சாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

உலக சினிமாவில் நாவல்கள் படமாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சமகால இந்திய சினிமாவில் நாவல்கள் திரையாக்கம் செய்யப்படுவது அரிதாகவே நடக்கிறது. இங்கே எழுதப்பட்ட சில நாவல்களை மிக எளிதாகவே திரைக்கதையாக மாற்றி விடமுடியும். ஆனாலும் இந்தியாவில் நாவலுக்கும் சினிமாவிற்கும் ஒரு பெரும் இடைவெளி இருந்துகொண்டே தான் இருக்கிறது. எப்போதாவது ஒரு நாவல் சினிமாவாக உருப்பெற்றால், அதுவும் சிறந்த முறையில் திரையாக்கம் செய்யப்பட்டால் அதை கவனிப்பது நிச்சயம் நல்லதொரு திரைக்கதைப் பயிற்சியாக இருக்கும். நெட்பிலிக்ஸ் சீரியலாக வந்திருக்கும் விக்ரம் சந்திராவின் ‘சாக்ரட் கேம்ஸ்’ நாவல் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

cw-24870-660x375

சுமார் ஆயிரம் பக்கங்கள் விரியும் நாவலின் மூலக்கதை இதுதான். கணேஷ் கைதொண்டே ஒரு பெரிய நிழல் உலக கேங்க்ஸ்டர். பல வருடங்கள் தலைமறைவாக இருப்பவன் திடிரென்று ஒரு நாள் போலிஸ் இன்ஸ்பெக்டர்  சர்தாஜ் சிங்கை தொடர்பு கொள்கிறான். தான் பம்பாயில் ஒரு பதுங்கு அறையில் இருப்பதாக சொல்ல, அவனை தேடிச் செல்லும் சர்தாஜ் சிங்கிடம் தன் கதையை சொல்லிவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறான். இதுதான் நாவலில் பிரதானாக் கதைத் தொடங்குமிடம். இங்கிருந்து கணேஷ் கைதொண்டேவின் பிளாஷ் பேக் கதை ஒரு அத்தியாயமாகவும், அவன் ஏன் மீண்டும் பம்பாய் வந்தான் என்று சர்தாஜ் துப்பறியும் கதை அடுத்த அத்தியாயமாகவும் மாறிமாறி நாவல் நகர்கிறது.  வெப்சீரிஸின் கருவும் இதுதான். ஆனால் நாவலிலிருந்து ஏராளமான சுவாரஸ்யமான மாற்றங்கள் திரை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கிறது.

நாவல்களைத் தழுவி சினிமா உருவாக்குவதைப் பற்றி, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில், சினிமா விமர்சகர் கேரின் ஜேம்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “சிக்கலான மொழியில் அமைந்த கவிதைகளை, தேர்ந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் அப்படியே மறு ஆக்கம் செய்யமாட்டார்கள்.  அவர்கள் மூலத்தின் சுவைக்குன்றாமல், அதற்கு வேறொரு வடிவத்தை தருவதைப்போல நாவலை திரைக்கதையாக்கம் செய்யும் போது, நாவலின் கலைத்தன்மைக்கு இணையான வடிவத்தை திரையில் கொண்டுவர வேண்டும்.” மேலும் அவர், ஒரு திரைக்கதையாசிரியர், ஒரு நாவலை திரைக்கதையாக்கும் போது, “நாவலுக்கு எப்படி நியாயம் செய்வது?” என்று சிந்திக்கக்கூடாது, “எப்படி இந்த நாவலை என்னுடைய பிரதிபலிப்பாக உருவாக்கப் போகிறேன்?” என்று சிந்திக்கவேண்டும் என்கிறார்.(Ref book: Novels into Films by John C. Tibbetts, James Michael Welsh). சாக்ரட் கேம்ஸ் திரையாக்கத்தில் இது சாத்தியமாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில், நாவலில் கதையை நகர்த்துவதற்கான சுதந்திரம் அதிகம். எங்கு வேண்டுமானாலும் ஒரு கதையை நிறுத்திவிட்டு வேறொரு கிளைக் கதையை தொடங்கிட முடியும். விக்ரம் சந்திராவும் அதை இந்த நாவலில் பல இடங்களில் செய்திருக்கிறார். முதலில் நாவல், சர்தாஜ் சிங்கிடம் இருந்து தொடங்குகிறது. கணேஷ் கைதொண்டே அறிமுகம் ஆவதற்கு முந்தைய அத்தியாயத்தில் சர்தாஜ் சிங்கின் அன்றாட போலிஸ் வாழ்க்கையை நிதானமாக விவரித்திருக்கிறார் சந்திரா. ஒரு போலிசாக சர்தாஜ், மூலக் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு வழக்கைத் துப்பறியச் செல்லும் இடத்தில் நாவல் தொடங்குகிறது. அதே வழக்கு நாவல் பல நூறு பக்கங்கள் கடந்தப் பின்பு மீண்டும் அவரைத் தேடி வருகிறது. அங்கிருந்து கதையில் வேறொரு கிளைக் கதை தொடங்குகிறது. சீரிஸில் இதெல்லாம் இல்லை. சீரிஸ், கணேஷ் கைதொண்டே-சர்தாஜ் பற்றியக் கதையை மட்டுமே பேசுகிறது.

