யாரோ ஒருவர்

உங்கள் குழந்தையை முதன்முதலில்
நீங்கள் கையில் வாங்கும் அதே நேரத்தில் தான் குழந்தை வேண்டி நிற்கும்
யாரோ ஒரு பெண்ணுக்கு கரு கலைந்து போகிறது

உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு
நீங்கள் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைக்கும் நேரத்தில் தான்
யாரோ ஒருவர் வரணை எதிர்ப்பார்த்து வறுமையில் காத்துகொண்டிருக்கிறார்

உங்கள் காதல் உங்களுக்கு சலித்து போய்
நீங்களாகவே பிரியும் நேரத்தில் தான்
யாரோ ஒரு காதல் ஜோடி அதே காதலுக்காக வெட்டிக் கொல்லப்படுகிறார்கள்

நீங்கள் முதலீட்டிற்காக மூன்றாவது வீடு வாங்கும்போது தான்
யாரோ ஒருவரின் வீட்டு சாமான்கள் வாடகை தராததால் வெளியே வீசப்படுகிறது

உங்களின் வாகன கடன் விண்ணப்பம் வங்கியில் அங்கிகரிப்படும் போது தான்
யாரோ ஒருவரின் கல்விக் கடன் நிராகரிக்கப்படுகிறது

வாழ்க்கை அழகானது என்று
பேஸ்புக்கில் நீங்கள் செல்ஃபி போடும் அதே நேரத்தில்தான்
வாழ்க்கையை வெறுத்து ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான்

உங்கள் மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடு பயணப்படும் அதே நாளில்தான்
படிப்பை பாதியில் நிறுத்திய உங்கள் பள்ளிக்கூட நண்பன் மேற்கொண்டு
உழைக்க வழுவின்றி சோர்ந்து போகிறான்

நீங்கள் உங்கள் ஓய்வூதியத்தை வாங்க
ஆட்டோவில் வங்கிக்கு செல்லும் போதுதான் ஓய்வு பெற முடியாத
யாரோ ஒரு முதியவர் நெரிசலான பேருந்தில் வேலைக்கு சென்று வருகிறார்

அந்த யாரோ ஒருவராக நீங்களோ உங்கள் பிள்ளைகளோ
இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறீர்கள்.
இருந்து விட்டு போங்கள்.
அந்த யாரோ ஒருவருக்காக நான் கொஞ்சம் அழுதுகொள்கிறேன்…

ஓரிரு

என்னிடம் காசில்லை
இதுவா கவிதை
என்ன செய்ய
செத்துமடி

எவ்வளவு செலவாகும்
இதுதான் கவிதை
விருது வேண்டும்
எவ்வளவு கொடுப்பாய்

***
புத்தகம் பதிப்பிக்கனும்
எழுத்தாளர் ரா.கு. படிச்சிருக்கியா?
இதுவரை இல்ல
அவரையே இன்னும் படிக்கலையா? நீயெல்லாம் எப்படி எழுதுவ?
கையில தான்.

***

தம்பி என்ன வேலை பண்ணுது?
கதை எழுதுறேனுங்க
அது சரி, பொழப்புக்கு என்ன பண்றீங்க?
கதை எழுதுறதுதாங்க என் வேலை பொழப்பு எல்லாம்
மாசம் கைக்கு என்ன வரும்
வலி வரும்.

***

நினைவு பிறழ்கிறது
மரணம் வந்துவிட்டதா?
உனக்கு அவ்வளவு எளிதாக விடுதலை கிடையாது

***

வேலைக்கு செல்ல விருப்பமில்லை
ஐயோ ஊர் என்ன பேசும்!
வேலைக்கு சென்றுவிட்டேன்
திருமணம் செய்ய விருப்பமில்லை
ஐயோ ஊர் என்ன பேசும்!
திருமணம் செய்து கொண்டேன்
தற்கொலை செய்துகொள்ள தோன்றுகிறது
ஐயோ ஊர் என்ன பேசும்!
வாழ்ந்துவிட்டு போகிறேன்.

