ராபர்ட் மெக்கீயின்‘கதை’ -3

3

க்ளீச்சே (Cliche)

Creativity means creative choices of inclusion and exclusion- Robert Mckee

ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதையை எழுதிவிட வேண்டும் என்ற கொள்கையோடு யாரும் திரைக்கதையை எழுதத் தொடங்கமாட்டார்கள்.  மிகச் சாதரணமான, எளிமையானதொரு கதையாக இருந்தாலும் எல்லோரும் விரும்பும் விதத்தில் திரைக்கதையை அமைத்துவிட வேண்டும் என்பதே ஒவ்வொரு திரைக்கதையாசிரியரின் எண்ணமாக இருக்கும். அப்படி இருந்தும் ஏன் பல படங்கள் சுவாரஸ்யமற்று தோன்றுகின்றன!

‘சுவாரஸ்யம்’ என்றதுமே பெரும் மாயங்களை காட்சிகளில் நிகழ்த்திவிட வேண்டும் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். இரண்டரை மணி நேரம்  பார்வையாளர்களின் கவனத்தை  தன்னை நோக்கி இழுத்து கட்டி வைத்துக்கொள்ளும் எல்லா காட்சிகளும் சுவாரஸ்யமான  காட்சிகள்  தான். அது எப்போது சாத்தியம் இல்லாமல் போகிறது! 

ஒன்று, படத்தோடு நம்மால் ஒன்றவே முடியாமல் போகும் போது. அந்த படத்தின் ‘கதை உலகம்’ நமக்கு முற்றிலும் அந்நியமாக படலாம். ரஷியன் மாஃபியாக்களுக்கு இடையே நிகழும்  ஆயுத பேரத்தை நம் நாயகன் எப்படி தடுக்கிறான் என்பதே கதை என்று வைத்துக் கொண்டால், நம்மால் அந்த கதையோடு ஒட்ட முடியாது அல்லவா! பின் எப்படி காட்சிகள் நமக்கு சுவாரஸ்யமாக தோன்றும்! விவேகம் போன்ற படங்கள் பார்ப்பதற்கு வீடியோ கேம் போல் இருப்பதற்கு காரணம் இதுதான். கதையோடு நம்மை கட்டிப்போடும் எமோஷன் இதுபோன்ற படங்களில் இருப்பதில்லை. அடுத்து அந்த கதையின் உலகம் நமக்கு பரிச்சயமாக இருந்தாலும், பிரதான கதாப்பாத்திரத்தின் பிரச்சனை நம்மை பாதிக்காத போது நம்மால் கதையோடு ஒன்ற முடியாது. ஒரு சாதாரணன் பார்போற்றும் பாடிபில்டராகவும் மாடலாகவும் உருவாகிறான். நல்ல கதைதான். அவனுடைய வளர்ச்சியில் பொறாமை கொள்வோர் அல்லது அவனால் பாதிக்கப்படும் சிலர் அவனுக்கு வைரஸ் ஊசி போட்டு அவன் உடலழகை சிதைத்து விடுகிறார்கள். அதனால் நாயகன் அவர்களை பழி வாங்குகிறான். இங்கே ஒரு மாடலுக்கு என்ன ஆனால் எனக்கு என்ன என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு வரும்போது காட்சிகள் அந்நியப்பட்டு போகிறது.  ஏனெனில் அந்த பிரச்சனை தன்னுடைய பிரச்சனை இல்லை என்றே ஒரு பார்வையாளனின் மனம் எண்ணும்.

இரண்டாவது, காட்சிகள் ‘க்ளீச்சேவாக (Cliche) இருக்கும் போது. இங்கே நம்மால் படத்தோடு ஓட்ட முடியும், அந்த உலகமும்  நமக்கு நன்கு பரிச்சயமான உலகமாக தான் இருக்கும். நாயகனின் பிரச்சனை கூட நமக்கு பரிச்சயமான பிரச்சனையாக அல்லது நாம் அங்கீகரிக்கும் பிரச்சனையாகவே இருக்கும். ஆனாலும் காட்சிகளில் சுவாரஸ்யம் இருக்காது. காரணம், அந்த காட்சிகள் நாம் இதற்கு முன்பு பார்த்த படங்களை நினைவுப்படுத்தும். பார்வையாளர்கள் பலமுறை பல படங்களில் பார்த்த ஒரு காட்சியையே மீண்டும் பார்ப்பதற்காக நம் படங்களுக்கு வரவில்லை என்பதை ஒரு திரைக்கதையாசிரியர் மறந்து விட கூடாது. . 

இந்த க்ளீச்சே ஏன் நிகழ்கிறது, இதை எப்படி தவிர்க்கலாம் என்பதைப் பற்றி மெக்கீ என்ன சொல்கிறார்?

ஒரு எழுத்தாளனுக்கு தன்னுடைய கதையின் உலகத்தைப் பற்றி போதிய அறிவு இல்லாமையே க்ளீச்சேவிற்கு காரணம் என்கிறார் மெக்கீ.  தெரியாத ஒரு உலகத்தை (கதை களம்) பற்றி கதை எழுதும் போது, ஒரு கட்டத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் திரைக்கதையாசிரியர் தவிக்கக் கூடும். அப்போது அவர் வேறு வழியின்றி,  அதற்கு முன்பு அதே களத்தை மையமாக கொண்டு வெளியான படங்களை பார்த்தும், புத்தகங்களை படித்தும் காட்சிகளை நேரடியாக அந்த படைப்புகளிலிருந்து நகல் எடுக்கத்  தொடங்குவார். அப்படி செய்யும் போது காட்சிகள் எந்த புதுமையும் இல்லாமல் வெறும் க்ளீச்சேவாக தோன்றுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லையே!.  

அப்படியெனில் ஒரு திரைக்கதையாசிரியன் தான் வாழ்ந்த அனுபவித்த கதைகளை மட்டும் தான் எழுத வேண்டுமா? தான் கண்டிராத ஒரு உலகத்தைப் பற்றி புனைய முயற்சிக்க கூடாதா?

மெக்கீ சொல்வதன் அர்த்தம் அதுவல்ல. நம்முடைய கதை உலகை பற்றி போதிய ஆராய்ச்சி செய்து அதை நன்றாக  தெரிந்துக்  கொண்ட பின்பே . நாம் திரைக்கதையை எழுத வேண்டும் என்பதே அவர் சொல்வதற்கு அர்த்தம். முதலில் தன்னுடைய கதையின் அமைப்பு (Setting) பற்றி ஒரு திரைக்கதையாசிரியர் ஆழமாக புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லும்  அவர், ஒரு கதையின் அமைப்பு நான்கு பரிமாணங்களைக் கொண்டது என்றும் விளக்குகிறார். அவை முறையே, காலம் (Period), கால அளவு (Duration), இடம் (Location) மற்றும் முரணின் நிலை (Level of Conflict).

கதை எந்த காலத்தில் நிகழ்கிறது என்ற தெளிவு முதலில் இருக்க வேண்டும். அது சமகாலமாக இருக்கலாம். கடந்த காலமாக இருக்கலாம். அல்லது கால நேரம் குறிப்பிட தேவையில்லாத ஏதோ ஒரு காலமாக இருக்கலாம்.(இந்த வகை கதைகள் அரிது). அடுத்து கதையின் கால அளவு என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரே கதையில் ஒரு கதாப்பத்திரத்தின் அறுபது ஆண்டு கால வாழ்க்கையையும் சொல்லலாம், வெறும் ஆறு மணி நேர வாழ்க்கையையும் சொல்லலாம். 

என்ன சொல்ல போகிறோம், என்ன சொல்ல வேண்டும் என்ற தெளிவு ஒரு திரைக்கதையாசிரியருக்கு இருத்தல் வேண்டும். அடுத்து எந்த இடத்தில் ஒரு கதை நிகழ்கிறது என்பதை முடிவு செய்வதும் முக்கியமாகிறது. அது பாலை நிலமாக இருக்கலாம், மலை பிரதேசமாக இருக்கலாம், கிராமமாக இருக்கலாம், இடுக்குகள் நிறைந்த நகரமாக இருக்கலாம். இடத்தின் தன்மைக்கேற்ப கதை மாந்தர்களின் குணம் மாறுபடும் அல்லவா! 

சில படங்களை கவனித்திருப்போம். அதில் கதை எந்த இடத்தில் நிகழ்கிறது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்காது. அதனாலேயே அந்த கதையில் நம்மால் ஒன்ற முடியாது. சில கதைகளில் அந்த இடத்தின் இயல்பான தன்மையை விடுத்து செயற்கையான தன்மையை வெளிப்படுத்தி இருப்பார்கள். இதுவும்  அந்த கதையை நமக்கு அந்நியப்படுத்தி காட்டும்.(உதாரணம் இராவணன்). சில படங்களில், கதை நிகழும் இடம் தான், அந்த லேண்ட்ஸ்கேப் தான் கதைக்கு உயிர் கொடுக்கும். (உதாரணம் ஆரண்யகாண்டம்). 

அடுத்து முரணின்  நிலை. நம் கதையில் இருக்கும் முரண் எந்த நிலையில் உள்ளது என்று சிந்தித்து பார்க்க வேண்டும்! ஒருவனுக்கு தன்னோடே முரண் இருக்கலாம். (அகப்போராட்டம்). அல்லது இன்னொருவரோடு பிரச்சனை இருக்கலாம். இல்லை சமூகத்தோடு, நிறுவனத்தோடு பிரச்சனை இருக்கலாம். இங்கே முரணின் நிலை மாறமாற பிரச்சனையின் வீரியம் கூடுகிறது அல்லவா! 

இந்த நான்கு பரிமாணங்களையும் தெளிவாக சிந்த்தித்து வைத்துக் கொண்டு கதையை எழுதத் தொடங்குங்கள் என்பதே மெக்கீ நமக்கு சொல்லும் அறிவுரை. 

இதையெல்லாம் முடிவு செய்தபின்பும், ஒரு திரைக்கதையாசிரியர் தவறு செய்யும் இடமொன்று இருக்கிறது. அது தன்னுடைய கதை உலகை மிக பெரிதான ஒன்றாக வைத்துக் கொள்வது. அதாவது நம்முடைய கதை நிகழும் உலகம் அளவில் பெரியதாகவும், நிறைய கதை மாந்தர்களை கொண்டதாகவும் இருக்கும் போது கதையை எப்படி நகர்த்துவது என்ற குழப்பம் ஏற்படும். இதை தவிர்க்க, நம் கதை உலகை சிறியதாக வைத்துக் கொள்ளும்படி சொல்கிறார் ராபர்ட் மெக்கீ. 

அதற்காக அவர் ஒரே இடத்தில் (location) கதையை நகர்த்துங்கள் என்று சொல்லவில்லை. நம் உலகில் நடக்கும் எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமெனில் அந்த உலகம் சிறியதாக இருக்கவேண்டும், ஒரு எழுத்தாளனுக்கு தெரியாமல் அவனுடைய புனைவு உலகில் எதுவுமே அசையக் கூடாது என்கிறார் அவர். நம் உலகம் எப்படிப்பட்டது, அதில் வரும் நம் கதாப்பாத்திரங்கள் எப்போது கோபப்படும், எப்போது சந்தோசப்படும்,  அதன் வாழ்வில் நடந்த மோசமான சம்பவம் என்ன அனைத்துமே ஒரு எழுத்தாளனின் மனதில் இருக்க வேண்டும். இதெல்லாம் திரைக்கதையில் வர வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இவற்றைப் பற்றிய அறிவு ஒரு திரைக்கதையாசிரியனுக்கு இருக்க வேண்டும். மிக பெரிய புனைவு உலகை உருவாக்கிவிட்டால் இந்த அறிவு சாத்தியமில்லை. ஆனால் ஒரு திரைக்கதையாசிரியன் தன் புனைவு உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது, அவனால் சம்பவங்களை தயக்கமின்றி தெளிவாக எழுத முடியும். அப்போது அவன் வேறு படங்களையோ புனைவையோ நகல் எடுக்க தேவை இல்லை. இங்கே ‘க்ளீச்சே’ உடைந்து போகிறது. ஆனால் இதை எப்படி சாத்தியப்படுத்துவது?

ஆராய்ச்சி செய்து கொண்டே இருங்கள் என்பதே மெக்கீ சொல்லும் பதில். நம் நினைவுகளை அலசுவதன் மூலம் இந்த ஆராய்ச்சி சாத்தியமாகும். கற்பனை குதிரையை ஓட விடுவதன் மூலம் சாத்தியமாகும். அல்லது உண்மையான தரவுகளை சேகரிப்பதன் மூலம் சாத்தியமாகும். 

நம் கதாப்பாத்திரத்தின் வாழ்வில் ஏதோ ஒரு சம்பவத்தை எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது போல நம் வாழ்விலோ நம் நண்பர்களின் வாழ்விலோ ஏதாவது சம்பவம் நிகழ்ந்திருக்கிறாதா என்று யோசிக்கலாம். இங்கே நம் நினைவு அந்த காட்சியை உருவாக்குகிறது. அல்லது அந்த கதாப்பாத்திரத்தின் இடத்தில் நாம் இருந்தால் எப்படி நடந்துகொள்வோம் என்று கற்பனை செய்து காட்சியை எழுதலாம். சில நேரங்களில் நாம் உண்மை சம்பவங்களை ஆராய வேண்டியதிருக்கும். உதாரணமாக, பிர்சா முண்டா பற்றி ஒரு கதை எழுத வேண்டுமெனில், வெறும் கற்பனை மட்டும் போதாது. நிறைய உண்மைகளை சேகரிக்க வேண்டியிருக்கும். இப்படி எந்த வகை படமாக இருந்தாலும் ஏதோ ஒரு ஆராய்ச்சி நிச்சயம் தேவைப்படும்.  ‘வாசிப்பு’ அந்த ஆராய்ச்சியை சாத்தியப்படுத்தும். 

