நண்பனின் கடிதங்கள்- நெடுங்கதை


    அதே தாம்பரம் பீச் ரயில், கேண்டீன் அருகே வந்து நிற்கும் அதே பெட்டி, தம்பி அக்காக்கு காசு கொடு என்று கேட்கும் அதே திருநங்கைகள். ‘பாஸ் கொஞ்சம் நகுந்து உட்காருங்களேன்’. ‘இறங்கி ஏறு. இறங்கி ஏறுங்கப்பா’ ‘சார் மேஜிக் புக் சார் மேஜிக் புக். இருபது ரூவாய் தான்’ ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்’ ‘தயவு செய்து பயணிகள் வண்டி நடை மேடையில் நின்ற பின்பு இறங்கவும்’ வழக்கமான இத்தியாதிகளுக்கு மத்தியில் அந்த நாளும் மற்ற நாட்களைப் போல் ஒரு சாதாரண நாளாக தான் கழியும் என்று எண்ணிக் கொண்டு வங்கியை அடைந்தேன்.

வாசலில் காத்திருந்த நேபாளிகள் வணக்கம் வைத்தார்கள். மாதம் பத்து தேதி முதல் இருபது தேதி வரை நேபாளிகளின் கூட்டம்தான் வங்கியில். இங்கே சம்பாதித்த பணத்தை தங்கள் ஊரில் உள்ள குடும்பத்திற்கு அனுப்புவதற்காக வங்கி திறப்பதற்கு முன்பே வந்து வரிசையில் நின்றுக் கொள்வார்கள். முதல் ஆளாக பணம் அனுப்பினாலும், கடைசி ஆளாக அனுப்பினாலும் அந்த நாளின் இறுதியில் தான் பணம் நேபாலை சென்றடையும் என்று சொன்னால் கேட்கமாட்டார்கள். விடிவதற்குமுன்பே வந்து வரிசையில் நின்றுவிடுவார்கள். பணம் அனுப்பி இரண்டு மணி நேரத்தில் வந்து “சாப் கல்தி ஹோகயா” என்று பதறுவார்கள். நான் பதட்டமில்லாமல் என்ன என்று கேட்பேன்.

“காசு இன்னும் போய் சேரல பாய்” இதே காரணத்தை சொல்லிக் கொண்டு புதிதாக ஒரு வரிசையில் கூட்டம் நிற்கும். ஒவ்வொரு முறையும் அவர்கள் எல்லோருக்கும் வங்கி எப்படி இயங்குகிறது, ஏன் அவர்கள் பணம் சென்றடைய தாமதம் ஆகிறது என்று வகுப்பெடுக்க வேண்டியிருக்கும். மீண்டும் அடுத்தமுறை அதே காரணத்தை சொல்லிக் கொண்டு வந்து நிற்பார்கள். சீனியர் கிளார்க் கோபாலகிருஷ்ணன் அவர்களை கவனித்துக் கொள்வார். எனக்கு எல்லாவற்றையும் மேற்பார்வையிடுவதை தவிற பெரிய வேலை எதுவும் இல்லை.

மும்முரமாக வேலை செய்வது போல பாவனை செய்துக் கொண்டிருந்த இரண்டு அதிகாரிகளை கடந்து  நான் என் கேபினுக்குள் நுழைந்தேன். என் மேஜை மீதிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டுக் கொண்டிருந்த கோபால கிருஷ்ணன் என்னைப் பார்த்து புன்னகை செய்தார். நான் சம்ப்ரதாயமாக சிரித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

மேஜை மீது முந்தைய நாள் வந்த ஏராளமான கடிதங்கள் கிடந்தன. நான் முந்தைய நாள் ‘வேலை நிறுத்தம்’ காரணமாக வேலைக்கு வரவில்லை. எதற்காக வேலை நிறுத்தம் என்றெல்லாம் தெரியாது. நான் இருக்கும் யூனியன் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தகவல் அனுப்பி இருந்தது. அப்படி தகவல் வரும் போதெல்லாம் வங்கிக்கு வராமல் வீட்டிலேயே இருந்து விட வேண்டும். எதிர் யூனியனை சேர்ந்தவர்கள் வேலை செய்வார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நாங்கள் கலந்துக் கொள்ளாமல் வேலை செய்வோம். இந்த சங்கங்களை எல்லாம் கலைக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தால் அதை செய்துவிடுவேன். நாட்டில் வேலை இல்லாமல் பலர் இருக்க அரசாங்க வேலையில் அமர்ந்துக் கொண்டு சங்கம் கச்சேரி என்று காலம் கழிப்பவர்களை கண்டால் கோபம் வருகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்பது எனக்கு நன்றாக தெரிந்ததால், சங்கத்தை எதிர்த்துக் கொடி பிடிக்கும் எண்ணங்களை மூளையின் மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு, கடிதங்களை படிக்கத் தொடங்கினேன். பல சம்ப்ரதாயமான கடிதங்களுக்கு மத்தியில், புழல் சிறையிலிருந்து வந்திருந்த ஒரே ஒரு கடிதம் மட்டும் கவனத்தை ஈர்த்தது. பிரித்து படித்தால், குமாரனந்தம் எனக்கு நன்றி சொல்லியிருந்தார்.

குமாரனந்தம் ஒரு ஆயுள் தண்டனைக் கைதி. கடந்த வாரம் எங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி இருந்தார். கைதிகள் சிறையில் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்காக, அவர்களுக்கென்றே பிரத்தியேகமாக சேமிப்பு திட்டம் ஒன்று வங்கியில் உள்ளது. அவர்கள் சேமிப்பு கணக்கு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சிறை கண்காணிப்பாளரின் பரிந்துரைக் கடிதத்தை இணைத்து அனுப்ப வேண்டும். இதை யார் செய்தாலும் அவர்களின் கணக்கைத் தொடங்க வேண்டியது எங்கள் கடமை. என் வேலையை நான் செய்ததற்கு அவர் ஏன் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்!

யார் கணக்கு தொடங்கினாலும் அவர்கள் விலாசத்திற்கு. ‘வங்கி கணக்கு தொடங்கியமைக்கு நன்றி’ என்று குறிப்பிட்டு நாங்கள்தான் நன்றிக் கடிதம் அனுப்புவோம். உண்மையில் நன்றி சொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. வாடிக்கையாளரின் விலாசம் சரியானதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே பதிவு தபாலில் கடிதம் அனுப்புவோம். கடிதம் திரும்பி வந்துவிட்டால், மீண்டும் இன்னொரு கடிதம் அனுப்புவோம். அதுவும் திரும்பி வந்தால் கணக்கை மூடி விடுவோம். குமாரனந்தம் சிறையில் இருப்பதாலும். சிறை கண்காணிப்பாளர் சிபாரிசு கடிதம் தந்ததாலும் இங்கே விலாசம் சரிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதனால் நாங்கள் அவருக்கு நன்றிக் கடிதம் அனுப்பவில்லை.

ஆனால் குமாரனந்தம் எங்களுக்கு நன்றிக் கடிதம் அனுப்பியது, அதுவும் என்னை நண்பனாக பாவித்து கடிதம் அனுப்பியிருந்ததுஎனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் வங்கிக்கு வரும் கடிதத்தில் ‘மேலாளருக்கு’ என்றே விளிக்கப் பட்டிருக்கும். இவர் நண்பர் என்று விளித்திருந்தார். முத்துமுத்தான கையெழுத்தில் அந்தக் கடிதம் இருந்தது.

“அன்புள்ள நண்பரே,

வணக்கம். நலமா. இரண்டு வங்கிகள்ல கணக்கு தொடங்க முயற்சி பண்ணினேன். அவங்க அனுமதி தரல. நீங்க கணக்குத் தொடங்கியதற்கு நன்றி.
அன்புடன்
குமாரனந்தம்.”

