கோர்ட்-சிறுகதை 

சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்று போடுவது போல் தான் ஒரு வங்கி மேலாளரின் வாழ்க்கையும். திடிரென்று ஒரு கிளையலிருந்து வேறொரு கிளைக்கு மாற்றல் செய்து விடுவார்கள். அப்படிமாறி புதிய கிளைக்கு செல்லும் போது அதற்கு முன்பிருந்த மேலாளர் விட்டுச் சென்ற சிக்கல்கல்களை எல்லாம் தீர்த்துவைப்பது புதிதாக அந்த சீட்டிற்கு வரும் மேலாளரின் பொறுப்பாகிவிடும். அப்படிதான் சித்ரா ஜெயக்குமாரின் வழக்கு வந்தது. சித்ரா ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில் மனித வள மேலாளராக பணியாற்றிய போது என் வங்கி கிளையில் பத்து லட்சம் தனிநபர் கடன் பெற்றிருந்தார். பின்னர் அந்த வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தொழிற்சாலையை மூடியதில் அவருக்கு வேலை போனது. கடனும் சரியாக செலுத்தப்படாமல் வாரக்கடனானது. கடனை திருப்பி செலுத்த அவர் கொடுத்த காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. 

வங்கியை பொறுத்த வரை ஒரு கடன் வாரக்கடனாகி விட்டிருந்த மூன்றாண்டுகளுக்குள் கடனை திருப்பி வசூலிக்க முடியாமல் போகும் போது கடனாளி மீது வழக்கு பதிய வேண்டும் அல்லது தன் கடன் நிலுவை தொகை சரியாக உள்ளது என்ற ஒப்புதல் கையெழுத்தை அவரிடம் பெற வேண்டும். இல்லாமல் போனால் சட்ட ரீதியாக நிவாரணம் கோருவது சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால் கடன்தாரரிடமிருந்து அந்த கையெழுத்தை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. முதலில் கடன்காரர்கள் மாற்றுவது தங்கள் தொலைபேசி எண்ணை தான். அவர்களின் எண்ணிற்கு  அழைத்தால் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ அல்லது ‘சுவிட்ச்ட் ஆப்’ என்பதே பதிலாக வரும்.  தொலைபேசி எண்ணை மாற்றாமல் வைத்திருந்தாலும் போனை எடுத்து, “ராங் நம்பர்” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு வைத்துவிடுவார்கள்.  பொய்யை அழுத்தமாக சொல்லும் போது அது உண்மையாகிவிடுவது சகஜம் தானே! 

ஒரு முறை ஒரு கடன்காரர், மிக நல்ல உத்தியோகத்தில் இருப்பவர், “இல்லைங்க அவர் செத்து போய்ட்டார்” என்று தன்னைப் பற்றி தானே சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டார். “அவருக்கு மனநலம் சரியில்லாம போச்சுங்க…” “அவர் தேசாந்தரம் போய்ட்டாருங்க” என்று தங்களை பற்றி தாங்களே சொல்லிக் கொள்ளக் கூடிய பலரோடு நான் உரையாடி இருக்கிறேன். மறுமுனையில் பேசுபவர்களின் முகம் தெரியாது என்பதாலும், புதிதாக சென்ற கிளை என்பதால் அந்த வாடிக்கையாளரின் குரல்  நமக்கு பரிட்சயம் இருக்காது என்பதாலும், அவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்கள் போல என்று கூட நம்பி இருக்கிறேன். சில கடன்காரர்கள் தாங்கள் கடனை கட்ட விரும்புவதாகவும், ஆனால் தங்களிடம் போதிய வருமானம் இல்லை என்றும் நம்பும்படி சொல்லிவிட்டு, தங்களின்  குடும்ப கஷ்ட்டத்தை போனிலேயே சொல்லிக்கொண்டே போவார்கள். காதுகொடுத்து அவர்களின் கஷ்டத்தை கேட்டாலாவது அவர்கள் மனமிறங்கி கடனை அடைத்துவிடமாட்டார்களா என்கிற நப்பாசையில் நானும் அவர்கள் சொல்வதை நிதானமாக கேட்பேன். கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இது போல விசித்திர அனுபவங்களின் தொகுப்பாகவே ஒரு வங்கி மேலாளரின் வாழ்க்கை இருக்கிறது. 

போனில் தானே ஏமாற்றுகிறார்கள் நேரில் செல்லலாம் என்றால் சிலர் வீடு மாறி போய்விடுவார்கள். சிலர் வீட்டினுள்ளே இருந்துகொண்டே வேறு ஆளை அனுப்பி ‘அவர் இல்லை’ என்று சொல்ல வைப்பார்கள். சிலர் ஒரு படி மேலே சென்று, “நான் அவரோடு பிரதர்ங்க, அவர் வந்தா சொல்றேன்”என்று சொல்லிவிட்டு செல்வார்கள். அவர்கள் சொவ்லது பொய் என்று நாம் நிரூபிக்க முடியாது. அதனாலேயே அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு திரும்பி வர வேண்டும். அவர்கள் தங்களின் அடையாளத்தை ஒப்புக் கொண்டாலும், அவ்வளவு எளிதாக எதிலும் கையெழுத்து போடமாட்டார்கள். 

“என்னங்க இது?” என்று கோபமாக கேட்பார்கள். 

“பாலன்ஸ் கன்பர்மேசன் லெட்டர் சார். உங்க லோன் பாலன்ஸ் இவ்ளோன்னு நீங்க உறுதி பண்றீங்க. இது வெறும் பார்மாலிட்டி தான். லிமிடேஷன் பீரியட் முடிறதுக்குள்ள உங்க கிட்ட கன்பர்மேசன் கையெழுத்து வாங்கணும். அவ்வளவுதான். நீங்க படிச்சு பார்த்து போடுங்க. வாங்காம போனா, நாங்க கோர்ட்ல கேஸ் போட்டே ஆகணும்…”

சிலர் புரிந்து கொண்டு கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவார்கள். கூடுதல் மூன்று ஆண்டுகள் நேரம் கிடைக்கும் என்று ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். காலப்போக்கில் கடன்தாரரும் வங்கியும் சமரசமாக பேசி கணக்கை தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் கடன்தாரர் கையெழுத்திட 

மறுத்தால் வங்கிக்கு நீதிமன்றத்தை நாடுவதே மீதமிருக்கும் ஒரே வழி. ஆனால் வழக்கு பதிவதற்கு கோர்ட் கட்டணம், வக்கீலின் செலவு என எல்லாமே வாடிக்கையாளர் திருப்பி தரும் வரை வங்கியின் கணக்கில் தான் சேரும். அதனாலேயே இயன்ற வரை வாடிக்கையாளரிடம் பேசி பாலன்ஸ் கன்பர்மேசன் லெட்டரில் கையெழுத்து வாங்க முயற்சிப்போம். இதுபோல நிலுவை தொகையை உறுதி செய்து கையெழுத்தும் வாங்காமல், நீதிமன்றத்தில் வழக்கும் பதியாமல் விட்டுவிட்டால் அந்த நேரத்தில் கிளையில் வேலை செய்த மேலாளர்தான் வரப்போகும் அனைத்து சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் சம்பளத்திலிருந்து கூட காசை கொடுக்க வேண்டிய சூழல் மேலாளருக்கு வரக் கூடும். இதனாலேயே மேலாளர்கள் எப்படியாவது ஒரு வழக்கை போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ள பார்ப்பார்கள். 

தன் சர்வீஸின் கடைசி ஆண்டிலிருந்த என் கிளையில் முந்தைய மேலாளர், தான் ஓய்வு பெரும் போது எந்த சிக்கலும் வரக் கூடாது என்று எண்ணி சித்ரா ஜெயக்குமாரின் மீது காசோலை மோசடி வழக்கு போட்டுவிட்டு நிம்மதியாக பணிஓய்வு பெற்றுவிட்டார். அவர் இடத்திற்கு வந்த நான் மாட்டிக் கொண்டேன். நான் அந்த கிளையில் இணைந்ததும், முந்தைய மேலாளருக்கு பதில் என் பெயரை வழக்கில் இணைக்க ‘சப்ஸ்டிட்யூஷன் பெட்டிஷன்’ போட வேண்டும் என்று என் வங்கி நிர்ணயித்திருந்த  வழக்கறிஞர் சொன்னார். 

“நான் ப்ரூப் ரெடி பண்ணிறேன், வெள்ளிக்கிழமை கோர்ட்டுக்கு வந்துருங்க…” என்றார். நான் சென்றதுமே ஏதோ என் பெயரை சேர்த்துக்கொண்டு, விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கி விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் தான் நான் முதன்முதலில்  சிவில் கோர்ட்டின் படிகளில் ஏறினேன். தனக்கு ஹை கோர்ட்டில் வேலையிருப்பதாக சொன்ன எங்களுடைய வங்கியின் வக்கீல் தன்னுடைய ஜுனியர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று ஒரு பெண் வக்கீலின் நம்பரை கொடுத்தார். அந்த வக்கீல், “இதெல்லாம் சின்ன கேஸ் சார், என் அசிஸ்டன்ட்ட அனுப்புறேன்” என்று வேறொரு வக்கீலின் பெயரை சொன்னார். 

அந்த பெண் வக்கீலுக்கு முப்பத்தைந்து வயதிற்குள் தான் இருக்கும். அவருடைய அசிஸ்டன்ட் இன்னும் இளையவராக இருக்கக்கூடும் என்று எண்ணி நான் நின்றுகொண்டிருந்த வேளையில் தான், ஒரு ஐம்பத்தைந்து  வயதுக்காரர் வந்து நின்றார். 

“நான் குமார். மேடத்தோட அஸிஸ்டண்ட்” என்று அறிமுகம் செய்து கொண்டார். 

“நான் முன்னாடி தான் சார் இருப்பேன். நீங்க பேங்க் பேர கூப்பிடும் போது வாங்க, நான் ரீடர் கிட்ட பேசுறேன்” என்றார்.  

அதற்க்கு முன்பு வழக்குகளை சந்தித்த அனுபவம் இல்லாததால், எங்கள் வங்கியின் பெயரையும் சித்ராவின் பெயரையும் அழைத்ததுமே, நான் கூண்டில் ஏற போனேன். அப்படி எல்லாரும் கூண்டிற்குள் நின்று நான் சொல்வதெல்லாம் உண்மை என்று பேசுவதை நான் பல படங்களில் பார்த்திருக்கிறேன். நானும் அதற்கு தயாராக இருந்தேன். ஆனால் கூண்டின் வலது புறத்தில் அமர்ந்திருந்த வக்கீல் ஒருவர் என் கழுத்தில் இருந்த என் வங்கியின் ஐடி கார்ட் கயிறை பார்த்தவாறே, 

“நீங்க கூண்டுக்கு வெளில நில்லுங்க, அக்யூஸ்ட் தான் உள்ள ஏறணும்” என்றார். 

அப்போது தான் நான் கூண்டில் ஏறிய சித்ராவை கவனித்தேன். கசங்கிய பழைய சுடிதார் அணிந்திருந்தார். ஒரு பெரிய நிறுவனத்தில் அவர் வேலை செய்ததாக அவரின் கடன் விண்ணப்ப படிவம் சொல்லியதற்கும் அவருடைய பாவமான தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனக்கும்கூட அவரை பார்ப்பதற்கு வருத்தமாக தான் இருந்தது. 

