும் பெரும்பாலான படங்கள் Dude with a Problem  வகையை சேர்ந்தவை. ஒரு காதாபாத்திரம் அவனுக்கு வரும் பிரச்சனையை எப்படி தீர்க்கிறான் என்பதே இந்த வகை திரைக்கதை. இது கமர்சியல் கதைகளுக்கு ஏற்ற வடிவமும் கூட.

துப்பறியும் கதைகளில் யார் குற்றம் செய்தார்கள் என்பதை விட ஏன் குற்றம் செய்தார்கள் என்பதே முக்கியம். இதை தான் ப்ளேக் ஸ்னைடர் Whydunit என்ற வகையின் மூலம்  சொல்கிறார். (துப்பறியும் நாவலோ அல்லது திரைக்கதையோ யார் செய்தார்கள் என்ற தேடலின் ஒரு கட்டத்தில் ஏன் செய்தார்கள் என்ற கேள்விக்கான விடையை நோக்கி கதையை நகர்த்திவிடுவதே கதைக்கு பலம் சேர்க்கும். என்னுடைய தட்பம் தவிர்  நாவல் இந்த genre தான்.)

இது போல் The Fool Triumphant- வகையில் சாதரணனாக முட்டாளாக இருக்கும் நாயகன் எப்படி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுகிறான் என்பதை சொல்லும் படங்களை வரிசைப்படுத்துகிறார். இதுவும் நாம் அதிகம் காணும் கமர்சியலான வகை.

இத்தகைய வகைப்படுத்துதலை விட, Save the cat புத்தகத்தில் சிறந்த அம்சம் ஒன்று உண்டு. அது திரைக்கதையின் sequence-ஐ பதினைந்து பீட்களின் (Beat) மூலம் அமைப்பது. இதற்காக பிரத்யேகமாக beat sheet ஒன்றை உருவாக்கி தந்திருக்கிறார். நிற்க. இங்கே, முன் குறிப்பிட்டதை போல, பீட் சீட் மட்டும் திரைக்கதையை உருவாக்கிவிடும் என்று புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாம் நம்முடைய பாணியில்  ஓன் லைன் அமைத்து திரைக்கதையை உருவாக்கும் போது இந்த பீட் சீட் உறுதுணையாக இருக்கக் கூடும்.

STC_BeatSheetRev3Pg1-2Image courtesy: http://www.savethecat.com

இந்த பீட் சீட்டின் மூலம் இந்தந்த பக்கங்களில் அல்லது இந்த நிமிடத்தில் இதெல்லாம் நடக்க வேண்டுமேண்டும் என்கிறார் ஸ்னைடர். இந்த டைமிங் பற்றி அலட்டிக் கொள்ள தேவையில்லை என்றே நினைக்கிறேன். நாம் எழுதும் போது அந்த டைமிங் எவால்வ் ஆகி விடும். பின் நம் திரைக்கதைக்கு ஏற்றார் போல் அதை ட்யூன் செய்துகொள்ளலாம்.

OPENING IMAGE- கதையின் தொடக்கம் படம் இதைப்பற்றியது என்று சொல்வது போல் அமைந்திருக்க வேண்டும் என்கிறார். பின் நாயகனின் சரசாரி வாழ்க்கையை பற்றி பேசி, அதில் பிரச்சனை வரும் இடத்தை CATALYST என்கிறார். பின் அவனுடைய முயற்சியில் உச்சிக்கு செல்வதோ அல்லது வீழ்வதோ MIDPOINT-ஆக இருக்க வேண்டும் என்கிறார். பின் மீண்டும் பிரச்சனை அதற்க்கான தீர்வு என்று படத்தை முடிக்க வேண்டுமென்கிறார்.

எல்லாப் படங்களும் இந்த பீட் சீட்டிற்குள் கச்சிதமாக பொருந்திவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் Sequence-ஐ வடிவமைக்க அவர் சொல்லும் இந்த பீட்-கள் நல்லதொரு reference points-ஆக இருக்கும். உதாரணமாக, All is lost என்ற பீட் பற்றி பேசும் போது ‘Death moment’  பற்றி சொல்கிறார்.

அதாவது கதை நாயகன்  எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தருணம் அது. மீண்டும் எழ முடியாது என்ற நிலை. அங்கே அவனுக்கு நெருக்கமான ஒருவர் இறப்பதன் மூலம் அந்த சோகத்தை உச்ச நிலைக்கு கொண்டு சென்றுவிட முடியும் என்கிறார் ஸ்னைடர். பின் அதிலிருந்து நாயகன் போராடி மீண்டு வருவது டிரமாட்டிக்காக இருக்கும் என்பதற்காக தான் இந்த உத்தி. இப்படி திரைக்கதையில் இருக்க வேண்டிய சில முக்கிய தருணங்களைபற்றி மிக எளிமையாக விளக்கியிருக்கிறார் ஸ்னைடர்.

இதற்கு பின்பு வெளியான “Save the Cat! Goes to the movies” என்ற புத்தகமும் குறிப்பிடப்பட்ட வேண்டிய ஒன்று. அதில் வெவ்வேறு படங்களை எடுத்து அவை எப்படி பத்து திரைக்கதை genre-களின் உள் வருகிறது என்றும் ஒவ்வொரு வகை கதையிலும் இருக்கும்  15 பீட்கள் பற்றியும் விளக்கி இருப்பார். save the cat புத்தகம் பிடித்தால் ‘Goes to the movies புத்தகம் நல்லதொரு பயிற்சி புத்தகமாக இருக்கும்.

