ஸ்கூல் சீசன்- சிறுகதை


எனக்கு முடியை வித்தியாசமாக, ஸ்டைலாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் ஆசை இல்லை. ஆனால்  இந்த முறை எப்பவும் போல், பள்ளி பிள்ளைப்போல் முடிவெட்டிக்கொள்ளக் கூடாது என்று அக்கா சொன்னாள்.

“எலி கரண்டுன மாதிரி கரண்டிட்டு வந்தா வீட்டுக்குள்ள விடமாட்டேன்” வாசலைவிட்டு  இறங்கும்போது அக்கா மீண்டும் சொன்னாள்.

சிறுவயதில் அம்மா வேறுமாதிரி சொல்வாள், “முன்னாடி முடியவிட்டுட்டு வராத. ஒட்ட வெட்டிட்டு வா”

நானும் தோரயமாக அம்மாவிற்குப் பிடித்த மாதிரியும், எனக்குப் பிடித்த மாதிரியும் வெட்டிக் கொண்டு வந்து நிற்பேன். கொல்லைப்பக்கம் வா என்பாள். பின் என் அருகில் வந்து முன் முடியை பிடித்து பார்த்துவிட்டு, “முன்னாடி முடி அப்படியே இருக்கு”  என்று கடிந்துகொண்டு, என்னை மீண்டும் கடைக்கு அழைத்துச் செல்வாள். கடைக்காரன் நான் திரும்பி வருவேன் என்பதை முன்கூட்டியே அறிந்தவனைப் போல் என்னைப் பார்த்து ஏளனமாக சிரிப்பான்.

மறுநாள் பள்ளியில் எல்லோரும், “என்னடா எலி கரண்டிருச்சா?” என்று கேலி செய்வார்கள். பதினோராம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை கடைக்காரனே கேட்டான். “தம்பி நீ எத்தனாவது படிக்குற? பொம்பளை புள்ளைங்கலாம் கேலி பண்ணாத இப்டி வெட்டுனா?”

வளர வளர அம்மா மீது கோபமெல்லாம் குறைந்து விட்டது. கல்லூரி சேர்ந்த பின் அம்மா எப்படி முடிவெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் சொன்னதில்லை. ஆனாலும் எனக்கு ஸ்டைலாக வெட்டிக்கொள்வதில் ஆர்வம் வரவில்லை.

கடைக்குள் சென்று அமர்ந்ததுமே, கடைக்காரர் கேட்பார். “ஷார்ட்டா?” நான் தலை அசைப்பேன். அவ்வளவுதான். சில நேரங்களில் மெசினைப் போட்டு ஆர்மிகாரன் தலை போல் ஆக்கிவிடுவார். வேலைக்கு சேர்ந்த பின்பும் அப்படி வெட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.

“ஏண்டா ஸ்கூல் புள்ள மாதிரி வெட்டிருக்க?”

அக்காதான் மெனக்கெட்டு கோபித்து கொள்வாள். இப்பொது அக்காதான் அம்மாவாக இருக்கிறாள். அக்கா ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராக இருக்கிறாள்.

“என் ஆபிஸ்ல உன் வயசு பசங்கலாம் எப்டி ஸ்டைலா வராங்க தெரியுமா? அதுவும் இப்ப புதுசா சேர்ற பசங்கலாம் சோ கான்சியஸ் அபௌட் தேர் அப்பியரன்ஸ். நீ ஏன்டா இப்டி இருக்க?” என்பாள். நான் சிரித்துவிட்டு அமைதியாக நகர்ந்துவிடுவேன். மாமாவும் அக்காவைப் போல் அதே துறையில் இருந்தார்.

“ஏண்டா உன் ஆபிஸ்ல யாரும் கலாய்க்க மாட்டங்களா?” மாமா கூட ஒரு முறைக் கேட்டுவிட்டார். நான் மந்தைவெளியில் ஒரு வங்கியில் வேலை செய்தேன். என்னுடன் வேலை செய்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ‘எக்ஸ்பைரி’ தேதியை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ள போவதில்லை. கண்டுகொண்டாலும் எனக்கு இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ள தோணுவதில்லை.

