மாற்றான்

சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும்.

சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை.

ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றி படம் எடுக்க முயற்ச்சித்தமைக்கும், (ஆனால் அந்த முயற்சி மன்னைகவ்வியுள்ளது.) அதற்காக இந்த ஹீரோ மெனக்கெட்டமைக்கும் பாராட்டுக்கள்…

ஆனால் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்ற கதை கருவிற்கும், இந்தக் கதை களத்திற்கும் சம்பந்தமேயில்லை. படத்தின் கதை என்னவோ typical தமிழ் டபுள் ஆக்சன் மசாலா படத்தின் கதைதான். ஆனால் டபுள் ஆக்சன் படமாக எடுத்தால் ‘கெத்’ இருக்காது என்பதற்காக, வித்தியாசமான முயற்சி செய்கிறேன் பேர்வழி என்று ஒரு கேலி சித்திரத்தை படைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் டபுள் ஆக்சன் கதைகள் பின்வரும் மாதிரிதான் இருக்கும். ஒரு ஹீரோ சாது, இன்னொருவர்  முரடன். வில்லனை எதிர்த்து முதலில் ஒருவர் போராடுவார், பின் தவிர்க்கமுடியாத ஒரு தருணத்தில் அந்த கடமை இரண்டாமானவரை வந்து சேரும். அந்த இரண்டு ஹீரோக்களையும் ஒன்றாக ஒரே உடம்பில் இணைத்து, ‘conjoined twins’ என்ற போர்வையில்  எடுக்கப்பட்ட படமே மாற்றான்.

அந்தக் காலத்தில் டபுள் ஆக்சன் படங்கள் எடுப்பதற்கென்றே ஒரு டெக்னிக் இருந்தது. கேமராவை நடுவில் வைத்து, வலது புறத்தில் ஹீரோவை நடிக்க வைத்து படம்பிடித்து , பின் அதே ஹீரோவை இடது புறத்தில் நடிக்க வைத்து படம்பிடித்து இறுதியில் இரண்டையும் இணைப்பார்கள். அதனால்தான் டபுள் ஆக்சன் கதாப்பாத்திரங்கள் தோன்றும் காட்சிகளில், இருவருக்கும் நடுவில் ஒரு தூணோ, இல்லை ஏதோ ஒரு symmetric பொருளோ இருக்கும். அந்த symmetric பொருளை axis-ஆக வைத்துக் கொண்டு, ஒரே ஹீரோ இரண்டு புறத்திலும் நடித்திருப்பார். என்ன ஆனாலும் கதாப்பாத்திரங்கள் அந்த axis-ஐ தாண்டக் கூடாது..

பின் இந்தக் கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து, பல டெக்னாலஜிகளை பயன்படுத்தி, மிகவும் திறமையாக எடுக்கப்பெற்ற டபுள் அக்சன் படமே ‘ஜீன்ஸ்’. இரட்டையர்களை படம் முழுக்க எந்த ஒரு பிசிரும் இல்லாமல் உலவ விட்டிருப்பார் ஷங்கர். அதன் பின் நிறைய டபுள் அக்சன், ட்ரிபிள் அக்சன் தொடங்கி பத்து அக்சன் வரை படங்கள் எடுத்தாகி விட்டது. இதை இன்னும் ஒரு படி மேலே போய் ‘conjoined twins’ படம் எடுக்கலாம் என்று சிந்தித்துள்ளனர். ஆனால் அதை ஒழுங்காக எடுக்கவில்லை…

பல பொய்களை திரும்ப சொல்லி உண்மையாக முயற்சிக்கும், தமிழ் சினிமாவில் ‘முதல் முயற்சி முதல் முயற்சி’ என்று அரைக் கூவல் விடுத்து படங்களை promote செய்வது ஒரு தந்திரம்.மும்பை எக்ஸ்பிரஸ் ‘முதல் high definition படம்’ என்று பிரகடனம் செய்தார்கள். ஆனால் அதற்க்கு முன்பே ‘வானம் வசப்படும்’ என்ற படம் high definition-யில் எடுக்கப்பட்டுவிட்டது.

அதுபோல் தான் இதுவும். இந்தியாவின் முதல் ‘conjoined twins’ படம் என்றார்கள். ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு ‘இருவன்’ என்ற ஒரு படம் வெளிவந்தது. அதுவும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றியக் கதை. பின், ‘performance capture’  டெக்னிக் பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் இந்தியப் படம் ‘மாற்றான்’ என்றார்கள். ஆனால் இதில் பரிதாபத்திற்குரிய விடயம் என்னவெனில், அந்த  ‘Performance capture’  போன்ற எந்த டெக்னிக்கும் படத்திற்கு  கைகொடுக்கவில்லை என்பதுதான். இரட்டையர்கள் வரும் காட்சிகளில் படத்தின் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது. ஏதோ ஒரு ஹீரோ இன்னொரு பொம்மை ஹீரோவை தூக்கிக் கொண்டு நடப்பது போல் பல இடங்களில் தோன்றும் .இது ஒரு லோ பட்ஜெட் படமென்றால் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் பல கோடிகளை இறைத்து குப்பைகளை எடுக்கும் போது தான் யோசிக்க வேண்டியிருக்கிறது, இன்னும் எத்தனை நாள் தான் ஆடியன்ஸை மாக்கான் ஆக்குவார்கள் என்று…

ஒரு ஆறுதல், இவர்கள் எங்கேயும் science fiction படம், medical fiction படம் என்று பிரகடனப் படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் கேலிக் கூத்தாகி இருக்கும்.

