சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்று போடுவது போல் தான் ஒரு வங்கி மேலாளரின் வாழ்க்கையும். திடிரென்று ஒரு கிளையலிருந்து வேறொரு கிளைக்கு மாற்றல் செய்து விடுவார்கள். அப்படிமாறி புதிய கிளைக்கு செல்லும் போது அதற்கு முன்பிருந்த மேலாளர் விட்டுச் சென்ற சிக்கல்கல்களை எல்லாம் தீர்த்துவைப்பது புதிதாக அந்த சீட்டிற்கு வரும் மேலாளரின் பொறுப்பாகிவிடும். அப்படிதான் சித்ரா ஜெயக்குமாரின் வழக்கு வந்தது. சித்ரா ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில் மனித வள மேலாளராக பணியாற்றிய போது என் வங்கி கிளையில் பத்து லட்சம் தனிநபர் கடன் பெற்றிருந்தார். பின்னர் அந்த வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தொழிற்சாலையை மூடியதில் அவருக்கு வேலை போனது. கடனும் சரியாக செலுத்தப்படாமல் வாரக்கடனானது. கடனை திருப்பி செலுத்த அவர் கொடுத்த காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்தன.
வங்கியை பொறுத்த வரை ஒரு கடன் வாரக்கடனாகி விட்டிருந்த மூன்றாண்டுகளுக்குள் கடனை திருப்பி வசூலிக்க முடியாமல் போகும் போது கடனாளி மீது வழக்கு பதிய வேண்டும் அல்லது தன் கடன் நிலுவை தொகை சரியாக உள்ளது என்ற ஒப்புதல் கையெழுத்தை அவரிடம் பெற வேண்டும். இல்லாமல் போனால் சட்ட ரீதியாக நிவாரணம் கோருவது சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால் கடன்தாரரிடமிருந்து அந்த கையெழுத்தை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. முதலில் கடன்காரர்கள் மாற்றுவது தங்கள் தொலைபேசி எண்ணை தான். அவர்களின் எண்ணிற்கு அழைத்தால் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ அல்லது ‘சுவிட்ச்ட் ஆப்’ என்பதே பதிலாக வரும். தொலைபேசி எண்ணை மாற்றாமல் வைத்திருந்தாலும் போனை எடுத்து, “ராங் நம்பர்” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு வைத்துவிடுவார்கள். பொய்யை அழுத்தமாக சொல்லும் போது அது உண்மையாகிவிடுவது சகஜம் தானே!
ஒரு முறை ஒரு கடன்காரர், மிக நல்ல உத்தியோகத்தில் இருப்பவர், “இல்லைங்க அவர் செத்து போய்ட்டார்” என்று தன்னைப் பற்றி தானே சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டார். “அவருக்கு மனநலம் சரியில்லாம போச்சுங்க…” “அவர் தேசாந்தரம் போய்ட்டாருங்க” என்று தங்களை பற்றி தாங்களே சொல்லிக் கொள்ளக் கூடிய பலரோடு நான் உரையாடி இருக்கிறேன். மறுமுனையில் பேசுபவர்களின் முகம் தெரியாது என்பதாலும், புதிதாக சென்ற கிளை என்பதால் அந்த வாடிக்கையாளரின் குரல் நமக்கு பரிட்சயம் இருக்காது என்பதாலும், அவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்கள் போல என்று கூட நம்பி இருக்கிறேன். சில கடன்காரர்கள் தாங்கள் கடனை கட்ட விரும்புவதாகவும், ஆனால் தங்களிடம் போதிய வருமானம் இல்லை என்றும் நம்பும்படி சொல்லிவிட்டு, தங்களின் குடும்ப கஷ்ட்டத்தை போனிலேயே சொல்லிக்கொண்டே போவார்கள். காதுகொடுத்து அவர்களின் கஷ்டத்தை கேட்டாலாவது அவர்கள் மனமிறங்கி கடனை அடைத்துவிடமாட்டார்களா என்கிற நப்பாசையில் நானும் அவர்கள் சொல்வதை நிதானமாக கேட்பேன். கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இது போல விசித்திர அனுபவங்களின் தொகுப்பாகவே ஒரு வங்கி மேலாளரின் வாழ்க்கை இருக்கிறது.
