ஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்

Excerpts from On Writing: Memoirs of the Craft by Stephen King
தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்

***

1950-களில் இலக்கிய அர்வலர் பாரஸ்ட் J அக்கர்மன் ஸ்பேஸ்மேன் என்ற இதழை சிறிதுகாலம் நடத்தினார். அதில் பெரும்பாலும் அறிவியல் புனைவு படங்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றன. நான் 1960-யில் என்னுடைய கதை ஒன்றை அந்த இதழுக்கு அனுப்பி வைத்தேன். அதுதான் பிரசுரத்திற்கு நான் அனுப்பி வைத்த முதல் கதை என்று நினைக்கிறேன். அதன் தலைப்பு எனக்கு நினைவில்லை. ஆனால் நான் அந்த காலகட்டத்தில் தான் கதைகளை எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு கொலைகார குரங்கைப் பற்றிய கதை அது. என் கதை நிராகரிப்பட்டது. ஆனால் பாரி (பாரஸ்ட் J அக்கர்மன்)  அதை வைத்துக் கொண்டார். அவர் தன்னிடம் வரும் எல்லாக் கதைகளையும் சேகரித்து வைத்துக் கொள்பவர் என்பது அவர் வீட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும்.  இருபது வருடங்களுக்குப் பிறகு நான் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு புத்தகக்கடையில் என் புத்தகங்களில் ஆட்டோக்ராப் இட்டுக் கொண்டிருந்த போது, பாரியும் வரிசையில் வந்து நின்றுகொண்டார். என்னுடைய பதினோறாவது பிறந்தநாளில் என் அம்மா கொடுத்த ராயல் டைப்ரைட்டரில் எழுதி, அவருக்கு அனுப்பிய அந்த அறிவியல் புனைவு கதையை அவர் என் முன் நீட்டி கையெழுத்து இடச் சொன்னார். இப்போது நினைக்கும் போது அது ஒரு மிகையதார்த்தவாத தருணமாக இருக்கிறது.

Stephen King

Stephen King-Vector art by Cristiano Siqueira

எனக்கு பதினான்கு வயதானபோது, என் வீட்டு சுவற்றின் ஆணி, அதில் மாட்டப்படிருந்த நிராகரிப்பு கடிதங்களின் பளு தாங்காமல் விழ காத்துக் கொண்டிருந்தது. எல்லாமே நான் பிரசுரத்திற்கு அனுப்பி அதற்கு பதிலாக வந்த நிராகரிப்பு கடிதங்கள். ஆனால் நான் விடாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன். சம்ப்ரதாயமாக தட்டச்சு செய்யப்பட்ட நிராகரிப்பு கடிதங்களுக்கு பதில், யாரோ ஒருவர் என்னையும் பொருட்படுத்தி தன் கைப்பட எழுதிய நிராகரிப்பு கடிதங்கள் வரத் தொடங்கியபோது எனக்கு சரியாக பதினாறு வயது. அப்படி வந்த முதல் கடிதம் ஆல்கிஸ் பட்ரிஸ் அவர்களிடமிருந்து வந்தது. அவர் அப்போது ‘The Magazine of Fantasy and Science Fiction’ இதழின் ஆசிரியராக இருந்தார். நான் அனுப்பிய ‘புலியின் இரவு’ என்ற கதையை படித்துவிட்டு பின்வருமாறு எழுதி இருந்தார். ‘இது நல்ல கதை. ஆனால் எங்கள் இதழுக்கானது அல்ல. உன்னிடம் திறமை இருக்கிறது. மீண்டும் கதைகளை அனுப்பு’.

