விமர்சனம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தின் முழு கதையையும் விவரிப்பது, உலக சினிமாவின் உன்னத ரசிகனாகிய நான், என்னைப் போன்ற ரசிகர்களுக்கு செய்கிற துரோகம். அதே சமயத்தில் சில முக்கிய காட்சிகளை விவரிக்காமல் விமர்சனம் எழுதிவிடமுடியாது…
அருமையான ஒளிப்பதிவு ,படத்தொகுப்பு, கலைஇயக்கம், அருமையான நடிகர்கள் என்று பல அனுகூலமான விடயங்களிருந்தும் பல காரணங்களால் ‘ அரவான்’ ஒரு சராசரி படமாகவே விளங்குகிறது.
உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பாததால், இதை சராசரி படம் என முன்னமே சொல்லிவிடுகிறேன். வலுவற்ற திரைக்கதையால், பல புது முயற்சிகள் இருந்தும் இதை தலைச் சிறந்த பட வரிசையில் வைக்க முடியாததற்கான கட்டாயத்திற்கு நாம் ஏன் தள்ளப் படுகிறோம் என்பதை மட்டும் இங்கு கவனிப்போம்.
பீரியட் திரைப்படம் என்பது காலத்தோடு பின்னோக்கி சுழன்று பிற்கால மனிதர்களை திரையில் விளையாடவிடுவது. அம்மாதிரியான திரைப்படங்களில் இசையும் சேர்ந்து பின்னோக்கி சுழல வேண்டும். இத்திரைப்படத்தின் இசை சிறந்த இசையே எனினும் அது பல இடங்களில் முன்னோக்கி சுழன்று விட்டது. படம் ஆரம்பித்த சில நிமிடங்களில், கள்வர்கள் கூட்டமாக ஆடும் அந்த காட்சியில் பின்னனியில் ஒலிக்கும் இசை கார்ஸ் இன்ஸ்ட்ருமெண்டலின் (Corrs instrumental) இன்னொரு வகை.
பீரியட் படங்களை இரு வகையில் எடுத்திட முடியும். ஏதோ ஓர் காலத்தை தேர்ந்தெடுத்து அக்கால விடயங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைப்பது ஒரு வகை. உதாரணம், வாகை சூடவா.
இன்னொரு வகை,ஒரு ஜனரஞ்சகமான கதையை எடுத்துக் கொண்டு அதை ஏதோ ஓர் காலத்தில் கொண்டு பொருத்துவது, உதாரணம் சுப்ரமணியபுரம்.
அரவான் திரைப்படத்தின் கதை கள்வர்களின் வரலாறு எனக் கூறப்பட்டாலும்.அவர்களின் வரலாறு ஆழமாக காட்டப்படவில்லை.வசனங்களை பேசும் விதம் ஓர் சமகால படத்தைப் போலவே தொனிக்கிறது. ஒரு சமகால மதுரை ஸ்கிரிப்டை பீரியட் படமாக செய்துவிட்டனர் என்றே சொல்லலாம்.
கதை பயணிக்கும் காலம் கி.பி 18ஆம் நூற்றாண்டு என்று மட்டும் சொல்லப்படுகிறது. இது இயக்குனரின் புத்திசாலிதனத்தையே காட்டுகிறது. காரணம், குறிப்பிட்ட வருடத்தைக் கொண்டு கதை எழுதும்போது, நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். காட்சிகள் சரியாக அமையாத பட்சத்தில், வரலாற்றில் பிழையும் வரலாற்றுப் பிழையும் நிகழ்ந்திடும். வரலாற்றைக் குறிபிடாததால் ஏதோ ஒரு காலத்தில் இம்மாதிரியான கூட்டம் வாழ்ந்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாமெனினும் காட்சிகளை மிகவும் மேலோட்டமாக காட்டியதை தவிர்த்து சற்றே ஆழமாக காட்டியிருக்கலாம்.
மற்றபடி காட்சியமைப்பில் பீரியட் திரைப்படத்திற்கான நியாயம் செய்திருக்கின்றனர்.பீரியட் திரைப்படமென்பதற்கிணங்க அனைத்து காட்சிகளும் அருமையாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்திருக்கிறது என்பது தெளிவு. அதனால் அவர்களை பாராட்டிவிடுவோம்.
சில இடங்களில் கதாநாயகியின் உடையமைப்பு நவீனமாக தோன்றினாலும், அவர்களின் நடிப்பு அருமையாக அமைந்திருப்பதால் சிறு சிறு குறைகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இங்கு படம் பெரிதளவில் சொதப்புவது திரைக்கதையிலேயே. மூலக்கதையெனும் முடிச்சு திரைக்கதையில் ஒழுங்காக அவிழ்க்கப் படவில்லை.
