ஊரிலிருந்து ஒதுங்கி, மலைகளுக்கு இடையே ‘ஹில் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் அந்த பெரிய வீடு இருக்கிறது. அது பசித்து இருக்கிறது. அங்கே தங்க வருபவர்களை தனதாக்கிக் கொள்வதன் மூலம் அது தன் பசியைத் தீர்த்துக் கொள்கிறது. இது தான் ஷிர்லி ஜாக்சனின் The Haunting of Hill House நாவலின் கரு. இந்த கருவை மிக அழகாக மைக் ப்ளானகன் நாடகமாக (Web/TV Series) மறு உருவாக்கம் செய்திருக்கிறார். மறு உருவாக்கம் என்ற வார்த்தை தான் சரியாக இருக்கும். ஏனெனில் நாவலிலிருந்து நாடகம் பெருமளவில் மாறுபட்டு இருக்கிறது.

நாவலின் கதைச்சுருக்கம் இதுதான். பேராசிரியர் ஜான் மாண்டேக் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர். அதன் பின்னிருக்கும் அறிவியலை கண்டுகொள்ள முயல்பவர். பல ஆண்டுகளாக பல அமானுஷ்ய மர்மங்கள் விரவிக் கிடக்கும் ‘ஹில் ஹவுஸ்’ வீட்டில் சில நாள் வாடகைக்கு தங்கி அங்கே இருக்கும் அமானுஷ்யங்களை கண்டு கொள்ள முடிவுசெய்கிறார். தனக்கு உதவியாளராக மூன்று பேரை தேர்வு செய்கிறார். முதலாவதாக நெல்லி (எ) எலியனோர் வான்ஸ் வருகிறாள். இரண்டாவதாக தியோ வருகிறாள். இவர்கள் இரண்டு பேருமே ‘சைக்கிக்’ சக்தி கொண்டவர்கள். மூன்றாவதாக அந்த வீட்டு உரிமையாளர் பெண்மணியின் சகோதரி மகனான லூக் வருகிறான். அனைவரும் அந்த வீட்டில் தங்குகின்றனர். அவர்களுக்கு அங்கே பல விசித்திர அனுபவங்கள் நிகழ்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக நெல்லி அந்த வீட்டினால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுயத்தை இழக்கிறாள்.
இருநூறு பக்கம் கொண்ட இந்த நாவலில், கதை ஒரு வாரத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் நடக்கிறது. வீட்டை சுற்றிப் பார்ப்பது, இரவு அமர்ந்து உரையாடுவது, மது அருந்துவது என அத்தியாயங்கள் கழிகின்றன. திடீர் திடிரென்று சில அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. கதவுகள் தன்னால் மூடிக் கொள்கின்ற்ன. யாரோ அறைக் கதவை பலமாக தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். வீட்டினுள் ஏதோ ஒரு மிருகம் ஓடுகிறது. அறைக்குள் ரத்த துளிகள் சிதறிக் கிடக்கின்றன. இது போல, வழக்கமான ஹாரர் கதைகளுக்கே உரித்தான காட்சிகளும் வர்ணனைகளும் இந்த நாவலில் நிறைய வருகின்றன. (நாவல் வெளியான ஆண்டு 1959 என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்). எனினும் ஷெர்லி ஜாக்சன் கதையை நகர்த்திக் கொண்டு செல்லும் விதமும், கதாப்பாத்திரங்களிடம் இருக்கும் யதார்த்தமும், ஆங்காங்கே வெளிப்படும் மனோதத்துவ கோணமும் இதை தனித்துவமான நாவலாக மாற்றுகிறது.