“பேங்க்லயே பேசி தீர்க்குறத விட்டுட்டு, இப்டி கோர்ட்ல வந்து நிக்குறாங்களே” என்று எண்ணியவாறே ஜட்ஜை நோக்கினேன். அந்த நீதிபதி என்னை கோபமாக பார்ப்பது போல் இருந்தது. 

“ஜட்ஜ பார்த்ததும் கும்பிடனும்” என்று வக்கீல் குமார்  சொன்ன போது நான் ஏன் என்று கேட்காமல் தலை அசைத்திருந்தேன். அது நினைவிற்கு வரவே, நான் நீதிபதியை பார்த்து கும்பிட்டேன். சித்ரா கும்பிட்டாரா என்று கவனிக்கவில்லை. ஜட்ஜின் இருக்கைக்கு வெளியே கருப்பு கோட் அணிந்திருந்த உதவியாளர், “பதினெட்டு அஞ்சு” என்றார். சித்ரா கூண்டிலிருந்து இறங்கி சென்றார். எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. என்னை நோக்கி வந்த குமார், வழக்கு இன்னும் மூன்றுவாரங்களுக்கு  ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக சொன்னார். அப்போது தான் “18.05” என்று அவர் சொன்னது, மே பதினெட்டு என்று புரிந்தது. இப்படியாக அந்த வழக்கிற்கு இரண்டு வருடங்கள் கூப்பிடும் போதெல்லாம்  சென்று வந்த பிறகு தான் ஒரு நாள் என் கிளையின் முன்னாள் மேலாளருக்கு பதில் என் பெயரை ஏற்றுக் கொண்டார்கள். 

“என்ன சார்! என் பேரையே இப்பதான் சேர்த்திருக்காங்க. இந்த கேஸ் எப்படி முடியும்…”

“அதெல்லாம் அப்டித்தான்  சார்” என்று சொல்லிவிட்டு சிரித்தார் குமார். 

தொடர்ந்து கோர்ட்டிற்கு சென்று வந்த காலக்கட்டத்தில் ஏராளமானோர் அங்கே வந்து போவதை கவனித்திருக்கிறேன். சிலர் கூண்டிற்குள் ஏறி நின்றதும், நீதிபதியின் இருக்கைக்கு அருகே  இருக்கும் கருப்பு கோட்காரர் சப்தமாக கேட்பார், “உங்க கவுன்சில் வரலையா?” 

அவர்கள் இல்லை என்பார்கள். 

“அடுத்த முறை உங்க வக்கீலோட தான் வரணும். கையெழுத்து போட்டுட்டு நகல் வாங்கிக்கோங்க…” என்பார் கருப்பு கோட்காரர். இதுபோல, வழக்கு சம்மந்தப்பட்ட ஒருவர் வந்திருந்தால் வேறொருவர் வந்திருக்க மாட்டார். எல்லோருமே வந்துவிட்டால், “பாஸ் ஓவர்” என்று சொல்லி வழக்கை தள்ளி போடுவார்கள். பல நாட்கள் இதை கவனித்தே நீதிமன்றத்தில் புழங்கும் வார்த்தைகளும் முறைகளும் எனக்கு பரிட்சையமாகிக் கொண்டிருந்தன. 

“என்ன சார், இப்டி எல்லா கேசும் பாஸ் ஓவர் ஆகிகிட்டே இருக்கு… எப்பதான் விசாரிப்பாங்க…:” என்று ஒருமுறை குமாரிடம் கேட்டேன். 

“அதெல்லாம் அப்டித்தான் சார்” என்று சொல்லிவிட்டு சிரித்தார். அவர் சிரிப்பின் அர்த்தம் எனக்கு புரிந்ததே இல்லை. அதன் பின்னும் பல மாதங்கள் எங்கள் வழக்கு வளர்ந்து கொண்டே தான் போனது. நான் பல வேலைகளுக்கு இடையே கோர்ட் படி ஏறி இறங்கினேன். சித்ராவும் எப்போதும் போல பாவமாக வந்து நின்றார்.  ஒரே ஒரு முறை தான் அவரிடம் பேசினேன். 

“ஒவ்வொரு முறையும் வறதுக்கு வக்கீலுக்கு காசு சார். யார் கிட்ட இருக்கு! உடம்பு வேற முடிறது இல்ல?”   என்று சித்ரா என்னிடம் புலம்பினார். ஒரு ஐம்பது வயது பெண்மணியை அப்படி அழைய விடுவது எனக்கு கஷ்டமாக இருந்தது. 

“மேடம் லீகல் விசயத்த விட்ருவோம்.  லோன் வாங்குனா கட்டணும் தானே! கட்டி இருக்கலாமே? இல்லனா பாலன்ஸ் கன்பர்மேசன் பண்ணி கொஞ்சம் டைம் வாங்கிருக்கலாமே…” 

“நான் உண்மையிலேயே காச கட்டலாம்னு தான் வந்தேன். அந்த மேனஜர் ஹெல்ப் பண்ணவே இல்ல, தேவை இல்லாம எப்போவோ டேட் போடாம கொடுத்த செக்க போட்டு என்ன இங்க இழுத்துவிட்டுட்டார்” என்றார்.  

“நீங்க வேணும்னா பேங்க் வந்து ஒரு லெட்டர் எழுதி கொடுங்க மேடம். காம்ப்ரமைஸ் செட்டில்மென்ட் பண்ணிக்கலாம்னு,. நான் என் சர்க்கிள் ஆபிஸ்க்கு ரிக்கமன்ட் பண்றேன்…எவ்ளோநாள் இப்டியே போறது!. இத சால்வ் பண்ணனும்னு தான் எனக்கும் ஆசை”

“அவுட் ஆப் கோர்ட் பண்ணிட்டா கேச வாபஸ் வாங்கிடுவீங்க இல்ல சார்?” என்றார் சித்ரா

“நிச்சயமா மேடம்” என்றேன் நான் உறுதியாக. அன்று மாலையே எனக்கு எங்கள் வங்கியின் வக்கீலிடம் இருந்து அழைப்பு வந்தது. 

“சார் நீங்க எதுக்கு ரெஸ்பாண்டன்ட் கிட்ட பேசுறீங்க. உங்க பேங்க நீங்க ரெப்ரசென்ட் பண்றீங்க.. அவ்ளோதான். மீதிலாம் நாங்க பாத்துக்குறோம்”

“இல்ல சார். அவங்க காம்ப்ரமைஸ் செட்டில்மெண்ட்  வரேன்னு சொன்னாங்க…போன மேனஜர் தான் ஹெல்ப் பண்ணலயாம்.பாக்கவே பாவமா இருக்கு”

“சார், இதெல்லாம் ஒரு ட்ரிக். கோர்ட்ல அக்யூஸ்டா வந்து நிக்குற எல்லாரும் பாவமாதான் காமிச்சுப்பாங்க. வெளில அவங்க ஆட்டிட்யூடே வேற மாதிரி இருக்கும். டோன்ட் கெட் கேரிட் அவே வித் சச் திங்ஸ். காச கொடுக்கிறதா இருந்தா எப்போவோ கொடுத்துருக்க மாட்டாங்களா! உங்க பேங்க்ல காசு வாங்கிருக்காங்க, கட்டல. அவ்ளோதான். நாளைக்கு உங்கள பத்தி அடுத்த மேனஜர்கிட்ட வேறமாதிரி சொல்வாங்க…” என்றார். 

“அதுவரைக்கும் இந்த கேஸ் இழுக்குமா?” என்று கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை. அவருக்கு எப்படி நாங்கள் பேசியது தெரிந்தது என்று புரியாமலேயே நான் மீண்டும் மீண்டும் வழக்கிற்கு சென்று வந்தேன். 

ஒரு நாள் என்னருகே வந்த குமார், “அடுத்த வாரம் உங்கள க்ராஸ் எக்ஸாமைன் பண்ணுவாங்க, டீடெயில்ஸ் லாம் கேட்பாங்க சரியா சொல்லிடுங்க” என்றார். 

“சார் என்ன கேட்பாங்க?”

“செக் ப்ரெசென்ட் பண்ண டேட், அது எப்போ ரிட்டர்ன் ஆச்சு… எல்லாமே!”

“சார். இந்த லோன் கொடுக்கும் போது நான் இல்ல, கேஸ் போட்டதும் நான் இல்ல. கரெக்ட்டா சொல்ல முடியுமா.”

“அதெல்லாம் பயப்படாதீங்க சார். எவிடன்ஸ் இருக்குல்ல. அவங்க லோன் வாங்குனது உண்மை, செக்ல கையெழுத்து இருக்கு.. அப்பறம் என்ன.. இந்த கேஸ் கண்டிப்பா நிக்கும்,  நான் தான் உங்க கூட இருக்கேன்ல” என்றார். பல அடுத்த வாரங்கள் வந்த பின்னரே இறுதியாக ஒரு நாள் என்னை குறுக்கு விசாரணைக்கு அழைத்தார்கள். 

“சத்தியமாக சொல்கிறேன்” என்று சொல்லுங்கள் என்றார் ஜட்ஜின் அருகே இருந்த கருப்பு கோட்காரர். கையை முன்னே நீட்டி, அவர் சொன்னதை சொன்னேன். சித்ராவின் வழக்கறிஞர் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னேன். பெரிதாக ஒன்றையும் அவர் கேட்கவில்லை. உங்கள் பெயர் என்ன, நீங்கள் எந்த வங்கி, அங்கே என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள், காசோலையின் தொகை எவ்வளவு என்பது போல் ஒற்றை வரி கேள்விகள். குறுக்கு விசாரணை என்றதும் மடக்கி மடக்கி கேள்வி கேட்பார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

“இது என் கட்சி காரரின் கையெழுத்தே இல்லை…” என்று சித்ராவின் வழக்கறிஞர் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ஏதோ எனக்கு சாதகமாக வாதாடுவதை போல் கேட்டுவிட்டு என்னை போக சொல்லிவிட்டார். 

என்னிடம் வந்த என் வழக்கறிஞர் குமார், “சார் கை குடுங்க. கேஸ் நின்றுச்சு. நான் தான் சொன்னேன்ல. அவங்க செக் கொடுத்தது உண்மை. அடுத்த விசாரணைல அவங்க ஏமாத்தணும்னு இன்டென்சன்ல தான் செக் கொடுத்தாங்கனு ப்ரூவ் பண்ணிரலாம்…” என்றார்.

இந்த கேஸ் இன்னும் வளரும் என்று நினைக்கும் போதே எனக்கு சோர்வு தட்டியது. நான் எதுவும் பேசாமல் பார்க்கிங் நோக்கி நடந்தேன். என் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் போது, சித்ராவின் வக்கீலும் குமாரும் ஒன்றாக கோர்ட் வாசலில் இருக்கும் டீக்கடையில் சிரித்து பேசிக்கொண்டிருந்ததை கவனித்தேன். 

“ஒவ்வொரு முறையும் வக்கீலுக்கு பீஸ் கொடுக்கணும்” என்று சித்ரா புலம்பியது காரணமே இல்லாமல் நினைவிற்கு வந்தது. “அதெல்லாம் அப்டித்தான் சார்” என்று குமார் சொல்வதும் நினைவிற்கு வந்தது. 

“சீக்கிரம் வேற கிளைக்கு மாற்றல் வந்திடனும்” என்று மனதிற்குள் வேண்டியவாறே நான் அங்கிருந்து நகர்ந்தேன்.