 

எதையாவது எழுதலாம்

எதையாவது எழுதலாம்
எழுதவே பிறந்தேன் எனலாம்
யாரவது பதிப்பாளரை
நட்பாக்கிக் கொள்ளலாம்
புத்தகம் வெளியிடலாம்
ராயல்டி தரமாட்டார்
சண்டை போடலாம்
விருது வாங்கிக் கொடுப்பார்
வாயை மூடிக்கொள்ளலாம்
புரட்சி என்று நினைத்து எழுதலாம்
பிரச்சனையா
புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம்
எதையாவது எழுதிக் கொண்டே இருக்கலாம்
யாருக்கும் புரியாது
பரவாயில்லை
பின்நவீனத்துவம் என்று
சொல்லிகொள்ளலாம்

 

ஒன்றுமில்லை- கவிதை

என் வீட்டின் மேல்
வட்டமிட்ட அந்த புறா
முட்டையிட்டு சென்றது
ஒருநாள்…

முட்டையை
நான்
பாதுகாத்தேன்
மிதமான சூட்டில்…

ஒரு நாள்
கண்டேன்
உடைந்த முட்டை
அதனருகில் ஓர் பாம்பு

இன்னும் விளங்கவில்லை !
புறா முட்டையிலிருந்து
எப்படி வந்தது
பாம்பு !

***

நிறைந்த மூட்டையோடு வந்தான் அவன்
உள்ளே என்ன என்றேன்
ஒன்றுமில்லை என்றான்
மூட்டையை அவிழ்த்தேன்
ஆம் ஒன்றுமே இல்லை.

கருவிலே ஓர் போதிசத்துவர்

காலை எத்தி எத்தி
வெளியே வர துடிக்கிறது
குழந்தை
இருள் கவிந்த
கர்பப் பையினிலிருந்து
பேரொளி நோக்கி
பல கனவுகளுடன்
தலையை
வெளியே நீட்டியது,
அதன் கண் கூசிற்று .
மருத்துவன் ஓர்
தாதியை  உரச,
இன்னொரு தாதி
அதை வன்மமாய் பார்க்க
உதவியாளன் செவிலியர்களை
கண்களாலே காமுற
குழந்தையின் உளம்  கூசிற்று .
பேரொளியா இது !
பேரிருள்
என் தாயின்க ருவறையே சாந்தி
சூனியம்
சுவர்க்கம்.
இழுத்துக் கொண்டது
தலையை
மீண்டும் உள்ளே.
வெளிவர மறுக்கும்
குழந்தையை வெளியே எடுக்க
முயற்சி செய்துக்கொண்டிருந்தனர்
மருத்துவர்கள்,
கருவிலேயே
ஞானம்பெற்ற போதிசத்துவர் அவன்.
நிச்சயம் வெளிவரப் போவதில்லை.

நானும் ஒரு உதவி இயக்குனர்

சினிமாவிற்கும் படைப்பிலக்கனமுண்டு,
அதை உலகிற்கு
உணர்த்திட

வணிக சினிமாவில்
இலக்கியத்தை
புகுத்திட

பொதுவாழ்வினுள்
பின்நவீனத்துவம்
பேசிட

உலகமே திரும்பி பார்த்திடும்
திரைப்படத்தை
இயக்கிட-முடிவு செய்து
சென்னை வந்திட்ட பலரில்
நானும்  ஒருவன்.

என்னை உங்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என்னை போல் பலருண்டு
அவர்களை தெரிந்து கொள்ள நீங்கள்
விரும்பியதுமில்லை

வலதுகையில்   உலக
இலக்கியம்-இடதுகையில்
சிகரெட்-என
விட்டத்தை பார்த்தவாறே
தொடங்கியது என் சராசரி
வாழ்க்கை..

காசின்றி சினிமா பார்க்க
உங்களால் முடியாது,
ஆனால் என்னால் முடிந்தது !

என்னுள் பொதிந்து கிடக்கும்
கதைகளை
என் சிந்தைக்கு தீனியாக்கி,
விட்டத்தை நோக்கி கனவு காண்பேன்;
பகல் கனவன்று,
லட்சிய கனவு !

என் எண்ண  அலைகள்
ஒலி ஒளி வடிவம் பெற்று
திரைப்படமாக விட்டதில் ஓடும்
அதில் கரைந்து போகும் என் மணித்துளிகள்

அது ஒரு வகையான தவம்
பசிமறந்து தூக்கமிழந்து
லட்சிய கனா கண்டுகொண்டிருந்த நாட்கள்.

கனுவுகளை நிஜமாக்கிட
வீதியில் இறங்கி உழைத்திட்டேன்
பல வருட முயற்சி பலன் தந்தது,
நான் இயக்கிய  முதல் படம் திரை கண்டது….

