மயக்கம் என்ன

மயக்கம் என்ன

தமிழ் சினிமாவில் தனிமனித உணர்வுகளை மையப்படுத்தி
எடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவு. ஒரு மனிதனின்
வாழ்கையை நேர்கோட்டு சித்திரமாக காட்ட யாரும் அதிகம்
முயற்சித்ததில்லை. தமிழ் சினிமாவுக்கென எழுதப்பட்ட
இலக்கணம் அவ்வாறான படங்களை ஆதரித்ததில்லை.

இங்கு காதலை, காதலியை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப்
பற்றிய படங்களே அதிகம். தன் லட்சியத்தை துரத்திப்
பிடிக்கும் மனிதர்களைப் பற்றி  யாரும் படப் பிடிக்க
விரும்பியதில்லை.  ஒவ்வொருவரும் வாழ்கையில்  ஏதோ
ஓர் லட்சியத்தை அடைய போராடிக் கொண்டிருக்கிறோம்,
அவ்வாறான போராட்ட களங்களை படம் பிடிக்க தமிழ்
சினிமா ஏதோ ஒரு வகையில் அஞ்சிக்கொண்டிருக்கிறது.

“ஆறில் இருந்து அறுபது வரை” படத்திற்கு பின் எந்த ஓர்
படமும் தனி மனித உணர்வினை பேசிடவில்லை.
இங்கு குறிப்பிடப்படுவது மெல்லிய உணர்வுகளை.

போலீஸ் ஆவதை லட்சியாமாக கொண்டு ஆக்ரோசமாக
பயணிக்கும்        கதாநாயகனைப் பற்றிய படங்கள் நிறைய
வந்துள்ளது. அந்த படங்களில் மசாலாத்தன்மையே அதிகம்
இருந்ததேயன்றி உணர்வுகளின் காட்சியமைப்பு மிகக் குறைவு.

அப்படி மசாலா காட்சிகளை அதிகம் தவிர்த்து, எதார்த்தத்தோடு
பயணிக்கும் படமே ‘ மயக்கம் என்ன’

வனவிலங்கு புகைப்படக்காராரக வர விரும்பும் ஓர் சராசரி
இளைஞன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களே இப்படம்.
பல போராட்டங்களுக்கு பின் அவன் இறுதியில் தன் லட்சியத்தை
அடைகிறான். ஆங்கிலத்தில் வந்த Pursuit of happiness, Cinderalla man,
Beautiful Mind போன்று இதுவும் உங்களை எந்த வகையிலும்
ஏமாற்றாத ஓர் அருமையான படம்.
‘வறுமையின் நிறம் சிவப்பு’  படத்திலும் கதாநாயகன்
இலட்சியத்திற்காக போராடுவார். ஆனால் அதில் வரும் கதாநாயகன்
சித்தாந்தம்  பேசும் ஓர் மனிதனாக காட்டபட்டிருப்பார். ஆனால்
மயக்கம் என்ன படத்தின் கதாநாயகன் ஓர் சாதரணமானவன்.
உங்களையும் என்னையும் போன்று. அதுவே இந்த படத்தின்
மிகப்பெரிய பலம். ஒரு காட்சில் கதாநாயகன் கண்ணீர் வடிப்பார் ,
“எனக்கு வேற எதுவுமே தெரியாது யாமினி  “.
இங்குதான் கதாபத்திரம் தன் இயலாமையை ஒத்துக்கொள்கிறது.
இதுவே தனி மனித யதார்த்தம் …

சில படங்கள் மட்டுமே , கதையை பல முறை கேட்டாலும்.
திரைக்கதையையே படித்தாலும், பார்க்கும் போது சலிப்பு தட்டாது.
மேற்கூறிய அணைத்து ஆங்கில படங்களும் அந்த
வகையை சார்ந்தவையே.அதற்க்கு காரணம்
அந்த படங்களில் நடித்த நடிகர்களின் திறமை.
மயக்கம் என்ன படத்திலும் நடிகர்கள் பிளந்து கட்டுகிறார்கள்.
குறிப்பாக தனுஷ், ரிச்சா, சுந்தர்..