***

Manjummel Boys- கொஞ்சம் திரைக்கதை

உருவாக்கத்தில் செய்நேர்த்தி, ஆங்காங்கே வெளிப்படும் ஹாஸ்யம், கதை கருவில் உள்ள விறுவிறுப்பு இதெல்லாம் இத்திரைப்படத்தை வெற்றி படமாக்கி இருக்கலாம். ஆனால் திரைக்கதை கலையின் மீது காதல் கொண்டவர்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை கடந்து, அதன் திரைக்கதை போக்கை ஆராய்வது அவசியம் ஆகிறது. மிகவும் நல்ல படம் என்கிற மாய தோற்றத்தை நம் மனதில் உருவாக்கிவிடும் இது போன்றதொரு  படத்த்தின் திரைக்கதையை ஆராய்வது உண்மையிலேயே நல்ல திரைக்கதை எழுத விரும்புவோற்க்கு வழிகாட்டியாக பயன்படும்  என்பதாலே நாம் இதை விவாதிக்க வேண்டி இருக்கிறது. 

பொதுவாகவே பல படங்களில், முதல் பாதி சிறப்பாக இருக்கிறது ஆனால் இரண்டாம் பாதி  சற்றே சுவாரசியம் குறைவாக இருக்கிறது என்பன போன்ற கருத்துக்களை நாம் சகஜமாக கேட்டிருப்போம். திரைக்கதையின் முதல் பாதி, ஒரு கதை உலகை, அதன் பாத்திரங்களை அந்த உலகின் சிக்கல்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்ய தனக்கான அவகாசத்தை எடுத்துக் கொள்கிறது. பார்வையாளர்களும் அவற்றை பின்பற்றி அந்த உலகினுள் நுழைவதால் முதல் பாதியின் நிதானத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும். முதல் பாதியின் வேகத்தை ஒப்பீடுவதற்கு அவர்களுக்கு அளவீடு இருப்பதில்லை. அவசியமும் இருப்பதில்லை. கதை அதன் போக்கில் வளர்ந்து பெரும் திருப்புமுனை இடைவேளையின் போது நிகழ்கிறது. ஆனால் இரண்டாம் பாதி என்று வரும் போது, முதல் பாதியில் அறிமுகம் செய்யப்பட்ட சிக்கல்களுக்கான தீர்வு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கு வந்துவிடுவது இயல்பு. அது இல்லாத போது, முதல் பாதியோடு ஒப்பீட தொடங்கிவிடுவார்கள். 

Manjummel Boys படத்தை பொறுத்தவரை அதன் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான திருப்புமுனைகள் எதுவும் இல்லை என்பது சற்றே ஏமாற்றம் தான். முன் சொன்னது போல்  இந்த படத்தின்  கதைக்கரு, 

விறுவிறுப்பு கொண்டது. ஒருவன் குழிக்குள் விழுந்துவிடுகிறான், அவன் மீட்கப்பட்டானா இல்லையா? அல்லது அவன் எப்படி மீட்கப்பட்டான்! ஒரு நல்ல திரில்லர் படத்திற்கான ஒன்லைன் இது. ஆனால் இந்த கரு விறுவிறுப்பாக விரிகிறதா? இல்லை. 

ஏன் இல்லை?

ஒரு எளிய உதாரணமாக ஒரு போலீஸ் துப்பறியும் கதையை எடுத்துக் கொள்வோம். ஒரு போலீஸ் நாயகன் ஒரு கொலை வழக்கை விசாரிக்கிறான். அடுத்து ஒருவனை பிடிக்கிறான்.  அவன் தான் கொலைகாரன் என்று உறுதி ஆக, அவனுக்கு தண்டனை வாங்கி தருகிறான். மேற்சொன்ன இந்த விஷயங்கள் நேர்கோட்டில் சில காட்சி தொகுப்பிலேயே நிகழ்ந்துவிடுகிறது எனில் இந்த கதையில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்குமா? 

அவன் கொலைகாரனை கண்டுகொள்ள பெரும் முயற்சி எடுக்க வேண்டும்! அப்படி அவனை நெருங்கினால் அந்த கொலைகாரன் தப்பித்து போகலாம். அல்லது பிடிப்படும் அவன் உண்மையான குற்றவாளி இல்லை என்பன போன்ற ட்விஸ்ட்களை வைக்கும் போதுதான் கதை சுவாரஸ்யமாகிறது. இவை எல்லாம் உதாரணத்திற்காக சொல்வதே ஒழிய எல்லா கதைகளும் இப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, நம் கதையின் இறுதி புள்ளியை எட்டும் பயணத்தில் குறைந்தபட்ச திருப்புமுனைகளாவது இருக்க வேண்டும் என்பதே.  

Manjummel Boys படத்தில் ஒரு பாத்திரம் குழிக்குள் விழுந்துவிடுகிறது. ஆனால் அவனை மீட்டெடுக்கும் முயற்சியில் எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த திருப்பங்களும் இல்லை. ஒரு மேடை நாடகத்தின் சாத்தியத்திற்கு உட்பட்டே அவனை மீட்கும்  காட்சிகள் இருக்கிறது. இதனாலேயே சில நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய குறும்படத்தை நீட்டித்துவிட்ட உணர்வை இரண்டாம் பாதி கொடுக்கிறது.

ஒரு திரைக்கதையில் எப்போதும் வெறும் வசனங்களால்  மட்டுமே கதையை நகர்த்திச் செல்ல கூடாது. அந்த குகை  எவ்வளவு ஆபத்தானது என்பதை சுற்றி இருப்பவர்கள் வெறும் ட்ரைலர் வசனம் என்றளவில் விளக்குகிறார்கள். ஆனால் அதன் ஆபத்து காட்சி வடிவில் உணர்த்தப்படவில்லை. குழியில் விழுந்தவனை எப்படி மெனக்கெட்டு காப்பாற்றுகிறார்கள் என்று காட்சிகளை (திரைக்கதை) அமைத்திருந்தால் கூட அத்தகைய வசனங்களை கடந்து சென்றுவிட முடியும். ஆனால் இங்கே அத்தகைய மெனக்கெடல் வெறும் வசனமாக மட்டுமே இருப்பதுதான் நெருடலாக இருக்கிறது.

உதாரணமாக, முதலில் காப்பாற்ற செல்பவன் திணறுகிறான். வேறு வழி இல்லாமல் திரும்பி வெளியே  வருகிறான். பின் சமயோஜிதமாக எல்லோரும் யோசித்து வேறொரு திட்டத்தை தீட்டி உள்ளே விழுந்தவனை காப்பாற்றுகிறார்கள் என்று காட்சிகளை நீட்டித்திருக்க முடியும். அவன் காப்பாற்றப்படுவானா என்கிற கேள்விக்கும் காப்பாற்றப்படுவதற்குமிடையே எண்ணற்ற சாத்தியங்களை யோசித்திருக்க முடியும். இருந்தாலும் இத்திரைப்படம் அப்படி அலட்டிக் கொள்ளாமல் மிக கம்பர்ட்டபிளாக கதையின் முடிவை நோக்கி போகிறது.    

அவன் குழியில் விழுந்ததும் இரண்டு மூன்று அதிகாரிகள் வருகிறார்கள். அந்த இடத்தில் விழுந்த ஆளை மீட்பது சாத்தியம் இல்லை என்கிறார்கள். இதற்கு சுற்றியிருக்கும் பாத்திரங்களிடம் பெரிய எதிர்வினை இல்லாத போதும்,  சில நிமிடங்களிலே அந்த அதிகாரிகள் குழிக்குள் விழுந்தவனை மீட்க ஒப்புக் கொள்கிறார்கள். இங்கே அவர்கள் மனம் மாறுவதற்கு அழுத்தமான காரணங்கள் இல்லை. நம்பத்தகுந்த காட்சிகள் இல்லை. அங்கேயும் வசனங்களால் கதையை கடத்திவிடுகிறார்கள். 

உண்மையில், அவர்கள் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்கள், அத்தனை பேர் இருக்கும் போது ஒருவன் மட்டும் காப்பாற்ற துணிகிறான் எனில் அது அவனின் இயல்பான குணமா, அல்லது அவன் கொண்ட நட்பின் ஆழமா  என்பன போன்ற விசய்ங்களை விளக்குவதற்கான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. எல்லோரும் சேர்ந்து குடிக்கிறார்கள் ஊர் சுற்றுகிறார்கள். அவ்வளவே அவர்களின் நட்பு. குழிக்குள் விழுந்தவன் மீதோ அல்லது அவனை மீட்க துடிக்கும் அவர்களின் நட்பின் மீதோ நமக்கு பெரிய ஈடுபாடு உருவாகமல் போவதற்கு இது போன்ற மேம்போக்கான சித்தரிப்பே காரணம். குணா படத்தின் பாடலில் வருவது போல, “நடுவுல கொஞ்சம் மானே தேனேனு போட்டுக்கோ” என்ற அளவில் தான் இந்த கதையில் நட்பு, எமோஷன் போன்ற விஷயங்கள் வருகின்றன. ஆனால் இத்தகைய படம் நட்பின் இலக்கணமாக சொல்லப்படுவது தான் நகைமுரண்.

குறுங்கதை-10-  தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை  

தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை  

அநிருத்தனுக்கு சப்பாத்தி மீது பெருங்காதல். எல்லா நாளும் எல்லா வேலையும் சப்பாத்தி கொடுத்தால் கூட சாப்பிடும் அளவிற்கு சப்பாத்தி பித்து அவனுக்கு. குறைந்தபட்சம் இரவு உணவிற்காவது சப்பாத்தி இருக்க வேண்டும். அவன் மனைவி அனுராதாவிற்கு சப்பாத்தி மீது தனிக் காதலோ வெறுப்போ இல்லை. அவளுக்கு பிடித்த உணவு முட்டை தோசை. அவன் சப்பாத்தி உண்பதில் அவளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றாலும், அதை மெனக்கெட்டு செய்வதில் அவளுக்கு ஈடுபாடு இருந்ததில்லை.  அதனால் வீட்டில் சண்டைக்கு பஞ்சமில்லை. 

“இன்னைக்கும் சப்பாத்தி இல்லையா? மனுஷன் நாளெல்லாம் மாடுமாதிரி உழைச்சிட்டு, ஒரு வாய் ஆசையா சாப்பிட முடியாதா?” என்பான் அநிருத்தன். 

“ஏன் பொண்ணுங்க தான் சமைக்கணுமா! நீயே சமைச்சு சாப்ட்டுக்கோ!”என்பாள் அனுராதா. அவனும்  அவள் கேட்பது நியாயம் தான் என்று இரண்டு நாட்களுக்கு அமைதியாக இருப்பான். பின்பு மூன்றாம் நாள் மீண்டும் சப்பாத்தி மீது வெறி வந்துவிடும்.

“ஐயோ ஏண்டி இப்டி பண்ற! உனக்கு புடிச்சத மட்டும் செஞ்சிக்குற இல்ல! எனக்கு ஏன் சப்பாத்தி செஞ்சு தரமாட்ற?”

“என்னால இதான் முடியும். என்னைக்காவது நீ எனக்கு முட்ட தோசை சுட்டு கொடுத்துருக்கியா? உனக்கு சப்பாத்தி தான் வேணும்னா வெளில போய் வாங்கி சாப்பிடு” 

இப்படி தொடர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்த அவர்கள், இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவெடுத்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.  

