வழக்கு எண் 18/9


சினிமா என்பது 24 lies per second (24 பொய்கள்) என்று ஒரு பெரிய இயக்குனர் குறிப்பிட்டார்.அவ்வாறிருக்கவேண்டிய அவசியமில்லை, சினிமாவில் சினிமாத்தனம் கலக்காத எதார்த்தமும் சாத்தியம் என்பது உலக சினிமா அறிந்தவர்களின் கருத்து. அந்த கருத்து மீண்டும் ஒரு முறை தமிழ் சினிமாவில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது, வழக்கு எண் 18/9 என்ற ஒரு உன்னத படைப்பின் மூலம்….

திரைக்குப் பின் பணிப்புரிந்திருக்கும் தேர்ந்த படைப்பாளிகள், திரையில் வெறும் புது முகங்களை உலாவவிட்டு ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு 

முதல் சில காட்சிகளுக்கு பின் சில unusual கேமரா மூவ்மெண்டுகளுடன் படம் நகரத் தொடங்குகிறது.அதுவே படத்தின் மீது ஒரு புது வகையான பிரமிப்பை ஏற்ப்படுத்துகின்றது. அந்த பிரமிப்புகளையும் எதிர்ப்பார்புகளையும் இறுதிவரை தக்க வைத்துக் கொள்ள பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர், அதில் வெற்றி பெற்றும் இருக்கிறார்.

சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களில், தொழில்நுட்ப அம்சங்கள் வியக்கத்தக்க வைக்கும் அளவிற்க்கு இருக்க வேண்டியதில்லை என ஏனோ இங்கு நம்பப் படுகிறது. பல நல்ல கதை கொண்ட திரைப்படங்கள் வெறும் நாடக பாணியில் அமைந்திருப்பது நினைவிருக்கலாம். அந்த குறுகிய நம்பிக்கைகளை அவ்வப்போது சில படைப்பாளிகள் உடைத்துக் கொண்டிருக்கின்றனர். ‘கற்றது தமிழ்’ போன்ற திரைப்படங்கள் கதையம்சம், மேக்கிங் என அனைத்திலும் உலகத்தரம் வாய்ந்த ஒன்று. அந்த வரிசையில் நாம் வழக்கு எண் 18/9 படத்தை இணைத்திடலாம்.

புதிய தொழில்நுட்பங்கள் அவ்வப்போது பலரால் தமிழ் திரையுலகில் அறிமுகப் படுத்தப் படுகிறது. பல புதிய முயற்சிகள் மேற்க்கொள்ள படுகின்றன. ஆனால் அந்த முயற்சிகள் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு  எடுத்துச் செல்ல வேண்டும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த முயற்சிகள் வீணாகிப் போவதை தடுக்கவோ தவிர்க்கவோ இயலாது. ஒரு முக்கிய அந்நிய தொழிற்நுட்பத்தை ஒரு இயக்குனர் பல கோடி செலவு செய்து இங்கு அறிமுகப் படுத்துகிறாரென்றால்,அவர் பெருமை பட்டுக் கொள்ளலாமேவொழிய அம்முயற்சியால் யாதொரு பயனும் விழையாது. காரணம், பல கோடி மூலதனம் எனும் பட்சத்தில் எல்லாராலும் அம்முயர்ச்சியை பின்பற்ற இயலாது.

“புதிய முயற்சி என்ற பெயரில், வெறும் அறியாமையினால் 30 வருடதிர்க்கு முன் எங்கோ-எவரோ செய்த ‘புதிய’ முயற்சியை செய்திடாதீர்கள்” என்கிறார் ஜோசப் வீ மாசலி என்ற ஒளிப்பதிவாளர். புதிய முயற்சி என்ற பெயரில் ஏதோ ஒன்றை செய்திடக் கூடாது என்பதே அவரின் கருத்து.

அதே சமயத்தில் எளிதாக அனைவராலும் பின்பற்றக் கூடிய முயற்சிகள் ஒழுங்காக-சரியானவர்களை சென்றடையாத பட்சத்தில் அந்த முயற்சிகளும் வீண்.