நமக்கு தெரிந்த விஷயங்கள் சரிதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அல்லது நாம் பல விஷயங்களை இன்னும் அறிந்திருக்கவில்லை என்று தெளிந்துகொள்வதற்கும் வாசிப்பு பயன்படும் என்கிறார் மெக்கீ. பல நேரங்களில் ‘ரைட்டர்ஸ் பிளாக்கை போக்குவதற்கும் வாசிப்பு பயன்படும். எதையுமே எழுத முடியாமல் தவிக்கும் போது, நம் புனைவு உலகிற்கு சம்மந்தமான ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்தால் நம் படைப்பாற்றல் பெருகும்   என்கிறார் அவர். இறுதியாக ‘க்ளீச்சேவை தவிர்ப்பதற்கு நல்லதொரு உத்தியை சொல்கிறார் மெக்கீ. ஒவ்வொரு காட்சியையும் குறைந்தது நான்கைந்து விதத்தில் எழுதி பார்ப்பதே அது.  

எல்லா காட்சிகளுக்கும் இது சாத்தியமில்லை. இணைப்பு காட்சிகளை அப்படியே விட்டுவிடலாம். ஆனால் முக்கியமான காட்சிகளுக்கு இந்த உத்தியை பயன்படுத்தலாம். ஹீரோவும் வில்லனும் எங்கே சந்திக்கிறார்கள்? நாயகன் நாயகியிடம் எங்கே காதலை சொல்கிறான்? ஹீரோவிற்கு எப்படி சூப்பர் பவர் கிடைக்கிறது?

முழு காட்சியையும் எழுத வேண்டிய அவசியமில்லை. வெறும் ஐடியாக்களை மட்டும் குறித்துக் கொள்ளலாம். ஹீரோவை வில்லனின் ஆட்கள் அடிக்க வருகிறார்கள். அந்த சண்டை பேருந்தில் நடந்ததால் எப்படி இருக்கும்? அல்லது சப்வேயில் நடந்தால் எப்படி இருக்கும்? 

நாயகனும் நாயகியும் முதன்முதலில் சந்தித்துக் கொள்வதே நாம்  எழுத விரும்பும் காட்சி. அவர்கள் லிப்ட்டில் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்? இல்லை, ஒரு கலவரத்தில் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்? இப்படி பலவிதமாக காட்சிகளை எழுதி பார்த்து இறுதியாக ஒன்றை தேர்வு செய்யும் போது நிச்சயம் அந்த காட்சி புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -2

***

2

ஆர்க் பிளாட், மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட்

The Writer Must Believe in What He Writes- Robert Mckee

***

ஆர்க் பிளாட் (Arch Plot), மினி பிளாட் (Mini Plot) மற்றும் ஆன்டி பிளாட் (Anti Plot) என்பதே மெக்கீ சொல்லும் மூன்று பிரதான பிளாட் வகைகள். ஒரு கதையை நகர்த்துவதற்கு எண்ணற்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அவை இந்த மூன்று பிரதான வகைகளுக்குள்தான் வரும் என்கிறார் மெக்கீ. மேலும் ஒவ்வொரு வகைக்கும் இருக்கும் தன்மைகளைப் பற்றியும் மெக்கீ குறிப்பிடுகிறார். ஆனால் மெக்கீ சொல்லும் இந்த எல்லா வகைகளைப் பற்றியும் அதிகம் சிந்திப்பது ஒரு திரைக்கதையாசிரியருக்கு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். 

அதனால் நாம் இதை இன்னும் எளிமையாக, வேறுமாதிரி புரிந்துகொள்வோம். வழக்கமான திரைக்கதை அமைப்பு மற்றும் மாறுபட்ட திரைக்கதை அமைப்பு என்று பிளாட்களை ஒரு புரிதலுக்காக இரண்டு வகைகளாக மட்டுமே பிரித்துக் கொள்வோம். இதுவே நமக்கு பரிச்சயமான வகைகளும் கூட. 

வழக்கமான அமைப்பு என்று நாம் சொல்வது, பல ஆண்டுகளாக நாம் பார்த்து வரும் பெரும்பாலான (தமிழ்) படங்களை குறிக்கும். ஒரு பாத்திரம், அதன் உலகம், பாத்திரத்திற்கு வேறொரு பாத்திரத்தால் ஏற்படும் சிக்கல், இறுதியில் அந்த சிக்கலுக்கான தீர்வு என்று நேர்கோட்டில் நகரும் கதைகளை வழக்கமான திரைக்கதை அமைப்பு எனலாம். மெக்கீ சொல்லும் ஆர்க் பிளாட் என்பது இது தான். இது தொன்றுதொட்டு பின்பற்றப்படும் வகை என்பதால் இதற்கு ‘க்ளாஸிக் பிளாட்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. 

அடுத்து மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட், மாறுபட்ட அல்லது வித்தியாசமான திரைக்கதை போக்கை குறிக்கிறது. நேர்கோட்டில் நகராத கதைகள், ஒன்றிற்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் கொண்ட கதைகள், ஸ்தூலமான முடிவென்று எதுவும் இல்லாமல் முடியும் கதைகள் போன்றவை இந்த இரண்டு வகைகளுக்குள் (அதாவது மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட்) அடங்கும். 

மேற்கூறிய பிளாட் வகைகளின் தன்மைகள் என்னென்ன! 

ஆர்க் பிளாட்டில் திட்டவட்டமான முடிவு இருக்கும். அதாவது க்ளைமாக்சில் கதைக்கு ஒரு தீர்வு இருக்கும். மற்ற இரண்டு வகைகளிலும் அது அவசியமில்லை என்கிறார் மெக்கீ. மேலும் ஆர்க் பிளாட்டில் நம் பிரதான பாத்திரத்திற்கு புற உலகில் பிரச்சனை நிகழும். மற்ற வகைகளில் பிரச்சனை அகம் சார்ந்ததாக இருக்கும் என்கிறார். ஆனால் இந்த காலகட்டத்தில் இந்த வித்தியாசங்கள் எல்லாம் மாறிவருவதை கவனிக்க முடியும். நம் முக்கிய கதாப்பாத்திரத்திற்கு புறம் மற்றும் அகம் ஆகிய இரண்டு நிலைகளிலும் பிரச்சனைகள் இருக்க வேண்டும். அப்படி திரைக்கதையை அமைத்தால் அந்த கதை பார்வையாளர்களோடு அதிகம் நெருங்கி வரும். (உதாரணம் பிரேக்கிங் பேட்.) 

ஒரு போலீஸ் நாயகன் இருக்கிறான். அவனுடைய நோக்கம் கொலைகாரனை கண்டுபிடிப்பது. இதை வைத்து ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை எழுத முடியும். ஆனால் அவனுக்கு வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அது அவனுள் அகச் சிக்கலை ஏற்படுத்தி அவனை  செயல்படவிடாமல் தடுக்கிறது. அல்லது நாயகன் மீது காதல் வயப்படுகிறாள் நாயகி. ஆனால்   நாயகனோ தன் பழைய காதலை நினைத்துக் கொண்டே இருக்கிறான். இது அவனுடைய அகப் பிரச்சனை. இப்படி கதைகளில் அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டு சிக்கல்களும் இருக்கும் போது அந்த திரைக்கதை இன்னும் ‘எமோஷனலாக’ உருவாகிவிடும். 

அடுத்து, ஆர்க் பிளாட்டில் கதை நேர்கோட்டில் (Linear) நகரும் என்றும், ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றும் கூறுகிறார் மெக்கீ. அதவாது திரைக்கதையில் நிகழும் சிறுசிறு திருப்பங்களுக்கும் நம்பத்தகுந்த காரணம் இருக்க வேண்டும். ஒரு வினை நிகழ்ந்தால் தான், ஒரு எதிர்வினை நிகழ வேண்டும்.ஆனால் மற்ற வகை கதைகளில் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. அதில் திடிரென்று எது வேண்டுமானாலும் நிகழலாம். சம்மேந்தமே இல்லாமல் ஒரு ஏலியன் கதைக்குள் வந்து கதையை முடித்து வைத்துவிட்டு போகலாம். (இதற்குதான் இதை வித்தியாசமான,  வழக்கத்திற்கு மாறான திரைக்கதை அமைப்பு என்கிறோம். ஆனால் இது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

ஆர்க் ப்ளாட்டில்  நாயகன் ஆக்டிவாக (active) இருப்பான். மற்றவகை கதைகளில் பாஸிவாக (Passive) இருப்பான் என்ற கூற்றும் உண்டு. அதாவது அடுத்து என்ன என்று இயங்கிகொண்டே இருப்பவன் முதல் வகை. என்ன நடந்தாலும் எனக்கென்ன என்று இருப்பவன் இரண்டாவது வகை. இரண்டு குணங்களும் கலந்த நாயகனை உருவாக்குவது திரைக்கதைக்கு அதிக சுவாரஸ்யத்தை கொடுக்கும். (குறிப்பாக ஆக்சன் கதைகளுக்கு.)  எப்போதுமே துடிதுடிப்பாக இருக்கும் நாயகனை வில்லன் சீண்டுகிறான் என்பதை விட, நமக்கேன் வம்பு என்று தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவனை வில்லன் சீண்ட அவன் வெகுண்டு எழுகிறான் என்று கதை அமைத்தால் திரைக்கதை அதிக சுவாரஸ்யமாக இருக்கும்.

அவன் திடிரென்று வெகுண்டு எழவில்லை, கடந்த காலத்தில் தான் செய்த சண்டித்தனங்களை அடக்கி சாதுவாக வாழ்ந்திருக்கிறான், இப்போது மீண்டும் பழைய முகத்தை காண்பிக்கிறான் என்று கதையை அமைத்தால் திரைக்கத்தில் இன்னும் கூடுதல் சுவாரஸ்யம் கிடைக்கிறது அல்லவா! இதுபோல் நம் தேவைக்கேற்றார் போல் நாயகனின் தன்மையை மாற்றி கொண்டே போகலாம், அவனை ஆக்டிவ், பாஸிவ் என ஒரே கோணத்தில் உருவாக்க வேண்டிய அவசியமில்லை. 

அடுத்து திரைக்கதை பிளாட் வகைக்களுக்குள் நாம் கவனிக்க வேண்டிய தன்மை ‘யதார்த்தம்’. நாம் உருவாக்கும் உலகின் யதார்த்தம் ஆரம்பத்திலிருந்து சீராக இருத்தல் வேண்டும். இதுவே ஆர்க் பிளாட்டின் தன்மை. மற்ற வகை கதைகளில் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. யதார்த்தம் என்றதும் நிஜவாழ்வில் இருக்கும் யதார்த்தத்தை சினிமா பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். நாம் உருவாக்கும் கதை உலகிற்கென்று ஒரு யதார்த்தம் இருக்குமல்லவா! அதவாது Cinematic Reality. அது சீராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நம் வில்லன் நினைத்தால், அவனை சுற்றி இருக்கும் எந்த பொருளும் உடனே பறந்து அவன் கைக்கு வந்து விடும், அதை அவன் ஆயுதமாக்கி யாரையும் தாக்குவான், அவன் முன் சண்டை செய்து யாராலும் ஜெயிக்க இயலாது, ஆனால் நம் நாயகனுக்கும் அத்தகைய சக்தி கிடையாது என்று வைத்துக்கொள்வோம். இப்படியாக நாம் கதையை உருவாக்கிவிட்டோம். அதாவது இதுவே நம் கதை உலகின் யதார்த்தம் என்று நிலைநாட்டிவிட்டோம். அப்படியானால் கதையின் காட்சிகளும் இந்த யதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும். நாயகனும் வில்லனும் எதிர்கொள்ளும் போது, நாயகன் ஜெயிக்க வேண்டுமென்பதற்காக திடிரென்று நாயகனுக்கும் அந்த சக்தி வந்துவிட்டது என்று வைக்கக்கூடாது!. நம்பகத்தன்மையோடு கதையை நகர்த்த வேண்டும். நம் கதை உலகில் வில்லனுக்கு அந்த சக்தி எப்படி கிட்டியதோ, அதே முயற்சியை செய்ததன் மூலமே நாயகனுக்கும் சக்தி கிட்டியது என்று கதை அமைக்கலாம். அல்லது வில்லனை விட நாயகனுக்கு வேறொரு சிறப்பான சக்தி கிடைக்கிறது என்று கதை அமைக்கலாம். ஆனால் அது எப்படி கிட்டியது என்றும் சொல்ல வேண்டும். அது நம்பும் வகையிலும் இருக்க வேண்டும். பேண்டஸி அல்லது சூப்பர் ஹீரோ கதை என்பதற்காக நாம் நம்போக்கில் எதைவேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போக கூடாது. எளிமையாக சொல்ல வேண்டுமெனில், ஆர்க் பிளாட்டில் நம் கதை உலகிற்காக நாம் உருவாக்கிய சட்டதிட்டங்களை நாம் இறுதி வரை பின்பற்ற வேண்டும். 

ஆனால் மினி மற்றும் ஆன்டி பிளாட் கதைகளில், யதார்த்தம் சீராக இருக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதுவேண்டுமானாலும் நம் கதை உலகின் சட்டதிட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். இலக்கியத்தில் அபத்தப் புனைவுகள் இந்த வகையை சேர்ந்தவை தான். காஃப்காவின் கதையில் திடிரென்று நாயகன் பூச்சியாக மாறுவான், அல்லது அவன் நுழையும் வீடு  நீதிமன்ற அறையாக மாறும். பெர்னான்டோ ஸோரன்டினோவின் கதைகளையும் அபத்தப் புனைவுகளுக்கான உதாரணமாக சொல்லலாம்.   இவற்றை ஏன் அபத்த புனைவு என்கிறோம் எனில், யதார்த்த உல கில் திடீரென யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விசயங்கள் நடக்க நேரிடும்.  லூயி புனுவலின் (லூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி) படங்களில் இந்த தன்மையை காணலாம்.  சூப்பர் டீலக்ஸ் படத்தில் பள்ளி நண்பர்களின் கதையில், கடைசியில் ஒரு ஏலியன் வருமே! அதுவும் இந்த வகைதான்.