திரைக்கதைப் பற்றி பேசும் இன்னும் சில புத்த்தகங்களைப் பற்றி வரும் நாட்களில் விவாதிக்கலாம்…

 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சொல்லித்தரும் திரைக்கதை

‘அரண்மனை சதி’. வரலாற்றுப் புனைவுகளுக்கு மிக எளிதாக அமையக்கூடிய ப்ளாட் இதுவாக தான் இருக்கமுடியும். பெரும்பாலான புனைவுகள் இதை வைத்துதான் உருவாகி இருக்கின்றன. ஆட்சிக்கு உரித்தான ஒருவர் எங்கோ இருக்க, ஆட்சிக்கு சம்மந்தம் இல்லாத பலரும் சிம்மாசனத்திற்காக தந்திரம் செய்து அடித்துக் கொள்வதுதான் இந்த பிளாட். கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகமும் இந்த வகை தான். ஆனால் இது ஒரு ஃபேண்டஸி கதை. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ராஜ்ஜியத்திற்காக லான்காஸ்டர் மற்றும் யார்க்குகளுக்கிடையே நடந்த யுத்தத்தை தழுவி நிறைய கற்ப்பனையுடன் உருவாக்கப் பட்ட கதை இது.
got21

ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்று பலரும் சண்டையிட்டுக் கொள்வதே கதை. யார் சக்ரவர்த்தி என்று நாம் நம்புகிறோமோ அவர் இறந்துவிடுவார். அப்படி செய்தே அடுத்து யார் வரப் போகிறார், கதை என்ன என்ற க்யூரியாசிட்டியை தூண்டி விடுவார்கள். இந்த க்யூரியாசிட்டியும், கதை முழுக்க இருக்கும் எதிர்பாராத திருப்பங்களும்தான் திரைக்கதையை நகர்த்துகின்றன.

பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி அவர்கள் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த ஒன்றையோ அல்லது எதிர்ப்பார்க்க தவறிய ஒன்றையோ செய்துவிடுவதே இந்த உத்தி. பாட்ஷா படத்தில் மாணிக்கத்தை கட்டி வைத்து அடிக்கப் போவார்கள். அவர் சண்டை போடப் போகிறார் என்று தான் எதிர்ப்பார்போம். ஆனால் செய்ய மாட்டார். அப்படியே விட்டிருந்தால் அங்கே எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்காது. அவருக்காக சண்டையிட அவர் நண்பர்கள் பல திசைகளில் இருந்து வருவார்கள். இது தான் பில்ட் அப். அவர்களை வர வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அடி வாங்குவார். ஏதாவது நடக்காதா என்ற எதிர்ப்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு போய் எதுவும் செய்யாமல் காட்சியை முடித்துவிடுவார்கள். ஆனால் அடுத்து இடைவேளைக்கு முன்பு வரும் காட்சியில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து சண்டை போடுவார். நேரடியாக இந்த காட்சியை வைத்திருந்தால் என்ன பில்ட் அப் இருந்திருக்கும்! அவர் திருப்பி அடிப்பார் என்பது நாம் எதிர்ப்பார்த்த ஒன்று தான். ஆனால் நாம் எதிர்ப்பார்க்காத தருணத்தில் அதை செய்கிறார். ரன் படத்திலும், கில்லி படத்திலும் இதுபோன்ற ஸ்வாரஸ்யமான  ஹீரோயிச காட்சிகளைப் பார்க்கலாம். க்யூரியாசிட்டியை கூட்டி நாம் எதிர்பார்த்ததை எதிர்பார்க்காத சமயத்தில் செய்யும் உத்தி இது.

தமிழில் நாகா இந்திரா சௌந்தர்ராஜன் கூட்டணியில் வந்த சீரியல்களை தரமானதொரு எண்டர்டெயின்மெண்ட் என்று சொல்லலாம். அவர்களின் ‘ருத்ரவீணை’ நாடகம் முழுக்க யார் ருத்ரன் என்பதுதான் கேள்வி, கேம் ஆப் த்ரோன்ஸ் கதையில் யார் சக்கரவர்த்தி என்ற கேள்வியை போல. ஆனால் நாம் யூகித்த யாரையும் ருத்ரனாக்காமல், யூகிக்க தவறிய, கதையில் முக்கியமற்று வந்துப் போகும் ஒரு கதாபாத்திரத்தை ருத்ரனாக்கி கதையை முடிப்பார்கள். அவன் ஏன் ருத்ரன் என்பதற்கு ஒரு ஃபிளாஷ்பேக்கும் இருக்கும். இது எதிர்ப்பார்ப்பைக் கூட்டி எதிர்ப்பார்க்க தவறிய ஒன்றை வைத்து காட்சியையோ கதையையோ முடிக்கும் உத்தி.