போனில் தானே ஏமாற்றுகிறார்கள் நேரில் செல்லலாம் என்றால் சிலர் வீடு மாறி போய்விடுவார்கள். சிலர் வீட்டினுள்ளே இருந்துகொண்டே வேறு ஆளை அனுப்பி ‘அவர் இல்லை’ என்று சொல்ல வைப்பார்கள். சிலர் ஒரு படி மேலே சென்று, “நான் அவரோடு பிரதர்ங்க, அவர் வந்தா சொல்றேன்”என்று சொல்லிவிட்டு செல்வார்கள். அவர்கள் சொவ்லது பொய் என்று நாம் நிரூபிக்க முடியாது. அதனாலேயே அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு திரும்பி வர வேண்டும். அவர்கள் தங்களின் அடையாளத்தை ஒப்புக் கொண்டாலும், அவ்வளவு எளிதாக எதிலும் கையெழுத்து போடமாட்டார்கள்.
“என்னங்க இது?” என்று கோபமாக கேட்பார்கள்.
“பாலன்ஸ் கன்பர்மேசன் லெட்டர் சார். உங்க லோன் பாலன்ஸ் இவ்ளோன்னு நீங்க உறுதி பண்றீங்க. இது வெறும் பார்மாலிட்டி தான். லிமிடேஷன் பீரியட் முடிறதுக்குள்ள உங்க கிட்ட கன்பர்மேசன் கையெழுத்து வாங்கணும். அவ்வளவுதான். நீங்க படிச்சு பார்த்து போடுங்க. வாங்காம போனா, நாங்க கோர்ட்ல கேஸ் போட்டே ஆகணும்…”
சிலர் புரிந்து கொண்டு கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவார்கள். கூடுதல் மூன்று ஆண்டுகள் நேரம் கிடைக்கும் என்று ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். காலப்போக்கில் கடன்தாரரும் வங்கியும் சமரசமாக பேசி கணக்கை தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் கடன்தாரர் கையெழுத்திட
மறுத்தால் வங்கிக்கு நீதிமன்றத்தை நாடுவதே மீதமிருக்கும் ஒரே வழி. ஆனால் வழக்கு பதிவதற்கு கோர்ட் கட்டணம், வக்கீலின் செலவு என எல்லாமே வாடிக்கையாளர் திருப்பி தரும் வரை வங்கியின் கணக்கில் தான் சேரும். அதனாலேயே இயன்ற வரை வாடிக்கையாளரிடம் பேசி பாலன்ஸ் கன்பர்மேசன் லெட்டரில் கையெழுத்து வாங்க முயற்சிப்போம். இதுபோல நிலுவை தொகையை உறுதி செய்து கையெழுத்தும் வாங்காமல், நீதிமன்றத்தில் வழக்கும் பதியாமல் விட்டுவிட்டால் அந்த நேரத்தில் கிளையில் வேலை செய்த மேலாளர்தான் வரப்போகும் அனைத்து சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் சம்பளத்திலிருந்து கூட காசை கொடுக்க வேண்டிய சூழல் மேலாளருக்கு வரக் கூடும். இதனாலேயே மேலாளர்கள் எப்படியாவது ஒரு வழக்கை போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ள பார்ப்பார்கள்.
தன் சர்வீஸின் கடைசி ஆண்டிலிருந்த என் கிளையில் முந்தைய மேலாளர், தான் ஓய்வு பெரும் போது எந்த சிக்கலும் வரக் கூடாது என்று எண்ணி சித்ரா ஜெயக்குமாரின் மீது காசோலை மோசடி வழக்கு போட்டுவிட்டு நிம்மதியாக பணிஓய்வு பெற்றுவிட்டார். அவர் இடத்திற்கு வந்த நான் மாட்டிக் கொண்டேன். நான் அந்த கிளையில் இணைந்ததும், முந்தைய மேலாளருக்கு பதில் என் பெயரை வழக்கில் இணைக்க ‘சப்ஸ்டிட்யூஷன் பெட்டிஷன்’ போட வேண்டும் என்று என் வங்கி நிர்ணயித்திருந்த வழக்கறிஞர் சொன்னார்.
“நான் ப்ரூப் ரெடி பண்ணிறேன், வெள்ளிக்கிழமை கோர்ட்டுக்கு வந்துருங்க…” என்றார். நான் சென்றதுமே ஏதோ என் பெயரை சேர்த்துக்கொண்டு, விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கி விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் தான் நான் முதன்முதலில் சிவில் கோர்ட்டின் படிகளில் ஏறினேன். தனக்கு ஹை கோர்ட்டில் வேலையிருப்பதாக சொன்ன எங்களுடைய வங்கியின் வக்கீல் தன்னுடைய ஜுனியர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று ஒரு பெண் வக்கீலின் நம்பரை கொடுத்தார். அந்த வக்கீல், “இதெல்லாம் சின்ன கேஸ் சார், என் அசிஸ்டன்ட்ட அனுப்புறேன்” என்று வேறொரு வக்கீலின் பெயரை சொன்னார்.