யார் இவர். எதற்காக எனக்கு நன்றி சொல்கிறார். என்னைவிட வயதில் சுமார் இரண்டு மடங்கு மூத்த மனிதர் என்னை நண்பர் என்று அழைக்கும் போது பல வருடம் பழகிய ஒரு உணர்வு ஏன் ஏற்படுகிறது? இந்த வயதில் அவருக்கு சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? இந்த மனிதன் என்ன செய்துவிட்டு ஆயுள் தண்டனைக் கைதி ஆகி இருப்பார்? கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்று சொல்வார்களே, அது உண்மையோ?

நான் என் உதவியாளரை அழைத்து, குமாரனந்தத்தின் விண்ணப்பப் படிவத்தை எடுத்து வரச் சொன்னேன். படிவத்தில் இருந்த புகைப்படத்தில் சாந்தமாக தோன்றினார் குமாரனந்தம். ஆயுள் தண்டனைப் பெறும் அளவிற்கு இவர் என்ன குற்றம் செய்திருக்க முடியும்! ஒருவேளை கொலை ஏதும் செய்திருப்பாரோ? இருக்காது. இவ்வளவு சாந்தமான மனிதர் எப்படி கொலை செய்திருக்க முடியும்? படிவத்தை புரட்டினேன்.

முன்பு நான் எதையும் விலாவாரியாக கவனிக்கவில்லை. எந்த படிவமானாலும் இரண்டு அதிகாரிகளின் கையெழுத்து வேண்டும். அவ்வளவுதான். அதனால் என்னிடம் வேலை செய்யும் அதிகாரிகளே படிவத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வேலையை பார்த்துக் கொள்வார்கள். கடன் கொடுக்கும் துறையிலேயே நான் அதிக கவனம் செலுத்தி வந்தேன்.

குமாரனந்தத்தின் வீட்டு முகவரியை பார்த்தேன். ஒனம்பாக்கம் என்ற கிராமம். படித்திருக்கிறார். இளங்கலை கணிதம். அடுத்த பக்கத்தை திருப்பும்முன், ‘சார்’ என்றொரு குரல். காவி உடையில் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். ஆட்டோ ஓட்டுனர். கடனை திருப்பிக் கொடுக்காத ஆட்டோ ஓட்டுனராகதான் இருக்க முடியும். ஏனெனில் பெரும்பாலானவர்கள் கடனை அடைப்பதில்லை. நாங்களாக போன் செய்து கெஞ்ச வேண்டும். அவர்களே தேடி வந்தால் ஏதாவது காரணமாகதான் இருக்கும்.

“சொல்லுங்க….”

“சார், சீனிவாசன், ஆட்டோ லோன் வாங்கிருந்தேன்”

“உக்காருங்க….”

“சார் இல்லையா?”

“நான் தான் இப்ப சார். சொல்லுங்க.” எனக்கு அவரிடம் பேச வேண்டும் என்பதை விட, குமாரனந்தத்திற்கு பதில் கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

“சார், ஆட்டோ சின்ன ஆக்ஸிடெண்ட். அண்ணாநகர் ஸ்டேஷன்ல புடிச்சி வச்சுக்கிட்டாங்க. ஒரிஜினல் ஆர்‌.சி புக் கொடுத்தாதான் ரிலீஸ் பண்ணுவேனு சொல்றார் எஸ்‌.ஐ”

நான் அவர் பெயரை கம்ப்யூட்டரில் தட்டினேன். Non Performing Assets என்று வந்தது. வாராக்கடன். அவர் ஒருவருடத்திற்கு மேல் வட்டிக் கட்டவில்லை. அவர் தொடர்ந்து வட்டிக் கட்டியிருந்தால் ஏதாவது உதவி செய்திருக்க முடியும்.

“நீங்க ரொம்ப நாளா வட்டியே கட்டலயே. ஒரிஜினல்லாம் தர முடியாது, வேணும்னா ஓரிஜனல் எங்ககிட்ட தான் இருக்குனு லெட்டர் எழுதி தரேன்”

“சார். ஒரிஜினல் தான் சார் வேணும். நீங்க வேணா எஸ்ஐ கிட்ட பேசுங்களேன்”

“அதெல்லாம் முடியாதுங்க. ஜெராக்ஸ் வேனா தர சொல்றேன். வேணாம்னா  கிளம்புங்க” சொல்லிவிட்டு நான் குமாரனந்தத்தின் விண்ணப்ப படிவத்தை பார்த்தேன். நாமினேஷனில் மாலினி என்று எழுதியிருந்தார். மாலினி,  அவரின் மகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எதையோ யோசித்தவாறே நிமிர்ந்தால், ஆட்டோ ஓட்டுனர் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தார்.

“இங்க இருக்குறது டைம் வேஸ்ட் சார். நீங்க ஒழுங்கா கடன கட்டியிருந்தா ஒரிஜினல் புக்க மீட்டுட்டே போயிருக்கலாம்”

“வச்சுக்கிட்டா சார் ஏமாத்துறோம். வர வருமானம் குடும்பத்துக்கே பத்தல சார்”

அவர் சொல்வது நியாயம் தான். வங்கியிடம் பல நூறு கோடி கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவிடும் பெரும் முதலாளிகளை வங்கி நிர்வாகத்தாலோ அரசாங்கத்தாலோ ஒன்றும் செய்ய முடிவதில்லை. வாழ்வாதாரத்திற்காக கடன் வாங்கியவர்களைதான் வங்கி நிர்வாகம் துரத்தி அடிக்கும். ஆனால் நான் கேள்வி கேட்பதால் என்ன மாறிவிட போகிறது? ஆயிரமோ இரண்டாயிரோமோ அந்த ஓட்டுனருக்காக என்னால் கொடுத்து உதவ முடியுமே ஒழிய அவர் கேட்கும் அசல் புத்தகத்தை கொடுக்க முடியாது. அப்படியே உணர்ச்சி வசப்பட்டு கொடுத்தாலும் அவர் திருப்பி தருவார் என்று உத்தரவாதம் இல்லை. என் வேலைக்கு ஆபத்து வந்துவிடும். அவர் நல்லவராக புத்தகத்தை திருப்பி கொடுத்தாலும். ஒருவருக்கு உதவுகிறோம் என்று தெரிந்தால், கடன் வாங்கிய பலரும் ஏதாவது காரணத்தை சொல்லிக் கொண்டு தங்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று வரிசையில் நிற்பார்கள்.

அதனால் முகத்தை கோபமாக மாற்றிக் கொண்டு,

“கிளம்ப சொன்னா கிளம்புங்க சார். வேலை இருக்கு. உங்களுக்கு ஹெல்ப் பன்றது மட்டும்தான் வேலையா?”

என்று சொல்லிவிட்டு நான் அவரை நிமிர்ந்து பார்க்காமல், என் இருக்கைக்கு பின்னிருந்த பிரிண்டிங் இயந்திரத்தினுள்ளிருந்து ஒரு வெள்ளைத் தாளை எடுத்தேன். அந்த ஓட்டுனர் “சார் சார்” என்று விளித்ததை நான் சட்டை செய்யவில்லை. விருட்டென்று வெளியே சென்ற அவர், வெகு நேரம் வாசலில் நின்று சப்தம் போட்டார். “பேங்க் நடத்துறாங்க பேங்க்” இன்னும் ஏதேதோ சொன்னார். இதெல்லாம் பழகி விட்டது என்பதால் நான் கண்டுகொள்ளாது கடிதம் எழுதத் தொடங்கினேன்.

“அன்புள்ள குமாரனந்தம்

நான் நலம். நீங்கள் நலமா?

