மேக்கிங் மூவீஸ்- சிட்னி லூமெட்- சினிமா புத்தகங்கள்-2


சினிமா பேசும் புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகம்.  கதை எழுதுவது தொடங்கி படத்தை திரையிடுவது வரை எல்லாவற்றைப் பற்றியும் எல்லா துறைகளைப் பற்றியும் இந்த புத்தகத்தில் விவரிக்கிறார் லூமெட்.

ஒரு கதை எதைப் பற்றியது? திரைக்கதையாசிரியர், இயக்குனர் தொடங்கி படத்தொகுப்பாளர் வரை எல்லோருமே தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான் என்கிறார் லூமெட். இந்த கேள்வி தான் புத்தகம் முழுக்க வருகிறது. மேலும் படத்தின் முடிவு பார்வையாளர்களுக்கு எந்த உணர்வை ஏற்படுத்த போகிறது என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்ள வேண்டுமாம். இத்தகைய கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வதன் மூலமே நல்ல படத்தை உருவாக்கிட முடியும் என்கிறார் லூமெட்.

படம் எதைப் பற்றியது என்பதை கண்டுகொண்ட பின்னர், அவர் அடுத்த கட்ட வேலைகளை தொடங்குவாராம். முதலில், அவரும் எழுத்தாளரும் ஒவ்வொரு காட்சியும் எதைப் பற்றியது என்பதை விவதிப்பார்களாம். இந்த காட்சி படத்தின் தீமிற்கு வழு சேர்க்கிறதா? கதையை முன்னெடுத்து செல்கிறதா? கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்கிறதா? இந்த வசனம் இந்த காட்சிக்கு தேவைதானா? என்றெல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டும், எனினும் இறுதி முடிவு எழுத்தாளருடையதாகவே இருக்குமாம். “இயக்குனரும் எழுத்தாளரும் வெவ்வேறு பரிமாணங்களை படத்திற்கு கொடுக்க முயல வேண்டும். அப்போது மூன்றாவதாக ஒரு பரிமாணம் உருவாகும்”.

making-movies

கேமராவை வைத்து வித்தைகள் செய்வதிலெல்லாம் லூமெட்டிற்கு நம்பிக்கை இல்லை.  ஒளிப்பதிவு சரியில்லா பெர்பார்மன்ஸை சரிபடுத்த உதவும். ஒரு காட்சியின் நோக்கமே, அதை எந்த லென்ஸை (வைட் ஆங்கில் லென்ஸ் அல்லது லாங் லென்ஸ்) பயன்படுத்தி உருவாக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்யப் போகிறது. வெறும் அழகான இமேஜ்களை உருவாக்கும் பொருட்டு ஒளிப்பதிவு முடிவுகள் இருக்க கூடாது. காட்சி எத்தகைய தாக்கத்தை மக்களின் மனத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு இயக்குனர் விரும்புகிறாரோ அதற்கேற்றார் போல் லென்ஸை தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்.

மேலும், சினிமாவை பொறுத்த வரை ‘ஸ்டைல்’ என்று தனியாக ஒன்றும் கிடையாது என்கிறார். கதை மாற மாற ஸ்டைல் மாறும். “அடிப்படையில் சினிமா என்பது கதை சொல்லுதல். சில படங்கள் வெறும் கதை சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல், பார்வையாளர்களுக்கு அவர்களை பற்றி அவர்களுக்கே தெரியாத விசயங்களை சொல்லும். ஒரு இயக்குனர் எப்படி கதையை சொல்கிறார் என்பதிலேயே இதன் சாத்தியக்கூறு அடங்கி இருக்கிறது. அந்த ‘எப்படி’ என்பதையே ஸ்டைலாக கொள்ளல் வேண்டும்.”

“தனித்து தெரியாத ஸ்டைலே நல்ல ஸ்டைல்”

“ஸ்டைல் , உணர்வுபூர்வமாக இருத்தல் வேண்டும். ஒப்பனைக்காக செய்யப்படுவதெல்லாம் ஸ்டைல் கிடையாது. கதையின் மூலமே ஸ்டைலை தேர்வு செய்ய வேண்டும்

ஒரு இயக்குனர் அந்த ஸ்டைலை எப்படி இறுதி செய்கிறார்? இதற்கு மூன்று வகையான உத்திகளை பின்பற்ற முடியும் என்கிறார் அவர்.

ஒன்று, எப்படிபட்ட ஸ்டைகளில் படம் இருக்கக் கூடாது என்பதை கண்டுகொண்டு அவற்றை தவிர்த்தாலே நல்ல ஸ்டைல் உருவாகிவிடும். பல நேரங்களில் படத்தின் தீமே, தனக்கு தேவையில்லாத ஸ்டைலை களைந்து விடும்.

இரண்டு, சிலநேரங்களில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஸ்டைல் உருவாகிவிடும். திரைக்கதையை படித்து முடித்ததுமே இந்த படம் இந்த ஸ்டைலில் தான் இருக்கப் போகிறது என்று கண்டுகொள்ள முடியும்.

உதாரணமாக அவர் டாக் டே ஆஃப்டர்னூன் படத்தினை சொல்கிறார். அது நிஜக் கதை. அதனால் அதன் காட்சியமைப்பு ஒரு டாக்குமெண்டரி போல் இருந்தால் மக்களால் அந்த கதை உண்மையில் நடந்தது என்று எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதனாலே அதன் மேக்கிங் மிகவும் யதார்த்தமாக இருந்தது என்கிறார்.

மூன்றாவதாக, படத்தின் எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் ஆகியோரிடம் விவாதிப்பதன் மூலம் நல்ல ஸ்டைலை தேர்ந்தெடுக்க முடியும் என்கிறார்.