திரைக்கதை என்று வரும் போது, மூலக் கதாப்பாத்திரங்களுக்கு ஒரு திட்டவட்டமான ‘கோல்’ இருக்க வேண்டும். கதையும் ஒரு வரையறுக்கப்பட்ட கால நேரத்தில் நடப்பதாக இருக்க வேண்டும். நாவலில் அத்தகைய அவசியம் இல்லை. இங்கே சந்திராவின் நாவலில், சர்தாஜ் சிங்கிற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வழக்குகளைத் துப்பறிகிறார். திரைக்கதையை அப்படி அமைத்தால் பார்வையாளர்களால் ஒரு கதாப்பாத்திரத்தை பின்தொடர முடியாது. இங்குதான்  கதாநாயகனுக்கு ஒரு ‘கோல்’ அவசியாமாகிறது. அப்படியே ஒரு போலிஸ் நாயகன் இரண்டு வழக்குகளைத் துப்பறிகிறான் என்று வைத்தாலும், முதல் வழக்கு மட்டுமே அவனுடைய பிரதானமான கோலாக இருக்க முடியும். இரண்டாவது வழக்கு கதையிலோ அல்லது நாயகனின் வாழக்கையிலோ ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டோ, அல்லது முதல் வழக்கிற்கு ஏதோ ஒரு வகையில் உதவும் பொருட்டோ இணைக் கதையாக மட்டுமே இருக்க முடியும். (ஆனாலும் சீரியல்களில் (அல்லது வெப் சீரிஸில்) எபிசோட்  வாரியாக கதை நகர்வதால், ஏதோ ஒரு எபிசோடில் கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கதையை சொல்லிவிட்டு அதை மூலக் கதையோடு இணைக்கக் கூடிய ‘நாவலுக்கான சுதந்திரம்’ உண்டு. சினிமாவில் அது சாத்தியமில்லை)

sacred-games-season-2-netflix

மேலும் வரையறுக்கப்பட்ட கால நேரம் என்பதும் முக்கியமான அம்சமாகிறது. சாக்ரட் கேம்ஸ் நாவலில் கணேஷ் கைதொண்டே பற்றி சர்தாஜ் துப்பறியத்  தொடங்கியப் பின் கதை பல நாட்கள் நகர்கிறது. பின்புதான் ஏதோ ஒரு ஆபத்து மும்பையை சூழ்ந்திருப்பதைக் கண்டு கொள்கிறார் சர்தாஜ். அது என்னவென்று கண்டுபிடிக்கும் பொருட்டு அவர் பயணிக்க, கதையின் காலகட்டம் மேலும் பல மாதங்களாக விரிகிறது. இடையிடையே அவருக்கு மேரி என்ற பெண்மீது  அரும்பும் காதல் பற்றியும் விலாவரியாக சொல்லப்படுகிறது. திரைக்கதையை இப்படி அமைத்தால் சுவாரஸ்யம் இருக்காதே! கதை வளர்ந்து கொண்டே போகுமே! இங்கேதான் திரைக்கதையாசிரியர்கள் மிக புத்திசாலித்தனமாக ஒரு மாற்றத்தை செய்கிறார்கள். கணேஷ் கைதொண்டே சீரிஸின் தொடக்க எபிசோடிலேயே ‘இன்னும் இருபைத்தைந்து நாட்களில் மும்பை அழிந்து விடும்’ என்று சர்தாஜிடம் சொல்லிவிட்டு மாண்டு போகிறான். அதனால் இருபத்தைந்து நாட்களில் மும்பையை காப்பாற்ற வேண்டிய கடமை ஹீரோவிற்கு வருகிறது. இங்கே ஹீரோவின் நோக்கமும் அதை நிறைவேற்ற வேண்டிய கால அவகாசமும் வரையறுக்கப்படுவதால் கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது.   

