தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை
அநிருத்தனுக்கு சப்பாத்தி மீது பெருங்காதல். எல்லா நாளும் எல்லா வேலையும் சப்பாத்தி கொடுத்தால் கூட சாப்பிடும் அளவிற்கு சப்பாத்தி பித்து அவனுக்கு. குறைந்தபட்சம் இரவு உணவிற்காவது சப்பாத்தி இருக்க வேண்டும். அவன் மனைவி அனுராதாவிற்கு சப்பாத்தி மீது தனிக் காதலோ வெறுப்போ இல்லை. அவளுக்கு பிடித்த உணவு முட்டை தோசை. அவன் சப்பாத்தி உண்பதில் அவளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றாலும், அதை மெனக்கெட்டு செய்வதில் அவளுக்கு ஈடுபாடு இருந்ததில்லை. அதனால் வீட்டில் சண்டைக்கு பஞ்சமில்லை.
“இன்னைக்கும் சப்பாத்தி இல்லையா? மனுஷன் நாளெல்லாம் மாடுமாதிரி உழைச்சிட்டு, ஒரு வாய் ஆசையா சாப்பிட முடியாதா?” என்பான் அநிருத்தன்.
“ஏன் பொண்ணுங்க தான் சமைக்கணுமா! நீயே சமைச்சு சாப்ட்டுக்கோ!”என்பாள் அனுராதா. அவனும் அவள் கேட்பது நியாயம் தான் என்று இரண்டு நாட்களுக்கு அமைதியாக இருப்பான். பின்பு மூன்றாம் நாள் மீண்டும் சப்பாத்தி மீது வெறி வந்துவிடும்.
“ஐயோ ஏண்டி இப்டி பண்ற! உனக்கு புடிச்சத மட்டும் செஞ்சிக்குற இல்ல! எனக்கு ஏன் சப்பாத்தி செஞ்சு தரமாட்ற?”
“என்னால இதான் முடியும். என்னைக்காவது நீ எனக்கு முட்ட தோசை சுட்டு கொடுத்துருக்கியா? உனக்கு சப்பாத்தி தான் வேணும்னா வெளில போய் வாங்கி சாப்பிடு”
இப்படி தொடர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்த அவர்கள், இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவெடுத்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.
சில ஆண்டுகாலம் கழித்து அநிருத்தன், சப்பாத்தி கடை வைத்திருந்த ஒரு ஹிந்திகார பெண்ணை திருமணம் செய்துகொண்டான். தினமும் உண்பதற்கு சப்பாத்தி பஞ்சமில்லாமல் கிடைத்தது. ஆனாலும் அவனுக்கு மனதில் ஏதோ ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது. வேலை தான் அழுத்தம் தருவதாக நினைத்த அவன் முதலில் தன் வேலையை ராஜினாமா செய்தான். பின்னர் தன் மனைவியோடு இணைந்து கடையை கவனிக்கத் தொடங்கினான். சமைக்கவும் கற்றுக் கொண்டான். தனக்கு வேண்டிய சப்பாத்தியை தானே சமைத்து சாப்பிட்டான். அப்போதும் அவனுக்கு மனதில் ஏதோ ஒரு நிறைவின்மை இருந்து வந்தது. எனினும் தொடர்ந்து சப்பாத்தி சுட்டுக் கொண்டே இருந்தது அவனுக்கு ஒருவகையான ஆறுதலை தந்தது. கொஞ்சம்கொஞ்சமாக சப்பாத்தி சுடுவதில் நிபுணத்துவம் பெறத் தொடங்கினான். அவனுடைய கடை சப்பாத்திக்கு, சுற்றுவட்டாரத்தில் மவுசு கூடியது.
காலங்கள் பல ஓடின. அவன் குடும்பம் பெரிதானது. ஹோட்டலும் பெரிதானது. பேரன் பேத்திகள் எல்லாம் வளர்ந்தார்கள். அவனுடைய கடைசி பேரன் அவனை பற்றி வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட அது பெரும் வைரல் ஆனது. அநிருத்தன், ‘சப்பாத்தி தாத்தா’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்டான். அவன் வீடியோவை கண்ட பலரும் ஆச்சர்யப்பட்டு அவன் கடைக்கு வரத் தொடங்கினர். அநிருத்தன் தன்னுடைய என்பது வயதில் செலிபிரிட்டி ஆகிப் போனான். ஒரு லட்சமாவது சப்ஸ்க்ரைபருக்கும் அவர் குடுபத்திற்க்கும் தங்கள் ஹோட்டலில் சிறப்பு விருந்து அளிக்கப்படும், அவர்களுக்கு சப்பாத்தி தாத்தாவே தன் கையால் உணவு பரிமாறுவார் என்று அநிருத்தனின் பேரன்கள் விளம்பரம் செய்தனர்.