என் வேலையை மட்டுமே நான் செய்தேன். இதற்காக நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள்?” என்று கடிதத்தில் எழுதினேன். பின்பு அந்தக் கேள்வி மரியாதையாக இருக்காது என்று அந்தக் கடிதத்தை கசக்கி எறிந்து விட்டேன். அந்த கேள்வியை மட்டும் தவிர்த்து மீண்டும் அதே கடிதத்தை புதிதாக எழுதி கவரில் வைத்து ஒட்டி சிறை விலாசத்தை எழுதினேன். மேஜையில் இருந்த பெல்லை அடித்ததும் உதவியாளர் ஓடி வந்தார்.

“ஃப்ரம் சீல் போட்டு அனுப்பிடுங்க”

அவர் கடிதத்தை வாங்கிக் கொண்டு வெளியே சென்றார். வாசலை எட்டிப் பார்த்தேன். அந்த ஆட்டோ ஓட்டுனர் அங்கே இல்லை.

***

குமாரனந்தத்திடமிருந்து இரண்டாவது கடிதம் வர நான்கு நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் அனுப்பும் கடிதங்கள் கொரியரில் செல்வதால் மறுநாளே சென்றுவிடும். ஆனால் அவருடைய கடிதங்கள் தபாலில் வருவதால் தாமதமாகவே வந்தன. மேலும் சிறையிலிருந்து வாரம் இருமுறை தான் கடிதங்களை அனுப்ப முடியும். இதை குமாரனந்தம் தான் ஒருமுறை என்னிடம் சொன்னார். சில நேரங்களில் வாரம் ஒரு முறை மட்டுமே கடிதம் அனுப்ப அனுமதி தருவார்களாம். அதனால், கடிதம் வர ஒருவாரத்திற்கு மேல் கூட ஆனதுண்டு.

நான் அவருக்கு முதல் கடிதத்தை அனுப்பும் போது நானும் அவரும் இவ்வளவு நெருங்கிய நண்பர்களாக ஆகிடுவோம் என்று நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. நான் அவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதை போல் அவரும் என்னைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். அதனால் தான் இரண்டாவது கடிதத்தில், என்னைப் பற்றிய விவரங்களை நேரடியாயாகவே கேட்டிருந்தார்.

“அன்புள்ள நண்பா.

நானும் நலம். உங்க பேர் என்னனு சொல்லலையே? உங்கள் கையப்பத்திலிருந்து பெயரை கண்டுபுடிக்க முடியலயே!”

அதுவரை என் பெயரை நான் குறிப்பிட்டிருக்கவில்லை என்று அப்போதுதான் விளங்கியது. மேலும் என் வயதென்ன என்றும். என் குடுப்பத்தைப் பற்றியும் கேட்டிருந்தார். முதல் கடிதத்தை விட இந்த கடிதத்தில் வார்த்தைகள் அதிகமாக இருந்தது. உண்மையில் எங்களின் நட்பு வலுக்க வலுக்க கடிதத்தின் நீளமும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. பத்து பதினைந்து பக்கங்கள் கூட கடிதம் நீண்டிருக்கிறது.

ஆனால் இரண்டாவது கடிதத்திற்கு, “நான் முப்பத்தியிரண்டு வயது லோனர். தனிமை விரும்பி” என்று சுருக்கமாகவே பதில் அனுப்பினேன். இதை தவிர என்னைப் பற்றி சொல்வதற்கு உண்மையிலேயே ஒன்றும் இல்லை. அதற்கு, “Loneliness is godliness” என்று தலைப்பிட்டு குமாரனந்தம் பதில் அனுப்பி இருந்தார்.

“அன்பு நண்பா

நானும் உன்னைப் போலதான். நான் வேலையில்லாமல் சுத்தியிருக்கேன். எங்கெங்கோ பயனம் பண்ணியிருக்கேன்.  என் வாழ்க்கையில யார்யாரோ கடந்து போயிருக்காங்க. எல்லா நேரத்துலயும் என்கூட இருந்தது என் தனிமைதான்..”

அதுதான் அவர் என்னை முதல் முதலில் ஒருமையில் விளித்தது. அதை படிக்கும் போது, பதில் எழுதும் போது அவரை ‘அண்ணா’ என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் கடிதத்தை படிக்க யத்தனித்த போது அதிகாரி ஒருவர “சார்” என்றார். அது ஏன் குமாரனந்தத்தின் கடிதத்தை படிக்கும்போது மட்டும் எல்லோரும் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்!

அப்போதுதான் மணி ஆறு ஆனதை கவனித்தேன். ஐந்து மணியோடு வங்கியின் பணிநேரம் முடிகிறது. எல்லா கணக்கையும் சரிப்பார்த்துவிட்டு கிளம்ப மணி ஆறாகிவிடும். ஐந்து மணிக்கே கிளார்க்குகள் சென்று விடுவார்கள். அதிகாரிகள் வங்கியை பூட்டும் வரை இருக்க வேண்டும். ஏன் என்றெல்லாம் கேட்க கூடாது. வங்கியை பொறுத்த வரை இதுபோன்று ஏராளமான விதிமுறைகள் உள்ளன.

நான் உதவி மேலாளராக இருந்த காலத்தில் என்னுடைய மேலாளர் ஏழரை வரை வங்கியிலேயே கிடப்பார். வங்கியில் வேலையே இல்லையென்றாலும் அவர் ஏழரை வரை இருக்கையிலிருந்து எழ மாட்டார். வங்கியின் தொலைபேசியில் சொந்த கதை பேசிக் கொண்டிருப்பார். எனக்கு வீட்டில் ஒருவேலையும் இல்லை என்பதால் நான் வங்கியிலேயே அமர்ந்து ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். ஆனால் நான் மேலாளர் ஆன பின்பு அப்படி யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஆறுமணிக்கெல்லாம் கிளம்பிவிடுவேன். அப்படியே நான் தாமதமாக கிளம்ப நேரிட்டாலும், வங்கியைப் பூட்ட ஒரு உதவியாளரை மட்டும் வைத்துக் கொண்டு என் அதிகாரிகளை அனுப்பிவிடுவேன். ஆனால் கடிதத்தில் மூழ்கி இருந்ததால் நேரம் ஆனதை கவனிக்கவில்லை. கடிதம் என்னவோ மதியமே வந்துவிட்டது. அன்று வேலை நிறைய இருந்ததால் தாமதமாகதான் கடிதத்தை படிக்கத் தொடங்கினேன்.

“சார், காம் ஹே குச்?” என்று அந்த அதிகாரி வினவினான்.

“இல்ல. பூட்டிடலாம்” என்று சொல்லிவிட்டு கடிதத்தை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டேன்.

டிரைனில் மின்விளக்கு அணைந்து அணைந்து எரிந்ததால் கடிதத்தை உடனே படிக்க முடியவில்லை. எக்மோர் ஸ்டேஷன் வந்ததும்தான் விளக்கு சரியாயிற்று. நான் முதல் பெட்டியில் கடைசி இருக்கையில் ஜன்னலை ஒட்டி அமர்ந்திருந்தேன். எப்போதும் அந்த இடம் தான். கடிதத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன்.

“நாம எல்லாருமே உள்ளுக்க்குள்ள தனிமை விரும்பிங்கதான்….”

என் அருகில் அமர்ந்திருந்த வயதான மனிதர் ஒருவர் கடிதத்தை எட்டிப் பார்த்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அவரை நிமிந்து பார்த்தேன். அவர் எதுவும் தெரியாதது போல் தலையை திருப்பிக் கொண்டார். நான் கடிதத்தை வீட்டில் படித்துக் கொள்ளலாம் என்று பைக்குள் வைத்தேன். அவர் தன் வலபுரத்தில் அமர்ந்திருந்த இளைஞனின் மொபைலை பார்க்கத் தொடங்கினார். அந்த இளைஞன் வயதானவரை சட்டை செய்யாமல் யாருக்கோ தீவிரமாக காதல் ஸ்மைலிகள் போட்டு செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான். நான் ஜன்னலில் சாய்ந்து உறங்கிப் போனேன்.