சில ஆண்டுகாலம் கழித்து அநிருத்தன், சப்பாத்தி கடை வைத்திருந்த ஒரு ஹிந்திகார பெண்ணை திருமணம் செய்துகொண்டான். தினமும் உண்பதற்கு சப்பாத்தி பஞ்சமில்லாமல் கிடைத்தது. ஆனாலும் அவனுக்கு மனதில் ஏதோ ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது. வேலை தான் அழுத்தம் தருவதாக நினைத்த அவன் முதலில் தன் வேலையை ராஜினாமா செய்தான். பின்னர் தன் மனைவியோடு இணைந்து கடையை கவனிக்கத் தொடங்கினான்.  சமைக்கவும் கற்றுக் கொண்டான். தனக்கு வேண்டிய சப்பாத்தியை தானே சமைத்து சாப்பிட்டான். அப்போதும் அவனுக்கு மனதில் ஏதோ ஒரு நிறைவின்மை இருந்து வந்தது. எனினும்  தொடர்ந்து சப்பாத்தி சுட்டுக் கொண்டே இருந்தது அவனுக்கு ஒருவகையான ஆறுதலை தந்தது. கொஞ்சம்கொஞ்சமாக சப்பாத்தி சுடுவதில் நிபுணத்துவம் பெறத் தொடங்கினான்.  அவனுடைய கடை சப்பாத்திக்கு, சுற்றுவட்டாரத்தில் மவுசு கூடியது. 

காலங்கள் பல ஓடின. அவன் குடும்பம் பெரிதானது. ஹோட்டலும் பெரிதானது. பேரன் பேத்திகள் எல்லாம் வளர்ந்தார்கள். அவனுடைய கடைசி பேரன் அவனை பற்றி வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட அது பெரும் வைரல் ஆனது. அநிருத்தன், ‘சப்பாத்தி தாத்தா’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்டான்.  அவன் வீடியோவை கண்ட பலரும் ஆச்சர்யப்பட்டு அவன் கடைக்கு வரத் தொடங்கினர். அநிருத்தன் தன்னுடைய என்பது வயதில் செலிபிரிட்டி ஆகிப் போனான். ஒரு லட்சமாவது சப்ஸ்க்ரைபருக்கும் அவர் குடுபத்திற்க்கும் தங்கள் ஹோட்டலில் சிறப்பு விருந்து அளிக்கப்படும், அவர்களுக்கு சப்பாத்தி தாத்தாவே தன் கையால் உணவு பரிமாறுவார் என்று   அநிருத்தனின் பேரன்கள் விளம்பரம் செய்தனர்.

ஒரு லட்சமாவது சப்ஸ்க்ரைபரான ஒரு இளைஞன், தன் குடும்பத்துடன் வந்தான். அநிருத்தனிடம்.”தாத்தா ஐம் யுவர் பிக் பேன், என் பேரும் அனிருத் தான்” என்றான். அநிருத்தன் புன்னகை செய்துவிட்டு தொடர்ந்து சப்பாத்தியை சுட்டான். அந்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரி அனைவரும் அநிருத்தனுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 

“பாட்டிய கூப்புடுலாமா!” என்றான் இளைஞன் தன் தாயிடம்.

“அவங்கதான் வேணாம்னு சொல்ட்டாங்க இல்ல, போர்ஸ் பண்ணாத!” என்றாள் அந்த தாய். சிறிதுநேரத்தில் அவர்கள் அனைவரும் சாப்பிட சென்றுவிட்டார்கள்.  தான் ஒரு செலிபிரிட்டி  என்கிற கர்வம் கொண்டிருந்த அநிருத்தனுக்கு அந்த பாட்டி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல் போனது அவமானமாக இருந்தது. யார் அந்த பாட்டி என்று பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானது. உணவு பரிமாறும் சாக்கில் கிட்சனை விட்டு வெளியே வந்தான். அந்த குடும்பம் ஆர்வமாக பேசிக்கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார்கள். சற்று தொலைவிலேயே நின்ற அநிருத்தன், தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு அந்த பாட்டியையே பார்த்தான். அந்த பாட்டி அவனை சட்டை செய்யவில்லை. அநிருத்தன் மீண்டும் கிட்சனுக்குள் திரும்பினான். 

“என்ன தாத்தா. நீ தான் அவங்களுக்கு பரிமாறனும்” என்றவாறே உள்ளே வந்தான் பேரன். 

அநிருத்தன் எதுவும் பேசவில்லை. தன் கண்ணாடியை கழட்டி எறிந்துவிட்டு அழத் தொடங்கினான். 

“தாத்தா கியா ஹுவா!” என்று பதறினான் பேரன்.

“உங்களுக்கு பரிமாறுறதுல விருப்பம் இல்லையா? நான் வேணா தாத்தாக்கு உடம்பு சரி இல்லனு சொல்லிடுறேன்”  

கண்களை துடைத்துக் கொண்ட அநிருத்தன், “இன்னைக்கு அந்த பாட்டிக்காக நாம மெனுவ மாத்துறோம்” என்றான்.  

“ஏன் அந்த பாட்டிய உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்றான் பேரன். 

“உன் பாட்டியா தெரிறதுக்கு முன்னாடியே தெரியும்” என்று சொல்லிவிட்டு புன்னகை செய்தான் அநிருத்தன். அவனுடைய பேரன் புரியாமல் பார்த்தான்.  

கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களாக சப்பாத்தி மட்டுமே சுட்டுக்கொண்டிருந்த சப்பாத்தி தாத்தா எனப்பட்ட அநிருத்தன், தன் வாழ்விலேயே முதல் முறையாக ஒரு முட்டை தோசையை சுட்டு தன் பேரனிடம் நீட்டி, “இத அந்த பாட்டிக்கிட்ட போய் கொடு அவங்களுக்கு  முட்ட தோசைன்னா ரொம்ப புடிக்கும்” என்றான். 

அந்த மாலை வேளையில், அநிருத்தனுக்கு, பல லட்சம் சப்பாத்திகளை சுட்ட போது கிட்டாத நிறைவு, அந்த ஒரு முட்டைதோசையை தன்னுடைய முன்னாள் மனைவி, வாழ்நாள் காதலி அனுராதாவிற்காக சுட்டுக் கொடுத்த போது கிட்டியது. இனிமேல் அவன் நிம்மதியாக உறங்குவான். 

***

குறுங்கதைகள் முற்றும்.

குறுங்கதை-9- கோபம்கொண்டு நாவலிலிருந்து தொலைந்துபோன ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாப்பாத்திரம் 

கோபம்கொண்டு நாவலிலிருந்து தொலைந்துபோன ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாப்பாத்திரம் 

கோமதி சங்கர் பிரபலமாகாத ஒரு நல்ல எழுத்தாளன். பல வருடங்களுக்குமுன்பு  அவன் எழுதிய க்ரைம் கதையில் வரும்  வில்லன் கதாபாத்திரத்திற்கும் அவனுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த பிரச்சனை வெடித்தது. ஆனந்த் என்கிற அந்த வில்லன் கதாபாத்திரம் ஒரு மிசோஜினிஸ்ட்  (misogynist). பெண்களை அறவே வெறுக்கும் அவன், ரயிலில் தனியாக பயணிக்கும் அழகான பெண்களை கடத்தி கொலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.  நாவலின் முதல் அத்தியாயத்திலேயே அந்த வில்லன் அறிமுகமாகிவிடுவான். அந்த முதல் அத்தியாத்தை வாசித்த கோமதி சங்கரின் மொத்த வாசகர்களான முப்பது பேரில், அதி தீவிர வாசக அந்தஸ்தைப் பெற்ற மூன்று வாசகர்கள், தமிழ் க்ரைம் புனைவின் ஆகச் சிறந்த வில்லன் பாத்திரமாக ஆனந்த் பாத்திரம் இருக்கும் என்று உறுதியாக சொல்லினர். வேறு எந்த எழுத்தாளராக இருந்திருந்தாலும், இப்படி ஒரு ஏகோபித்த வரவேற்பை பெற்ற முதல் அத்தியாயத்தை தொடர்ந்து எழுதி அந்த நாவலை முடித்து பதிப்பித்து, அதன் திரைக்கதை உரிமையையும் விற்றிருப்பார்கள். ஆனால் கோமதி சங்கர் ஒரு அடிப்படை சோம்பேறி என்பதால் அவன் அந்த நாவலை மேற்கொண்டு எழுதவில்லை. 

கிட்டத்த ஒன்பது வருடங்களாக முதல் அத்தியாயத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த  வில்லன் பாத்திரமான ஆனந்த் இரு தினங்களுக்கு முன்பு நடுஜாமத்தில் கோமதி சங்கர் தூங்கிக் கொண்டிருந்தபோது கடும் கோபம் கொண்டு கத்தினான், 

“நீயெல்லாம் ஒரு எழுத்தாளராடா! எவ்ளோ பெரிய வில்லனா நான் வந்திருக்கணும்! இந்நேரம் வேறு யாராவதா இருந்திருந்தா என்ன வளர்த்து சீக்யூல்லாம் எழுதிருப்பாங்க. நான் எவ்ளோ நாள் இப்டி முதல் அத்தியத்துல மட்டும் கொலை பண்ணிட்டு, அடுத்த டார்கட்க்காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறது?  அட்லீஸ்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கூடவா என்ன தேடி வர மாட்டாங்க?”

கோமதி சங்கர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவன் இலக்கிய எழுத்தாளராக வேண்டும் என்கிற முடிவை எடுத்ததன் விளைவாக க்ரைம் கதைகளை எழுதுவதை  நிறுத்திக் கொண்டான்.

“உன்கிட்ட தாண்டா பேசுறேன்! சொல்லு! மேற்கொண்டு எழுத முடிலனா எனக்கு ஏன் அவ்ளோ பெரிய இன்ட்ரோ! அடுத்த ஸ்டீபன் கிங் நீனு நினைச்சு உன் எண்ணத்துல தோன்றினேன் பார். என்ன அடிக்கணும்!” ஆனந்த் கதாப்பாததிரத்திற்கு கோபம் குறையவில்லை. 

கோமதி சங்கர் சொன்னான், “ஆனந்த் என்ன மன்னிச்சிரு! இனிமே உன் கதையை என்னால எழுத முடியாது! க்ரைம் ரைட்டர்ஸ்க்கு இங்க பெரிய மரியாதை இல்லை. நான் ஒரு பின்நவீனத்துவ நாவல் எழுதலாம்னு இருக்கேன்..நான் வேணா உன் கதைய இத்தாலோ கால்வினோ மாதிரி ஸ்டைலா எழுதுறேன். தயவு செஞ்சு நீ முதல் கொலை பண்ணிட்டு அந்த ரயில்ல இருந்து குதிச்சு செத்துரு!”

இதை கேட்ட ஆனந்த் அதிர்ந்து போனான். எந்த எழுத்தாளன் முதல் அத்தியாயத்திலேயே தன்  வில்லனை கொல்வான்! மேற்கொண்டு கோமதி சங்கரிடம் பேசி பிரயோஜனமில்லை என்று முடிவு செய்த வில்லன் ஆனந்த் ஒரு மழை இரவில் தன்னுடைய உடமைகளையும், கூரிய கொலை ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு கோமதி சங்கரின் புனைவுலகை விட்டு வெளியேறினான்.   

ஆனந்தின் பிரிவை தாள முடியாமல் கோமதி சங்கர் இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடவில்லை. அவன் சோகமாக இருப்பதை பார்க்க பிடிக்காமல் அவனுடைய காதல் நாவலொன்றின் நாயகி ஜானகி அவனுக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்தாள்.  ஆனால் அவன் அவளையும் பொருட்படுத்தாமல் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தான்.

