மாற்றான்

சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும்.

சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை.

ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றி படம் எடுக்க முயற்ச்சித்தமைக்கும், (ஆனால் அந்த முயற்சி மன்னைகவ்வியுள்ளது.) அதற்காக இந்த ஹீரோ மெனக்கெட்டமைக்கும் பாராட்டுக்கள்…

ஆனால் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்ற கதை கருவிற்கும், இந்தக் கதை களத்திற்கும் சம்பந்தமேயில்லை. படத்தின் கதை என்னவோ typical தமிழ் டபுள் ஆக்சன் மசாலா படத்தின் கதைதான். ஆனால் டபுள் ஆக்சன் படமாக எடுத்தால் ‘கெத்’ இருக்காது என்பதற்காக, வித்தியாசமான முயற்சி செய்கிறேன் பேர்வழி என்று ஒரு கேலி சித்திரத்தை படைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் டபுள் ஆக்சன் கதைகள் பின்வரும் மாதிரிதான் இருக்கும். ஒரு ஹீரோ சாது, இன்னொருவர்  முரடன். வில்லனை எதிர்த்து முதலில் ஒருவர் போராடுவார், பின் தவிர்க்கமுடியாத ஒரு தருணத்தில் அந்த கடமை இரண்டாமானவரை வந்து சேரும். அந்த இரண்டு ஹீரோக்களையும் ஒன்றாக ஒரே உடம்பில் இணைத்து, ‘conjoined twins’ என்ற போர்வையில்  எடுக்கப்பட்ட படமே மாற்றான்.

அந்தக் காலத்தில் டபுள் ஆக்சன் படங்கள் எடுப்பதற்கென்றே ஒரு டெக்னிக் இருந்தது. கேமராவை நடுவில் வைத்து, வலது புறத்தில் ஹீரோவை நடிக்க வைத்து படம்பிடித்து , பின் அதே ஹீரோவை இடது புறத்தில் நடிக்க வைத்து படம்பிடித்து இறுதியில் இரண்டையும் இணைப்பார்கள். அதனால்தான் டபுள் ஆக்சன் கதாப்பாத்திரங்கள் தோன்றும் காட்சிகளில், இருவருக்கும் நடுவில் ஒரு தூணோ, இல்லை ஏதோ ஒரு symmetric பொருளோ இருக்கும். அந்த symmetric பொருளை axis-ஆக வைத்துக் கொண்டு, ஒரே ஹீரோ இரண்டு புறத்திலும் நடித்திருப்பார். என்ன ஆனாலும் கதாப்பாத்திரங்கள் அந்த axis-ஐ தாண்டக் கூடாது..

பின் இந்தக் கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து, பல டெக்னாலஜிகளை பயன்படுத்தி, மிகவும் திறமையாக எடுக்கப்பெற்ற டபுள் அக்சன் படமே ‘ஜீன்ஸ்’. இரட்டையர்களை படம் முழுக்க எந்த ஒரு பிசிரும் இல்லாமல் உலவ விட்டிருப்பார் ஷங்கர். அதன் பின் நிறைய டபுள் அக்சன், ட்ரிபிள் அக்சன் தொடங்கி பத்து அக்சன் வரை படங்கள் எடுத்தாகி விட்டது. இதை இன்னும் ஒரு படி மேலே போய் ‘conjoined twins’ படம் எடுக்கலாம் என்று சிந்தித்துள்ளனர். ஆனால் அதை ஒழுங்காக எடுக்கவில்லை…

பல பொய்களை திரும்ப சொல்லி உண்மையாக முயற்சிக்கும், தமிழ் சினிமாவில் ‘முதல் முயற்சி முதல் முயற்சி’ என்று அரைக் கூவல் விடுத்து படங்களை promote செய்வது ஒரு தந்திரம்.மும்பை எக்ஸ்பிரஸ் ‘முதல் high definition படம்’ என்று பிரகடனம் செய்தார்கள். ஆனால் அதற்க்கு முன்பே ‘வானம் வசப்படும்’ என்ற படம் high definition-யில் எடுக்கப்பட்டுவிட்டது.

அதுபோல் தான் இதுவும். இந்தியாவின் முதல் ‘conjoined twins’ படம் என்றார்கள். ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு ‘இருவன்’ என்ற ஒரு படம் வெளிவந்தது. அதுவும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றியக் கதை. பின், ‘performance capture’  டெக்னிக் பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் இந்தியப் படம் ‘மாற்றான்’ என்றார்கள். ஆனால் இதில் பரிதாபத்திற்குரிய விடயம் என்னவெனில், அந்த  ‘Performance capture’  போன்ற எந்த டெக்னிக்கும் படத்திற்கு  கைகொடுக்கவில்லை என்பதுதான். இரட்டையர்கள் வரும் காட்சிகளில் படத்தின் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது. ஏதோ ஒரு ஹீரோ இன்னொரு பொம்மை ஹீரோவை தூக்கிக் கொண்டு நடப்பது போல் பல இடங்களில் தோன்றும் .இது ஒரு லோ பட்ஜெட் படமென்றால் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் பல கோடிகளை இறைத்து குப்பைகளை எடுக்கும் போது தான் யோசிக்க வேண்டியிருக்கிறது, இன்னும் எத்தனை நாள் தான் ஆடியன்ஸை மாக்கான் ஆக்குவார்கள் என்று…