மணி ஏழரை. வீட்டின் அருகே இருந்த அண்ணாச்சி மெஸ்ஸில் தோசை வாங்கச் சென்றேன். எப்போதும் அந்த நேரத்தில் எனக்காக தோசை பொட்டணம் காத்திருக்கும். ஆனால் அன்று அண்ணாச்சியின் மனைவி மிகவும் பிரயத்தனப்பட்டு அப்போதுதான் தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“மாஸ்டர் திடீர்னு வேலைய விட்டுட்டு போய்ட்டான் தம்பி… அதான் இன்னைக்கு லேட். கோச்சுக்காதீங்க” என்றார் அண்ணாச்சி.

அண்ணாச்சிக்கு அறுபது வயது இருக்கும். உழைப்பை கண்டு அஞ்சாத உடம்பு. குமாரனந்தத்திற்கும் அந்த வயதுதானே! அப்படி எண்ணும்போதுதான் உரைத்தது. நான் இதுவரை அண்ணாச்சியின் பெயரைக் கேட்டதே இல்லை. உண்மையில் வங்கியில் என்னைப் பார்த்து புன்னகை செய்யும் வாடிக்கையாளர்கள் பலரின் பெயரும் எனக்குத் தெரியாது. பெயரில் என்ன இருக்கிறது என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் அவர்களின் பெயரை தெரிந்து வைத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் பெயர் சொல்லி உரையாடினால் அவர்கள் எவ்வளவு நெருக்கமாக உணர்வார்கள்! இவ்வளவு நாள் தோன்றாத இந்த எண்ணங்கள் இப்போது மட்டும் ஏன் தோன்றுகின்றன?

“தம்பி. தோசை ரெடி”

தோசை பொட்டணத்தை வாங்கிக் கொண்டு ஒரு அடி நகர்ந்த நான், நின்று மீண்டும் கடையை நோக்கி திரும்பினேன்.

“என்ன தம்பி?”

“உங்க பேர கேக்கவே இல்லயே அண்ணாச்சி இவ்ளோ நாளா. உங்க பேரு?”

முகத்தில் ஆச்சர்யத்தை வெளிப்படுத்திய அவர், “அண்ணா…” என்று சொல்ல வந்து நிறுத்திக் கொண்டார். “முருகேசன்” என்று சொல்லிவிட்டு புன்னகை புரிந்தார். திடீரென்று அவர் முகம் பிரகாசமாக மாறியது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது.

வீட்டில் டி‌வி மீது தோசை பொட்டணத்தை வைத்துவிட்டு, வேர்வை அடங்குவதற்காக நாற்காலியில் அமர்ந்தேன். அந்த டி‌வி வெகுநாட்களாக ஓடுவதில்லை. அந்த பெட்டி இயங்கிக் கொண்டிருந்தபோது நான் வனவிலங்குகளை பற்றிய நிகழ்ச்சிகளை மட்டும் சிறிது நேரம் பார்ப்பேன். செயற்க்கையான ஒரு வாழ்க்கை முறையின் மீது மோகத்தை ஏற்படுத்தி நம்மை ஏங்க வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை. ஒருகட்டத்தில், மனிதர்களையே புரிந்துக் கொள்ள முடியவில்லை வனவிலங்குகளை புரிந்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று தோன்றியதால், நான் டி‌வி பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். அதனால் அந்த பெட்டியை சரி செய்ய முயற்சிக்கவில்லை. உடையை மாற்றிவிட்டு, அந்த தோசையை வேகவேகமாக விழுங்கிவிட்டு, குமாரனந்தத்தின் கடிதத்தை தொடர்ந்தேன்.

“நாம எல்லாருமே உள்ளுக்க்குள்ள தனிமை விரும்பிங்கதான். கூட்டமாக இருக்கும்போதும் ஒவ்வொருவரும் உள்ளுக்குள்ள அவங்கவங்க உலகத்தில பயணம் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். Collective loneliness-னு சொல்லுவாங்களே! அதனால தனிமை விரும்பியா இருக்கிறது தவறில்லை. ஆனால் தனித்துவிடப் பட்டவனாக ஆகிடக் கூடாது. நானும் தனிமை விரும்பிதான். அது நானா தேர்ந்தெடுத்துக்கிட்ட தனிமை. இங்க சிறைல யாருகிட்டயும் அதிகம் உரையாடுறதுயில்லை. பெரும்பாலும் புத்தகங்களோடுதான் வாழ்க்கை எனக்கு…”

அந்தக் கடிதம் முழுக்க தனிமையைப் பற்றிதான். அவர் நிறைய வாசிக்க கூடியவர் என்று அந்த கடிதம் உணர்த்தியது. அவரின் எழுத்து மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தாலும் அவர் பயன்படுத்தியிருந்த சில வார்த்தைகளின் அர்த்தத்தை தேர்ந்து கொள்ள அகராதியை எடுத்து பார்க்க வேண்டியிருந்தது. இறுதியாக, உன் வேலையெல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்றுக் கேட்டிருந்தார்.

நான் அதுபோன்ற ஒரு கேள்வியைதான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன் போல. பத்தி பத்தியாக பதில் எழுதினேன். பல நேரங்களில் மனதிற்கு பிடிக்காத வேலையைதான் செய்ய வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டேன். ஆட்டோ சீனிவாசனைப் பற்றி சொன்னேன். ஒரு மனிதனாக அவருக்கு உதவ வேண்டும் என்று ஆசை இருந்தாலும், ஒரு வங்கி அதிகாரியாக அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு நான் எந்த உதவியும் செய்யக் கூடாது.  முழுவதுமாக என்ன எழுதினேன் என்று மறந்துவிட்டது. இறுதியாக, “அடிமையாகி விட்டதை போல் உணர்கிறேன். எந்திரம் போல் காலை முதல் மாலை வரை எந்த லட்சியமும் இன்றி வாழ்க்கையை கழிக்கிறேன். எதற்காக ஓடுகிறோம் என்று தெரியவில்லை” என்று எழுதி கடிதத்தை முடித்தேன். பின் அந்தக் கடிதத்தை இரண்டு மூன்று முறை படித்தேன். எப்போது உறங்கிப் போனேன் என்று தெரியவில்லை.

வழக்கம் போல் ஏழு மணிக்கு அலாரம் அலற, நானும் வழக்கம் போல் அதை அனைத்துவிட்டு உறங்கினேன். அருகிலிருந்த கங்கை அம்மன் கோவிலில் சப்தமாக ஒலித்த பாடல் என் தூக்கத்தை கலைக்க கண்விழித்தேன். மணி ஏழரை. எட்டரை மணி ரயிலை பிடிக்க வேண்டும்.

வாசலுக்கு சென்று கோவில் வாசலில் நின்றுக் கொண்டிருந்த குருக்களுக்கு வணக்கம் வைத்தேன். அவர் என்னைப் பார்த்து புன்னகை புரிந்து விட்டு, கோவிலுக்குள் சென்றார்.

கோவிலில் ஒலிக்கும் பாடல்தான் உண்மையில் எனக்கான அலாரம். ஒருமுறை  கோவிலில் ஸ்பீக்கர் பழுதடைந்து போனதால், பாடல் போடவில்லை. விழித்துப்பார்த்தால் மணி பத்தானது, மொபைலை சைலன்டில் போட்டுவிட்டு உறங்கியதால், வங்கியிலிருந்து வந்த ஏராளமான அழைப்புகளை கவனிக்கவில்லை.