‘Conjoined twins’  எப்பவும் பலவீனமாகத்தான் இருப்பார்கள், அவர்கள் எப்படி பறந்து பறந்து சண்டைப் போடுகிறார்கள் என்பன போன்ற ஆராய்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு இந்த படம் ஒன்றும் சிறந்த படமில்லை. ஆனால் இந்தப் படத்தின் பின்னணியை மட்டும் பார்ப்போம்…

தமிழ் படைப்புலகில் மட்டுமே இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளி குறைய மறுக்கிறது. இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வந்தால் இலக்கியத்தை மறந்துவிடுகிறார்கள். இதற்கிடையில் பாக்கெட் நாவலாசிரியர்கள் பாக்கெட் நாவல்களைப்போல் மூன்றாம் தரத்தில் சினிமாவிற்கு கதை எழுதுகிறார்கள்.
‘சுபா’ என்ற இந்த இரட்டை எழுத்தாளர்கள் திறமைசாலிகளே. இந்தப் படத்திலும் அவர்களின் வசனம் தான் முதல் பகுதிக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஆனால் எந்தப் படைப்பாளியாக இருந்தாலும் தன் அறிவை update செய்துக் கொள்ள வேண்டும். “Learn, Unlearn, Update “  என்பது மிக முக்கியம்.

பாக்கெட் நாவல்கள் எழுதுபவர்களிலேயே தன் அறிவை அப்டேட் செய்து வைத்திருப்பவர் இந்திரா சௌந்தரராஜன் மட்டுமே. (அவர் வெறும் பாக்கெட் நாவலாசிரியர் அன்று. திறமையான எழுத்தாளர். அதற்கு அவரின்  படைப்புகள் சான்று. எனினும் பாக்கெட் நாவல் உலகத்திலேயே நின்றுவிட்டார்) அந்நியனில் சொல்லப்பட schizophrenia-வை அவர் தொன்னூறுகளிலேயே ‘விடாது கருப்பு’ என்னும் கதையில் சொல்லிவிட்டார். அதில் கருப்பு சாமி தண்டனை கொடுக்கும், அந்நியனில் அந்நியன் தண்டனைக் கொடுப்பான் .அவ்வளவுதான் தான் வித்தியாசம்.

ஆனால் மற்ற பாக்கெட் நாவலாசிரியர்கள அனைவரும் புருடா விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். ‘மூடாத கல்லறை’, ‘சேராத நிலவு’ ‘மூன்றாவது குறுக்கு தெரு’ என்பன போன்ற பேர்களில் ஏதேதோ எழுதிக் குவிக்கிறார்கள். எனக்கு பிடித்த ராஜேஷ் குமார், எழுதிய ஒரு கதையில் , ஒரு கதாநாயகன் பாலைவனத்தில் தரை இறங்கிய ஒரு விமானத்தினுள் தனியாக சென்று டைம் பாம்பை deactivate செய்வார். அதுபோன்ற மூன்றாம் தரமான புருடாக்கள் ‘மாற்றான்’ படத்தில் விடப்பட்டுள்ளது. Genetic Research, Ionization agent இது,அது என்று கதைக்கு சம்பதமில்லாமல் ஏதேதோ வார்த்தைகளை நுழைத்து (எல்லாம் எட்டாம் கிளாஸ் பாட புத்தகத்திலிருந்து எடுத்த வார்த்தைகள்) படம் காட்டியுள்ளனர். பாக்கெட் நாவல்களில் வரும் மொக்கை ட்விஸ்ட்களை படத்தில் வைத்து மொக்கை வாங்கியுள்ளனர்.

சுவாரசியமாக பாக்கெட் நாவல் எழுதிடலாம். ஆனால் சினிமாவில் எழுதும்போது சினிமாவிற்க்கான தரத்தை மெயின்டையின் செய்ய வேண்டும்.திருப்பாச்சியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. கில்லியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. ஆனால் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த வித்தியாசம்தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.