இந்த நாடகத்தின் மூல நாவலை பல ஆயிரம் பக்கங்கள் எழுதிய R.R. மார்ட்டின், பாயிண்ட் ஆஃப் வியூ (POV) உத்தி மிக முக்கியமானது என்கிறார். இரண்டாம் உலகப் போரை பற்றி பேச வேண்டுமெனில் ஹிட்லர் பார்வையிலும் கதை நகரவேண்டும், ஜப்பான் பார்வையிலும் கதை நகரவேண்டும், முசோலினியின் கண்ணோட்டத்தையும் காண்பிக்க வேண்டும், அப்போதுதான் கதை முழுமை அடையும் என்கிறார். இந்த நாடகத்தில் லேன்னிஸ்டர், ஸ்டார்க், டைரல், பராத்தியன் என பல வம்சாவெளியை சேர்ந்தவர்களும் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள். இவர்கள் எல்லோரின் கண்ணோட்டதிற்கும் முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்கள் எல்லோரின் மனநிலையும் விவரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

பொதுவாக நாவலில், கதையை நிறுத்தி கதையின் பின்னணியை, களத்தை விவரிக்க நிறைய அவகாசம் உண்டு. நாவலில் திடீரென்று கதையை யார் கண்ணோட்டத்தில் வேண்டுமானாலும் நகர்த்திடலாம்.  ஆனால் நாவலில் வரும் எல்லாவற்றையும் படத்தில் சொல்லிவிட முடியாதே! அதற்கு வாய்ஸ் ஓவர் பயன்படுத்திக்கொள்வது ஒரு உத்தி.

இங்கே அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி நாடகத்தை உதாரணமாக சொல்லலாம். அந்த நாடகத்தில் coven என்ற சீசனில் வாய்ஸ் ஓவர் இல்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கும் கதையில், ஒரு கட்டத்திற்கு மேல் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வாய்ஸ் ஓவர் வைத்து அதன் மனநிலையை விவரித்திருப்பார்கள். பாத்திரங்கள் அனைவரும் சூனியக்காரிகள். அவர்களுள் அடுத்த தலைவி யார் என்ற கேள்வி தான் கதை. அங்கே கதாபாத்திரங்களின் அறிமுகத்தில் வாய்ஸ் ஓவர் தேவைப் படவில்லை. ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் transformation புள்ளியை அடைந்த பிறகு, அவர்கள் தங்களை retrospect செய்யும் விதமாக வாய்ஸ் ஓவர் அமைந்திருக்கும்.

ஆனால் கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையில் வாய்ஸ் ஓவர் பயன்படுத்த தாங்கள் விரும்பவில்லை என்று இந்த நாடகத்தின் திரைக்கதை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். வாய்ஸ் ஓவருக்கு இணையாக கதாப்பாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் இன்னொரு உத்தி ‘வசனம்’ என்கிறார்கள். இங்கே ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் தான் அவர்களின் மனநிலையை வெளிப்படுத்தும். எந்த கதையிலும் மனநிலைக்கு ஏற்பதானே ஒரு பாத்திரம் பேச போகிறது இதில் என்ன ஆச்சர்யம் என்று யோசிக்கலாம். அப்படி இல்லை. இங்கே சொல்வது காட்சிகளை மெருகேற்ற பயன்படும் ஸ்பெஷல் வசனங்கள் பற்றி. ஒரு கதாப்பாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்த வசனத்தில் இருக்கும் வீரியம் அதிகம் பயன்படும். அதனால், கதையை மெருகேற்ற வசனத்தை சேர்க்க முடிந்த இடத்தில் சேர்த்து விடலாம். வசனம் நீளமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் conveying-யாக இருக்கவேண்டும்.

நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு ‘தெரியல’ என்ற ஒரு வார்த்தைதான் அத்தனை வருடம் வாழ்ந்த வேலு நாயக்கரின் மனநிலை. அதுதான் அந்த கதையின், கதாப்பத்திரத்தின் முடிவு. அந்த வசனம் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் ஆர்க் முழுமை அடைய அங்கே சேர்க்கபட்ட அந்த வசனம் பயன்படுகிறது.

இதை தவிர ஒரு பெரிய ‘செட்டிங்’ பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கவும்  வசனம் பயன்படும். இதை exposition அல்லது establishing எனலாம். புதையலை தேடி போகும் ஒரு கதையில் அவர்கள் எதை தேடி போகிறார்கள் எங்கே போகிறார்கள் என்று வாய்ஸ் ஓவரில் சொல்வது ஒரு உத்தி எனில், படத்தில் ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆகும் இரண்டு பாத்திரங்கள் தங்களுக்குள்ளான உரையாடலின் மூலம் அதை விவரிப்பது இன்னொரு உத்தி. இந்த நாடகத்தில் அந்த உத்தி தான் அதிகம். ஆனால் இது பல எபிசோட்கள் கொண்ட நாடகம் என்பதால் அவர்கள் பேசிக்கொள்வது சுவாரஸ்யமற்று தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் ஒரே படத்தில் பாத்திரங்கள் பேசிக் கொண்டே எல்லாவற்றையும் விவரிக்கிறார்கள் என்று வைப்பது சற்று சுவாரஸ்யக் குறைவை ஏற்படுத்தலாம். அதனால் காட்சிகளாக கதை சொல்ல முடிந்த இடத்தில் வசனங்களை திணிப்பதை தவிர்த்துவிடுவதே நல்லது.

வசனம் என்றதும் வசனதிற்க்காகவே பெயர் பெற்ற டைரியன் லேன்னிஸ்டர் பாத்திரத்தை நினைவு கூற வேண்டும். பல முக்கியமான தத்துவங்களை பேசும் குள்ள கதாபாத்திரம் இது. பல இடங்களில் கதையின் போக்கையே மாற்றிடும் பாத்திரமும் இதுதான்.