இப்படி ஒவ்வொரு வகை பிளாட்டிற்கும் ஏராளமான தன்மைகள் இருந்தாலும் ஒரு திரைக்கதையாசிரியர் புரிந்து கொள்ள வேண்டியது ஆர்க் பிளாட்டை எழுதும் உத்திகளை தான் என்கிறார் மெக்கீ. உண்மைதான். நாம் வாய்வழியாக சொல்லிவந்த கதைகளிலிருந்து பிரபலமான புராணங்கள் வரை எல்லாமே ஆர்க் பிளாட்கள் தான். புராணங்களில் கிளைக்கதைகள் உண்டு என்றாலும், அதன் மூலக்கதை ஒரு நாயகனைப் பற்றியது தான். இந்திய புராணங்கள் தொடங்கி உலக புராணங்கள் அனைத்திலும் இந்த ஒற்றுமையை கண்டுகொள்ளமுடியும். இதை தான் ஜோசப் கேம்பல் ‘ஹீரோ வித் தவுசண்ட் பேசஸ் புத்தகத்தில் ‘ஒற்றைத்தன்மை’ (Monomyth) என்கிறார்.

நாம் ஆதிகாலம் தொட்டு சொல்லி வரும் கதைகளை நம்மை அறியாமலேயே ஒரு ஊர், ஒரு ராஜா (அல்லது ஒரு நாயகன்) என்று தான் சொல்லி வந்திருக்கிறோம். எனவே நம் வாழ்வோடு தொடர்புடைய ஆர்க் பிளாட்டில் கதைகளை எழுதி பழகும் போது மற்றவைகள் தன்னாலேயே கைகூடும். 

மேலும், பிளாட்களை நாம் எப்படி வகைப்படுத்தினாலும், ஒரு சம்ப்ரதாயமான, வழக்கமான  பிளாட்டை  சிறு மாற்றம் செய்வதன் மூலம் முற்றிலும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பை உருவாக்க முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

ஒரு நாயகன் இருக்கிறான். அவன் உலகை நாம் அறிகிறோம். அவன் நிதானமான வாழ்வை ரசிக்கிறோம். திடிரென்று அவனுக்கு ஒரு பிரச்சனையை வருகிறது. (அதாவது வில்லன் அவன் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான்). இந்த குறுக்கீடு படம் ஆரம்பித்து ஒரு அரைமணி நேரத்தில் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதுபோன்ற அமைப்பில் நாம் ஏராளாமான கதைகளை கண்டிருக்கிறோம். ஆனால் அதே வில்லனை இடைவேளையின் போது அறிமுகப்படுத்தினாலோ, அல்லது படத்தின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்துவிட்டு, அதன் பின் முழுக்கமுழுக்க நாயகனின் கதையை சொல்லிவிட்டு, இடைவேளையின் போது வில்லன் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான் என்றால் வேறொரு பிளாட் கிட்டும். 

முன்பு சொன்னதுபோல ‘பிளாட்’ என்பது திரைக்கதையின் பாதை தான். எல்லா பாதைகளையும் ஆராய்ந்து பார்த்து தனக்கான பாதையை கண்டுகொள்வதே ஒரு நல்ல திரைக்கதையாசிரியரின் வேலை. எழுதிஎழுதி பழகும் போது இது சாத்தியமாகும்.

தொடரும்… 

ஓகே கண்மணி

மணிரத்னம் படங்களுக்கே உரித்தான டிரைன், மழை, கண்ணாடி, குடை, ஃபிரேம் இன் ஃபிரேம் உத்தி இத்தியாதி இத்தியாதிகளுக்கு குறைவில்லாமல் வந்திருக்கும் அழகான படமிது. மணிரத்னத்தின் மேக்கிங்கை விட்டுவிடுங்கள். மேக்கிங் தாண்டிய விஷயம் இந்தப் படத்தில் ஏராளம். Continue reading

சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல்

பரத்வாஜ் ரங்கன் கமலுடன் மேற்கொண்ட உரையாடல்களின் தமிழாக்கம் இது. தி ஹிந்துவில் வெளியான இந்த கட்டுரைகள் தற்போது கிழக்கு வெளியீடாக தமிழில் வந்துள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்…

சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல் -பரத்வாஜ் ரங்கன்
தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்
கிழக்கு பதிப்பகம்
விலை: Rs 60

Kamal_Aravindh_Sachidanandam

 

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யவும் 

தொடரும் சினிமா (free e-book)

கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின்  தொகுப்பு இது.

தொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம்
Cover Photography©  Premkumar SachidanandamThodarum_frontcover

கூகிள் ப்ளே ஸ்டோரில் free download  செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 

நேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

 

யாமிருக்க பயமே

ஒரு பேய் படமெனில் அது நம்மை பயமுறுத்த வேண்டும். சரி. அதுவே நம்மை வயிறுகுழுங்க சிரிக்கவும் வைத்தால்? அதுவே ஹாரர் காமெடி எனப்படும் genre. Scary movie series, ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான  Go Goa Gone போன்ற படங்களை  அதற்கு உதாரணமாக சொல்லலாம். நம்மூரில் ஹாரர் படங்களே குறைவு. இதில் எங்கிருந்து ஹாரர் காமெடி எடுப்பது !

ஆனால் அப்படி ஒரு படத்தை இப்போது எடுத்திருக்கிறார்கள். யாமிருக்க பயமே ஒரு ஹாரர் காமெடி படம்.

yaamirukka-bayamey-Movie-posters-01

ஆரம்ப காட்சிகளில் படம் எந்த லட்சியமும் இன்றி நகர்கிறது. மூல கதைக்குள் நுழைவதற்க்காக நிறைய காட்சிகளை வீணடித்திருக்கிறார்கள். ஆனால் கதைக்குள் நுழைந்ததும்,  படம் ஆரவாரமாக நகர்கிறது. முதல் பாதி எப்படி இருந்தாலும், இரண்டாவது பாதி எங்கேஜிங்காக இருந்தால் பார்வையாளர்களை கவரந்து விடலாம் என்பதற்கு இந்த படம் மற்றொரு உதாரணம்.

கதாநாயகன் கிரணின் தந்தை இறக்கும் போது ஒரு பெரிய வீட்டை அவனுக்கு  எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுகிறார். அவனும் நாயகியும் அதை புதுபித்து ஹோட்டலாக மாற்றுகின்றனர். அந்த ஹோட்டலில் மேனஜாராக வேலை சேர்கிறான் சரத். அவனுடைய தங்கையும் அந்த ஓட்டலில் சேர்ந்து கொள்கிறாள்.  ஹோட்டலில் தங்க வரும் ஒவ்வொருவரும் இறக்கின்றனர்.  பின் தான் தெரிய வருகிறது ஹோட்டலுக்குள் பேய் இருக்கிறதென்று.  பேயிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

மேனேஜராக நடித்திருக்கும் கருணாகரன் அதிக கவனத்தை ஈர்க்கிறார். நாயகன் கிருஷ்ணா சில படங்களில் தரமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். சில படங்களில், ஆர்யா போல், மெத்தனமாக நடிக்கிறார். இந்த படத்திலும் அப்படி தான். சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார், சில காட்சிகளில், சேட்டை பட ஆர்யா போல் ஏதோ பேச வேண்டுமே என்று வசனம் பேசி நடிக்கிறார். எனினும் காட்சிகள் பார்வையாளர்களை கட்டி போதும் வகையிலேயே இருக்கின்றன.

திகில் காட்சிகளை பார்த்தால் பயப்பட வேண்டுமே! ஆனால் சிரிப்பு வருகிறது. அந்த காட்சிகளில் நம்மை சிரிக்க வைக்கவே இயக்குனர் முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.  சிரித்து கொண்டே இருக்கும் போது, யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் பயமுறுத்துகிறார்கள். அதுவே படத்தின் வெற்றி. தமிழில் முதன்முதலில் ஹாரர் காமெடி படமொன்றை வெற்றிகரமாக எடுத்த இயக்குனரை பாராட்டிட வேண்டும். ஏராளமான இடங்களில் டைரக்டர் டச் இருக்கிறது.  அதற்கும் பாராட்டுக்கள்.

ஹாரர் படங்களில் மிக முக்கியமானதொரு விஷயம்  camera movement.  ஒரு காட்சியில், பேயை காண்பித்து பார்வையாளர்களை பயமடைய செய்ய வேண்டுமெனில், அந்த காட்சியில் கேமராவும், பார்வையாளர்களும், கதாபாத்திரங்களும் ஒரே நேரத்தில் பேயை பார்க்க வேண்டும். இந்த டைமிங் கொஞ்சம் பிசகினாலும் திகிலுணர்வு ஏற்படாது. ஆனால் இங்கே, சில இடங்களில் ஒளிப்பதிவு சறுக்குகிறது. ஆங்காங்கே படத்தொகுப்பும் சறுக்குகிறது. மேலும் இரட்டை அர்த்த வசனங்கள் பல இடங்களில் எடுபடவில்லை. S.J. சூர்யாவிற்கு பின்  இரட்டை அர்த்த வசனங்களை கட்சிதமாக பயன்படுத்தும் இயக்குனர்கள் நம் சினிமாவில் இல்லை. படம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கையில், பாடலை வைத்து படத்தை பிடித்து நிறுத்துகிறார்கள். பாடல்களின்றி படம் எடுக்கும் காலம் வந்துவிட்டது என்பதை இயக்குனர்கள் புரிந்து கொள்ளவேண்டும். படத்தில், இத்தகைய குறைகள் இருந்தாலும், நிறைகளே மேலோங்கி நிற்கின்றன.

படத்திற்கு கொஞ்சம் ஆங்கில, தாய்லாந்து, கொரிய படங்களின் இன்ஸ்பிரேஷன் இருக்கிறது.  conjuring பட தீமும் படத்தில் இழையோடுகிறது. எனினும் தமிழ் சினிமாவிற்கு இது புதிய வகை படம். ரசித்து பார்க்கலாம். பார்க்க வேண்டிய படம்.

கடல்

உதிரிப்பூக்கள், cape Fear, கடல்- இந்த மூன்று படத்த்திருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கதையில் அல்ல….

உதிரிப்பூக்கள் ‘விஜயன்’,  Cape fear ‘Robert De Niro’ ,  கடல் ‘அர்ஜுன்’-இந்த மூன்று கதாப்பாதிரமும் ஒரே மாதிரியாக வடிக்கப்பட்டவை. இறுதி வரை தான் பிடித்த பிடியில் உறுதியாக இருக்கும் கதாப்பாத்திரங்கள் இவை மூன்றும். கெட்டவனாக இருப்பதே எளிது என எண்ணிக் கொண்டு மற்றவர்களை கேலியாக பார்க்கும் கதாபாத்திரங்கள் இவை…

உதிரிப்பூகளில் விஜயன் தனித்து தெரிந்ததை போல் இதில் அர்ஜுன் தனித்து நிற்கிறார். அவருடன் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார் அரவிந்த்சாமி. வருங்கால தமிழ் சினிமாவிற்கு இரண்டு திறமையான நடிகர்கள் கிடைத்துவிட்டனர்…

kadal

நன்மையையும் தீமைக்கும் நடக்கும் போராட்டமே கடல். அதை ஒரு அழகான நாவல் வடிவத்தில் சொல்லி இருக்கிறார்கள். கதை நகரும் பாணி நாவல் வடிவத்தில் இருப்பதன் விளைவு, பலர் இதை Slow-Screenplay என்கிறார்கள்.

ஒரு கதை வேகமாக நகர்வது கதை மாந்தர்களை பொறுத்தே இருக்கிறது. இதில் வரும் கதை மாந்தர்கள் சாதரணமானவர்கள். அவர்களின் வாழ்க்கை சாதரனமானனவை. அவர்கள் வாழ்கையின் சாதரணமான நிகழ்வுகளே இப்படத்தின் திரைக்கதை. ஆனால் கதைக்கு தேவையுடைய காட்சிகள் மட்டுமே படத்தில் உண்டு, ஒவ்வொன்றும் Distinct-ஆன காட்சிகள். அதனால் இதை சோடை போன திரைக்கதை என்பது உசிதமன்று. திரைக்கதை கதைக்கானது, அதை இப்படத்தில் சரியாகவே செய்திருக்கின்றனர்.

ஒரே நெருடல், வழக்கமான தமிழ் படங்களை போல் கதாநாயகியை பாடலுக்காக மட்டும் பயன் படுத்திவிட்டனர். முக்கியமான கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கவேண்டிய கதாநாயகி கதாப்பாத்திரம், சற்று அழுத்தமற்று போய்விட்டது…

இது ஒரு வித்தியாசமான கதை இல்லைதான். ஆனால் இப்படத்தில் இழையோடும் உட்கருத்துக்களும், இதில் நடித்தவர்களின் திறமையான நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. அனைவரும் தங்கள் கதாப்பாத்திரத்தை உணர்ந்து செவ்வன நடித்திருக்கின்றனர்..

ஒருவன் நல்லவனாகே இருக்க முயன்று தோற்கிறான். ஒருவன் தீயவானாக் இருந்துக் கொண்டு தான் ஜெயித்து விட்டதாக எண்ணிக்கொள்கிறான். நல்லவனாக இருப்பதா, கெட்டவனாக இருப்பதா என குழம்பும் ஒருவன் காலம் ஏற்ப்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை நம்பிக்கையுடன் இறுகப் பற்றிக்கொண்டு பக்குவமடைகிறான். இங்கு நம்பிக்கையே உண்மையான கதாநாயகன். இதுவே கடல் படத்தின் சாராம்சம்..