பதினைந்து ரூபாய் பாக்கெட் நாவல் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு சில ஆயிரம் ரூபாயே ராயல்ட்டியாக கிடைக்கும். அவர் குறைந்த தர படைப்புகளை படைப்பதை தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல கோடி ருபாய் சம்பளம் வாங்கும் சினிமா இயக்குனர்கள் பாக்கெட் நாவலாசிரியர்கள் போல் மூன்றாம் தர படைப்பை படைப்பதுதான் ஆதங்கம் அளிக்கிறது…

இந்தப் பின்னணியில் தான் இந்தக் கதையை கவினிக்க வேண்டியிருக்கிறது. ஒட்டி பிறந்த கதாநாயகர்களின் தந்தை ஒரு விஞ்ஞானி. அவர் ‘எனெர்ஜியான்’ என்றொரு எனெர்ஜி டிரிங் பவுடரை கண்டுபிடிக்கிறார். அதை உண்ணும் குழந்தைகள் பெரும் திறமைசாலிகளாக வருவார்கள் என்று அவர் பிரகடனப் படுத்தி விற்று பெரும் தொழிலதிபராகிறார். அந்நிலையில் அப்பவுடர் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்துக் கொள்கின்றனர் கதாநாயகர்கள். பின் நடப்பதே படத்தின் கதை. முதல்வனின் வருவது போல் ஒரு சேற்று சண்டை, ஜீன்ஸில் இரட்டையர்கள் ஐஸ்வர்யாராயிடம் செய்யும் காமெடிகளை போல் சில காமெடிகள், அந்நியனில் வரும் கிருமி போஜனம் போல் ஒரு காட்சியில் எலி போஜனம், இந்தியனில் சொந்த மகனையே எதிர்க்கும் தந்தைப்போல் இதில் உல்டாக் காட்சி என பல ஷங்கர் படங்களை மிக்ஸ் செய்து ‘மாற்றான்’ என்ற பெயரில் கொணர்ந்துள்ளனர். இந்த மொக்கை மசாலா படத்திற்கு துணையாக பல மொக்கை scientific term-களை உபயோகப் படுத்தி மொக்கை வாங்கியுள்ளனர்.

கதாநாயகர்களின் தந்தை  உக்ரைனில் Genetically modified மாடுகளை உருவாக்கி, ஆராய்ச்சி செய்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் குடித்தால் ‘extraordinary power’ வருவதாக கண்டுக்கொள்கிறார். நிற்க.

அவரே தமிழகத்தில் தன் பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உக்ரைனிலிருந்து வரவழைக்கப்பட்ட தீவனத்தைக் கொடுத்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் கொண்டு ‘எனெர்ஜியான்’ பவுடரை உருவாகுகிறார்.

ஒரு காட்சியில் ‘Genetic Engineering’  பற்றி பேசுகிறார்கள், இன்னொரு காட்சியில் சம்மந்தமில்லாமல் ஏதோ மாட்டுத்தீவனம் பற்றி பேசுகிறார்கள். அடுத்தக் காட்சியில்
‘Advanced Genetic Engineering’  பேசுவதாக நினைத்துக் கொண்டு பத்து பேரின் மரபணுவை கொண்டு ஒரு உயிரை உருவாக்குவதைப் பற்றி விவரிக்கிறார்கள். படம் முழுக்க இப்படி பல அறிவியல் பெயர்களை அரை குறையாக உதிர்த்து தங்களைத் தாங்களே கேலி செய்துக் கொண்டதோடில்லாமல், இறுதியில் திரு.நரேந்திர மோடியை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு சுரேந்திர லோடி என்ற ஏதோ ஒரு பெயரில் குஜராத் முதல் அமைச்சர் என்ற கதாப்பாத்திரத்தை தேவையில்லாமல் காட்டுகிறார்கள். இதுபோன்று தேவை இல்லாக் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு.

மேலும் இதில் ஒரு காட்சியில் குஜராத் கிராமவாசிகள் ஹிந்தி பேசுகிறார்கள்.குஜராத் கிராமங்களில் வெறும் குஜராத்தி தான் பேசுவார்கள். ஹிந்தி அன்று. ஹிந்தியோ, குஜராத்தியோ Subtitles போட போவதில்லை என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டதால்தான் என்னவோ இதில் குஜராத்தியர்கள் ஹிந்தி பேசுவது போல் எடுத்துவிட்டார்கள் போலும்.இதையெல்லாம் தாங்கிக் கொள்ளலாம். குஜராத்தியர்களை சித்தரித்திருக்கும் விதம்தான் மிகவும் செயற்கையாக உள்ளது..