அந்த பெண் வக்கீலுக்கு முப்பத்தைந்து வயதிற்குள் தான் இருக்கும். அவருடைய அசிஸ்டன்ட் இன்னும் இளையவராக இருக்கக்கூடும் என்று எண்ணி நான் நின்றுகொண்டிருந்த வேளையில் தான், ஒரு ஐம்பத்தைந்து வயதுக்காரர் வந்து நின்றார்.
“நான் குமார். மேடத்தோட அஸிஸ்டண்ட்” என்று அறிமுகம் செய்து கொண்டார்.
“நான் முன்னாடி தான் சார் இருப்பேன். நீங்க பேங்க் பேர கூப்பிடும் போது வாங்க, நான் ரீடர் கிட்ட பேசுறேன்” என்றார்.
அதற்க்கு முன்பு வழக்குகளை சந்தித்த அனுபவம் இல்லாததால், எங்கள் வங்கியின் பெயரையும் சித்ராவின் பெயரையும் அழைத்ததுமே, நான் கூண்டில் ஏற போனேன். அப்படி எல்லாரும் கூண்டிற்குள் நின்று நான் சொல்வதெல்லாம் உண்மை என்று பேசுவதை நான் பல படங்களில் பார்த்திருக்கிறேன். நானும் அதற்கு தயாராக இருந்தேன். ஆனால் கூண்டின் வலது புறத்தில் அமர்ந்திருந்த வக்கீல் ஒருவர் என் கழுத்தில் இருந்த என் வங்கியின் ஐடி கார்ட் கயிறை பார்த்தவாறே,
“நீங்க கூண்டுக்கு வெளில நில்லுங்க, அக்யூஸ்ட் தான் உள்ள ஏறணும்” என்றார்.
அப்போது தான் நான் கூண்டில் ஏறிய சித்ராவை கவனித்தேன். கசங்கிய பழைய சுடிதார் அணிந்திருந்தார். ஒரு பெரிய நிறுவனத்தில் அவர் வேலை செய்ததாக அவரின் கடன் விண்ணப்ப படிவம் சொல்லியதற்கும் அவருடைய பாவமான தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனக்கும்கூட அவரை பார்ப்பதற்கு வருத்தமாக தான் இருந்தது.
“பேங்க்லயே பேசி தீர்க்குறத விட்டுட்டு, இப்டி கோர்ட்ல வந்து நிக்குறாங்களே” என்று எண்ணியவாறே ஜட்ஜை நோக்கினேன். அந்த நீதிபதி என்னை கோபமாக பார்ப்பது போல் இருந்தது.
“ஜட்ஜ பார்த்ததும் கும்பிடனும்” என்று வக்கீல் குமார் சொன்ன போது நான் ஏன் என்று கேட்காமல் தலை அசைத்திருந்தேன். அது நினைவிற்கு வரவே, நான் நீதிபதியை பார்த்து கும்பிட்டேன். சித்ரா கும்பிட்டாரா என்று கவனிக்கவில்லை. ஜட்ஜின் இருக்கைக்கு வெளியே கருப்பு கோட் அணிந்திருந்த உதவியாளர், “பதினெட்டு அஞ்சு” என்றார். சித்ரா கூண்டிலிருந்து இறங்கி சென்றார். எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. என்னை நோக்கி வந்த குமார், வழக்கு இன்னும் மூன்றுவாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக சொன்னார். அப்போது தான் “18.05” என்று அவர் சொன்னது, மே பதினெட்டு என்று புரிந்தது. இப்படியாக அந்த வழக்கிற்கு இரண்டு வருடங்கள் கூப்பிடும் போதெல்லாம் சென்று வந்த பிறகு தான் ஒரு நாள் என் கிளையின் முன்னாள் மேலாளருக்கு பதில் என் பெயரை ஏற்றுக் கொண்டார்கள்.
“என்ன சார்! என் பேரையே இப்பதான் சேர்த்திருக்காங்க. இந்த கேஸ் எப்படி முடியும்…”
“அதெல்லாம் அப்டித்தான் சார்” என்று சொல்லிவிட்டு சிரித்தார் குமார்.
தொடர்ந்து கோர்ட்டிற்கு சென்று வந்த காலக்கட்டத்தில் ஏராளமானோர் அங்கே வந்து போவதை கவனித்திருக்கிறேன். சிலர் கூண்டிற்குள் ஏறி நின்றதும், நீதிபதியின் இருக்கைக்கு அருகே இருக்கும் கருப்பு கோட்காரர் சப்தமாக கேட்பார், “உங்க கவுன்சில் வரலையா?”
