The Watcher- கொஞ்சம் திரைக்கதை


American Horror Story போன்ற சுவாரஸ்யமான கதைகளை உருவாக்கிய ரியான் மூர்பியின் மற்றுமொரு சுவாரஸ்யமான படைப்பு (Miniseries) ‘The Watcher’. மர்மமும் திகிலுமாக கதை விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் திரைக்கதையின் மர்ம முடிச்சுக்கள் சரியாக அவிழ்க்கப்பட்டிருக்கிறதா! 

பிரானாக் தம்பதியர் (நோரா பிரானாக் மற்றும் டீன் பிரானாக்) புதிதாக  ஒரு பங்களா வீட்டை பெரும் விலைக்கொடுத்து வாங்குகிறார்கள். அது அவர்களின் கனவு இல்லம். அதை வாங்குவதற்கு தங்களிடம் இருக்கும் கடைசிசேமிப்பு வரை அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். தங்களின் மகள் மற்றும் மகனோடு அந்த வீட்டிற்கு குடிபுகுகிறார்கள். ஆனால் அக்கம்பக்கத்தினர் அவர்களை வரவேற்கத் தயாராக இல்லை. சற்றே விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள். பரவாயில்லை நாம் உண்டு நம் வீடுண்டு என்று இருப்போம் என்று எண்ணுகின்றனர் பிரானாக் தம்பதியர். ஆனால் அவர்கள் நிம்மதியை குலைக்கும் வண்ணம் ஒரு கடிதம் வந்து சேர்கிறது. “நான் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்று மிரட்டும் தொனியில் அந்த கடிதத்தின் வரிகள் இருக்கின்றன. அதை எழுதியது ‘தி வாட்சர்’ என்பதை தவிர வேறு எதையும் கண்டு கொள்ள முடியவில்லை. 

யார் அந்த வாட்சர்! ஆணா! பெண்ணா! ஒட்டாமல் உறவாடும் சுற்றத்தாரில் ஒருத்தனா? அல்லது நெருங்கிய வட்டத்திலேயே இருக்கும் யாரோ ஒருவரா? இந்த கேள்விக்கான பதிலை கண்டுகொள்ள முடியாமல் பிரானாக் தம்பதியர் திணறுகின்றனர். ஆரம்பம் முதலே அதை பார்க்கும் நமக்கும் அந்த கேள்வி தொற்றிக் கொள்கிறது. வாட்சர் யாராக இருக்கும் என்று பார்வையாளர்களை தொடர்ந்து யோசிக்க வைப்பதே இந்த திரைக்கதையின் பலம். ஆரம்பித்த சில நொடிகளிலேயே கதை உலகம் நம்மை உள்ளே இழுத்துவிடுகிறது. ஒரு படம் பார்வையாளனை தன்னோடு ஒன்ற வைக்குமாயின் அதுவே அதன் முதல் வெற்றி. ஒரு திரைக்கதையில் இது எப்படி சாத்தியமாகிறது? 

பார்வையாளர்களின் மனதை தொடுகிற ‘எமோஷன்’ தான் இதை சாத்தியப்படுத்துகிறது. The Watcher’. தொடரை பொறுத்த வரை இதன் ‘Core emotion’ எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. கனவு இல்லம், அமைதியான சந்தோசமான குடும்பம், பாதுகாப்பான வாழ்க்கை- இதுதான் இந்த கதையின் பிரதான பாத்திரங்களின் ‘Core emotion’. ஒருவகையில் இது மனிதகுலத்தின் கனவும் கூட. அதனாலேயே இந்த கதையின் பிரதானபாத்திரங்கள் நம்மோடு நெருங்கி வருகின்றன. (ஹாரர் திரில்லர் என எந்த வகை படமாக இருந்தாலும், அதில் பார்வையாளர்களை உள்ளிழுக்கும் எமோஷன் இருக்கும் போதே அந்த திரைக்கதைக்கு உயிர் கிடைக்கிறது.) இப்போது பாதுகாப்பான வாழ்க்கை என்கிற நம் கதாப்பாத்திரங்களின் அந்த  கனவை அவர்களுக்கு வரும் கடிதம் அசைத்துப் பார்க்கிறது. நம்மையும் தான்.

ஆரம்பத்திலிருந்தே சுற்றி இருப்பவர்களிடம் தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் வயதான தம்பதி, பிரானாக் குடும்பத்தின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் தோட்டத்திற்குள் நுழைந்து செடிகொடிகளை பறிக்கிறார்கள். இதை டீன் பிரானாக் கேள்வி கேட்க, அது பிரச்சனையில் முடிகிறது. “நீங்கள் எங்களுடைய பகையை சம்மதித்துக் கொண்டீர்கள். உங்களை கவனித்துக் கொண்டே இருப்போம்” என்று கோபமாக சொல்லிவிட்டு நகர்கிறார்கள் அந்த வயதான தம்பதியர்.  

இன்னொரு பக்கத்தில் வசிக்கும் ஜாஸ்பர் ஒருபடி மேலே சென்று பிரானாக்கின் வீட்டிற்குள்ளேயே அனுமதியில்லாமல் வசிக்கிறார். இது பிரானாக்கை கோபத்திற்கு உள்ளாக்க அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் பிரானாக். இயல்பான மனநிலையில் இல்லாத ஜாஸ்பருக்கு ஆதரவாக அவரது சகோதரி பியர்ல், பிரானாக்கிடம் சண்டையிடுகிறாள். தாங்கள்  புராதானங்களை பாதுக்காக்கும் குழு என்றும் பிரானாக் அந்த புராதன வீடை வாங்கி அதில் மாற்றங்களை செய்வது தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறும் பியர்ல், “உங்களை கவனித்துக் கொண்டே இருப்போம்” என்று மிரட்டிவிட்டு நகர்கிறாள். 

தொடர்ந்து மிரட்டல் கடிதங்களும் வருகின்றன. போலீசிடம் சொல்லியும் எந்த பயனும் இல்லை. இந்த சிக்கல்கள் அவனை வேலையில் கவனம் செலுத்தவிடாமல் செய்ய, வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அவனுக்கு கிடைக்காமல் போகிறது.  இத்தகைய பிரச்சனைகள் (Extra personal conflict) ஒரு புறம் இருக்க, டீன் பிரானாக்கின் குடும்பத்திற்குள்ளேயே அவருக்கும் அவர் மனைவி-மகளுக்குமிடையே பிரச்சனைகள் வருகின்றன (Personal Conflict). ஒருகட்டத்தில் குடும்பமே உடைந்து விடுமோ என்கிற அளவிற்கு பிரச்சனைகள் வளர்கின்றன. இதுவே திரைக்கதையில் ‘All is lost’ என்கிற தருணம். எத்தகைய திரைக்கதையிலும் இந்த தருணம் சாத்தியப்படும். 

ஆரம்பத்தில் நாயகனின் கனவாக இருந்த ஒருவிஷயம், அதை தக்கவைத்துக்கொள்ள அவன் போராடியும், ஒருகட்டத்தில் அது முற்றிலுமாக கைவிட்டு போகும் என்கிற நிலை உருவாகுகிறது. இப்போது ஏதாவது செய்து அவன் தன் கனவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அவன் என்னெல்லாம் செய்கிறான் என்று கதையை நகர்த்துபோது அந்த திரைக்கதை சுவாரஸ்யமாகும். 

தி வாட்சர் சீரிஸ் சற்றே தடுமாறும் இடமும் இதான்.  அதற்கும் இது உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை என்பது கூட காரணமாக இருந்திருக்கலாம். நிஜவாழ்வில் இது போன்ற ஒரு குடும்பத்திற்கு ‘தி வாட்சரின் கடிதம் வந்து அவர்களின் நிம்மதி குலைந்திருக்கிறது. இறுதிவரை வாட்சர் யார் என்று யாராலும் கொண்டுகொள்ளமுடியவில்லை. எனவே தான் இந்த தொடரிலும்  இறுதியில் மர்மமுடிச்சுகளை சரியாக அவிழ்க்காமல் அப்படியே விட்டுவிட்டார்கள் போல என்கிற எண்ணம் எழுகிறது. 

திரைக்கதையில் ஆரம்பத்திலிருந்தே  ‘வாட்சர்’ யார் என்று கண்டுகொள்ளும் முனைப்போடு நாயகன் இயங்குகிறான். அதற்காக தியோதரா என்கிற துப்பறியும் பெண்மணியின் உதவியை அவன் நாடுகிறான். அவர்கள் பல விஷயங்களை கண்டுகொள்கிறார்கள். ஒரு விறுவிறுப்பான மர்ம நாவலை படிக்கும் உணர்வை அவர்களின் காட்சிகள் தருகின்றன. உண்மையிலேயே ஒரு படத்தின் திரைக்கதைக்கும் தொடரின் திரைக்கதைக்கும் இருக்கும் பிரதான வித்தியாசம் இதுதான். நாவலின் வடிவமே தொடர்களின் வடிவமாக இருக்கிறது. படம் எனும் போது இரண்டு மணிநேரத்தில் ஆர்கானிக்காக எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் web series அப்படி இல்லை. அதில் நாவலுக்கான சுதந்திரம் இருக்கிறது. அதனாலேயே எத்தகைய கிளைக்கதையையும் ஒரு வெப்சீரிஸில் எழுதிவிட முடிகிறது. ஆனால் இந்த கிளைக்கதைகள் பிரதான கதையோடு ஏதாவது ஒரு புள்ளியில் இணைய வேண்டும். இணையாமல் தனித்திருந்தால் உறுத்தலாக தோன்றும். இந்த தொடரில் அந்த பங்களா வீட்டில் முன்பொரு காலத்தில் வசித்த ஆண்ட்ரூ பற்றிய கதை வருகிறது. அவனை தியோதரா தான் நாயகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். அவன் அந்த வீடு நரபலியோடு தொடர்புடையது என்றெல்லாம் சொல்கிறான். ஆனால் இந்த கதை பிரதான கதையோடு சரியாக இணையவில்லை.   அடுத்து டீன் பிரானாக்கின் படுக்கை அறைக்குள் ஒரு பெண் அவருக்கு தெரியாமலேயே நுழைவதாக ஒரு காட்சி வருகிறது. அவள்  யார் என்ன என்பது இறுதி வரை சொல்லப்படவில்லை. இந்த காட்சியை நீக்கியிருந்தால் கூட கதையில் பெரிய இழப்பு எதுவும் இருக்காது. தொடர் கதைகளின் (நாவல்) முடிவில் வழிந்து வைக்கப்படும் ட்விஸ்ட் போல வைக்கப்பட்ட காட்சி இது.  எனவே தான், பிரதான கதையோடு ஒன்றாத கிளைக்கதைகளோ காட்சிகளோ ஒரு திரைக்கதைக்கு தேவை இல்லை என்கிறோம்.  

மேலும் இந்த கதையில் பிரானாக் தம்பதியர் தங்கள் வீட்டில் ஒரு சுரங்கப் பாதை இருப்பதை கண்டுபிடிப்பார்கள். அந்த சுரங்கப்பாதையில் வழியாகவே அந்த வீட்டிற்குள் முகம் தெரியாத யாரோ வந்து போகிறார்கள் என்று அந்த தம்பதியர் நினைக்கும் தருணத்தில், யாரோ ஒருவன் தப்பித்து ஓடுவான். அவனை துரத்திக் கொண்டு டீன் பிரானாக் ஓடுவார். இறுதியில் அவன் யார் என்பதை பார்வையாளர்களான நமக்கு காண்பித்து இருப்பார்கள் ஆனால் பிரானாக் தம்பதியருக்கு தெரியாமல் போய்விடும். இங்கே நம் கண் முன்னே அவிழ்ந்த மர்ம முடிச்சும் கூட பெரிய சுவாரஸ்யத்தை கொடுக்கும் ஒன்றாக இருக்காது.   