ஒரு ஆறுதல், இவர்கள் எங்கேயும் science fiction படம், medical fiction படம் என்று பிரகடனப் படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் கேலிக் கூத்தாகி இருக்கும்.

‘Conjoined twins’  எப்பவும் பலவீனமாகத்தான் இருப்பார்கள், அவர்கள் எப்படி பறந்து பறந்து சண்டைப் போடுகிறார்கள் என்பன போன்ற ஆராய்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு இந்த படம் ஒன்றும் சிறந்த படமில்லை. ஆனால் இந்தப் படத்தின் பின்னணியை மட்டும் பார்ப்போம்…

தமிழ் படைப்புலகில் மட்டுமே இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளி குறைய மறுக்கிறது. இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வந்தால் இலக்கியத்தை மறந்துவிடுகிறார்கள். இதற்கிடையில் பாக்கெட் நாவலாசிரியர்கள் பாக்கெட் நாவல்களைப்போல் மூன்றாம் தரத்தில் சினிமாவிற்கு கதை எழுதுகிறார்கள்.
‘சுபா’ என்ற இந்த இரட்டை எழுத்தாளர்கள் திறமைசாலிகளே. இந்தப் படத்திலும் அவர்களின் வசனம் தான் முதல் பகுதிக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஆனால் எந்தப் படைப்பாளியாக இருந்தாலும் தன் அறிவை update செய்துக் கொள்ள வேண்டும். “Learn, Unlearn, Update “  என்பது மிக முக்கியம்.

பாக்கெட் நாவல்கள் எழுதுபவர்களிலேயே தன் அறிவை அப்டேட் செய்து வைத்திருப்பவர் இந்திரா சௌந்தரராஜன் மட்டுமே. (அவர் வெறும் பாக்கெட் நாவலாசிரியர் அன்று. திறமையான எழுத்தாளர். அதற்கு அவரின்  படைப்புகள் சான்று. எனினும் பாக்கெட் நாவல் உலகத்திலேயே நின்றுவிட்டார்) அந்நியனில் சொல்லப்பட schizophrenia-வை அவர் தொன்னூறுகளிலேயே ‘விடாது கருப்பு’ என்னும் கதையில் சொல்லிவிட்டார். அதில் கருப்பு சாமி தண்டனை கொடுக்கும், அந்நியனில் அந்நியன் தண்டனைக் கொடுப்பான் .அவ்வளவுதான் தான் வித்தியாசம்.

ஆனால் மற்ற பாக்கெட் நாவலாசிரியர்கள அனைவரும் புருடா விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். ‘மூடாத கல்லறை’, ‘சேராத நிலவு’ ‘மூன்றாவது குறுக்கு தெரு’ என்பன போன்ற பேர்களில் ஏதேதோ எழுதிக் குவிக்கிறார்கள். எனக்கு பிடித்த ராஜேஷ் குமார், எழுதிய ஒரு கதையில் , ஒரு கதாநாயகன் பாலைவனத்தில் தரை இறங்கிய ஒரு விமானத்தினுள் தனியாக சென்று டைம் பாம்பை deactivate செய்வார். அதுபோன்ற மூன்றாம் தரமான புருடாக்கள் ‘மாற்றான்’ படத்தில் விடப்பட்டுள்ளது. Genetic Research, Ionization agent இது,அது என்று கதைக்கு சம்பதமில்லாமல் ஏதேதோ வார்த்தைகளை நுழைத்து (எல்லாம் எட்டாம் கிளாஸ் பாட புத்தகத்திலிருந்து எடுத்த வார்த்தைகள்) படம் காட்டியுள்ளனர். பாக்கெட் நாவல்களில் வரும் மொக்கை ட்விஸ்ட்களை படத்தில் வைத்து மொக்கை வாங்கியுள்ளனர்.

சுவாரசியமாக பாக்கெட் நாவல் எழுதிடலாம். ஆனால் சினிமாவில் எழுதும்போது சினிமாவிற்க்கான தரத்தை மெயின்டையின் செய்ய வேண்டும்.திருப்பாச்சியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. கில்லியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. ஆனால் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த வித்தியாசம்தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.