“இப்டி நீ யாரையும்  கண்டுக்காம இருந்தா எல்லாரும் உன்னவிட்டு போய்டுவாங்க?” என்று ஜானகி கோபமாக சொன்னாள். அந்த ஜானகி அவனை ஒருகாலத்தில் காதலித்த, அவனும் பின்னாளில் காதலித்த பெண்ணின் பிரதி. இப்படிதான் கோமதி சங்கரை புரிந்துகொள்ளாமல் சண்டைபோடுவாள். இப்போது கதாப்பாத்திரமாகிவிட்ட பின்னும் அப்படியே இருக்கிறாள். 

“நான் இவ்ளோ பேசுறேன் எனக்கு அவ்ளோதான் மரியாதையா?” ஜானகி கேட்டாள்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு ஜானகி. உன் கேரக்டரை எப்படி டெவலப் பண்றதுனு தான் யோசிச்சிகிட்டு இருக்கேன்.. உன்ன நான் எந்த அளவுக்கு கற்பனை பன்னி வச்சிருக்கேன் தெரியுமா? அமலா மாதிரி சாரா மாதிரி. உனக்கு இவங்கல்லாம் யாருனு தெரியுமா! நாவல் பேரே ‘ஜானகி’ தான். நான் மட்டும் எழுதி முடிச்சேன் தமிழின் சமகால காதல் காவியமா இருக்கும்! ட்ரஸ்ட் மீ, இட்ஸ் கோயிங் டு பி எ க்ளாஸிக். அடுத்த யுவபுரஸ்கார் எனக்குதான்” கோமதி சங்கர் சொன்னதும் ஜானகி கதாப்பாத்திரம் சப்தமாக சிரித்தது. தான் எழுதிய கதாப்பாத்திரமே தன்னை பார்த்து சிரிப்பது அவனுக்கு அவமானமாக இருந்தது. 

“அஞ்சு வருசமா எழுதுற! இன்னும் நாவலை முடிக்கல. நீ இனிமேலும் முடிப்பனு எனக்கு நம்பிக்கை இல்லை. குட்பாய் கோமதி சங்கர்” சொல்லிவிட்டு அவள் தன் ஹாண்ட்பேகை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். 

க்ரைம் எழுத்தாளனாகவும் ஆக முடியாத, இலக்கிய எழுத்தாளனாகவும் ஆக முடியாத  கோமதி சங்கர், இனிமேல் தான் எழுதவே போவதில்லை என்கிற முடிவை எடுத்துவிட்டு தன் பேனாவை உடைத்து தூக்கி எறிந்தான். 

கோமதி சங்கரின் ‘ஜானகி’ நாவலுக்குள்ளிருந்து வெளியேறிய நாயகி கதாப்பாத்திரமான ஜானகி, தாம்பரம் செங்கல்பட்டு ரயிலில்  ஏறினாள்.  வெளியே மழை. ரயில் ஊரப்பாக்கத்தில் நின்ற போது ரயிலிலிருந்த மற்ற அனைவரும் இறங்கிவிட்டனர். தனியாக அமர்ந்திருந்த அவள், முற்றுப்பெறாத தன் கதாப்பாத்திரத்தை எண்ணி ஆத்திரப்பட்டவளாய், “ஐ ஹேட் யூ கோமதி சங்கர்” என்று கத்தினாள். 

அதே நேரத்தில் வெளியே பிளாட்பாரத்தில், “துரோகி. டேய் கோமதி சங்கர்  நீ ஒரு துரோகி” என்று முணுமுணுத்தவாறே வந்த வில்லன் பாத்திரமான ஆனந்த், ஜானகி இருந்த பெட்டிக்குள் ஏறினான். அவன் கையில் கூரிய கத்தி ஒன்று இருந்தது. 

யாருமில்லாத தனி அறையில் அமர்ந்து கோமதிசங்கர் வாய் மூடி அழுதுக் கொண்டிருந்தான்.

***

குறுங்கதை-8 – ஒரு தற்கொலை செய்தி

ஒரு தற்கொலை செய்தி

விஷயம் கேள்வி பட்டதுமே நான்  ஜன்னல் அருகே ஓடினேன். என் அலுவலகம் இருந்தது மூன்றாவது மாடியில். கீழே நிறைய பேர் குழுமி இருந்தார்கள். 

“செவென்த் ஃபுளோர்ல இருந்து ஒருத்தன் குதிச்சிட்டானாம்” ஏ.ஜி எம்மின் கார் டிரைவர் குமார் தான் முதலில் செய்தியை சொன்னது. நான் என் பக்கத்தில் வந்து நின்ற கோபிகிருஷ்ணன் சாரை பார்த்தேன். ‘கீழே போகலாமா’  என்னுடைய பதிலுக்கு எதிர்பார்ப்பது போல் அவர் பார்வை இருந்தது. 

எப்போதுமே லிப்ட் வர தாமதமாகும். நான்காவது மாடியில் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகம் இருந்தது. அங்கே நிறைய பேர் வந்து செல்வார்கள் என்பதால் லிப்ட் எங்கள் தளத்தில் நிற்பது அரிது. அப்படியே நின்றாலும் இடம் இருக்காது. நாங்கள் லிப்ட்டிற்காக காத்திராமல்  படியில் இறங்கி ஓடினோம்.கீழே நிறைய பேர் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள்.  

“ஆபீஸ் ஸ்ட்ரெஸ்” யாரோ ஒருவன் சொன்னான்.ஏழாவது மாடியில் ஒரு ஐ.டி நிறுவனம் இருந்தது. அவன் அங்கு வேலைக்கு சேர்ந்து ஒருமாதம் தான் ஆகிறது என்று கூட்டத்தில் பேசிக் கொண்டார்கள்.   

“லவ் ஃபெய்லியராம் பா” இது வேறுயாரோ.  

நானும் கோபி சாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். 

கூட்டம் தரையில் கிடந்தவனை மறைத்திருந்தது. முயன்று உள்ளே புகுந்தேன்.  என்னைவிட வயதில் சிறியவன் தான். “பாடி பக்கத்துல போகாதீங்க” என்று செக்யூரிட்டி கத்தினார். யாருக்கோ பிள்ளை. யாருக்கோ அவன் அண்ணன், தம்பி. யாருக்கோ அவன் காதலன், நண்பன். தன் எல்லா அடையாளங்களையும் அவனே தொலைத்து இன்று வெறும் ‘பாடி’ ஆகி போய்விட்டான் என்பதே எனக்கு பயமுறுத்துவதாக இருந்தது. 

போலீஸ் வண்டி வந்ததும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்பது போல் எல்லோரும் விலகிச் சென்றனர். ஆம்புலன்ஸும் பின்னாடியே வந்தது. அங்கே மேற்கொண்டு நிற்க விரும்பாதவராய் கோபி சார். கேட்டார், “ஒரு இஞ்சிடீ சாப்பிடலாமா?”

என்ன செய்தி என்று விசாரித்த டீக்கடைக்காரர், “அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி இப்டி தான் ஒருத்தன் விழுந்தான்” என்று ஏதோ வரலாற்று நிகழ்வை பதிவு செய்தவராய் தன் அடுத்த வேலையை பார்க்கப்  போனார்.

“என்னயா பெரிய ஸ்ட்ரெஸ்! நமக்கு இல்லாத ஸ்ட்ரெஸ்ஸா. சூசைட் எதுக்குமே சொல்யூசன் இல்லயா! இது ஏன் இந்த மடையனுங்களுக்கு புரியல” கோபி சார் டீயை உறிஞ்சிக்கொண்டே சொன்னார். அவரோடு பழகிய இந்த இரண்டு  வருடங்களில் அவர் வார்த்தைகளில் இவ்வளவு கோபத்தை நான் கண்டதில்லை. 

“சார் அத ஹாண்டில் பண்ற விதம் இருக்குல்ல! எனக்கே சில நேரம் அந்த எண்ணம்லாம் வந்திருக்கு. நமக்கு பயமா, இல்ல நாம ரொம்ப மெட்சூர்டானு தெரில. நாம அந்த எண்ணத்த கடந்து போயிடுறோம், அவன் டிசைட் பண்ணிட்டான், அவ்ளோதான்”

ஏதோ சொல்ல வந்தவர், சொல்லாமல் நிறுத்தினார். 

“எல்லாரும் உங்களமாதிரி எதையும் தாங்கும் இதயமா இருப்பாங்களா?” நான் யதார்த்தமாக  சொன்னேன். என்னை நிமிர்ந்து ஒரு முறைப் பார்த்துவிட்டு மௌனமானார். அவரை காயப்படுத்திவிட்டோமோ என்று கூட தோன்றியது. சிறிது நேரம் கழித்து கோபி சார் கேட்டார், 

“என் வைப் இறந்துட்டாங்கனு உனக்கு தெரியும்ல!” 

நான் தலை அசைத்தேன்.

“எப்படி இறந்தாங்கனு தெரியாது இல்ல!” அவர் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. எனக்கும் அதற்கு மேல் அவரிடம் பேசுவதற்கு தைரியம் இல்லை. 

நாங்கள் திரும்பி வந்த போது  எங்கள் அலுவலக கட்டிதத்தின் நுழைவாயில் சகஜமாகி இருந்தது. சற்று முன்பு அங்கே ஒருவன் உயிரை மாய்த்துக்கொண்டான் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.  ஆம்புலன்சும்  போலீஸ் வண்டியும் கிளம்பி விட்டிருந்தது. அவன் மரணம் காற்றில் கரைந்த செய்தி ஆகிப் போனது. அவனுக்கு நெருக்கமானவர் யாரவது ஒரிரு நாள் அழலாம். டீக்கடைக்காரரோ வாட்ச்மேனோ வருங்காலத்தில் அவன் இறந்ததை வெறும் செய்தியாக யாரிடமோ சொல்லலாம். லிப்ட்டில் கோபி சாரும் நானும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் அலுவலகத்திற்க்குள் நுழைந்ததும் கோபி சார் அவர் வேலையை பார்க்க போனார். நான் என் வேலையில் மூழ்கினேன்.

***

குறுங்கதை-7 -பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்

பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்

பிரியங்கா  யாதவ் டெல்லியின் புறநகரில் பிறந்து, வளர்ந்து அங்கேயே ஒரு வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றினாள். வாழ்க்கை நிம்மதியாக போய்க்கொண்டிருந்த இருபத்தியேழு வயதில்  மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது. ஒரே நாளில் அந்த சந்தோசத்தை பறிக்கும் விதமாக சென்னைக்கு மாற்றல் வந்தது. 

இரண்டு வருட காலம் சென்னையில் தாக்கு பிடித்து விட்டால், மீண்டும் ஊருக்கோ அல்லது ஊருக்கு பக்கத்தில் இருக்கும் மாநிலத்திற்கோ மாற்றல் வாங்கி போய்விடலாம் என்கிற நம்பிக்கையோடு அவள் சென்னை வந்திறங்கினாள். மயிலாப்பூரில் ஒரு கிளையில் வேலை. வேறு ஊர், அழுத்தம் நிறைந்த வேலை. தான் வசிக்கும் வீடையாவது தனக்கு பிடித்த மாதிரி அமைத்துக் கொண்டால், கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும் என்று தோன்றியது. சிறுவயதிலிருந்து அவளுக்கிருந்த ஒரு எளிய ஆசை பால்கனி வைத்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதே. அது இப்போதாவது நிறைவேறட்டும்.