நான் குஜராத்தில் வசித்த போது ஒரு பஞ்சாபி பெண்ணை ஒரு தலையாக காதலித்தேன். நான் வெகுதூரம் அவளை விட்டு கடந்து வந்த பின்தான் தெரிந்தது அவளும் என்னை ஒருதலையாக காதலித்திருக்கிறாள் என்று. இரண்டு, ஒரு தலை காதலர்கள்.  மீண்டும் குஜாராத் செல்லலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால் அதற்குள் அவளும் வெகு தொலைவு சென்றுவிட்டிருந்தாள். வாழ்க்கையிலும் தூரத்திலும். இப்போது காஷ்மீரில் இருக்கிறாளாம். ஒரே பிரசவத்தில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டிருந்தது. பேஸ்புக் சொன்னது. அந்த குழந்தைகளின் போட்டோவிற்கு ஏராளமான லைக் வந்திருந்தது. நானும் ஒரு லைக் போட்டேன். மறுநாள் என்னை ப்ளாக் செய்திருந்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு யார் மீதும் பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது. இப்படியே வாழ்க்கையை ஓட்டிவிடுவது உத்தமம் என்றே தோன்றுகிறது. ஆனாலும் அக்கா விட்டபாடில்லை.

“பொண்ணு பெங்கலூர்லயே வளர்ந்தவ. என் கொலீக்கோட ரிலேட்டிவ். நல்ல பாமிலி. எனக்கு ஓகே. நீ அவள எதாவது ரெஸ்டாரன்ட், காபி ஷாப்ல மீட் பண்ணி பேசு…

“நல்ல வரன். present yourself good!…”

அக்கா ஒரு பெரிய லெக்ட்சர் கொடுத்தாள். க்ரைஸ்ட் கிங் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த அக்கா இவ்வளவு நவநாகரிகமாக மாறிவிட்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இதைப்பற்றி அக்காவிடம் கேட்கத் தோன்றும். ஆனாலும் அவள் மனம் வருந்தக் கூடும் என்பதால் அமைதியாக இருந்துவிடுவேன். வாழ்க்கை மாறும்போது நாமும் மாறிக் கொள்ள வேண்டும் போல! எனக்குதான் இதெல்லாம் பிடிப்பட மறுக்கிறது.

“நல்லா முடி வெட்டிக்கோ. fruit facial பண்ணிக்கோ. அவர கூட்டிட்டு  போ சொல்றேன்”

அக்கா ஏதோ பெரிய கடைப் பெயரை சொல்லி போகச் சொன்னாள். மாமா எப்போதும் அங்கு தான் முடி வெட்டிக் கொள்வார். முடிவெட்டிக் கொள்ள முன்னூறு ரூபாய் என்றார்கள்.

நான் அந்த காசில் முடிவெட்டி, சவரம் செய்து கொண்டு, வரதராஜா திரையரங்கில் ஒரு படம் பார்த்துவிடுவேன். இப்போது சினிமாக்காரர்கள் ஸ்ட்ரைக் செய்கிறார்கள். ஒரு படமும் ஓடவில்லை. அதனால் நான் நூற்றி இருபது ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு, வழக்கமாக செல்லும் கடைக்கே செல்வதாக அக்காவிடம் சொன்னேன்.

“நல்லா ஸ்டைலா வெட்டச் சொல்லு. பின்னாடி கத்தி போட வேணாம்னு சொல்லு. அப்பத்தான் லுக்கா இருக்கும்” அக்கா சொன்னாள்.  அக்காவிற்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது என்று புரியவில்லை.  நான் தலை ஆட்டிவிட்டு கடை நோக்கி சைக்கிளை மிதித்தேன். முடி வெட்டிக்கொண்டு படம் பார்க்கும் திட்டமிருந்தால் நடந்து தான் போவேன். இல்லையேல் சைக்கில் நிறுத்த திரையரங்குகாரனுக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த காசில் ஒரு மசாலா பால் குடிக்கலாம்.

வழி எங்கிலும் முந்நூறு ருபாய் சிந்தனைதான். இருந்தாலும், முடிவெட்டிக் கொள்ள முன்னூறு ருபாய் அதிகம் தான். குஜராத்தில் பதினைத்து ரூபாய் இருந்தால் போதும். முடிவெட்டி தலைக்கு மசாஜ் செய்து விட்டு அனுப்பிவிடுவான் அந்த கடைக்காரன். அந்த கடை ஒரு மரத்தடியில் அமைத்திருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம் மற்றபடி அதே ப்ளேட் தான். அதே கண்ணடித்தான். ஆனால் ஏசிக் கடையில் விலை அதிகமாம். முடி வெட்டிக் கொள்வதற்கு எதற்கு ஏசி?  இங்கே எல்லாவற்றிலும் ஏசியை பொருத்தி விடுகிறார்கள். ஏசி சவப்பெட்டி வந்தால் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை. ஏதேதோ தேவையில்லாத ஆடம்பரங்களை பழக்கி கொண்டு, அவற்றை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டத்தில் மன அமைதியை கெடுத்துக் கொள்கிறோம்.