அவர்கள் இல்லை என்பார்கள்.
“அடுத்த முறை உங்க வக்கீலோட தான் வரணும். கையெழுத்து போட்டுட்டு நகல் வாங்கிக்கோங்க…” என்பார் கருப்பு கோட்காரர். இதுபோல, வழக்கு சம்மந்தப்பட்ட ஒருவர் வந்திருந்தால் வேறொருவர் வந்திருக்க மாட்டார். எல்லோருமே வந்துவிட்டால், “பாஸ் ஓவர்” என்று சொல்லி வழக்கை தள்ளி போடுவார்கள். பல நாட்கள் இதை கவனித்தே நீதிமன்றத்தில் புழங்கும் வார்த்தைகளும் முறைகளும் எனக்கு பரிட்சையமாகிக் கொண்டிருந்தன.
“என்ன சார், இப்டி எல்லா கேசும் பாஸ் ஓவர் ஆகிகிட்டே இருக்கு… எப்பதான் விசாரிப்பாங்க…:” என்று ஒருமுறை குமாரிடம் கேட்டேன்.
“அதெல்லாம் அப்டித்தான் சார்” என்று சொல்லிவிட்டு சிரித்தார். அவர் சிரிப்பின் அர்த்தம் எனக்கு புரிந்ததே இல்லை. அதன் பின்னும் பல மாதங்கள் எங்கள் வழக்கு வளர்ந்து கொண்டே தான் போனது. நான் பல வேலைகளுக்கு இடையே கோர்ட் படி ஏறி இறங்கினேன். சித்ராவும் எப்போதும் போல பாவமாக வந்து நின்றார். ஒரே ஒரு முறை தான் அவரிடம் பேசினேன்.
“ஒவ்வொரு முறையும் வறதுக்கு வக்கீலுக்கு காசு சார். யார் கிட்ட இருக்கு! உடம்பு வேற முடிறது இல்ல?” என்று சித்ரா என்னிடம் புலம்பினார். ஒரு ஐம்பது வயது பெண்மணியை அப்படி அழைய விடுவது எனக்கு கஷ்டமாக இருந்தது.
“மேடம் லீகல் விசயத்த விட்ருவோம். லோன் வாங்குனா கட்டணும் தானே! கட்டி இருக்கலாமே? இல்லனா பாலன்ஸ் கன்பர்மேசன் பண்ணி கொஞ்சம் டைம் வாங்கிருக்கலாமே…”
“நான் உண்மையிலேயே காச கட்டலாம்னு தான் வந்தேன். அந்த மேனஜர் ஹெல்ப் பண்ணவே இல்ல, தேவை இல்லாம எப்போவோ டேட் போடாம கொடுத்த செக்க போட்டு என்ன இங்க இழுத்துவிட்டுட்டார்” என்றார்.
“நீங்க வேணும்னா பேங்க் வந்து ஒரு லெட்டர் எழுதி கொடுங்க மேடம். காம்ப்ரமைஸ் செட்டில்மென்ட் பண்ணிக்கலாம்னு,. நான் என் சர்க்கிள் ஆபிஸ்க்கு ரிக்கமன்ட் பண்றேன்…எவ்ளோநாள் இப்டியே போறது!. இத சால்வ் பண்ணனும்னு தான் எனக்கும் ஆசை”
“அவுட் ஆப் கோர்ட் பண்ணிட்டா கேச வாபஸ் வாங்கிடுவீங்க இல்ல சார்?” என்றார் சித்ரா
“நிச்சயமா மேடம்” என்றேன் நான் உறுதியாக. அன்று மாலையே எனக்கு எங்கள் வங்கியின் வக்கீலிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சார் நீங்க எதுக்கு ரெஸ்பாண்டன்ட் கிட்ட பேசுறீங்க. உங்க பேங்க நீங்க ரெப்ரசென்ட் பண்றீங்க.. அவ்ளோதான். மீதிலாம் நாங்க பாத்துக்குறோம்”
“இல்ல சார். அவங்க காம்ப்ரமைஸ் செட்டில்மெண்ட் வரேன்னு சொன்னாங்க…போன மேனஜர் தான் ஹெல்ப் பண்ணலயாம்.பாக்கவே பாவமா இருக்கு”
“சார், இதெல்லாம் ஒரு ட்ரிக். கோர்ட்ல அக்யூஸ்டா வந்து நிக்குற எல்லாரும் பாவமாதான் காமிச்சுப்பாங்க. வெளில அவங்க ஆட்டிட்யூடே வேற மாதிரி இருக்கும். டோன்ட் கெட் கேரிட் அவே வித் சச் திங்ஸ். காச கொடுக்கிறதா இருந்தா எப்போவோ கொடுத்துருக்க மாட்டாங்களா! உங்க பேங்க்ல காசு வாங்கிருக்காங்க, கட்டல. அவ்ளோதான். நாளைக்கு உங்கள பத்தி அடுத்த மேனஜர்கிட்ட வேறமாதிரி சொல்வாங்க…” என்றார்.