நான் போனால் தான் கல்லாவை திறக்க முடியும். கல்லாவிற்கு இரண்டு சாவிகள். ஒரு சாவி ஹெட் காஷியரிடம் இருக்கும். இன்னொரு சாவி என்னிடம் இருந்தது. எப்படியோ காஷியர் வரவுகளை வைத்து சமாளித்துவிட்டார். நானும் அவசர அவசரமாக வங்கிக்குள் ஓடி எதுவும் நடக்காதது போல் என் அறையினுள் அமர்ந்துக் கொண்டேன். இதை யதார்த்தமாக அந்த குருக்களிடம் சொன்னேன். அன்றிலிருந்து அவர் ஏழரை மணிக்கு நான் எழுந்துவிடுகிறேனா என்று பார்ப்பார். நான் ஏழரை மணிக்கு வெளியே வரவில்லையெனில் என் வீட்டுக் கதவை இரண்டு முறை தட்டிவிட்டுச் செல்வார்.

குமாரனந்தத்திற்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டேன். நடக்கும் வேகத்தில் வாசலில் நின்றே அம்மனை கும்பிட்டுவிட்டு  கோவிலை கடந்து சென்றேன். ரயில் நிலையத்தில் ஒரு வயதான பிச்சைக்காரர், “அண்ணே பசிக்குது. ஏதாவது கொடு” என்று சொன்னார்.  இவர்களுக்கு வேறு வேலையில்லை என்று எண்ணிய நான் அவர் சொல்லியதை  காதில் வாங்கிக்கொள்ளாமல் கேண்டீன் அருகே வந்து நின்றேன். அங்கே வந்த ஒருவர், கேண்டீனில் ஐந்து பொட்டலம் இட்லிகள் வாங்கிவிட்டு, சாம்பார் பொட்டலங்கள் போதாது என்று சண்டைப் போட்டார்.

கேண்டீனில்வேலை செய்யும் பையன், “அவ்ளோ தான் சார் தரமுடியும், அதிகமா கொடுத்த ஒனர் திட்டுவார்” என்றான்.

“இந்த சாம்பார் எப்படி பத்தும்!” என்று அவர் மீண்டும் கத்தினார். அந்த பையன் எந்த பதிலும் சொல்லவில்லை. அவர் ஏன் இப்டி அல்ப்பத்தனமாக  நடந்துக் கொள்கிறார் என்று எண்ணினேன். நான் அவரை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ரயில் வந்தது. ஜன்னல் சீட்டில் அமர்ந்து வெளியே அந்த மனிதரை பார்த்தேன். ரயில் கிளம்பத் தொடங்கியது.

“என்னமோ போப்பா எல்லாம் வியாபாரம் ஆகிடுச்சு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்த அந்த அல்ப மனிதர், ரயில் நிலையத்தில் இருந்த ஐந்து பிச்சைக்காரர்களுக்கும் ஆளுக்கொரு இட்லி பொட்டலத்தை கொடுத்துவிட்டு, மூச்சிறைக்க ஓடிவந்து டிரைனில் ஏறினார். நான் முகத்தை திருப்பிக் கொண்டேன்.

***

“நண்பா.
Survival of fittest – டார்வினின் கோட்பாட்ட எல்லாரும் தவறா புரிஞ்சு வச்சிருக்காங்க. டார்வினோட கோட்பாடின்படி நாம எல்லாரும் ‘பிட்டஸ்ட்’ தான். இல்லையா? ஆனால் நாமதான் அடுத்தவன் கால இடறிவிட்டு ஓடப் பார்க்கிறோம். ஒருவகையில நாம் பரிணாம வளர்ச்சியின் தோல்வி. ‘வேலை’ வாழ்கையில ஒரு அங்கமே ஒழிய அதுவே வாழ்க்கை இல்லை. ஆனால் நாம பிறந்ததே வேலைக்கு போகுரதுக்கதான்னு நம்மள நம்ப வச்சுட்டாங்க. நீ உன் வங்கி வேலையை விட்டுட்டா, உன் வங்கி நிர்வாகம் உன்ன கண்டுக்க போறதில்லை.  உனக்கும் உன்நிர்வாகத்திற்குமான உறவு நீ வேலையில் இருக்குற வரைக்கும்தான். அப்படினா  ஒருவன்  வேலைக்காக ஏன் வாழ்க்கையை தொலைக்கனும்? வாழ்க்கையே கொண்டடுவதற்குதான். அதை மறந்திட்டு,  ஒவ்வொரு நொடியையும் காசுக்காக விற்றுவிடும்போது நாம் அடிமையாகிடுறோம். அதற்காக வேலையை விட்டுவிட்டு சந்நியாசம் போக சொல்லல.  வேலை மட்டுமே வாழ்க்கை இல்லங்கறத உணர்ந்தாலே போதும்…

“நாம எல்லோரையும் பார்வையிலேயே எடை போடுறோம். எல்லோரைப் பற்றியும் நம்மகிட்ட ஒரு முன்முடிவு இருக்கு. பெரியோரை வியத்தல், சிரியோரை இகழ்த்தல் இலம்னுபடிக்குறதோட சரி..  அடுத்தவன் வாழ்க்கையை வாழ்ந்துப் பார்க்காமல் அவனை எடை போடுவது தவறு. நாம சக மனுஷனுக்கு துன்பம் தரமா வாழ்ந்துட்டு போய்டணும். அதான் உத்தமம்.

கடந்த ஆறுமாதங்களில் குமாரனந்தம் எனக்கு எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றையும் புரட்டி, கண்ணில் பட்ட பத்திகளை மட்டும் படித்துக் கொண்டிருந்தேன். இத்தனை வருடம் சிறைச்சாலைக்குள்ளே கழிக்கும் ஒரு மனிதனால் எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக எப்படி பேசமுடிகிறது? சிறையிலே ஒரு போதிசத்துவர்! குமாரனந்தத்தின் பார்வையில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இந்த ஆறு மாத நட்பில் அவருக்கு எதிராக நான் எதையும் சொல்லிடவில்லை.

அன்றாடம் என் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைத் தவிர என்னிடம் சொல்வதற்கு எதுவும் இருந்ததில்லை. நான் ரயிலில் சந்திக்கும் மனிதர்கள் தொடங்கி வங்கியில் சந்திக்கும் மனிதர்கள் வரை எல்லோரைப் பற்றியும் குமாரனந்தத்திற்கு எழுதி அனுப்புவேன். அவர் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும், சூழ்நிலைகளைப் பற்றியும் தன்னுடைய தெளிவான பார்வையை கடிதமாக அனுப்புவார். மீண்டும் யார் இவர் என்ற கேள்வியே என்னுள் மேலோங்கி நிற்க்கும்.

ஒருமுறை அவர் குடும்பத்தைப் பற்றி அவர் மகள் மாலினியைப் பற்றி விசாரித்து எழுதி இருந்தேன். அவரிடம் இருந்து தாமதமாகவே பதில் வந்தது. கோபித்துக் கொண்டாரோ என்று எண்ணினேன். சிறைச்சாலையில் ஏதோ போராட்டம் நடந்ததால் கடிதங்கள் வெளியே செல்லவில்லை என்றார். இப்போதைக்கு நண்பனாகிய நான் மட்டுமே அவருடைய குடும்பம் என்றும் தயவு செய்து வேறெதுவும் கேட்க வேண்டாம் என்றும் எழுதி இருந்தார். அதன்பின் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் எதுவும் கேட்கவில்லை.

எங்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது. மற்றபடி குமாரனந்தத்திடம் தொலைபேசியில்கூட உரையாடியதில்லை. இதைக் கூட அவரிடம் ஒருமுறை சொன்னேன், செல் போன் காலத்தில் பழைய காலத்து மனிதர்கள் போல் கடிதத்தில் உரையாடிக் கொண்டிருகிக்கிறோமே என்று, தான் செல்போன் உபயோகப்படுத்தியதில்லை என்று சொன்னார். பல வருடங்களுக்கு முன் தன் சிறை அதிகாரி கையில் பெரிதாக ஒரு கருவியை பார்த்ததாகவும். முதலில் அதை வாக்கிடாக்கி என்று எண்ணியதாகவும், பின்புதான் அது செல் போன் என்று தெரிந்ததாகவும் சொன்னார். ஆனால் செல்போன் பல வடிவம் பெற்று இன்று டச் போன் புழக்கத்தில் இருப்பதுவரை எல்லாவற்றையும் கவனித்து வருவதாக சொன்னார். முதன்முதலில் செல்போனை பார்க்கும் போது இருந்த வியப்பு இப்போது இல்லை என்றும் சொன்னார்.