அந்த நான்கு வரிகள் தான் தொய்வுடன் நகர்ந்துக் கொண்டிருந்த என்னுடைய பதினாறாவது வயதிற்கு பெரிய உற்சாகம் ஊட்டியது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு, நான் இரண்டு நாவல்களை பிரசுரத்துவிட்டப் பின்பு, நான் ‘புலியின் இரவு’ கதையை மீண்டும் வாசித்துப் பார்த்தேன். ஒரு ஆரம்பகால எழுத்தாளனிடம் இருக்கும் குறைகள் அந்தக் கதையில் வெளிப்பட்டாலும் அது நல்லக் கதையாகதான் இருந்தது. அதை மாற்றி எழுதி ‘The Magazine of Fantasy and Science Fiction’ இதழுக்கே மீண்டும் அனுப்பினேன். அவர்கள் அதை பிரசுரிக்க முன்வந்தார்கள். இதிலிருந்து ஒன்றை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நாம் கொஞ்சம் வெற்றிபெற்ற எழுத்தாளராக மாறிவிட்டால், ‘இது எங்கள் இதழுக்கானது அல்ல’ என்றும் யாரும் சொல்லமாட்டார்கள்.

***

ஒரு நாள் மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எனக்கொரு அருமையான யோசனை பிறந்தது. The Pit and the Pendulum படத்தை நாவலாக மாற்றலாம் என்பதே அது. அதை புத்தகமாக அச்சிட்டு என் பள்ளியில் விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதை பதினாறு பக்கங்கள் கொண்ட புத்தகமாக உருவாக்கினேன். மொத்தம் நாற்பது பிரதிகள் அச்சிட்டேன். நான் செய்வது காப்புரிமைக் குற்றம் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. அந்த புத்தகங்களை பள்ளியில் விற்றால் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே யோசித்தேன். தாள்களுக்கு ஆன செலவு, அச்சிட ஆன செலவு, அட்டைப்படத்திற்கு ஆன செலவு எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு புத்தகத்தை கால் டாலருக்கு விற்கலாம் என்று முடிவு செய்தேன். பத்து புத்தகங்கங்கள் விற்றாலே எனக்கு லாபம் வரும் என்று தெரிந்தது. அதைக் கொண்டு ஒரு கல்வி சுற்றுலா போகலாம். கூடுதலாக இன்னும் இரண்டு புத்தகங்கள் விற்றால், பாப்கார்னும் குளிர்பானமும் வாங்கிக் கொள்ளலாம். நான் ஆசைப்பட்டது போலவே அது பெஸ்ட் செல்லராக உருவெடுத்தது. நாவலைப் பற்றிய செய்தி பள்ளியில் வேகமாக பரவ அன்று மதியத்திற்குள் கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களும் விற்றுத் தீர்ந்தன. எனக்கு கனவில் மிதப்பது போல இருந்தது. நான் எதிர்ப்பார்த்ததை விட நிறையப் பணம் சேர்ந்திருந்தது. என்னால் நடந்த எதையுமே நம்பமுடியவில்லை. ஆனால் மதியம் இரண்டு மணி வரை தான் அந்த சந்தோசம் நிலைத்தது.

இரண்டு மணிக்கு பள்ளி முடிந்ததும் தலைமையாசிரியை அறையிலிருந்து அழைப்பு வந்தது. பள்ளியை வியாபார சந்தையாக மாற்றுகிறாயா என்று என் தலைமையாசிரியை ஹிஸ்லர் கடிந்து கொண்டார். அதுவும் The Pit and the Pendulum போன்றதொரு மோசமான கதையை விற்ப்பது கூடுதல் குற்றம் என்றும் சொன்னார்.  

வீட்டு ஜமக்காளத்தில் அசுத்தம் செய்துவிட்ட நாயிடம் செய்தித்தாளை சுருட்டி வைத்துகொண்டு மிரட்டுவது போல, என்னுடைய புத்தகத்தை சுருட்டி என் முகத்திற்கு நேராக காண்பித்து வினவினார்,  “ஸ்டீவ், நீ ஏன் இது போன்ற குப்பைகளை எழுதுகிறாய் என்று புரியவில்லை. நீ திறமைசாலி. உன் திறமையை ஏன் இதுபோன்ற விஷயத்தில் வீணடிக்கிறாய்!”