இது அருமையான படம் என சிலரும், மிகவும் மெதுவான
திரைக்கதைஎன சிலரும், இதற்குமுன் தன்
படத்தில் வைத்த காட்சிகளையே செல்வா
மீண்டும் வைத்துள்ளார் என சிலரும் குறிப்பிடுகின்றனர். ஆனால்
இவை அனைத்தையும் தவிர்த்து மயக்கம் என்ன திரைப்படம்
நிறைய ஆக்கப் பூர்வமான விமர்சனங்களுக்கு வழிவிட்டு
செல்கிறது .

தமிழ் திரைப்படங்களில் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களை விரல் விட்டு
எண்ணிவிடலாம். மொழி, தென்மேற்கு பருவகாற்று போன்ற
படங்கள் பெண்ணின் கதாபாத்திரத்தை முன்னிறுத்தியே
எடுக்கப்பட்டன . ஆனால் ஓர் கதாநாயகனின் வெற்றிக்கு
நாயகிதான் காரணம்  என குறிப்பிடும் படங்கள் தப்பி தவறியும்
தமிழில் வந்ததில்லை. நம் சமுதாயம் ஆண் ஆதிக்கம் நிறைந்தது.
நாம் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் அதுவே உண்மை.
இதற்க்கு முன் பெண்களை முன்னிலைப் படுத்தி வந்த படங்கள்
சற்றே வேறு வகையை சார்ந்தவை . முதல் பாதியில் நிறைய
ஆட்டம் போடும் கதாநாயகன் இரண்டாம் பாதியில்
திடிரென நோயில் படுத்திடுவார்.
கதாநாயகி மஞ்சள் அல்லது சிகப்பு புடவை உடுத்தி ‘அம்மா அம்மா ‘
என கதறிடுவார்.  ஏதோ ஓர் பிரபல நடிகை அம்மனாக வந்து
கதாநாயகனை காத்திடுவார். இது போன்ற படங்களை பற்றி
இங்கு பேசவில்லை. அது பெண்களை மூடர்களாக காட்டி
பணம் சம்பாதித்த ஆணாதிக்க படங்கள்

மயக்கம் என்ன படத்தில் காட்டப்பட்டிருக்கும் மனைவி ,
படத்திலேயே குறிப்பிட்டது போன்று ஓர் “இரும்பு பெண்” .
Cinderalla Man படத்தில் வரும் மனைவியை போல. கணவனின்
எல்லா தோல்விகளிலும் உடனிருந்து அவனை முன்னிற்கு
கொண்டு வரும்  ஓர் அருமையான மனைவி….
”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”
-கண்ணதாசன்…

படத்தில் இன்னொரு முக்கிய விஷயம் இயக்குனர் தன்
நடிகர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை.காரணம் நிறைய
அழுவை காட்சியில் தைரியமா க்ளோஸ் அப் வச்சிருக்கார்.
“உதிரிப்பூக்கள்” படத்திற்கு
பிறகு அணைத்து கதாப்பாத்திரங்கள் மீதும் நம்பிக்கை வைத்து
காட்சிகள் அமைக்கப்பெற்ற  படம் இதுவாதான் இருக்கமுடியும்

செல்வா இந்த படத்துல எங்கேயும் சறுக்கல.. ஆயிரத்தில் ஒருவன்
இரண்டாம் பாகத்துல இருந்த அந்த தலைகனம் இதுல இல்ல.
ரொம்ப எளிமையா, ஆனா அதே சமையம் அருமையாகவே
இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

இந்த படம் A beautiful mind படத்தின் தழுவல்னு சொல்றதெல்லாம்
பொய். A beautiful mind படத்தில் இறுதிகாட்சியில் விருது வாங்கிட்டு
ஹீரோ தன் மனைவிக்கு நன்றி சொல்லுவார். அதே மாதிரி ஒரு
காட்சி இப்படத்தில் இருப்பதனால் இந்த படத்த தழுவல்
படமென்றேல்லாம் சொல்ல முடியாது.

தமிழ் சினிமாவ பொறுத்த வரையில் கெளதம் மேனனும்,
செல்வராகவனும் திரைக்கதை எழுதுற வேகம்
ரொம்ப பிரமிக்கவைக்கிறது.
திடீர் திடிர்னு படம் எடுத்து மிரட்றாங்க
(எங்க இருந்து கதைய  உருவுறாங்க
என்பது தற்போது தேவைற்ற விடயம் )
செல்வா படங்களில் வழக்கமா கதாநாயகிய
ஒரு போகப் பொருளாதான்
சித்தரித்திருப்பார்.
(அவ்வாறெனினும் அதில் விரசம் இருக்காது.)ஆனால்
இந்த படத்தில் வழக்கத்திற்கு மாறாக
கதாநாயகிய ரொம்ப அருமையா சித்தரித்திருக்கார்.