டிஜிட்டல் ஒளிப்பதிவு, ரெட் ஒன் காமிரா உபயோகம் என பல முயற்சிகள் இங்கு மேர்க்கொள்ளப் படுகின்றன. மும்பை எக்ஸ்பிரஸ், தவமாய் தவமிருந்து, அச்சமுண்டு அச்சமுண்டு என பல படங்களை  ஒளிப்பதிவில் புதுமை செய்ததற்க்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.ஆனால் ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தில் மிகவும் பாராட்டுதலுக்குறிய ஓர் முயற்சி செய்யப்பட்டுள்ளது. Canon EOS 7D என்ற விலை அதிகமில்லா ஒரு DSLR கேமராவினை உபயோகப் படுத்தியுள்ளனர். இது எல்லோராலும்  எளிதாக பின்பற்ற முடிந்த ஒன்று.

DSLR கேமராவில் எடுக்கப் பட்ட இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படம், சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணி….

 ‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஒளிப்பதிவில் செய்யப்பட்ட இம்முயற்சி வெற்றிப் பெற்றுருக்கிறது. இது நிச்சயம் பல திறமைசாலிகளுக்கு சொர்க்க வாசலை திறந்து விட்டுருக்கிறது. இனி நிறைய சுயாதீன திரைப் படைப்பாளிகள் குறைந்த செலவில் நிறைய தரமான படங்களை தரப் போகிறார்கள் என்பது உறுதி…அதற்க்கு காரணமாய் அமைந்த இப்படக் குழுவினை பாராட்ட வேண்டியது ஒவ்வொரு ரசிகனின் கடமை.

திரைக்கதை 

ஒரு எளிமையான கதை கருவிற்கு, ஆழமான திரைக்கதை எழுதிடுவது சாதரணமான விடயமன்று. மிகவும் தேர்ந்த திரைக்கதையாசியரால்தான் அது சாத்தியப்படும். இப்படத்தின் திரைக்கதையாசியர் தன் திறமையை மீண்டும் நிருபித்திருக்கிறார். அவர்  தனது  முந்தைய படங்களில் எழுதிய அருமையான திரைக் கதைகளைவிட, இத்திரைக்கதை இன்னும் ஆழமாக-அழகாக அமைந்துள்ளது.

பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘ஹாலிவுட்’ திரையுலகிலேயே யாரும் ‘ஒரிஜினல் திரைக்கதைகள்’ எழுதிடுவதில்லை.அங்கு எழுதப்படுவது பெரும்பாலும் தழுவல் திரைக்கதைகளே. ஆனால் தமிழ் படைப்பாளிகளால் மிகவும் எளிதாக ‘ஒரிஜினல் திரைக்கதைகள்’ எழுதிட முடியும்.திரு.பாக்கியராஜ் போன்றோர்கள் அதற்க்கு உதாரணம்.அதை நினைத்து நாம் நிச்சயம் பெருமைபட்டுக் கொள்ளலாம்…

இரண்டாவது பாதியில் திரைக்கதை, காட்சிகளை விளக்குவதற்கு சற்று நேரம் பிடிக்கிறது. அதை வைத்து இது ‘மெதுவாக நகரும் திரைக்கதை’ என யாராலும் குற்றம் சாட்டமுடியாது. இப்படமே இரண்டு மணிநேரம் தான் என்பது நினைவிருக்கட்டும். கதையின் ஓட்டத்தை பொறுத்து காட்சிகளை ஆழமாக விளக்கும் பொறுப்பும் உரிமையும் படைப்பாளிக்குண்டு.(உலகின் தலை சிறந்த படமாக கருதப்படும் ‘செவன் சாமுராய்’ படம் கிட்டதட்ட நான்கு மணி நேரம் ஓடும்.) இந்த படத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் படவில்லை,சுருங்க-விளங்க சொல்லியிருப்பது சிறப்பம்சம்.

 ஹிந்தியில் வெளிவந்த ‘சலாம் பாம்பே’ திரைப்படத்திற்கு பின் தெருவோர-சேரி மனிதர்களை பற்றிய சினிமாத்தனமில்லா சினிமா இதுவே. கற்பனை செய்துகொள்ளுங்கள். இயக்குனர் நினைத்திருந்தால் மசாலா காட்சிகளை புகுத்தி இருக்கலாம். இரண்டு சேரி நண்பர்கள். அவர்கள் ‘காபரே நடனம்’ பார்க்கிறார்கள் என்று காட்சி அமைத்து ஒரு ‘ஐட்டம் நம்பர்’ பாடலை சொருகி கல்லாவை நிரப்ப முயற்சித்திருக்கலாம். ஆனால் அந்த போலித்தனங்களை செய்யாததே அவர் ஒரு உன்னத படைப்பாளி என்பதற்கு சான்று. ஒரு படைப்பாளியின் முயற்சிகளும்-சிந்தனைகளும் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் படைப்புலகில் அவனுக்கொரு நிரந்தர-உயர்ந்த இடம் வந்து சேர்வத்தை யாராலும் தடுக்க இயலாது .