ஆனால் நாவலுக்கும் திரைக்கதைக்கும் இடையே இப்படி வேறுபாடுகள் இருந்தாலும்,  ஒரு கதை நாவல், திரைக்கதை உட்பட எந்த வடிவத்தில் சொல்லப் பட்டாலும் அல்லது எந்த வகையில் (Genre) சொல்லப்பட்டாலும் அதில் பொதுவான அம்சம் ஒன்று இருக்கிறது. அதுவே ‘சமநிலை குலைதல்’. அதாவது கதையின் மையப் பாத்திரத்தின் இயல்பான நிலை வேறொரு நிலை நோக்கி நகர்வது. இதை அந்த முக்கிய பாத்திரத்தின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் என்றும் சொல்லலாம். இது எல்லா வகை கதைக்கும் பொருந்தும். ஸ்தூலமான கதை என்று எதுவுமில்லாத நாவல்களில் (உதாரணம் இத்தாலோ கால்வினோ வகைக்  கதைகள்) கூட இதை கவனிக்க முடியும்.

ஒரு பாத்திரத்தின்  சிந்தனைகளை மட்டுமே நாவலாக எழுதிட முடியும் (Stream of consiousness). அத்தகைய நாவல்களிலும்  அந்த பாத்திரத்தின் ‘சிந்தனை’ அதனுடைய சமநிலையிலிருந்து வேறு நிலைக்கு நகர்வதே கதையின் ஓட்டமாகிறது. கதையின் மையப் பாத்திரத்தை ஹீரோ என்று கொள்வோமேயானால் ஹீரோவே இல்லாத கதை என்று எதுவம் இல்லை என்றே சொல்லலாம். அபப்டியெனில், நாவலோ திரைக்கதையோ, ஹீரோவின் சமநிலை குலைவதே கதையாகிறது. இங்கே சமநிலை என்பது Subjective ஆன அம்சம். ஒரு நல்லவனின் சமநிலை வேறு. அதுவே ரவுடியின் சமநிலை வேறு. ஆனால் ஹீரோவோ அல்லது அந்த மையப் பாத்திரமோ மனித உருவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அனிமேஷன் படங்களில் வருவது போல் அந்த ஹீரோ, அந்த மையப் பாத்திரம் மிருகங்களாக இருக்கலாம். ஒரு மரமாக இருக்கலாம் (புளியமரத்தின் கதை). ஒரு வீடாக இருக்கலாம் (கரமுண்டார் வீடு). ஒரு நகரமாக இருக்கலாம். சாக்ரட் கேம்ஸ் கதையில் எப்படி சர்தாஜும் கைதொண்டேவும் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்களோ அதே அளவிற்கு முக்கியமான பாத்திரமாக மும்பை நகரமும் வருகிறது. காலமாற்றத்தில் அந்த நகர் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதும், மாறிக்கொண்டே இருக்கும் மனிதர்களை அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதுமாக நாவலில் ஒரு கதை இழையோடுகிறது. சீரிஸ் அவ்வளவு விலாவரியாக சொல்லப் படவில்லை. அது ஹீரோ வில்லன் கதையாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஏரளமான துணைப் பாத்திரங்களை கொண்ட நாவலை adapt செய்வது அவ்வளவு எளிதல்ல, ஆனாலும் இதன் திரைக்கதை ஆசிரியர்கள் அதிகம் மெனக்கெட்டு நாவலை மிகவும் சிறப்பாக அடாப்ட் செய்திருக்கிறார்கள். நாவலில் ஏராளமான பாத்திரங்கள் இருக்கலாம். ஒவ்வொன்றிற்கும்  ஒரு முக்கியத்துவமும் கடமையும் இருக்கலாம். ஆனால் எல்லாப் பாத்திரங்களையும் திரையில் கொண்டு வரமுடியாது. அப்போது இரண்டு மூன்று துணைப் பாத்திரங்களை இணைத்து ஒரே கதாப்பாத்திரமாக மாற்றிவிடுவது புத்திசாலித்தனம். அப்படி செய்யும் போது திரையில் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவமும் கூடி விடும்.