வீதி எங்கும் ஆரவாரம்
எங்கு சென்றாலும்
நச்சரிக்கும் ரசிகர் கூட்டம்

உலக நாயக
நாயகியரின்
தொலைபேசி வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவின்
‘மிஸ்டர் நம்பிக்கை’ –
தொலைக்காட்சிகளின் உபயம்.

பத்திரிக்கைகளில் கிசுகிசு
வந்தவுடனயே தெரிந்துவிட்டது
நான் புகழின் உச்சியில் இருக்கிறேன் என்று.

நான் வெகு நாட்களாக நல்லவனாக
இருந்தேன்;
வாய்புகள் கிட்டாத வரைக்கும் அனைவரும்
நல்லவர்களே!

இப்போது நான் என்ன நினைத்தாலும்
நடத்தி வைக்க என்னை சுற்றி
ஒரு கூட்டம்.

‘யார் இந்த அழகான நாயகி’ என்று
தொலைக்காட்சியை பார்த்தவாறே என்
உதவியாளர்களை கேட்டேன்,அன்றொரு நாள்.

அன்றிரவே,  கருப்பு உடை அணிந்த
அந்த வெள்ளை நாயகி
என் படுக்கை அறையில் அமர்ந்திருந்தாள்

கையில் சிகரெட்டை ஊதி தள்ளியவாரே
அந்த காந்த கண்ணழகி
என்னை அழைத்தாள்
அவளை நெருங்கி-விரும்பி அணைக்கையில்
சிகரெட் சுட்டுவிட்டது;
என் இடது கையில் இருந்த சிகரெட்…

யார் அவன்

தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுபவன்

தப்பிப் போயும் தமிழ் பேசாதவன்

தாரம் வந்தால் தாயை மறக்கும் மகன்போல

ஆங்கில வேசியின் மடியில் சாய்ந்து தமிழ் தாயை மறப்பவன்

தமிழ் பேச மறுப்பவன்…

 

ஈழத்திலே தலை விழுந்தாலும்

தெருக்கோடியிலே கொலை நிகழ்ந்தாலும்

முதுகெலும்பற்ற ஜடமாய்

ஊர்ந்து செல்வான் முடமாய்…

 

எந்திரத்தை மனிதனாக்க ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் கண்டவன்

தான் எந்திரமாகி போனதை ஒப்புகொள்ள மறுப்பவன்…

 

பொறியில் மாட்டிக்கொண்ட எலி போல தவிப்பதால் தான்

அவன் பொறியாளன் !

 

க்வாரியில் கல் உடைக்கும் கொத்தடிமைகளை மீட்கும் சமுக இயக்கங்களே !

MNC க்கு கூலி வேலை செய்யும் இந்த நவீன கொத்தடிமைகளை மீட்க முயற்சிப்பீராக..

நான் ஒரு கதைசொல்லி

நான் ஒரு கதை சொல்லி
ஆழ் கடல் பொங்கி
உயிர்களை விழுங்கி
உலகம்  எரிந்து
உறவுகள் பிரிந்து
நாகரிக உலகம்-
பின்நோக்கி சுழன்று
சமகால  மனிதன்
நிர்வாண மனிதனாய்-
மீண்டும் உருமாறி
நரமாமிசம்  தின்று
அக்றிணை உயர்திணை  அனைத்தும்
அழிந்து,வெந்து போனாலும்
எனக்கு மரணமில்லை
ஏனெனில்
நான் ஒரு கதை சொல்லி

காலங்கள்  மாறலாம்
காட்சிகள் மாறலாம்
கதைகள் மாறிடா !
கதை சொல்லியின் புகழ்
அழிந்திடா !

கதைகளே  உலகியலுக்கு
அடிப்படை.
கடவுளர் கதை
காதலர் கதை
யோக கதை
போக கதை
பேய்  கதை
புதையல்  கதை
புனர்ஜென்மக்  கதையென
ஏதோ ஒரு கதை
அன்று தொட்டு இன்று வரை
அழியாமல் தொடர்ந்துகொண்டிருக்க,
அக்கதையை சொல்லிய
கதை சொல்லிகள் அந்த கதைகளோடு
இணைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிரார்கள்…..