நாவலில், கதாப்பாத்திரங்களின் அறிமுக காட்சிகள் தவிர ஒட்டுமொத்த கதையும் ஒரே வீட்டினுள் தான் நடக்கிறது. பேராசியர், அவர் உடனிருக்கும் மூன்று பேர், மற்றும் அந்த வீட்டின் வேலைக்கார பெண்மணி என மொத்தம் ஐந்து பேர் தான் கதை முழுக்க வருகின்றனர். கதையின் இறுதியில் பேராசிரியரின் மனைவியும், அவளின் உதவியாளரும் வந்து சேர்கின்றனர். அவர்கள் ஆவிகளோடு உரையாடக் கூடியவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். பின் எதிர்ப்பாராத திருப்பங்களோடு நாவல் முடிகிறது. ஆனால் நாடகத்தில், ஆவிகளோடு உரையாடுதல், பேய் ஓட்டுதல் போன்ற வழக்கமான பேய் பட சம்பிரதாயங்கள் இல்லை.
ஒரு அமானுஷ்ய வீட்டில் சிக்கிக் கொள்ளும் சிலர் என்ற ஒற்றை வரி திரைப்படத்திற்கு வேண்டுமானால் பொருத்தமான ஒன்லைனாக இருக்கலாம். இதை அப்படியே படமாக்கி இருந்தால் இது ஒரு ‘சிங்கிள் செட்டிங்’ கதையாக மட்டுமே உருவாகும். ஆனால் தொடராக எடுக்க அந்த ஒன்லைன் போதாது அல்லவா! எனவே தான் திரைக்கதையாசிரியர்கள் புத்திசாலித்தனமாக கதையை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
முதல் முக்கிய மாற்றத்தை கதாப்பாத்திரங்களிடம் செய்திருக்கிறார்கள். நாவலில் பேராசிரியரின் உதவியாளர்களாக வரும் மூன்று பேரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு இல்லாதவர்கள். ஆனால் நாடகத்தில் அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் (சகோதர சகோதரிகள்) என்று மாற்றி இருக்கிறார்கள். அவர்கள் சகோதர சகோதரிகளாக இருப்பதால் அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கின்றனர், அதனால் நேரடியாக கதைக்குள் நுழைந்து விட முடிந்தது, கதையை இழுக்க வேண்டும் என்பதற்காக பாத்திரங்களுக்கு அறிமுக காட்சிகள் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று சொல்கிறார் மைக் ப்ளானகன்.
அடுத்த முக்கிய மாற்றம் கதை நிகழும் காலகட்டத்தில் செய்யப் பட்டிருக்கிறது. நாடகம் அன்று, இன்று என இரண்டு பகுதிகளாக எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதி, அந்த பெரிய வீட்டில் நடக்கிறது. அடுத்த பகுதி, இருபத்தியாரு வருடங்கள் கழித்து அந்த கதாப்பாத்திரங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி பேசுகிறது. (இந்த இரண்டாம் பகுதி நாவலில் இல்லை. ஆனால் நாடகத்தில் இந்த இரண்டாம் பகுதி தான் அதிகம் வருகிறது) இப்படி இரண்டு கால கட்டத்தை எடுத்துக் கொண்டு விட்டபடியால், கதையில் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதனாலேயே நாவல் அழகாக நாடக வடிவம் பெற்றுவிட்டது. நாடகத்தின் கதைச்சுருக்கத்தைப் பார்ப்போம்.
கட்டட வடிவமைப்பாளர்களான ஹூக் க்ரைன் மற்றும் ஒலிவியா க்ரைன் தம்பதிகள் தங்களின் ஐந்து குழந்தைகளுடன் ஒரு கோடைகால விடுமுறையில் ஹில் ஹவுஸ் வீட்டிற்குள் குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் தேவையான மராமத்து வேலைகள் செய்து புதுமைப்படுத்தி, அதை விற்றுவிட்டு தங்களின் கனவு இல்லத்தை கட்டவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். ஆனால் அந்த வீடு ஒலிவியாவை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது. நாவலில் நெல்லிக்கு நிகழ்ந்தது, நாடகத்தில் ஒலிவியாவிற்கு நிகழ்கிறது. மேலும் குழந்தைகளில் சிலரும் அவ்வப்போது சில அமானுஷ்யங்களை உணர்கிறார்கள். பின் பல ஆண்டுகள் கழித்து, அந்த வீட்டை விட்டு விலகிய பின்னும் பிள்ளைகளின் வாழ்க்கையில் அந்த வீடு எத்தகைய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது, அந்த வீடு ஏற்படுத்திய இழப்பு அவர்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பதை நாடகம் பேசுகிறது.