நாவலில் சர்தாஜின் தாய் ப்ரபோஜித்  கௌர் பாத்திரத்தின் பின்கதையை விலாவரியாக விவரித்திருப்பார் ஆசிரியர். இந்தியப் பிரிவினையின் பின்னணியில், கௌரின் குடும்பம் அடைந்த இன்னல்களையும் அதில் இருந்து அவர் மீண்டு வந்ததைப் பற்றியும் ஒரு நெடுங்கதை போல் தனி அத்தியாயமாக எழுதியிருப்பார் சந்திரா. நாவலில் சர்தாஜ் சிங்கின் எல்லாக் குழப்பங்களுக்கும் தீர்வு சொல்லும் முதல் தோழி ப்ரபோஜித் கௌர். திரையில் சர்தாஜின் தாய் பாத்திரத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. கதையின் நகர்விற்கு துணை செய்யாத எந்த பாத்திரமும் திரைக்கதைக்கு தேவையில்லை.

Koko

அதே சமயத்தில் நாவலில் ஓர் காட்சியில் வசனமாக கடந்து போகும் ‘கோகோ’ என்ற பாத்திரம் திரையில் முக்கிய பாத்திரமாக உருவெடுத்திருக்கிறது. கோகோ ஒரு திருநங்கை. நாவலில் ஒரு குற்றவாளியை பிடிக்கப் போகும் இடத்தில், சர்தாஜிடம் கான்ஸ்டபிள் கடேக்கர் உரையாடிக் கொண்டிருக்கும்போது கோகோவைப் பற்றி சொல்கிறார்.  ஒரு பக்கத்தில் மட்டுமே இடம்பெற்ற அந்த பாத்திரம், திரைக்கதை ஆசிரியர்களை பெரிதாக பாதித்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அந்த பாத்திரத்திற்கு வேறொரு அழகான கோணத்தை திரையில் தந்திருக்கிறார்கள். அவளை கைத்தொண்டேவின் காதலியாக உருவாக்கி, அவன் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவளாக மாற்றியிருக்கிறார்கள்.

சர்தாஜ் சிங்கின் உயர் அதிகாரியாக வரும் பருல்கர், நாவலில் சிங்கை தன் மகன் போல் பாவிக்கிறார். ஆனால் திரைக்கதை வடிவத்தில் பருல்கரும் சிங்கும் எதிரிகள். பருல்கர் சிங்கிற்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவனை ஒரு போலி என்கவுண்டரைப் பற்றி பொய் சாட்சி சொல்லும்படி வற்புறுத்துகிறார். நாயகனுக்கு எல்லா திசைகளில் இருந்தும் அழுத்தம் அதிகரிக்கும் போது திரைக்கதையில் சுவாரஸ்யம் கூடுகிறது. அதன் பொருட்டே அவனை சுற்றியிருக்கும் கதாப்பாத்திரங்களை உருவாக்க வேண்டும். நிச்சயம் இந்த நாவலையும் தொடரையும் ஒப்பிட்டு பார்பபதன் மூலம் கதாப்பாத்திரங்களை சிறப்பாக உருவாக்குவதைப்  பற்றி, அடாப்ட் செய்வதைப் பற்றி  புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து காட்சிகளில் எப்படி சுவாரஸ்யத்தை கூட்டுவது என்பதையும் சாக்ரெட் கேம்ஸ் நாவல்- திரைக்கதையாக்கம்  சொல்லித் தருகிறது. கணேஷ் கைத்தொண்டே தன்னை தானே சுட்டுக் கொள்வதற்கு முன் ஒரு பெண்ணையும் சுட்டுக் கொன்று விடுகிறார். அவள் யார் என்று நாவலில் துணைப் பாத்திரமாக (ஆனால் சீரிஸில் முக்கியப் பாத்திரமாக) வரும் ரா ஏஜென்ட் அஞ்சலி மாத்தூர் கண்டுகொண்டு சர்தாஜிடம் சொல்ல, சர்தாஜ்  பின் அவள் வீட்டை தேடிச் செல்கிறார். இங்கே ஹீரோவான சர்தாஜிற்கு வேலை இல்லாமல் போகிறது. இப்படி திரைக்கதை அமைத்தால் ஹீரோவிற்கான முக்கியத்துவம் குறைகிறது.

