தி காஞ்ஜூரிங்


நன்றி ஆழம் 

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் பேய் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். அந்த வகையில், அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் திரை வடிவமே, அண்மையில் வெளியான, தி காஞ்ஜூரிங். உலகளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுவரும் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்.

பெரோன் தம்பதியர், தங்கள் ஐந்து மகள்களுடன் புது வீட்டிற்கு குடி புகுகிறார்கள். ஆனால் அவர்களின் செல்ல நாய் மட்டும் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க மறுக்கிறது. அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளமால், புது வீட்டில் முதல் நாள் பொழுதை சந்தோசமாக கழிக்கின்றனர். மறுநாள் அவர்களின் செல்ல நாய் வாசலில் இறந்து கிடக்கிறது. அன்றிலிருந்து, தினமும் அதே இடத்தில், புறாக்கள் செத்து விழுகின்றன.  வீட்டில் உள்ள அனைத்து கடிகாரங்களும், விடியற் காலை 3.07-க்கு நின்று விடுகின்றன. சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் படங்கள் கீழே விழ தொடங்குகின்றன. வீட்டினுள் ஏதோ கெட்ட சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் மிகவும் தாமதமாக புரிந்து கொள்கின்றனர்.

என்ன செய்வது என்று தெரியாது விழிக்கும் பெரோன் தம்பதியர், இறுதியில் அமானுஷ்ய சக்திகளை பற்றி ஆராய்ச்சி செய்யும், வாரன் தம்பதியரின் உதவியை நாடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கு வந்து ஆராய்ச்சி செய்த பின்னர் தான் தெரிகிறது, வீட்டில் ஒரு பேய் மட்டும் இல்லை, பேய்கள் இருக்கின்றன என்று. ஆறு வயது பேய் முதல், 60 வயது பேய் வரை வீட்டினுள் நிறைய பேய்கள் இருக்கின்றன. அதில் சில பேய்கள் நல்ல பேய்கள். அவர்களால் எந்த ஆபத்தும் இல்லை. அந்த வீட்டில் இருப்பதிலே கொடூரமான பேய் பாத்சேபா என்றொரு பெண் பேய். அந்த பேயை வெளியேற்றினால் அந்த வீட்டில் அமைதி திரும்பி விடும் என்று முடிவு செய்கின்றனர் பெரோன் தம்பதியர். பேய் ஓட்ட வேண்டுமெனில், அந்த ஊர் தேவாலயத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். அந்த வீட்டினுள் பேய் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை சமர்பித்தால்தான் அனுமதி தருவோம் என்கிறது சர்ச் கமிட்டி. அவர்கள் ஆதாரங்களை தயார் செய்துக் கொண்டிருக்கும் வேலையில், அந்த வீட்டு பெண்மணியான கரோலின் பெரோனுக்கு பேய் பிடித்துவிடுகிறது. அவள் தன் மகள்களையே கொல்ல முயல்கிறாள். இறுதியில் பேய் வென்றதா, இல்லை, வாரன் தம்பதியர் வென்றார்களா என்பதே மீதி கதை.

படத்தின் கதை என்னமோ வழக்கமான பேய் பட கதை தான். ஆனால், அதை சொன்ன விதத்தில் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். படத்தில் எதிர்பாராத திகில் தருணங்கள் நிறைய இருக்கிறது. உதரணாமாக, தாயும் மகளும் கண்ணாமூச்சி ஆடும் ஒரு காட்சியில், பேயும் ஆட்டத்தில் சேர்ந்து கொள்கிறது. அது பேய் என்று தெரியும் போது அந்த தாய் மட்டும் நடுங்கவில்லை, பார்ப்பவர்களும் நடுங்குகிறார்கள். இது போன்ற, விறுவிறுப்பான திரைக்கதையோடு, திகிலூட்டும் பின்னணி இசையும், சவுண்ட் எபெக்டஸ்சும் சேர்ந்து கொள்வதால், படம் சீட் எட்ஜ் த்ரில்லராக உருவெடுத்து, நம்மை மிரட்டுகிறது.

உலக சினிமாவில், பல வருடங்களாக பேய் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் காஞ்ஜூரிங் அளவிற்கு சிறந்த படம் வரவில்லை என பலரும் இந்த படத்தை பற்றி பாராட்ட தொடங்கிவிட்டனர். இந்த பாராட்டுக்கள், அனைத்தும் படத்தின் இயக்குனரையே சேரும். இந்த படத்தை மிகவும் சிறப்பாக இயக்கியிருப்பவர் ஜேம்ஸ் வான். இவர், உலகளவில் மிகவும் பிரபலமான ‘சா’ (Saw) படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இது வரை இவர் எடுத்த எல்லா படங்களும் திகில் படங்களே. அமெரிக்காவில் இந்த படம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதால் இவரை ஹாலிவுட்டின் ‘ஹாரர் கிங்’ என்று அழைக்க தொடங்கிவிட்டனர். இவருடைய எல்லா படங்களிலும், மரத்தால் செய்யப்பட்ட ஒரு பொம்மை இடம்பெற்றிருக்கும். இந்த படத்திலும் அப்படி ஒரு பொம்மை வருகிறது. அதுவும் தன் பங்கிற்கு நம்மை பயமுறுத்திவிட்டு செல்கிறது.

இந்த படம் மட்டும் சுவாரஸ்யமாக இருக்கவில்லை. படம் உருவான விதமும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. 1971-யில் அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தை தான் இப்போது படமாக உருவாக்கி இருக்கின்றனர். அந்த வீட்டில் ஒரு காலத்தில் வசித்த சூனியக்காரி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அவள் தான் அந்த வீட்டில் பேயாக அலைந்து, அங்கே குடியிருந்த அனைவரையும் தொந்தரவு செய்திருக்கிறாள். வாரன் தம்பதியர் (எட் வாரன், லொரைன் வாரன்) தான் அதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அமெரிக்காவில், அமானுஷ்ய சக்திகளை பற்றி ஆராய்ச்சி செய்வதில் பேர்பெற்றவர்கள் இவர்கள். ஹாலிவுட்டில் வந்த சில முக்கிய பேய் படங்கள், இவர்களின் சொந்த அனுபவத்திலிருந்து உருவானவையே. கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக, பலரும் இந்த படத்தை உருவாக்க முயன்று தோற்றுள்ளனர். இறுதியில் வான் இதற்கு வெற்றிகரமாக திரைவடிவம் கொடுத்துவிட்டார்.

அமெரிக்காவில், ஒரு திரையரங்கில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பயந்து நடுங்கியிருகிறார்கள். அதனால், அந்த திரையரங்க நிர்வாகம், ஒரு பாதிரியாரை வரவழைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சி முடிந்ததும், அந்த பாதிரியார், மக்களுக்கு மன தைரியம் ஊட்டும் வகையில், கவுன்சிலிங் கொடுத்து விட்டு போகிறாராம். இது ஒரு மார்கெட்டிங் உத்தி என்கிறார்கள் விமர்சகர்கள்.   

இந்த படம் மிக சிறந்த ஹாரர் படமாக உருவானதற்கு முக்கிய காரணம், இயக்குனரின் தனித்திறமைதான். ஒரு சிறந்த பேய் படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இந்த படம் சரியான உதாரணம். பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.