மர்ம கதைகளில் பொதுவாக மூன்று சாத்தியங்கள் உண்டு. ஒன்று கதையின் பாத்திரங்களுக்கு உண்மைகள் தெரிந்திருக்கும் பார்வையாளர்களாகிய நமக்கு தெரியாமல் இருக்கும். இன்னொரு வகையில், உண்மைகள் நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் கதையின் பாத்திரங்களுக்கு தெரியாமல் இருக்கும். மூன்றாம் வகை ஒன்றுண்டு. யாருக்குமே உண்மைகள் தெரியாது. கதையின் பாத்திரம் உண்மையை கண்டுகொள்ளும் போது பார்வையாளர்களாகிய நாமும் கண்டுகொள்வோம். மற்ற இரண்டு வகைகளை விட இது சிறந்த உத்தி. துப்பறியும் கதைகளில் அதிகம் பயன்படும் உத்தியும் கூட. துப்பறியும் நாயகன்  உண்மையை கண்டுகொள்ளும் போது தான் நாமும் கண்டுகொள்வோம். இந்த திரைக்கதையில் பிரதான பாத்திரங்களுக்கு உண்மை தெரியாமல் போகும் போது, ஏன் அவர்கள் சுரங்கப்பாதையை கண்டுபிடிப்பதாகவும் அதில் ஒருவனை துரத்திக் கொண்டு ஓடுவதாகவும் காட்சி அமைக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. இங்கே போடப்பட்ட மர்ம முடிச்சும் அது அவிழ்க்கப்பட்ட விதமும் வீண்தான்.  

இது போன்ற சிக்கல்கள் இருந்தாலும் இந்த திரைக்கதையில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் கதாப்பாத்திர வடிவமைப்பு. பொதுவாக மர்ம கதைகளில் சந்தேகத்திற்கு இடமாக வலம்வரும் பாத்திரங்கள் எதுவும் இறுதியில் குற்றவாளியாக இருக்காது. பார்வையாளர்களை (அல்லது வாசகர்களை) குழப்பவே அந்த பாத்திரங்களின் மீது சந்தேக நிழல் விழும்படி சித்தரித்திருப்பார்கள்.  இந்த புரிதலோடு இந்த கதையை அணுகினாலும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் மீதும் சந்தேகம் வலுக்கும் வண்ணம் சம்பவங்கள் நிகழும். அந்த பாத்திரங்கள் வாட்சராக இருக்காது நம்மை குழப்பவே அப்படி சித்தரிக்கிறார்கள் என்று எண்ணும் போது, இல்லை அது தான் வாட்சர் என்று நம்பும்படி அந்த பாத்திரங்கள் ஏதாவது வேலை செய்யும். உதாரணமாக  நோராவின் தோழியாகவும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டாகவும் வரும் கரேன் கதாப்பாத்திரம்.  

கதையின் தொடக்கத்திலிருந்தே அவள் மீது நமக்கு சந்தேகம் இருக்கும். அந்த வீடை விற்றுவிடும்படி அவள் நோராவை தூண்டிக் கொண்டே இருப்பாள். குறைந்த விலையில் அந்த வீட்டை வாங்க அவள் தான் வாட்சர் கதையை தொடங்கி வைத்தாளோ என்று கூட தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதாக உண்மை இருக்காது என்று எண்ணும் போது, அவள் தான் வாட்சர் என்று நம்பும் அளவிற்கு அவள் பல வேலைகளை செய்வாள். இது போல அக்கம்பக்கத்தினர் துப்பறியும் பெண்மணி தியோதரா என பலரின் மீதும் சந்தேக நிழல் தொடர்ந்து படியும் வண்ணம் அந்த கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருப்பதும், இறுதியில்  நோரா பிரானாக் மற்றும் டீன் பிரானாக் கதாப்பாத்திரங்கள்  நாம் எதிர்பாராத மாற்றங்களை அடைவதும் (Character Transformation) இந்த திரைக்கதையின் பெரிய பலம்.

The Watcher is Worth watching…

The Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

ஊரிலிருந்து ஒதுங்கி, மலைகளுக்கு இடையே ‘ஹில் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் அந்த பெரிய வீடு இருக்கிறது.  அது பசித்து இருக்கிறது. அங்கே தங்க வருபவர்களை தனதாக்கிக் கொள்வதன் மூலம் அது தன் பசியைத் தீர்த்துக் கொள்கிறது. இது தான் ஷிர்லி ஜாக்சனின் The Haunting of Hill House நாவலின் கரு. இந்த கருவை மிக அழகாக மைக் ப்ளானகன் நாடகமாக (Web/TV Series) மறு உருவாக்கம் செய்திருக்கிறார். மறு உருவாக்கம் என்ற வார்த்தை தான் சரியாக இருக்கும். ஏனெனில் நாவலிலிருந்து நாடகம் பெருமளவில் மாறுபட்டு இருக்கிறது.

நாவலின் கதைச்சுருக்கம் இதுதான். பேராசிரியர் ஜான் மாண்டேக் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர். அதன் பின்னிருக்கும் அறிவியலை கண்டுகொள்ள முயல்பவர். பல ஆண்டுகளாக பல அமானுஷ்ய மர்மங்கள் விரவிக் கிடக்கும்  ‘ஹில் ஹவுஸ்’ வீட்டில் சில நாள் வாடகைக்கு தங்கி அங்கே இருக்கும் அமானுஷ்யங்களை கண்டு கொள்ள முடிவுசெய்கிறார். தனக்கு உதவியாளராக மூன்று பேரை தேர்வு செய்கிறார். முதலாவதாக நெல்லி (எ) எலியனோர் வான்ஸ் வருகிறாள்.  இரண்டாவதாக தியோ வருகிறாள். இவர்கள் இரண்டு பேருமே ‘சைக்கிக்’ சக்தி கொண்டவர்கள். மூன்றாவதாக அந்த வீட்டு உரிமையாளர் பெண்மணியின் சகோதரி மகனான லூக் வருகிறான். அனைவரும் அந்த வீட்டில் தங்குகின்றனர். அவர்களுக்கு அங்கே பல விசித்திர அனுபவங்கள் நிகழ்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக  நெல்லி அந்த வீட்டினால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுயத்தை இழக்கிறாள்.

இருநூறு பக்கம் கொண்ட இந்த நாவலில், கதை ஒரு வாரத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் நடக்கிறது. வீட்டை சுற்றிப்  பார்ப்பது, இரவு அமர்ந்து உரையாடுவது, மது அருந்துவது என அத்தியாயங்கள் கழிகின்றன. திடீர் திடிரென்று சில அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. கதவுகள் தன்னால் மூடிக் கொள்கின்ற்ன. யாரோ அறைக் கதவை பலமாக தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். வீட்டினுள் ஏதோ ஒரு மிருகம் ஓடுகிறது. அறைக்குள் ரத்த துளிகள் சிதறிக் கிடக்கின்றன. இது போல, வழக்கமான ஹாரர் கதைகளுக்கே உரித்தான காட்சிகளும் வர்ணனைகளும் இந்த நாவலில் நிறைய வருகின்றன. (நாவல் வெளியான ஆண்டு 1959 என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்). எனினும் ஷெர்லி ஜாக்சன் கதையை நகர்த்திக் கொண்டு செல்லும் விதமும், கதாப்பாத்திரங்களிடம் இருக்கும் யதார்த்தமும், ஆங்காங்கே வெளிப்படும் மனோதத்துவ கோணமும் இதை தனித்துவமான நாவலாக மாற்றுகிறது.

நாவலில், கதாப்பாத்திரங்களின் அறிமுக காட்சிகள் தவிர ஒட்டுமொத்த கதையும் ஒரே வீட்டினுள் தான் நடக்கிறது. பேராசியர், அவர் உடனிருக்கும் மூன்று பேர், மற்றும் அந்த வீட்டின் வேலைக்கார பெண்மணி என மொத்தம் ஐந்து பேர் தான் கதை முழுக்க வருகின்றனர். கதையின் இறுதியில் பேராசிரியரின் மனைவியும், அவளின் உதவியாளரும் வந்து சேர்கின்றனர். அவர்கள் ஆவிகளோடு உரையாடக் கூடியவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். பின் எதிர்ப்பாராத திருப்பங்களோடு நாவல் முடிகிறது. ஆனால் நாடகத்தில், ஆவிகளோடு உரையாடுதல், பேய் ஓட்டுதல் போன்ற வழக்கமான பேய் பட சம்பிரதாயங்கள் இல்லை.

ஒரு அமானுஷ்ய வீட்டில் சிக்கிக் கொள்ளும் சிலர் என்ற ஒற்றை வரி திரைப்படத்திற்கு வேண்டுமானால் பொருத்தமான ஒன்லைனாக இருக்கலாம். இதை அப்படியே படமாக்கி இருந்தால் இது ஒரு ‘சிங்கிள் செட்டிங்’ கதையாக மட்டுமே உருவாகும். ஆனால் தொடராக எடுக்க அந்த ஒன்லைன் போதாது அல்லவா! எனவே தான் திரைக்கதையாசிரியர்கள் புத்திசாலித்தனமாக கதையை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

முதல் முக்கிய மாற்றத்தை கதாப்பாத்திரங்களிடம் செய்திருக்கிறார்கள். நாவலில் பேராசிரியரின் உதவியாளர்களாக வரும் மூன்று பேரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு இல்லாதவர்கள். ஆனால் நாடகத்தில் அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் (சகோதர சகோதரிகள்) என்று மாற்றி இருக்கிறார்கள். அவர்கள் சகோதர சகோதரிகளாக இருப்பதால் அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கின்றனர், அதனால் நேரடியாக கதைக்குள் நுழைந்து விட முடிந்தது, கதையை இழுக்க வேண்டும் என்பதற்காக பாத்திரங்களுக்கு அறிமுக காட்சிகள் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று சொல்கிறார் மைக் ப்ளானகன்.

அடுத்த முக்கிய மாற்றம் கதை நிகழும் காலகட்டத்தில் செய்யப் பட்டிருக்கிறது. நாடகம் அன்று, இன்று என இரண்டு பகுதிகளாக எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதி, அந்த பெரிய வீட்டில் நடக்கிறது. அடுத்த பகுதி, இருபத்தியாரு வருடங்கள் கழித்து அந்த கதாப்பாத்திரங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப்  பற்றி பேசுகிறது. (இந்த இரண்டாம் பகுதி நாவலில் இல்லை. ஆனால் நாடகத்தில் இந்த இரண்டாம் பகுதி தான் அதிகம் வருகிறது) இப்படி இரண்டு கால கட்டத்தை எடுத்துக் கொண்டு விட்டபடியால், கதையில் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதனாலேயே நாவல் அழகாக நாடக வடிவம் பெற்றுவிட்டது. நாடகத்தின் கதைச்சுருக்கத்தைப் பார்ப்போம்.

கட்டட வடிவமைப்பாளர்களான ஹூக் க்ரைன் மற்றும் ஒலிவியா க்ரைன் தம்பதிகள் தங்களின் ஐந்து குழந்தைகளுடன் ஒரு கோடைகால விடுமுறையில் ஹில் ஹவுஸ் வீட்டிற்குள் குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் தேவையான மராமத்து வேலைகள் செய்து புதுமைப்படுத்தி, அதை விற்றுவிட்டு தங்களின் கனவு இல்லத்தை கட்டவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். ஆனால் அந்த வீடு ஒலிவியாவை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது. நாவலில் நெல்லிக்கு நிகழ்ந்தது, நாடகத்தில் ஒலிவியாவிற்கு நிகழ்கிறது. மேலும் குழந்தைகளில் சிலரும் அவ்வப்போது சில அமானுஷ்யங்களை உணர்கிறார்கள்.  பின் பல ஆண்டுகள் கழித்து, அந்த வீட்டை விட்டு விலகிய பின்னும்   பிள்ளைகளின் வாழ்க்கையில் அந்த வீடு எத்தகைய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது, அந்த வீடு ஏற்படுத்திய இழப்பு அவர்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பதை நாடகம் பேசுகிறது.

ஒலிவியாவின் பிள்ளைகளில் மூத்தவன் ஸ்டீவன க்ரைன். அவனுக்கு ஹில் ஹவுஸ் வீட்டில் நிகழும் எந்த அமானுஷ்யமும் தெரியவில்லை. எனினும் அவன் பின்னாளில் ஒரு ஹாரர் எழுத்தாளராக உருவாகிறான். ஹில் ஹவுசில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களை நாவலாக எழுதி நிறைய சம்பாதிக்கிறான். ஆனாலும் அவனுக்கு அமானுஷ்ய விஷயங்களில் நம்பிக்கை இல்லை என்பது சுவாரஸ்யமான முரண். அவன், நாவலில் வரும் பேராசிரியர் ஜான் மாண்டேக் கதாப்பாத்திரத்தை ஒத்திருக்கிறான். இரண்டவாது மற்றும் மூன்றாவது குழந்தையாக ஷெர்லி மற்றும் தியோ வருகிறார்கள்.