நான், என்ற இந்த பயனற்ற வெற்றுடல்
அழிந்து போனாலும்
நான் சொல்லிய கதைகள் அழிந்திடா.
ஆயிரம்  ஆண்டுகள் உருண்டோடினாலும்
எவனோ ஒருவன்  என் கதைகளை
சொல்லிக்கொண்டிருப்பான்
புது மெருகுடன்…

அந்த கதைகளில் ஏதோவொரு உருவில்
நான் வாழ்ந்துகொண்டிருப்பேன்,
பழைய கதை சொல்லிகள்
என் கதைகளில் வாழ்ந்துக்கொண்டிருப்பதைப்   போல…

கடவுளே  அழிந்தாலும்
கதை சொல்லி நான் அழிவதில்லை.
ஏனெனில்
கடவுளை வார்தெடுத்தான் ஒரு
கதை சொல்லி
கதைகளை  சொல்லி.

கடவுளை வளர்தெடுத்தான்   ஒரு
கதை சொல்லி
கதைகளை  சொல்லி.

கடவுளின்  கதைகளை
கட்டுக் கதைகளாக்கிட,
புதுக்கதைகள் தேவை.
அதற்கோர் கதை சொல்லி தேவை.

கட்டுக்கதைகளை வரலாற்றில்
புகுத்திட
தனிக்கதைகள் தேவை.
அதற்கோர் கதை சொல்லி தேவை.

நம்பிக்கையை விதைப்பதற்கும்
கதை சொல்லி தேவை
நம்பிக்கையை உடைப்பதற்கும்
கதை சொல்லி தேவை.

மனிதனை படைத்தவன்
கடவுளெனில்
கடவுளை படைத்தவன்
என்னைப் போல் ஒரு கதை சொல்லி

உலகமே
அழிந்து,வெந்து போனாலும்
எனக்கு மரணமில்லை
ஏனெனில்
நான் ஒரு கதை சொல்லி….

நான் ஒரு ஜடம்

என் தனிமை என்னை கொன்று விட பார்க்கிறது
நான் என் தனிமையை கொன்று விட பார்க்கிறேன்

ஆதி அந்தமற்ற ஒருவனாய்
நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்

சுட்டெரிக்கும் வெயில்
குளிரடிக்கும் காற்று
முத்துகளாய் பொழியும் மேகம்-எதுவும்
என்னை கவர்ந்துவிடவுமில்லை

பறந்து விரிந்த இந்த வானம்
காற்றயைபோல் பயணிக்கும் வாகனங்கள் என எதுவும்
என்னை அசைத்துவிடவில்லை

ஆம் நான் ஒரு ஜடம்
உலகம் என்னை அப்படி தான் அழைக்கும்

என் கண்முன்னே எது நிகழ்ந்தாலும்
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்
பார்த்துகொண்டு மட்டும்தான் இருப்பேன்-ஏனெனில்
நான் ஜடம்
அவர்கள் காதல் கவிதை பாடிய போது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
அவள் கற்பிழந்து கதறிய பொது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
பின் அந்த ஆலமரத்தில் பிணமாய் தொங்கியபோது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
அதோ அவன் இப்போது வேறோருத்தியிடம் கவி பாடுகிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்னுள் எந்த சலனமும் ஏற்பட்டது இல்லை
ஏற்பட போவதும் இல்லை-ஏனெனில்
நான் ஜடம்

பல கோர மரணகளை கண்டிருக்கிறேன்
மழலை மொழியை கேட்டிருக்கிறேன்
பலமுறை நான் சிதைக்க பட்டிருக்கிறேன்
சிலமுறை செப்பனிட பட்டிருக்கிறேன்
இருந்தும் நான் ஆரவாரமற்றே  இருக்கிறேன்.

பிச்சைகாரர்கள், சன்யாசிகள், விபச்சாரிகள், பத்தினிகள்
அரசியல்வாதிகள், அறிவிலிகள், அறிவுஜீவிகள் என
பலர் என்னை கடந்து சென்று விட்டனர்
அவர்களை பொறுத்த வரையில் நான் ஜடம்
எப்போதும் மாறாமல் இருப்பதனால்…
என்னை பொறுத்த வரை அவர்கள் தான் ஜடம்.
நாகரிகம் வளர்ச்சி அடைந்தும் அவர்களின் மிருக மனம் மட்டும்
மாறாமல் இருப்பதால்..

அவர்களிடம் இதை சொல்லிட, நானும் வெகு நாட்களாக
காத்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் ஏனோ தெரியவில்லை..
இப்போது யாரும் என் வழி வருவதில்லை.

என்னை வெறும் ஜடாக எண்ணி கடந்து சென்ற அவர்கள்
திரும்பி வருவார்களா !
எனக்கு தெரியாது

அனால் நான் மட்டும் காத்திருக்கிறேன்
அவர்களின் நினைவுகளை சுமந்துகொண்டு .