ஒலிவியாவின் பிள்ளைகளில் மூத்தவன் ஸ்டீவன க்ரைன். அவனுக்கு ஹில் ஹவுஸ் வீட்டில் நிகழும் எந்த அமானுஷ்யமும் தெரியவில்லை. எனினும் அவன் பின்னாளில் ஒரு ஹாரர் எழுத்தாளராக உருவாகிறான். ஹில் ஹவுசில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களை நாவலாக எழுதி நிறைய சம்பாதிக்கிறான். ஆனாலும் அவனுக்கு அமானுஷ்ய விஷயங்களில் நம்பிக்கை இல்லை என்பது சுவாரஸ்யமான முரண். அவன், நாவலில் வரும் பேராசிரியர் ஜான் மாண்டேக் கதாப்பாத்திரத்தை ஒத்திருக்கிறான். இரண்டவாது மற்றும் மூன்றாவது குழந்தையாக ஷெர்லி மற்றும் தியோ வருகிறார்கள்.

ஷெர்லி கதாப்பாத்திரம் நாவலில் இல்லை. ஆனால் நாடகத்தில் அவள் முக்கிய பாத்திரமாக வருகிறாள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் இல்லத்தை நடத்தி வருகிறாள். அவள் அந்த வேலையை செய்வதற்கு ஒரு எமோஷனல் காரணமும் நாடகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த நாடகத்தின் பெரும் பலமே இத்தகைய ‘எமோஷன்ல்’ விஷயங்கள் தான்.
ஹாரர் கதை என்றதும் திடீரென்னு கேமரா முன்னே பேய் வந்து நிற்பது, கதாப்பாத்திரங்களுக்கு தெரியாமல் பின்னே இருளில் பேய் ஓடுவது போன்ற வழக்கமான ஹாரர் காட்சிகளின் மீது நம்பிக்கை வைக்காமல் கதாப்பாத்திரங்களின் மனப் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த திரைக்கதையை எழுதி இருக்கிறாரகள். எந்த வகையான கதையாக இருந்தாலும் அதில் எமோஷனும், பாத்திரங்களிடம் எமோஷனல் கான்ப்ளிக்ட்டும் இருக்கும்போது அந்த கதை பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக போய் நிற்கும். (இதை பற்றி முந்தைய திரைக்கதை கட்டுரைகளில் நாம் விரிவாக பேசியிருக்கிறோம்.) இந்த நாடகத்தில் எல்லா பிரதான பாத்திரங்களிடமும் அத்தகைய எமோஷனல் கான்ப்ளிக்ட் இருப்பதே திரைக்கதையின் சிறப்பு.
நாவலில் வருவது போலவே, நாடகத்திலும் தியோ சைக்கிக் சக்தி கொண்டவளாக திகழ்கிறாள். அவள் யார் மீதாவது கை வைத்தால் அவர்களின் கடந்தகாலமும் எதிர்காலமும் அவள் கண்முன்னே காட்சிகளாக ஓடத் தொடங்கிவிடும். அது அவளுக்கு ஒரு பிரச்சனையாகவே உருவெடுக்கிறது. அதனாலே அவள் கையில் எப்போதும் கையுறை அணிந்து தன் பிரச்சனையை சமாளித்து வருகிறாள். நாவலில், அவள் ஓர்பால் ஈர்ப்பு கொண்டவள் என்பதை ஷெர்லி ஜாக்சன் குறிப்பால் மட்டுமே சொல்லியிருப்பார். ஆனால் மைக் ப்ளானகன் அதை வெளிப்படையாக சித்தரித்து, தியோ பாத்திரத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்திருக்கிறார்.