ஷெர்லி கதாப்பாத்திரம் நாவலில் இல்லை. ஆனால் நாடகத்தில் அவள் முக்கிய பாத்திரமாக வருகிறாள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் இல்லத்தை நடத்தி வருகிறாள். அவள் அந்த வேலையை செய்வதற்கு ஒரு எமோஷனல் காரணமும் நாடகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த நாடகத்தின் பெரும் பலமே இத்தகைய ‘எமோஷன்ல்’ விஷயங்கள் தான்.

ஹாரர் கதை என்றதும் திடீரென்னு கேமரா முன்னே பேய் வந்து நிற்பது, கதாப்பாத்திரங்களுக்கு தெரியாமல் பின்னே இருளில் பேய் ஓடுவது  போன்ற வழக்கமான ஹாரர் காட்சிகளின் மீது நம்பிக்கை வைக்காமல் கதாப்பாத்திரங்களின் மனப் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த திரைக்கதையை எழுதி இருக்கிறாரகள். எந்த வகையான கதையாக இருந்தாலும் அதில் எமோஷனும், பாத்திரங்களிடம்  எமோஷனல் கான்ப்ளிக்ட்டும் இருக்கும்போது அந்த கதை பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக போய் நிற்கும். (இதை பற்றி முந்தைய திரைக்கதை கட்டுரைகளில் நாம் விரிவாக பேசியிருக்கிறோம்.) இந்த நாடகத்தில் எல்லா பிரதான பாத்திரங்களிடமும் அத்தகைய எமோஷனல் கான்ப்ளிக்ட் இருப்பதே திரைக்கதையின் சிறப்பு. 

நாவலில் வருவது போலவே, நாடகத்திலும் தியோ சைக்கிக் சக்தி கொண்டவளாக திகழ்கிறாள். அவள் யார் மீதாவது கை வைத்தால் அவர்களின் கடந்தகாலமும் எதிர்காலமும் அவள் கண்முன்னே காட்சிகளாக ஓடத் தொடங்கிவிடும். அது அவளுக்கு ஒரு பிரச்சனையாகவே உருவெடுக்கிறது. அதனாலே அவள் கையில் எப்போதும் கையுறை அணிந்து தன் பிரச்சனையை சமாளித்து வருகிறாள். நாவலில், அவள் ஓர்பால் ஈர்ப்பு கொண்டவள் என்பதை   ஷெர்லி ஜாக்சன் குறிப்பால் மட்டுமே சொல்லியிருப்பார். ஆனால் மைக் ப்ளானகன் அதை வெளிப்படையாக சித்தரித்து, தியோ பாத்திரத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்திருக்கிறார்.

நான்காவது ஐந்தாவது பிள்ளைகளாக லூக் மற்றும் நெல்லி ஆகியோர் வருகின்றனர். அவர்கள் இரட்டையர்கள். அவர்கள் தான் ஐவரில், முதன் முதலில் அந்த வீட்டில் அமானுஷ்யத்தை உணர்கிறார்கள். பேய் உருவங்களை காண்கிறார்கள். அந்த உருவங்கள் அவர்கள் வளர்ந்த பின்பும் துரத்திக் கொண்டே வருகிறது. அவர்கள் இருபத்தியாரு  வருடங்கள் கழித்தும் பயத்திலேயே வாழ்கிறார்கள். நெல்லி சரியாக தூங்க முடியாமல் அவதி படுகிறாள். லூக் போதை மருந்திற்கு அடிமையாகிறான். இந்த யதார்த்த சித்தரிப்பு தான் திரைக்கதைக்கு அதிக சுவாரஸ்யத்தையும் நம்பகதன்மையையும் கொடுக்கிறது.

பெரும்பாலும் பேய் படங்களின் கதை, ஒரு குடும்பம் அமானுஷ்ய சக்திகளால் பாதிப்பிற்கு உள்ளாவதையும் அந்த சக்திகளிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பற்றி மட்டும் தான் பேசும். ஆனால் அத்தகைய படம் முடிந்ததும் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை பற்றியே பேச விரும்பியதாக மைக் ப்ளானகன் குறிப்பிடுகிறார். The Haunting of Hill House is a series about life after a haunting என்கிறார் அவர்.

ஹில் ஹவுஸ் வீட்டை விட்டு அவர்கள் வெகு தூரம் வந்துவிட்டார்கள். ஆனால் அது தந்த கசப்பான நினைவுகள் அவர்களின் வாழ்க்கையை மேலும் கசாப்பாக்கிக் கொண்டே போவதாக நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. இது ஒரு கேரக்டர் ட்ரிவன் நாடகம். சகோதர சகோதரிகள் ஐவரில் ஒவ்வொருவரின் கதையை சொல்வதற்கும் ஒரு எபிசோடை ஒதுக்கி இருப்பார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையிலும் அந்த அமானுஷ்ய வீடு எத்தகைய மனக் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்வதன் மூலமே இந்த கதை முன்னோக்கி நகர்கிறது. பேய், அமானுஷ்யம் போன்ற விஷயங்கள் எல்லாம் இலை மறைக்காயாக தான் வருகிறது. இதில் இருக்கும் ஹாரர் விஷயங்களை நீக்கிவிட்டால் இது ஒரு முழு நீள குடும்ப கதையாக தோன்றுமளவிற்கு இதில் உறவுகள், உறவுகளுக்குள் எழும் முரண்கள், மனசிக்கல்கள் போன்றவற்றைப் பற்றி விலாவரியாக பேசி இருக்கிறார்கள். இது ஒரு படைப்பாளியாக மைக் ப்ளானகனின் தனித்துவமும் கூட. பெரும்பாலும் அவர் உருவாக்கும் எல்லா ஹாரர் படங்களிலுமே மனித எமோஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறார். ஹஷ், ஜெரால்ட்ஸ் கேம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். நாவலின் கதாப்பாத்திரங்களிடம் மாற்றத்தை செய்வதும், அதில் எமோஷனை சேர்ப்பதும் அந்த திரைக்கதைக்கு எத்தகைய அடர்த்தியை கொடுக்கிறது என்பதை இந்த நாடகத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.    

ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் நாவலின் உயிரோட்டமான  தருணங்களை எப்படி திரைக்கதைக்குள் கொண்டு வருவது என்பது தான். இந்த நாடகத்தில் உதாரணமாக ஒரு தருணத்தை சொல்லலாம். நாவலில் நெல்லி கதாப்பாத்திரம் ஹில் ஹவுஸை அடைவதற்காக  பல மைல்கள் பயணப்படுகிறாள். அப்போது ஒரு காபி விடுதியில் காபி பருகுகிறாள். அங்கே ஒரு பெற்றோர் தன் மகளுக்கு கோப்பையில் பாலை கொடுத்து பருகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த சிறுமி மறுக்கிறாள். தான் வழக்கமாக பால் பருகும் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட கோப்பையில் கொடுத்தால் தான் பருகுவேன் என்கிறாள். இதை நெல்லி கவனித்துக் கொண்டே இருக்கிறாள். இன்று ஒரு நாள் மட்டும் இதில் பால் குடி என்று அந்த தாய் தன் மகளிடம் கெஞ்சுகிறாள். வேண்டாம், அவர்கள் சொல்வதை கேட்காதே. அவர்கள் சொல்வதற்கு அடிபணிந்துவிட்டால் நீ உன் வாழ்நாளில் நட்சத்திர கோப்பையை மீண்டும் பார்க்கவே முடியாது. உன்னையும்  மற்றவர்களை போல் சாதாரண விஷயங்களுக்கு பழக்கி விடுவார்கள். உனக்கான நட்சத்திர கோப்பையை அடம்பிடித்து பெற்றுக் கொள் என்று நெல்லி அந்த சிறுமியிடம் மானசீகமாக சொல்கிறாள். ஒரு கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் தருணம் இது. நாவலில் இதே தருணம் வேறொரு இடத்தில் வருகிறது. நெல்லி சிறுமியாக ஹில் ஹவுஸ் வீட்டில் இருக்கும் போது அந்த வீட்டின் பழைய பொருட்களை ஆராய்கிறாள். அப்போது அவளுக்கு ஒரு நட்சத்திர கோப்பை கிடைக்கிறது. அந்த வீட்டின் வேலைக்கார பெண்மணி உனக்கான நட்சத்திர கோப்பையை அடம்பிடித்து பெற்றுக் கொள்  என்று நெல்லியிடம் சொல்கிறாள்.

அதே போல் நாவலில், நெல்லியின் சைக்கிக் சக்தியை குறிக்கும் விவரணை ஒன்று வருகிறது. நெல்லி பன்னிரண்டு வயது இருக்கும்போது அவள் தந்தை இறந்துவிட, அவள் வீட்டை சுற்றி தொடர்ந்து மூன்று நாட்கள் கல் மழை பொழிகிறது. நெல்லியே அதை மறந்திருப்பினும், இத்தகைய விசித்திர விஷயம் அவளுடைய அமானுஷ்ய சக்தியின் மூலம் தான் நிகழ்ந்தது என்று பேராசிரியர் நம்புகிறார். அதனால் தான் அவளை தன்னுடைய  ஹில் ஹவுஸ் ஆய்விற்கு சேர்த்துக் கொள்கிறார். நாவலில் இது நாவலாசிரியரின் விவரணையில் ஒரு பத்தியாக மட்டுமே வருகிறது. ஆனால் நாடகத்தில் இந்த சக்தி நெல்லியின் தாய் ஒலிவியாவிடம் இருப்பதாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அவள் ஒரு மழை இரவில் ஹில் ஹவுசின்  வேலைக்காரியிடம் தன்னுடைய சிறுவயதில் கல் மழை பொழிந்தது என்று சொல்கிறாள். இந்த காட்சி தான், இந்த நாடகத்திற்கு ஒரு வகையான மனோதத்துவ கோணத்தை கொடுக்கிறது. ஒலிவியாவிற்கு அந்த ஹில் ஹவுஸிற்கு வருவதற்கு முன்பிருந்தே உளவியல் சிக்கல் இருக்கிறது, அதை அந்த வீடு இன்னும் அதிகப் படுத்தி  இருக்கிறது என்ற கோணத்தை இந்த தருணம் கதைக்கு கொடுக்கிறது. இப்படி நாவலின் தருணங்களை எப்படி திரைக்கதையில் வேறொரு இடத்தில் பொருத்துவது என்பதை புரிந்து கொள்ள இந்த தொடர் நிச்சயம் உதவும். ஷிர்லி ஜாக்சனின் நாவலின் முக்கிய தருணங்களையும், அதன் தீமையும் குறித்துவைத்துக் கொண்டு அவற்றை திரைக்கதைக்குள் மாற்றி மாற்றி அடுக்கி பார்தது ஒரு வகையான ரீமிக்ஸ்  வடிவத்தை தாங்கள் கொடுத்திருப்பதாக மைக் ப்ளானகன்  சொல்வது குறிப்பிடத்தக்கது.

இந்த நாடகத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டிருக்கும் திரைக்கதை உத்தி ‘Foreshadowing’. கதையின் ஆரம்பத்திலிருந்தே, பின்னர் நிகழப் போகும் திருப்பங்களுக்காக  குறிப்புகளை மறைத்து வைத்துக் கொண்டே வருவது தான் ‘Foreshadowing’ எனப்படுகிறது.  அப்படி அந்த திருப்பம் நிகழும் போது, நாம் ஆரம்பத்திலிருந்தே கவனித்த, ஆனால் பொருட்படுத்தாத குறிப்புகள் நம்  கண் முன்னே தோன்றி திரையை விலக்குகிறது. எந்த திரைக்கதையிலும் அது ஒரு சிறப்பான அனுபவத்தை தரும் தருணமாக இருக்கும்.  

இந்த நாடகத்தில் நிறைய ‘Foreshadowing’ தருணங்கள் உண்டு. குறிப்பாக ‘ரெட் ரூம்’ (Red  Room) பற்றிய தருணத்தை சொல்லலாம்.

நாவலில் ஒவ்வொரு அறையும் ஒரு வண்ணத்தில் இருக்கிறது. க்ரீன் ரூம், பிங்க் ரூம் என பல வண்ணங்களில் ஹில் ஹவுசில்  அறைகள் இருக்கின்றன. ஆனால் முக்கியத்துவம் கொண்ட அறை என்று எதுவும் கிடையாது. இத்தகைய பல வண்ண அறைகளை மைய படுத்தி, நாடகத்தில் ரெட் ரூமை உருவாக்கி இருக்க்கிறார்கள். அது எப்போதும் பூட்டியே இருக்கிறது.  ஆனால் கதையில்  அது ஒரு முக்கிய  ‘Foreshadowing’ விஷயமாக இருக்கிறது. 