ஒரு லட்சமாவது சப்ஸ்க்ரைபரான ஒரு இளைஞன், தன் குடும்பத்துடன் வந்தான். அநிருத்தனிடம்.”தாத்தா ஐம் யுவர் பிக் பேன், என் பேரும் அனிருத் தான்” என்றான். அநிருத்தன் புன்னகை செய்துவிட்டு தொடர்ந்து சப்பாத்தியை சுட்டான். அந்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரி அனைவரும் அநிருத்தனுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
“பாட்டிய கூப்புடுலாமா!” என்றான் இளைஞன் தன் தாயிடம்.
“அவங்கதான் வேணாம்னு சொல்ட்டாங்க இல்ல, போர்ஸ் பண்ணாத!” என்றாள் அந்த தாய். சிறிதுநேரத்தில் அவர்கள் அனைவரும் சாப்பிட சென்றுவிட்டார்கள். தான் ஒரு செலிபிரிட்டி என்கிற கர்வம் கொண்டிருந்த அநிருத்தனுக்கு அந்த பாட்டி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல் போனது அவமானமாக இருந்தது. யார் அந்த பாட்டி என்று பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானது. உணவு பரிமாறும் சாக்கில் கிட்சனை விட்டு வெளியே வந்தான். அந்த குடும்பம் ஆர்வமாக பேசிக்கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார்கள். சற்று தொலைவிலேயே நின்ற அநிருத்தன், தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு அந்த பாட்டியையே பார்த்தான். அந்த பாட்டி அவனை சட்டை செய்யவில்லை. அநிருத்தன் மீண்டும் கிட்சனுக்குள் திரும்பினான்.
“என்ன தாத்தா. நீ தான் அவங்களுக்கு பரிமாறனும்” என்றவாறே உள்ளே வந்தான் பேரன்.
அநிருத்தன் எதுவும் பேசவில்லை. தன் கண்ணாடியை கழட்டி எறிந்துவிட்டு அழத் தொடங்கினான்.
“தாத்தா கியா ஹுவா!” என்று பதறினான் பேரன்.
“உங்களுக்கு பரிமாறுறதுல விருப்பம் இல்லையா? நான் வேணா தாத்தாக்கு உடம்பு சரி இல்லனு சொல்லிடுறேன்”
கண்களை துடைத்துக் கொண்ட அநிருத்தன், “இன்னைக்கு அந்த பாட்டிக்காக நாம மெனுவ மாத்துறோம்” என்றான்.
“ஏன் அந்த பாட்டிய உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்றான் பேரன்.
“உன் பாட்டியா தெரிறதுக்கு முன்னாடியே தெரியும்” என்று சொல்லிவிட்டு புன்னகை செய்தான் அநிருத்தன். அவனுடைய பேரன் புரியாமல் பார்த்தான்.
கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களாக சப்பாத்தி மட்டுமே சுட்டுக்கொண்டிருந்த சப்பாத்தி தாத்தா எனப்பட்ட அநிருத்தன், தன் வாழ்விலேயே முதல் முறையாக ஒரு முட்டை தோசையை சுட்டு தன் பேரனிடம் நீட்டி, “இத அந்த பாட்டிக்கிட்ட போய் கொடு அவங்களுக்கு முட்ட தோசைன்னா ரொம்ப புடிக்கும்” என்றான்.
அந்த மாலை வேளையில், அநிருத்தனுக்கு, பல லட்சம் சப்பாத்திகளை சுட்ட போது கிட்டாத நிறைவு, அந்த ஒரு முட்டைதோசையை தன்னுடைய முன்னாள் மனைவி, வாழ்நாள் காதலி அனுராதாவிற்காக சுட்டுக் கொடுத்த போது கிட்டியது. இனிமேல் அவன் நிம்மதியாக உறங்குவான்.
***
குறுங்கதைகள் முற்றும்.