நான் கடைக்குள் நுழைந்த போது, கடைக்காரனும் ஒரு வாலிபனும் தீவிரமாக அந்த வாலிபனின் கையிலிருந்த போனை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கடைக்காரனுக்கும் என் வயசு தான் இருக்கும்.

அமர்ந்ததுமே கேட்டான்.

“ஷார்ட்டா வெட்டிடலாமா ஜி?”

“மீடியமா” என்றேன். அவன் ஆச்சர்யமாக பார்த்தான். எப்போதும் மெசின் கட் என்று சொல்லும் ஆள் நான்.

அவனிடம் உண்மையை சொல்லலாமா என்று பார்த்தேன். ஏனெனில் என் பின்மண்டையில் விழத் தொடங்கிய வழுக்கையை பார்த்து அவன்தான் பெரிதும் வருத்தப் பட்டான்.

“ஜி சீக்கிரம் கல்யாணம் பண்ணிகோங்க ஜி” என்பான்.

“வீட்ல பங்க்ஷன். மீடியமா வெட்டுங்க” என்றேன். நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வாலிபனையே பார்த்தான். வாலிபன் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வாலிபன் நிமிர்ந்து, “ஜி. நீங்க இந்த ஏரியா தானே?” என்றான். நான் ஆம் என்று தலையசைத்தேன்.

“A R N ஸ்கூல் CBSE -யா மெட்ரிக்கா?” அந்த வாலிபன் என்னிடம் வினவினான்.

நான் மெட்ரிக் என்றேன்.

“சொன்னேன்ல” என்று கடைகாரானைப் பார்த்தான்

“இல்ல ஜி. இப்ப CBSE-யும் ஆரமிச்சிட்டாங்க. போன் பண்ணி விசாரிச்சுட்டேன்” என்றான் இவன்.

“ஒ! எனக்கு தெரியாது” என்றேன்

“அப்பா பீஸ் நிறைய இருக்கும்” அந்த வாலிபன் சொன்னான்.

“பரவால. நீ பாரு” என்றவாறே என் தலையில் தண்ணீரை அடித்தான். மெசினை எடுக்கப் போனவன், ஒரு கணம் சுதாரித்துவிட்டு  கத்திரிக்கோலையும் சீப்பையும் எடுத்தான்.

“அண்ணே லோட் ஆகிடுச்சு” அந்த வாலிபன் கத்தினான். இவன் வேகமாக அவனை நோக்கி ஓடினான்.

“சீக்கிரம் குட்டி. போய்ட போது” இவன் பதறினான்.

“பாப்பா பேரு சொல்லுனே”

“மோனிஷ்கா” என்றவாறே என் தலையை படிய வாரினான்.

பின் என்னிடம் , “பாப்பாவுக்கு ஸ்கூல் அட்மிஸன்ஜி, இப்ப எல்லாம் நெட் ஆக்கிடாங்க ஜி. ஸ்கூல்ல லைன்ல நிக்க சொல்லிருந்தா இந்நேரம் என் வைப்ப நிக்க சொல்லிருப்பேன்”

நான் புன்னகை செய்தேன்.

“வயசுனே?” அவன் ஒவ்வொரு விவரமாக கேட்டான். இவன் சொல்லிக்கொண்டே முடியை வெட்டத் தொடங்கினான்.

“உன் மாச வருமானம்”

இவன் யோசித்தான். “நாப்பதாயிரம் போட்டுக்குறேன்”

“டேய் அவ்ளோலாம் இல்ல”

“அண்ணே கம்மியா போட்டா சீட் தரமாட்டாங்க. அவ்ளோ பீஸ் நீ கட்டுவியான்னு யோசிப்பாங்க”

இவன் தலையசைத்தான்.

“என்ன படிச்சிருக்க…”

“SSLC” என்றவாறே என் முன் முடியை சீப்பால் வாரிப் பிடித்து வெட்டினான்.

“B.A- னு போடறேன் “

“டேய் வேணாம்டா. பர்ஸ்ட் டைம் ஸ்கூல் சேக்குறேன். பொய் சொல்ல வேணாம்”

“உண்மைய சொன்னாலாம் வேலைக்காகது. நீ என்ன டாக்டர்னா சொல்லப்போற?  ஏதோ டிகிரி தான!”