படம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன கிளைக் கதைகள்,
காவல் கோட்டம் நாவலைப் போல.நாவலின் முக்கிய பலம்
கிளைக் கதைகள்,படத்தின் முக்கிய பலகீனம் கிளைக்
கதைகள்.
ஒரு நாவலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.
அது படைப்பாளிகளுக்கும் படிப்பாளிகளுக்கும் மட்டும்
சொந்தமானது. ஆனால் சினிமா சற்றே வித்தியாசமானது,
பல தரப்பு மக்களும் பார்ப்பது. ஒரு நாவலில் பத்து பக்கம் எழுதிவிட்டு திடிரென்று கதையை 2௦௦ வருடத்திற்கு பின்
எடுத்து செல்ல இயலும். ஆனால் சினிமாவில் அது சாத்தியமன்று.
எவ்வளவு பெரிய திரைக் கதையாசிரியராக இருந்தாலும்
திரைக்கதைக்கென வரையறுக்கப்பட்டசில அடிப்படை
விதிகளை பின்பற்றியே தீர வேண்டும். அதில் மிகவும்
அடிப்படையாக கருதப் படுவது “Inciting incident”.
இந்தப் படத்தில்“Inciting incident”
நிறைய வருவதே படத்தின் பலகீனம்.
“Inciting incident”எனப்படுவது ஒரு கதையின்கருவை
தூண்டிவிடுவது. காதல் கதை என வைத்துக் கொண்டால்,
கதாநாயகன் கதாநாயகியை முதன் முதலில் பார்ப்பது, “Inciting incident”.
அங்கிருந்து கதை தன் நிஜப் பாதையில் பயணிக்க வேண்டும்.
இத்திரைக் கதையில் மிக பிரம்மாண்டமாக திட்டம்
போட்டு கள்வர்கள் கொள்ளையடிக்கும் காட்சியில் படம்
தொடங்குகிறது. கொத்தாக திரியும் கள்வர்கள், தங்கள் ஊர்
பேரை சொல்லி வேறொருவன் திருடிகிறான் என்று
தெரிந்ததும் கொதிக்கிறார்கள். அவன் யார்
என்று கண்டுபிடித்து தருவதாக அவர்கள்
பாளையக்காரர்களிடம் வாக்களிக்கும் போது கதை தூண்டப்படுகிறது.
இங்கு ஒரு Racy Entertainer தொடங்கிவிட்டது என்றெண்ணும் போது,
அடுத்த கட்சியிலேயே கள்வன் கண்டுபிடிக்கப் பட்டு எதிர்பார்பு சோடை
போய்விடுகிறது.
பின்னொரு காட்சியில் களவாணி கூட்டத்திடம் ஒரு பெரியவர் வந்து, “முடிஞ்சா ஆறு தலைமுறையா யாரும் களவாட முடியாத அந்த கோட்டையில களவாடிகாட்டுங்க” என்று சவால் விடுகிறார். ஏதோ ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது என்றெண்ணும் போது,அந்த காட்சியும் சப்பையாக முடிந்துவிடுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்பைக் கூட்டி அடுத்து வரும் காட்சிகளில் அதை தக்க வைத்துக் கொள்ள இயலாமல், திரைக்கதை திணறுகிறது. இப்பாணி இறுதி வரை தொடர்வதால், பிரம்மாண்ட திரைக்கதைக்கு இருக்க வேண்டிய ‘கெத்’ மடிந்துவிடுகிறது.
படத்தின் டைட்டிலில் கூடுதல் கதை (Additional Story) வசந்தபாலன் என்று போடுவதை காணும் போதே நெருடல் ஏற்படுகின்றது.
கதை,வசனம்- சு.வெங்கடேசன்
கூடுதல் கதை, திரைக்கதை, இயக்கம்-வசந்தபாலன்
கூடுதல் கதை என்பது வழக்கத்திற்க்கு மாறான ஒரு சொல். ஒரு கதையை நாவலிலிருந்தோ, வேறு யாரிடோமோ இருந்து பெற்றபின். திரைக்காக சில கதைகளை மூலக் கதையோடு பிரத்யேகமாக இணைக்கும் போது ‘Screen Story’ என்பார்கள். அதனை திரைக்கான கதையென்று குறிப்பிடலாமேயொழிய ‘கூடுதல் கதை’என்று குறிப்பிட இயலாது.