நான் ஏதாவது பதில் அளிப்பேன் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவமானத்தில் குறுகி நின்றேன். பல வருடங்கள், நான் என்ன மாதிரி கதைகள் எழுதுகிறேன் என்பதை எண்ணி அசிங்கப்பட்டிருக்கிறேன். ஆனால் நாற்பது வயதில் தான் ஒரு உண்மையை உணர்ந்தேன். புனைவு எழுத்தாளனோ அல்லது கவிஞனோ, அவன் எதையாவது எழுதிவிட்டால் போதும், அவன் கடவுள் கொடுத்த திறமையை வீணடிக்கிறான் என்று சொல்லத் தொடங்கிவிடுவார்கள். நீங்கள் எழுதினாலோ, ஓவியம் வரைந்தாலோ, நடனமாடினாலோ அல்லது பாடினாலோ யாரோ ஒருவர் நீங்கள் செய்வதெல்லாம் வீண் வேலை என்று அவமானப் படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள்.

நான் மாணவர்களிடமிருந்து பெற்ற பணத்தை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று தலைமையாசிரியை வலியுறுத்தினார். நான் எதிர்த்துப் பேசாமல் அதை செய்தேன். பல மாணவர்களும் புத்தகத்தை வைத்துக் கொள்வதாகவும், காசை திருப்பி தர வேண்டாமென்றும் சொன்னார்கள். ஆனால் நான் எல்லோரிடமும் காசை திருப்பிக் கொடுத்தேன். எனக்கு நஷ்டமானது தான் மிச்சம். அந்த ஆண்டு கோடை விடுமுறையில், நான் வேறொருக் கதையை எழுதி எல்லோருக்கும் விற்றேன். இழந்த பணமும் சேர்ந்து திரும்பி வந்தது. லாப நோக்கில் பார்த்தால் இறுதியில் நான் வெற்றிப் பெற்றேன் என்று தான் சொல்லவேண்டும். இருந்தாலும் என் மனதில் இருந்த அவமானம் போகவில்லை. ஏன் நான் குப்பையை எழுதுகிறேன், ஏன் நான் என் நேரத்தையும் திறமையையும் வீணடிக்கிறேன் என்று என் தலைமையாசிரியைக் கேட்டது என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் பின்னும் நான் நிறைய எழுதி பள்ளியில் பிரச்சனையில் மாட்டியிருக்கிறேன். அப்போதுதான் ஒரு நாள் என் பள்ளியின் ஆலோசகர் என்னை அழைத்தார். என்னுடைய ‘அடங்கமறுக்கும் பேனாவிற்கு வேலை வந்திருப்பதாக சொன்னார். ஜான் கவுட் ஆசிரியராக இருக்கும் லிஸ்பன் நகர வாரப்பத்திரிக்கை ஒன்றில் ஸ்போர்ட்ஸ் ரிபோர்ட்டர் இடம் காலியாக இருப்பதாகவும், அதில் நான் சேர்ந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நான் லிஸ்பான் நகருக்கு பயணப்பட்டேன். கவுடை சந்தித்து. எனக்கு விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது என்ற உண்மையை சொன்னேன். ‘அவ்வளவு கடினமில்லை. பலரும் விடுதிகளில் குடித்துக் கொண்டே விளையாட்டுக்களைப் பார்த்து புரிந்து கொள்ளும் போது, நீ முயற்சி செய்தால் கற்றுக் கொள்ளலாம் என்றார்.

எனக்கு நிறைய மஞ்சள் காகிதங்களை கொடுத்து அதில் கட்டுரையை தட்டச்சு செய்துக் கொள்ள சொன்னார். அந்த காகிதங்கள் இன்றளவும் என்னிடம் இருக்கின்றன. மேலும் ஒரு வார்த்தைக்கு அரை சென்ட்ஸ் பணம் தருவதாக சொன்னார். என் வாழ்வில் எழுத்திற்கு கூலி தருவதாக ஒருவர் சொன்னது அதுதான் முதல் முறை.