“கண்டுபுடிச்சா பிரச்சனை ஆகிடும் குட்டி. “

“அதெல்லாம் கண்டுபுடிக்க முடியாது. செர்டிபிகேட் ரெடி பண்ணிடலாம்”

“அதுக்கு வேற செலவு பண்ணனுமா” இவன் அலுத்துக் கொண்டான். நான் அவர்கள் பேசுவதையே ஆர்வமாக பார்த்தேன்.  அவன் இப்போது பின் முடியை வெட்டி விட்டு, கையில் கத்தியை எடுத்தான்.

“ஜி பின்னாடி கத்தி போட வேணாம்” என்றேன். அவனுடைய கவனம் மொபைலின் மீது இருந்தது. கிருதாவை மட்டும் சரிசெய்துவிட்டு மீண்டும் கத்திரிகோலை எடுத்து,

“ஜி இந்த சைட் சரியா வெட்ல” என்று இடது புறம் முடியை சரி செய்தான்.

அதற்குள் அந்த வாலிபன் இவனைப் பார்த்து, “கம்… ஹ்ம். கம்யுனிட்டி” என்றான்

இவன் என்னைப் பார்த்தான்

“BC, OBC, அந்த மாதிரி”

பின் அவன் ஜாதியைக் கேட்டான். இவன் சொல்ல, அவன் ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் கேட்டான். இவன் மீண்டும் என்னைப் பார்த்தான். மாறிமாறி கேள்விகள். பதில்கள். மீண்டும் வலது புறம் முடியை கத்தரித்தான்.

அந்த வாலிபன், “ஒரு நிமிஷம் இரு வரேன்” என்று வெளியே நகர எத்தனித்தான்.

“பாதியில விட்டு எங்கடா போற ?”

அவன் சுண்டு விரலை உயர்த்திக் காண்பித்தான்.

“டேய் முடிச்சு குடுத்துர்றா?”

“வந்துட்டேனே” அவன் கிளம்பினான்.

நான் மொபைலை வாங்கினேன். இன்னும் இரண்டு பக்கங்கள் கேள்விகள் மிச்சமிருந்தன. வேலைக்கான விண்ணப்ப படிவத்தில் கூட இவ்வளவு கேள்விகள் இருந்ததில்லை. நான் நான்கு கேள்விகள் பூர்த்தி செய்திருப்பேன். திரும்பி வந்த அந்த வாலிபன் மொபைலை வாங்கிக்கொண்டான்.

“உங்களுக்கு லேட் ஆகப் போது ஜி, அவன் பில் பண்ணுவான்” கடைக்காரன் சொன்னான். அந்த வாலிபன் தன் வேலையைத் தொடர்ந்தான். இவன் என் தலையில் கை வைத்தான்.

“Application submitted successfully.  your reference no is…” அந்த பையன் படித்தான்.

நான் கண்ணாடியில் தலையை பார்த்தேன். ஒரு பக்கம் மட்டும் முடி நிறைய வெட்டப்பட்டிருந்தது. தலை முக்கோண வடிவில் தெரிந்தது. நான் கடைக்காரனைப் பார்த்தேன். மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் முகத்தில் எதையோ சாதித்த பரவசம் வெளிப்பட்டது. பின் அவன் என்னை பார்க்க, நான் என் தலையை சுட்டிக் காண்பித்தேன்.  அந்த பரவசம் மறைந்தது.

“ஜி சாரி ஜி. இந்த டென்ஷன்ல இருந்துட்டேன்…”

“பரவால, என்ன பண்றது”

“மறுபடி கத்திரி போட்டா திட்டுத்திட்டா தெரியும். மெசின் போட்டாதான் ஈவன் ஆகும் ஜி” அவன் தயங்கி தயங்கி சொன்னான்.

நான் தலை அசைத்தேன். இரண்டு நிமிடத்தில் என் தலை ஆர்மிக்காரன் தலை ஆனது. அக்கா பாஷையில் சொன்னால், ஸ்கூல் பையன் கட்டிங். நான் மீண்டும் கண்ணாடியை பார்த்த போது, கண்ணாடியினுள் அக்கா நின்றுகொண்டு தலையில் அடித்துக் கொள்வது போல் இருந்தது. வீட்டுக்கு போனால் அக்கா சாமியாடக் கூடும். பரவாயில்லை, ஒரு பிள்ளையின் படிப்பை விட, பெண் பார்க்கும் படலம் அவ்வளவு முக்கியமில்லை.

4 thoughts on “ஸ்கூல் சீசன்- சிறுகதை

  1. சுவாரஸ்யம் குறையாத நடை.. கண்ணாடியில் அக்கா தலையில் அடித்துக்கொள்வது – மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.