
கதையின் நாயகன் ஜிம் ஹாகின்ஸ் தான் சிறுவனாக இருந்தபோது செய்த சாகச பயணத்தை விவரிப்பதாக கதைத் தொடங்குகிறது. கடலை ஒட்டி அவருடைய தந்தை ஒரு விடுதியை நடத்தி வருகிறார். அந்த விடுதியில் வந்து தங்குகிறான் கடலோடி பில்லி போன்ஸ். அவனிடம் புதையல் தீவிற்கான வரைப்படம் இருக்கிறது. அது ஜிம் ஹாகின்ஸ் கையில் எதிர்ப்பாராதா நேரத்தில் கிட்ட அந்த சிறுவன் சாகச உலகிற்குள் நுழைகிறான்.
ஜிம் ஹாக்கின்ஸோடு இன்னும் சிலர் இணைந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் சில கடற்கொள்ளையர்களும் அந்த பயணத்தில் இணைகிறார்கள். இறுதியில் என்ன நிகழ்ந்தது! புதையல் யார் கையில் கிட்டியது!
நாவலை தமிழில் இரவி ரெத்தினசபாபதி மொழியாக்கம் செய்திருக்கிறார். நேர்த்தியான மொழிபெயர்ப்பு. ஆனால் இது சுருக்கப்பட்ட வடிவம் என்பதால் கதை சொல்லலில் ஆங்காங்கே ஒரு தாவல் இருக்கிறது. அதனால் பெரும் திருப்பங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கதை துரிதமாக முடிவை நோக்கி நகர்வதாக தோன்றுகிறது.
தினமொரு அத்தியாயமாக குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களில் சொல்லிட முடியும். கடல் பயணம், கொள்ளையர்களுடனான சண்டை, காட்டினுள் நிகழும் புதையல் வேட்டை போன்ற விஷயங்கள் குழந்தைகளுக்கு சந்தோஷத்தையும் திகிலையும் தரக்கூடியவை. எனினும் குழந்தைகளுக்கு சொல்லும் போது மது, கொலை போன்ற சில விஷயங்களை தவிர்த்து தான் சொல்ல வேண்டி இருக்கும். இது சிறார் நாவல் தான் என்றாலும், பெரியவர்களுக்கும் சுவாரஸ்யமான வாசிப்பனுவத்தை தரக்கூடிய நாவல்.
Leave a comment