என்னுடைய முதல் இரண்டு கட்டுரைகள் கூடை பந்து விளையாட்டைப் பற்றியது. அதை எழுதி கவுட்டிடம் கொடுத்தேன். அவர் என் முன்னாலேயே சில திருத்தங்களை செய்தார். நான் பள்ளியிலும் கல்லூரியிலும் முறையாக பயின்ற ஆங்கில இலக்கியம், கவிதை, புனைவு எழுதுதல் என எல்லாவற்றையும் விட கவுட் அந்த பத்து நிமிடங்களில் எனக்கு சொல்லித் தந்த விஷயங்கள் அதிகம் பயனுள்ளதாக இருந்தது.

“நன்றாக தான் எழுதி இருக்கிறாய். தேவையற்ற சில பகுதிகளை மட்டுமே நான் நீக்கினேன்” என்றார்.

“இனிமேல் அது போல் எழுத மாட்டேன்” என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், “நீ ஒரு கதையை எழுதும் போது உனக்கு நீயே கதையை சொல்கிறாய். நீ இரண்டாம் முறை அதை திருத்தி எழுதும் போது கதைக்கு தேவை இல்லாத விஷயங்களை நீக்குவது மட்டும் உன் வேலை.” ஒரு கதையை எழுதும் போது மனதை மூடிவைத்துவிட்டு எழுத வேண்டும். அதை திருத்தி எழுதும் போது மனதை திறந்து வைத்துக் கொண்டு எழுதவேண்டும் என்றும் சொன்னார்.

நாம் ஒரு கதையை எழுதும்வரை தான் அது நம்முடையது. அதை எழுதி முடித்துவிட்டால், அது வாசகர்களுடையது. அவர்கள் வாசித்து பாரட்டலாம். அல்லது விமர்சிக்கலாம். விமர்சகர்களைவிட பாராட்டுபவர்கள் அதிகம் அமைவது நம்முடைய அதிர்ஷ்ட்டத்தைப் பொறுத்தது.

***

இங்கிருந்து தான் நல்ல ஐடியாக்கள் பிறக்கும் என்றெல்லாம் எதுவும் கிடையாது. ஒரு நல்லக் கதைக்கான ஐடியா எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தோன்றலாம். ஐடியாக்கள் ஆகாயத்தில் இருந்து நம்மை நோக்கி குதிக்கலாம். சம்மந்தமில்லாத இரண்டு வெவ்வேறு ஐடியாக்களை இணைத்தால் அது முற்றிலும் புதியதொரு கதையாக மாற வாய்ப்பிருக்கிறது. இந்த ஐடியாக்களை தேடிக் கண்டடைவது நம் வேலை அல்ல. ஒரு ஐடியா திடிரென்று தோன்றும்போது அதை இறுகப் பற்றிக்கொள்ள தெரிய வேண்டும். அவ்வளவுதான்.

***

நான் கேரி (Carrie) நாவலை எழுதத் தொடங்கும் போது எனக்கு ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை கிடைத்திருந்தது. என்னுடைய சம்பளம் வருடத்திற்கு ஆறாயிரத்தி நானூறு டாலர்கள். அதற்கு முன்புவரை சலவை தொழிற்சாலையில் சொற்ப வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த  எனக்கு, அது பெரிய சம்பளம் தான். ஆனாலும் எங்களுடைய பொருளாதார சூழல் மிக மோசமாகத்தான் இருந்தது. என் மனைவி ஒரு டோனட் கடையில் வேலை செய்தாள். நாங்கள் மிகச் சிறிய வீட்டில் குடியிருந்தோம்.