ஆனால் திரைக்கதையாசிரியர்கள் இந்த சவாலை முறியடித்திருக்கிறார்கள். கணேஷ் கைத்தொண்டேவின் அறையில் செத்துக் கிடைக்கும் அந்தப் பெண்ணிடம் இருந்து ஒரு கார் கீயை எடுக்கிறார் சர்தாஜ். பின் அதைக் கொண்டு அருகாமையில் இருக்கும் பார்க்கிங் ஏரியா சென்று காரைக் கண்டுப்  பிடிக்கிறார். பின் காரில் உள்ள ஓட்டுநர் உரிமம் கொண்டு இறந்த பெண்ணின் பெயர் ஜோஜோ என்று கண்டுகொள்கிறார். அங்கிருந்து அவள் வீட்டை தேடி நகர்கிறார். இங்கே நாவலுக்கும் திரைக்கதைக்கு பிளாட் பாயிண்ட்ஸ் ஒன்றுதான். ஆனால் அதை இணைக்கும் விதமே திரைக்கதையின் சுவாரஸ்யத்தை நிர்ணயிக்கிறது. நமக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும், நாயகன் தன்னுடைய முயற்சியில் அந்த வேலையை செய்யும் போது பார்வையாளர்களாக நாம் அதை ரசிக்கிறோம்.

திரைக்கதையை பற்றி பேசும் போது குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் ‘சுருங்கச் சொல்லுதல்’. சுருக்கமாக  ஒரு விசயத்தை சொல்லிட முடியுமெனில் அதை செய்துவிட வேண்டும். காட்சிகளை வளர்க்கத் தேவையில்லை. உதாரணாமாக ஒரு காட்சி. நாவலில், சர்தாஜின் விசுவாசியாக வருகிறார் கான்ஸ்டபிள் கடேக்கர். சர்தாஜ் சிங்குடனேயே அவர் நிழல் போல் பயணிக்கிறார். சிங்கிற்கும் அவருக்குமான மரியாதைக் கலந்த நட்பு  பல பக்கங்களில் சொல்லப் படுகிறது. தொடரில், கடேக்கர் தன் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போது சர்தாஜ் சிங்கிடமிருந்து போன் வருகிறது. மனைவியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு உடனே புறப்படுகிறார். இங்கே அவரது விசுவாசத்தை ஒரே ஷாட்டில் சொல்லிவிடுகிறார்கள்.

மேலும், நாவலில் சர்தாஜ்ஜின் கேரக்டர் ஸ்கெட்ச் யதார்த்தமாக இருக்கும். அவர் சராசரி போலீசாக வலம் வருகிறார். அவர் மிகவும் சாதாரண ஆள். லஞ்சம் வாங்குகிறார். அதை பகிர்ந்து கொள்கிறார். தூக்கமின்மையால் அவதிப்படுகிறார். பணிந்து போகிறார். சீரியலில் அவர் பாத்திரத்தில் கொஞ்சம் செயற்கைத்தனம் வெளிப்படுகிறது. அவர் மிகவும் நல்லவர். பொய் சொல்ல அஞ்சுகிறார். பல முறை வில்லன்களிடம் மாட்டியும் உயிரோடு தப்பித்து விடுகிறார். திரைக்கதைக்கான சமரசங்கள் இவை. ஆனால் நாவலைப் போலவே திரையிலும் கைத்தொண்டே ராஜாவாக வலம் வருகிறார். இது கைத்தொண்டே என்ற டானைப் பற்றிய கதை என்றே சொல்ல வேண்டும். ஒன்றுமில்லாப் பின்னணியில் இருந்து வரும் சாதாரணன் பம்பாயை ஆட்டிப் படைக்கும் டானாக நாவலில் பலநூறு பக்கங்களில் உருவெடுக்கிறார். அந்த அசூர வளர்ச்சியின் சாராம்சம் திரைக்கதையில் வெளிப்படுவது சீரிஸின் கூடுதல் பலம். கைத்தொண்டேவை மறக்க முடியாமல் செய்கிறது  நவாஸுதீன் சித்திக்கின் நடிப்பு. சீரிஸை பார்த்துவிட்டு நாவலைப் படிக்கும் போது, நவாஸுதீனே நாவலையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார்.