சிறு வயதில் கிராப்ட் நோட்டில் எல்லாரும் ஐம்பது பைசா கொடுத்து போஸ்டர் வாங்கி ஒட்டி இருப்போம். பழங்கள், விலங்குகள் என்று வகை வகையான போஸ்டர்கள். அதில் இந்திய மாநில மக்கள் என்று, இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் அவர்களின் traditional உடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரையும் ஒட்டியிருப்போம். அதில் ராஜஸ்தானியர்கள் என்றால் தலையில் தலைபாகை அணிந்திருப்பார்கள். அதை அப்படியே காப்பி அடித்து இதில் பயன் படுத்தி விட்டார்களா என்று எண்ணும் அளவிற்கு அந்த ராஜஸ்தானிய உடை அலங்காரத்தை இதில் குஜராத்தியர்களுக்கு செய்திருப்பார்கள். குஜராத்தில் எந்த கிராமத்திலும் அவ்வாறு உடை அணிந்திருக்க மாட்டார்கள்.

மொத்தத்தில் மசாலா படத்தை மசாலாவாக எடுப்பதை விடுத்து, பல புருடாக்களை விட்டு ஒரு கேலி சித்திரத்த்தை உருவாக்கிவிட்டார்கள்.

திறமைசாலிகள் பலர் வாய்ப்பிற்காக போரடிக் கொண்டிருக்க, பல கோடிகள் செலவு செய்து பில்லா 2 , மாற்றான் போன்று மொக்கை படங்களை மீண்டும் மீண்டும் எடுப்பதுதான் வருத்தமளிக்கிறது. இதற்கிடையில் அடுத்து வரப்போகும் அந்த படத்தின் ட்ரைலரே வயிற்றில் புலியை கரைக்கிறது….

சூரியா திறமையான நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் இந்த மாதிரி படங்கள் நடிப்பதுதான் முகம் சுழிக்க வைக்கிறது. திறமையான ஹீரோக்கள் இயக்குனர்களால் வீணடிக்கப் படுகின்றனரா, இல்லை அவர்களே தங்களை வீணடித்துக் கொண்டு இயக்குனரையும் வீணடித்து விடுகின்றனரா என்பது  தமிழ் சினிமாவை பொறுத்த வரையில், ‘சிதம்பர ரகசியம்’. இவரின் அடுத்தப் படமாவது முழுவேக்காடக வரும் என்று நம்புவோம்..

வழக்கு எண் 18/9

சினிமா என்பது 24 lies per second (24 பொய்கள்) என்று ஒரு பெரிய இயக்குனர் குறிப்பிட்டார்.அவ்வாறிருக்கவேண்டிய அவசியமில்லை, சினிமாவில் சினிமாத்தனம் கலக்காத எதார்த்தமும் சாத்தியம் என்பது உலக சினிமா அறிந்தவர்களின் கருத்து. அந்த கருத்து மீண்டும் ஒரு முறை தமிழ் சினிமாவில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது, வழக்கு எண் 18/9 என்ற ஒரு உன்னத படைப்பின் மூலம்….

திரைக்குப் பின் பணிப்புரிந்திருக்கும் தேர்ந்த படைப்பாளிகள், திரையில் வெறும் புது முகங்களை உலாவவிட்டு ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு 

முதல் சில காட்சிகளுக்கு பின் சில unusual கேமரா மூவ்மெண்டுகளுடன் படம் நகரத் தொடங்குகிறது.அதுவே படத்தின் மீது ஒரு புது வகையான பிரமிப்பை ஏற்ப்படுத்துகின்றது. அந்த பிரமிப்புகளையும் எதிர்ப்பார்புகளையும் இறுதிவரை தக்க வைத்துக் கொள்ள பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர், அதில் வெற்றி பெற்றும் இருக்கிறார்.

சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களில், தொழில்நுட்ப அம்சங்கள் வியக்கத்தக்க வைக்கும் அளவிற்க்கு இருக்க வேண்டியதில்லை என ஏனோ இங்கு நம்பப் படுகிறது. பல நல்ல கதை கொண்ட திரைப்படங்கள் வெறும் நாடக பாணியில் அமைந்திருப்பது நினைவிருக்கலாம். அந்த குறுகிய நம்பிக்கைகளை அவ்வப்போது சில படைப்பாளிகள் உடைத்துக் கொண்டிருக்கின்றனர். ‘கற்றது தமிழ்’ போன்ற திரைப்படங்கள் கதையம்சம், மேக்கிங் என அனைத்திலும் உலகத்தரம் வாய்ந்த ஒன்று. அந்த வரிசையில் நாம் வழக்கு எண் 18/9 படத்தை இணைத்திடலாம்.

புதிய தொழில்நுட்பங்கள் அவ்வப்போது பலரால் தமிழ் திரையுலகில் அறிமுகப் படுத்தப் படுகிறது. பல புதிய முயற்சிகள் மேற்க்கொள்ள படுகின்றன. ஆனால் அந்த முயற்சிகள் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு  எடுத்துச் செல்ல வேண்டும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த முயற்சிகள் வீணாகிப் போவதை தடுக்கவோ தவிர்க்கவோ இயலாது. ஒரு முக்கிய அந்நிய தொழிற்நுட்பத்தை ஒரு இயக்குனர் பல கோடி செலவு செய்து இங்கு அறிமுகப் படுத்துகிறாரென்றால்,அவர் பெருமை பட்டுக் கொள்ளலாமேவொழிய அம்முயற்சியால் யாதொரு பயனும் விழையாது. காரணம், பல கோடி மூலதனம் எனும் பட்சத்தில் எல்லாராலும் அம்முயர்ச்சியை பின்பற்ற இயலாது.