Director touch ஒரு புறம் இருக்க Writer’s touch இந்த படத்தில் நிறைய உண்டு. கதாப்பாத்திரங்களை சிறப்பாக வார்த்தெடுத்த பெருமை, கதாசிரியரையே சேரும். காட்சியை கவித்துவமாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஒவ்வொரு கோணமும் ஒரு கலைப்படைப்பாக அமைந்துள்ளது. அதற்க்கு பலம் சேர்த்துள்ளது ஆரவாரமற்ற பின்னணி இசை. மணிரத்னத்தின் டச் இந்த படத்தில் இல்லை என்கிறார்கள். நாயகன், அக்னி நட்சத்திரம், பாம்பே போன்ற படங்களை எடுத்த மணிரத்னத்தை இதில் தேடினால் அவர் கிடைக்கமாட்டார். இந்த கதைக்கு அவர் தேவைப்படவில்லை. புதிய முயற்சிகளை செய்ய வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை, அதை அவர் செய்திருக்கிறார். இதில் இலக்கியத்தை திரையில் இலக்கியமாகவே கொணர மணி முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மற்றப்படி மணிரத்னம் படங்களுக்கே உரித்தான வண்ணங்கள், துண்டு வசனங்கள் இந்த படத்திலும் உண்டு. தன் மற்றப் படங்களை போல் இதிலும் தான் சொல்ல வந்ததை சுருங்க-விளங்க சொல்லியிருக்கிறார்.

கடல் ஒரு தரமான பொழுதுபோக்கு படம். மணிரத்தினம் என்ற கலைஞனின் மீது மிரட்சியும்  எதிர்ப்பார்ப்பும் வைத்துக் கொண்டு ‘கடல்’ படத்திற்கு போனால் நிச்சயம் கடல் ஆழமற்று தோன்றலாம்.  எந்த எதிர்பார்ப்புமின்றி பார்ப்போர்க்கு, கடல் ஒரு அழகான நாவலாக தோன்றும்.வெறும் ‘Racy Entertainer’  எதிர்பார்போர்க்கு பிடிப்பதற்கு வாய்ப்பில்லை..

மாற்றான்

சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும்.

சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை.

ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றி படம் எடுக்க முயற்ச்சித்தமைக்கும், (ஆனால் அந்த முயற்சி மன்னைகவ்வியுள்ளது.) அதற்காக இந்த ஹீரோ மெனக்கெட்டமைக்கும் பாராட்டுக்கள்…

ஆனால் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்ற கதை கருவிற்கும், இந்தக் கதை களத்திற்கும் சம்பந்தமேயில்லை. படத்தின் கதை என்னவோ typical தமிழ் டபுள் ஆக்சன் மசாலா படத்தின் கதைதான். ஆனால் டபுள் ஆக்சன் படமாக எடுத்தால் ‘கெத்’ இருக்காது என்பதற்காக, வித்தியாசமான முயற்சி செய்கிறேன் பேர்வழி என்று ஒரு கேலி சித்திரத்தை படைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் டபுள் ஆக்சன் கதைகள் பின்வரும் மாதிரிதான் இருக்கும். ஒரு ஹீரோ சாது, இன்னொருவர்  முரடன். வில்லனை எதிர்த்து முதலில் ஒருவர் போராடுவார், பின் தவிர்க்கமுடியாத ஒரு தருணத்தில் அந்த கடமை இரண்டாமானவரை வந்து சேரும். அந்த இரண்டு ஹீரோக்களையும் ஒன்றாக ஒரே உடம்பில் இணைத்து, ‘conjoined twins’ என்ற போர்வையில்  எடுக்கப்பட்ட படமே மாற்றான்.

அந்தக் காலத்தில் டபுள் ஆக்சன் படங்கள் எடுப்பதற்கென்றே ஒரு டெக்னிக் இருந்தது. கேமராவை நடுவில் வைத்து, வலது புறத்தில் ஹீரோவை நடிக்க வைத்து படம்பிடித்து , பின் அதே ஹீரோவை இடது புறத்தில் நடிக்க வைத்து படம்பிடித்து இறுதியில் இரண்டையும் இணைப்பார்கள். அதனால்தான் டபுள் ஆக்சன் கதாப்பாத்திரங்கள் தோன்றும் காட்சிகளில், இருவருக்கும் நடுவில் ஒரு தூணோ, இல்லை ஏதோ ஒரு symmetric பொருளோ இருக்கும். அந்த symmetric பொருளை axis-ஆக வைத்துக் கொண்டு, ஒரே ஹீரோ இரண்டு புறத்திலும் நடித்திருப்பார். என்ன ஆனாலும் கதாப்பாத்திரங்கள் அந்த axis-ஐ தாண்டக் கூடாது..

பின் இந்தக் கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து, பல டெக்னாலஜிகளை பயன்படுத்தி, மிகவும் திறமையாக எடுக்கப்பெற்ற டபுள் அக்சன் படமே ‘ஜீன்ஸ்’. இரட்டையர்களை படம் முழுக்க எந்த ஒரு பிசிரும் இல்லாமல் உலவ விட்டிருப்பார் ஷங்கர். அதன் பின் நிறைய டபுள் அக்சன், ட்ரிபிள் அக்சன் தொடங்கி பத்து அக்சன் வரை படங்கள் எடுத்தாகி விட்டது. இதை இன்னும் ஒரு படி மேலே போய் ‘conjoined twins’ படம் எடுக்கலாம் என்று சிந்தித்துள்ளனர். ஆனால் அதை ஒழுங்காக எடுக்கவில்லை…

பல பொய்களை திரும்ப சொல்லி உண்மையாக முயற்சிக்கும், தமிழ் சினிமாவில் ‘முதல் முயற்சி முதல் முயற்சி’ என்று அரைக் கூவல் விடுத்து படங்களை promote செய்வது ஒரு தந்திரம்.மும்பை எக்ஸ்பிரஸ் ‘முதல் high definition படம்’ என்று பிரகடனம் செய்தார்கள். ஆனால் அதற்க்கு முன்பே ‘வானம் வசப்படும்’ என்ற படம் high definition-யில் எடுக்கப்பட்டுவிட்டது.

அதுபோல் தான் இதுவும். இந்தியாவின் முதல் ‘conjoined twins’ படம் என்றார்கள். ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு ‘இருவன்’ என்ற ஒரு படம் வெளிவந்தது. அதுவும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றியக் கதை. பின், ‘performance capture’  டெக்னிக் பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் இந்தியப் படம் ‘மாற்றான்’ என்றார்கள். ஆனால் இதில் பரிதாபத்திற்குரிய விடயம் என்னவெனில், அந்த  ‘Performance capture’  போன்ற எந்த டெக்னிக்கும் படத்திற்கு  கைகொடுக்கவில்லை என்பதுதான். இரட்டையர்கள் வரும் காட்சிகளில் படத்தின் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது. ஏதோ ஒரு ஹீரோ இன்னொரு பொம்மை ஹீரோவை தூக்கிக் கொண்டு நடப்பது போல் பல இடங்களில் தோன்றும் .இது ஒரு லோ பட்ஜெட் படமென்றால் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் பல கோடிகளை இறைத்து குப்பைகளை எடுக்கும் போது தான் யோசிக்க வேண்டியிருக்கிறது, இன்னும் எத்தனை நாள் தான் ஆடியன்ஸை மாக்கான் ஆக்குவார்கள் என்று…

ஒரு ஆறுதல், இவர்கள் எங்கேயும் science fiction படம், medical fiction படம் என்று பிரகடனப் படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் கேலிக் கூத்தாகி இருக்கும்.

‘Conjoined twins’  எப்பவும் பலவீனமாகத்தான் இருப்பார்கள், அவர்கள் எப்படி பறந்து பறந்து சண்டைப் போடுகிறார்கள் என்பன போன்ற ஆராய்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு இந்த படம் ஒன்றும் சிறந்த படமில்லை. ஆனால் இந்தப் படத்தின் பின்னணியை மட்டும் பார்ப்போம்…

தமிழ் படைப்புலகில் மட்டுமே இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளி குறைய மறுக்கிறது. இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வந்தால் இலக்கியத்தை மறந்துவிடுகிறார்கள். இதற்கிடையில் பாக்கெட் நாவலாசிரியர்கள் பாக்கெட் நாவல்களைப்போல் மூன்றாம் தரத்தில் சினிமாவிற்கு கதை எழுதுகிறார்கள்.
‘சுபா’ என்ற இந்த இரட்டை எழுத்தாளர்கள் திறமைசாலிகளே. இந்தப் படத்திலும் அவர்களின் வசனம் தான் முதல் பகுதிக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஆனால் எந்தப் படைப்பாளியாக இருந்தாலும் தன் அறிவை update செய்துக் கொள்ள வேண்டும். “Learn, Unlearn, Update “  என்பது மிக முக்கியம்.

பாக்கெட் நாவல்கள் எழுதுபவர்களிலேயே தன் அறிவை அப்டேட் செய்து வைத்திருப்பவர் இந்திரா சௌந்தரராஜன் மட்டுமே. (அவர் வெறும் பாக்கெட் நாவலாசிரியர் அன்று. திறமையான எழுத்தாளர். அதற்கு அவரின்  படைப்புகள் சான்று. எனினும் பாக்கெட் நாவல் உலகத்திலேயே நின்றுவிட்டார்) அந்நியனில் சொல்லப்பட schizophrenia-வை அவர் தொன்னூறுகளிலேயே ‘விடாது கருப்பு’ என்னும் கதையில் சொல்லிவிட்டார். அதில் கருப்பு சாமி தண்டனை கொடுக்கும், அந்நியனில் அந்நியன் தண்டனைக் கொடுப்பான் .அவ்வளவுதான் தான் வித்தியாசம்.

ஆனால் மற்ற பாக்கெட் நாவலாசிரியர்கள அனைவரும் புருடா விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். ‘மூடாத கல்லறை’, ‘சேராத நிலவு’ ‘மூன்றாவது குறுக்கு தெரு’ என்பன போன்ற பேர்களில் ஏதேதோ எழுதிக் குவிக்கிறார்கள். எனக்கு பிடித்த ராஜேஷ் குமார், எழுதிய ஒரு கதையில் , ஒரு கதாநாயகன் பாலைவனத்தில் தரை இறங்கிய ஒரு விமானத்தினுள் தனியாக சென்று டைம் பாம்பை deactivate செய்வார். அதுபோன்ற மூன்றாம் தரமான புருடாக்கள் ‘மாற்றான்’ படத்தில் விடப்பட்டுள்ளது. Genetic Research, Ionization agent இது,அது என்று கதைக்கு சம்பதமில்லாமல் ஏதேதோ வார்த்தைகளை நுழைத்து (எல்லாம் எட்டாம் கிளாஸ் பாட புத்தகத்திலிருந்து எடுத்த வார்த்தைகள்) படம் காட்டியுள்ளனர். பாக்கெட் நாவல்களில் வரும் மொக்கை ட்விஸ்ட்களை படத்தில் வைத்து மொக்கை வாங்கியுள்ளனர்.

சுவாரசியமாக பாக்கெட் நாவல் எழுதிடலாம். ஆனால் சினிமாவில் எழுதும்போது சினிமாவிற்க்கான தரத்தை மெயின்டையின் செய்ய வேண்டும்.திருப்பாச்சியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. கில்லியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. ஆனால் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த வித்தியாசம்தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.

பதினைந்து ரூபாய் பாக்கெட் நாவல் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு சில ஆயிரம் ரூபாயே ராயல்ட்டியாக கிடைக்கும். அவர் குறைந்த தர படைப்புகளை படைப்பதை தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல கோடி ருபாய் சம்பளம் வாங்கும் சினிமா இயக்குனர்கள் பாக்கெட் நாவலாசிரியர்கள் போல் மூன்றாம் தர படைப்பை படைப்பதுதான் ஆதங்கம் அளிக்கிறது…

இந்தப் பின்னணியில் தான் இந்தக் கதையை கவினிக்க வேண்டியிருக்கிறது. ஒட்டி பிறந்த கதாநாயகர்களின் தந்தை ஒரு விஞ்ஞானி. அவர் ‘எனெர்ஜியான்’ என்றொரு எனெர்ஜி டிரிங் பவுடரை கண்டுபிடிக்கிறார். அதை உண்ணும் குழந்தைகள் பெரும் திறமைசாலிகளாக வருவார்கள் என்று அவர் பிரகடனப் படுத்தி விற்று பெரும் தொழிலதிபராகிறார். அந்நிலையில் அப்பவுடர் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்துக் கொள்கின்றனர் கதாநாயகர்கள். பின் நடப்பதே படத்தின் கதை. முதல்வனின் வருவது போல் ஒரு சேற்று சண்டை, ஜீன்ஸில் இரட்டையர்கள் ஐஸ்வர்யாராயிடம் செய்யும் காமெடிகளை போல் சில காமெடிகள், அந்நியனில் வரும் கிருமி போஜனம் போல் ஒரு காட்சியில் எலி போஜனம், இந்தியனில் சொந்த மகனையே எதிர்க்கும் தந்தைப்போல் இதில் உல்டாக் காட்சி என பல ஷங்கர் படங்களை மிக்ஸ் செய்து ‘மாற்றான்’ என்ற பெயரில் கொணர்ந்துள்ளனர். இந்த மொக்கை மசாலா படத்திற்கு துணையாக பல மொக்கை scientific term-களை உபயோகப் படுத்தி மொக்கை வாங்கியுள்ளனர்.

கதாநாயகர்களின் தந்தை  உக்ரைனில் Genetically modified மாடுகளை உருவாக்கி, ஆராய்ச்சி செய்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் குடித்தால் ‘extraordinary power’ வருவதாக கண்டுக்கொள்கிறார். நிற்க.