ஒரு நல்ல நாவல் நல்ல முறையில் திரையாக்கம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழிழும்  சினிமாவாக மாற்றக்கூடிய ஏராளமான சிறப்பான நாவல்கள், சிறுகதைகள் உண்டு. புனைவிற்கு பஞ்சமில்லா தமிழ் எழுத்துலகில்  எல்லா ‘Genre’ கதைகளும் உண்டு. வருங்காலத்தில் வெப்சீரிஸ் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை பெரும் என்பதால் கதைகளுக்கான தேடலும் அதிகரிக்கும். அப்போது தமிழ் எழுத்துப் புனைவுகளும் நல்லப்  படங்களாக, சீரிஸ்களாக உருவாகும் என்று நம்புவோம்…

மேக்கிங் மூவீஸ்- சிட்னி லூமெட்- சினிமா புத்தகங்கள்-2

சினிமா பேசும் புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகம்.  கதை எழுதுவது தொடங்கி படத்தை திரையிடுவது வரை எல்லாவற்றைப் பற்றியும் எல்லா துறைகளைப் பற்றியும் இந்த புத்தகத்தில் விவரிக்கிறார் லூமெட்.

ஒரு கதை எதைப் பற்றியது? திரைக்கதையாசிரியர், இயக்குனர் தொடங்கி படத்தொகுப்பாளர் வரை எல்லோருமே தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான் என்கிறார் லூமெட். இந்த கேள்வி தான் புத்தகம் முழுக்க வருகிறது. மேலும் படத்தின் முடிவு பார்வையாளர்களுக்கு எந்த உணர்வை ஏற்படுத்த போகிறது என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்ள வேண்டுமாம். இத்தகைய கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வதன் மூலமே நல்ல படத்தை உருவாக்கிட முடியும் என்கிறார் லூமெட்.

படம் எதைப் பற்றியது என்பதை கண்டுகொண்ட பின்னர், அவர் அடுத்த கட்ட வேலைகளை தொடங்குவாராம். முதலில், அவரும் எழுத்தாளரும் ஒவ்வொரு காட்சியும் எதைப் பற்றியது என்பதை விவதிப்பார்களாம். இந்த காட்சி படத்தின் தீமிற்கு வழு சேர்க்கிறதா? கதையை முன்னெடுத்து செல்கிறதா? கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்கிறதா? இந்த வசனம் இந்த காட்சிக்கு தேவைதானா? என்றெல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டும், எனினும் இறுதி முடிவு எழுத்தாளருடையதாகவே இருக்குமாம். “இயக்குனரும் எழுத்தாளரும் வெவ்வேறு பரிமாணங்களை படத்திற்கு கொடுக்க முயல வேண்டும். அப்போது மூன்றாவதாக ஒரு பரிமாணம் உருவாகும்”.

making-movies

கேமராவை வைத்து வித்தைகள் செய்வதிலெல்லாம் லூமெட்டிற்கு நம்பிக்கை இல்லை.  ஒளிப்பதிவு சரியில்லா பெர்பார்மன்ஸை சரிபடுத்த உதவும். ஒரு காட்சியின் நோக்கமே, அதை எந்த லென்ஸை (வைட் ஆங்கில் லென்ஸ் அல்லது லாங் லென்ஸ்) பயன்படுத்தி உருவாக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்யப் போகிறது. வெறும் அழகான இமேஜ்களை உருவாக்கும் பொருட்டு ஒளிப்பதிவு முடிவுகள் இருக்க கூடாது. காட்சி எத்தகைய தாக்கத்தை மக்களின் மனத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு இயக்குனர் விரும்புகிறாரோ அதற்கேற்றார் போல் லென்ஸை தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்.