பதினைந்து ரூபாய் பாக்கெட் நாவல் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு சில ஆயிரம் ரூபாயே ராயல்ட்டியாக கிடைக்கும். அவர் குறைந்த தர படைப்புகளை படைப்பதை தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல கோடி ருபாய் சம்பளம் வாங்கும் சினிமா இயக்குனர்கள் பாக்கெட் நாவலாசிரியர்கள் போல் மூன்றாம் தர படைப்பை படைப்பதுதான் ஆதங்கம் அளிக்கிறது…

இந்தப் பின்னணியில் தான் இந்தக் கதையை கவினிக்க வேண்டியிருக்கிறது. ஒட்டி பிறந்த கதாநாயகர்களின் தந்தை ஒரு விஞ்ஞானி. அவர் ‘எனெர்ஜியான்’ என்றொரு எனெர்ஜி டிரிங் பவுடரை கண்டுபிடிக்கிறார். அதை உண்ணும் குழந்தைகள் பெரும் திறமைசாலிகளாக வருவார்கள் என்று அவர் பிரகடனப் படுத்தி விற்று பெரும் தொழிலதிபராகிறார். அந்நிலையில் அப்பவுடர் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்துக் கொள்கின்றனர் கதாநாயகர்கள். பின் நடப்பதே படத்தின் கதை. முதல்வனின் வருவது போல் ஒரு சேற்று சண்டை, ஜீன்ஸில் இரட்டையர்கள் ஐஸ்வர்யாராயிடம் செய்யும் காமெடிகளை போல் சில காமெடிகள், அந்நியனில் வரும் கிருமி போஜனம் போல் ஒரு காட்சியில் எலி போஜனம், இந்தியனில் சொந்த மகனையே எதிர்க்கும் தந்தைப்போல் இதில் உல்டாக் காட்சி என பல ஷங்கர் படங்களை மிக்ஸ் செய்து ‘மாற்றான்’ என்ற பெயரில் கொணர்ந்துள்ளனர். இந்த மொக்கை மசாலா படத்திற்கு துணையாக பல மொக்கை scientific term-களை உபயோகப் படுத்தி மொக்கை வாங்கியுள்ளனர்.

கதாநாயகர்களின் தந்தை  உக்ரைனில் Genetically modified மாடுகளை உருவாக்கி, ஆராய்ச்சி செய்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் குடித்தால் ‘extraordinary power’ வருவதாக கண்டுக்கொள்கிறார். நிற்க.

அவரே தமிழகத்தில் தன் பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உக்ரைனிலிருந்து வரவழைக்கப்பட்ட தீவனத்தைக் கொடுத்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் கொண்டு ‘எனெர்ஜியான்’ பவுடரை உருவாகுகிறார்.

ஒரு காட்சியில் ‘Genetic Engineering’  பற்றி பேசுகிறார்கள், இன்னொரு காட்சியில் சம்மந்தமில்லாமல் ஏதோ மாட்டுத்தீவனம் பற்றி பேசுகிறார்கள். அடுத்தக் காட்சியில்
‘Advanced Genetic Engineering’  பேசுவதாக நினைத்துக் கொண்டு பத்து பேரின் மரபணுவை கொண்டு ஒரு உயிரை உருவாக்குவதைப் பற்றி விவரிக்கிறார்கள். படம் முழுக்க இப்படி பல அறிவியல் பெயர்களை அரை குறையாக உதிர்த்து தங்களைத் தாங்களே கேலி செய்துக் கொண்டதோடில்லாமல், இறுதியில் திரு.நரேந்திர மோடியை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு சுரேந்திர லோடி என்ற ஏதோ ஒரு பெயரில் குஜராத் முதல் அமைச்சர் என்ற கதாப்பாத்திரத்தை தேவையில்லாமல் காட்டுகிறார்கள். இதுபோன்று தேவை இல்லாக் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு.

மேலும் இதில் ஒரு காட்சியில் குஜராத் கிராமவாசிகள் ஹிந்தி பேசுகிறார்கள்.குஜராத் கிராமங்களில் வெறும் குஜராத்தி தான் பேசுவார்கள். ஹிந்தி அன்று. ஹிந்தியோ, குஜராத்தியோ Subtitles போட போவதில்லை என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டதால்தான் என்னவோ இதில் குஜராத்தியர்கள் ஹிந்தி பேசுவது போல் எடுத்துவிட்டார்கள் போலும்.இதையெல்லாம் தாங்கிக் கொள்ளலாம். குஜராத்தியர்களை சித்தரித்திருக்கும் விதம்தான் மிகவும் செயற்கையாக உள்ளது..