தமிழ் சினிமாவில் கிரெடிட் சிஸ்டம் (Credit System) ஒழுங்காக பின்பற்ற படுவதில்லையென்பதற்க்கு இதுவே சான்று. காவல் கோட்டம் நாவலே திரைக்கதை போன்றுதான் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இங்கு தனியாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கும் பட்சத்தில், மூலக்கதை-சு. வெங்கடேசன். திரைக்கான கதை, திரைக்கதை- வசந்தபாலன் என்று குறிப்பிட்டுருக்க வேண்டும். அதைவிடுத்து ‘கூடுதல் கதை’ என குறிப்பிட்டது ஒரு எழுத்தாளனை அவமதிக்கும் செயல்.
மிகப்பெரிய திரைக்கதையாசிரியரான திரு.சுஜாதா அவர்களின் திறமையை உறிந்துக்கொண்டு வெறும் ‘வசனகர்த்தா’ என்றழைத்த தமிழ் சினிமா, சு.வெங்கடேசனுக்கு கிரெடிட் வழங்காததை எண்ணி ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் எதிர்பார்புகளை தக்க வைத்துக் கொள்ள இயலாமல் திணறும் திரைக்கதை இரண்டாவது பகுதியில் ஒரு சராசரி தமிழ் அழுகாச்சிப் படமாக உருமாறி எப்போது முடியுமென என்னும் அளவுக்கு நீண்டுக்கொண்டே போகிறது.
படத்தின் பலக்காட்சிகளில் மெல் கிப்சனின் (Mel Gibson) தாக்கத்தை தவிர்திருக்கலாம். அபகாலிப்ட்டோவின் (Apacalypto) மறுபதிவோ என என்னும் அளவுக்கு பல இடங்களில் அரவான் கதாபாத்திரம் அபகாலிப்ட்டோவின் ஜாகுவார் பாவ் (Jaguar paw) கதாபாத்திரதை நினைவு படுத்துகிறது. சில இடங்களில், குறிப்பாக படத்தின் இறுதி காட்சி ‘Brave Heart’ வில்லியம் வாலாசை (William wallace) ஞாபகப் படுத்துகிறது. அரவானிடம் குதிரையில்லை என்பதே பெரிய வித்தியாசம்.
கோட்டைக் கலவின் இறுதிக்காட்சியை பார்க்கும் போது, புதுபேட்டை படத்தில் கொக்கி குமாரை அவனின் நண்பர்கள் வில்லனிடமிருந்து மீட்டுக் கொண்டுவரும் காட்சி நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தில் தேவையற்ற ஸஸ்பென்ஸ் நிறைய வைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதையில் மூன்று விதமான ஸஸ்பென்ஸ் வைக்க முடியும்
- திரையினுலுள்ள கதாபாத்திரங்களுக்குள் வைக்கப்படும் ஸஸ்பென்ஸ்
- திரைக்கு வெளியிலிருக்கும் பார்வையாளர்களுக்கு வைக்கப்படும் ஸஸ்பென்ஸ்
- இருவருக்கும் வைக்கப்படும் ஸஸ்பென்ஸ்
எந்த வகை ஸஸ்பென்ஸ் வைத்தாலும் பார்வையாளர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும். இங்கு அது ஏற்பட மறுக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
இப்போதெல்லாம் low cost compositing, கிராபிக்ஸ் போன்றவை மிகவும் சாதாரணமாகிப் போய்விட்டது. அபப்டி இருந்தும் ஏன் தமிழ் சினிமா இன்னும் கேவலமான கிராபிக்ஸ் காட்சிகளை வைத்துக் கொண்டிருக்கிறது என்று இன்னும் விளங்கவில்லை. நல்ல கிராபிக்ஸ் அமைக்க முடியாத பட்சத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை தவிர்பதே புத்திசாலிதனம். அரவான் திரை படத்தில் கோட்டை களவின் போது உபயோகப் படுத்தப் பட்டுள்ள கிராபிக்ஸ் காண சகிக்க வில்லை. ஆயிரத்தில் ஒருவன் படம் கிராஃபிக்ஸில் சறுக்கியதை கண்டும் இன்னும் தமிழ் சினிமா பாடம் கற்கவில்லை.
அரவான் என்ற மகாபாரதக் கதாபாத்திரத்தால் கவரப்பட்டு,பின் அந்த கதாபாத்திரம் போலவே திரைப்படத்தின் நாயகன் பாத்திரமும் அமைய வேண்டும் என்ற கட்டாயத்தில் திரைக்கதை எழுதியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. அதனால்தான் இப்படி ஒரு கிளைமாக்ஸ் வைக்கப் பட்டிருக்கிறது…
இறுதியில் ‘மரண தண்டனையை ஒழிப்போம்’ என்று ஒரு கருத்துசொல்லப்படுகிறது. இது வந்த வரை லாபம் என்ற நோக்கில் சொல்லப் பட்ட கருத்தே ஒழிய உன்னத நோக்கில் சொல்லப் பட்ட கருத்தன்று. ஏதோ ஒன்றை காட்டிவிட்டு இறுதியில் ஏதோ ஒரு கருத்தினை சொல்வதை மேடை நாடகத்தில் வேண்டுமேனில் ஏற்றுக் கொள்ளலாமேயொழிய திரைப்படத்தில் ஏற்றுக் கொள்ளயியலாது.