“புதிய முயற்சி என்ற பெயரில், வெறும் அறியாமையினால் 30 வருடதிர்க்கு முன் எங்கோ-எவரோ செய்த ‘புதிய’ முயற்சியை செய்திடாதீர்கள்” என்கிறார் ஜோசப் வீ மாசலி என்ற ஒளிப்பதிவாளர். புதிய முயற்சி என்ற பெயரில் ஏதோ ஒன்றை செய்திடக் கூடாது என்பதே அவரின் கருத்து.

அதே சமயத்தில் எளிதாக அனைவராலும் பின்பற்றக் கூடிய முயற்சிகள் ஒழுங்காக-சரியானவர்களை சென்றடையாத பட்சத்தில் அந்த முயற்சிகளும் வீண்.

டிஜிட்டல் ஒளிப்பதிவு, ரெட் ஒன் காமிரா உபயோகம் என பல முயற்சிகள் இங்கு மேர்க்கொள்ளப் படுகின்றன. மும்பை எக்ஸ்பிரஸ், தவமாய் தவமிருந்து, அச்சமுண்டு அச்சமுண்டு என பல படங்களை  ஒளிப்பதிவில் புதுமை செய்ததற்க்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.ஆனால் ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தில் மிகவும் பாராட்டுதலுக்குறிய ஓர் முயற்சி செய்யப்பட்டுள்ளது. Canon EOS 7D என்ற விலை அதிகமில்லா ஒரு DSLR கேமராவினை உபயோகப் படுத்தியுள்ளனர். இது எல்லோராலும்  எளிதாக பின்பற்ற முடிந்த ஒன்று.

DSLR கேமராவில் எடுக்கப் பட்ட இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படம், சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணி….

 ‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஒளிப்பதிவில் செய்யப்பட்ட இம்முயற்சி வெற்றிப் பெற்றுருக்கிறது. இது நிச்சயம் பல திறமைசாலிகளுக்கு சொர்க்க வாசலை திறந்து விட்டுருக்கிறது. இனி நிறைய சுயாதீன திரைப் படைப்பாளிகள் குறைந்த செலவில் நிறைய தரமான படங்களை தரப் போகிறார்கள் என்பது உறுதி…அதற்க்கு காரணமாய் அமைந்த இப்படக் குழுவினை பாராட்ட வேண்டியது ஒவ்வொரு ரசிகனின் கடமை.

திரைக்கதை 

ஒரு எளிமையான கதை கருவிற்கு, ஆழமான திரைக்கதை எழுதிடுவது சாதரணமான விடயமன்று. மிகவும் தேர்ந்த திரைக்கதையாசியரால்தான் அது சாத்தியப்படும். இப்படத்தின் திரைக்கதையாசியர் தன் திறமையை மீண்டும் நிருபித்திருக்கிறார். அவர்  தனது  முந்தைய படங்களில் எழுதிய அருமையான திரைக் கதைகளைவிட, இத்திரைக்கதை இன்னும் ஆழமாக-அழகாக அமைந்துள்ளது.

பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘ஹாலிவுட்’ திரையுலகிலேயே யாரும் ‘ஒரிஜினல் திரைக்கதைகள்’ எழுதிடுவதில்லை.அங்கு எழுதப்படுவது பெரும்பாலும் தழுவல் திரைக்கதைகளே. ஆனால் தமிழ் படைப்பாளிகளால் மிகவும் எளிதாக ‘ஒரிஜினல் திரைக்கதைகள்’ எழுதிட முடியும்.திரு.பாக்கியராஜ் போன்றோர்கள் அதற்க்கு உதாரணம்.அதை நினைத்து நாம் நிச்சயம் பெருமைபட்டுக் கொள்ளலாம்…

இரண்டாவது பாதியில் திரைக்கதை, காட்சிகளை விளக்குவதற்கு சற்று நேரம் பிடிக்கிறது. அதை வைத்து இது ‘மெதுவாக நகரும் திரைக்கதை’ என யாராலும் குற்றம் சாட்டமுடியாது. இப்படமே இரண்டு மணிநேரம் தான் என்பது நினைவிருக்கட்டும். கதையின் ஓட்டத்தை பொறுத்து காட்சிகளை ஆழமாக விளக்கும் பொறுப்பும் உரிமையும் படைப்பாளிக்குண்டு.(உலகின் தலை சிறந்த படமாக கருதப்படும் ‘செவன் சாமுராய்’ படம் கிட்டதட்ட நான்கு மணி நேரம் ஓடும்.) இந்த படத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் படவில்லை,சுருங்க-விளங்க சொல்லியிருப்பது சிறப்பம்சம்.