இசை

‘லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்’ என டைட்டிலில் பிரத்யேகமாக குறிப்பிட்டிருக்கிறார்கள், அதற்க்கு நியாமும் செய்திருக்கிறார்கள். கதையின் தேவையை மட்டும் உணர்ந்த இசை. ஆடம்பரமற்ற அந்த இசை ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

இசையில் பல உலகத் திறமைகள் கை கோர்த்திருக்கிறது என்பது தெளிவு. இசை சற்று வித்தியாசமாக அமைந்திருப்பது படத்தின் பெரிய பலம்.

சமகால தமிழ் திரை உலகில் நம்பிக்கைக்குரிய ஓர் பாடலாசிரியர், நா.முத்துக்குமார்..வைரமுத்து, வாலி வரிசையில் அடுத்த இடம் பிடிக்க எல்லாத் தகுதிகளையும் பெற்றவர்.காதலியை தேவதை, உலகழகி  என வர்ணித்து வந்துக் கொண்டிருந்த பாடல்களுக்கு மத்தியில் ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை’ என்று முத்தாய்ப்பாக அவர் எழுதிய சரணம் நினைவிருக்கலாம்.அவரே இந்த படத்திற்க்கும் பாடல்களை எழுதியுள்ளார், மீண்டும் முத்தாய்பான வரிகள்.

“வானத்தையே எட்டி பிடிப்பேன் ” என்ற எளிமையான வரிகளால் வலிகளின் ஆழங்களை விளக்குகிறார் பாடலாசிரியர்.

நடிகர்கள்

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. திரைக்கு பின் இருப்பவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தும், திரையில் உலாவும் நடிகர்கள் தங்கள் பணியை ஒழுங்காக செய்யாத பட்சத்தில் வெற்றியை சுவைத்திட முடியாது. எல்லோரும் திறம்பட வேலை செய்தும் எல்லோருக்கும் அங்கிகாரத்தை பகிர்ந்தாளிக்காமல் விடுவது கலைஞர்களுக்கு சமுதாயம் செய்கிற துரோகம்.

பருத்தி வீரன் படத்தில் நடிகர்களை கண்டுகொண்டவர்கள், இயக்குனரை அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். நான் கடவுள் படத்தில் இயக்குனரை கண்டுகொண்டவர்கள், அதில் சிறு வேடமேனினும் பெரிதாய் நடித்த நடிகர்களை பாராட்ட மறந்துவிட்டனர்.

இப்படத்தில் திரைக்கு பின்னால் சிறப்பாக உழைத்தவர்களை போன்று, திரையில் நடித்த அனைவரும் தங்கள் வேலையை உணர்ந்து செவ்வன செய்துள்ளனர். மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலவகையான மனிதர்களை நாம் இங்கு கதாப்பாத்திரங்களாக சந்திக்கலாம்.

எத்தனை வகையான மனிதர்கள்! “கொஞ்ச வருஷம் வேலை செஞ்சா கடனை அடச்சிடலாம்” என்று கூறி சிறுவனை வடநாட்டிற்கு அழைத்து செல்லும் புரோக்கர்.

“கொஞ்சம் வருஷம் ஜெயில இருந்த போதும்” என்று கூறி இளைஞனை ஜெயிலுக்கு அழைத்துசெல்லும் போலீஸ்காரர், என நிறைந்திருக்கும் குரூரமான மனிதர்கள்.

தெருவில் விழுந்துகிடக்கும் ஒருவனுக்கு உணவு வாங்கித்தரும் விலைமாது, பின் ஒரு காட்சியில் அவன் தரும் பணத்தினை தயக்கத்துடன் பெற்று கொள்ளும் அதே பெண், ‘நீயும் கல்யாணம் காட்சி பண்ணி நல்லா வாழ வேணாமா’ என்று சொல்லும் தள்ளு வண்டிக்காரர், ‘நான் கடைசி வரைக்கும் உன் கூடவே இருக்கணும் நண்பா’ எனக் கூறும் கலைக் கூத்தாடி நண்பன், தன் பெண்ணை காப்பாற்ற எந்நேரமும் கத்திக் கொண்டே இருக்கும் தாய் என படம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்  விளிம்பு நிலை மனிதர்கள். அக்கதாப்பாதிரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் அத்தனை நடிகர்களும்.

