பர்ஃபி


எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பதற்கிணங்க, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சிறந்ததாக அமைந்து கால புத்தகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்ளும்.அவ்வாறான ஒரு படமே ‘பர்ஃபி’.
இந்த படத்தின் ட்ரைலரே பல வகையான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்க, கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா மனநலம் குன்றிய பெண்ணாக நடித்திருக்கிறார், டார்க் (Dark) கதைகளை மட்டுமே படமாக்கிக் கொண்டிருந்த அனுராக் பாசு முதல் முதலாக ஒரு ‘ஃபீல் குட்’ (feel good ) படத்தை எடுத்திருக்கிறார் என்பன போன்ற பல விடயங்கள் ட்ரைலரில் தெளிவாக தெரிந்தது.
அதே சமயத்தில் பிரெஞ்சு திரைப்படமான அமிலியின்(Amelie) பின்னணி இசையை அப்பட்டமாக ‘பர்ஃபி’’ ட்ரைலரில் உபயோகித்திருப்பதையும், அமிலியை போல் ‘கலர் கிரேடிங்’’ (Color Grading) செய்யப்பட்டிருப்பதையும் கண்டதும் ஒருவேலை அந்த பிரெஞ்சு படத்தைதான் ரீமேக் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. எல்லாக் சந்தேகங்களுக்கும் தனக்கே உரித்தான பாணியில் விடை சொல்லி இதயத்தை வருடுகிறான் ‘பர்ஃபி’’.
டார்ஜிலிங்கில் வசிக்கும் ஏழை மாற்றுத்திறனாளி பர்ஃபி. வாய் பேச காது கேட்க இயலாதவர். அவ்வூரிற்க்கு குடி பெயரும் வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணான ஸ்ருதிக்கும் பர்ஃபிக்கும் காதல் மலர்கிறது. ஸ்ருதி ஏற்கனவே திருமணம் நிச்சயமானவரெனினும் பர்ஃபியின் குணாதிசயங்களை கண்டு தன் மனதை பர்ஃபியிடம் பறிக்கொடுக்கிறார். வழக்கமாக எல்லாக் காதலுக்கும் தடையாக நிற்கும் அந்தஸ்த்து இவர்கள் காதலுக்கும் பெரும் தடையாக வந்து நிற்க, ஸ்ருதி தனக்கு நிச்சயிக்கப் பட்டவரையே திருமணம் செய்துக் கொண்டு கொல்கத்தா சென்று விடுகிறார்.
கிட்டத்தட்ட ஐந்தரை வருடங்கள் உருண்டோடுகிறது.தன் தந்தையின் சிகிச்சைக்காக பர்ஃபிக்கு அவசரமாக பணம் தேவைப்பட, ஊரின் பெருந்தனக்காரரின் பேத்தியான ஜில்மில்லை கடத்தி பணம் பறிக்க முடிவுசெய்கிறார். மன நலம் குன்றிய ஜில்மில்லை முயன்று கடத்தி பணம் பறித்தும் விடுகிறார் பர்ஃபி. சிறு வயதிலிருந்து ஆஷ்ரமத்தில் வளர்ந்த ஜில்மில்லிற்கு பர்ஃபியை பிடித்துவிடவே, மீண்டும் வீட்டிற்கு செல்ல மறுக்கிறார். இதற்கிடையில் வங்கி ஒன்றை கொள்ளை அடிக்க முயன்ற வழக்கிலும், ஜில்மில்லை கடத்திய வழக்கிலும் பர்ஃபியை போலீஸ் துரத்துகிறது. போலீசிடம் இருந்து தப்பி ஜில்மில்லையும் அழைத்து கொண்டு பல இடங்களுக்கு பயணிக்கிறார் பர்ஃபி. எல்லார் மனதையும் கொள்ளைக் கொள்ளும் தூய்மையான உள்ளம் கொண்ட பர்ஃபி ஜில்மில்லின் உள்ளத்தையும் கொள்ளை கொள்வதில் ஆச்சர்யமொன்றுமில்லை .இறுதியில் கொல்கத்தாவில் குடியேறும் பர்ஃபி தன் முன்னால் காதலி ஸ்ருதியை சந்திக்கிறார். பர்ஃபியிடம் கொண்ட ஊடலின் காரணமாக ஜில்மில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கொல்கத்தாவை விட்டு வெளியேறுகிறார். பின் பர்ஃபியும் ஸ்ருதியும் ஜில்மில்லை தேடுகிறார்கள். தேடல் பயணத்தின் போது, தான் இன்னும் பர்ஃபியை காதலித்துக் கொண்டிருப்பதை உணர்கிறார் ஸ்ருதி. இறுதியில் யார் யாரோடு இணைகிறார்கள் என்பதோடு முடிகிறது கதை.