அவரே தமிழகத்தில் தன் பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உக்ரைனிலிருந்து வரவழைக்கப்பட்ட தீவனத்தைக் கொடுத்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் கொண்டு ‘எனெர்ஜியான்’ பவுடரை உருவாகுகிறார்.

ஒரு காட்சியில் ‘Genetic Engineering’  பற்றி பேசுகிறார்கள், இன்னொரு காட்சியில் சம்மந்தமில்லாமல் ஏதோ மாட்டுத்தீவனம் பற்றி பேசுகிறார்கள். அடுத்தக் காட்சியில்
‘Advanced Genetic Engineering’  பேசுவதாக நினைத்துக் கொண்டு பத்து பேரின் மரபணுவை கொண்டு ஒரு உயிரை உருவாக்குவதைப் பற்றி விவரிக்கிறார்கள். படம் முழுக்க இப்படி பல அறிவியல் பெயர்களை அரை குறையாக உதிர்த்து தங்களைத் தாங்களே கேலி செய்துக் கொண்டதோடில்லாமல், இறுதியில் திரு.நரேந்திர மோடியை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு சுரேந்திர லோடி என்ற ஏதோ ஒரு பெயரில் குஜராத் முதல் அமைச்சர் என்ற கதாப்பாத்திரத்தை தேவையில்லாமல் காட்டுகிறார்கள். இதுபோன்று தேவை இல்லாக் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு.

மேலும் இதில் ஒரு காட்சியில் குஜராத் கிராமவாசிகள் ஹிந்தி பேசுகிறார்கள்.குஜராத் கிராமங்களில் வெறும் குஜராத்தி தான் பேசுவார்கள். ஹிந்தி அன்று. ஹிந்தியோ, குஜராத்தியோ Subtitles போட போவதில்லை என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டதால்தான் என்னவோ இதில் குஜராத்தியர்கள் ஹிந்தி பேசுவது போல் எடுத்துவிட்டார்கள் போலும்.இதையெல்லாம் தாங்கிக் கொள்ளலாம். குஜராத்தியர்களை சித்தரித்திருக்கும் விதம்தான் மிகவும் செயற்கையாக உள்ளது..

சிறு வயதில் கிராப்ட் நோட்டில் எல்லாரும் ஐம்பது பைசா கொடுத்து போஸ்டர் வாங்கி ஒட்டி இருப்போம். பழங்கள், விலங்குகள் என்று வகை வகையான போஸ்டர்கள். அதில் இந்திய மாநில மக்கள் என்று, இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் அவர்களின் traditional உடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரையும் ஒட்டியிருப்போம். அதில் ராஜஸ்தானியர்கள் என்றால் தலையில் தலைபாகை அணிந்திருப்பார்கள். அதை அப்படியே காப்பி அடித்து இதில் பயன் படுத்தி விட்டார்களா என்று எண்ணும் அளவிற்கு அந்த ராஜஸ்தானிய உடை அலங்காரத்தை இதில் குஜராத்தியர்களுக்கு செய்திருப்பார்கள். குஜராத்தில் எந்த கிராமத்திலும் அவ்வாறு உடை அணிந்திருக்க மாட்டார்கள்.

மொத்தத்தில் மசாலா படத்தை மசாலாவாக எடுப்பதை விடுத்து, பல புருடாக்களை விட்டு ஒரு கேலி சித்திரத்த்தை உருவாக்கிவிட்டார்கள்.

திறமைசாலிகள் பலர் வாய்ப்பிற்காக போரடிக் கொண்டிருக்க, பல கோடிகள் செலவு செய்து பில்லா 2 , மாற்றான் போன்று மொக்கை படங்களை மீண்டும் மீண்டும் எடுப்பதுதான் வருத்தமளிக்கிறது. இதற்கிடையில் அடுத்து வரப்போகும் அந்த படத்தின் ட்ரைலரே வயிற்றில் புலியை கரைக்கிறது….

சூரியா திறமையான நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் இந்த மாதிரி படங்கள் நடிப்பதுதான் முகம் சுழிக்க வைக்கிறது. திறமையான ஹீரோக்கள் இயக்குனர்களால் வீணடிக்கப் படுகின்றனரா, இல்லை அவர்களே தங்களை வீணடித்துக் கொண்டு இயக்குனரையும் வீணடித்து விடுகின்றனரா என்பது  தமிழ் சினிமாவை பொறுத்த வரையில், ‘சிதம்பர ரகசியம்’. இவரின் அடுத்தப் படமாவது முழுவேக்காடக வரும் என்று நம்புவோம்..

முகமூடி

உலகில் எத்தனையோ சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. எல்லா சூப்பர் ஹீரோக்களும் ஏதோ ஒரு வகையில் extraordinary power கொண்டிருப்பார்கள். அவர்கள் extraordinary league-ஐ சார்ந்தவர்களாகவோ, வேற்று கிரகத்தை சார்ந்தவர்களாகவோ, நிழல் உலகத்தை சார்ந்தவர்களாகவோ, மியூட்டண்ட்களாகவோ (mutants) இருப்பார்கள்.Iron Man மட்டும் சற்று வித்யாசமானவர்.

ஆனால் மிக சாதாரண மனிதன் ஒருவன் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியின்றி , தன் சொந்த உந்துதலின்  அடிப்படையில் மிகவும் விளையாட்டாக சூப்பர் ஹீரோவாக உருவெடுப்பதுபோன்ற கதையை இதுவரை யாரும் சரிவர எடுத்துவிடவில்லை. அதுவும் தமிழில் யாரும் முயற்சித்ததுக்கூட இல்லை.  ‘கந்தசாமி’ படம் ஒருவகையில் அதுபோன்ற கதையே எனினும் அது சூப்பர் ஹீரோ படமாக பிரகடனப்படுத்தப் படவில்லை. ‘முகமூடி’ திரைப்படம் தொடக்கம் முதலே சூப்பர் ஹீரோ படமாக பிரகடனப்படுத்தப்பட்டவொன்று என்பதை நினைவில் கொள்வோம்…

பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு ‘முகமூடி’ படத்தை  ஆராய்ந்தால் ஆயிரம் குறை கண்டுபிடித்து விட முடியும். ஆனால் அது புது முயற்சியை எடுத்திருக்கக் கூடிய ஒரு படைப்பாளியை அவமதிக்கும் செயல். எது எவ்வாறெனினும்  இந்த படத்தை பாராட்டிட சில முக்கிய காரணங்கள் உண்டு.

உலகிலேயே முதல் ‘non-white skinned’ சூப்பர் ஹீரோ  முகமூடி தான். முகமூடி மிக சாதாரணமானவன். ஒரு சராசரி மனிதன். எந்த ஒரு அமானுஷ்ய சக்தியும் பெறாதவன். சண்டை காட்சிகளில் போராடி சண்டை போடுவது தொடங்கி, மாடிவிட்டு மாடி தாண்டும் போது மிகவும் கடினப் பட்டு தாண்டுவது வரை அனைத்து காட்சிகளும் அவன் ஒரு சாதாரணமானவன் என்பதை நினைவு படுத்துகிறது.

இது மிகவும் சாதாரணமான ஒரு கதை. ட்விஸ்ட் இல்லாத ஒரு திரைக்கதை. இதில் இரண்டாம் பாதி சற்று ஸ்லோவாக நகர்ந்தாலும், இது மிகவும் நாகரிகமான திரைக்கதை. காரணம் இந்த கதையை வேறு எவ்வாறும் நகர்த்த முடியாது. ஒரு லோக்கல் நாயகன் ‘சூப்பர் ஹீரோ’ ஆகிறார். அவர் மக்களுக்கு நல்லது செய்கிறார். இது ஒரு typical தமிழ் படத்தின் திரைக்கதையே. (அந்த காலத்தில் வந்த S.A Chandrasekar அவர்களின் படக் கதைகளை விட சாதாரணமான கதையே ‘முகமூடி’ ) ஆனால் ‘larger than life hero’ ‘robin hood’ போன்ற கதாபாத்திரங்களை அமைத்து இந்த படத்தை இயக்கி இருந்தால், இது ஒரு மிகமிக சராசரி படம் என்று கூறி ஒதுக்கி விடலாம். ஆனால் மிகவும் தைரியமாக ஒரு ‘super hero’  கதப்பாத்திரத்தை தமிழ் திரையுலகில் முதன்முதலாக உலவவிட்டதற்க்கு முகமூடி குழுவினை நாம் பாராட்டிட வேண்டும். இது வரை தமிழில் உள்ள எந்த ஜாம்பவானும் சூப்பர் ஹீரோ கதையை எடுத்திடவில்லை. சரித்திரக் கதைகளும், சூப்பர் ஹீரோ கதைகளும், Pirates கதைகளும் சமகால தமிழ் சினிமாவில்  எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. பொன்னியின் செல்வனை படமாக எடுக்க கடந்த ஐம்பது வருடமாக முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சாண்டில்யன் அவர்கள் கதைகளையே திரைக்கதை போன்றுதான் எழுதியிருப்பார். அதையும் நாம் படமாக எடுக்க முயற்சித்ததில்லை. நிற்க.

இந்த சூழ்நிலையில்தான் ஒரு படைப்பாளி ஒரு புது முயற்சியை செய்கிறான். அந்த முயற்சியை பாராட்டுவதும் விமர்சிப்பதும் பார்வையாளர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் ஒரு படைப்பை புறங்கையால் ஒதுக்கித் தள்ளுவதற்க்குமுன் அதற்க்கான நியாயமான காரணங்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறு வைக்க இயலாத பட்சத்தில் நாம்  ஓரவஞ்சனை செய்கிறோம்…

இந்தியாவில் உள்ள வெகு சில finest ஸ்கிரிப்ட் ரைட்டர்களில் மிஷ்கினும் ஒருவர். அஞ்சாதே, நந்தலாலா போன்ற படங்கள் அதற்க்கு சான்று. (நந்தலாலா சுட்ட படமே எனினும் அதன் மூலத்தை விட ஸ்கிரிப்ட் அருமையாகவே எழுதப் பட்டிருக்கும் ). அந்த படங்களையே நாம் சரி வர ஆதரிக்கவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் இந்த படத்தின் ஸ்கிரிப்டை, ஒரு படைப்பாளியின் புது முயற்சியை  ஓரவஞ்சனையோடு ஆராய்ச்சி  செய்திடக் கூடாது.

இந்த படத்தை எடுத்தற்காக, இந்த படக்குழுவை  நிறைய பேர் தூற்றுகிறார்கள். ஒருவன் திருவிழாக்கூட்டத்தில் புது சட்டையை அணிந்துக் கொண்டு வந்து அனைவரிடமும் காட்டுகிறான். அது பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்று சொல்கிற உரிமை மட்டுமே அனைவருக்கும் உண்டு. அதனை கிழித்தெரியும் உரிமை யாருக்குமில்லை.அதுபோன்று இந்த படத்தினை தகுதியற்று எடுத்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டும் உரிமை யாருக்குமில்லை.

’முகமூடி’ ‘சூப்பர் ஹீரோ’ மாதிரியே இல்லை என்று நாம் எவ்வாறு கூற முடியும்! ‘சூப்பர் ஹீரோவிற்க்கென்ற குணாதிசியங்களை வரையறுத்தது யார்? நம் புராணங்களில் வரும் ‘அனுமான்’ கதாப்பாத்திராமே ஒரு வகையான சூப்பர் ஹீரோ தானே. சிறு வயதில் நாம் அனைவரும் ‘பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயதர் ஓம் கர்ணா சாஸ்த்ரி’ என்கிற ‘சக்திமான்’ என்ற ஒரு கதாபாத்திரத்தை கண்டு கைத்தடி இருக்கிறோம். அந்த கதைகள் எல்லாம் சராசரியாக தானே இருக்கும்.அவர்கள் ‘அசாதாரணமான மனிதர்கள். ‘முகமூடி’ சாதாரணமானவன். அவ்வளவுதான்.

‘சூப்பர் ஹீரோ’ என்றால் இப்படிதான் இருப்பார் என்ற ஒரு நிழல் அந்நியப்படங்களின் மூலம் நம் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதனால் நியாயமாக இருந்தாலும் லோக்கலாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக  ‘முகமூடி’ கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ள பெரும்பாலானோர் மறுகின்றனர். ‘சூப்பர் ஹீரோ’ கனவு ஒவ்வாருத்தருக்குள்ளும் இருக்கும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஃபேண்ட்டசியின் விளைவே சூப்பர் ஹீரோக்கள். ஒவ்வொருவரும் சிறு வயதில்  அலாவுதின் அற்புத விளக்கைப் பற்றி கனவு கண்டிருப்பார்கள். தான் ஸ்பைடர் மேனாக உருவெடுத்தால் எப்படி இருக்கும் என்றும் எண்ணிப் பார்த்திருப்பார்கள். அவ்வாறான கதாப்பாத்திரங்கள் தமிழ் பேசினால் எப்படி இருக்கும் என்று கனவு கண்டு  ஒரு படைப்பாளி இங்குபடமாக எடுத்திருக்கிறார். இதில் அவர் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியையும் நாடவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. ஏனெனில் முகமூடி மிகவும் சாதாரணமானவன், உங்களையும் என்னையும் போன்று..