இது ஒரு புறம் இருக்க, செல்போனிற்க்காக அலையும் பள்ளி மாணவி, தடம் மாறி திரியும் பணக்கார மாணவன் என உயர்குடி மனிதர்கள் இன்னொரு புறம். இரண்டு வாழ்க்கைத்தரங்களுக்குள்ள முரண்பாடு இங்கு காட்டப் படுகிறது. இங்கு இவர்கள் இப்படி, அவர்கள் அப்படி என்ற கம்யுனிச உபதேசம் செய்யப்படவில்லை.இரண்டு வகையான மனித வாழ்கையை அப்பட்டமாக படம் பிடித்திருக்கிறார்கள். அதில் இருக்கும் முரண்கள் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் உரைக்கும்… (Gods must be crazy என்றொரு ஆங்கிலபடத்தில் காட்டுவாசிகளுக்கும் நகர மனிதர்களுக்கும் இருக்கும் முரண் அருமையாக படம்பிடிக்கப் பட்டிருக்கும். அதை பார்க்கும் போதும் மனிதக் குளத்திலுள்ள வேறுபாடுகள் உரைக்கும்..)

படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு கதாநாயகிகள், தெருவோர இளைஞனாக நடித்திருக்கும் ஓர் கதாநாயகன், அவனின் நண்பனாக நடித்திருக்கும் ஒருவர்- இந்த நால்வரும் கதையை முன்னெடுத்து செல்வதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.

வேலைக்கார பெண்ணாக வருகிறார் ஒரு கதாநாயகி. பார்வையாலேயே நாயகனை வெட்டுவதே இவர் வேலை. வசனங்கள் இவருக்கு மிகக் குறைவு. ஆனால் இவரின் பார்வைகளும் முக அசைவுகளும் ஆயிரம் வசனம் பேசுகிறது.

பள்ளிகூட மாணவியாக வரும் இன்னொரு கதாநாயகியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார். ஆசையும் பயமும் ஒருங்கே நிறைந்த ஒரு கதாப்பாத்திரம். வீட்டில் நிலவும் கட்டுபாடுகள், அதை உடைக்க தூண்டும் ஆசைகள், அதன் பின் எழும்பும் பயத்தினை வெளிப்படுத்தும் விதம் என தனி முத்திரைப்பதிக்கிறார்.

வேலு என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் கதாநாயகன் உணர்வுபூர்வமான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். தாயை நினைத்து அழும் காட்சி தொடங்கி, இறுதியில் காதலிக்காக அழும் காட்சி  வரை இவர் நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது. கண்களை பணிக்க வைக்கும் அருமையான நடிப்பு. ஆர்பாட்டமில்லா நடிப்பு. சும்மா ஒருவர் அழுதுக் கொண்டிருந்தால் அது அளுகாச்சி படமாக ஆகியிருக்கும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. தன் கதாப்பாதிரத்தை முழுவதுமாக உணர்ந்து தெளிவாக செயற்பட்டிருக்கிறார்.பல இடங்களில் வேலு கதாபாத்திரம் கதையை தன் தோளில் சுமக்கிறது என்றால் அது மிகையல்ல. வருங்காலத்தில், ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் பட்சத்தில் இவர் சிறந்த நடிகராக உருவெடுத்திடுவார் என நம்பலாம்….

படத்தில் இழையோடும் ஒரு வகையான ‘ப்ளாக் ஹுமருக்கு’ வழிவகுத்திருப்பது கதாநாயகனின் நண்பன் கதாபாத்திரம். படத்திற்கு மிக முக்கியமான துணைக் கதாப்பாத்திரம் அவர்…

காட்சிகளின் பின்னியில் சிலஇடங்களில் ஒலிக்கும் பழைய பாடல்கள் காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றுகின்றது. இத்திரைப்படம் ஒவ்வொரு காட்சியாக செதுக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்…