நான்காவது ஐந்தாவது பிள்ளைகளாக லூக் மற்றும் நெல்லி ஆகியோர் வருகின்றனர். அவர்கள் இரட்டையர்கள். அவர்கள் தான் ஐவரில், முதன் முதலில் அந்த வீட்டில் அமானுஷ்யத்தை உணர்கிறார்கள். பேய் உருவங்களை காண்கிறார்கள். அந்த உருவங்கள் அவர்கள் வளர்ந்த பின்பும் துரத்திக் கொண்டே வருகிறது. அவர்கள் இருபத்தியாரு வருடங்கள் கழித்தும் பயத்திலேயே வாழ்கிறார்கள். நெல்லி சரியாக தூங்க முடியாமல் அவதி படுகிறாள். லூக் போதை மருந்திற்கு அடிமையாகிறான். இந்த யதார்த்த சித்தரிப்பு தான் திரைக்கதைக்கு அதிக சுவாரஸ்யத்தையும் நம்பகதன்மையையும் கொடுக்கிறது.
பெரும்பாலும் பேய் படங்களின் கதை, ஒரு குடும்பம் அமானுஷ்ய சக்திகளால் பாதிப்பிற்கு உள்ளாவதையும் அந்த சக்திகளிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பற்றி மட்டும் தான் பேசும். ஆனால் அத்தகைய படம் முடிந்ததும் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை பற்றியே பேச விரும்பியதாக மைக் ப்ளானகன் குறிப்பிடுகிறார். The Haunting of Hill House is a series about life after a haunting என்கிறார் அவர்.
ஹில் ஹவுஸ் வீட்டை விட்டு அவர்கள் வெகு தூரம் வந்துவிட்டார்கள். ஆனால் அது தந்த கசப்பான நினைவுகள் அவர்களின் வாழ்க்கையை மேலும் கசாப்பாக்கிக் கொண்டே போவதாக நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. இது ஒரு கேரக்டர் ட்ரிவன் நாடகம். சகோதர சகோதரிகள் ஐவரில் ஒவ்வொருவரின் கதையை சொல்வதற்கும் ஒரு எபிசோடை ஒதுக்கி இருப்பார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையிலும் அந்த அமானுஷ்ய வீடு எத்தகைய மனக் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்வதன் மூலமே இந்த கதை முன்னோக்கி நகர்கிறது. பேய், அமானுஷ்யம் போன்ற விஷயங்கள் எல்லாம் இலை மறைக்காயாக தான் வருகிறது. இதில் இருக்கும் ஹாரர் விஷயங்களை நீக்கிவிட்டால் இது ஒரு முழு நீள குடும்ப கதையாக தோன்றுமளவிற்கு இதில் உறவுகள், உறவுகளுக்குள் எழும் முரண்கள், மனசிக்கல்கள் போன்றவற்றைப் பற்றி விலாவரியாக பேசி இருக்கிறார்கள். இது ஒரு படைப்பாளியாக மைக் ப்ளானகனின் தனித்துவமும் கூட. பெரும்பாலும் அவர் உருவாக்கும் எல்லா ஹாரர் படங்களிலுமே மனித எமோஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறார். ஹஷ், ஜெரால்ட்ஸ் கேம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். நாவலின் கதாப்பாத்திரங்களிடம் மாற்றத்தை செய்வதும், அதில் எமோஷனை சேர்ப்பதும் அந்த திரைக்கதைக்கு எத்தகைய அடர்த்தியை கொடுக்கிறது என்பதை இந்த நாடகத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் நாவலின் உயிரோட்டமான தருணங்களை எப்படி திரைக்கதைக்குள் கொண்டு வருவது என்பது தான். இந்த நாடகத்தில் உதாரணமாக ஒரு தருணத்தை சொல்லலாம். நாவலில் நெல்லி கதாப்பாத்திரம் ஹில் ஹவுஸை அடைவதற்காக பல மைல்கள் பயணப்படுகிறாள். அப்போது ஒரு காபி விடுதியில் காபி