ஒரு எழுத்தாளராகவும் நான் பெரிய வெற்றி எதையும் பெற்றிருக்கவில்லை. ஆண்களுக்கான நாளிதழில் அதுவரை வெளியாகிக் கொண்டிருந்த ஹாரர், க்ரைம் மற்றும் அறிவியல் புனைவு கதைகளுக்கு பதில் காமக் கதைகள் வெளியாகத் தொடங்கியிருந்தன. நான் வெற்றி பெறமுடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் அதை மட்டுமே காரணமாக சொல்லிவிட முடியாது. உண்மையில் என் வாழ்வில் முதல் முதலாக எனக்கு எழுதுவது என்பது கடினமான விஷயமாக மாறியிருந்தது. அதற்கு என் ஆசிரியர் பணிதான் காரணம். என் உடன் பணியாற்றியவர்களுடனோ என் மாணவர்களுடனோ எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. உண்மையில் ஆங்கிலம் போதிப்பதை நான் விரும்பினேன். ஆனால் வெள்ளிக் கிழமை வந்துவிட்டால், நான் அந்த வாரம் முழுக்க என் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பதாக உணரத் தொடங்கினேன். ஒரு எழுத்தாளனாக என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை எண்ணி பெரும் மன உளைச்சலுக்கு ஆளான காலகட்டம் அது. முப்பது வருடங்கள் கழித்தும் பெரிதும் சோபிக்க முடியாத ஒரு எழுத்தாளனாக நான் இருந்துவிடுவேனோ என்ற பயம் வரத் தொடங்கியது. அந்த ஆசிரியர் வேலையிலேயே என் வாழ்நாளை தொலைத்து, யாராவது ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறாய் என்று கேட்டால், நான் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று பெருமைக்காக சொல்லிக் கொள்ளும் நிலைக்கு நான் தள்ளப்படலாம் என்றும் எண்ணினேன். அதே சமயத்தில், இன்னும் அவகாசம் இருக்கிறது, பல நாவலாசிரியர்கள் தங்களுடைய ஐம்பதாவது வயதிற்கு பிறகே எழுதத் தொடங்கினர் என்று சொல்லி என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். ஆனால் என் மனைவி எனக்கு பக்கபலமாக இருந்தது என்னை தொடர்ந்து முன்னோக்கி நகர்த்தியது. நான் பள்ளிக்கூடத்தில் வேலைப்பார்த்த போதும், அதற்கு முன்னர் சலவை தொழிற்சாலையில் வேலைப்பார்த்த போதும் வீட்டிற்கு வந்ததும்  எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். நான் எழுதுவது வீண் வேலை என்று என் மனைவி சொல்லியிருந்தால், நான் சோர்வடைந்து எழுதும் முயற்சியை கைவிட்டிருக்கக் கூடும்.  ஆனால் அவள் அப்படி சொல்லவில்லை. அவளுக்கு என் முயற்சியில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. அவள் தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருந்து வந்தாள்.

யாராவது ஒரு எழுத்தாளர் தன்னுடைய முதல் நாவலை தன் மனைவிக்கு (அல்லது தன் கணவனுக்கு) சமர்ப்பணம் செய்திருப்பதை பார்க்கும் போதெல்லாம் நான் புன்னகை செய்வேன். அவருக்கு எழுத்தை பற்றி புரிந்து கொண்ட வாழ்க்கை துணை கிட்டியிருக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவேன். எழுதுதல் என்பது மிகவும் தனிமையானதொரு வேலை. நம்மை நம்பும் ஒருவர் நம்மோடு இருப்பது நமக்கு பெரிய உத்வேகத்தை தரும். அவர்கள் நமக்காக சொற்பொழிவு ஆற்றத் தேவையில்லை. நம்மை நம்பினால் மட்டும் போதும்.