சிறு வயதில் கிராப்ட் நோட்டில் எல்லாரும் ஐம்பது பைசா கொடுத்து போஸ்டர் வாங்கி ஒட்டி இருப்போம். பழங்கள், விலங்குகள் என்று வகை வகையான போஸ்டர்கள். அதில் இந்திய மாநில மக்கள் என்று, இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் அவர்களின் traditional உடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரையும் ஒட்டியிருப்போம். அதில் ராஜஸ்தானியர்கள் என்றால் தலையில் தலைபாகை அணிந்திருப்பார்கள். அதை அப்படியே காப்பி அடித்து இதில் பயன் படுத்தி விட்டார்களா என்று எண்ணும் அளவிற்கு அந்த ராஜஸ்தானிய உடை அலங்காரத்தை இதில் குஜராத்தியர்களுக்கு செய்திருப்பார்கள். குஜராத்தில் எந்த கிராமத்திலும் அவ்வாறு உடை அணிந்திருக்க மாட்டார்கள்.

மொத்தத்தில் மசாலா படத்தை மசாலாவாக எடுப்பதை விடுத்து, பல புருடாக்களை விட்டு ஒரு கேலி சித்திரத்த்தை உருவாக்கிவிட்டார்கள்.

திறமைசாலிகள் பலர் வாய்ப்பிற்காக போரடிக் கொண்டிருக்க, பல கோடிகள் செலவு செய்து பில்லா 2 , மாற்றான் போன்று மொக்கை படங்களை மீண்டும் மீண்டும் எடுப்பதுதான் வருத்தமளிக்கிறது. இதற்கிடையில் அடுத்து வரப்போகும் அந்த படத்தின் ட்ரைலரே வயிற்றில் புலியை கரைக்கிறது….

சூரியா திறமையான நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் இந்த மாதிரி படங்கள் நடிப்பதுதான் முகம் சுழிக்க வைக்கிறது. திறமையான ஹீரோக்கள் இயக்குனர்களால் வீணடிக்கப் படுகின்றனரா, இல்லை அவர்களே தங்களை வீணடித்துக் கொண்டு இயக்குனரையும் வீணடித்து விடுகின்றனரா என்பது  தமிழ் சினிமாவை பொறுத்த வரையில், ‘சிதம்பர ரகசியம்’. இவரின் அடுத்தப் படமாவது முழுவேக்காடக வரும் என்று நம்புவோம்..

முகமூடி

உலகில் எத்தனையோ சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. எல்லா சூப்பர் ஹீரோக்களும் ஏதோ ஒரு வகையில் extraordinary power கொண்டிருப்பார்கள். அவர்கள் extraordinary league-ஐ சார்ந்தவர்களாகவோ, வேற்று கிரகத்தை சார்ந்தவர்களாகவோ, நிழல் உலகத்தை சார்ந்தவர்களாகவோ, மியூட்டண்ட்களாகவோ (mutants) இருப்பார்கள்.Iron Man மட்டும் சற்று வித்யாசமானவர்.

ஆனால் மிக சாதாரண மனிதன் ஒருவன் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியின்றி , தன் சொந்த உந்துதலின்  அடிப்படையில் மிகவும் விளையாட்டாக சூப்பர் ஹீரோவாக உருவெடுப்பதுபோன்ற கதையை இதுவரை யாரும் சரிவர எடுத்துவிடவில்லை. அதுவும் தமிழில் யாரும் முயற்சித்ததுக்கூட இல்லை.  ‘கந்தசாமி’ படம் ஒருவகையில் அதுபோன்ற கதையே எனினும் அது சூப்பர் ஹீரோ படமாக பிரகடனப்படுத்தப் படவில்லை. ‘முகமூடி’ திரைப்படம் தொடக்கம் முதலே சூப்பர் ஹீரோ படமாக பிரகடனப்படுத்தப்பட்டவொன்று என்பதை நினைவில் கொள்வோம்…

பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு ‘முகமூடி’ படத்தை  ஆராய்ந்தால் ஆயிரம் குறை கண்டுபிடித்து விட முடியும். ஆனால் அது புது முயற்சியை எடுத்திருக்கக் கூடிய ஒரு படைப்பாளியை அவமதிக்கும் செயல். எது எவ்வாறெனினும்  இந்த படத்தை பாராட்டிட சில முக்கிய காரணங்கள் உண்டு.

உலகிலேயே முதல் ‘non-white skinned’ சூப்பர் ஹீரோ  முகமூடி தான். முகமூடி மிக சாதாரணமானவன். ஒரு சராசரி மனிதன். எந்த ஒரு அமானுஷ்ய சக்தியும் பெறாதவன். சண்டை காட்சிகளில் போராடி சண்டை போடுவது தொடங்கி, மாடிவிட்டு மாடி தாண்டும் போது மிகவும் கடினப் பட்டு தாண்டுவது வரை அனைத்து காட்சிகளும் அவன் ஒரு சாதாரணமானவன் என்பதை நினைவு படுத்துகிறது.