ஒரு லோக்கல் சூப்பர் ஹீரோ லோக்கலாக தான் உருவாகமுடியும். அதனால்தான்  சூப்பர் ஹீரோவிற்க்கு ஆடை தைக்கும் காட்சிகள் முதல், அவர் செய்யும் சாகசங்கள் வரை அனைத்தும் சாதாரணமாக அமைந்துள்ளது. தமிழ் சூழலில், மக்களுக்கு ஒரு கதாப்பாத்திரம் நல்லது செய்கிறான் எனில், குழந்தைகளை காப்பாற்றுகிறான், கொள்ளையில் இருந்து வங்கியை காப்பாற்றுகிறான் என்றுதான் திரைக்கதை அமைக்க முடியும்.மிகவும் advanced படமாக எடுக்கவேண்டும் என்றால் ‘Bio-war’ ‘nuclear weapon’ போன்ற விஷயங்களிலிருந்து ‘சூப்பர் ஹீரோ’ மக்களை காப்பற்றுகிறான் என்று கதை எழுதலாம். ஆனால் அவ்வாறான படங்களை இங்கு எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள். திரு.ஜனநாதன் இயக்கிய ‘ஈ’ திரைப்படம் ‘Bio-war’ பற்றி பேசிய முதல் தமிழ் படம். அந்த படத்தினை  ஏன் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை!

அதனால் முகமூடியின் காட்சிகள் ஆங்கில படத்தில் வரும் சராசரி காட்சிகள் என்று விமர்சிப்பவர்கள் ஒரு விடயத்தை நினைவில் கொள்ளவேண்டும். ‘முகமூடி’ என்பது சிறு முயற்சியே. பெரிய சாதனைகள் அனைத்தும் சிறு முயற்சியில் இருந்தே தோன்றுகிறது என்பதால் ‘முகமூடி’ என்ற சாதாரணமான ‘சூப்பர் ஹீரோவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவன் வருங்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்திடுவான். (Mugamoodi is an ordinary guy with extraordinary potential.) இந்த படத்திற்க்கு செய்ய வேண்டிய நியாயத்தை செய்தால் அடுத்தடுத்து பிரமாண்டமான, இன்னும் சிறந்த பாகங்களை எதிர்பார்க்கலாம். அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். தமிழின் முதல் சூப்பர் ஹீரோவாகிய முகமூடியை ஒதுக்கித் தள்ளினால், வேறு யாரும் சூப்பர் ஹீரோ படம் எடுக்க முயற்ச்சிக்க மாட்டார்கள்…

ஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்துள்ளதை திரையில் உணரலாம்.இந்த படத்தின் கதாநாயகன் ஜீவா,தன் கதாப்பாத்திரத்திற்க்கு மிகவும் நியாயம் செய்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நகர்கிறது. அதனை அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளரை பாராட்டிட வேண்டும். காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர், தன் அருமையான பின்னணி இசையின் மூலம். ஆனால் இசை சில இடங்களில் Hans zimmer-ஐ ஞாபகப்படுத்துகிறது. (எப்படி sci-fi கதைகளில் Issac Asimov-வின் தாக்கத்தை தவிர்க்க முடியாதோ, அதே போன்று சமகாலத்தில் பிரமாண்டமான இசையில் Hans zimmer-யின் தாக்கத்தை தவிர்க்க இயலாது)

உலகில் தலை சிறந்த இயக்குனர்கள் பலர் இருந்தாலும், “creative Directors” என்று சொல்லக் கூடியவர்கள் வெகுசிலரே. Kurosawa, Coppola போன்று. இந்தியாவில் அனுராக் கஷ்யப், தியாகராஜ குமாரராஜா, மிஷ்கின் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த creative Directors. அவர்கள் தனக்கென்று ஒரு ‘classic style’ வைத்துள்ளனர். மிஷ்கின் வெறும் காலை மட்டும் காட்டுகிறார் என்கிறார்கள். ஆனால் அவர் படங்களில் கால் ஆயிரம் கதை சொல்கிறது. நந்தலாலாவில் எங்கும் பயணிக்கும் கால்களை அதிகம் காட்டியிருப்பார், அது பயணம் சம்பத்தப் பட்ட படம் என்பதால்.

அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற படங்களின் முதல் காட்சிகள் நினைவில் இருக்கலாம். ஒரு இயக்குனர்  ஒரு காட்சியை எப்படி வேண்டுமானாலும் எடுத்திட முடியும். ஆனால் அதில் அவர் காட்டும் creativity தான் அவரை தனித்து நிற்கச்செய்கிறது. அதற்க்கு அஞ்சாதே படத்தின் முதல் காட்சி ஒரு தலைசிறந்த உதாரணம். அது போல இந்த படத்திலும் அந்த ‘டைரக்டர் டச்’ இருக்கிறது. குறிப்பாக கதாநாயகன் முகமூடியாக உருவெடுக்கும் (transition) அந்த ஒரு காட்சி, a perfect director touch. மேலும் சில காட்சிகள் Kurosawa way of making-ஐ நினைவுப்படுத்தும். ஒரு சூப்பர் ஹீரோ கதையை Akira kurosawa ஸ்டைலில் பார்க்க விரும்புபவர்கள் முகமூடியை பார்க்கலாம். (திரு. மிஷ்கின் அவர்களின் படங்களில்  குரோசாவாவின் தாக்கம் நிறைய  உண்டு. நந்தலாலாவில் அவரது நடிப்பு குரோசாவாவின் ஆஸ்தான நடிகரான ஜப்பானின் Toshiro Mifune அவர்களின் நடிப்பை பல இடங்களில் நினைவுப்படுத்தும் )

இந்தபடத்தின் ஸ்கிரிப்டை ஒரு புறம் குறைக் கூறுகிறார்கள். தமிழ் படைப்புலகில் கதைகளுக்கு பஞ்சமில்லை. இங்கு ஆயிரக் கணக்கான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இலக்கியத்திற்க்கும் திரைப்படத்திற்க்கும் உள்ள இடைவெளி இன்னும் குறைந்தபாடில்லை. ‘யவன ராணி’ கதையில் சாண்டில்யன் நிறைய வித்தைகள் காட்டியிருப்பார். ஒரே நாவலில், கடல் கொள்ளையர்கள், கடற் போர். நிலப் போர், தத்துவங்கள் என நிறைய விவரித்திருப்பார். ஆனால் அதனை இதுவரை யாரும் படமாக எடுத்திடவில்லை. காரணம் அதனை அவ்வளவு எளிதாக ‘execute’ செய்திட இயலாது. அருமையான கதைகளை பக்கம் பக்கமாக எழுதிடலாம். ஆனால் அதனை ‘execute’ செய்வது தான் மிக பெரிய பணி. ‘execution’ வெறும் திறமை சார்ந்ததன்று.  சூழலை சார்ந்ததுமாகும். ‘ஸ்பீட்’ போன்று ஒரு ஸ்கிரிப்டை இங்கு எழுதிடமுடியும், ஆனால் எந்த ரோட்டில் பேருந்தை ஓட விடுவது?

ஸ்பைடர் மேன் டிரைனை ‘web’ விட்டு தடுப்பது போன்ற காட்சியை இங்கு எப்படி அமைத்திட முடியும்?

சூப்பர் மேன் மாடி விட்டு மாடி தாண்டுகிறார் என்றால், மவுண்ட் ரோட்டில் தானே எடுக்க முடியும்? அப்போதும்,கேலி செய்பவர்கள் கேலி செய்வார்களே?

பேட் மேன் வைத்துருப்பது போன்ற வாகனங்களின் ‘prototype’ செய்வது கூட இங்கு கடினமாயிற்றே ?

இவை அனைத்திற்க்கும் ‘செட் போட்டால் எவ்வளவு கோடிகள் இறைக்க வேண்டும். கிராபிக்ஸ் காட்சிகளிலும் நிறைய தமிழ் படங்கள் மொக்கை வாங்கியுள்ளதே. அவ்வாறெனில் உலக தரத்திற்க்கான கிராபிக்ஸ் எவ்வாறு சாத்தியம்?

எல்லா ஸ்க்ரிப்ட்களையும் execute செய்திட முடியாது.. இந்த சூழ்நிலையில் execute பன்னக்கூடிய அளவிற்க்கு ஒரு சிம்பிலான சூப்பர் ஹீரோ ஸ்கிரிப்டை எழுதி, அதை மிகவும் நாகரிகமான முறையில் படமாக்கிய ஒரு குழுவை, பல புது முயற்சிகளுக்கு விதை விதைத்துள்ள ஒரு குழுவை  தவறாக விமர்சிப்பதோ, அவர்களின் படைப்பை புறக்கணிப்பதோ எற்ப்புடைய செயலாகாது.

படத்தோட கிளைமாக்ஸ் பற்றி நிறைய விமர்சனம் உண்டு. சமீபத்தில் வந்த ‘மதுபானக்கடை’ படமும் திடீர்னு முடிந்திடும். ஆனால்  அந்தப் படத்தை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அது ஒரு தலை சிறந்த முயற்சி. அது ஒரு off-beat படம். ஆங்கிலத்தில்  சிறைச்சாலையினுள் நடக்கும் கதைகள், சூப்பர் மார்க்கெட்டில் நடக்கும் கதைகள் என நிறைய படங்கள் வந்திருக்கு. தமிழ்ல TASMAC-உள்ள நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட அந்த படத்தை எத்தனைப் பேர் ஆதரித்தோம் ? விமர்சிப்பவர்கள் எந்த முயற்சி செய்தாலும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள்….

அன்பேசிவம் சுட்டபடமே எனினும் ஒரு தலை சிறந்த தமிழ் படம். ஆனால் அது  ஓடவில்லை . ஆரண்ய காண்டம், தென் மேற்கு பருவக் காற்று, வாகை சூடவா போன்ற நிறைய நல்லப் படங்கள் இங்கு ஓடவில்லை. ஆனால் அந்த அளவுக்கு முகமூடி தலை சிறந்த படமென்று  சொல்லவில்லை. ‘முகமூடி’ ஒரு சாதாரணமான படம்.ஆனால்      அசாதாரணமான முயற்சி. அந்த முயற்சியைதான் நாம் பாராட்டிட வேண்டும்.

ஆங்கிலப் படங்கள் அளவிற்க்கு technology இந்த படத்தில்  உபயோக படுத்தப் படவில்லை என்று விமர்சிக்கிறார்கள். அதற்கான அவசியம் இக்கதைக்கு இல்லை. ‘டார்க் நைட் ரைசஸ்’ போன்ற படங்களோடு ‘முகமூடி’ படத்தினை ஒப்பிட்டு பார்ப்பது  மிகவும் தவறு. நோலான் படங்கள் மாதிரி இந்தப் படங்கள் இருக்காது. சமகால உலக சினிமாவில் நோலான் சிம்மசொப்பனம், பல சுயாதீனப் படைப்பாளிகளுக்கு மனதளவில் மானசீக குருவாக  அவர் விளங்குறார் என்பதில் எந்த ஐய்யப்பாடுமில்லை. கடந்த பதினைந்து வருடத்தில் அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. ஆனால் நோலான் போன்ற படைப்பாளிகள் இயங்கும் சூழல் வேறு. நம் படைப்பாளிகள் இயங்கும் சூழல் வேறு. நம்முடைய சூழலை சார்ந்துதான் இந்தப் படத்தை விவாதிக்கணும். தமிழ் சூழலில் முகமூடி ஒரு மிகப்பெரிய முயற்சி..

இப்போது இருக்கும் தமிழ் சூழலில் ‘முகமூடி’ மாதிரிதான் ஒரு தமிழ் சூப்பர் ஹீரோ படம் எடுக்க முடியும். முகமூடி ஒரு நாகரிகமான படம். பாராட்டுதளுக்குரிய முயற்சி. அதனால் எந்த ஒரு பெரிய எதிர்பார்புமின்றி, மூளையில் எந்த ஒரு நிழல் உருவத்தின் தாக்கமுமின்றி, தமிழ் சூப்பர் ஹீரோ எப்படி இருப்பான் என்ற  ஆசையோடு , பாட்டி மடியில் படுத்து கதை கேட்கும் குழந்தைப் போல ‘முகமூடி’ படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் பிடிக்கும். இதில் இருக்கும் உழைப்பு புரியும்..

அதை விடுத்து, நாங்க Dark Knight Rises மாதிரி இருந்தாதான் சூப்பர் ஹீரோ படமென்று ஏற்றுக் கொள்வோம் என்று சொல்ற எல்லாரும் கொஞ்சம் காத்திருந்தால், foreign technology implement பண்ணி இங்கு யாராவது டார்க் நைட் ரைசஸ விட நல்ல படமே எடுப்பாங்க. முன்னாடி சொன்ன மாதிரி அதுக்கு நம்ம கொஞ்சம் காத்திருக்கணும். காத்திருப்போம் ஒரு நாற்பது வருடம்…..

பில்லா II-ஒரு பார்வையும், தமிழ் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களும்

ஒரு படத்தை பற்றிய விமர்சனம் அந்த படத்தை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. படம் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். பார்க்க விரும்பாதவர்கள் எந்த காலத்திலும் பார்க்கப் போவதில்லை. ஆனால் முத்தாய்ப்பாக வரும் நல்ல படங்களை கொண்டாடவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அதை சமயத்தில் பில்ட்-அப்போடு வந்து ஊரை ஏமாற்ற முயற்சிக்கும் படங்களை அலச வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது.கால புத்தகத்தில் படங்களின் இருப்பை பற்றிய கருத்துக்களை பதிவு செய்யவேண்டியது ரசிகர்களின் கடமை…

இங்கு ரசிகர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள், திரைப்படங்களின் ரசிகர்கள். நடிகர்களின் ரசிகர்கள் அன்று. உலக திரைப்படங்களை எந்தவொரு ‘ஓரவஞ்சனை’யும் இல்லாமல் பார்க்கும் ரசிகன்  என்ற முறையில் இங்கு இந்த விமர்சனங்களை பதிவு செய்கிறேன்.