அவர் சொல்வது சரிதான். நான் கல்லூரி படிப்பை முடித்து ஒரு சிறு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பின்புதான் முதல் செல்போன் கிடைத்தது. அதுவும் அந்த கம்பெனி நிர்வாகம் கொடுத்த ஒரு பழைய ஃபோன். ஆனால் அந்த பழைய போன் எனக்கு கொடுத்த பிரம்மிப்பை இப்போது நான் பயன்படுத்தும் விலை உயர்ந்த போன் கொடுப்பதில்லை. இதற்கும் குமாரனந்தம் மிக அழகாக பதில் எழுதி இருந்தார்.

“இந்தத் தலைமுறைக்கு எல்லாமே சீக்கிரமாகவும் எளிதாகவும் கிடைச்சிடுது நண்பா. வளர்ந்த பருவத்தில் கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் இளம் பருவத்திலேயே கிடச்சிறதுனாலஅவங்ககிட்ட இயல்பா இருக்கவேண்டிய ‘க்யூரியாசிட்டி’ இல்லாமல் போய்டுது. அங்க இயல்பில்லாத, வயசுக்கு மீறின ஆர்வம் வந்திடுது, அதனால தான் எளிதா தவறான பாதையில போயிடுறாங்க”

மேற்கொண்டு அந்த கடிதத்தைப் படிக்கவிடாமல் கன்டக்டரின் குரல் என்னை தடுத்தது.

“தம்பி இதான் ஸ்டாபிங்க்”

குமாரனந்தம் எனக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் பைக்குள் வைத்தேன். பஸ் நின்றது. குமாரனந்தத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனதின் மூலையில் இருந்தது உண்மைதான். அதற்காக மட்டும் அந்த ஊருக்கு செல்லவில்லை. இவ்வளவு ஞானம் பெற்ற ஒரு மனிதன் சிறைச்சாலையில் தனிமையில் வாடிக்கொண்டிருக்கிறார், அவருக்கோ அவரை சார்ந்தவருக்கோ என்னால் ஏதாவது உதவ முடியுமா என்று தெரிந்துக் கொள்வதற்காகதான் ஒனம்பாக்கத்திற்குச் சென்றேன். குமாரனந்தம் இதற்கு அனுமதி தரமாட்டார் என்றுத் தெரியும். அதனால்தான் அவரிடம் சொல்லவில்லை.

மதுராந்தகத்திலிருந்து வெறும் இரண்டு மணி நேர பயண தூரத்தில்  அமைந்திருந்த அந்த ஒனம்பாக்கம் கிராமம் வெளி உலக தொடர்பற்று அமைந்திருந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. தார் ரோட்டின் இருபுறமும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகள். பெரும்பாலும் கரும்புத்தோட்டமே கண்ணுக்கெட்டிய தூரம் வரைத் தெரிந்தது. அந்த ஊரின் பேர் எழுதப்பட்டிருந்த பலகை ஒரு ஆழமரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது. உச்சி வெயில் தலையை சுட்டதால், குளிர்ச்சியாக ஏதாவது குடிக்க வேண்டும் என்றுத் தோன்றியது. எதிரே இருந்த கடையில் ஒரு பன்னீர் சோடா வாங்கினேன். அந்த கடையில் பத்துவயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்து  வியாபாரம் செய்துக் கொண்டிருந்தான். கடைக்கு பின்னே அவன் வீடு இருந்தது. பன்னீர் சோடா குடித்து பலவருடம் ஆகிவிட்டிருந்தபடியால் அதை நான் சற்றுக் கூடுதலாகவே ரசித்துக் குடித்தேன். நான் யார் என்று விசாரிக்க உள்ளேயிருந்து வந்த கடைக்கார அக்கா, நான் பன்னீர் சோடா குடித்த லட்சணத்தைப் பார்த்து நான் சோடா குடிக்கத்தான் அந்தஊருக்கு வந்திருக்கிறேன் என்று முடிவு செய்துவிட்டார் போல. ஏனெனில் அவர் என்னை எதுவும் கேட்கவில்லை. சோடா பாட்டிலை வைத்துவிட்டு,

“அக்கா, இங்க 17 ஆம் நம்பர் வீடு எங்க?” என்றுக் கேட்டேன்.

அவர் பத்து, பதினொன்று என்று தனக்குள் முணுமுணுத்தவாறே அந்த ஊரை தன் கண்முன் நிறுத்தி பார்த்துவிட்டு,

“அங்க யாரும் இல்லயேபா. அது நான் இங்க வாக்கப்பட்டு வறதுக்கு முன்னாடி இருந்தே பூட்டி கிடக்கே”

அவருக்கு குமாரனந்தத்தைப்பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று புரிந்தது. அதனால் அவரை பற்றி எதுவும் கேட்காமல், அந்த இடத்தை மட்டும் தெரிந்துக்கொண்டு குமாரனந்தம் வீட்டை அடைந்தேன். சிறிய வீடு. கதவு பாதி உடைந்த நிலையில் இருந்தது. உள்ளே இருக்கும் இரண்டு அறைகளை வெளியே இருந்தே அந்த உடைந்தக் கதவின் வழியே பார்க்க முடிந்தது. இரண்டு திண்ணைகள் முழுக்க ஆடுகள் கட்டப் பட்டிருந்தன. அதில் ஒரு சிறிய ஆட்டிற்கு புல் ஊட்டிக் கொண்டிருந்தார் ஒரு வயோதிகர். அவருக்கு கிட்டத்தட்ட என்பது வயது இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம். அவர் அருகில் சென்றதும் அவர் என்ன என்பது போல் பார்த்தார். நானே பேச்சைத் தொடங்கினேன்.

“இது குமாரனந்தம் வீடு தான?”

அவருக்கு முதலில் நான் யாரைக் கேட்கிறேன் என்று புரியவில்லை. பின்பு சுதாரித்துக் கொண்டவராய், “இவ்ளோ வருஷம் கழிச்சு அவன தேடிக்கிட்டு யாரு?”

வீட்டின் உள்ளே இருந்து ஒரு நாய் வெளியே வந்தது. கிழவர் தன் தோளில் இருந்த துண்டை எடுத்து நாயின் மேல் ஓங்கி அடித்தார். நாய் குறைத்துக் கொண்டே ஓடியது. அந்த நாயின் சப்தம் கேட்டு வீட்டினுள்ளிருந்து இன்னும் இரண்டு நாய்கள் ஓடி வந்தன.

“எந்த நாயாவது வந்து சீட்டாடும், இல்ல இந்த நாய்ங்க வந்து குடும்பம் நடத்தும்” கிழவர் தனக்குத்தானே புலம்பினார். பின்பு என்னைப் பார்த்து,

“நீங்க யாருனு சொல்லலயே?” என்றார்.

என்னை அறிமுகம் செய்து கொண்டேன். குமாரனந்தம் எங்கள் வங்கியில் ஒரு கணக்குத் தொடங்கி இருப்பதால், முகவரியை சரிபார்க்க நான் வந்திருப்பதாக சொன்னேன். அவர் அதை எந்த அளவிற்கு நம்பினார் என்றுத் தெரியவில்லை. நான் அவரைப் பற்றி கேட்டேன்.

“நான் இங்கதான் பக்கத்துல இருக்கேன். திண்ணை சும்மா கடக்கேனு ஆடு கட்டி வச்சுக்கிட்டேன்” சொல்லிவிட்டு அவர் என்னை சட்டை செய்யாமல் தன் வேலையைத் தொடர்ந்தார். நான் மீண்டும் குமாரனந்தத்தைப் பற்றி கேட்டேன்.