 ஹிந்தியில் வெளிவந்த ‘சலாம் பாம்பே’ திரைப்படத்திற்கு பின் தெருவோர-சேரி மனிதர்களை பற்றிய சினிமாத்தனமில்லா சினிமா இதுவே. கற்பனை செய்துகொள்ளுங்கள். இயக்குனர் நினைத்திருந்தால் மசாலா காட்சிகளை புகுத்தி இருக்கலாம். இரண்டு சேரி நண்பர்கள். அவர்கள் ‘காபரே நடனம்’ பார்க்கிறார்கள் என்று காட்சி அமைத்து ஒரு ‘ஐட்டம் நம்பர்’ பாடலை சொருகி கல்லாவை நிரப்ப முயற்சித்திருக்கலாம். ஆனால் அந்த போலித்தனங்களை செய்யாததே அவர் ஒரு உன்னத படைப்பாளி என்பதற்கு சான்று. ஒரு படைப்பாளியின் முயற்சிகளும்-சிந்தனைகளும் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் படைப்புலகில் அவனுக்கொரு நிரந்தர-உயர்ந்த இடம் வந்து சேர்வத்தை யாராலும் தடுக்க இயலாது .

இசை

‘லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்’ என டைட்டிலில் பிரத்யேகமாக குறிப்பிட்டிருக்கிறார்கள், அதற்க்கு நியாமும் செய்திருக்கிறார்கள். கதையின் தேவையை மட்டும் உணர்ந்த இசை. ஆடம்பரமற்ற அந்த இசை ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

இசையில் பல உலகத் திறமைகள் கை கோர்த்திருக்கிறது என்பது தெளிவு. இசை சற்று வித்தியாசமாக அமைந்திருப்பது படத்தின் பெரிய பலம்.

சமகால தமிழ் திரை உலகில் நம்பிக்கைக்குரிய ஓர் பாடலாசிரியர், நா.முத்துக்குமார்..வைரமுத்து, வாலி வரிசையில் அடுத்த இடம் பிடிக்க எல்லாத் தகுதிகளையும் பெற்றவர்.காதலியை தேவதை, உலகழகி  என வர்ணித்து வந்துக் கொண்டிருந்த பாடல்களுக்கு மத்தியில் ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை’ என்று முத்தாய்ப்பாக அவர் எழுதிய சரணம் நினைவிருக்கலாம்.அவரே இந்த படத்திற்க்கும் பாடல்களை எழுதியுள்ளார், மீண்டும் முத்தாய்பான வரிகள்.

“வானத்தையே எட்டி பிடிப்பேன் ” என்ற எளிமையான வரிகளால் வலிகளின் ஆழங்களை விளக்குகிறார் பாடலாசிரியர்.

நடிகர்கள்

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. திரைக்கு பின் இருப்பவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தும், திரையில் உலாவும் நடிகர்கள் தங்கள் பணியை ஒழுங்காக செய்யாத பட்சத்தில் வெற்றியை சுவைத்திட முடியாது. எல்லோரும் திறம்பட வேலை செய்தும் எல்லோருக்கும் அங்கிகாரத்தை பகிர்ந்தாளிக்காமல் விடுவது கலைஞர்களுக்கு சமுதாயம் செய்கிற துரோகம்.

பருத்தி வீரன் படத்தில் நடிகர்களை கண்டுகொண்டவர்கள், இயக்குனரை அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். நான் கடவுள் படத்தில் இயக்குனரை கண்டுகொண்டவர்கள், அதில் சிறு வேடமேனினும் பெரிதாய் நடித்த நடிகர்களை பாராட்ட மறந்துவிட்டனர்.

இப்படத்தில் திரைக்கு பின்னால் சிறப்பாக உழைத்தவர்களை போன்று, திரையில் நடித்த அனைவரும் தங்கள் வேலையை உணர்ந்து செவ்வன செய்துள்ளனர். மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலவகையான மனிதர்களை நாம் இங்கு கதாப்பாத்திரங்களாக சந்திக்கலாம்.

எத்தனை வகையான மனிதர்கள்! “கொஞ்ச வருஷம் வேலை செஞ்சா கடனை அடச்சிடலாம்” என்று கூறி சிறுவனை வடநாட்டிற்கு அழைத்து செல்லும் புரோக்கர்.

“கொஞ்சம் வருஷம் ஜெயில இருந்த போதும்” என்று கூறி இளைஞனை ஜெயிலுக்கு அழைத்துசெல்லும் போலீஸ்காரர், என நிறைந்திருக்கும் குரூரமான மனிதர்கள்.