மேலும், சினிமாவை பொறுத்த வரை ‘ஸ்டைல்’ என்று தனியாக ஒன்றும் கிடையாது என்கிறார். கதை மாற மாற ஸ்டைல் மாறும். “அடிப்படையில் சினிமா என்பது கதை சொல்லுதல். சில படங்கள் வெறும் கதை சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல், பார்வையாளர்களுக்கு அவர்களை பற்றி அவர்களுக்கே தெரியாத விசயங்களை சொல்லும். ஒரு இயக்குனர் எப்படி கதையை சொல்கிறார் என்பதிலேயே இதன் சாத்தியக்கூறு அடங்கி இருக்கிறது. அந்த ‘எப்படி’ என்பதையே ஸ்டைலாக கொள்ளல் வேண்டும்.”

“தனித்து தெரியாத ஸ்டைலே நல்ல ஸ்டைல்”

“ஸ்டைல் , உணர்வுபூர்வமாக இருத்தல் வேண்டும். ஒப்பனைக்காக செய்யப்படுவதெல்லாம் ஸ்டைல் கிடையாது. கதையின் மூலமே ஸ்டைலை தேர்வு செய்ய வேண்டும்

ஒரு இயக்குனர் அந்த ஸ்டைலை எப்படி இறுதி செய்கிறார்? இதற்கு மூன்று வகையான உத்திகளை பின்பற்ற முடியும் என்கிறார் அவர்.

ஒன்று, எப்படிபட்ட ஸ்டைகளில் படம் இருக்கக் கூடாது என்பதை கண்டுகொண்டு அவற்றை தவிர்த்தாலே நல்ல ஸ்டைல் உருவாகிவிடும். பல நேரங்களில் படத்தின் தீமே, தனக்கு தேவையில்லாத ஸ்டைலை களைந்து விடும்.

இரண்டு, சிலநேரங்களில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஸ்டைல் உருவாகிவிடும். திரைக்கதையை படித்து முடித்ததுமே இந்த படம் இந்த ஸ்டைலில் தான் இருக்கப் போகிறது என்று கண்டுகொள்ள முடியும்.

உதாரணமாக அவர் டாக் டே ஆஃப்டர்னூன் படத்தினை சொல்கிறார். அது நிஜக் கதை. அதனால் அதன் காட்சியமைப்பு ஒரு டாக்குமெண்டரி போல் இருந்தால் மக்களால் அந்த கதை உண்மையில் நடந்தது என்று எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதனாலே அதன் மேக்கிங் மிகவும் யதார்த்தமாக இருந்தது என்கிறார்.

மூன்றாவதாக, படத்தின் எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் ஆகியோரிடம் விவாதிப்பதன் மூலம் நல்ல ஸ்டைலை தேர்ந்தெடுக்க முடியும் என்கிறார்.

அவரின் இளமைக் காலகட்டத்தில், படங்கள் படத்தொகுப்பில் தான் உருவாகின்றன என்ற நம்பிக்கை இருந்ததாம். காரணம் அப்போது ஸ்டுடியோக்கள் இயக்குனர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரே இயக்குனர் ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களை இயக்கிக் கொடுப்பார். படத்தொகுப்பாளர் தான் படத்தின் இறுதி வடிவத்தை முடிவு செய்வார். ஆனால் இதெல்லாம் மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தான் லூமெட் படம் இயக்க தொடங்கியிருக்கிறார். அவர் சொல்வது, ஒரு இயக்குனர் காட்சிகளை உருவாக்கினாலொழிய படத்தொகுப்பாளரால் எதுவும் செய்ய முடியாது என்பதே. அதே சமயத்தில் படத்தொகுப்பின் முக்கியத்துவத்தை அவர் மறுக்கவில்லை. மாறுபட்ட இமேஜ்களாக காட்சிகளை இணைப்பதும், கதைக்கு தேவையான டெம்போவை உருவாக்குவதுமே படத்தொகுப்பின் மிக முக்கிய வேலை என்று அவர் குறிப்பிடுகிறார். “ஒரு இமேஜ் எத்தனை ப்ரேம்கள் வரப்போகின்றன என்ற முடிவு மிக முக்கியமானது. அந்த இமேஜ்கள் தான் படத்தை மக்கள் மனதில் பதிக்கப் போகிறது. இந்த முடிவில்தான் படத்தொகுப்பாளரின் ஆளுமை இருக்கிறது.”