எனக்கு எல்லா படங்களும் ஒன்றுதான். ‘வில்லு’ எனினும், ‘மங்காத்தா’ எனினும் ‘ராஜபாட்டை’ எனினும், வேறு எந்த படம் எனினும் எல்லாம் ஒன்றுதான். பெரும்பாலான படங்கள் முதல் நான் முதல் காட்சி பார்த்துவிடுவேன். உலக திரைப்படங்களை உன்னிப்பாக கவனிப்பது மட்டுமே என் வேலையாக இருப்பதால் ‘ஆயிரம் விளக்கு’ , ‘நாங்க’, ‘நான் சிவன் ஆகிறேன்’ , ‘கொண்டான் கொடுத்தான்’, ‘ஒத்தக் குதிரை’, ‘வெங்காயம்’, ‘ நில் கவனி செல்லாதே’ ‘நஞ்சுபுரம்’ என பலரால் கவனிக்கப் படாத பல தமிழ் படங்களை திரையரங்கிற்க்கு சென்று பார்த்தவன்-பார்பவன் என்ற முறையில் ஒரு திரைப்படத்தை பற்றி எழுதும் எல்லா உரிமைகளும் எனக்கிருக்கிறது….

“பணக்காரனா இருந்தாலும் பிச்சக்காரனா இருந்தாலும், கூலியா இருந்தாலும் உழைத்தால்தான் மேல வரமுடியும்” என்று ‘பில்லா II’ படத்தில் ஒரு வசனம் வரும்.அதே போல ஒவ்வொரு படமும் பல பேரின் உழைப்பினால்தான் வெளியே வருகிறது.அதற்காக எல்லாம் படத்தினையும் சிறந்த படமென்று கருத இயலாது. ‘ஆரண்ய காண்டம்’ போன்ற அருமையான படங்கள் மண்ணை கவ்வுவதும், ‘சகுனி’போன்ற மொக்கை படங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்வதும், தமிழ் சினிமாவின் சாபக் கேடு.

அதே போல், தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் அளவிற்க்கு,

‘பில்லா II’ ஒன்றும் தலை சிறந்த படமன்று. உலக சினிமாவின் ரசிகர்கள் யாராலும் அதை உரக்க சொல்லிட முடியும். சில நூறு ரூபாய்கள் இறைத்து, ‘இந்த படமாவது நல்லா இருக்காதா’ என்ற நப்பாசையில் ஒவ்வொரு தமிழ் படத்தினையும் பார்க்கும் போது, அந்த படமும் நன்றாக இல்லாத பட்சத்தில் அதை வெளிப்படையாக  விமர்சிப்பதை விட வேறு இல்லை.

“அமெரிக்கன் நியூ வேவ்” (american new wave) சினிமாவின் மிக முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் Brian de palma-வால் 1983யில் இயக்கப்பட்ட ‘scarface’ படத்தின் அப்பட்டமான தழுவலே ‘பில்லா II’.

பில்லா II என்ற பெயரில் பில்லாவின் வாழ்கையின் முற்பகுதியை படமாக எடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் திரைக்கதை எழுதியுள்ளனர்.,‘Scarface’ திரைக்கதையை உருவி பின் அதை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றுகிறேன் பேர்வழி என்று மூன்று பாடல்களை சொருகி, பின் இதனை பில்லா ஒன்றோடு இணைக்க வேண்டும்மென்பதால் மிகவும் கடினப்பட்டு ‘scarface-யின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி, அதே சமயத்தில் ‘scarface’-யின் முக்கிய காட்சிகளை தவிர்க்க முடியாமல் தவித்து இறுதியில் ஒரு ‘copy cat’ படத்தினை கொணர்ந்துள்ளனர். இது ‘prequel’ என்பதால், பில்லா இறுதி வரை உயிரோடு இருக்கவேண்டும் என்பதால்  ‘scarface’-யின் கெத்தான கிளைமாக்ஸ் காட்சியினை இப்படத்தில் வைக்க இயலவில்லை…

வசங்களை மையப் படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் scarface. அத்திரைப்படத்தின் சில முக்கிய வசங்களை இதற்கு முன்னே தமிழ் சினிமாவின் ‘செவ்வனசெம்மல்கள்’ உருவி விட்டதால், இந்த திரைப்படத்தில் வேறு வழி இன்றி அந்த முக்கிய வசனங்கள் வந்த காட்சிகளை தவிர்த்துள்ளனர்.அதனால்தான் படம் இரண்டு மணி நேரம் மட்டும் ஓடுகிறது. இல்லையேல் ஆங்கில மூலத்தை போன்று மூன்று மணி நேரம் ஓடியிருக்கும். scarface-யின் முக்கிய காட்சிகள் அனைத்தும் இந்தப் படத்தில் திணிக்கப் பட்டிருக்கிறது. தழுவல் திரைப்படங்கள் தமிழுக்கு புதிதன்று, ஆனால் ‘scarface’-யின் வெளிப்படையான தழுவலென்று சொல்லிவிட்டு இவர்கள் ஒரு ‘கேங்க்ஸ்டர்’ படம் எடுத்திருந்திருக்கலாம்.அதை விடுத்து பில்லா II எடுத்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில்  ‘scarface’-யின் டோனி மொன்டானா (Tony montana) கதாப்பாத்திரத்தையும் ‘டேவிட் பில்லா’ கதாப்பாத்திரத்தையும் இணைக்க முயற்சித்து, தோற்றுள்ளனர்.

உலக திரைக்கதைகளில் மிக முக்கியமாக கருதப்படும் கதாப்பாத்திரங்கள் மூன்று,

1.Travis bickle (Taxi Driver-1976)

2. Tony montana (Scarface-1983)

3.Joker (Dark Knight-2008)

விசித்திரமான கதாப்பாத்திரங்கள் பல உண்டெனெனினும், மேற்கூறிய மூன்று கதாப்பாத்திரங்களும் மிக மிக விசித்திரமானவர்கள், எப்போது எதைச் செய்வார்கள், எந்த ‘modulation’-இல் பேசுவார்கள் என்று வரையறுத்துக் கூற இயலாது. அவ்வாறான ஒரு கதாபாத்திரத்தை மிகவும் பரிச்சயமான ‘பில்லா’ கதாப்பாத்திரத்தோடு இணைக்க முயற்ச்சித்ததை தவிர்திருக்கலாம்…

எந்த பாணியில் திரைக்கதை எழுதினாலும் அதில் continuity இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் அது அணுவளவும் இல்லை. திடீரென பழைய கார்கள் வருகிறது, பழைய துப்பாக்கியை உபயோகப் படுத்துகிறார்கள்.அடுத்தக் காட்சியில் நவநாகரிக உடைகளும், பொருட்களும் காட்டப் படுகின்றன. திடீரென்று 5000 ரூபாய் வியாபாரம் பேசுகிறார்கள். அடுத்தக் காட்சியில் ஒரு கோடி ரூபாய் வியாபாரம் பேசுகிறார்கள். பின் 300 மில்லியன் டாலர்ஸ் என்கிறார்கள், 500 மில்லியன் டாலர்ஸ் என்கிறார்கள். உன்னிப்பாக கவனித்தால் கிட்டதட்ட 25 வருடங்களை  சில நிமிடங்களில் காட்சிப்படுத்தியிருப்பது போன்று தோன்றும்.( “அமெரிக்கன் நியூ வேவ்” சினிமாவின் தாக்கம்.) ஆனால் இது அத்தனை  வருடங்கள் நடக்க கூடிய கதையன்று.

ஒரு சாதாரணமானவன் எப்படி பெரிய கேங்க்ஸ்டராக மாறுகிறான் என்பன போன்ற ஒரு கதையை அழகாகவும் ஆழாமாகவும் எடுத்திருக்கலாம்.ஆனால் அதை ‘பில்லா II’ என்ற பெயரில் எடுக்கும் போது, கதை நடக்கும் காலத்தை தெரிவித்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்து (தொண்ணூறுகளின் இறுதியிலோ, அல்லது இரண்டாயிரத்தின் தொடக்கத்திலோ) அதில் பில்லா கேங்க்ஸ்டராக உருவாகிறார் என்று காட்டியிருக்கலாம்.ஆனால் ஒரு காட்சியில் கதாப்பாத்திரங்கள் , ஏதோ எம்பதுகளில் வருவதை போன்ற ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்.  அடுத்தக் காட்சியில் சமகாலதில் அணிந்துள்ள நவநாகரிக உடைகளை உடுத்தியுள்ளனர்.(குறிப்பாக கதாநாயகி முதல் காட்சியில் உடுத்தும் பழைய காலத்து உடையையும் அடுத்தக் காட்சியில் உடுத்தும் கவர்ச்சியான சமகால உடையையும் கவனிக்கவும்) திரைக்கதை ஆசிரியர்கள் மிகவும் குழம்பியுள்ளனர் என்பது திண்ணம்.தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் வேலையை செவ்வன செய்துள்ளனர் திரைக்கதையாசிரியர்கள்.

இங்கு இந்த திரைப்படத்தை விமர்சிக்கும் உரிமை நமக்கு இருக்கும் பட்சத்தில் , அதில் இருக்கும் சிறப்பம்சங்களை பாராட்ட வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. அவ்வாறான ஓர் சிறப்பம்சம் ‘அஜீத்’.

தொடக்கத்தில் இந்த கலைஞன் மீது பெரிதொரு பிரமிப்பு இருந்ததில்லை. பல வருடங்களுக்கு முன் இவர் நடித்த ‘ஜனா’ படத்தை 60 ரூபாய் கொடுத்து தாம்பரத்தில் ஒரு தியேட்டரில் பார்த்ததாக ஞாபகம். (பில்லா-2 குஜராத்தில் 300 ரூபாய் ) பால்கனி டிக்கெட்டே 15 ரூபாய் விற்ற அந்த தியேட்டரில் 60 ரூபாய் மிக மிக அதிகம். தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது எழும்பிய ஒரு எண்ணம் ‘அய்யோ! என் காசு போச்சே.’

பின் உலக சினிமாவப் பற்றிய பார்வை விஸ்தரிப்படைந்த
சமயத்தில்
இவரின் பில்லா வெளிவந்தது. பெரிதாக எந்தஒரு அலட்டல்
வேலைகளுமின்றி வெகு எதார்த்தமாக
இவர் அந்தப் படத்தில் நடந்ததற்கும்-நடித்ததற்கும் பறந்தன,கைதட்டல்கள்.

 தொடக்கம் முதலே இவர் ஆசை, வாலி, முகவரி என பல படங்களில் தன்
திறமையை நிருபித்திருந்தாலும்பெரும்பாலான திரைப்படங்களில்
இவர் ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை,
பில்லா II உட்பட…

‘நான் கடவுள்’ படத்தில்இவர் நடிக்காமல் விலகியது, இவரின்
புத்திசாலிதனத்திற்கு அடையாளம். நிச்சயம் இவர் உழைப்பு அந்த
படத்தில்வீணடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதன்பின் கதைகளை
தேர்ந்தெடுப்பதில் இவர் தடுமாறியதன் விளைவே திருப்பதி,
பரமசிவன், ஆழ்வார் போன்ற திரைப்படங்கள்…

எது எவ்வாறெனினும் இவரிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது
மெத்தட் ஆக்டிங் (Method Acting).

கதாப்பாத்திரத்தை உள்வாங்கி வெறும் முகபாவங்களிலேயே
ரசிகர்களை கொள்ளைக்கொள்கிறது இவரின்
ஆர்ப்பாட்டமில்லா நடிப்பு.
உலக அளவில் தலை சிறந்த Al Pacino.Robert De NIro
போன்றோர்களின்
நடிப்பிற்க்கு இணையானது இவருடைய நடிப்பு திறன்….

தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும்
பொறுப்பு வெறும்
படைப்பாளிகளை மட்டும் சார்ந்ததன்று.அதில் ‘அஜித்’ போன்ற
மெத்தட் ஆக்டர்களின் பொறுப்பு மிக முக்கியமானது. அதற்க்கு
அவரை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.நல்ல
திறமைகளை
வீணடித்ததற்கு,வீணடிப்பதற்கு தமிழ் சினிமாவிற்கு  நிகர்
தமிழ்சினிமாவே. உலக அளவில் மார்லன் ப்ரண்டோவாக
உருவெடுத்திருக்க வேண்டிய சிவாஜி கணேசன்
பின்னாளில் வீணடிக்கப்பட்டார்
என்பதே நிதர்சனமான உண்மை. நவரச நாயகன் கார்த்திக்,
இளைய திலகம் பிரபு போன்ற சிறந்த நடிகர்கள் தமிழ் சினிமாவின்
பாதையில் காணமல் போனார்கள்.