இது மிகவும் சாதாரணமான ஒரு கதை. ட்விஸ்ட் இல்லாத ஒரு திரைக்கதை. இதில் இரண்டாம் பாதி சற்று ஸ்லோவாக நகர்ந்தாலும், இது மிகவும் நாகரிகமான திரைக்கதை. காரணம் இந்த கதையை வேறு எவ்வாறும் நகர்த்த முடியாது. ஒரு லோக்கல் நாயகன் ‘சூப்பர் ஹீரோ’ ஆகிறார். அவர் மக்களுக்கு நல்லது செய்கிறார். இது ஒரு typical தமிழ் படத்தின் திரைக்கதையே. (அந்த காலத்தில் வந்த S.A Chandrasekar அவர்களின் படக் கதைகளை விட சாதாரணமான கதையே ‘முகமூடி’ ) ஆனால் ‘larger than life hero’ ‘robin hood’ போன்ற கதாபாத்திரங்களை அமைத்து இந்த படத்தை இயக்கி இருந்தால், இது ஒரு மிகமிக சராசரி படம் என்று கூறி ஒதுக்கி விடலாம். ஆனால் மிகவும் தைரியமாக ஒரு ‘super hero’  கதப்பாத்திரத்தை தமிழ் திரையுலகில் முதன்முதலாக உலவவிட்டதற்க்கு முகமூடி குழுவினை நாம் பாராட்டிட வேண்டும். இது வரை தமிழில் உள்ள எந்த ஜாம்பவானும் சூப்பர் ஹீரோ கதையை எடுத்திடவில்லை. சரித்திரக் கதைகளும், சூப்பர் ஹீரோ கதைகளும், Pirates கதைகளும் சமகால தமிழ் சினிமாவில்  எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. பொன்னியின் செல்வனை படமாக எடுக்க கடந்த ஐம்பது வருடமாக முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சாண்டில்யன் அவர்கள் கதைகளையே திரைக்கதை போன்றுதான் எழுதியிருப்பார். அதையும் நாம் படமாக எடுக்க முயற்சித்ததில்லை. நிற்க.

இந்த சூழ்நிலையில்தான் ஒரு படைப்பாளி ஒரு புது முயற்சியை செய்கிறான். அந்த முயற்சியை பாராட்டுவதும் விமர்சிப்பதும் பார்வையாளர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் ஒரு படைப்பை புறங்கையால் ஒதுக்கித் தள்ளுவதற்க்குமுன் அதற்க்கான நியாயமான காரணங்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறு வைக்க இயலாத பட்சத்தில் நாம்  ஓரவஞ்சனை செய்கிறோம்…

இந்தியாவில் உள்ள வெகு சில finest ஸ்கிரிப்ட் ரைட்டர்களில் மிஷ்கினும் ஒருவர். அஞ்சாதே, நந்தலாலா போன்ற படங்கள் அதற்க்கு சான்று. (நந்தலாலா சுட்ட படமே எனினும் அதன் மூலத்தை விட ஸ்கிரிப்ட் அருமையாகவே எழுதப் பட்டிருக்கும் ). அந்த படங்களையே நாம் சரி வர ஆதரிக்கவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் இந்த படத்தின் ஸ்கிரிப்டை, ஒரு படைப்பாளியின் புது முயற்சியை  ஓரவஞ்சனையோடு ஆராய்ச்சி  செய்திடக் கூடாது.

இந்த படத்தை எடுத்தற்காக, இந்த படக்குழுவை  நிறைய பேர் தூற்றுகிறார்கள். ஒருவன் திருவிழாக்கூட்டத்தில் புது சட்டையை அணிந்துக் கொண்டு வந்து அனைவரிடமும் காட்டுகிறான். அது பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்று சொல்கிற உரிமை மட்டுமே அனைவருக்கும் உண்டு. அதனை கிழித்தெரியும் உரிமை யாருக்குமில்லை.அதுபோன்று இந்த படத்தினை தகுதியற்று எடுத்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டும் உரிமை யாருக்குமில்லை.

’முகமூடி’ ‘சூப்பர் ஹீரோ’ மாதிரியே இல்லை என்று நாம் எவ்வாறு கூற முடியும்! ‘சூப்பர் ஹீரோவிற்க்கென்ற குணாதிசியங்களை வரையறுத்தது யார்? நம் புராணங்களில் வரும் ‘அனுமான்’ கதாப்பாத்திராமே ஒரு வகையான சூப்பர் ஹீரோ தானே. சிறு வயதில் நாம் அனைவரும் ‘பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயதர் ஓம் கர்ணா சாஸ்த்ரி’ என்கிற ‘சக்திமான்’ என்ற ஒரு கதாபாத்திரத்தை கண்டு கைத்தடி இருக்கிறோம். அந்த கதைகள் எல்லாம் சராசரியாக தானே இருக்கும்.அவர்கள் ‘அசாதாரணமான மனிதர்கள். ‘முகமூடி’ சாதாரணமானவன். அவ்வளவுதான்.