தனுஷ் தேர்ந்த நடிகர் என மீண்டும் நிருபித்துள்ளார். புதுப்பேட்டை
படத்திலேயே அப்பாவி இளைஞனாகவும், மிக பெரிய தாதாவாகவும் .
முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதே போன்று
இப்படத்திலும் ஓர் மெத்தன புகைப்பட கலைஞனாக
இருந்து பின் ஓர் தலை சிறந்த
கலைஞாக மாறும் அந்த மாறுதல்,நடிப்பின் உச்சம்.

கதாநாயகியும் தன் பங்கிற்கு அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
வெறும் முக பாவத்திலேயே பல இடங்களில் மனதை கொள்ளைகொள்கிறார்.

படம் புகைப்படக் கலைஞன் சம்பத்தப்பட்ட படம் என்பதால்,
ஒளிப்பதிவாளரும் வித்தை காட்டியுள்ளார். அனைவரும் தங்கள்
வேலையை செவ்வன செய்துள்ளனர்…

இசை நன்றாக இருந்தது என்பதோடு நிறுத்திக்கொள்வோம். பல இடங்களில்
ஜி.வி.பிரகாஷின் இசை அவரது பழைய படங்களை ஞாபகபடுத்துகிறது.
(அந்த பழைய படங்களின் இசையும் பிரெஞ்சு இசையை ஞாபகப்படுத்தும்.
அது வேறு விடயம். ) இயக்குனர் தன் பழைய இசையமைப்பாளரோடு
கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் பத்து தீம் மியூசிக்யாவது
கிடைத்திருக்கும்.ஆனால் இப்படத்தில் ஒரே தீம் மியூசிக் தான்
சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது.
அதுவும் எரிக் சேரா வின்  (Eric Serra) இசையை நினைவு படுத்துகிறது

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் கொரிய ஜப்பானிய
திரைப்படங்களின் தாக்கம் அதிகாமாக தெரிகிறது.
சேரன்,மிஸ்கின் தொடங்கி இப்போது இந்த படத்திலும்
அந்த தாக்கம் தென்படுகிறது.

முன்பெல்லாம் கதை, திரைகதைகளே தழுவப்படும்.
இப்போது படத்தை எடுக்கும் முறை (Way of Making) தழுவப்படுகிறது.
ஒரு காட்சியை முடிக்கும் போது கதாபாத்திரங்களின் உணர்வுகளை,
முக பாவங்களை சில நொடிகள் பதிவு செய்து பின் அடுத்த காட்சிக்கு
நகரும் முறையை நீங்கள்  கொரிய ஜப்பானிய திரைப்படங்களில்
காணலாம். அது போன்ற காட்சிகள் இப்போது தமிழிலும்
தொற்றிக்கொண்டுவிட்டது. இந்த படத்திலும் அதை நீங்கள் உணரலாம்.

அருமையான வசனங்களை  இந்த படத்தில் செல்வா எழுதியுள்ளார்.
இதுவரை ஆங்கிலத்தில் லட்சியவதிகளைப் பற்றி எடுக்கப்பட்ட
அணைத்து படங்களிலும் வசனங்கள் முக்கிய பங்கு வகித்தன.
Rocky, Pursuit of happiness  போன்ற படங்களில் வருவது போல
இந்த படத்திலும் ஊக்கம் அளிக்ககூடிய வசனங்கள் சில உண்டு.

“மனசுக்கு புடுச்ச வேலைய செய்யனுங்க. இல்லனா செத்துரனும்”
என தனுஷ் பேசும் வசனம் பாலோ கோயேலோ (Paulo coelho)
நாவல் படிச்ச ஒரு உணர்வ ஏற்படுத்துது.

மொத்ததுல படம் நிச்சயம் பார்ப்பவர்களை மயக்கிடும் …
சில பேர் படம் ரொம்ப  ஸ்லோவா  நகர்றதா குறை சொல்றாங்க…

ஆனா நம்ம வாழ்க்கையே ஸ்லொவ் தாங்க..

கில்லி மாதிரி பாஸ்டா படம் வேனும்ன,
அடுத்த வாரம் ஒஸ்தி ரிலீஸ் ஆகுது..அத போய் பாருங்க…