தெருவில் விழுந்துகிடக்கும் ஒருவனுக்கு உணவு வாங்கித்தரும் விலைமாது, பின் ஒரு காட்சியில் அவன் தரும் பணத்தினை தயக்கத்துடன் பெற்று கொள்ளும் அதே பெண், ‘நீயும் கல்யாணம் காட்சி பண்ணி நல்லா வாழ வேணாமா’ என்று சொல்லும் தள்ளு வண்டிக்காரர், ‘நான் கடைசி வரைக்கும் உன் கூடவே இருக்கணும் நண்பா’ எனக் கூறும் கலைக் கூத்தாடி நண்பன், தன் பெண்ணை காப்பாற்ற எந்நேரமும் கத்திக் கொண்டே இருக்கும் தாய் என படம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்  விளிம்பு நிலை மனிதர்கள். அக்கதாப்பாதிரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் அத்தனை நடிகர்களும்.

இது ஒரு புறம் இருக்க, செல்போனிற்க்காக அலையும் பள்ளி மாணவி, தடம் மாறி திரியும் பணக்கார மாணவன் என உயர்குடி மனிதர்கள் இன்னொரு புறம். இரண்டு வாழ்க்கைத்தரங்களுக்குள்ள முரண்பாடு இங்கு காட்டப் படுகிறது. இங்கு இவர்கள் இப்படி, அவர்கள் அப்படி என்ற கம்யுனிச உபதேசம் செய்யப்படவில்லை.இரண்டு வகையான மனித வாழ்கையை அப்பட்டமாக படம் பிடித்திருக்கிறார்கள். அதில் இருக்கும் முரண்கள் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் உரைக்கும்… (Gods must be crazy என்றொரு ஆங்கிலபடத்தில் காட்டுவாசிகளுக்கும் நகர மனிதர்களுக்கும் இருக்கும் முரண் அருமையாக படம்பிடிக்கப் பட்டிருக்கும். அதை பார்க்கும் போதும் மனிதக் குளத்திலுள்ள வேறுபாடுகள் உரைக்கும்..)

படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு கதாநாயகிகள், தெருவோர இளைஞனாக நடித்திருக்கும் ஓர் கதாநாயகன், அவனின் நண்பனாக நடித்திருக்கும் ஒருவர்- இந்த நால்வரும் கதையை முன்னெடுத்து செல்வதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.

வேலைக்கார பெண்ணாக வருகிறார் ஒரு கதாநாயகி. பார்வையாலேயே நாயகனை வெட்டுவதே இவர் வேலை. வசனங்கள் இவருக்கு மிகக் குறைவு. ஆனால் இவரின் பார்வைகளும் முக அசைவுகளும் ஆயிரம் வசனம் பேசுகிறது.

பள்ளிகூட மாணவியாக வரும் இன்னொரு கதாநாயகியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார். ஆசையும் பயமும் ஒருங்கே நிறைந்த ஒரு கதாப்பாத்திரம். வீட்டில் நிலவும் கட்டுபாடுகள், அதை உடைக்க தூண்டும் ஆசைகள், அதன் பின் எழும்பும் பயத்தினை வெளிப்படுத்தும் விதம் என தனி முத்திரைப்பதிக்கிறார்.

வேலு என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் கதாநாயகன் உணர்வுபூர்வமான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். தாயை நினைத்து அழும் காட்சி தொடங்கி, இறுதியில் காதலிக்காக அழும் காட்சி  வரை இவர் நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது. கண்களை பணிக்க வைக்கும் அருமையான நடிப்பு. ஆர்பாட்டமில்லா நடிப்பு. சும்மா ஒருவர் அழுதுக் கொண்டிருந்தால் அது அளுகாச்சி படமாக ஆகியிருக்கும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. தன் கதாப்பாதிரத்தை முழுவதுமாக உணர்ந்து தெளிவாக செயற்பட்டிருக்கிறார்.பல இடங்களில் வேலு கதாபாத்திரம் கதையை தன் தோளில் சுமக்கிறது என்றால் அது மிகையல்ல. வருங்காலத்தில், ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் பட்சத்தில் இவர் சிறந்த நடிகராக உருவெடுத்திடுவார் என நம்பலாம்….

படத்தில் இழையோடும் ஒரு வகையான ‘ப்ளாக் ஹுமருக்கு’ வழிவகுத்திருப்பது கதாநாயகனின் நண்பன் கதாபாத்திரம். படத்திற்கு மிக முக்கியமான துணைக் கதாப்பாத்திரம் அவர்…

காட்சிகளின் பின்னியில் சிலஇடங்களில் ஒலிக்கும் பழைய பாடல்கள் காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றுகின்றது. இத்திரைப்படம் ஒவ்வொரு காட்சியாக செதுக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்…

