திரைக்கதை எனும் நெடும்பயணம் – புதியதொடர் 

FADE IN: 

நாம் ஒரு படம் பார்க்கிறோம். முதல் பகுதி சரியாக இல்லை, இரண்டாவது பகுதி சுவாரஸ்யமாக இருந்தது என்கிறோம். இந்த காட்சி தேவை இல்லாத ஒன்று என்கிறோம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை என்கிறோம். அந்த கதாபாத்திரம் செய்யும் சாகசம் நம்பும் படியாக இல்லை என்கிறோம். இன்னொரு கதாப்பாத்திரம் ஆயுதம் தாங்கிய நூறு பேரை ஒற்றை ஆளாக எதிர்த்து அடித்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். இவன் தான் கொலைகாரன் நான் முன்னரே யூகித்தேன் என்று சொல்கிறோம். இதென்ன க்ளீச்சேவான காட்சி என்று குறைபட்டுக் கொள்கிறோம். அட, என்னமாதிரான காட்சி என்று சிலாகிக்கிறோம்… 

இதெல்லாம்  ஏன் நிகழ்கிறது? 

ஒரு கதாப்பாத்திரத்தின் (நாயகனின்) சாத்தியங்கள் என்ன என்பதை நாம் சினிமா பார்க்க தொடங்கிய காலகட்டத்திலிருந்தே அல்லது கதை கேட்க தொடங்கிய சிறு வயதிலிருந்தே அறிந்திருக்கிறோம். நாயகன் ஜெயிப்பான். அல்லது விதிவிலக்காக தோற்பான். அவன் கிராமத்திலிருந்து கிளம்பி வந்து பட்டினத்தின் பெரிய அரசியல்வாதியை எதிர்க்கும்  நாயகனாக இருக்கலாம், வெளிநாட்டிலேயே வசதியாக வளர்ந்து ஒரு கிராமத்து விவசாயியின் தங்கையை காதலிக்கும் இளைஞனாக இருக்கலாம், குடும்பத்திற்காக தன் கனவுகளை தியாகம் செய்யும் சாமானியனாக இருக்கலாம், அவன் முடிவு என்ன என்பதை நம்முடைய ஆழ்மனம் கண்டுகொண்டுவிட்ட பின்பும், கண்கொட்டாமல் அந்த படத்தை பார்க்கிறோம். 

இது எப்படி சாத்தியமாகிறது?

இது போல கேட்டுக் கொண்டே போகலாம்.  ‘திரைக்கதை’ என்பதே இந்த எல்லா கேள்விகளுக்குமான எளிய பதிலாக இருக்க முடியும். ஆனால் திரைக்கதை எழுதும் கலை அவ்வளவு எளிதானது அல்ல. அதே சமயத்தில் அது அவ்வளவு கடினமானதும் அல்ல. தொடர்ந்து  முயன்றால் கைக்கூடிவிடக் கலை தான் அது. ஆனால் அதன் எல்லை என்பது பரந்து விரிந்தது. எண்ணற்ற சாத்தியங்களை கொண்டது. அந்த சாத்தியங்களை கண்டுகொள்பவன் நல்ல திரைக்கதையாசிரியன் ஆகிறான்.  திரையில் நாம் காண்பதையும் கேட்பதையும் எழுதுவதே ‘திரைக்கதை’ என்கிறது அகராதி. ஆனால் எதையெல்லாம் காணப்போகிறோம், கேட்கப்போகிறோம் என்று ஒரு திரைக்கதையாசிரியன் எடுக்கும் முடிவு தான் சராசரியான காட்சியை சுவாரஸ்யமான காட்சியாக மாற்றப்போகிறது.

ஒரு எளிய கதையை பார்போற்றும் படமாக மாற்றுவது என்பது ‘திரைக்கதை’  தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்று யோசிப்பதும், அதற்காக புனைவின் எல்லா திசைகளிலும் பயணிப்பதும் தான் ஒரு திரைக்கதை ஆசிரியனின் வேலை.

இந்த பயணத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும்? எப்படி தொடர வேண்டும்? 

Let the Journey Begin…

Image Courtesy: Canva

திரைக்கதை கலையை பற்றி எளிய மொழியில் இனி வரும் வாரங்களில் தொடர்ந்து உரையாடுவோம். இணைந்திருங்கள்… 

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நன்றி

அரவிந்த் சச்சிதானந்தம் 

aravindhskumar@gmail.com