‘சூப்பர் ஹீரோ’ என்றால் இப்படிதான் இருப்பார் என்ற ஒரு நிழல் அந்நியப்படங்களின் மூலம் நம் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதனால் நியாயமாக இருந்தாலும் லோக்கலாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக  ‘முகமூடி’ கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ள பெரும்பாலானோர் மறுகின்றனர். ‘சூப்பர் ஹீரோ’ கனவு ஒவ்வாருத்தருக்குள்ளும் இருக்கும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஃபேண்ட்டசியின் விளைவே சூப்பர் ஹீரோக்கள். ஒவ்வொருவரும் சிறு வயதில்  அலாவுதின் அற்புத விளக்கைப் பற்றி கனவு கண்டிருப்பார்கள். தான் ஸ்பைடர் மேனாக உருவெடுத்தால் எப்படி இருக்கும் என்றும் எண்ணிப் பார்த்திருப்பார்கள். அவ்வாறான கதாப்பாத்திரங்கள் தமிழ் பேசினால் எப்படி இருக்கும் என்று கனவு கண்டு  ஒரு படைப்பாளி இங்குபடமாக எடுத்திருக்கிறார். இதில் அவர் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியையும் நாடவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. ஏனெனில் முகமூடி மிகவும் சாதாரணமானவன், உங்களையும் என்னையும் போன்று..

ஒரு லோக்கல் சூப்பர் ஹீரோ லோக்கலாக தான் உருவாகமுடியும். அதனால்தான்  சூப்பர் ஹீரோவிற்க்கு ஆடை தைக்கும் காட்சிகள் முதல், அவர் செய்யும் சாகசங்கள் வரை அனைத்தும் சாதாரணமாக அமைந்துள்ளது. தமிழ் சூழலில், மக்களுக்கு ஒரு கதாப்பாத்திரம் நல்லது செய்கிறான் எனில், குழந்தைகளை காப்பாற்றுகிறான், கொள்ளையில் இருந்து வங்கியை காப்பாற்றுகிறான் என்றுதான் திரைக்கதை அமைக்க முடியும்.மிகவும் advanced படமாக எடுக்கவேண்டும் என்றால் ‘Bio-war’ ‘nuclear weapon’ போன்ற விஷயங்களிலிருந்து ‘சூப்பர் ஹீரோ’ மக்களை காப்பற்றுகிறான் என்று கதை எழுதலாம். ஆனால் அவ்வாறான படங்களை இங்கு எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள். திரு.ஜனநாதன் இயக்கிய ‘ஈ’ திரைப்படம் ‘Bio-war’ பற்றி பேசிய முதல் தமிழ் படம். அந்த படத்தினை  ஏன் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை!

அதனால் முகமூடியின் காட்சிகள் ஆங்கில படத்தில் வரும் சராசரி காட்சிகள் என்று விமர்சிப்பவர்கள் ஒரு விடயத்தை நினைவில் கொள்ளவேண்டும். ‘முகமூடி’ என்பது சிறு முயற்சியே. பெரிய சாதனைகள் அனைத்தும் சிறு முயற்சியில் இருந்தே தோன்றுகிறது என்பதால் ‘முகமூடி’ என்ற சாதாரணமான ‘சூப்பர் ஹீரோவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவன் வருங்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்திடுவான். (Mugamoodi is an ordinary guy with extraordinary potential.) இந்த படத்திற்க்கு செய்ய வேண்டிய நியாயத்தை செய்தால் அடுத்தடுத்து பிரமாண்டமான, இன்னும் சிறந்த பாகங்களை எதிர்பார்க்கலாம். அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். தமிழின் முதல் சூப்பர் ஹீரோவாகிய முகமூடியை ஒதுக்கித் தள்ளினால், வேறு யாரும் சூப்பர் ஹீரோ படம் எடுக்க முயற்ச்சிக்க மாட்டார்கள்…

ஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்துள்ளதை திரையில் உணரலாம்.இந்த படத்தின் கதாநாயகன் ஜீவா,தன் கதாப்பாத்திரத்திற்க்கு மிகவும் நியாயம் செய்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நகர்கிறது. அதனை அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளரை பாராட்டிட வேண்டும். காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர், தன் அருமையான பின்னணி இசையின் மூலம். ஆனால் இசை சில இடங்களில் Hans zimmer-ஐ ஞாபகப்படுத்துகிறது. (எப்படி sci-fi கதைகளில் Issac Asimov-வின் தாக்கத்தை தவிர்க்க முடியாதோ, அதே போன்று சமகாலத்தில் பிரமாண்டமான இசையில் Hans zimmer-யின் தாக்கத்தை தவிர்க்க இயலாது)

உலகில் தலை சிறந்த இயக்குனர்கள் பலர் இருந்தாலும், “creative Directors” என்று சொல்லக் கூடியவர்கள் வெகுசிலரே. Kurosawa, Coppola போன்று. இந்தியாவில் அனுராக் கஷ்யப், தியாகராஜ குமாரராஜா, மிஷ்கின் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த creative Directors. அவர்கள் தனக்கென்று ஒரு ‘classic style’ வைத்துள்ளனர். மிஷ்கின் வெறும் காலை மட்டும் காட்டுகிறார் என்கிறார்கள். ஆனால் அவர் படங்களில் கால் ஆயிரம் கதை சொல்கிறது. நந்தலாலாவில் எங்கும் பயணிக்கும் கால்களை அதிகம் காட்டியிருப்பார், அது பயணம் சம்பத்தப் பட்ட படம் என்பதால்.

அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற படங்களின் முதல் காட்சிகள் நினைவில் இருக்கலாம். ஒரு இயக்குனர்  ஒரு காட்சியை எப்படி வேண்டுமானாலும் எடுத்திட முடியும். ஆனால் அதில் அவர் காட்டும் creativity தான் அவரை தனித்து நிற்கச்செய்கிறது. அதற்க்கு அஞ்சாதே படத்தின் முதல் காட்சி ஒரு தலைசிறந்த உதாரணம். அது போல இந்த படத்திலும் அந்த ‘டைரக்டர் டச்’ இருக்கிறது. குறிப்பாக கதாநாயகன் முகமூடியாக உருவெடுக்கும் (transition) அந்த ஒரு காட்சி, a perfect director touch. மேலும் சில காட்சிகள் Kurosawa way of making-ஐ நினைவுப்படுத்தும். ஒரு சூப்பர் ஹீரோ கதையை Akira kurosawa ஸ்டைலில் பார்க்க விரும்புபவர்கள் முகமூடியை பார்க்கலாம். (திரு. மிஷ்கின் அவர்களின் படங்களில்  குரோசாவாவின் தாக்கம் நிறைய  உண்டு. நந்தலாலாவில் அவரது நடிப்பு குரோசாவாவின் ஆஸ்தான நடிகரான ஜப்பானின் Toshiro Mifune அவர்களின் நடிப்பை பல இடங்களில் நினைவுப்படுத்தும் )

இந்தபடத்தின் ஸ்கிரிப்டை ஒரு புறம் குறைக் கூறுகிறார்கள். தமிழ் படைப்புலகில் கதைகளுக்கு பஞ்சமில்லை. இங்கு ஆயிரக் கணக்கான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இலக்கியத்திற்க்கும் திரைப்படத்திற்க்கும் உள்ள இடைவெளி இன்னும் குறைந்தபாடில்லை. ‘யவன ராணி’ கதையில் சாண்டில்யன் நிறைய வித்தைகள் காட்டியிருப்பார். ஒரே நாவலில், கடல் கொள்ளையர்கள், கடற் போர். நிலப் போர், தத்துவங்கள் என நிறைய விவரித்திருப்பார். ஆனால் அதனை இதுவரை யாரும் படமாக எடுத்திடவில்லை. காரணம் அதனை அவ்வளவு எளிதாக ‘execute’ செய்திட இயலாது. அருமையான கதைகளை பக்கம் பக்கமாக எழுதிடலாம். ஆனால் அதனை ‘execute’ செய்வது தான் மிக பெரிய பணி. ‘execution’ வெறும் திறமை சார்ந்ததன்று.  சூழலை சார்ந்ததுமாகும். ‘ஸ்பீட்’ போன்று ஒரு ஸ்கிரிப்டை இங்கு எழுதிடமுடியும், ஆனால் எந்த ரோட்டில் பேருந்தை ஓட விடுவது?

ஸ்பைடர் மேன் டிரைனை ‘web’ விட்டு தடுப்பது போன்ற காட்சியை இங்கு எப்படி அமைத்திட முடியும்?

சூப்பர் மேன் மாடி விட்டு மாடி தாண்டுகிறார் என்றால், மவுண்ட் ரோட்டில் தானே எடுக்க முடியும்? அப்போதும்,கேலி செய்பவர்கள் கேலி செய்வார்களே?

பேட் மேன் வைத்துருப்பது போன்ற வாகனங்களின் ‘prototype’ செய்வது கூட இங்கு கடினமாயிற்றே ?

இவை அனைத்திற்க்கும் ‘செட் போட்டால் எவ்வளவு கோடிகள் இறைக்க வேண்டும். கிராபிக்ஸ் காட்சிகளிலும் நிறைய தமிழ் படங்கள் மொக்கை வாங்கியுள்ளதே. அவ்வாறெனில் உலக தரத்திற்க்கான கிராபிக்ஸ் எவ்வாறு சாத்தியம்?