தமிழ் திரையுலகில் திடிரென ஒரு இயக்குனர் நல்ல படம் கொடுப்பார். அதில் நடிகரும் நன்றாக நடித்திருந்தால் படம் சிறந்த படமாக வந்திடும். பின் காலப் போக்கில் நடிகர் ஆக்சன் ஹீரோவாக
உருவெடுக்க  வேண்டும் என்பதற்காக, தடமாறி தடுமாறி சென்றிடுவார்.அந்த இயக்குனரோ புத்திசாலியாக இருக்கும் பட்சத்தில்
தன் இடத்தை தக்க வைத்துக்கொள்வார். இல்லாவிடில் அவரும் காணமல் போய்விடுவார்.
பல ஜாம்பவான்களை வைத்துபடம் இயக்கிய பல இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் வெள்ளத்தில்
அடித்துசெல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் இயக்குனரை பற்றி அந்தக் கவலை வேண்டாம். சிட்டிசன் என்ற ஒரு படம் வெளிவரயில்லையெனில் சாமுராய் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அதன்பின் இவர் துவளாது ‘காதல்’ போன்ற அருமையான படைப்புகளை கொடுத்திருக்கிறார். வருங்காலத்திலும் அதுபோன்ற நல்ல படைப்புகளை அவர் கொணர்வார் என நம்புவோம்..

இயக்குனரும், நடிகரும் தடுமாறும்பட்சத்தில் அவர்கள் தந்த சிறந்த படைப்பும் காற்றில் கரைந்து போகும்….ஆனால் சில படங்கள் மட்டுமே யார் எப்படி சென்றாலும் காலம் எப்படி சூழன்றாலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொள்ளும், உதிரிப்பூக்கள், பருத்திவீரன், கற்றதுதமிழ் போன்று..அவ்வாறான படங்களில் பணிபுரிபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அந்த படத்தின் பெயரோடு சேர்ந்து அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும். இத்திரைப்படமும் அவ்வாறான படமே.. இந்த படைப்பாளிகளும் கலைஞர்களும் இந்த உன்னதமான படைப்போடு சேர்ந்து வாழ்ந்துக்கொண்டிருக்கப்போகிறார்கள்…

சிறந்த நடிகர்கள், சிறந்த ஒளிப்பதிவு படத்தொகுப்பு, சிறந்த தொழில்நுட்பம், சிறந்த திரைக்கதை-இயக்கம் என பல விஷயங்கள் சிறப்பாக அமையப்பெற்ற இப்படம் தமிழ் திரைபடவுலகில் மிக முக்கியமான படம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

நாற்பது வருடங்களாக உதிராமல் குலுங்கிக் கொண்டிருக்கும் உதிரிப்பூக்கள் போல
இத்திரைப்படமும் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கப் போகிறது. இனிமேல் வரப்போகும் பல சுயாதீனப் படைப்புகளுக்கு ‘வழக்கு எண் 18/9’ என்ற இப்படமே முன்னோடி என்பதால், இப்படகுழுவினர் அனைத்து திசைகளிலிருந்தும் பாராட்டுகளுக்கு தகுதியானவாராகிறார்கள். இக்குழுவினரை மனவிட்டு பாராட்டிடுவோம்…

உலகத் திரைப்படவிழாவிற்க்கு செல்லும் தமிழ் படங்கள் அனைத்தும் இந்திய துணைக்கண்டத்தை ஒரேயடியாக தாண்டி விடுவதாலோயென்னவோ, தென்னாடிற்க்கு வெளியே தமிழ் படங்களை பற்றி யாருக்கும் தெரிவதில்லை.அந்த நிலையினை தமிழ் படைப்பாலிகள் மாற்ற வேண்டும். முதலில் இந்தியா முழுக்க இது போன்ற சிறந்த தமிழ் படங்கள் எடுத்துச் செல்லப் பட வேண்டும்.

ஒரு படைப்பின் வெற்றி மக்களின் ரசனையையே வெளிப்படுதுகிறது. தரமான படங்கள் தோற்பதும், மசாலா படங்கள் வெற்றி பெறுவதும் தாழ்ந்த ரசனையையே காட்டுகிறது. அவ்வாறான மசாலா தமிழ் படங்கள் சில இந்திய அளவில் முன்னமே உலவத் தொடங்கிவிட்டதால், தமிழ் திரையுலகின் மீது ஒரு வகையான கீழ்தர்மான பார்வையே படர்ந்துள்ளது.

‘வழக்கு எண் 18/9’ போன்ற ஒரு உன்னத படைப்பு இந்திய அளவில் எடுத்துச் செல்லப்படும் பட்சத்தில், இது இன்னொரு ‘பதேர் பாஞ்சாலி’ என கருதப்படும். தமிழ் படங்கள் மீதான மதிப்பு உயரும். இங்கு நிறைய தகுதியான படைப்பாளிகள் இருப்பதால், அவர்கள் சிறந்த தமிழ் படங்களை இந்தியா முழுக்க இனியாவது எடுத்து சென்று தமிழ் திரையுலகின் மதிப்பினை உயர்த்துவார்கள் என நம்புவோம்…