மேலும் பிரிட்டிஷ் காலத்தில் நரபலி தடை செய்யப் பட்டது என படத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதே பிரிட்டிஷ் காலத்தில்தான் யானையை வைத்து மனிதன் கழுத்தை மிதித்து கொள்ளும் வழக்கம் பின்பற்றப் பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வந்துக் கொண்டிருந்த பெரும்பாலான படங்கள் பீரியட் படங்களே. காலப் போக்கில் அவ்வாறான படங்கள் மறைந்து விட்டது. பீரியட் படங்களுக்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கும். போட்ட காசுக்கு உத்திரவாதமில்லை. அனைத்தையும் கடந்து, தைரியமாக இப்படத்தை எடுத்த ‘அரவான்’ குழுவிர்க்கு பாராட்டுக்கள். பெரும் உழைப்பிருந்தும் படம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்ப்படுத்தவில்லை.
இதை ஒரு நல்ல படம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்வோம். ‘தலைசிறந்த படம்’ என்னும் வரிசையில் இப்படத்திற்க்கு இடமளிக்கயியலாது.
100 வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவின் தலைசிறந்த படங்களை வரிசைப்படுத்த முயன்றால், அதில் உதிரிப்பூக்கள், வீடு, ஹேராம், விருமாண்டி, பருத்திவீரன், வாகைசூடவா, ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் நிச்சயம் இடம்பெறும்.அதனோடு சேர்த்து ‘அரவான்’ படத்தையும் வைத்திடயியலாது. தலைசிறந்த படங்களை அடுக்கும் மேடை மிகவும் குறிகியது,. அங்கே நிறைய படங்களை திணித்திட இயலாது.
தமிழ் சினிமாவை உன்னிப்பாக கவனிப்போமேயானால் பெரும்பாலான இயக்குனர்கள் தங்களின் மூன்றாவது-நாலாவது படத்தில் தன்னை தானே கடவுள் என்று கருதிக்கொண்டு, தான் படைப்பதே வேதம் என்ற எண்ணத்தோடு சறுக்கியது விளங்கும். அந்த எண்ணங்களை அடக்கியாளும் இயக்குனரே பலவருடம் ஆட்சிப் புரிகிறான்.
இங்கு இன்னும் நல்லபடம் எது, மாற்று சினிமா எது, கலைப்படைப்பு எது, என்று வகைப்படுத்த இயலா குழப்பம் நிலவுகிறது.. மாயை நிறைந்த இச்சூழ்நிலையில் நல்லக்கதைக்களமிருந்தும், திறமைசாலிகள் பலரிருந்தும், திரைக்கதையில் சோடைப் போன அரவான் திரைப்படத்தை வெறும் சராசரி படமாக கருதமுடியுமேயன்றி தலைசிறந்த படமாக கருதயியலாது.
இல்லை, இது தலை சிறந்த படம்தான் என கூக்குரலிடுபவர்கள் கூக்குரலிட்டுக்கொள்ளட்டும்.
IMDB தமிழ் பட தர வரிசையில், தமிழ் ரசிகர்களின் உபயத்தால் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ போன்ற படங்கள் முதல் பத்து இடத்திற்க்குள் இருக்கிறது. அதைப் பார்க்கும் உலக-உன்னத சினிமா ரசிகன் எவனும் தன்னையறியாமலேயே சிரித்துவிடுவான்.
‘அரவான்’ மிக மிக அருமையான-தலைசிறந்த படமென்று சொல்லுபவர்கள் சொல்லிக் கொள்ளட்டும். அதனை கண்டு, உலக சினிமாவின் தீவிர ரசிகர்கள் எங்கோவொரு மூலையில் சிரித்துக் கொண்டிருப்பார்கள்……
Excellent Review and Insights!
LikeLike
@Nirmalkumar
Thank you…:)
LikeLike
ungalathu vimarsanam,ennai ovvoru variyilum “aam,sariyaga solrar” ena solla vaikirathu.Padithu mudikum pothu,yetho konja visayam katru kondathu pola oru magilchi.valthukal…
LikeLike
Pingback: ஸ்பார்ட்டகஸ் சொல்லித்தரும் திரைக்கதை | aravindhskumar