இது எந்த அந்நிய மூலத்தையும் தழுவாத ஒரு சிம்பிளான கதை.’குறைவான வசனங்கள், நிறைவான காட்சிகள்’’ என்ற அடிப்படை திரைக்கதை விதியை பின்பற்றி எழுதப்பெற்ற திரைக்கதை. படத்தில் வசங்கள் மிகக் குறைவு. காட்சிகளாலே படத்தை நகர்த்தி தான் ஒரு தேர்ந்த கதைச்சொல்லி என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் அனுராக் பாசு. ஆனால் தேவையில்லாமல் ‘நான்-லினியர்’(NonNon-Linear) உத்தியை பயன்படுத்தி பார்வையாளர்களை குழப்பியிருக்கின்றனர். ஸ்ருதி பர்ஃபியை விட்டு பிரிந்ததும் கிட்டதட்ட ஆறுவருடம் கழித்து மீண்டும் சந்திப்பதாக அமைந்துள்ளது திரைக்கதை. ஆறு வருடம் எப்படிக் கடந்த்தோடியது என்பதை விவரிக்கவில்லை. கதைக்கு எந்த ஒரு அடிப்படை தேவையுமின்றி ‘ஆறு வருட இடைவெளி’’ என்பதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதும் விளங்கவில்லை. மேலும் திரையில் எந்தக் கதாப்பாத்திரங்களுக்கும் வயதாகவில்லை. இறுதிக் காட்சியில், கதாப்பாத்திரங்களுக்கு வயதானதைக் காட்டுவதற்கு செய்யப்பட்டிருக்கும் ஒப்பனை மூன்றாம் தரமாக அமைந்துள்ளது. சமிபத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆப் வசைப்பூர்’’ படத்திலும் ஒப்பனை மூன்றாம் தரமாகவே அமைந்திருக்கும். பலக்கோடி செலவழித்து எடுக்கப்படும் பாலிவுட் படங்களில் ஒப்பனை மூன்றாம் தரமாக அமைந்துள்ளது ஆச்சர்யமளிக்கிறது.முகம் சுழிக்கவும் வைக்கிறது.
படத்தின் இன்னொரு கதைசொல்லி இசையமைப்பாளர். தன் இசையின் மூலம் புதியதொரு கதை சொல்கிறார் அவர். பல இடங்களில் காட்சிகளை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கிறது இசை. அதே சமயத்தில் படத்தின் தீம் ம்யுசிக் ‘அமிலி’’ படத்திற்காக யான் டீர்சென் (Yann Tiersen) இயற்றிய இசையை நினைவுப் படுத்துகிறது.