அதே போல் Bent Neck lady என்றொரு எபிசோட் உண்டு. கதையின் ஆரம்பத்திலிருந்தே Bent Neck lady என்ற அருவம் ஓன்று நெல்லியை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. அதற்கான காரணத்தை ‘Bent Neck lady’ எபிசோட் சொல்கிறது. இந்த தொடரின் ஆகச் சிறந்த எபிசோட் அது தான். மேலும்  ‘Foreshadowing’ உத்தி மிக அழகாக வெளிப்பட்டிருக்கும் எபிசோடும் அதுதான். 

மைக் ப்ளானகன், ஹில்ஹவுஸை காட்சி படுத்திய விதத்தை பற்றி பேசும் போது,  ஒவ்வொரு காட்சியிலும் பின்னணியில்  ஏரளமான பேய்கள் ஒளிந்து இருப்பதாக சொல்கிறார்.  அந்த பேய்கள் கதைக்குள் வராவிட்டாலும், கூர்ந்து கவனித்தால் அவற்றை கண்டு கொள்ள முடியும்  என்கிறார்.  இந்த நாடகத்தின் திரைக்கதையும் அப்படிதான். கூர்ந்து கவனித்தால் அதனுள் பல திரைக்கதை உத்திகள் ஒளிந்திருப்பதை கண்டுகொள்ள முடியும்.   

கொஞ்சம் திரைக்கதை- e-book

நல்ல திரைக்கதைகளை கொண்ட சில அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதை சிறப்பசங்களை பற்றி பேசும் இந்த புத்தகம், வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.

Konjam Thiraikathai- Aravindh Sachidanandam

 

click for kindle version

 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சொல்லித்தரும் திரைக்கதை

‘அரண்மனை சதி’. வரலாற்றுப் புனைவுகளுக்கு மிக எளிதாக அமையக்கூடிய ப்ளாட் இதுவாக தான் இருக்கமுடியும். பெரும்பாலான புனைவுகள் இதை வைத்துதான் உருவாகி இருக்கின்றன. ஆட்சிக்கு உரித்தான ஒருவர் எங்கோ இருக்க, ஆட்சிக்கு சம்மந்தம் இல்லாத பலரும் சிம்மாசனத்திற்காக தந்திரம் செய்து அடித்துக் கொள்வதுதான் இந்த பிளாட். கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகமும் இந்த வகை தான். ஆனால் இது ஒரு ஃபேண்டஸி கதை. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ராஜ்ஜியத்திற்காக லான்காஸ்டர் மற்றும் யார்க்குகளுக்கிடையே நடந்த யுத்தத்தை தழுவி நிறைய கற்ப்பனையுடன் உருவாக்கப் பட்ட கதை இது.
got21

ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்று பலரும் சண்டையிட்டுக் கொள்வதே கதை. யார் சக்ரவர்த்தி என்று நாம் நம்புகிறோமோ அவர் இறந்துவிடுவார். அப்படி செய்தே அடுத்து யார் வரப் போகிறார், கதை என்ன என்ற க்யூரியாசிட்டியை தூண்டி விடுவார்கள். இந்த க்யூரியாசிட்டியும், கதை முழுக்க இருக்கும் எதிர்பாராத திருப்பங்களும்தான் திரைக்கதையை நகர்த்துகின்றன.

பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி அவர்கள் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த ஒன்றையோ அல்லது எதிர்ப்பார்க்க தவறிய ஒன்றையோ செய்துவிடுவதே இந்த உத்தி. பாட்ஷா படத்தில் மாணிக்கத்தை கட்டி வைத்து அடிக்கப் போவார்கள். அவர் சண்டை போடப் போகிறார் என்று தான் எதிர்ப்பார்போம். ஆனால் செய்ய மாட்டார். அப்படியே விட்டிருந்தால் அங்கே எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்காது. அவருக்காக சண்டையிட அவர் நண்பர்கள் பல திசைகளில் இருந்து வருவார்கள். இது தான் பில்ட் அப். அவர்களை வர வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அடி வாங்குவார். ஏதாவது நடக்காதா என்ற எதிர்ப்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு போய் எதுவும் செய்யாமல் காட்சியை முடித்துவிடுவார்கள். ஆனால் அடுத்து இடைவேளைக்கு முன்பு வரும் காட்சியில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து சண்டை போடுவார். நேரடியாக இந்த காட்சியை வைத்திருந்தால் என்ன பில்ட் அப் இருந்திருக்கும்! அவர் திருப்பி அடிப்பார் என்பது நாம் எதிர்ப்பார்த்த ஒன்று தான். ஆனால் நாம் எதிர்ப்பார்க்காத தருணத்தில் அதை செய்கிறார். ரன் படத்திலும், கில்லி படத்திலும் இதுபோன்ற ஸ்வாரஸ்யமான  ஹீரோயிச காட்சிகளைப் பார்க்கலாம். க்யூரியாசிட்டியை கூட்டி நாம் எதிர்பார்த்ததை எதிர்பார்க்காத சமயத்தில் செய்யும் உத்தி இது.

தமிழில் நாகா இந்திரா சௌந்தர்ராஜன் கூட்டணியில் வந்த சீரியல்களை தரமானதொரு எண்டர்டெயின்மெண்ட் என்று சொல்லலாம். அவர்களின் ‘ருத்ரவீணை’ நாடகம் முழுக்க யார் ருத்ரன் என்பதுதான் கேள்வி, கேம் ஆப் த்ரோன்ஸ் கதையில் யார் சக்கரவர்த்தி என்ற கேள்வியை போல. ஆனால் நாம் யூகித்த யாரையும் ருத்ரனாக்காமல், யூகிக்க தவறிய, கதையில் முக்கியமற்று வந்துப் போகும் ஒரு கதாபாத்திரத்தை ருத்ரனாக்கி கதையை முடிப்பார்கள். அவன் ஏன் ருத்ரன் என்பதற்கு ஒரு ஃபிளாஷ்பேக்கும் இருக்கும். இது எதிர்ப்பார்ப்பைக் கூட்டி எதிர்ப்பார்க்க தவறிய ஒன்றை வைத்து காட்சியையோ கதையையோ முடிக்கும் உத்தி.

இந்த நாடகத்தின் மூல நாவலை பல ஆயிரம் பக்கங்கள் எழுதிய R.R. மார்ட்டின், பாயிண்ட் ஆஃப் வியூ (POV) உத்தி மிக முக்கியமானது என்கிறார். இரண்டாம் உலகப் போரை பற்றி பேச வேண்டுமெனில் ஹிட்லர் பார்வையிலும் கதை நகரவேண்டும், ஜப்பான் பார்வையிலும் கதை நகரவேண்டும், முசோலினியின் கண்ணோட்டத்தையும் காண்பிக்க வேண்டும், அப்போதுதான் கதை முழுமை அடையும் என்கிறார். இந்த நாடகத்தில் லேன்னிஸ்டர், ஸ்டார்க், டைரல், பராத்தியன் என பல வம்சாவெளியை சேர்ந்தவர்களும் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள். இவர்கள் எல்லோரின் கண்ணோட்டதிற்கும் முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்கள் எல்லோரின் மனநிலையும் விவரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

பொதுவாக நாவலில், கதையை நிறுத்தி கதையின் பின்னணியை, களத்தை விவரிக்க நிறைய அவகாசம் உண்டு. நாவலில் திடீரென்று கதையை யார் கண்ணோட்டத்தில் வேண்டுமானாலும் நகர்த்திடலாம்.  ஆனால் நாவலில் வரும் எல்லாவற்றையும் படத்தில் சொல்லிவிட முடியாதே! அதற்கு வாய்ஸ் ஓவர் பயன்படுத்திக்கொள்வது ஒரு உத்தி.

இங்கே அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி நாடகத்தை உதாரணமாக சொல்லலாம். அந்த நாடகத்தில் coven என்ற சீசனில் வாய்ஸ் ஓவர் இல்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கும் கதையில், ஒரு கட்டத்திற்கு மேல் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வாய்ஸ் ஓவர் வைத்து அதன் மனநிலையை விவரித்திருப்பார்கள். பாத்திரங்கள் அனைவரும் சூனியக்காரிகள். அவர்களுள் அடுத்த தலைவி யார் என்ற கேள்வி தான் கதை. அங்கே கதாபாத்திரங்களின் அறிமுகத்தில் வாய்ஸ் ஓவர் தேவைப் படவில்லை. ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் transformation புள்ளியை அடைந்த பிறகு, அவர்கள் தங்களை retrospect செய்யும் விதமாக வாய்ஸ் ஓவர் அமைந்திருக்கும்.

ஆனால் கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையில் வாய்ஸ் ஓவர் பயன்படுத்த தாங்கள் விரும்பவில்லை என்று இந்த நாடகத்தின் திரைக்கதை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். வாய்ஸ் ஓவருக்கு இணையாக கதாப்பாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் இன்னொரு உத்தி ‘வசனம்’ என்கிறார்கள். இங்கே ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் தான் அவர்களின் மனநிலையை வெளிப்படுத்தும். எந்த கதையிலும் மனநிலைக்கு ஏற்பதானே ஒரு பாத்திரம் பேச போகிறது இதில் என்ன ஆச்சர்யம் என்று யோசிக்கலாம். அப்படி இல்லை. இங்கே சொல்வது காட்சிகளை மெருகேற்ற பயன்படும் ஸ்பெஷல் வசனங்கள் பற்றி. ஒரு கதாப்பாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்த வசனத்தில் இருக்கும் வீரியம் அதிகம் பயன்படும். அதனால், கதையை மெருகேற்ற வசனத்தை சேர்க்க முடிந்த இடத்தில் சேர்த்து விடலாம். வசனம் நீளமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் conveying-யாக இருக்கவேண்டும்.

நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு ‘தெரியல’ என்ற ஒரு வார்த்தைதான் அத்தனை வருடம் வாழ்ந்த வேலு நாயக்கரின் மனநிலை. அதுதான் அந்த கதையின், கதாப்பத்திரத்தின் முடிவு. அந்த வசனம் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் ஆர்க் முழுமை அடைய அங்கே சேர்க்கபட்ட அந்த வசனம் பயன்படுகிறது.

இதை தவிர ஒரு பெரிய ‘செட்டிங்’ பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கவும்  வசனம் பயன்படும். இதை exposition அல்லது establishing எனலாம். புதையலை தேடி போகும் ஒரு கதையில் அவர்கள் எதை தேடி போகிறார்கள் எங்கே போகிறார்கள் என்று வாய்ஸ் ஓவரில் சொல்வது ஒரு உத்தி எனில், படத்தில் ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆகும் இரண்டு பாத்திரங்கள் தங்களுக்குள்ளான உரையாடலின் மூலம் அதை விவரிப்பது இன்னொரு உத்தி. இந்த நாடகத்தில் அந்த உத்தி தான் அதிகம். ஆனால் இது பல எபிசோட்கள் கொண்ட நாடகம் என்பதால் அவர்கள் பேசிக்கொள்வது சுவாரஸ்யமற்று தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் ஒரே படத்தில் பாத்திரங்கள் பேசிக் கொண்டே எல்லாவற்றையும் விவரிக்கிறார்கள் என்று வைப்பது சற்று சுவாரஸ்யக் குறைவை ஏற்படுத்தலாம். அதனால் காட்சிகளாக கதை சொல்ல முடிந்த இடத்தில் வசனங்களை திணிப்பதை தவிர்த்துவிடுவதே நல்லது.

வசனம் என்றதும் வசனதிற்க்காகவே பெயர் பெற்ற டைரியன் லேன்னிஸ்டர் பாத்திரத்தை நினைவு கூற வேண்டும். பல முக்கியமான தத்துவங்களை பேசும் குள்ள கதாபாத்திரம் இது. பல இடங்களில் கதையின் போக்கையே மாற்றிடும் பாத்திரமும் இதுதான்.