தமிழ் திரையுலகில் திடிரென ஒரு இயக்குனர் நல்ல படம் கொடுப்பார். அதில் நடிகரும் நன்றாக நடித்திருந்தால் படம் சிறந்த படமாக வந்திடும். பின் காலப் போக்கில் நடிகர் ஆக்சன் ஹீரோவாக
உருவெடுக்க  வேண்டும் என்பதற்காக, தடமாறி தடுமாறி சென்றிடுவார்.அந்த இயக்குனரோ புத்திசாலியாக இருக்கும் பட்சத்தில்
தன் இடத்தை தக்க வைத்துக்கொள்வார். இல்லாவிடில் அவரும் காணமல் போய்விடுவார்.
பல ஜாம்பவான்களை வைத்துபடம் இயக்கிய பல இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் வெள்ளத்தில்
அடித்துசெல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் இயக்குனரை பற்றி அந்தக் கவலை வேண்டாம். சிட்டிசன் என்ற ஒரு படம் வெளிவரயில்லையெனில் சாமுராய் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அதன்பின் இவர் துவளாது ‘காதல்’ போன்ற அருமையான படைப்புகளை கொடுத்திருக்கிறார். வருங்காலத்திலும் அதுபோன்ற நல்ல படைப்புகளை அவர் கொணர்வார் என நம்புவோம்..

இயக்குனரும், நடிகரும் தடுமாறும்பட்சத்தில் அவர்கள் தந்த சிறந்த படைப்பும் காற்றில் கரைந்து போகும்….ஆனால் சில படங்கள் மட்டுமே யார் எப்படி சென்றாலும் காலம் எப்படி சூழன்றாலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொள்ளும், உதிரிப்பூக்கள், பருத்திவீரன், கற்றதுதமிழ் போன்று..அவ்வாறான படங்களில் பணிபுரிபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அந்த படத்தின் பெயரோடு சேர்ந்து அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும். இத்திரைப்படமும் அவ்வாறான படமே.. இந்த படைப்பாளிகளும் கலைஞர்களும் இந்த உன்னதமான படைப்போடு சேர்ந்து வாழ்ந்துக்கொண்டிருக்கப்போகிறார்கள்…

சிறந்த நடிகர்கள், சிறந்த ஒளிப்பதிவு படத்தொகுப்பு, சிறந்த தொழில்நுட்பம், சிறந்த திரைக்கதை-இயக்கம் என பல விஷயங்கள் சிறப்பாக அமையப்பெற்ற இப்படம் தமிழ் திரைபடவுலகில் மிக முக்கியமான படம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

நாற்பது வருடங்களாக உதிராமல் குலுங்கிக் கொண்டிருக்கும் உதிரிப்பூக்கள் போல
இத்திரைப்படமும் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கப் போகிறது. இனிமேல் வரப்போகும் பல சுயாதீனப் படைப்புகளுக்கு ‘வழக்கு எண் 18/9’ என்ற இப்படமே முன்னோடி என்பதால், இப்படகுழுவினர் அனைத்து திசைகளிலிருந்தும் பாராட்டுகளுக்கு தகுதியானவாராகிறார்கள். இக்குழுவினரை மனவிட்டு பாராட்டிடுவோம்…

உலகத் திரைப்படவிழாவிற்க்கு செல்லும் தமிழ் படங்கள் அனைத்தும் இந்திய துணைக்கண்டத்தை ஒரேயடியாக தாண்டி விடுவதாலோயென்னவோ, தென்னாடிற்க்கு வெளியே தமிழ் படங்களை பற்றி யாருக்கும் தெரிவதில்லை.அந்த நிலையினை தமிழ் படைப்பாலிகள் மாற்ற வேண்டும். முதலில் இந்தியா முழுக்க இது போன்ற சிறந்த தமிழ் படங்கள் எடுத்துச் செல்லப் பட வேண்டும்.

ஒரு படைப்பின் வெற்றி மக்களின் ரசனையையே வெளிப்படுதுகிறது. தரமான படங்கள் தோற்பதும், மசாலா படங்கள் வெற்றி பெறுவதும் தாழ்ந்த ரசனையையே காட்டுகிறது. அவ்வாறான மசாலா தமிழ் படங்கள் சில இந்திய அளவில் முன்னமே உலவத் தொடங்கிவிட்டதால், தமிழ் திரையுலகின் மீது ஒரு வகையான கீழ்தர்மான பார்வையே படர்ந்துள்ளது.

‘வழக்கு எண் 18/9’ போன்ற ஒரு உன்னத படைப்பு இந்திய அளவில் எடுத்துச் செல்லப்படும் பட்சத்தில், இது இன்னொரு ‘பதேர் பாஞ்சாலி’ என கருதப்படும். தமிழ் படங்கள் மீதான மதிப்பு உயரும். இங்கு நிறைய தகுதியான படைப்பாளிகள் இருப்பதால், அவர்கள் சிறந்த தமிழ் படங்களை இந்தியா முழுக்க இனியாவது எடுத்து சென்று தமிழ் திரையுலகின் மதிப்பினை உயர்த்துவார்கள் என நம்புவோம்…

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.