படத்தொகுப்பு சரியில்லை என்று விமர்சகர்கள் வைக்ககூடிய கருத்தை லூமெட் ஏற்கவில்லை. படத்தொகுப்பில் இருக்கும் குறைகளை படத்தொகுப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரை தவிர வேறு யாராலும் கண்டுக் கொள்ள முடியாதென்று அவர் அழுத்தமாக சொல்கிறார்.

ரஷஸ் (Rushes) பார்ப்பதை பற்றியும் லூமெட் அறிவுரை சொல்கிறார். அவர்கள் படத்தொகுப்பு முடிந்து ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் உருவாக்கிய காட்சிகளை பார்ப்பது வழக்கமாம். அன்றைய படப்பிடிப்பின் மனநிலையில் அந்த காட்சிகளை பார்க்கக் கூடாது. படப்பிடிப்பு சரியாக அமையாத பட்சத்தில் அது இறுதி காட்சியை தேர்வு செய்யும் முடிவை பாதிக்கும். அதனால் ஒவ்வொரு முறை Rushes பார்க்கும் போதும் புதிய மனிதனாக செல்லவேண்டும் என்பது அவர் சொல்லும் முக்கிய அறிவுரை.

நடிப்பை பற்றி சொல்லும் போது ஒத்திகை இன்றியமையாதது என்கிறார். ஒரு நடிகர் சில காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும், சில காட்சிகளில் நடிக்காமல் அவராக வந்துவிட்டு சென்றாலே போதுமானதாக இருக்கும். இதை கண்டுக்கொள்வதற்கு இயக்குனருக்கும் நடிகருக்குமிடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும். இத்தகைய புரிதலை ஒத்திகை உருவாக்கி தரும் என்கிறார் லூமெட்.

மேலும் லூமெட் சொல்வது,

“நல்ல படங்கள் தோற்ப்பதுண்டு. சுமாரான படங்கள் வசூலை வாரிக் குவிப்பதுண்டு. வசூலை வைத்து படத்தின் தரத்தை நிர்ணயிக்க கூடாது”

“தலைசிறந்த படத்தை உருவாக்கும் வித்தை யாருக்கும் தெரியாது. ஒரு படம் தலைசிறந்ததாக மாறுவது அதிர்ஷ்டகரமான விபத்து”

“திரைப்படத்தை உருவாக்குவது ஒரு மொசைக்கை உருவாக்குவது போல. ஒவ்வொரு செட்டப்பும் ஒரு சிறிய டைல்களை போல. ஒவ்வொன்றாக வடிவமைத்து, முடிந்தவரை பாலிஷ் செய்து எல்லாவற்றையும் சரியாக பொறுத்த வேண்டும். இப்படி பல சிறிய டைல்கள் சேர்ந்து ஒரு மொசைக் உருவாவது போல பல செட் அப்களின் தொகுப்பே ஒரு படம். இறுதி வடிவம் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நாம் எண்ணினோமேயானால், ஒவ்வொரு சிறிய முடிவுகளையும் அதற்கு ஏற்றாற்போல் எடுக்க வேண்டும், ஒவ்வொரு கல்லையும் இறுதி வடிவத்திற்கு ஏற்றாற்போல் அடுக்க வேண்டும்.”

ஒரு படத்தை இயக்கும் போது இயக்குனரின் இன்புட்கள் இருந்தாலும் அந்தந்த துறைசார்ந்தவர்கள் எடுக்கும் முடிவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்  என்பதை லூமெட் இந்த புத்தகத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் போராடி தங்களுடைய முதல் ஸ்டுடன்ட் பிலிம்களை உருவாக்குகிறார்கள். சிலருக்கு, பிரபலமடைவதும் பணம் சம்பாதிப்பதும் நோக்கம். ஆனால் சிலர் தங்களுக்கு முக்கியமென்று படுவதை உலகிற்கு சொல்ல முயற்சிக்கிறார்கள். அந்த பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.  அவர்களில் சிலர் நல்லப் படங்களை உருவாக்க விரும்புகிறார்கள்”- சிட்னி லூமெட்