53169b1aad838ee62d25f83c

இதில் ஏராளமான பாத்திரங்கள் இருந்தாலும் இவர்கள் எல்லோரையும் இவர்களுக்குள் எங்கோ மறைந்திருக்கும் மனிதத்தன்மை தான் இணைக்கிறது என்று R.R. மார்ட்டின் குறிப்பிடுகிறார். ஆம். அந்த மனித தன்மை தான் Theme element. மிக கொடிய கெட்டவர்களுக்குள்ளும் அந்த தன்மை உண்டு. கெட்டவர்களாக இருப்பவர்களும் ராஜ்ஜியம் நிலையாக இருந்தால்தான் மக்கள் நன்றாக வாழ்வார்கள் என்று நம்புகிறார்கள். உண்மையில் இவர்களில் யாரும் ஒரெடியாக கெட்டவர்கள் கிடையாது. இவர்களின் ஒரு முகம் தான் கெட்டதாக இருக்கிறது. மற்றபடி அவர்களுக்குள்ளும் பல தூய்மையான குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதே போல் நல்லவர்களாக வருபவர்களும் சந்தர்ப்பங்களில் பிறருக்கு துரோகம் செய்கின்றனர். எல்லாவற்றையும் இந்த திரைக்கதை விலாவரியாக விவரிக்கிறது. அதற்கான அவகாசம் கதையில் இருக்கிறது. ஆனால் அவகாசம் இல்லாத பட்சத்தில் அவற்றை சுருக்கமாக சொல்லிடலாம். வில்லனை கொடூரமாகவே காண்பிக்கலாம் மற்றதெல்லாம் தேவையில்லை என்று எண்ணுவதை விட, வில்லனுக்கும் சில நல்ல குணங்கள் உண்டு என்று காண்பிப்பது நல்லது. அதே போல் மிக ஸ்ட்ரைட் ஃபார்வார்டாக இருக்கும் ஒரு  போலீஸ் கதாநாயகனும் சில நேரங்களில் தன் பிடியை தளர்த்திக் கொள்ளுகிறான் என்று காட்சிகளை வைக்கலாம். அப்படி கதாபாத்திரங்களை யதார்த்தமாக உருவாக்கும் போது அவர்களுடன் பார்வையாளர்களால் ரிலேட் செய்துக் கொள்ள முடியும். அவர்களை ஏற்றுக் கொள்ள முடியும்.

‘சீ ஆப் லவ்’ படத்தில் சட்டத்திடம் அகப்படாமல் தப்பிக்கும் குற்றவாளிகளை பிடிக்க முடிவு செய்யும் போலீஸ் நாயகன் ஒரு பொய் விழா எற்பாடு செய்து விளம்பரம் கொடுப்பான். விழா உண்மையானது என்று நம்பி வரும் குற்றவாளிகள் அனைவரும் அகபட்டுக் கொள்வார்கள். ஒரே ஒருவன் மட்டும் தன் குழந்தையுடன் வந்திருப்பான். அவனை மட்டும் கதாநாயகன் தப்பிக்க விட்டுவிடுவான். இது படத்தின் ஆர்ம்பத்தில் வரும் காட்சி. இங்கே ஒரே  காட்சியில் நீதியை நிலை நாட்ட நாயகன் எந்த திட்டத்தையும் கையாள்வான் என்பது விளங்கிவிடுகிறது. ஆனாலும் அவன் இறக்க குணம் உள்ளவன் என்பதும் விளங்கிவிடுகிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒரு ஃபேண்டஸி கதை என்பதால் இதன் மேக்கிங் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும். ஆனால் மேக்கிங்கை விடுத்தாலும், இதன் எழுத்தும், செறிவான வசனங்கள் மட்டுமே பிரம்மாண்ட உணர்வை தந்துவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு டைனசர் கதையில் அந்த மிருகத்தை உடனே காண்பிக்க தேவையில்லை. அது எவ்வளவு பெரியது எவ்வளவு கொடூரமானது என்பதை வசனத்தில் சொல்லியே ஸ்வாரஸ்யத்தை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட முடியும். அது போன்ற பல உத்திகள் இந்த நாடகத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பதை கண்டுகொள்ளலாம். ஒருபுறம் ராஜ்ஜியத்திற்காக பலரும் எதிரிகளாக மாறி  அடித்துக் கொண்டாலும், மறுபுறம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ‘வைட் வாக்கர்ஸ்’ வருகிறார்கள், ‘காட்டு வாசிகள்’ வருகிறார்கள் என மிரளுகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் உண்மையில் பயப்படுவது ‘குளிர்க்காலத்தை பார்த்து தான். குளிர் வந்தால் பல ஆண்டுகாலம் அது அந்த பூமியையை புரட்டி போட்டு விடும் என்று பயந்து நடுங்கி வசனம் பேசி, நம்மையும் பயம் கொள்ள செய்கிறார்கள். இந்த வசனத்தில் இருக்கும் விவரணை குளிர் வருவதற்கு முன்பே அந்த குளிர் பயங்கரமானது என்ற உணர்வை நம்முள் விதைக்குறது. கதையில் மீண்டும் மீண்டும் வந்து நம்மை பயமுறுத்தி, கதையின் போக்கை நிர்ணயிக்கும் அந்த ஒற்றை வரி வசனம், ‘Winter is coming’. ­­

winter-is-coming-14903-1680x1050

அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி சொல்லித்தரும் திரைக்கதை

இது ஒரு ஹாரர் ஆந்தாலஜி சீரிஸ். நான்கு சீஸன்கள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள். இதில் நிறைய பேய்கள் வருகின்றன. ஆனால் வழக்கமான பேய் கதைகளில் வருவது போல் காட்சிகள் அமானுஷ்யமாக இருக்காது. பேய்கள் மனிதர்களுக்கு மத்தியில் மனிதர்களைப் போல் நடமாடுகின்றன.