பருகுகிறாள். அங்கே ஒரு பெற்றோர் தன் மகளுக்கு கோப்பையில் பாலை கொடுத்து பருகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த சிறுமி மறுக்கிறாள். தான் வழக்கமாக பால் பருகும் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட கோப்பையில் கொடுத்தால் தான் பருகுவேன் என்கிறாள். இதை நெல்லி கவனித்துக் கொண்டே இருக்கிறாள். இன்று ஒரு நாள் மட்டும் இதில் பால் குடி என்று அந்த தாய் தன் மகளிடம் கெஞ்சுகிறாள். வேண்டாம், அவர்கள் சொல்வதை கேட்காதே. அவர்கள் சொல்வதற்கு அடிபணிந்துவிட்டால் நீ உன் வாழ்நாளில் நட்சத்திர கோப்பையை மீண்டும் பார்க்கவே முடியாது. உன்னையும் மற்றவர்களை போல் சாதாரண விஷயங்களுக்கு பழக்கி விடுவார்கள். உனக்கான நட்சத்திர கோப்பையை அடம்பிடித்து பெற்றுக் கொள் என்று நெல்லி அந்த சிறுமியிடம் மானசீகமாக சொல்கிறாள். ஒரு கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் தருணம் இது. நாவலில் இதே தருணம் வேறொரு இடத்தில் வருகிறது. நெல்லி சிறுமியாக ஹில் ஹவுஸ் வீட்டில் இருக்கும் போது அந்த வீட்டின் பழைய பொருட்களை ஆராய்கிறாள். அப்போது அவளுக்கு ஒரு நட்சத்திர கோப்பை கிடைக்கிறது. அந்த வீட்டின் வேலைக்கார பெண்மணி உனக்கான நட்சத்திர கோப்பையை அடம்பிடித்து பெற்றுக் கொள் என்று நெல்லியிடம் சொல்கிறாள்.

அதே போல் நாவலில், நெல்லியின் சைக்கிக் சக்தியை குறிக்கும் விவரணை ஒன்று வருகிறது. நெல்லி பன்னிரண்டு வயது இருக்கும்போது அவள் தந்தை இறந்துவிட, அவள் வீட்டை சுற்றி தொடர்ந்து மூன்று நாட்கள் கல் மழை பொழிகிறது. நெல்லியே அதை மறந்திருப்பினும், இத்தகைய விசித்திர விஷயம் அவளுடைய அமானுஷ்ய சக்தியின் மூலம் தான் நிகழ்ந்தது என்று பேராசிரியர் நம்புகிறார். அதனால் தான் அவளை தன்னுடைய ஹில் ஹவுஸ் ஆய்விற்கு சேர்த்துக் கொள்கிறார். நாவலில் இது நாவலாசிரியரின் விவரணையில் ஒரு பத்தியாக மட்டுமே வருகிறது. ஆனால் நாடகத்தில் இந்த சக்தி நெல்லியின் தாய் ஒலிவியாவிடம் இருப்பதாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அவள் ஒரு மழை இரவில் ஹில் ஹவுசின் வேலைக்காரியிடம் தன்னுடைய சிறுவயதில் கல் மழை பொழிந்தது என்று சொல்கிறாள். இந்த காட்சி தான், இந்த நாடகத்திற்கு ஒரு வகையான மனோதத்துவ கோணத்தை கொடுக்கிறது. ஒலிவியாவிற்கு அந்த ஹில் ஹவுஸிற்கு வருவதற்கு முன்பிருந்தே உளவியல் சிக்கல் இருக்கிறது, அதை அந்த வீடு இன்னும் அதிகப் படுத்தி இருக்கிறது என்ற கோணத்தை இந்த தருணம் கதைக்கு கொடுக்கிறது. இப்படி நாவலின் தருணங்களை எப்படி திரைக்கதையில் வேறொரு இடத்தில் பொருத்துவது என்பதை புரிந்து கொள்ள இந்த தொடர் நிச்சயம் உதவும். ஷிர்லி ஜாக்சனின் நாவலின் முக்கிய தருணங்களையும், அதன் தீமையும் குறித்துவைத்துக் கொண்டு அவற்றை திரைக்கதைக்குள் மாற்றி மாற்றி அடுக்கி பார்தது ஒரு வகையான ரீமிக்ஸ் வடிவத்தை தாங்கள் கொடுத்திருப்பதாக மைக் ப்ளானகன் சொல்வது குறிப்பிடத்தக்கது.