கேரி நாவலின் பிரதியை நான் டபுள்டே பதிப்பகத்திடம் பிரசுரத்திற்காக சமர்பித்துவிட்டு என் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டேன். ஆசிரியர் பனி, குழந்தை வளர்ப்பு, இல்லற வாழ்க்கை, வெள்ளிக்கிழமை மாலை நேர ஓய்வு, கொஞ்சம் எழுத்து என வாழ்க்கை நகர்ந்தது. எனக்கு பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் ஓய்வு நேரம் இருந்தது. நான் விடைத்தாள் திருத்துவது, சிறுதூக்கம் போடுவது என்று நேரத்தை கழிப்பேன். அப்போது தான் இண்டர்காம் ஒலித்தது. அலுவலக அறையிலிருந்து அழைத்திருந்தார்கள். என் மனைவியிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாக சொன்னார்கள். நான் அவசரமாக கிளம்பினேன். பாதை நீண்டுகொண்டே போவது போல் இருந்தது. எங்கள் வீட்டில் அப்போது தொலைபேசி இருக்கவில்லை. அதற்கு மாதவாடகை கட்டும் நிலையில் நாங்கள் இல்லை. பக்கத்து வீட்டிலிருந்த தொலைபேசியிலிருந்து தான் பேசவேண்டும். அந்த நேரத்தில் என் மனைவியிடமிருந்து அழைப்பு வருகிறது என்றால் இரண்டு காரணம் தான் இருக்க முடியும் என்று நினைத்தேன். ஒன்று, என் குழந்தைகள் எங்காவது விழுந்து கைகாலை உடைத்து வைத்திருக்க வேண்டும். அல்லது என்னுடைய கேரி நாவல் பிரசுரத்திற்கு தேர்வாகி இருக்க வேண்டும்.

என் மனைவி சந்தோசத்தில் வாயடைத்து போயிருக்கிறாள் என்பது அவள் பேச தடுமாறியதிலிருந்து தெரிந்தது. டபுள் டே பதிப்பகத்திலிருந்து பில் தாம்ப்சன் எனக்கு ஒரு டெலி கிராமை அனுப்பி இருப்பதாக சொன்னாள். என்னை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த பின்பு தான எங்கள் வீட்டில் டெலிபோன் இல்லை என்பது பில் தாம்ப்சனுக்கு தெரிந்திருக்கிறது. பின் தான் அந்த டெலி கிராமை அனுப்பி இருக்கிறார். என் மனைவி அதை போனில் படித்து காண்பித்தாள்,

வாழ்த்துக்கள். கேரி டபுள் டே மூலமாக புத்தகமாக பிரசுரமாகப் போகிறது. 2500 டாலர் முன்பணம் போதுமானதா! வருங்கலாம் காத்திருகிறது”

 இரண்டாயிரத்தி ஐந்நூறு டாலர் முன்பணம் என்பது எழுபதுகளில் கூட மிகச் சிறிய தொகைதான். ஆனால் அது அப்போது எனக்கு தெரியாது. அதை சொல்ல எனக்கு இலக்கிய முகவர்கள் யாருமில்லை. எனக்கொரு முகவர் தேவை என்பதை நான் உணர்ந்து கொள்வதற்கு முன்பே நான் என் பதிப்பாளர்களுக்கு என் புத்தகம் மூலம் மூன்று மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்துவிட்டேன். கேரி, 1973 ஆண்டிலேயே பிரசுரத்திற்கு தேர்வாகி இருந்தாலும் அது 1974 ஆம் ஆண்டு தான் பிரசுரம் ஆனது. அந்த காலத்தில் டபுள்டே பதிப்பகம் ஏராளமான புத்தகங்களை, குறிப்பாக பல பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை பிரசுரித்துக் கொண்டிருந்தார்கள். நானோ மிகப் பெரிய ஆற்றில் நீந்தும் ஒரு சிறிய மீன்.  எனவே  இந்த தாமதத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

நான் வேலையை விட்டுவிடுவேனா என்று என் மனைவி கேட்டாள். ஆனால் வெறும் இரண்டாயிரத்தி ஐந்நூறு டாலரை நம்பி வேலையை விட முடியாது என்றேன். அதுவும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றும் எனக்கு தெரியவில்லை. நான் தனி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை, குடும்பம் குழந்தை என்று ஆன பின் வேலையை விட முடியாது. நானும் என் மனைவியும் அன்று இரவு முழுக்க என் எழுத்துலக வருங்கால சாத்தியங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.