சில எபிசோட்களில் சுவாரஸ்யம் குன்றினாலும், பல இடங்களில் இதன் திரைக்கதை  மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும். நான்கு சீஸனுமே சிங்கிள் செட்டிங் கதைக்களம் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். முதல் சீசன் முழுக்க ஒரு பேய் வீட்டில் நகர்கிறது. இரண்டாவது சீசன் முழுக்க ஒரு மனநல காப்பகத்தில், மூன்றாவது சீசன் சூனியக்காரிகள் பள்ளியில், நான்காவது சீசன் ஒரு மேஜிக் கேம்ப்பில் நகர்கின்றன.

american-horror-story

எந்த சீஸனிலும் இவர்தான் கதாநாயகன் இவர்தான் நாயகி என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் பார்வையில் கதை நகராது. ஏராளமான பாத்திரங்கள் வருகிறார்கள். குழுவாகவே பயணிக்கிறார்கள். கதை நடக்கும் இடம் அந்த பாத்திரங்களின் வாழ்கையில் ஏற்படுத்தும் தாக்கமே திரைக்கதை. இங்கே ஒவ்வொரு சீஸனிலும் இடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அது நிலையானது. கதாபாத்திரங்கள் அந்த இடத்திற்கு வருகிறார்கள். மறைகிறார்கள். இடம், அவர்களை வைத்து விளையாடிக் கொண்டே இருக்கிறது. முதல் சீஸனில் ஒரு பேய் வீட்டில் தம்பதிகள் குடி புகுகிறார்கள். அந்த வீட்டிற்கு குடிவரும் எல்லோரும் அந்தக் வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அந்த வீடு அவர்களை தற்கொலை செய்ய வைக்கிறது. அல்லது கொலை செய்ய வைக்கிறது. அங்கே இருக்கும் பேய்கள் அதை சாத்தியப் படுத்துகின்றன.

இரண்டாவது சீசனில் வரும் மனநல காப்பகத்தினுள் சிக்கிக் கொள்ளும் யாரும் உயிருடன் வெளியே செல்ல முடியாது, அவர்கள் இறுதி வரை குணமாக மாட்டார்கள் அல்லது அங்கேயே மடிவார்கள் என்பதாக கதை அமைந்திருக்கிறது. ஒரு வகையில் இதுவும் பேய் வீடு டெம்ப்ளேட் தான். இந்த டெம்ப்ளேட்டை மூன்றாவது நான்காவது சீஸனிலும் கவனிக்கலாம்.

ஒரே த்ரில்லர் டெம்ப்ளேட்டில் களத்தையும் கதாபாத்திரங்களையும் மாற்றி அமைத்து புதியதொரு திரைக்கதையை உருவாக்குவது எப்படி என்பதை புரிந்து கொள்ள இந்த சீரியல் ஒரு நல்ல உதாரணம். ஒரு நல்லதொரு டெம்ப்ளேட் சிக்கிவிட்டால் அதில் சிறு சிறு மாற்றங்களை செய்தே பல நல்ல திரைக்கதைகளை உருவாக்க முடியும். நாயகனும்; தேவர் மகனும் ஒரே டெம்ப்ளேட் தான். நாயகனில் அப்பா கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். தேவர்மகனில் மகன் கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப் பட்டிருக்கும். ‘யே ஜவானி ஹே தீவானி’ அப்படியே ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ டெம்ப்ளேட்டில் உருவாக்கப்பட்ட படம். ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ படத்தில் பணம் பணம் என ஓடும் நாயகனுக்கு நாயகி வாழ்க்கையின் அழகை புரியவைப்பாள். யே ஜவானியில் படிப்பு படிப்பு என ஓடும் நாயகிக்கு நாயகன் வாழ்க்கையின் அழகை உணர்த்துவான். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும் டெம்ப்ளேட்டில் வரும் நிகழ்வுகளின் நீளத்தை நீட்டியும் குறைத்துமே நிறைய கதைகள் எழுதிவிட முடியும். இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவன் புரட்சி செய்து மாண்டு போகிறான். பின்னர் இன்னொருவன் அவன் வழியில் பயணிக்கிறான். இந்த கதையில், நண்பன் முன்கதையிலேயே படம் தொடங்கி ஐந்தே நிமிடத்தில் மாண்டு விட்டால் அது ஒரு திரைக்கதை. அதே நண்பர்கள் இடைவேளை வரை அன்பாக பழகுகிறார்கள். இடைவேளைக்கு முன் நண்பன் இறந்துவிடுகிறான். இரண்டாம் பாதியில் இன்னொருவன் தன் நண்பனின்  பாதையில் பயணிக்கிறான் என்றால், அது வேறொரு திரைக்கதையாக மாறிவிடும். முன் கதை என்று வைக்காமல், நண்பனின் கதையை ஃபிளாஷ்பேக்கில் வைத்தால் அது முற்றிலும் வேறொருவகை திரைக்கதை. இப்படி சிறு மாற்றங்கள் செய்து ஒரு டெம்ப்ளேட்டை வேறொரு டெம்ப்ளேட்டாக தோன்ற வைக்கலாம்.