இந்த நாடகத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டிருக்கும் திரைக்கதை உத்தி ‘Foreshadowing’. கதையின் ஆரம்பத்திலிருந்தே, பின்னர் நிகழப் போகும் திருப்பங்களுக்காக குறிப்புகளை மறைத்து வைத்துக் கொண்டே வருவது தான் ‘Foreshadowing’ எனப்படுகிறது. அப்படி அந்த திருப்பம் நிகழும் போது, நாம் ஆரம்பத்திலிருந்தே கவனித்த, ஆனால் பொருட்படுத்தாத குறிப்புகள் நம் கண் முன்னே தோன்றி திரையை விலக்குகிறது. எந்த திரைக்கதையிலும் அது ஒரு சிறப்பான அனுபவத்தை தரும் தருணமாக இருக்கும்.
இந்த நாடகத்தில் நிறைய ‘Foreshadowing’ தருணங்கள் உண்டு. குறிப்பாக ‘ரெட் ரூம்’ (Red Room) பற்றிய தருணத்தை சொல்லலாம்.

நாவலில் ஒவ்வொரு அறையும் ஒரு வண்ணத்தில் இருக்கிறது. க்ரீன் ரூம், பிங்க் ரூம் என பல வண்ணங்களில் ஹில் ஹவுசில் அறைகள் இருக்கின்றன. ஆனால் முக்கியத்துவம் கொண்ட அறை என்று எதுவும் கிடையாது. இத்தகைய பல வண்ண அறைகளை மைய படுத்தி, நாடகத்தில் ரெட் ரூமை உருவாக்கி இருக்க்கிறார்கள். அது எப்போதும் பூட்டியே இருக்கிறது. ஆனால் கதையில் அது ஒரு முக்கிய ‘Foreshadowing’ விஷயமாக இருக்கிறது.
அதே போல் Bent Neck lady என்றொரு எபிசோட் உண்டு. கதையின் ஆரம்பத்திலிருந்தே Bent Neck lady என்ற அருவம் ஓன்று நெல்லியை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. அதற்கான காரணத்தை ‘Bent Neck lady’ எபிசோட் சொல்கிறது. இந்த தொடரின் ஆகச் சிறந்த எபிசோட் அது தான். மேலும் ‘Foreshadowing’ உத்தி மிக அழகாக வெளிப்பட்டிருக்கும் எபிசோடும் அதுதான்.

மைக் ப்ளானகன், ஹில்ஹவுஸை காட்சி படுத்திய விதத்தை பற்றி பேசும் போது, ஒவ்வொரு காட்சியிலும் பின்னணியில் ஏரளமான பேய்கள் ஒளிந்து இருப்பதாக சொல்கிறார். அந்த பேய்கள் கதைக்குள் வராவிட்டாலும், கூர்ந்து கவனித்தால் அவற்றை கண்டு கொள்ள முடியும் என்கிறார். இந்த நாடகத்தின் திரைக்கதையும் அப்படிதான். கூர்ந்து கவனித்தால் அதனுள் பல திரைக்கதை உத்திகள் ஒளிந்திருப்பதை கண்டுகொள்ள முடியும்.