53169b1aad838ee62d25f83c

இதில் ஏராளமான பாத்திரங்கள் இருந்தாலும் இவர்கள் எல்லோரையும் இவர்களுக்குள் எங்கோ மறைந்திருக்கும் மனிதத்தன்மை தான் இணைக்கிறது என்று R.R. மார்ட்டின் குறிப்பிடுகிறார். ஆம். அந்த மனித தன்மை தான் Theme element. மிக கொடிய கெட்டவர்களுக்குள்ளும் அந்த தன்மை உண்டு. கெட்டவர்களாக இருப்பவர்களும் ராஜ்ஜியம் நிலையாக இருந்தால்தான் மக்கள் நன்றாக வாழ்வார்கள் என்று நம்புகிறார்கள். உண்மையில் இவர்களில் யாரும் ஒரெடியாக கெட்டவர்கள் கிடையாது. இவர்களின் ஒரு முகம் தான் கெட்டதாக இருக்கிறது. மற்றபடி அவர்களுக்குள்ளும் பல தூய்மையான குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதே போல் நல்லவர்களாக வருபவர்களும் சந்தர்ப்பங்களில் பிறருக்கு துரோகம் செய்கின்றனர். எல்லாவற்றையும் இந்த திரைக்கதை விலாவரியாக விவரிக்கிறது. அதற்கான அவகாசம் கதையில் இருக்கிறது. ஆனால் அவகாசம் இல்லாத பட்சத்தில் அவற்றை சுருக்கமாக சொல்லிடலாம். வில்லனை கொடூரமாகவே காண்பிக்கலாம் மற்றதெல்லாம் தேவையில்லை என்று எண்ணுவதை விட, வில்லனுக்கும் சில நல்ல குணங்கள் உண்டு என்று காண்பிப்பது நல்லது. அதே போல் மிக ஸ்ட்ரைட் ஃபார்வார்டாக இருக்கும் ஒரு  போலீஸ் கதாநாயகனும் சில நேரங்களில் தன் பிடியை தளர்த்திக் கொள்ளுகிறான் என்று காட்சிகளை வைக்கலாம். அப்படி கதாபாத்திரங்களை யதார்த்தமாக உருவாக்கும் போது அவர்களுடன் பார்வையாளர்களால் ரிலேட் செய்துக் கொள்ள முடியும். அவர்களை ஏற்றுக் கொள்ள முடியும்.

‘சீ ஆப் லவ்’ படத்தில் சட்டத்திடம் அகப்படாமல் தப்பிக்கும் குற்றவாளிகளை பிடிக்க முடிவு செய்யும் போலீஸ் நாயகன் ஒரு பொய் விழா எற்பாடு செய்து விளம்பரம் கொடுப்பான். விழா உண்மையானது என்று நம்பி வரும் குற்றவாளிகள் அனைவரும் அகபட்டுக் கொள்வார்கள். ஒரே ஒருவன் மட்டும் தன் குழந்தையுடன் வந்திருப்பான். அவனை மட்டும் கதாநாயகன் தப்பிக்க விட்டுவிடுவான். இது படத்தின் ஆர்ம்பத்தில் வரும் காட்சி. இங்கே ஒரே  காட்சியில் நீதியை நிலை நாட்ட நாயகன் எந்த திட்டத்தையும் கையாள்வான் என்பது விளங்கிவிடுகிறது. ஆனாலும் அவன் இறக்க குணம் உள்ளவன் என்பதும் விளங்கிவிடுகிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒரு ஃபேண்டஸி கதை என்பதால் இதன் மேக்கிங் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும். ஆனால் மேக்கிங்கை விடுத்தாலும், இதன் எழுத்தும், செறிவான வசனங்கள் மட்டுமே பிரம்மாண்ட உணர்வை தந்துவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு டைனசர் கதையில் அந்த மிருகத்தை உடனே காண்பிக்க தேவையில்லை. அது எவ்வளவு பெரியது எவ்வளவு கொடூரமானது என்பதை வசனத்தில் சொல்லியே ஸ்வாரஸ்யத்தை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட முடியும். அது போன்ற பல உத்திகள் இந்த நாடகத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பதை கண்டுகொள்ளலாம். ஒருபுறம் ராஜ்ஜியத்திற்காக பலரும் எதிரிகளாக மாறி  அடித்துக் கொண்டாலும், மறுபுறம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ‘வைட் வாக்கர்ஸ்’ வருகிறார்கள், ‘காட்டு வாசிகள்’ வருகிறார்கள் என மிரளுகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் உண்மையில் பயப்படுவது ‘குளிர்க்காலத்தை பார்த்து தான். குளிர் வந்தால் பல ஆண்டுகாலம் அது அந்த பூமியையை புரட்டி போட்டு விடும் என்று பயந்து நடுங்கி வசனம் பேசி, நம்மையும் பயம் கொள்ள செய்கிறார்கள். இந்த வசனத்தில் இருக்கும் விவரணை குளிர் வருவதற்கு முன்பே அந்த குளிர் பயங்கரமானது என்ற உணர்வை நம்முள் விதைக்குறது. கதையில் மீண்டும் மீண்டும் வந்து நம்மை பயமுறுத்தி, கதையின் போக்கை நிர்ணயிக்கும் அந்த ஒற்றை வரி வசனம், ‘Winter is coming’. ­­

winter-is-coming-14903-1680x1050

அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி சொல்லித்தரும் திரைக்கதை

இது ஒரு ஹாரர் ஆந்தாலஜி சீரிஸ். நான்கு சீஸன்கள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள். இதில் நிறைய பேய்கள் வருகின்றன. ஆனால் வழக்கமான பேய் கதைகளில் வருவது போல் காட்சிகள் அமானுஷ்யமாக இருக்காது. பேய்கள் மனிதர்களுக்கு மத்தியில் மனிதர்களைப் போல் நடமாடுகின்றன.

சில எபிசோட்களில் சுவாரஸ்யம் குன்றினாலும், பல இடங்களில் இதன் திரைக்கதை  மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும். நான்கு சீஸனுமே சிங்கிள் செட்டிங் கதைக்களம் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். முதல் சீசன் முழுக்க ஒரு பேய் வீட்டில் நகர்கிறது. இரண்டாவது சீசன் முழுக்க ஒரு மனநல காப்பகத்தில், மூன்றாவது சீசன் சூனியக்காரிகள் பள்ளியில், நான்காவது சீசன் ஒரு மேஜிக் கேம்ப்பில் நகர்கின்றன.

american-horror-story

எந்த சீஸனிலும் இவர்தான் கதாநாயகன் இவர்தான் நாயகி என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் பார்வையில் கதை நகராது. ஏராளமான பாத்திரங்கள் வருகிறார்கள். குழுவாகவே பயணிக்கிறார்கள். கதை நடக்கும் இடம் அந்த பாத்திரங்களின் வாழ்கையில் ஏற்படுத்தும் தாக்கமே திரைக்கதை. இங்கே ஒவ்வொரு சீஸனிலும் இடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அது நிலையானது. கதாபாத்திரங்கள் அந்த இடத்திற்கு வருகிறார்கள். மறைகிறார்கள். இடம், அவர்களை வைத்து விளையாடிக் கொண்டே இருக்கிறது. முதல் சீஸனில் ஒரு பேய் வீட்டில் தம்பதிகள் குடி புகுகிறார்கள். அந்த வீட்டிற்கு குடிவரும் எல்லோரும் அந்தக் வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அந்த வீடு அவர்களை தற்கொலை செய்ய வைக்கிறது. அல்லது கொலை செய்ய வைக்கிறது. அங்கே இருக்கும் பேய்கள் அதை சாத்தியப் படுத்துகின்றன.

இரண்டாவது சீசனில் வரும் மனநல காப்பகத்தினுள் சிக்கிக் கொள்ளும் யாரும் உயிருடன் வெளியே செல்ல முடியாது, அவர்கள் இறுதி வரை குணமாக மாட்டார்கள் அல்லது அங்கேயே மடிவார்கள் என்பதாக கதை அமைந்திருக்கிறது. ஒரு வகையில் இதுவும் பேய் வீடு டெம்ப்ளேட் தான். இந்த டெம்ப்ளேட்டை மூன்றாவது நான்காவது சீஸனிலும் கவனிக்கலாம்.

ஒரே த்ரில்லர் டெம்ப்ளேட்டில் களத்தையும் கதாபாத்திரங்களையும் மாற்றி அமைத்து புதியதொரு திரைக்கதையை உருவாக்குவது எப்படி என்பதை புரிந்து கொள்ள இந்த சீரியல் ஒரு நல்ல உதாரணம். ஒரு நல்லதொரு டெம்ப்ளேட் சிக்கிவிட்டால் அதில் சிறு சிறு மாற்றங்களை செய்தே பல நல்ல திரைக்கதைகளை உருவாக்க முடியும். நாயகனும்; தேவர் மகனும் ஒரே டெம்ப்ளேட் தான். நாயகனில் அப்பா கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். தேவர்மகனில் மகன் கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப் பட்டிருக்கும். ‘யே ஜவானி ஹே தீவானி’ அப்படியே ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ டெம்ப்ளேட்டில் உருவாக்கப்பட்ட படம். ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ படத்தில் பணம் பணம் என ஓடும் நாயகனுக்கு நாயகி வாழ்க்கையின் அழகை புரியவைப்பாள். யே ஜவானியில் படிப்பு படிப்பு என ஓடும் நாயகிக்கு நாயகன் வாழ்க்கையின் அழகை உணர்த்துவான். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும் டெம்ப்ளேட்டில் வரும் நிகழ்வுகளின் நீளத்தை நீட்டியும் குறைத்துமே நிறைய கதைகள் எழுதிவிட முடியும். இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவன் புரட்சி செய்து மாண்டு போகிறான். பின்னர் இன்னொருவன் அவன் வழியில் பயணிக்கிறான். இந்த கதையில், நண்பன் முன்கதையிலேயே படம் தொடங்கி ஐந்தே நிமிடத்தில் மாண்டு விட்டால் அது ஒரு திரைக்கதை. அதே நண்பர்கள் இடைவேளை வரை அன்பாக பழகுகிறார்கள். இடைவேளைக்கு முன் நண்பன் இறந்துவிடுகிறான். இரண்டாம் பாதியில் இன்னொருவன் தன் நண்பனின்  பாதையில் பயணிக்கிறான் என்றால், அது வேறொரு திரைக்கதையாக மாறிவிடும். முன் கதை என்று வைக்காமல், நண்பனின் கதையை ஃபிளாஷ்பேக்கில் வைத்தால் அது முற்றிலும் வேறொருவகை திரைக்கதை. இப்படி சிறு மாற்றங்கள் செய்து ஒரு டெம்ப்ளேட்டை வேறொரு டெம்ப்ளேட்டாக தோன்ற வைக்கலாம்.

மேலும் இந்த சீரியலில் எல்லோருமே ‘க்ரே’ கதாப்பாத்திரங்கள். சுயநலம் கொண்டவர்கள். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் அதிக சுயநலம் கொண்டதாக இருக்கும். அதன் சுயநலம் மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதுதான் திரைக்கதை. ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் பாத்திரங்களின் கெட்ட குணங்களை கூட்டிக் காட்ட மிக தூய்மையான ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டிரும். ஒரு கதையில் எல்லோருமே சுயநலமாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அங்கே ஒரே ஒரு வெகுளியான பாத்திரத்தை, குழந்தை மனம் கொண்ட பாத்திரத்தை உலவவிட்டால், மற்றவர்களின் சுயநலம் பெரிதாக தெரியும். அந்த வெகுளி பாத்திரம் முக்கியமான பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பாத்திரங்களுக்கு இடையே காண்ட்ராஸ்ட் உருவாக்க இந்த உத்தி பயன்படும்.

freakshow

இந்த நாடகத்தில் நிறைய திரில்லிங்கான கிளைக்கதைகள் வருவதால் சஸ்பென்ஸிற்கு பஞ்சமில்லை. பெரும்பாலும் கதைகளில் மூன்று வகையான சஸ்பென்ஸ் சாத்தியம்.  ஒன்று, கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் எல்லா ரகசியங்களையும் திருப்பங்களையும் அறிந்திருப்பார்கள். பார்வையாளர்களுக்கு மட்டும் சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, கொலைகாரன் யார் என்பதை கதையில் வரும் போலீஸ் அதிகாரி அறிந்திருப்பார். ஆனால் பார்வையாளர்களுக்கு அது சொல்லப் பட்டிருக்காது. இரண்டு,  பார்வையாளர்களுக்கு எல்லாம் விளங்கி இருக்கும். ஆனால் கதாபாத்த்திரங்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, ஒரு கதாபாத்திரம் கொலைகாரன் என்று முதலிலேயே பார்வையாளர்களுக்கு விளக்கி இருப்பார்கள். ஆனால் படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கு அவனுடைய உண்மை முகம் தெரிந்திருக்காது. அவர்கள் அவனுடன் சகஜமாக பழகிக் கொண்டிருப்பார்கள். மூன்றாவது உத்தியில், யாருக்குமே எதுவும் தெரிந்திருக்காது. இந்த சீரிஸில் அநேக இடங்களில் இரண்டாவது உத்தியே அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும். பேய்கள் என்றும் அல்லது கொலைகாரர்கள் என்றும் தெரியாமல் கதாபாத்திரங்கள் அவர்களுடன் பழகிக் கொண்டிருப்பார்கள். இதுதான் இங்கே சுவாரஸ்யம்.