மேலும் இந்த சீரியலில் எல்லோருமே ‘க்ரே’ கதாப்பாத்திரங்கள். சுயநலம் கொண்டவர்கள். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் அதிக சுயநலம் கொண்டதாக இருக்கும். அதன் சுயநலம் மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதுதான் திரைக்கதை. ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் பாத்திரங்களின் கெட்ட குணங்களை கூட்டிக் காட்ட மிக தூய்மையான ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டிரும். ஒரு கதையில் எல்லோருமே சுயநலமாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அங்கே ஒரே ஒரு வெகுளியான பாத்திரத்தை, குழந்தை மனம் கொண்ட பாத்திரத்தை உலவவிட்டால், மற்றவர்களின் சுயநலம் பெரிதாக தெரியும். அந்த வெகுளி பாத்திரம் முக்கியமான பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பாத்திரங்களுக்கு இடையே காண்ட்ராஸ்ட் உருவாக்க இந்த உத்தி பயன்படும்.

freakshow

இந்த நாடகத்தில் நிறைய திரில்லிங்கான கிளைக்கதைகள் வருவதால் சஸ்பென்ஸிற்கு பஞ்சமில்லை. பெரும்பாலும் கதைகளில் மூன்று வகையான சஸ்பென்ஸ் சாத்தியம்.  ஒன்று, கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் எல்லா ரகசியங்களையும் திருப்பங்களையும் அறிந்திருப்பார்கள். பார்வையாளர்களுக்கு மட்டும் சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, கொலைகாரன் யார் என்பதை கதையில் வரும் போலீஸ் அதிகாரி அறிந்திருப்பார். ஆனால் பார்வையாளர்களுக்கு அது சொல்லப் பட்டிருக்காது. இரண்டு,  பார்வையாளர்களுக்கு எல்லாம் விளங்கி இருக்கும். ஆனால் கதாபாத்த்திரங்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, ஒரு கதாபாத்திரம் கொலைகாரன் என்று முதலிலேயே பார்வையாளர்களுக்கு விளக்கி இருப்பார்கள். ஆனால் படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கு அவனுடைய உண்மை முகம் தெரிந்திருக்காது. அவர்கள் அவனுடன் சகஜமாக பழகிக் கொண்டிருப்பார்கள். மூன்றாவது உத்தியில், யாருக்குமே எதுவும் தெரிந்திருக்காது. இந்த சீரிஸில் அநேக இடங்களில் இரண்டாவது உத்தியே அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும். பேய்கள் என்றும் அல்லது கொலைகாரர்கள் என்றும் தெரியாமல் கதாபாத்திரங்கள் அவர்களுடன் பழகிக் கொண்டிருப்பார்கள். இதுதான் இங்கே சுவாரஸ்யம்.

எத்தனைக் கிளைக்கதைகளை வைத்தாலும் எல்லா கதைகளையும் ஒரு இடத்தில் முடிக்க வேண்டும். அதை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமாகிறது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குறிக்கோள் இருப்பின், அந்த குறிக்கோள் அல்லது லட்சியம் சாத்தியமாகும் இடத்தில் கதை முடியலாம். நம் படங்கள் பெரும்பாலும் இந்த வகையே. கதாபாத்திரங்களின் குறிக்கோள் நிறைவேற வில்லை அல்லது இனிமேல் நிறைவேற சாத்தியமே இல்லை என்ற புள்ளியிலும் கதை முடியலாம். ‘முகவரி’ போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இதை தவிர, இன்னொரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அதை வைத்து கதையை முடிக்கலாம். ‘மௌனம் பேசியதே’ எடுத்துக்கொள்வோம். கடைசியாக ஒரு பாத்திரம் வந்து நாயகனை ஆரம்பத்திலிருந்தே காதலிப்பதாக சொல்லி கதையை முடித்து வைக்கும். இங்கே கதையை முடித்து வைக்கவே அந்த பாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும். ஆனால், ஒரு கதாபாத்திரத்தை முன்கூட்டியே முன்கதையிலோ அல்லது கதையின் நடுவிலோ, அல்லது கதைக்கு Parallel-ஆகவோ அறிமுகம் செய்துவிட்டு அதை வைத்து இறுதியில் கதையை முடிப்பது இன்னும் சிறப்பான உத்தி. பார்வையாளர்களுக்கு திடீரென்று இந்த பாத்திரம் ஏன் வந்தது எந்த கேள்வி எழாது. இந்த குறிப்பிட்ட உத்தியை இந்த சீரியலில் பல இடங்களில் பார்க்கலாம். இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் வருவது போல, கதையின் பிற்பகுதிக்கு தேவையான விஷயங்களையும் பாத்திரங்களையும் ஒவ்வொரு எபிசோடின் முன் பகுதியில் அறிமுகம் செய்துவிடுவது இந்த நாடகத்தின் மற்றுமொரு சிறப்பு.