ஒருவேளை டபுள்டே கேரி நாவலின் மறுபிரசுர உரிமையை (Paperback Reprint Rights) வேறு யாராவது பெரிய பதிப்பாளருக்கு விற்றுவிட்டால் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்று என் மனைவி வினவினாள். எனக்கு உடனடியாக பதில் சொல்லத் தெரியவில்லை. மாரியோ பூசோவின் காட்பாதர் நாவலின் மறுபிரசுர உரிமை நாலு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டதாக நான் படித்திருக்கிறேன். கேரி நாவல் அவ்வளவு சம்பாதிக்கும் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் என் மனைவி கேட்டுக் கொண்டே இருந்ததால், அறுபதாயிரம் டாலர்கள் கிடைக்கலாம் என்றேன்.

“அறுபதாயிரம் டாலர்களா!” என்று அவள் அதிர்ச்சி அடைந்தாள்.

“இது சாத்தியமா” என்று மீண்டும் வினவினாள். “சாத்தியம் தான், ஆனால் ஒப்பந்தப் படி பாதி பணம் தான் கிடைக்கும்” என்றேன். முப்பதாயிரம் டாலர்கள் என்பதும் மிகப் பெரிய தொகை தான். நான் சில வருடங்கள் பள்ளியில் தொடர்ந்து வேலைப்பார்த்தால் தான் அவ்வளவு சம்பாதிக்க முடியும். இதெல்லாம் நடக்குமா என்று அப்போது தெரியாது. ஆனால் அந்த இரவுமுழுக்க இப்படி கனவு கண்டோம்.

கேரி பிரசுரத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தது. நான் எனக்கு கிடைத்த முன்பணத்தை வைத்து ஒரு கார் வாங்கினேன். பள்ளியில் என் ஆசிரியர் பணிக்கான ஒப்பந்தத்தை அடுத்த ஒரு ஆண்டிற்கு புதுபித்தார்கள். நாங்கள் வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தோம். அதுவும் சிறிய வீடு தான் என்றாலும் மீண்டும் நகர வாழ்க்கைக்குள் நுழைந்திருந்தோம். எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பு கொடுக்கப்பட்டது. நான் என் அடுத்த நாவலை எழுதத் தொடங்கினேன்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் கேரி நாவல் என் சிந்தனை விட்டே மறைந்திருந்தது. பள்ளியிலும் வீட்டிலும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதே எனக்கு பெரிய வேலையாக இருந்தது. வயதாகிக் கொண்டிருந்த என் அம்மாவைப் பற்றி தான் என் சிந்தனைகள் இருந்தன. ஒரு ஞாயிற்றுக் கிழமை  நான் என் வீட்டில் தனியாக அமர்ந்து என்னுடைய புதிய நாவலை எழுதிக் கொண்டிருந்தேன்.  என் மனைவி, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவளுடைய தாய் வீட்டுக்கு சென்றிருந்தாள். அப்போது பில் தாம்ப்சனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.

“நீ அமர்ந்திருக்கிறாயா?” என்று பில் கேட்டார்.

நான் இல்லை என்றேன். என் வீட்டின் தொலைபேசி அடுப்படி சுவற்றில் மாற்றப்பட்டிருந்தது. அதனால் நான் நின்றுகொண்டே பேசவேண்டியதாயிற்று.

“நீ அமர்ந்துகொள்வது நல்லது” என்றார் அவர்.