பக்கம் பக்கமாக பஞ்ச் வசனம் பேசும் நடிகர்களும், இறுதிக்
காட்சியில் கேமரா நோக்கி அழுவதும், உரக்க வசனம்பேசுவதுமே
நடிப்பு என நம்பும் நடிகர்களும் நிறைந்த தமிழ் சினிமாவில்,
அஜித் போன்ற உன்னத நடிகர்கள் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்…

‘அஜித்’ என்ற இந்த கலைஞன் சரியாக பயன்படுத்திக் கொள்ளப்
பட்சத்தில் உலக சினிமாவில் இந்த தமிழ் நடிகன்
தலை நிமிர்ந்து நிற்பான்,
தமிழ்
சினிமாவை தான் தோளில் தாங்கியாவரே…

நல்ல படங்களை கொடுக்கும் பொறுப்பு படைபாளிகளுடையதெனில்,
அதை கேட்டு வாங்கி ஆதரிக்கும் பொறுப்பு ரசிகர்களுடையது …

கடந்த இருபது வருடத்தில்  தமிழ் சினிமா கண்ட முக்கிய நடிகன் அஜித் என்பது யார் ஏற்க்க மறுத்தாலும் நிலைக்கக் கூடிய உண்மை… ஆனால் அந்த நடிகன் மீண்டும் மீண்டும் ஏதோ ஒருவகையில் வீனடிக்கப்படுகிறான். திரைக்கதை சோடை போகுபோது அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு வீணாய் போவதை தவிர்க்கமுடிவதில்லை. ‘அஜீத்’ இத்திரைப்படத்தை  தன் தோளில் சுமந்திருந்தாலும், குழப்பமான ஒரு திரைக்கதையால் இதனை சிறந்த படமாக கருத முடியவில்லை…

படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என பல பாராட்டக் கூடிய விடயங்கள் உண்டு. ஆனால் திரைக்கதை என்ற முதுகெலும்பு உடையும் போது, மற்ற நல்ல விடயங்களும் கட்டாயத்தால் சுக்குநூறாகி விடுகிறது.. இந்த படத்தின் ‘மேக்கிங்’ மிக மிக அருமை.கோடிகளை இறைத்து எடுக்கபடும் படங்களில் ‘மேக்கிங்’ நன்றாக அமையாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்…

பல கவர்ச்சி காட்சிகளையும், கொலை காட்சிகளையும் ‘க்ளோஸ்-அப்’ ஷாட்டில் எடுத்துள்ள இயக்குனரின் ‘தில்’லை பாராட்டிட வேண்டும். அதனால் தான் படத்திற்க்கு ‘A’ சான்றிதல் வழங்கியுள்ளனர். ஆனால் ‘ஏ’ சான்றிதல் படத்திற்க்கு வரும் எந்த ஒரு ரசிகனையும் தடுத்து நிறுத்தாது என்பதை இன்னும் தங்களை கலாச்சார காவலர்களாக கருதிக் கொள்ளும் ‘தமிழ்நாடு தணிக்கை குழுவினர்’ உணரமறுக்கின்றனர். (இவர்கள் பருத்திவீரன், ஆரண்ய காண்டம் போன்ற உன்னதமான பதங்களுக்கும் ‘ஏ’ சான்றிதல் வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.)

ஹிந்தி சினிமாவில் ‘Hate story’, ‘Gangs of wassaypur’ போன்ற படங்களை மிக தைரியமாக எடுக்கின்றனர். ‘Jalla Wallah’ ‘I am a Hunter’ போன்ற இரட்டை அர்த்த பாடல்களை ‘தில்’லாக எழுதுகின்றனர்.அவர்களின் அடாசிட்டி (audacity) பாராட்டுதலுக்குரியது. அதுபோன்ற அடாசிட்டியான கவர்ச்சி- கொலை காட்சிகளை ஹாலிவுட் பாணியில் இத்திரைப்படத்தில் வைத்து  அதை இறுதி வரை வெட்டி எறியாமல் தில்லாக படத்தை வெளியிட்ட இயக்குனரை நிச்சயம் பாராட்டிட வேண்டும்.

படம் முழுக்க நிரம்பிக்கிடக்கும் அருமையான வசனங்களுக்காக வசனகர்த்தா விற்க்கு பாராட்டுக்கள். படத்தொகுப்பு சில-பல இடங்களில் ‘Rock & Rolla’ , ‘Shoot’em up’ போன்ற படங்களை நினைவு படுத்தினாலும், பிசிர் இல்லாமல் மிகவும் அருமையாக படத்தை தொகுத்துள்ளதால் படத்தொகுப்பாளரையும் பாராட்டிடுவோம்.

படம் முழுக்க இருவர் மட்டுமே துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டு திரிவது கொஞ்சம் ஓவர். ஒரு காட்சியில் ஸ்டைலாக பில்லா நடந்து வருவார். பின்னாடி குண்டு வெடிக்கும். கடைசியாக இந்த காட்சியை வல்லரசு படத்தில் பார்த்ததாக ஞாபகம். கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா தவிர்த்திருந்த ‘funny Build up’
காட்சிகள் அவை.அந்த காட்சிகளை மீண்டும்  இந்த படத்தில் புகுத்தியுள்ளனர்.

எந்த திரைக்கதையானாலும் அதனுள் தேவையில்லாத
கதாப்பாத்திரங்களை நுழைத்திடக் கூடாது.ஒரு காட்சியில் கதைக்கு
சம்பந்தமில்லாமல் ரோட்டில் செல்லும் ஆயிரம் நபர்களை காட்டலாம்.
ஆனால் கதைக்கு தேவையேயொழிய அவர்கள் யாரும் வந்து கதை
மாந்தர்களுடன் உரையாடக் கூடாது.கதைக்கு தேவையில்ல
கதாப்பாத்திரங்கள் இப்படத்தில் நிரம்பிக் கிடக்கின்றன.

முதல் பாகத்தோடு படத்தினை இணைக்க வேண்டும் என்பதற்காக ‘ஜகதீஷ்’ கதாபாத்திரம் வந்துவிட்டு போகும்.அதேபோல் எதுவும் செய்யாமல் கவர்ச்சி காட்ட இரண்டு கதாநாயகிகள். (பெரும்பாலான  தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் இன்னும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன் படுகிறார்கள் ). Scarface  படத்தில் அம்மாவாக வரும் கதாபாத்திரம் இதில் அக்காவாகவும், தங்கச்சியாக வரும் கதாபாத்திரம் இதில் அக்கா பெண்ணாகவும் வருகின்றனர். இதில் ஒரு வசனம் பேசுவதற்காக மட்டும் வந்துவிட்டு செல்கிறது அக்கா கதாபாத்திரம்.

‘scarface ‘  திரைப்படத்தில் டோனி மோன்டனா எவ்வளவு ‘ஆட்டிட்யுட்’ நிறைந்தவர் எனக் காட்டி, இறுதில் அதே ஆட்டிட்யுடுடன் மாண்டு போவதை போல் கதையை அமைத்திருப்பார்கள். ‘scarface ‘ கதையை எவ்வளவு அரைவேக்காடாக எடுக்க இயலுமோ அவ்வளவு அரைவேக்காடாக எடுத்திருக்கிறார்கள் பில்லா II திரைக்கதையாசிரியர்கள்.

இங்கு ஒரு ஆங்கிலப் படத்தின் கதையை வீணடித்ததற்காக மட்டும் வருத்தப் படவில்லை. ‘அஜித்’ போன்ற ஒரு தலை சிறந்த நடிகனை மீண்டும் மீண்டும் வீணடிப்பது மேலும்  வருத்தமளிக்கிறது.  Al Pacino, Robert De Niro, Jack Nicholson போன்று ஒரு சிறந்த நடிகராக அஜித் உருவேடுக்கவேண்டுமென்றால் Scorcese, Coppala போன்ற இயக்குனர்கள் இங்கு நிச்சயம் தேவை. இல்லையேல் மென்மேலும் விக்ரம், அஜித், சிம்பு போன்ற சிறந்த நடிகர்களின் திறமை வீணடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும். (வருகால தமிழ் சினிமாவின் ‘ப்ராமிசிங் ஹீரோக்கள்’ இவர்கள் மூவரும் என்பதை யாராலும் மறுக்க இயலாது..)

நல்ல படங்களை கேட்டு வாங்க வேண்டிய பொறுப்பு ரசிகர்களுடையது. ‘வழக்கு  எண் ‘ போல முத்தாய்பாக வரும் தரமான படங்களை கொண்டாடிட வேண்டும். அதை இங்கு செய்ய மறுக்கிறார்கள். தான் இன்னாரின் ரசிகன் என மார்த்தட்டிக் கொண்டு பிற நடிகர்களின்  ரசிகர்களிடம்  சண்டை பிடிப்பதே அவர்களின் வேலையாகி விட்டது. ரசிகர்களால் தான் படம்  ஓடுகிறதென்றால் , ‘பாபா’ படம் சக்கை போடு போட்டிருக்க வேண்டும். திரு. ரஜினிகாந்திற்கு இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் வேறு எந்த நடிகர்களுக்கும் இல்லை. ‘Autobiography of Yogi’ என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஒரு நாகரிகமான படம் பாபா. அதில் திரு.ரஜினிகாந்த் சொல்ல வந்த நல்ல விடயங்கள் ஏராளம்.  ஒதுக்கி தள்ளும் அளவிற்கு அது மோசமான படம் இல்லை. எனினும் பெரும்பாலனோர் அந்த படத்தை ரசிக்கவில்லை (அன்பே சிவம் போன்ற  உன்னத  படங்களையே நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நினைவில் இருக்கலாம்). அதனால் ரசிகர்களால் தான் படம் ஓடுகிறது என்பது மாயை. ஏனெனில், ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்கள் படைத்த அஜித் அவர்களின் எல்லா படங்களும் ஓடி இருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை என்பதை நாம் அறிவோம். ரசிகர்களையும் மீறி ஜனரஞ்சக சினிமா ரசிகர்கள்தான் படத்தின் வெற்றி-தோழ்வியை நிர்ணயிக்கிறார்கள். (பல நேரங்களில் அவர்கள் ‘மொக்கை’ படங்களை வெற்றியடைய செய்கிறார்கள் என்பது வேறு விடயம் )

அதனால் வெறும் நடிகர்களின் ரசிகர்களாக மட்டுமில்லாமல் நல்ல சினிமாவின் ரசிகர்களாக படம் பார்க்கும் அனைவரும் இருக்கும் பட்சத்தில், தமிழில் நல்ல படங்கள் வந்து குவியும். நல்ல நடிகர்களின் திறமைகளும் வீணடிக்கப்படாது.  நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நாம் ஆதரிக்கும் பட்சத்தில் அந்த படங்களின் புகழ் வளர்ந்து இந்திய அளவில் சென்றடையும். தமிழின் தலை சிறந்த படங்கள் அனைத்தும் இந்திய அளவில் எடுத்து செல்லப் பட வேண்டும். அதற்க்கு நாம் நல்லப் படங்களை மட்டும் கொண்டாடவேண்டும்

தென்னிந்தியாவிற்கு வெளியே இருப்பவர்கள் பெரும்பாலோனருக்கு தமிழ் படத்திற்கும், தெலுங்கு படத்திற்கும் வித்தியாசம் தெரியாது. அவர்கள் அனைவரும் வெறும் அதிரடி மசாலா தெலுங்கு படங்களை பார்த்து விட்டு, அதுதான் ‘South Movies’ என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பல மசாலா தெலுங்கு படங்கள் ஹிந்தியில் டப் செய்யப் படுகிறது. அதனோடு சேர்த்து ‘சுள்ளான்’ ‘கஜேந்திரா’ போன்ற படங்களை டப் செய்து அன்றாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். (காலக் கொடுமை !)

‘Tere Naam’ என்ற ஒரு அருமையான ஹிந்தி படத்தை பாராட்டி பேசும் பலருக்கும், அது ‘சேது’ என்ற பெயரில் பாலாவால் தமிழில்தான் முதலில் செதுக்கப்பட்டது என்ற உண்மை தெரிந்திருக்கவில்லை. தலைசிறந்த இயக்குனர்கள் இங்கிருப்பதை அவர்கள் யாரும் அறியவில்லை. ‘சிங்கம்’ ‘சிறுத்தை’ போன்ற படங்களே இங்கு எடுக்கப் படுவதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் ‘Finest actors’ தமிழில்தான் இருக்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.

இதை மாற்றுவது ரசிகர்களின் கடமை. வெற்றி , தோல்வி, பாக்ஸ்-ஆபிஸ் என்பதை பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் , ‘Fanaticism’ என்ற போர்வையில் நமக்குள்ளேயே அடித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு நல்ல படங்களை கொண்டாடிட வேண்டும். பிற மாநிலத்தாருக்கு அப்படங்களை அறிமுகப் படுத்திட வேண்டும். நல்ல படத்தினை ரசிகர்கள் கொண்டாடிடும் பட்சத்தில், அந்த படத்தை படைத்த படைப்பாளி மென்மேலும் நம்பிக்கைப் பெற்று அந்த படங்களை இந்திய அளவில் கொண்டு செல்ல  முயற்சிப்பான். அவ்வாறு எடுத்துச் செல்லும் பட்ச்சத்தில் தமிழ் படைப்பாளிகள், கலைஞர்களின் மதிப்பு மென்மேலும் உயரும். ஒரு சமுகத்தின் படைப்பாற்றல் அச்சமுகத்தின் மக்களின் வாழ்வு நிலையை பொருத்தது என்பதால், நல்ல தமிழ் படங்கள் இந்திய அளவில் அங்கிகாரம் பெறும்போது அந்த படத்தின் ரசிகர்களாகிய தமிழர்களின் பெருமையும் உயரும்.

தலை சிறந்த படங்களை தந்துக்கொண்டிருந்த வங்காள, மராத்திய திரைத்துறைகள் இப்போது தூங்கிவிட்டது. எதார்த்த படங்களை தந்துக் கொண்டிருந்த மலையாள சினிமாவும் இப்போது பெரிதாக பாரட்டிடும்படி செயல்ப்படவில்லை. ஹிந்தியில் எடுக்கப்படும்  பெரும்பாலான படங்கள் ‘மொக்கை’ படங்களே. அதனால் இந்திய அளவில் தலை சிறந்த படங்களை படைக்கும் திறமை இப்போது தமிழ் சினிமாவிற்கு மட்டுமே இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். நல்லப் படங்களை மட்டுமே ஆதரித்து கொண்டாடும் பொறுப்பு தமிழ் ரசிகர்களுடையது என்பதை கருத்தில் கொள்வோம்..

அதனால் ‘பில்லா-2’ போன்ற சராசரி படங்களை கொண்டாடிக் கொண்டும், நமக்குள்ளேயே அடித்துக்கொண்டும் இருக்காமல், அஜித் போன்ற உன்னத நடிகனை வைத்து நல்ல படங்களை இயக்கிட வேண்டும் என்று படைப்பாளிகளை வற்புறுத்துவோம். மாற்று சினிமாவினை வரவேற்றிடுவோம். அவ்வாறு நாம் நல்ல படங்களை கொண்டாடிடும் பட்சத்தில், ஒரு நல்ல நடிகனின் திறமை வீணடிக்கப் படாத பட்சத்தில் , தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘Al Pacino’ உருவாவதை யாராலும் தடுக்க இயலாது…