 

ஸ்பார்ட்டகஸ் சொல்லித்தரும் திரைக்கதை

ஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். Continue reading

‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) சொல்லித்தரும் திரைக்கதை

“I am an extremely overqualified high school chemistry teacher. I have watched all of my colleagues and friends surpass me in every way imaginable.  My wife is seven months pregnant with a baby we didn’t intend. My fifteen-year old son has cerebral palsy. And within eighteen months, I will be dead…”

பிரேக்கிங் பேட்டில் வரும் இந்த வசனம் தான் அந்த சீரியலின் சாராம்சம். வால்டர் ஒயிட் ஒரு வேதியியல் ஆசிரியர். காலையில் பள்ளியில் வேலை, மாலையில் ஒரு கார் வாஷ் கம்பெனியில் வேலை என அவர் வாழ்க்கை கழிகிறது. திடீரென்று ஒருநாள் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. சில மாதங்களில் இறந்துவிடுவாய் என்று டாக்டர் சொல்ல, இறப்பதற்க்கு முன் குடும்பத்திற்க்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். தன் முன்னாள் மாணவன் ஜெஸ்சி பிங்க்மென் போதை பொருள் வியாபாரத்தில் நிறைய பணம் ஈட்டுவதை கண்டுகொள்கிறார். அவனுடன் இணைந்து, தன் வேதியியல் அறிவை பயன்படுத்தி மிகத் தூய்மையான ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதை பொருளை உருவாக்குகிறார். மார்க்கெட்டில் மவுசு கூடுகிறது. ஆனால் யாருக்குமே அதை யார் உருவாக்குகிறார்கள் என்று தெரியாது. அதனால் அவர்களாகவே வால்டருக்கு ‘ஐசென்பெர்க்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். அவன் ஆபத்தானவன், பயங்கரமானவன் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் ஒயிட் தனக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் பகலில் பள்ளியில் பாடம் நடத்துகிறார். விடுமுறை நாட்களில் யாருக்கும் தெரியாமல் ஐசென்பெர்க் அவதாரம் எடுக்கிறார்.

ஒருபுறம் மற்ற போதை மருந்து வியாபாரிகள் ஐசென்பெர்க்கை கொலை செய்ய தேடுகிறார்கள். இன்னொரு புறம் யார் இந்த புதியவன் என்று போலீஸ் தேடுகிறது. போலீஸ் குழுவின் தலைவனான ஹாங் ஒயிட்டின் மைத்துனன். ஆனால் யாருக்குமே வால்டர் ஒயிட் என்ற சாதாரண ஆசிரியர் மீது சந்தேகம் வரவில்லை. இந்த ஈகோ ஒயிட்டை மேலும் மேலும் தப்பு செய்ய வைக்கிறது. எல்லோரும் தன்னை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்று கருதும் ஒயிட், தன் கர்வத்தை நிலைநாட்ட மென்மேலும் தவறு செய்கிறார். ஏராளமான பணம், ஏராளமான எதிரிகள் என அவர்  வாழ்க்கையே மாறுகிறது.

Breaking-Bad

அறிவாளியான நல்லவானொருவன் காலத்தின் கட்டாயத்தால் தீய பாதையை தேர்ந்தெடுப்பதுதான் கதையின் ஒன்லைன். மிக ஸ்வாரஸ்யமான கமர்ஷியல் ஒன்லைன் இது. மிக ஆபத்தான ஒன்லைனும் கூட. ஏனெனில், ஒரு ஆசிரியர் போதை மருந்து தயார் செய்கிறார், கொலை செய்கிறார் என்று காண்பிப்பது நியாயமா என்ற கேள்வி எழலாம். ஆனால் கதாநாயகனின் அகப்போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கேள்வியை உடைத்து கதையை நகர்த்தி செல்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள். முதலில், தனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் கதாநாயகன் தவறு செய்கிறான். போதிய அளவு பணம்  சம்பாத்தித்துவிட்டு போதைப் பொருள் தொழிலிலிருந்து ஒதுங்கிவிட வேண்டுமென்று  முடிவு செய்கிறான். நிழல் உலகில் அவனுக்கு வரவேற்பு கிடைக்காததால் அவன்  ஈகோ அதிகமாகிறது. அதனால் ஆக்ரோஷமாக தொழில் செய்கிறான். பின் தன்னை  உதாசீன படுத்தும் சமூகத்திடம், தன்னாலும் நிறைய சம்பாத்திக்க முடியும் என்று நிரூபிக்க மென்மேலும் தவறு செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் ஈகோ அவன் அறிவை ஆக்கிரமித்துக்கொள்கிறது. புலி வால் பிடித்த கதையாக நிழல் உலகில் வெகு தூரம் பயணிக்கிறான். எதிரிகள் அதிகமாகிவிடுகிறார்கள். தொடர்ந்து மெத்தம்பெட்டமைன்’ காய்ச்சினால்தால் உயிர்வாழ முடியும் என்ற நிலை உருவாகிறது. அதனால் ஒயிட் கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் தான் ஏற்ப்படுகிறதே ஒழிய, அவன் செய்வது சரியா தவறா என்ற கேள்வி எழவில்லை.