பால்கனி தோட்டத்தை அமைத்துக் கொண்டு, ஓய்வு நேரங்களில்  ஆங்கில நாவலும் காபியுமாக இரண்டு வருடத்தை ஓட்டலாம் என்கிற எண்ணம்  ஆழ்மன சந்தோசத்தை கொடுத்தது. 

மந்தவெளி பக்கம் வீடு பார்த்துக் கொள்ளலாம் என்றான் அலுவலக பியூன் சுரேஷ். பால்கனி இல்லாத வீடுகள் நிறைய கிடைத்தன. பால்கனி இருந்தால் அது மூன்றாவது மாடியில் அமைந்திருந்தது. அத்தகைய வீடுகளில் லிப்ட் இல்லாமல் இருந்தது. முதல் மாடியில் பால்கனி வைத்த வீடுகளில், பால்கனி மிக சிரியதாக இருந்தது. அதில் புத்தகத்தை கூட வைக்கமுடியாது, எங்கிருந்து அமர்ந்து படிப்பது! எல்லாமே விரும்பும் படி இருந்தால், வாடகை எட்டாத தூரத்தில் இருந்தது. சற்றே பொருத்தமாக அமைந்த ஒரு வீட்டில், ஹவுஸ் ஓனர், 

“ஹிந்தி பொண்ணா, பாய் பிரெண்ட்ஸ்னு யாரும் வரக்கூடாது” என்றார். 

“மேடம் சார் டெல்லிங் நோ பாய் பிரெண்ட்”  

ப்ரியங்காவோ,  “பிரெண்ட்ஸ் வந்தா என்ன!” என்றாள். 

“வீடு இல்ல போமா” ஓனர் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டார். 

“மேடம் இப் யூ வாண்ட் ஹவுஸ், தென் பாய்பிரெண்ட் நோ” என்றான் சுரேஷ். அவன் அவளைவிட நான்கு வயது இளையவன். அவளோடு வீடு தேடி அழைந்த இந்த இரண்டுவாரங்களில், அவன் மனதில் காதல் பூ மலர, தான் அவளின் பாய்பிரெண்ட் ஆகிவிடலாம் என்கிற நம்பிக்கையோடு அவளோடு பயணித்தான். 

“மேடம் நீங்க எங்க எரியா வந்துருங்க, பெரம்பூர் இங்க இருந்து ஜஸ்ட் பிப்டீன் கிலோமீட்டர்” என்பான். 

அவன் அசடு வழிவது பிரியங்காவிற்கு தெரியாமல் இல்லை. சின்னப்பையன் என்றளவில் அவன் பேசிய எதையும் அவள் பொருட்படுத்தவில்லை. பால்கனி வைத்த வீடு கிடைத்ததும் இவனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவோடு வீடு தேடினாள். பல நாட்கள் பல படிகள் ஏறி இறங்கிய பின், இறுதியாக ஒரு வீடு உறுதியானது. எதிர்பார்த்த வாடகையை விட மூவாயிரம் அதிகம் தான்.  நிர்ணயித்த வாடகையை நிர்வாகம் கொடுத்துவிடும், மிச்சம் மூவாயிரத்தை அவள் தான் தரவேண்டும். பரவாயில்லை சமாளிக்கலாம் என்று முடிவு செய்து, வாடகை ஒப்பந்தத்தை நிர்வாகத்திற்கு அனுப்பினாள். ஒருவாரத்தில் அப்ரூவல்  வந்தது. 

முதல் தளத்தில் அவள் விரும்பியது போல்  பெரிய பால்கனி வைத்த வீடு. பூத்தொட்டிகளை வாங்கி அடுக்கினாள். ஒரு ரிக்லைனர் சேரையும் வாங்கிப் போட்டாள்.  அந்த ஞாயிற்றுக்கிழமை  மாலையில் அங்கே அமர்ந்து ஓய்வு எடுப்பது பெரும் நிறைவை அளித்தது. அவ்வளவுதான், அடுத்த இரண்டு வருடங்களை மகிழ்ச்சியாக ஓட்டிவிடலாம். வீக்கெண்ட் இரவில் பால்கனியில் பார்ட்டி கூட வைக்கலாம். வெளியூரில் இருந்த வீட்டு ஓனர், ஐந்து தேதிக்குள் வாடகை வர வேண்டும் என்பதை தவிர எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை.  

மறுநாள் அலுவலகத்திற்கு சென்றதும், “வாட் மேடம்! ஹவுஸ் யூ லைக்” என்றான் சுரேஷ். 

உதவி மேலாளரை அழைத்து சுரேஷை காண்பித்து சொன்னாள், “அவனை இனிமே தேவையில்லாம என் கூட பேச வேணாம்னு சொல்லுங்க. அப்ப தான் அவன் இந்த பிராஞ்சுல இருக்க முடியும்” சுரேஷின் மனதில் பூத்திருந்த பூமரம் முறிந்துபோனது. பிரியங்கா மனதில் புன்னகை செய்து கொண்டாள்.

மாலை வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு, காபியை எடுத்துக் கொண்டு பால்கனி நோக்கி நடந்தாள். பால்கனியின் நிலையே அதிர்ச்சி தரும் வகையில் மாறி இருந்தது. பால்கனி முழுக்க புறா எச்சம். தலையில் அடித்துக் கொண்டு அதை சுத்தம் செய்தாள். ஆனால் ஒவ்வொரு நாளும் புறாக்களின் எண்ணிக்கை கூடுகிறது என்கிற அளவில் அங்கே எச்சங்களும் இறகுகளும் சிதறிக் கிடந்ததன.

“இதுக்கு முன்னாடி இருந்தவங்க புறா தொல்லை தாங்காம தான் காலி பண்ணாங்க. நீங்க வாறீங்கனு ஓனர் பால்கனிய தினைக்கும் ரெண்டு பேர அனுப்பி சுத்தம் பண்ணுனார்” என்றார் வாட்ச்மேன்.

பிரியங்காவால் நாளுக்கு நாள் சமாளிக்க முடியவில்லை. ஏராளமான புறாக்கள் பால்கனிக்கு வந்து போக தொடங்கின. காலையில் தூங்கி விழிக்கையிலேயே  புறாக்களின் சப்தம் நாராசமாக காதில் ஒலித்தது.  மாப் ஸ்டிக்கை கையில் வைத்து புறாக்களை துரத்தினாலும், சிறிது நேரத்தில் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டு புறாக்கள் ஆட்டம் காட்டின. 

“பால்கனிக்கு நெட் போட்டு கொடுங்க” என்றாள் ஓனரிடம். 

“அதெல்லாம் முடியாது. வேணாம்னா காலி பண்ணிக்கோங்க” என்றார் அவர். உடனடியாக இன்னொரு வீடு மாற முடியாது. மறுபடியும் நிர்வாகத்தில் ஆப்ரூவல் வராது. அந்த வீட்டில் தான் ஓட்ட வேண்டும் என்பதே சூழல். ஒரு ஞாயிற்று கிழமை, பால்கனிக்குள்ளிருந்த பூச்செடிகளை எடுத்து சென்று குப்பை தொட்டியில் வீசினாள். பின் பெரிய பூட்டொன்றை வாங்கி வந்து பால்கனி கதவை பூட்டினாள். இனிமேல் பால்கனிக்குள் போக மாட்டோம் என்கிற கசப்பான உண்மை பிரியங்காவிற்கு வலியை தந்தது. ஊரிலிருந்த அம்மாவிற்கு போன் செய்து, “மம்மி” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் தேம்பித்தேம்பி அழுதாள். 

***

குறுங்கதை-6 – விட்னஸ்

சுப்பு என்றழைக்கப்பட்ட சுப்பிரமணி ஒரு பிரபலமான ‘விட்னஸ்’. கோர்ட் படி ஏறி, குற்றத்தை கண்ணால் கண்டேன் என்று சாட்சி சொல்லும் விட்னஸ் உங்கள் நினைவிற்கு வந்தால் அந்த எண்ணத்தை நீக்கி விடுங்கள். அவர் ஒரு சாதாரண ஆள். அவருக்கு போலீஸ், கோர்ட் போன்ற விசயங்கள் அலர்ஜி தரக் கூடியவை. என்ன ஆனாலும் வாழ்நாளில் போலீஸ் ஸ்டேஷன் படியை மிதித்துவிடவோ தாண்டிவிடவோ கூடாது என்கிற குறிக்கோளோடு அறுபது வயதை தொட்டுவிட்டார்.  மூன்று பெண்களில், கடைசி பெண்ணை இன்னும் கரை சேர்க்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது.

அந்த காலத்திலேயே சி.ஏ தேர்வு எழுதி ஒரு பேப்பரில் தேர்வு பெற முடியாமல் போனதால், ஏதேதோ வேலைகள் செய்து, ஐம்பது வயதிற்கு பின்பு உடல்நலக் கோளாறுகள் வந்ததும் அவராகவே அமைத்துக் கொண்ட சுயதொழில் தான் ‘விட்னஸ்’ தொழில். ஒரு நாளைக்கு குறைந்தது ஐநூறு ரூபாய் உத்தரவாதமாக கிடைக்கும். சில நாட்களில் அதிர்ஷ்டம் இருந்தால் இரண்டாயிரம் மூணாயிரம் கூட கிடைக்கலாம்.  

ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் பத்திர பதிவின் போது பத்திரத்தின் தன்மைக்கேற்ப ஒருவரோ இருவரோ சாட்சி கையெழுத்து போட வேண்டியது சட்டத்தின் அவசியம். இன்னாரை எனக்கு தெரியும், அவர் பத்திரத்தில் கையெழுத்து இட்டதை நான் பார்த்தேன் என்று சொல்வதே சாட்சியின் நோக்கம். எனினும் இப்போதெல்லாம் யாரும் அந்த நோக்கத்தை பற்றி கவலைப்படுவதில்லை. சம்பிரதாயமாக இரண்டு சாட்சிகள் வேண்டும் என்பதால் யாரோ யாருக்கோ பணத்திற்காக சாட்சி கையெழுத்து போட்டு வந்தார்கள். அப்படி சாட்சி கையெழுத்து போட்டு வந்த ஒரு ‘விட்னஸ்’ தான் ‘சுப்பு’ என்கிற சுப்ரமணி. 

இரண்டு சாட்சிகள் வேண்டுமெனில், பத்திர எழுத்தர் அலுவலகத்தில் வேலை செய்பவர்களே ஒரு சாட்சியாக கையெழுத்து போடுவார்கள். இன்னொரு சாட்சியை தேட நினைத்த நொடியில் கண்முன் வந்து நிற்பார் சுப்பிரமணி. 

“விட்னஸ் இன்னும் வரலையா! சுப்புவ கூப்டு” என்று பத்திர எழுத்தர்கள் சொல்லும் அளவிற்கு அவர் அந்த அலுவலகத்தில் ஆஸ்தான விட்னஸ் ஆகி இருந்தார். காலையிலேயே தயிர்சாதம் பூண்டு ஊறுகாயை கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார். மாலை வரை பத்திரப்பதிவு அலுவலகமே அவர் உலகம். 