“அவன் ஊறவிட்டு போய் முப்பது வருசத்துக்கு மேல ஆகுது. அவன் என் பையன்லாம் கூட்டாளி. அவன பெத்தவங்க போனதும் இங்க கொஞ்சநாள் தான் இருந்தான். அப்பறம் ஏதோ வெளியூர் போறதா போனான். திரும்பி வரவே இல்ல.”

கிழவரின் நிலையை என்னால் யூகிக்க முடிந்ததால் “உங்க பையன்?” என்று தயங்கித்தயங்கி கேட்டேன். கிழவர் துண்டால் தன் முகத்தை மூடிக் கொண்டு அழுதார். அதற்கு மேல் நான் அங்கு நிற்கவில்லை. இன்னும் சிலரிடம் விசாரித்தேன். பலருக்கும் குமாரனந்தத்தைப் பற்றி தெரியவில்லை. இளம் வயதில் வேலை நிமித்தமாக குமாரனந்தம் பூனாவிற்கு சென்றவரை அவர்களில் ஓரிருவருக்கு தெரிந்திருக்கிறது. யாருக்கும் அந்த ஊரைச் சேர்ந்த குமாரனந்தம் சிறைச்சாலையில் இருப்பது தெரியவில்லை. சூனியம் வைத்துவிட்டதால் அந்த குடும்பமே அழிந்து விட்டதாக ஒரு பெண்மணி சொன்னார். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

‘விண்ணப்ப படிவத்தின்படி அவருக்கு மாலினி என்று ஒரு மகள் இருக்கிறாள். அப்படியெனில் குமாரனந்தத்திற்கு பூனாவில் திருமணம் ஆகி இருக்கவேண்டும். அவர் பூனாவிற்குதான் சென்றார் என்பதில் என்ன நிச்சயம்? நாமினேஷனில் அவர் தன் மனைவிப் பெயரை குறிப்பிடவில்லை. ஒருவேளை அவரின் மனைவி இறந்திருக்ககூடுமோ? அவர் ஏன் சிறைக்கு சென்றார்?’

நான் யோசித்துக்கொண்டே நிற்கையில், ‘மதுராந்தகம்’ என்று பலகை போட்டு ஒரு பேருந்து வந்தது. ஏறினேன். ‘பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க’ பேருந்தில் இளையராஜா பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அந்த பெட்டிக் கடையில் இருந்த சிறுவன் எனக்கு டாட்டா காட்டினான். நான் அவனைப் பார்த்து சிரித்தேன். பேருந்துநகர்ந்தது.

***

இரண்டு வாரங்களாக குமாரனந்தத்திடமிருந்து கடிதம் வரவில்லை. நான் ஆடிட்டிங் வேலையாக கொல்கத்தா சென்றுவிட்டேன். தினமும் என் உதவியாளருக்கு போன் செய்து குமாரனந்தத்திடமிருந்து ஏதாவது கடிதம் வந்தததா என்று கேட்பேன். இல்லை என்பதே பதிலாக வரும். எனக்கு எதுவும் சரியாக படவில்லை. ஒருவேளை நான் ஓனம்பாக்கம் சென்று விசாரித்தது அவருக்கு தெரிந்துவிட்டதோ? அவரிடம் சொல்லாமல் அவரை பற்றி விசாரிப்பது நட்புக்கு நான் செய்த துரோகம் என்று அவர் கருதிவிட்டாரோ? வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. சென்னை வந்ததும் பணியில் சேராமல் நேராக புழல் சிறைக்கு சென்றேன்.

“அவர் போய் ரெண்டு வாரமாச்சே சார்” சொல்லிவிட்டு அந்தப் போலிஸ் கான்ஸ்டபிள் தொடர்ந்து லெட்ஜரில் எழுதிக் கொண்டிருந்தார்.

“எங்கப் போனாரு?” நான் கேட்க, அந்த போலீஸ்காரர் என்னை ஆச்சர்யமாக நிமிர்ந்துப் பார்த்தார்.

“லைஃப் கன்விக்ட் குமாரனந்தத்த தான சார் கேட்குறீங்க?”

நான் ஆம் என்று தலை அசைத்தேன்.

“அவர் இறந்துட்டாரே சார். ரெண்டு வாரம் ஆச்சு”

எனக்கு தலை சுற்றியது. எங்களின் நட்பு இப்படியா முடியவேண்டும்? அவரிடம் என்ன ஆனது என்று கேட்டேன்.

“அவரு ஹார்ட் பேசன்ட் சார்… நீங்க யாரு” என்றார். என்னால் பதில் பேச முடியவில்லை. அருகே இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது சிறையினுள் இருக்கும் கைதிகளை பார்க்க மனு கொடுக்கும் அலுவலகம்.

“சார் நீங்க பேங்க் மேனஜரா?

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். அங்கே நின்றவர் தன்னை சிறைக் கண்காணிப்பாளர் என்று அறிமுகம் செய்துக் கொண்டார். நான் ‘ஆம்’ என்றேன். இவர்களுக்கு எப்படி என்னைப் பற்றி தெரியும், குமாரனந்தம் சொல்லி இருப்பாரா என்று யோசிக்கும் போதே அந்த கண்காணிப்பாளரே தொடர்ந்தார்.

“லைஃப் கன்விக்ட்ட  ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை தான் பாக்க முடியும். அதுவும் வியாழக் கிழமை மட்டும் தான். குமாரனந்தம், லாஸ்ட் ரெண்டு வியாழக் கிழமை கேட்டாரு. என்ன பாக்க யாராவது மனு போட்டிருக்காங்களானு. இத்தன வருஷம் இல்லாம யாரு வருவானு கேட்டேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தர், பேங்க் மேனஜர்னு சொன்னாரு”

கான்ஸ்டபிள் அவர் அருகில் வந்து, “குமாரானந்தம் நிறைய லெட்டர் அனுப்புவாரே. அது இவருக்குதான் போல” என்றார்.

“ஓ!” என்றவாறே என்னை நோக்கிய கண்காணிப்பாளர், “கைதிங்க அனுப்புற லெட்டெர்ஸ்லாம் படிச்சிட்டுதான் அனுப்புவோம். அவரு நன்நடத்தைக் கைதிங்கிறதுனால படிக்காமயே போஸ்ட் பண்ணிட்டோம். ரொம்ப நல்ல மனுஷன்…”

அவர் பேசிய எதுவும் மேற்கொண்டு என் மனதில் பதியவில்லை. குமாரனந்தம் என்னைப் பார்க்க ஆசைப் பட்டிருக்கிறார். நான் அவரை வந்து பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்டிருக்கிறார். எனக்கேன் இது புரியாமல் போனது? முதல் கடிதத்திலேயே அவரை நண்பராய் உணர்ந்த என்னால் அவர் மனதில் இருந்ததை ஏன் உணரமுடியவில்லை? அவருடன் தொலைபேசியில் உரையாட வேண்டும் என்றுக் கூட எனக்கு ஏன் தோன்றவில்லை? அவர் குரலைக் கூட கேட்கவில்லையே! தான் ஒரு ஹார்ட் பேசன்ட் என்று அவர் ஏன் சொல்லவில்லை?

விடுமுறை நாட்களில் நான் எப்படி நேரத்தை கழிப்பேன், வார நாட்களில் விடுப்பு எடுக்க முடியுமா? என்று குமாரனந்தம் என்னிடம் ஒருமுறை கேட்டது நினைவிருக்கிறது. அந்த கேள்வியின் உள்ளர்த்தத்தை என்னால் ஏன் புரிந்துக் கொள்ள முடியவில்லை? சிறைக்கு வந்து என்னைப் பார் என்று சொன்னால் நான் கோபித்துக் கொள்வேன் என்று எண்ணினாரோ என்னவோ, என்னைப் பார்க்க விரும்புவதை அப்படி சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

எனக்கு அழுகை வந்தது. ஆனால் அங்கே அழ முடியாது.