-மூடப்பட்ட  தேசிய  நெடுஞ்சாலை ….

உதிக்க மறுத்திடுமோ சூரியன்!

அதிகாலை பொழுது
கிழக்கில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை
என் வாழ்விலோ இதுவரை உதித்ததில்லை…

நான் மட்டும் தனியாக சாலையில்
எங்கோ பயணித்துக்கொண்டிருந்தேன்-இல்லை
சாலை எங்கேயோ பயணித்துக்கொண்டிருந்தது
தனிமைப்பட்ட என்னுடன்…

நான் பார்த்த காட்சிகள்-பார்த்திராத கோணத்தில்
பார்க்க மறுத்தக் காட்சிகள் பார்க்க வேண்டிய தருணத்தில்
அன்று கண்டேன்,
இயற்கையின் சரீரத்தையும்
சமுகத்தின் குரூரத்தையும்…

சாலையின் வலப்புறம்
புதருக்கடியில்…
புலன்களை அடகுவைத்த பெண்ணொருத்தி
புலன்களை அடக்கிவைத்த சாமியாருடன்…

சாலையின் இடப்புறம்
இரண்டு நாய்கள்

இருபுறங்களிலும் பெரிய வித்தியாசங்களை
காணவில்லை நான்

இளமையில் வறுமை
அதனால் தனிமை
வாழ்க்கையில் எதனையோ தேடிக்கொண்டு
எதனுள்ளோ வாழ்க்கையை தேடிக்கொண்டு
தூரத்தில் தெரிந்த ஒளியை நோக்கி
ஒளி காட்டிய வழியில் நகர்ந்தேன்

ஒளி சென்ற இடமோ சுடுகாடு
ஆடிக்களைத்தவர்களையும் க(லி)ழித்தவர்களையும் சுடும்காடு.
அங்கு பிணங்களுக்கு மத்தியில்-உயிருள்ள பிணமாய்
உணர்வற்ற வெட்டியான் ஒருவன்
உடல்களை எரித்துக்கொண்டிருந்தான்.
ஐயகோ! நரகல் பணி
வேறென்ன சொல்ல ?

நான் படித்ததோ பொறியியல்
அதனால் தான் என்னவோ வேலை கிட்டவில்லை
வேலையற்றவன் என்றது நாகரிகம்
வேலைக்கு தகுதியற்றவன் என்றது யதார்த்தம் !

சற்று தொலைவில் அந்த ரயில் நிலையம்
ரயில் எங்கிருந்தோ வேகமாக வந்துக்கொண்டிருந்தது
எனக்குள் ஏதோ ஓர் உந்துதல்
நான் வாழ்ந்து எதையும் சாதித்துவிடபோவதில்லை
இத்துனை நாட்கள் வாழ்ந்ததே சாதனைதான்.
ரயில் உலகில் பயணிப்பதற்காக மட்டுமன்று
உலகை விட்டு பயனிப்பதற்க்காகவும் தான்…

அருகில் படிக்காத பாமரனொருவன் மூட்டை சுமந்துக்கொண்டிருந்தான்
படிக்க வழியில்லாத சிறுவனொருவன் நாளிதல் விற்றுக்கொண்டிருந்தான்
நான் என்னை மறந்து அவர்களை நோக்கினேன்
படித்தவனுக்கோ வேலையில்லை
பாமரனுக்கோ படிப்பேயில்லை
அறிவிலிகள் பாமரர்களன்று
இயலாமைக்கும் இயங்காதமைக்கும் “வேலையில்லா திண்டாட்டம்” என
புனைபெயர் சூட்டிய நாம்…

படித்த அனைவரும் கல்வி போதிக்க துவங்கியிருந்தால்
ஒளிந்திருக்கும் அறியாமை ஒழிந்திருக்கும்.
உண்மை உரைக்க தொடங்கிய போது-ரயில் மோதியது
உயிர் பிரிந்தது…

என் உயிரல்ல
நான் கொண்ட அவ நம்பிக்கையின் உயிர்
வந்த வழி திரும்பினேன்.
சுடுகாட்டில் அவ நம்பிக்கையையும் அறியாமையும் புதைத்துவிட்டு
சந்தோசமாக வீடு நோக்கி நடந்தேன் தனிமையோடு.
இல்லை இல்லை, தன்னம்பிக்கையின் துணையோடு
இப்போது சூரியனும் உதித்துவிட்டது
கிழக்கில் மட்டுமல்ல
என் வாழ்விலும் தான்…