மொத்தம் ஐந்து சீஸன் 62 எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில் பல இயக்குனர்கள் பல திரைக்கதை ஆசிரியர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ப்ரிசன் பிரேக் கட்டுரையில் குறிப்பிட்டது போல், ஆங்கில தொலைக்காட்சி தொடர்கள் திரைக்கதை எழுதும் கலையை புரிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. இது பெரும்பாலும் character driven ஸ்டோரி. கதை முழுக்க வால்டர் ஒயிட் மற்றும் அவரது கூட்டாளி ஜெஸ்ஸி ஆகியோரின் பார்வையிலேயே நகரும். அவர்களுக்குள் நிகழும் அகப்போராட்டத்தை மையப் படுத்தி, அவர்களை சுற்றி உள்ள உலகம் எப்படி மாறிக் கொண்டே வருகிறது என்று கதையை நகர்த்தியிருப்பார்கள். (புளிய மரத்தின் கதையில் ஒரு புளிய மரத்தை வைத்துகிக்கொண்டு அந்த காலகட்டத்தின் மாற்றங்களை சொல்லியிருப்பதைப் போல). அந்த பார்வை எங்கேயும் உடைபடாது. மேலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும், தேவையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனினும் கதை வால்ட்டர் ஒயிட்டை பற்றியதுதான். ஜெஸ்சியின் வாழ்க்கையில் அவர் நுழைந்ததும் அவரது வாழ்க்கையும் ஜெஸ்ஸியின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே திரைக்கதை. இங்கே இந்த பார்வை (Point of view) தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சில இரண்டு நண்பர்களை பற்றிய தமிழ் படங்களில், கதை யாரை பற்றியது என்ற தெளிவு இல்லாமல் படம் நகர்வதை கண்டிருப்போம். ஏனெனில் இரண்டு வெவ்வேறு நபர்களின் உலகங்களையும் காட்சிகளில் திணித்திருப்பார்கள். அப்படி செய்யும் போது Point of view அடிபட்டு போய்விடும். ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் பதியாமல் போய்விடும். அதை எப்படி சரியாக சொல்வது என்பதை இக்கதையில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

Fantastic-Breaking-BAd-Wallpaper

Fly என்ற ஒரு எபிசோடை, ஒரு லேபிற்க்குள் வெறும் இரண்டு நபர்கள், ஒரு பறக்கும் பூச்சியை மட்டும் வைத்தே நகர்த்தியிருப்பார்கள்., பட்ஜெட் அதிகாமாகிவிட்டதால், பட்ஜட்டை குறைக்க ஒரு லேப்பிற்குள்ளேயே முழு எபிசொடையும் உருவாக்கினார்களாம். எப்படி ஸ்வாரஸ்யமாக, மூலக் கதையிலிருந்து பிறழாமல்  சிங்கிள் செட்டிங் சப்ஜெக்ட் எழுதுவது என்பதற்கு இந்த எபிசோட் ஒரு சிறந்த உதாரணம்.

ஒயிட்டின் அகப்போராட்டம் ஒருபுறம் இருக்க, புற உலகிலும் அவர் போராட வேண்டி இருக்கிறது. ஐசென்பெர்க் காய்ச்சும் மெத்தம்பெட்டமைன் மார்க்கெட்டில் அதிகம் விற்ப்பதால், மற்ற போதை பொருள் வியாபாரிகள் அவரை கொல்ல துரத்துகிறார்கள். இங்கே கதை plot driven-ஆக மாறுகிறது. மாஃபியாகளிடமிருந்து தானும் தப்பிக்க வேண்டும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இங்கேயும் அவர் அறிவுதான் அவருக்கு கைகொடுக்கிறது. இது போன்ற external conflicts திரைக்கதையின் வேகத்தை கூட்ட உதவும்.

பிரேக்கிங் பேட்டில் கவனிக்கப் படவேண்டிய இன்னொரு விஷயம் Character Transformation. ஆரம்பத்தில் தன் மனைவியிடம், சூழ்நிலை காரணமாக தவறான பாதையில் பயணித்துவிட்டதாக சொல்லும் கதாநாயகன், இறுதியில் தான் விரும்பியே அந்த பாதையை தேர்ந்தெடுத்ததாக கர்வத்தோடு சொல்கிறான். ஒரு கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்யாமல் தவிர்க்கிறதென்றால், அதற்கான காரணம் என்ன என்று சொல்ல வேண்டும். ஒரு செயலை செய்கிறதென்றால் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். முன் செய்ய மறுத்த விஷயத்தை இப்போது செய்கிறது என்றால் அதையும் விளக்க வேண்டும். இங்கே ஒயிட் கதாபாத்திரத்தின் மாற்றத்திற்க்கான காரணத்தை விளக்கி இருப்பதுதான் திரைக்கதையின் பலம்.

goodwp.com_30264

மேக்கிங்கிலும் தனித்துவமான சீரியல் இது. காட்சிகள் முழுக்க ஏராளமான குறியீடுகள் உண்டு. கதாபாத்திரங்களின் குணங்களையும் transformation-ஐயும் குறிக்கும் வகையில் வண்ணங்களை பயன்படுத்தி இருப்பார்கள். தஸ்தாவெஸ்கி, காஃப்கா என பலரின் தத்துவங்களை தொட்டுவிட்டு வரும் இந்த சீரியல், தூக்கத்தைப் பிடிங்கிக்கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆங்கில சீரியல்களில் மிகவும் முக்கியமானது.