ஒரு பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கு இருநூற்றைம்பது அவரது ஸ்டாண்டார்ட் ரேட். கூட கேட்க மாட்டார். சிலர் ஐநூறு ரூபாய்கூட கொடுப்பார்கள். வேண்டாம் என்று சொல்ல மாட்டார். எனினும் அந்த தொழிலுக்கும் போட்டி இருந்ததால் எல்லா பத்திரத்திற்கும் அவரே போய் நிற்க முடியாது. வந்ததை வைத்து நிறைவாக வாழ்க்கையை ஓட்டினார், புதிதாக ஸ்கேனிங்  கிளார்க் மணி வரும்வரைக்கும். 

வந்த ஒருவாரத்திலேயே மணிக்கு கையும் வாயும் நீளம் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. சுப்புவை அழைத்து “என்ன பெருசு! எல்லாத்துக்கும் நீயே வர! நிறைய காசு பாப்ப போல இருக்கே!” என்றான். 

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க” 

“எல்லாம் தெரியும்யா! அந்த என்.ஆர். ஐ பார்ட்டி ஆயிரம் கொடுத்தானாம்! எனக்கு இனிமே ஒரு நாளைக்கு முன்னூறு கொடுத்துரு அவ்ளோதான்” 

“அவ்ளோ கட்டுப்படி ஆவாதுங்க. சிலநாள்  வரதே அவ்ளோதாங்க!” இதோடு சுப்பு நிறுத்தி இருக்கலாம். அன்று அவருக்கு சந்திராஷ்டமம். சற்றே வாய் துடுக்காக சொல்லிவிட்டார். 

“நீங்க தான் ஒவ்வொரு டாக்குமெண்ட்க்கும் தனியா வாங்குறீங்களே. என்கிட்ட போய் கேட்குறீங்க! நீங்க வாங்குறத நீங்க வச்சிக்கோங்க. நான் வாங்குற சொற்பத்த நான் வச்சுக்கிறேன்”

அவ்வளவுதான். மணி ரிஜிஸ்ட்ராரிடம் என்ன சொன்னான் என்று தெரியாது. மறுநாள் ரிஜிஸ்ட்ரார் அங்கே இருந்த ஆவண எழுத்தர்களை அழைத்து இனிமேல் யாரும் சுப்புவிற்கு வேலை கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்.  

“நாங்க என்னையா பண்றது. ரிஜிஸ்ட்ராரே சொல்றார். பேசமா நீ வேற SRO போய்டு! இந்த ஆள் மாறுனதும் வா” என்றனர் ஆவண எழுத்தர்கள். 

சுப்ரமணியால் இந்த வயதிற்கு மேல் வேறொரு ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்திற்கு சென்று நட்பு வளர்க்க முடியாது. அதுவும் இல்லாமல் இந்த அலுவலகம் வீட்டிற்கு அருகிலேயே இருந்தது. இந்த வேலையும் எளிமையான வேலையாக இருந்தது. இனிமேல் எங்கு போய் உடலை வளைத்து வேலை செய்வது! 

காலத்தின் கட்டாயத்தில் ஒரு ஹோட்டலில் வாட்ச்மேனாக வேலை சேர்ந்துவிட்டார். நான்கைந்து ஆண்டுகள் ஒடின. விட்னஸ் பணியில் வந்த பணம் வரவில்லை என்றாலும் சம்பளம் வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்தது. மகளுக்கும் வேலைகிடைத்திருந்ததால் வாழ்க்கையை ஓட்டுவதில் சிக்கல் இல்லை. 

ஒரு நாள் வழக்கம் போல், விசில் ஊதி ஓட்டலுக்கு வந்த வண்டியை பார்க்கிங் செய்ய உதவிக்கொண்டிருந்த போது யாரோ ஒருவன் தடுமாறி ஓடுவதை கவனித்தார். அவனை நான்கு பேர் கைகளில் அரிவாளோடு துரத்தி சென்றனர். அவர்கள் முகத்தை அவர் நன்றாகவே பார்த்தார். சில நொடிகள் தான். ஓடியவனை கீழே தள்ளி அரிவாளுக்கு வேலைக் கொடுத்தனர் அந்த நான்கு பேரும். 

சுப்ரமணியின் கண்களும் கீழே துடித்தவனின் கண்களும் சந்தித்துக் கொண்டது. அவன் அவரை பார்த்தவாறே உயிரை விட்டான். 

சிசிடிவி காட்சிகள் போலீசிற்கு எந்த துப்பையும் கொடுக்கவில்லை. “யாரவது கொலையை நேரில் பார்த்தீர்களா?” என்று பலரை விசாரித்தும் யாரும் சாட்சி சொல்ல முன்வரவில்லை. சுப்பிரமணி தன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி நேரடியாக காவல்நிலையத்திற்கே போய் நடந்ததை சொன்னார். போலீசார் அவரை வழக்கில் ‘விட்னஸாக’ இணைத்தனர். 

சுப்பிரமணி இறுதிவரை வழக்கிலிருந்து பின்வாங்கவில்லை. கொலைகாரர்கள் தண்டிக்கப்பட்டனர். இறந்துபோனவனின் குடும்பத்தினர் சுப்ரமணியை கையெடுத்து கும்பிட்டனர்.  

கொலையுண்டு இறந்து போய் தன்னை போலீஸ் ‘விட்னஸ்’ ஆக்கிய மணிகண்டன் தான் தன் ‘ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் ‘விட்னஸ்’ ‘வேலை பறிபோக காரணமான ஸ்கானிங் கிளார்க் மணி என்கிற உண்மையை ‘சுப்பு’ என்கிற சுப்பிரமணி சாகும்வரை யாரிடமும் சொல்லவில்லை. 

***

குறுங்கதை-5 – அவள், அவன் மற்றும் கடல் 

அவள், அவன் மற்றும் கடல் 

இரவு. மெரினா கொஞ்சம்கொஞ்சமாக  அடங்கிக் கொண்டிருந்த வேலை. பெரும்பாலான வியாபாரிகள் கடையை அடைத்திருந்தார்கள். மிச்சமிருந்த ஓரிரு உணவகங்கள் விளக்கை அணைத்துவிட்டு  கடைசி வாடிக்கையாளர்களுக்கு  உணவு பரிமாறிக் கொண்டிருந்தன. கடற்கரையை ஒட்டியிருந்த சாலையில் போலீஸ் வாகனம் சைரனை இயக்கி வியாபார நேரம் முடிந்துவிட்டதை தெரியப்படுத்திக் கொண்டிருந்தது. 

அவள்  ஹெல்மெட்டை மணலில் போட்டுவிட்டு கடலை நோக்கி நடந்தாள். கடல், எப்போது சென்றாலும்  யாரையும் வஞ்சனையின்றி வரவேற்கும். நீரில் கால் பட்டதும் காரணமேயின்றி கண்களில் நீர் சுரக்கத் தொடங்கியது. தன் கையிலிருந்த பெரிய பையினுள் கைவிட்டதும் வெளியே எட்டிப்பார்த்தார் பளிங்கு புத்தர். அவன் கொடுத்த முதல் பரிசு.  இனிமேல் அவர் இருக்க வேண்டிய இடம் கடல். புத்தர் அலையினுள் மிதந்து மறைந்தார். 

அடுத்து பைக்குள்ளிருந்து வந்தது சில கடிதங்கள். சொற்கள் அர்த்தமற்று போகும்போது கடிதங்கள் வெற்றுக் காகிதங்கள் ஆகின்றன. கண்களை துடைத்துக் கொண்டே அவற்றைக் கடலில் எறிந்தாள்.பேன்சி வளையல்கள், லினன் ஸ்டோல்கள், அலங்கார உடைகள் என வரிசையாக ஒவ்வொன்றாய் கடல் சேர்ந்தது. பையின் கணம் குறைய குறைய மனதின் கணமும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியாக அந்த பையையும் தூக்கி வீசியவள்,

“கெட் அவுட் ஆஃப் மை லைஃப்  யூ பாஸ்டர்ட்” என்று கத்தினாள். 

இதழோரம் புன்னகை பிறந்தது. கண்களை மூடி கடலை உள்வாங்கினாள். காதில் ஒலித்தது அலை ஓசை மட்டுமே. கொஞ்ச நேரத்தில் அதுவும் இல்லை. எங்கும் சூனியம். இனிமேல் தன் வாழ்வில் அவன் இல்லை.அவன் கொடுத்த பொருட்களோடு அவன் நினைவுகளும் கடலில் கறையட்டும். துரோகியை நினைத்து வாழ்க்கையை தொலைக்க முடியாது. இந்த நொடியிலிருந்து புது வாழ்க்கை தொடங்குகிறது. இன்னும் ஒருவாரத்தில் விசா நேர்காணல் இருக்கிறது. வேறு ஊர் புதிய அத்தியாயத்தை தரக்கூடும். காலம் எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அப்பா விரும்புவதும் அதைதான். அவன் தந்த எதுவும் இப்பொது தன்னிடம் இல்லை என்ற எண்ணம் தோன்றி ஆசுவாசத்தை தந்தபோது, அனிச்சையாக வயிற்றை ஒரு முறை தடவி பார்த்துக் கொண்டாள்.   

“தி நகர்ல ஒரு ஹாஸ்ப்பிட்டல் இருக்குடி” அவள் தோழி ரம்யா சொன்னது நினைவிற்கு வந்தது. 

அவன் தான் துரோகி, தான் அல்ல என்று அவளுக்கு நன்றாக தெரியும். அதுவும் ஒரு பிஞ்சு என்ன பாவம் செய்தது? 

கண் திறக்காமல் கடல் உள்ளே நடந்தாள். அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த வண்டியை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கலாம் என்று மனம் சொன்னது. 

“ஐ லவ் யூ டாட்” என்றாள்.

கடல் அன்னை அவளை வாரி அணைத்துக்  கொண்டாள்.  

***

குறுங்கதை-4 – பழைய நண்பன்

பழைய நண்பன்

சந்தோசும் ரகுவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இறுதி ஆண்டிலேயே கேம்பஸில் ரகுவிற்கு வேலை கிடைத்தது. சந்தோஷிற்கு கிடைக்கவில்லை. அவன் அதே கல்லூரியில் முதுகலை பொறியியல் படித்தான்.  அப்போதும் வேலை கிடைக்கவில்லை மீண்டும் அதே கல்லூரி ஹாஸ்டலில் பகுதி நேர வார்டானாக கொஞ்சகாலம் வேலை செய்தான். ரகு ஈ.எம். ஐயில் வீடு வாங்கினான. கார் வாங்கினான். திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளை பெற்றான். சந்தோஷ் நல்ல வேலையை  தேடிக் கொண்டிருந்தான். 

ரகுவிற்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவனிடம் யார் கடன் கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டான். கர்ணபரம்பரை என்று எண்ண வேண்டாம். ‘இல்லை’ என்று சொன்னால் தன்னுடைய கெத்து குறைந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஏதாவது ஒரு தொகையை கொடுத்துவிடுவான். ஆனாலும் கடனை திருப்பி கேட்க தைரியம் வராது. அப்படியே கேட்டாலும், வாங்கியவர்கள் உடனே கொடுத்துவிடுவார்களா என்ன! இப்படி தான் ரகு தன் பள்ளி நண்பன் பிரவீனுக்கு பல ஆயிரங்கள் பல சந்தர்ப்பங்களில் கொடுத்தான். பிள்ளைக்கு பள்ளிக்கூட பீஸ் கட்டவேண்டும், அப்பாவிற்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று பிரவீன் ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்வான். பின்னர் பணத்தை திருப்பி கேட்டபோது பிரவீன் அதற்கும் ஏதேதோ காரணம் சொல்லி நாட்களை கடத்தினான். அப்படியே தன் அலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டான். ரகுவிற்கு ஏமாற்றமாக இருந்தது.  