“கேரியின் பேப்பர்பேக் உரிமையை சிக்னட் பதிப்பகம் வாங்கிக்கொண்டுவிட்டது. நான்கு லட்சம் டாலர்கள் விலை பேசியிருக்கிறார்கள்” என்றார்.

நான் அமைதியாக நின்றேன். நான் சிறுவயதில் இருக்கும்போது என் அப்பா அம்மாவிடம் சொல்வார், “உன் மகன் வாயை திறந்தால் பேசிக் கொண்டே இருக்கிறான்”

உண்மைதான். நான் என் வாழ்நாள் முழுக்க அப்படியே தான் இருக்கிறேன். ஆனால் அந்த மே மாதத்தில், 1973 ஆம் ஆண்டின் அன்னையர் தினத்தில், நான் பேச முடியாமல் ஸ்தம்பித்து நின்றேன்.

“நான்கு லட்சம் டாலர்கள் என்றா சொன்னீர்கள்!” என்று கேட்டேன்.

“ஆம். நான்கு லட்சம் டாலர்கள். ஒப்பந்தப்படி உனக்கு இரண்டு லட்சம் டாலர்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள் ஸ்டீவ்” என்றார். என்னால் நம்ப முடியவில்லை. நான் வசித்த அந்த மிகச் சிறிய வீட்டைப் பார்த்தேன். அந்த சிறுபெட்டிக்குள் வசித்த எனக்கு அவ்வளவு பெரிய தொகை லாட்டரியில் ஜெயித்தால் தான் சாத்தியம். என்னால் மேற்கொண்டு நிற்க முடியவில்லை. அப்படியே நிலையில் சாய்ந்துகொண்டேன். அவர் சொன்ன தொகை உண்மைதானா என்று மீண்டும் மீண்டும் வினவினேன். அவர் சிரித்தார். அதன் பின் நாங்கள் அரைமணி நேரம் பேசினோம். ஆனால் என்ன பேசினோம் என்பது ஒரு வரிக்கூட நினைவிலில்லை. அவருடன் பேசி முடித்ததும் நான் என் மனைவியின் வீட்டை தொடர்புகொண்டேன். அவள் கிளம்பிவிட்டாள் என்று அவளின் தங்கை சொன்னாள்.

நான் அறைக்குள்ளேயே பல முறை நடந்தேன். அந்த சந்தோசமான செய்தியை கேட்டதிலிருந்து என் கால் நிலைக் கொள்ளவில்லை. நான் ஷூவை அணிந்துகொண்டு வெளியே கிளம்பினேன். ஒரே ஒரு கடைதான் திறந்திருந்தது. என் மனைவிக்கு அன்னையர் தின பரிசாக எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று எண்ணினேன். அந்த கடையில் பகட்டான பொருளென்று எதுவும் இல்லை. இறுதியாக ஒரு ஹேர் ட்ரையரை வாங்கினேன்.

நான் வீட்டுக்கு திரும்பியபோது என் மனைவி அடுப்படியில் வேலை செய்துகொண்டிருந்தாள். ரேடியோவில் ஓடிக்கொண்டிருந்த பாடலோடு இணைந்து அவளும் பாடிக்கொண்டிருந்தாள். நான் அவளிடம்  ஹேர் ட்ரையரை கொடுத்தேன். அதற்கு முன் அந்தப் பொருளை பார்த்ததே இல்லாதவள் போல் பார்த்துவிட்டு, “எதற்காக இந்த பரிசு!” என்று கேட்டாள். நான் அவளை இழுத்து அணைத்து புத்தக உரிமை விற்பனை ஆனதைப்பற்றி சொன்னேன். அவளுக்கு முதலில் புரியவில்லை. நான் மீண்டும் சொன்னேன். அவள் நான் செய்தது போலவே சிறுபெட்டி போல் இருந்த எங்கள் வீட்டை ஒருமுறை பார்த்தாள். பின் என் மீது சாய்ந்துகொண்டு அழுதாள்.