எத்தனைக் கிளைக்கதைகளை வைத்தாலும் எல்லா கதைகளையும் ஒரு இடத்தில் முடிக்க வேண்டும். அதை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமாகிறது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குறிக்கோள் இருப்பின், அந்த குறிக்கோள் அல்லது லட்சியம் சாத்தியமாகும் இடத்தில் கதை முடியலாம். நம் படங்கள் பெரும்பாலும் இந்த வகையே. கதாபாத்திரங்களின் குறிக்கோள் நிறைவேற வில்லை அல்லது இனிமேல் நிறைவேற சாத்தியமே இல்லை என்ற புள்ளியிலும் கதை முடியலாம். ‘முகவரி’ போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இதை தவிர, இன்னொரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அதை வைத்து கதையை முடிக்கலாம். ‘மௌனம் பேசியதே’ எடுத்துக்கொள்வோம். கடைசியாக ஒரு பாத்திரம் வந்து நாயகனை ஆரம்பத்திலிருந்தே காதலிப்பதாக சொல்லி கதையை முடித்து வைக்கும். இங்கே கதையை முடித்து வைக்கவே அந்த பாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும். ஆனால், ஒரு கதாபாத்திரத்தை முன்கூட்டியே முன்கதையிலோ அல்லது கதையின் நடுவிலோ, அல்லது கதைக்கு Parallel-ஆகவோ அறிமுகம் செய்துவிட்டு அதை வைத்து இறுதியில் கதையை முடிப்பது இன்னும் சிறப்பான உத்தி. பார்வையாளர்களுக்கு திடீரென்று இந்த பாத்திரம் ஏன் வந்தது எந்த கேள்வி எழாது. இந்த குறிப்பிட்ட உத்தியை இந்த சீரியலில் பல இடங்களில் பார்க்கலாம். இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் வருவது போல, கதையின் பிற்பகுதிக்கு தேவையான விஷயங்களையும் பாத்திரங்களையும் ஒவ்வொரு எபிசோடின் முன் பகுதியில் அறிமுகம் செய்துவிடுவது இந்த நாடகத்தின் மற்றுமொரு சிறப்பு.

 

ஸ்பார்ட்டகஸ் சொல்லித்தரும் திரைக்கதை

ஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். Continue reading

‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) சொல்லித்தரும் திரைக்கதை

“I am an extremely overqualified high school chemistry teacher. I have watched all of my colleagues and friends surpass me in every way imaginable.  My wife is seven months pregnant with a baby we didn’t intend. My fifteen-year old son has cerebral palsy. And within eighteen months, I will be dead…”

பிரேக்கிங் பேட்டில் வரும் இந்த வசனம் தான் அந்த சீரியலின் சாராம்சம். வால்டர் ஒயிட் ஒரு வேதியியல் ஆசிரியர். காலையில் பள்ளியில் வேலை, மாலையில் ஒரு கார் வாஷ் கம்பெனியில் வேலை என அவர் வாழ்க்கை கழிகிறது. திடீரென்று ஒருநாள் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. சில மாதங்களில் இறந்துவிடுவாய் என்று டாக்டர் சொல்ல, இறப்பதற்க்கு முன் குடும்பத்திற்க்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். தன் முன்னாள் மாணவன் ஜெஸ்சி பிங்க்மென் போதை பொருள் வியாபாரத்தில் நிறைய பணம் ஈட்டுவதை கண்டுகொள்கிறார். அவனுடன் இணைந்து, தன் வேதியியல் அறிவை பயன்படுத்தி மிகத் தூய்மையான ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதை பொருளை உருவாக்குகிறார். மார்க்கெட்டில் மவுசு கூடுகிறது. ஆனால் யாருக்குமே அதை யார் உருவாக்குகிறார்கள் என்று தெரியாது. அதனால் அவர்களாகவே வால்டருக்கு ‘ஐசென்பெர்க்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். அவன் ஆபத்தானவன், பயங்கரமானவன் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் ஒயிட் தனக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் பகலில் பள்ளியில் பாடம் நடத்துகிறார். விடுமுறை நாட்களில் யாருக்கும் தெரியாமல் ஐசென்பெர்க் அவதாரம் எடுக்கிறார்.

ஒருபுறம் மற்ற போதை மருந்து வியாபாரிகள் ஐசென்பெர்க்கை கொலை செய்ய தேடுகிறார்கள். இன்னொரு புறம் யார் இந்த புதியவன் என்று போலீஸ் தேடுகிறது. போலீஸ் குழுவின் தலைவனான ஹாங் ஒயிட்டின் மைத்துனன். ஆனால் யாருக்குமே வால்டர் ஒயிட் என்ற சாதாரண ஆசிரியர் மீது சந்தேகம் வரவில்லை. இந்த ஈகோ ஒயிட்டை மேலும் மேலும் தப்பு செய்ய வைக்கிறது. எல்லோரும் தன்னை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்று கருதும் ஒயிட், தன் கர்வத்தை நிலைநாட்ட மென்மேலும் தவறு செய்கிறார். ஏராளமான பணம், ஏராளமான எதிரிகள் என அவர்  வாழ்க்கையே மாறுகிறது.

Breaking-Bad

அறிவாளியான நல்லவானொருவன் காலத்தின் கட்டாயத்தால் தீய பாதையை தேர்ந்தெடுப்பதுதான் கதையின் ஒன்லைன். மிக ஸ்வாரஸ்யமான கமர்ஷியல் ஒன்லைன் இது. மிக ஆபத்தான ஒன்லைனும் கூட. ஏனெனில், ஒரு ஆசிரியர் போதை மருந்து தயார் செய்கிறார், கொலை செய்கிறார் என்று காண்பிப்பது நியாயமா என்ற கேள்வி எழலாம். ஆனால் கதாநாயகனின் அகப்போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கேள்வியை உடைத்து கதையை நகர்த்தி செல்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள். முதலில், தனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் கதாநாயகன் தவறு செய்கிறான். போதிய அளவு பணம்  சம்பாத்தித்துவிட்டு போதைப் பொருள் தொழிலிலிருந்து ஒதுங்கிவிட வேண்டுமென்று  முடிவு செய்கிறான். நிழல் உலகில் அவனுக்கு வரவேற்பு கிடைக்காததால் அவன்  ஈகோ அதிகமாகிறது. அதனால் ஆக்ரோஷமாக தொழில் செய்கிறான். பின் தன்னை  உதாசீன படுத்தும் சமூகத்திடம், தன்னாலும் நிறைய சம்பாத்திக்க முடியும் என்று நிரூபிக்க மென்மேலும் தவறு செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் ஈகோ அவன் அறிவை ஆக்கிரமித்துக்கொள்கிறது. புலி வால் பிடித்த கதையாக நிழல் உலகில் வெகு தூரம் பயணிக்கிறான். எதிரிகள் அதிகமாகிவிடுகிறார்கள். தொடர்ந்து மெத்தம்பெட்டமைன்’ காய்ச்சினால்தால் உயிர்வாழ முடியும் என்ற நிலை உருவாகிறது. அதனால் ஒயிட் கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் தான் ஏற்ப்படுகிறதே ஒழிய, அவன் செய்வது சரியா தவறா என்ற கேள்வி எழவில்லை.

மொத்தம் ஐந்து சீஸன் 62 எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில் பல இயக்குனர்கள் பல திரைக்கதை ஆசிரியர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ப்ரிசன் பிரேக் கட்டுரையில் குறிப்பிட்டது போல், ஆங்கில தொலைக்காட்சி தொடர்கள் திரைக்கதை எழுதும் கலையை புரிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. இது பெரும்பாலும் character driven ஸ்டோரி. கதை முழுக்க வால்டர் ஒயிட் மற்றும் அவரது கூட்டாளி ஜெஸ்ஸி ஆகியோரின் பார்வையிலேயே நகரும். அவர்களுக்குள் நிகழும் அகப்போராட்டத்தை மையப் படுத்தி, அவர்களை சுற்றி உள்ள உலகம் எப்படி மாறிக் கொண்டே வருகிறது என்று கதையை நகர்த்தியிருப்பார்கள். (புளிய மரத்தின் கதையில் ஒரு புளிய மரத்தை வைத்துகிக்கொண்டு அந்த காலகட்டத்தின் மாற்றங்களை சொல்லியிருப்பதைப் போல). அந்த பார்வை எங்கேயும் உடைபடாது. மேலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும், தேவையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனினும் கதை வால்ட்டர் ஒயிட்டை பற்றியதுதான். ஜெஸ்சியின் வாழ்க்கையில் அவர் நுழைந்ததும் அவரது வாழ்க்கையும் ஜெஸ்ஸியின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே திரைக்கதை. இங்கே இந்த பார்வை (Point of view) தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சில இரண்டு நண்பர்களை பற்றிய தமிழ் படங்களில், கதை யாரை பற்றியது என்ற தெளிவு இல்லாமல் படம் நகர்வதை கண்டிருப்போம். ஏனெனில் இரண்டு வெவ்வேறு நபர்களின் உலகங்களையும் காட்சிகளில் திணித்திருப்பார்கள். அப்படி செய்யும் போது Point of view அடிபட்டு போய்விடும். ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் பதியாமல் போய்விடும். அதை எப்படி சரியாக சொல்வது என்பதை இக்கதையில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

Fantastic-Breaking-BAd-Wallpaper

Fly என்ற ஒரு எபிசோடை, ஒரு லேபிற்க்குள் வெறும் இரண்டு நபர்கள், ஒரு பறக்கும் பூச்சியை மட்டும் வைத்தே நகர்த்தியிருப்பார்கள்., பட்ஜெட் அதிகாமாகிவிட்டதால், பட்ஜட்டை குறைக்க ஒரு லேப்பிற்குள்ளேயே முழு எபிசொடையும் உருவாக்கினார்களாம். எப்படி ஸ்வாரஸ்யமாக, மூலக் கதையிலிருந்து பிறழாமல்  சிங்கிள் செட்டிங் சப்ஜெக்ட் எழுதுவது என்பதற்கு இந்த எபிசோட் ஒரு சிறந்த உதாரணம்.

ஒயிட்டின் அகப்போராட்டம் ஒருபுறம் இருக்க, புற உலகிலும் அவர் போராட வேண்டி இருக்கிறது. ஐசென்பெர்க் காய்ச்சும் மெத்தம்பெட்டமைன் மார்க்கெட்டில் அதிகம் விற்ப்பதால், மற்ற போதை பொருள் வியாபாரிகள் அவரை கொல்ல துரத்துகிறார்கள். இங்கே கதை plot driven-ஆக மாறுகிறது. மாஃபியாகளிடமிருந்து தானும் தப்பிக்க வேண்டும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இங்கேயும் அவர் அறிவுதான் அவருக்கு கைகொடுக்கிறது. இது போன்ற external conflicts திரைக்கதையின் வேகத்தை கூட்ட உதவும்.

பிரேக்கிங் பேட்டில் கவனிக்கப் படவேண்டிய இன்னொரு விஷயம் Character Transformation. ஆரம்பத்தில் தன் மனைவியிடம், சூழ்நிலை காரணமாக தவறான பாதையில் பயணித்துவிட்டதாக சொல்லும் கதாநாயகன், இறுதியில் தான் விரும்பியே அந்த பாதையை தேர்ந்தெடுத்ததாக கர்வத்தோடு சொல்கிறான். ஒரு கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்யாமல் தவிர்க்கிறதென்றால், அதற்கான காரணம் என்ன என்று சொல்ல வேண்டும். ஒரு செயலை செய்கிறதென்றால் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். முன் செய்ய மறுத்த விஷயத்தை இப்போது செய்கிறது என்றால் அதையும் விளக்க வேண்டும். இங்கே ஒயிட் கதாபாத்திரத்தின் மாற்றத்திற்க்கான காரணத்தை விளக்கி இருப்பதுதான் திரைக்கதையின் பலம்.

goodwp.com_30264

மேக்கிங்கிலும் தனித்துவமான சீரியல் இது. காட்சிகள் முழுக்க ஏராளமான குறியீடுகள் உண்டு. கதாபாத்திரங்களின் குணங்களையும் transformation-ஐயும் குறிக்கும் வகையில் வண்ணங்களை பயன்படுத்தி இருப்பார்கள். தஸ்தாவெஸ்கி, காஃப்கா என பலரின் தத்துவங்களை தொட்டுவிட்டு வரும் இந்த சீரியல், தூக்கத்தைப் பிடிங்கிக்கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆங்கில சீரியல்களில் மிகவும் முக்கியமானது.

ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2

ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2

முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1

சிறையிலிருந்து தப்பிக்கும் ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ-வை FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன் துரத்துகிறார். அவர் கம்பெனியின் ஆள். ஸ்கோஃபீல்டையும், லிங்கனையும், மற்ற ஆறு பேரையும் கொல்வதே அவரது நோக்கம். இன்னொரு புறம் சிறை அதிகாரி பிராட் பெல்லிக் துரத்துகிறார். ஒவ்வொருவரும் தத்தம் போக்கில் பயணிக்கின்றனர். அவர்களை பிடிக்க முடியாததால் பிராட் பெல்லிக்கிற்கு வேலை போகிறது. ஸ்கோஃபீல்டையும் அவன் அண்ணனையும் பிடித்துக்கொடுத்தால், பல கோடி பரிசுதொகை கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவிக்கிறது. அந்த பரிசு தொகைக்காக பெல்லிக் தன்னிச்சையாக களத்தில் இறங்குகிறார். ஸ்கோஃபீல்ட் பனாமாவிற்கு தப்பித்து செல்கிறான். அங்கே ஒரு கொலை வழக்கில், அவனை பனாமா அரசு கைது செய்கிறது. ‘சோனா’ எனும் மிக ஆபத்தான பனாமா சிறையில் அவன் அடைக்கப்படுகிறான். . அதே சிறையில், வெவ்வேறு காரணங்களுக்காக பெல்லிக்கும், டி-பேகும், அலெக்சான்டர் மஹோனும் அடைக்கப்படுகிறார்கள்.  இத்துடன் இரண்டாவது சீசன் முடிகிறது.

ஸ்கோஃபீல்டின் காதலியையும், அவன் அண்ணன் மகனையும் கம்பெனி ஆட்கள் கடத்தி விடுகிறார்கள். சோனா சிறையில் இருக்கும் ஜேம்ஸ் என்பவனை தன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி ஸ்கோஃபீல்ட் தப்பிக்க வைக்க வேண்டும், இல்லையேல் அவன் காதலியும் அவன் அண்ணன் மகனும் கொல்லப்படுவார்கள் என்று கம்பெனி ஆட்கள் மிரட்டுகிறார்கள். யாராலும் தப்பிக்க முடியாத பனாமா சிறையில் இருந்து ஜேம்ஸூடன் தப்பிக்க மைக்கேல் ஸ்கோஃபீல்ட் முடிவு செய்கிறான்.. அலெக்சான்டர் மஹோனும் உடன் இணைந்துகொள்கிறார். ஆனால் அது ஃபாக்ஸ் ரிவர் போல நாகரிகமான சிறை அன்று. சோனாவில் தினமும் யாராவது இரண்டு கைதிகளுக்கிடையே மல்யுத்த சண்டை நடக்கும். அதில் ஒருவர்தான் உயிரோடு தப்பிக்க முடியும். அத்தகைய சண்டைகளில் ஸ்கோஃபீல்டையும் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஒருவழியாக ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ வெற்றிபெறுகிறது.

ஆனால் கதை முடியவில்லை. நான்காவது சீசனில் புதிய கதை ஒன்று ஆரம்பிக்கிறது. கம்பெனியின் ரகசியங்கள் அடங்கிய ‘ஸ்கைலா’ எனப்படும் ஒரு ஹார்ட்டிஸ்கை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஸ்கோஃபீல்டிடம் வருகிறது. மகோன், பெல்லிக் எல்லாம் மனம்திருந்தி ஸ்கோஃபீல்டுடன் இணைந்துகொள்கிறார்கள். ஆனால் அந்த ஹார்ட் டிஸ்க்கில் கம்பெனியின் ரகசியங்கள் இல்லை, வேறு சில முக்கிய தகவல்கள் இருக்கின்றன என்ற உண்மை பின்தான் தெரிகிறது. கெட்டவர்கள் நல்லவர்களாக மாறுகிறார்கள், சில நல்லவர்கள் கெட்டவர்களாகிறார்கள். ஏராளமான திருப்புமுனைகளை கொண்ட இந்த சீஸனில் கடைசியில் யார் யாரை வெற்றிக்கொள்கிறார்கள் என்பதே கதை.

முதல் இரண்டு சீசன்களில் இருந்து சுவாரஸ்யம் அடுத்த இரண்டு சீசன்களில் கொஞ்சம் குறைந்திருக்கும். ஒரு புத்திசாலியான கதாநாயகனுக்கு தொடர்ந்து பிரச்சனை வந்துக் கொண்டே இருக்கிறது, அவன் அவற்றை எப்படி வெற்றி கொள்கிறான் என்ற ஒன்லைனை கொண்டே நான்கு சீஸன்களும் டெவலப் செய்யப்பட்டிருக்கும். இந்த குறிப்பிட்ட ஒன்லைனை வைத்துக்கொண்டே திரைக்கதை ஆசிரியர்கள்  கதையை வளர்ப்பதால் கதையில் தளர்வு ஏற்படுகிறது.

ஹீரோ எப்படி சிறையிலிருந்து தப்பிக்கப்போகிறான் என்ற கேள்வியே முதல் சீஸனில் சுவாரஸ்யத்தை கூட்டியது. ஆனால் மூணாவது சீஸனில் அந்த கேள்வி எடுப்படவில்லை. ஏனெனில், ஹீரோவின் புத்திசாலித்தனத்திற்கு மூன்றாவது சீஸனில் வேலையில்லாமல் போவதால், சுவாரஸ்யமும் குறைகிறது. மேலும், கதையின் சுவாரஸ்யத்தை கூட்ட ஏராளமான கிளைக்கதைகளையும், ட்விஸ்ட்களையும் வைத்திருப்பார்கள். ஆனால் சில இடங்களில் வேண்டுமென்றே திணிக்கபட்ட டிவிஸ்ட்கள் நம்மை முகம் சுழிக்க வைக்கின்றன.

முந்தைய கட்டுரையில் குறிப்பட்டது போல, ப்ரிசன் ப்ரேக்கில் தேவையில்லாத கதாபாத்திரங்கள் என்று எதுவும் வராது. அது கதையின் பலம். முதல் சீஸனில், மைக்கேல் சிறையில் இருக்கும் போது ஒரு சைக்கோ அறிமுகமாவான். அவன் மைக்கலின் உடம்பில் இருக்கும் டாட்டூக்களில் ஏதோ ரகசியம் ஒளிந்திருப்பதை கண்டுகொள்வான். அந்த டாட்டூக்ளை மனதில் பதியவைத்துக் கொள்வான். பின் சில பிரச்சனைகளால் அவனை மீண்டும் சைக்கோ வார்டிற்கே அனுப்பிவிடுவார்கள். ஒருகட்டத்தில், மைக்கிலின் உடம்பிலிருந்த டாட்டூவின் ஒரு பகுதி அழிந்துவிடும். இப்போது மைக்கலுக்கு உதவ மீண்டும் அந்த சைக்கோ பாத்திரம் அறிமுகமாகும். ஒரு கதாபாத்திரத்தை ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிட்டு, பின் நமக்கு தேவையான இடங்களில் அந்த பாத்திரத்தை பயன்ப்படுத்திக்கொள்வது ஒரு சிறப்பான உத்தி.

ப்ரிசன் ப்ரேக்கில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விஷயம் கதாபாத்திரங்களின் transformation. பிராட் பெல்லிக் என்ற சிறை காவலர் இருக்கிறார்.

bellick

முதல் சீஸனில் மிக கொடுமைக்கார சிறை காவலராக வலம் வருகிறார். ஊழல் செய்கிறார். எல்லோரிடமும் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்கிறார். பனாமா ஜெயிலில் அவரை கொடுமைப்படுத்துகிறார்கள். அவரால் யாரையும் எதிர்த்து போராட முடியவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக அவரிடம் மனமாற்றம் நிகழ்கிறது. நான்காவது சீஸனில் நல்லவராகிறார். இதுபோல், ஒரு கதாபாத்திரத்திடம் மனமாற்றம் நிகழ்வதற்க்கு வழுவான காரணத்தை காண்பிக்கவேண்டியது அவசியம்.

அடுத்த முக்கிய கதாபாத்த்திரம் FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன்.

prisonbreak2_013

அடிப்படையில் இவர் நல்லவர். மிகவும் புத்திசாலி. ஆனால் கம்பெனிக்காக வேலை செய்யவில்லையெனில் தன் குடும்பத்திற்கு ஆபத்தென்பதால் கம்பெனியுடன் கைகோற்க்கிறார். ஸ்கோஃபீல்ட்டும் தன்னைபோல் புத்திசாலியாக இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே அவனை வெறுக்கிறார். ஒருகட்டத்தில், தான் விசுவாசமாக இருந்த கம்பெனி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்பதை கண்டுகொண்டபின் அவர் ஈகோ மடிகிறது. ஸ்கோஃபீல்ட்டுடன் இணைகிறார். (அண்மையில்  வெளியான ட்ரூ டிடெக்டிவ் சீரியலின் கதாநாயகன் ரஸ்ட் கோல் கதாபாத்திரத்திடம் மஹோனின் தாக்கம் நிறைய இருப்பதை பார்க்கலாம். இருவரும் தங்களுக்குள் ஒரு தனி உலகை உருவாக்கிக்கொண்டு வாழ்பவர்கள். இந்த இரு தொடர்களையும் பார்ப்பதன் மூலம், ஒரு கதாபாத்திரத்தை தழுவி எப்படி இன்னொரு கதாபாத்திரத்தை உருவாக்குவது என்பதை புரிந்து கொள்ள முடியும். ட்ரூ டிடெக்டிவ், இன்னும் இரண்டு மூன்று சீஸன்கள் பாக்கி இருப்பதாக கேள்வி. அவை வெளியான பின் ட்ரூ டிடெக்டிவ் பற்றி பேசலாம்)

மிகமிக சுவாரஸ்யமான கதாபாத்திரம் டி-பேக் (எ) தியோடர் பேக்வெல் கதாபாத்திரம். கடைசி வரை கெட்டவனாகவே இருக்கும் ஒரு கதாபாத்திரம். கொலைகாரன், காமுகன், துரோகி, பச்சோந்தி என பல முகங்கள் கொண்ட பாத்திரம்தான் டி-பேக். ஆனால் இந்த கதாபாத்திரம் மீது இறக்கம் வருமே ஒழிய, கோபம் வராது. அந்த வகையிலேயே அதை உருவாக்கியிருப்பார்கள். தன்னுடைய கெட்ட முகத்தை தொலைத்துவிட்டு, நல்ல முகத்தை மாட்டிக்கொள்ள வேண்டும் என முயன்று முயன்று தோற்று, இறுதியில் கெட்டவனாகவே இருந்துவிடும் கதாபாத்திரம் இது.

ப்ரிசன் ப்ரேக்கின் மிகபெரிய பலம் அதன் பின்னணி இசை. கதையில் சஸ்பென்ஸை சஸ்டைன் செய்வதில் மியூசிக் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஜானர் இசைகள் மாறிக்கொண்டே இருப்பது கூடுதல் சிறப்பு.

ரொமான்ஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், டிராமா, சென்டிமெண்ட் ஆகியவற்றின் கலவையே ப்ரிசன் ப்ரேக். அதன் மேக்கிங்கும் குறைகளுக்கிடமின்றியே அமைந்திருக்கும். படங்களை பார்த்து ஃபிலிம்மேக்கிங்கை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ப்ரிசன் ப்ரேக், ஏராளமான விஷயங்களை கற்றுத்தரும்.

ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1

அமெரிக்க, இங்கிலாந்து தொலைக்காட்சி தொடர்களை இரண்டு முக்கிய காரணங்களுக்காக பார்க்கலாம். ஒன்று, அவை அனைத்தும் முழு நீள படங்களுக்கு இணையான தரத்தில், மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் படங்களை விட தொலைக்காட்சி தொடர்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

இரண்டு, அத்தகைய தொடர்களை கூர்ந்து கவனிப்பதன் மூலம் திரைக்கதை உத்திகளை புரிந்து கொள்ளலாம். சினிமா திரைக்கதைகளை விட தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதைகளுக்கு அதிக உழைப்பு தேவை. கதையை சுவாரஸ்யமான இடத்தில் முடித்தால் தான், மீண்டும் அடுத்த வாரம் பார்வையாளர்கள் தொடரை பார்ப்பார்கள். சில நேரங்களில் எங்கே விளம்பர இடைவேளை விடவேண்டும் என்பதை கூட எழுத வேண்டும். அதனால் திரைக்கதையின் நுணுக்கங்களையும், திரைக்கதையின் டைமிங்கில் இருக்கவேண்டிய precision-ஐயும் புரிந்து கொள்ளலாம்.

ஏராளமான சிறப்பான தொலைக்காட்சி தொடர்கள் இருந்தாலும், சில பிரத்தியேகமான காராணங்களுக்காக ப்ரிசன் ப்ரேக் (Prison Break) ஒரு முக்கியமானதொரு தொலைக்காட்சி தொடர். அந்த காரணங்களை பற்றி பேசுவதற்கு முன், ப்ரிசன் ப்ரேக் முதல் சீஸனின் கதையை பார்த்துவிடுவோம்.

Prison Break

மைக்கேல் ஸ்கோஃபீல்ட் ஒரு ஸ்ட்ரக்சரல் இஞ்சீனியர். அதி புத்திசாலி. செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை பெற்று சிறையில் வாடும் தன் அண்ணன் லிங்கனை காப்பாற்ற முடிவு செய்கிறான். வேண்டுமென்றே ஒரு பேங்கை கொள்ளை அடித்து போலீசில் சிக்கிக் கொள்கிறான். அவன் எதிர்பார்த்ததை போல் அவனை ஃபாக்ஸ் ரிவர் (Fox River) சிறையில் அடைக்கிறார்கள். அங்கு தான் அவனுடைய அண்ணனும் அடைக்கப்பட்டிருக்கிறான். அதிக பாதுகாப்பு நிறைந்த சிறை அது. இன்னும் சில வாரங்களில் அவனுடைய அண்ணனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும். அதற்க்குள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். எப்படி தப்பிப்பது? அதற்கொரு எஸ்கேப் பிளான் வேண்டுமே ! அதுவும் தயார். ஒட்டுமொத்த சிறையின் ப்ளூ பிரிண்ட்டையும் தன் உடம்பில் டாட்டூவாக வரைந்து வைத்திருக்கிறான் ஸ்கோஃபீல்ட். சிறையிலிருந்து தப்பித்ததும் என்ன செய்வது அதையும் உடம்பில் வரைந்து வைத்திருக்கிறான். சிறையிலிருந்து வெளியேறியதும் அந்த ஊரை விட்டு வேகமாக வெளியேற விமானம் தேவை. அதற்க்கும் ஐடியா தயார்.

சிறையில் ஜான் ஆப்ரூசி என்ற மிகப்பெரிய ஒரு டான் இருக்கிறான். அவனுடைய குடுமி ஸ்கோஃபீல்டின் கையில். அவன் விமானத்தை ஏற்பாடு செய்ய ஒப்புக்கொள்கிறான். இப்போது தப்பிக்க வேண்டும். ஸ்கோஃபீல்ட் தன் திட்டத்தை செயல்படுத்த தொடங்குகிறான். ஆனால் அவன் திட்டம் வெளியே பல கைதிகளுக்கு தெரிய வருகிறது. ஒவ்வொருவரும் தங்களையும் தப்பிக்க வைக்க வேண்டும், இல்லையேல் திட்டத்தை வெளியே போட்டு உடைத்துவிடுவோம் என்று ஸ்கோஃபீல்டை மிரட்ட, ஸ்கோஃபீல்ட் அனைவரையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். இதற்கிடையில் ஸ்கோஃபீல்டை சிறை டாக்டர் சாரா காதலிக்கிறாள். அவன் தப்பிக்க உதவி செய்கிறாள். ஸ்கோஃபீல்டுடன் சேர்ந்து எட்டு கைதிகள் தப்பிக்கிறார்கள் (எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே திரைக்கதை).

Prison Break Sucre

சிறைக்கு உள்ளே இந்த கதை நகர்ந்து கொண்டிருக்க, சிறைக்கு வெளியே லிங்கனின் முன்னாள் காதலி வெரோனிக்க லிங்கனை சட்டப்பூர்வமாக காப்பாற்ற முயற்சி செய்கிறாள். அவள் ஒரு வக்கீல். “தி கம்பனி” என்று அழைக்கப்படும், நிழல் உலக கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுதான் லிங்கனை திட்டமிட்டு சிக்க வைத்திருக்கிறது என்று கண்டு கொள்ளும் அவள் கம்பெனிக்கெதிராக ஆதாரங்களை திரட்டுகிறாள். அவளை கம்பெனியின் ஆட்கள் துரத்துகிறார்கள். சிறையிலிருந்து தப்பிக்கும் ஸ்கோஃபீல்டையும், அவன் அண்ணனையும் ஒருபுறம் போலீஸ் அதிகாரிகள் துரத்துகிறார்கள். இன்னொருபுறம் கம்பெனி அதிகாரிகள் துரத்துகிறார்கள். அடுத்து என்னவாக போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி முதல் சீஸனை முடிக்கிறார்கள்.

அமெரிக்க திரைக்கதைகள் பெரும்பாலும் three act (sometimes four or five act) structure-ஐ பின்பற்றி எழுதப்படுபவை. ஆனால் நம்மூரில் திரைக்கதைகள் பெரும்பாலும் உள்ளுணர்விலேயே எழுதப்படுகின்றன. கதையின் ஃப்லோவை எழுதிவிட்டு, பின் காட்சிகளை மட்டும் எழுதிவிட்டு, பின்பு ஒவ்வொரு காட்சியையும் இம்ப்ரூவைஸ் செய்பவர்களே இங்கு அதிகம். அப்படி செய்யும் போது திரைக்கதை தன்னாலேயே எவால்வ் ஆகும். அதனால் ஹாலிவுட் ஸ்டாண்டர்ட்களை பின்பற்றினால் மட்டுமே நல்ல திரைக்கதைகளை உருவாக்கமுடியும் என்று சொல்லமுடியாது. சொல்ல கூடாது. திரைக்கதை எழுத யுனிவர்சல் ரூல் என்று எதுவும் கிடையாது. நமக்கு எது கைகூடுகிறதோ அதுவே சிறந்த வழி. ஆனால், குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி திரைக்கதை எழுதினாலும், உள்ளுணர்வில் எழுதினாலும், உலகின் எல்லா மெயின்ஸ்ட்ரீம் கதைகளுக்குமே ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது. அது தான் ‘conflict’. அதாவது பிரச்சனை (முரண்பாடு). ஒரு கதாபாத்த்திரம் இருக்கிறதேனில் அந்த கதாப்பாத்த்திரத்திற்கு ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும். அதற்கு தீர்வுகாண அந்த கதாப்பாத்திரம் போராட வேண்டும். அந்த பிரச்சனை அகம் சாரந்ததாக (internal conflict) இருக்கலாம். புறச்சூழல் சாரந்ததாக இருக்கலாம் (external conflict). நாவல், திரைக்கதை என எல்லா மீடியம்களிலும் இந்த conflict இருக்க வேண்டும். அந்த conflict இல்லையேல் கதை இல்லை. கதையே இல்லாமல் படம் எடுத்தாலும் அந்த conflict இருக்க வேண்டும். (தமிழில் மூலகதாப்பாத்திரத்தின் அகம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி நிறைய நாவல்கள் இருக்கின்றன. அசுரகணம், கிருஷ்ணப்பருந்து போன்ற நாவல்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால் அப்படிபட்ட திரைக்கதைகள் இல்லை. தமிழ் திரைக்கதைகளில் முக்கிய கதாப்பாத்திரத்தின் எக்ஸ்டர்னல் கான்ஃப்லிக்ட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கும்) அந்த conflict சுவாரஸ்யமானதாக இருக்கும்போது திரைக்கதையின் சுவாரஸ்யமும் அதிகமாகிறது. ப்ரிசன் ப்ரேக்கில் ஒவ்வொரு முக்கியகதாபாத்திரத்திற்கும் ஒரு சுவாரஸ்யமான பிரச்சனை இருக்கிறது.

சுக்ரே என்றொரு கைதி கதப்பாத்திரம்.. இன்னும் சில மாதங்கள் பொறுத்தால், அவனுக்கு சட்டப்பூர்வமாக விடுதலை கிடைத்துவிடும். தப்பிக்க முயற்சி செய்து சிக்கினால், வாழ்க்கை முழுவதும் ஜெயிலில் கழிக்க வேண்டியதுதான். அதனால் அவனுக்கு தப்பிப்பதில் விருப்பம் இல்லை. ஸ்கோஃபீல்ட் தன்னுடன் இணைந்து கொள்ள வாய்ப்பளித்தும் அவன் அதை ஏற்க மறுக்கிறான். ஆனால் திடீரென்று அவனுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அவனுடைய காதலிக்கு திருமணம் என்ற செய்தி கிடைக்கிறது.. தன் காதலியின் திருமணத்தை நிறுத்த வேண்டுமெனில் அவன் ஜெயிலிருந்து தப்பிக்க வேண்டும். அவன் வேறுவழியின்றி ஸ்கோஃபீல்ட்டுடன் இணைந்து தப்பிக்க முடிவு செய்கிறான்.


wallpaper_prison_break_sucre_amaury_nolasco-1400x1050

டீ பேக் என்றொரு ஆயுள் கைதி கதாபாத்திரம். அவனுக்கு தன்னுடைய முன்னாள் காதலியை கொலை செய்ய வேண்டும். அதற்கு வெளியே செல்ல வேண்டும். இது அவனுடைய பிரச்சனை.

Prison-Break-T-Bag

எப்படி குழப்பமில்லாமல் பல முக்கிய கதாபாத்திரங்களை கையாலாவது என்பதை பற்றியும், எப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒரு சுவாரஸ்யமான conflict-ஐ உருவாக்குவது என்பதை பற்றியும் இக்கதையிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பேக் ஸ்டோரி இருக்கிறது. சிறையின் ப்ளூ பிரிண்ட் ஸ்கோஃபீல்டிடம் எப்படி கிடைத்தது என எல்லாவற்றிற்க்கும் ஒரு கிளை கதை இருக்கிறது. கதையின் ஓட்டத்தை நிறுத்தாமல், எப்படி இவற்றை சாத்தியப்படுத்துவது என்பதையும் இங்கே புரிந்து கொள்ளலாம்.

கதையில் ஏராளமான கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், தேவையில்லாத கதாபாத்திரம் என்று எதுவும் வராதது ப்ரிசன் ப்ரேக்கின் மிகப்பெரிய பலம். பொதுவாக, கதையை முடித்து வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதாபாத்திரத்தை திடீரென்று அறிமுகம் செய்வது நியாயமாகாது. அதேபோல் கதையை வளர்க்க வேண்டும் என்பதற்க்காக, கதாபாத்திரங்களை திணிக்க கூடாது. ஆனால் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்த எங்குவேண்டுமானாலும் கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தலாம். அப்படி செய்யும் போது திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாக உருவாகிடும். இங்கே திருப்புனை கதாப்பாத்திரங்கள் நிறைய வந்த கதையின் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன. அதில் சில முக்கிய கதாபாத்திரங்களை பற்றியும், அதன் transformation பற்றியும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்…

P.S: திரைக்கதை ஸ்ட்ரக்சருக்கும் ஃபார்மட்டிங்கிற்கும் (formatting) வித்தியாசம் இருக்கிறது. ஹாலிவுட் ஸ்ட்ரக்சரை பின்பற்ற வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் Screen writing software-களை பயன்படுத்தி ஃபார்மட்டிங் செய்யும் போது, ஒரு திரைக்கதையின் தோரயமான ஸ்கிரீன் டைமிங் என்ன என்பதை எளிதில் கண்டு கொள்ள முடியும். எளிதாக Script break down செய்ய முடியும். இது ப்ரொடக்ஷன் செலவுகளை குறைக்க உதவும்.

 அடுத்த பாகத்தை இங்கே படிக்கலாம்
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2