எல்லா ஸ்க்ரிப்ட்களையும் execute செய்திட முடியாது.. இந்த சூழ்நிலையில் execute பன்னக்கூடிய அளவிற்க்கு ஒரு சிம்பிலான சூப்பர் ஹீரோ ஸ்கிரிப்டை எழுதி, அதை மிகவும் நாகரிகமான முறையில் படமாக்கிய ஒரு குழுவை, பல புது முயற்சிகளுக்கு விதை விதைத்துள்ள ஒரு குழுவை  தவறாக விமர்சிப்பதோ, அவர்களின் படைப்பை புறக்கணிப்பதோ எற்ப்புடைய செயலாகாது.

படத்தோட கிளைமாக்ஸ் பற்றி நிறைய விமர்சனம் உண்டு. சமீபத்தில் வந்த ‘மதுபானக்கடை’ படமும் திடீர்னு முடிந்திடும். ஆனால்  அந்தப் படத்தை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அது ஒரு தலை சிறந்த முயற்சி. அது ஒரு off-beat படம். ஆங்கிலத்தில்  சிறைச்சாலையினுள் நடக்கும் கதைகள், சூப்பர் மார்க்கெட்டில் நடக்கும் கதைகள் என நிறைய படங்கள் வந்திருக்கு. தமிழ்ல TASMAC-உள்ள நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட அந்த படத்தை எத்தனைப் பேர் ஆதரித்தோம் ? விமர்சிப்பவர்கள் எந்த முயற்சி செய்தாலும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள்….

அன்பேசிவம் சுட்டபடமே எனினும் ஒரு தலை சிறந்த தமிழ் படம். ஆனால் அது  ஓடவில்லை . ஆரண்ய காண்டம், தென் மேற்கு பருவக் காற்று, வாகை சூடவா போன்ற நிறைய நல்லப் படங்கள் இங்கு ஓடவில்லை. ஆனால் அந்த அளவுக்கு முகமூடி தலை சிறந்த படமென்று  சொல்லவில்லை. ‘முகமூடி’ ஒரு சாதாரணமான படம்.ஆனால்      அசாதாரணமான முயற்சி. அந்த முயற்சியைதான் நாம் பாராட்டிட வேண்டும்.

ஆங்கிலப் படங்கள் அளவிற்க்கு technology இந்த படத்தில்  உபயோக படுத்தப் படவில்லை என்று விமர்சிக்கிறார்கள். அதற்கான அவசியம் இக்கதைக்கு இல்லை. ‘டார்க் நைட் ரைசஸ்’ போன்ற படங்களோடு ‘முகமூடி’ படத்தினை ஒப்பிட்டு பார்ப்பது  மிகவும் தவறு. நோலான் படங்கள் மாதிரி இந்தப் படங்கள் இருக்காது. சமகால உலக சினிமாவில் நோலான் சிம்மசொப்பனம், பல சுயாதீனப் படைப்பாளிகளுக்கு மனதளவில் மானசீக குருவாக  அவர் விளங்குறார் என்பதில் எந்த ஐய்யப்பாடுமில்லை. கடந்த பதினைந்து வருடத்தில் அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. ஆனால் நோலான் போன்ற படைப்பாளிகள் இயங்கும் சூழல் வேறு. நம் படைப்பாளிகள் இயங்கும் சூழல் வேறு. நம்முடைய சூழலை சார்ந்துதான் இந்தப் படத்தை விவாதிக்கணும். தமிழ் சூழலில் முகமூடி ஒரு மிகப்பெரிய முயற்சி..

இப்போது இருக்கும் தமிழ் சூழலில் ‘முகமூடி’ மாதிரிதான் ஒரு தமிழ் சூப்பர் ஹீரோ படம் எடுக்க முடியும். முகமூடி ஒரு நாகரிகமான படம். பாராட்டுதளுக்குரிய முயற்சி. அதனால் எந்த ஒரு பெரிய எதிர்பார்புமின்றி, மூளையில் எந்த ஒரு நிழல் உருவத்தின் தாக்கமுமின்றி, தமிழ் சூப்பர் ஹீரோ எப்படி இருப்பான் என்ற  ஆசையோடு , பாட்டி மடியில் படுத்து கதை கேட்கும் குழந்தைப் போல ‘முகமூடி’ படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் பிடிக்கும். இதில் இருக்கும் உழைப்பு புரியும்..

அதை விடுத்து, நாங்க Dark Knight Rises மாதிரி இருந்தாதான் சூப்பர் ஹீரோ படமென்று ஏற்றுக் கொள்வோம் என்று சொல்ற எல்லாரும் கொஞ்சம் காத்திருந்தால், foreign technology implement பண்ணி இங்கு யாராவது டார்க் நைட் ரைசஸ விட நல்ல படமே எடுப்பாங்க. முன்னாடி சொன்ன மாதிரி அதுக்கு நம்ம கொஞ்சம் காத்திருக்கணும். காத்திருப்போம் ஒரு நாற்பது வருடம்…..