அவரின் இளமைக் காலகட்டத்தில், படங்கள் படத்தொகுப்பில் தான் உருவாகின்றன என்ற நம்பிக்கை இருந்ததாம். காரணம் அப்போது ஸ்டுடியோக்கள் இயக்குனர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரே இயக்குனர் ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களை இயக்கிக் கொடுப்பார். படத்தொகுப்பாளர் தான் படத்தின் இறுதி வடிவத்தை முடிவு செய்வார். ஆனால் இதெல்லாம் மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தான் லூமெட் படம் இயக்க தொடங்கியிருக்கிறார். அவர் சொல்வது, ஒரு இயக்குனர் காட்சிகளை உருவாக்கினாலொழிய படத்தொகுப்பாளரால் எதுவும் செய்ய முடியாது என்பதே. அதே சமயத்தில் படத்தொகுப்பின் முக்கியத்துவத்தை அவர் மறுக்கவில்லை. மாறுபட்ட இமேஜ்களாக காட்சிகளை இணைப்பதும், கதைக்கு தேவையான டெம்போவை உருவாக்குவதுமே படத்தொகுப்பின் மிக முக்கிய வேலை என்று அவர் குறிப்பிடுகிறார். “ஒரு இமேஜ் எத்தனை ப்ரேம்கள் வரப்போகின்றன என்ற முடிவு மிக முக்கியமானது. அந்த இமேஜ்கள் தான் படத்தை மக்கள் மனதில் பதிக்கப் போகிறது. இந்த முடிவில்தான் படத்தொகுப்பாளரின் ஆளுமை இருக்கிறது.”

படத்தொகுப்பு சரியில்லை என்று விமர்சகர்கள் வைக்ககூடிய கருத்தை லூமெட் ஏற்கவில்லை. படத்தொகுப்பில் இருக்கும் குறைகளை படத்தொகுப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரை தவிர வேறு யாராலும் கண்டுக் கொள்ள முடியாதென்று அவர் அழுத்தமாக சொல்கிறார்.

ரஷஸ் (Rushes) பார்ப்பதை பற்றியும் லூமெட் அறிவுரை சொல்கிறார். அவர்கள் படத்தொகுப்பு முடிந்து ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் உருவாக்கிய காட்சிகளை பார்ப்பது வழக்கமாம். அன்றைய படப்பிடிப்பின் மனநிலையில் அந்த காட்சிகளை பார்க்கக் கூடாது. படப்பிடிப்பு சரியாக அமையாத பட்சத்தில் அது இறுதி காட்சியை தேர்வு செய்யும் முடிவை பாதிக்கும். அதனால் ஒவ்வொரு முறை Rushes பார்க்கும் போதும் புதிய மனிதனாக செல்லவேண்டும் என்பது அவர் சொல்லும் முக்கிய அறிவுரை.

நடிப்பை பற்றி சொல்லும் போது ஒத்திகை இன்றியமையாதது என்கிறார். ஒரு நடிகர் சில காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும், சில காட்சிகளில் நடிக்காமல் அவராக வந்துவிட்டு சென்றாலே போதுமானதாக இருக்கும். இதை கண்டுக்கொள்வதற்கு இயக்குனருக்கும் நடிகருக்குமிடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும். இத்தகைய புரிதலை ஒத்திகை உருவாக்கி தரும் என்கிறார் லூமெட்.

மேலும் லூமெட் சொல்வது,

“நல்ல படங்கள் தோற்ப்பதுண்டு. சுமாரான படங்கள் வசூலை வாரிக் குவிப்பதுண்டு. வசூலை வைத்து படத்தின் தரத்தை நிர்ணயிக்க கூடாது”

“தலைசிறந்த படத்தை உருவாக்கும் வித்தை யாருக்கும் தெரியாது. ஒரு படம் தலைசிறந்ததாக மாறுவது அதிர்ஷ்டகரமான விபத்து”

“திரைப்படத்தை உருவாக்குவது ஒரு மொசைக்கை உருவாக்குவது போல. ஒவ்வொரு செட்டப்பும் ஒரு சிறிய டைல்களை போல. ஒவ்வொன்றாக வடிவமைத்து, முடிந்தவரை பாலிஷ் செய்து எல்லாவற்றையும் சரியாக பொறுத்த வேண்டும். இப்படி பல சிறிய டைல்கள் சேர்ந்து ஒரு மொசைக் உருவாவது போல பல செட் அப்களின் தொகுப்பே ஒரு படம். இறுதி வடிவம் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நாம் எண்ணினோமேயானால், ஒவ்வொரு சிறிய முடிவுகளையும் அதற்கு ஏற்றாற்போல் எடுக்க வேண்டும், ஒவ்வொரு கல்லையும் இறுதி வடிவத்திற்கு ஏற்றாற்போல் அடுக்க வேண்டும்.”

ஒரு படத்தை இயக்கும் போது இயக்குனரின் இன்புட்கள் இருந்தாலும் அந்தந்த துறைசார்ந்தவர்கள் எடுக்கும் முடிவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்  என்பதை லூமெட் இந்த புத்தகத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் போராடி தங்களுடைய முதல் ஸ்டுடன்ட் பிலிம்களை உருவாக்குகிறார்கள். சிலருக்கு, பிரபலமடைவதும் பணம் சம்பாதிப்பதும் நோக்கம். ஆனால் சிலர் தங்களுக்கு முக்கியமென்று படுவதை உலகிற்கு சொல்ல முயற்சிக்கிறார்கள். அந்த பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.  அவர்களில் சிலர் நல்லப் படங்களை உருவாக்க விரும்புகிறார்கள்”- சிட்னி லூமெட்