ஒருநாள் தெரியாத ஒரு எண்ணிலிருந்து  அழைப்பு வந்தது. பிரவீன் தான் பேசினான். மீண்டும் அவசர தேவை என்று பணம் கேட்க, ரகு உறுதியாக மறுத்தான். காலம் அவனையும் மாற்றி இருந்தது.  அதன் பின்பு பிரவீன் பல முறை அழைத்தும் ரகு அழைப்பை ஏற்கவில்லை. பழைய நண்பர்கள் யாரவது அழைத்தால் கடன் கேட்டுவிடுவார்களோ என்கிற அச்சத்தோடே  ரகுவின் நாட்கள் கழிந்தன. இதனாலேயே தேவை இல்லாமல் நண்பர்களிடம் பேசுவதை தவிர்த்தான். 

ஒரு நன்னாளில் சந்தோஷிடமிருந்து ரகுவிற்கு வாட்ஸ்  அப்பில் மெசேஜ் வந்தது. 

“ஹாய் மச்சி”

ரகுவிற்கு  பயம் அதிகமானது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு நண்பன் சதீஷின் குழந்தையுடைய பிறந்தநாள் விழாவில் பார்த்தபோது கூட  சந்தோஷ் தான் வேலை தேடிக் கொண்டிருப்பதாக சொன்னான். இவ்வளவு வருடங்களுக்கு பிறகு ஏன் தொடர்பில் வருகிறான்? ஒருவேளை கடன் கேட்பானோ! அதற்கு முன்பு சந்தோஷ் ரகுவிடம் கடன் கேட்டதில்லை தான். ஆனாலும் எல்லாவற்றிற்கும் முதல் முறை என்று ஒன்று இருக்கிறதே?

ரகு பதில் அளிக்கவில்லை. சிறிது நேரத்தில் சந்தோஷிடமிருந்து அழைப்பு வந்தது. ரகு பயந்துக் கொண்டு போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டான். அடுத்து சந்தோஷை பிளாக்கும்  செய்துவிட்டான்.

அடுத்த வருடம்  கல்லூரியில் அலுமினி மீட்டிங் வந்தது. பயத்திலிருந்து மீண்டிருந்த  ரகு பழைய நண்பர்களை காணும் பொருட்டு சென்றிருந்தான். பலரும் வந்திருந்தனர். சந்தோஷ் வரவில்லை. 

“பார்த்து எவ்ளோ நாள் மாப்ள ஆச்சு” என்று சதீஷ் ரகுவை தழுவிக் கொண்டான். ஏதேதோ பேசினார்கள். இறுதியாக பேச்சு சந்தோஷ் பக்கம் திரும்பியது.. 

“அவன் பெரிய நகைக் கடை அதிபர் ஆகிட்டான் மாப்ள. அவங்க மாமனார் பெரிய கோடீஸ்வரர் தெரியும்ல!” சதீஷ் சொல்ல ரகு அதிர்ந்தான். 

“அவன் கல்யாணத்துக்கு போன பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு கிராம் கோல்ட் காயின் கொடுத்தாண்டா! அப்ப பாத்துக்கோ எப்பேர்ப்பட்ட வெய்ட் கைனு” சதீஷ் சொன்னதை கேட்டதும் ரகுவிற்கு தலை சுற்றியது. போனை அணைக்காமல் இருந்திருந்தால் தனக்கும் ஒரு தங்க காயின் கிடைத்திருக்கும் என்று எண்ணும்  போதும் அழுகையாக வந்தது.

“ஏன் மாப்ள அவன் கல்யாணத்துக்கு உன்ன கூப்புடலையா? எனக்குலாம் கால் பண்ணான்னே!” 

சுதாரித்துக் கொண்ட ரகு சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு சொன்னான், “எப்பிடிடா பண்ணுவான். அவன் வேலை தேடிகிட்டு இருந்தப்ப மாச செலவுக்கு நான் தான் பணம் கொடுத்தேன்.எவ்ளோ செஞ்சிருக்கேன் தெரியுமா! நன்றி கெட்டவன்”

 ***

குறுங்கதை-3 -வீடு

வீடு

ராணியம்மாவிற்கு கால் தரையில் இல்லை. குடிகார கணவனை வைத்துக் கொண்டு மூன்று பிள்ளைகளை கரை சேர்த்தபோது கிடைக்காத  சந்தோசம், இப்போது ஐம்பது வயதில் எட்டிப்பார்க்கிறது. பாத்திரங்களை வேகவேகமாக கழுவினாள். பிரியாணி செய்த பாத்திரம். எப்போது பிரியாணி செய்தாலும் அவளுக்கு ஒரு டிபன் அந்த வீட்டு எஜமானி கொடுத்துவிடுவாள். அதுவும் அவளாகவே அல்ல. ராணியம்மாள் பாத்திரத்தை கழுவி முடித்துவிட்டு, “என்னமா இன்னைக்கு பிரியாணியா!” என்று கேட்பாள. அந்த கேள்விக்காகவே  காத்திருந்தவளாய் எஜமான பெண்மணி குஸ்காவை மட்டும் கொடுப்பாள். ராணியம்மாவிற்கு பிரியாணி மீது  தனி காதல் உண்டு. ஆனாலும் தான் ஒருத்திக்காக செலவு செய்வதில் அவளுக்கு விருப்பமில்லை. அதனால் எஜமானி கொடுக்கும் கறியில்லா  பிரியாணியே போதும் என்ற அளவில் வாழ்க்கையை ஓட்டினாள். 

பாத்திரங்களை கவிழ்த்து வெளியேற ஆயத்தமானவளை எஜமானி ஆச்சர்யமாக பார்த்தாள்.   “என்னமா இன்னைக்கு பிரியாணியா!”  என்கிற வழக்கமான கேள்வியை அவள் கேட்காமல் போனது தான் காரணம். 

எஜமானி அவளாகவே பிரியாணி டிபனை அவளிடம் நீட்டினாள். அவள் கேட்கவில்லை என்பதற்காகவே அவள் கண்முன்னே டிபனை திறந்து, இரண்டு துண்டு கறியை உள்ளே வைத்து மீண்டும் ராணியம்மாவிடம் கொடுத்தாள்.

“வேண்டாங்கமா. விரதத்துல இருக்கேன்” என்றாள் ராணியம்மா. எஜமானியின் முகத்தில் ஆச்சர்யம்.

“கவர்ன்மென்டல வீடு கொடுக்க போறங்கமா! வீடு கிடைக்குற வரைக்கும் கவுச்ச சாப்புட மாட்டேன்னு வக்ரகாளிக்கு வேண்டியிருக்கேன். நாளைக்கு கொடுக்குறாங்க. எல்லா வீட்லயும்  நாளைக்கு லீவ் சொல்லிட்டேன். உங்க வீடு தான லாஸ்ட்டு, முடிஞ்சா வரேன். இல்லனா பாத்திரத்தை போட்டு வைங்க. நாளான்னைக்கு வரேன்” 

அது என்ன இலவச வீடு என்று தெரிந்து கொள்வதில் தான் எஜமானுக்கு ஆர்வம். 

“யார்ட்டையும் சொல்லலமா. என் புள்ளைங்களுக்கு கூட இன்னும் தெரியாது. உங்களாண்ட தான் முதல சொல்றேன்! வீடு இல்லாதவங்களுக்கு ஹவுசிங் போர்டுல வீடு கொடுக்குறாங்க. ஒரு வருசமா ட்ரை பண்றேன். எனக்கு வீட்டுக்காரர் இல்லல! பாத்துக்க யாரும் இல்லனு வந்த சார் ரிப்போர்ட் எழுதிகிறேன்னு சொன்னாரு. அவருக்கு தனியா அஞ்சாயிரம் கொடுத்தேன்மா.  நாளைக்கு கலெக்டர் கைல லெட்டர் கொடுக்குறாங்க” 

“உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் போங்க” என்றாள் எஜமானி. அவள் சொன்னதற்கு பின்னே இருக்கும் வயித்தெரிச்சலை ராணியம்மா உணராமல் இல்லை.  இவ்வளவு பெரிய அடுக்குமாடியில் இருப்பவள் தனக்கு கிடைக்கப்போகும் ஒரு அறை வீட்டை எண்ணி காய்ந்து போகிறாள்.. ஆனால் ராணியம்மா அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் கேட்டாள். 

“அப்புறம் அம்மா ஒரு இருநூறு ரூபாய் அட்வான்சா கொடுங்களேன். கை செலவுக்கு வேணும்” 

இருநூறை நீட்டிய எஜமானி, “பாத்துக்கோங்க மா. அடிக்கடி அட்வான்ஸ் கேட்குறீங்க, லீவ் வேற நிறைய எடுக்குறீங்க. எனக்கும் கஷ்டமா இருக்கு” என்றாள். ராணியம்மா எதுவும் பேசவில்லை. அவளுக்கு வீடு கிடைக்க போகிற குதூகலம். 

மறுநாள் கூட்டத்தில் அவள் பெயரை அழைக்கவில்லை. அவளுக்கு கால் தரையில் பட்டது. வீடு கிடைக்கப்பெற்ற சந்தோஷமான முகங்கள் பல கடந்து போயின. தன் குரல் மேலெழும்பாது என்று அறிந்தவள் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறினாள்

கண்டும்காணாமல் போன பியூனை வழிமறித்து என்னவென்று கேட்டாள். 

“உன் அப்ளிகேசன் ரிஜக்ட் ஆச்சுமா. உன் ஆண்டு வருமானம் ஆறு லட்சத்துக்கு மேலனு ரிப்போர்ட்ல இருக்கு!” 

“ஐயோ இது அடுக்குமா! என் வாழ்க்கைல அவ்ளோ பணத்தை பார்த்ததே இல்ல.  எங்க வீட்டாண்ட வந்த சார் எங்க!”

“அவருலாம் மாறி போய்ட்டாரு”

“ஏதாவது பாத்து பண்ணுப்பா” என்று அவனிடம் இருநூறு நோட்டை நீட்டினாள்.

“ஐய! ஏன் வேலைக்கே உலை வச்சிருவ போல, கிளம்பு” என்று அவன் நகர்ந்தான். 

அந்த இருநூறு ரூபாயை உற்றுப் பார்த்தவள், 

“வயித்தெரிச்ச புடிச்ச முண்ட” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். வயிறு காந்தத் தொங்கியது. சாலைக்கு வந்தவளின் கண்ணில் பட்டது பிரியாணி கடை.  சிக்கன் பிரியாணியை வாங்கி நிதானமாக தின்றாள்.  அவள் கணவன் பல வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் வாங்கித்தந்த பிரியாணி நினைவிற்கு வந்தது. ஒரு பீடாவையும் வாங்கி போட்டவள், கடை வாசலில் நின்றவாறே எஜமானிக்கு போன் செய்தாள். 

“அம்மா எனக்கு வீடு கிடைச்சிருச்சு. நீங்க சொன்னது கரெக்ட் தான். வீடு ரொம்ப தூரம். தினமும் வேலைக்கு வரமுடியாதுமா. நீங்க வேற ஆள பாத்துக்கோங்க” என்று போனை துண்டித்தாள். 

வயிறும் மனமும் நிறைந்திருந்தது.