பர்ஃபியாக ரன்பீர் கபூர், எந்த ஒரு பெரிய நடிகரின் பாணியையும் பின்பற்றாமல் அசலான நடிப்பால் முத்திரைப் பதிக்கிறார். ஸ்ருதியிடம் தன் காதலை சொல்வதிலும், அவர் திருமணம் நிச்சயமானவர் என்பதையறிந்து சொன்ன காதலை வாபஸ் வாங்குவதிலும் ரன்பீர் வெளிப்படுத்தியிருக்கும் பாவனைகள் தனித்துவம். படம் முழுக்க அவர் வெளிப்படுத்தியிருக்கும் காமிக்கல் (comical) உடல்மொழி படம் முடிந்தபின்னும் நினைவிலிருந்து நீங்க மறுக்கிறது. ஜில்மிலாக பிரியங்கா சோப்ராவும் , ஸ்ருதியாக இலியானாவும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர். பிரியங்கா அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். முன்னால் உலக அழகியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் துளிக் கூட எழாத அளவிற்கு பிரியங்காவின் நடிப்பு ஒரு மனவளர்ச்சி குன்றிய பெண்ணை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. அதற்க்கு அவரின் உடையமைப்பும் பெரிதும் உதவியுள்ளது.
என்னதான் கதாபாத்திரங்கள் ஒழுங்காக நடித்தாலும் அவர்களின் பாவனைகளை ஒழுங்காக படம்பிடிப்பது மிகமுக்கியமான பணி. அவ்வகையில் பர்ஃபி படத்திற்கு தன் ஒளிப்பதிவின்மூலம் உயிரூட்டியிருப்பவர், ஒரு தமிழர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். படமுழுக்க நிரம்பிக் கிடக்கின்றன வண்ணங்கள். அந்த வண்ணங்களை வண்ணமயமாக படம் பிடித்திருக்கிறது அவரது கேமரா. அதை திரைப்பட தொகுத்த படத்தொகுப்பாளரையும் பாராட்டிட வேண்டும்.
இந்த படத்தில் செய்யப் பட்டிருக்கும் தனித்துவமான ‘கலர்கிரேடிங்’ இதுவரை எந்த இந்தியப் படத்திலும் செய்யப்பட்டதில்லை. அதுவே காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறது.ஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்திருப்பது திரையில் தெரியும்.
படத்தில் நிறைகள் நிறைய இருந்தாலும். திருஷ்டி வைத்தாற்போல் படத்தின் குறையாக நம் மனதை நெருடுவது அசல்தன்மையற்ற சிலக் காட்சிகள்.கருப்பு வெள்ளையில் கண்ட சார்லி சாப்லின் படங்களை கலரில் காண்கிறோமா என்று எண்ணும் அளவிற்கு பல சாப்ளின் படக்காட்சிகள் இப்படத்தில் உபயோகியப் பட்டிருக்கின்றன.. மேலும் நோட் புக் (Note Book) , கிக்குஜிரோ (Kikujiro) ,சிங்கிங் இன் தி ரெயின் (Singing in the Rain ) போன்ற பல உலக படங்களில் இருந்து காட்சிகள் தழுவப்பட்டிருக்கின்றன.
இதையெல்லாம் மீறி பர்ஃபி தனித்து நிற்கிறான்.காரணம், மாற்றுத் திறனாளிகளைப் பற்றி எடுக்கப் பட்ட அனைத்து படங்களும் அவர்கள் மீது பரிதாபம் விளைவிப்பதையே அடிப்படை நோக்காக கொண்டு எடுக்கப் பட்டிருக்கும்.ஆனால் பர்ஃபி பரிதாபத்தை ஏற்ப்படுத்தவில்லை. பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றான்.
இந்திய சினிமாவை பொறுத்தவரையில் ‘ஃபீல் குட்’’ படங்கள் மிக மிக குறைவு. அதுவும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் பொதிந்திருக்கும்
சிறுசிறு சந்தோசங்களை மையப்படுத்தி இதுவரை யாரும் படம் எடுக்க முயற்சித்ததில்லை. அவ்வகையில் பர்ஃபி ஒரு புது முயற்சி. அதற்காகவே பர்ஃபி பாராட்டுதலுக்குரிய திரைப்படமாகிறது. வாழ்வில் ஒளிந்திருக்கும் குறைகளை மறந்து, வாழ்வை அழகாக வாழ்வதைப் பற்றி பேசும் ‘பர்ஃபி’’சுவையானவன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.