“அதுவரைக்கும் இந்த கேஸ் இழுக்குமா?” என்று கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை. அவருக்கு எப்படி நாங்கள் பேசியது தெரிந்தது என்று புரியாமலேயே நான் மீண்டும் மீண்டும் வழக்கிற்கு சென்று வந்தேன்.
ஒரு நாள் என்னருகே வந்த குமார், “அடுத்த வாரம் உங்கள க்ராஸ் எக்ஸாமைன் பண்ணுவாங்க, டீடெயில்ஸ் லாம் கேட்பாங்க சரியா சொல்லிடுங்க” என்றார்.
“சார் என்ன கேட்பாங்க?”
“செக் ப்ரெசென்ட் பண்ண டேட், அது எப்போ ரிட்டர்ன் ஆச்சு… எல்லாமே!”
“சார். இந்த லோன் கொடுக்கும் போது நான் இல்ல, கேஸ் போட்டதும் நான் இல்ல. கரெக்ட்டா சொல்ல முடியுமா.”
“அதெல்லாம் பயப்படாதீங்க சார். எவிடன்ஸ் இருக்குல்ல. அவங்க லோன் வாங்குனது உண்மை, செக்ல கையெழுத்து இருக்கு.. அப்பறம் என்ன.. இந்த கேஸ் கண்டிப்பா நிக்கும், நான் தான் உங்க கூட இருக்கேன்ல” என்றார். பல அடுத்த வாரங்கள் வந்த பின்னரே இறுதியாக ஒரு நாள் என்னை குறுக்கு விசாரணைக்கு அழைத்தார்கள்.
“சத்தியமாக சொல்கிறேன்” என்று சொல்லுங்கள் என்றார் ஜட்ஜின் அருகே இருந்த கருப்பு கோட்காரர். கையை முன்னே நீட்டி, அவர் சொன்னதை சொன்னேன். சித்ராவின் வழக்கறிஞர் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னேன். பெரிதாக ஒன்றையும் அவர் கேட்கவில்லை. உங்கள் பெயர் என்ன, நீங்கள் எந்த வங்கி, அங்கே என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள், காசோலையின் தொகை எவ்வளவு என்பது போல் ஒற்றை வரி கேள்விகள். குறுக்கு விசாரணை என்றதும் மடக்கி மடக்கி கேள்வி கேட்பார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“இது என் கட்சி காரரின் கையெழுத்தே இல்லை…” என்று சித்ராவின் வழக்கறிஞர் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ஏதோ எனக்கு சாதகமாக வாதாடுவதை போல் கேட்டுவிட்டு என்னை போக சொல்லிவிட்டார்.
என்னிடம் வந்த என் வழக்கறிஞர் குமார், “சார் கை குடுங்க. கேஸ் நின்றுச்சு. நான் தான் சொன்னேன்ல. அவங்க செக் கொடுத்தது உண்மை. அடுத்த விசாரணைல அவங்க ஏமாத்தணும்னு இன்டென்சன்ல தான் செக் கொடுத்தாங்கனு ப்ரூவ் பண்ணிரலாம்…” என்றார்.
இந்த கேஸ் இன்னும் வளரும் என்று நினைக்கும் போதே எனக்கு சோர்வு தட்டியது. நான் எதுவும் பேசாமல் பார்க்கிங் நோக்கி நடந்தேன். என் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் போது, சித்ராவின் வக்கீலும் குமாரும் ஒன்றாக கோர்ட் வாசலில் இருக்கும் டீக்கடையில் சிரித்து பேசிக்கொண்டிருந்ததை கவனித்தேன்.
“ஒவ்வொரு முறையும் வக்கீலுக்கு பீஸ் கொடுக்கணும்” என்று சித்ரா புலம்பியது காரணமே இல்லாமல் நினைவிற்கு வந்தது. “அதெல்லாம் அப்டித்தான் சார்” என்று குமார் சொல்வதும் நினைவிற்கு வந்தது.
“சீக்கிரம் வேற கிளைக்கு மாற்றல் வந்திடனும்” என்று மனதிற்குள் வேண்டியவாறே நான் அங்கிருந்து நகர்ந்தேன்.
***