“அவர் பொண்ணுக்கு இன்பார்ம் பண்ணீட்டீங்களா?” தளுதளுத்த குரலில் கேட்டேன்.

“இன்பார்ம் பண்றதா? அவரு ஏர்வாடா ஜெயில்ல இருந்தவரு சார். தான் ஒரு இதய நோயாளி, தமிழ்நாட்லதான் தன் உயிர் பிரியணும்னு மனு போட்டு ட்ரான்ஸ்பர் ஆகி வந்தவரு. பழைய ரெகார்ட்ஸ்ல இருக்குற அவரு புனே அட்ரஸ காண்டக்ட் பண்ணுனோம். அங்க அவரு பொண்ணு இல்ல. அதான் நாங்களே அடக்கம் பண்ணிட்டோம். அவரு இங்க வந்து அஞ்சு வருஷம் ஆச்சு. இதுவரை யாருமே வந்து பாத்ததில்லை. புனே ஜெயில்லயும் அவர யாரும் பாத்ததுக்கு ரெகார்ட்ஸ் இல்ல…”

அதன் பின் அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. வீட்டிற்கு சென்று அழ வேண்டும். நான் அவர்களிடம் விடைப்பெற்றுக் கொள்ள யத்தனித்தேன்.  அந்தக் கண்காணிப்பாளர் பேசினார்.

“இங்க ப்ராபர்டி அக்கௌன்ட்ல தான் கைதிங்க சம்பாதிக்கிற காச சேத்து வைப்போம். அவர் பேங்க்ல சேக்கணும்னு ஆசைப்பட்டாரு, அவர் அக்கவுண்ட்ல இருக்குற அமௌன்ட்ட நாமினிக்கு கொடுத்துடுவீங்க இல்ல?”

நாமினி தேடி வந்தால் தான் அவருக்கு சேரவேண்டிய பணத்தை தருவோமே ஒழிய நாங்களாக தேடி சென்று பணத்தை தருவது வழக்கமில்லை. யாரும் தேடிவரவில்லையெனில் அந்த காசு வங்கியின் சஸ்பன்ஸ் கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது அந்த காசு யாருக்கும் இல்லை என்று அர்த்தம். குமாரனந்தம் கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் சேமித்திருந்தார். அது மாலினிக்கு போய் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். சிறையிலேயே சேமித்தால் அது சாத்தியமில்லை என்று அவர் கருதி இருக்கலாம். தாம்வெகுநாட்கள் இவ்வுலகில்  இருக்கமாட்டோம் என்றும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் வங்கியில் கணக்கைத் தொடங்கி நாமினேஷனில் மாலினியை சேர்த்திருக்கிறார். அவர் புத்திசாலிதான்.

சிறை அதிகாரியிடம் என்ன சொல்வது? “சரி சார்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அதற்குள் ‘கொஞ்சம் இருங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவர், கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தார். அதை என்னிடம் கொடுத்த அவர்,

“ஆக்ச்சுவலி இத எங்க கஸ்டடில தான் வச்சுக்கணும். பட் நீங்க அவர் டாட்டருக்கு  அமௌன்ட் செட்டில் பண்ணும்போது இதையும் குடுத்துருங்க. இதான் அவரோட மிச்ச சொத்து”

சொல்லிவிட்டு, இதற்கு மேல் எங்களுக்கும் குமாரனந்தத்திற்கும் சம்மந்தமில்லை என்பது போல அந்த அதிகாரி உள்ளே போய் விட்டார். எல்லோரும் அவரவர் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டனர். அந்த கவரை பிரித்தேன். அதனுள் நான் எழுதிய கடிதங்கள் இருந்தன. திரும்பி என்னிடமே வந்துவிட்டதே என்று எண்ணும் போதுதான் இன்னும் பல கடிதங்கள் அதில் இருப்பதை கண்டேன். எல்லாம் குமாரனந்தம் தன் மகளுக்கு எழுதியது.

“மாலுமா

உனக்கு என் மேல் கோபம் இருக்கும்னு எனக்குத் தெரியும். அது குறையணும்னு நான் எதிர்ப்பார்க்கல. உன்னை தொந்தரவு செய்யவும் நான் விரும்பல. ஆனா…”

நிறைய கடிதங்கள் எழுதி இருந்தார். தேதிவாரியாக எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கடைசியாக இருந்த கடிதத்தை பார்த்தேன்.

“மாலுமா, எனக்கு புதுசா ஒரு நண்பர் கிடைச்சிருக்கார். வங்கி மேலாளர். அவரை நான் பார்த்ததேயில்லை.  ஆனால் அவர் மீது ஒரு மரியாதை கலந்த பாசம் உருவாகி போச்சு. உன் அண்ணன் இருந்திருந்தால் அவர் வயசு தான் இருக்கும். உனக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கனும்னு  ஆசையா இருக்கிறது…”

எல்லாக் கடிதங்களும் மாலுமா என்றுத் தொடங்கி, ‘அன்புடன் அப்பா’ என்று முடிந்தது. போஸ்ட் செய்யப்படாத அந்த கடிதங்கள் எதிலும் முகவரி இல்லை. எனக்கு எழுதிய கடிதத்திலும் அவர் அன்புடன் அப்பா என்றே எழுதி இருக்கலாம். எனக்கு மட்டும் யார் இருக்கிறார்கள்? அதுவரை அவர் என்ன குற்றம் செய்திருப்பார் என்று நான் எண்ணியது உண்மைதான். ஆனால் அவருடைய கடந்த காலத்தை தெரிந்துக் கொள்ள கூடாது என்று முடிவு செய்தேன். அதை தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவர் நிகழ்காலத்தில் எனக்கொரு நல்ல நண்பராய் இருந்திருக்கிறார். வாழ்க்கையை புதிதாக பார்க்க கற்று தந்திருக்கிறார். அதுவே போதும்.

ஆட்டோ பிடித்து வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தேன். ரயில் தொலைவில் வந்துக் கொண்டிருந்தது.

‘ரயில் உலகில் பயணிப்பதற்காக மட்டுமன்று. உலகை விட்டுப் பயணிப்பதற்காகவும்’

ஒரு பிரபலமடையாத கவிதை புத்தகத்தில் படித்த இந்த இரண்டு வரிகளும் காரணமின்றி நினைவுக்கு வந்தன. என்னை அறியாமல் பிளாட்பாரக் கோட்டினைத் தாண்டி தண்டவாளம் அருகே சென்றேன். ரயில் மிக அருகில் வந்துவிட்டது. குமாரனந்தத்தை சொர்க்கத்தில் சென்று பார்க்கலாம் என்று எண்ணிய அந்த தருணம் ஒரு கை என்னைப் பிடித்து பின்னே இழுத்தது.

“லூசாயா நீ. ட்ரைன் வரது தெர்ல” என்று கத்திவிட்டு அந்த மனிதர் வேகமாக நகர்ந்தார். அப்போதுதான் உரைத்தது. நான் போய்விட்டால், குமாரனந்தம் மாலினிக்காக சேர்த்து வைத்த பணத்தையும், அவளுக்காக எழுதிய கடிதங்களையும் அவளிடம் யார் கொடுப்பார்கள்? வேலையில் இருந்தால் மாலினியை தேடமுடியாது.வேலை இனி முக்கியமில்லை. என் நண்பனின் மகளை தேடவேண்டும்.

 

3 thoughts on “நண்பனின் கடிதங்கள்- நெடுங்கதை

  1. Pingback: நண்பனின் கடிதங்கள்- நெடுங்கதை – TamilBlogs

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.